Friday, January 7, 2022

கலாப்ரியாவின் வெள்ளித்திரை

 கலாப்ரியாவின் வெள்ளித்திரை

—-
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் சுபகுணராஜனோடு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது
ஃப்ரெஞ்சு தத்துவவாதியான அலென் பட்ஜ்யு(Alain Badiou) ஃபிரான்சில் நடந்த மே 1968 மாணவர் போராட்டத்தை ஃபிரெஞ்சு நாட்டினரின் சமகால சமூகத் தன்னிலையைக் கட்டமைத்த (construction of social subjectivity) பெருநிகழ்வு என கோட்பாட்டாக்கம் செய்கிறார்; அந்த ஃப்ரெஞ்சு பெருநிகழ்வுக்கு (Event) நிகராக தமிழ்ச் சமூக வரலாற்றில் நடந்த பெரு நிகழ்வாக, எண்ணற்றோர் பங்கேற்ற, தமிழனின் சமகால சமூகத் தன்னிலையை தொடர்ந்து கட்டமைக்கின்ற பெருநிகழ்வாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லலாம் என்று சொன்னேன். இந்தப் பெருநிகழ்வில் அடிமட்டத் தொண்டனாகப் பங்கேற்ற கலாப்ரியாவின் சுயசரிதை நினைவுக்குறிப்பு நூல்கள், ‘நினைவின் தாழ்வாரங்கள்’, ‘உருள் பெருந்தேர்’ - ஒன்று மற்றதன் தொடர்ச்சி- தமிழ் சமூகத் தன்னிலை உருவாக்கத்தின் சித்திரத்தை நமக்கு கையளிக்கின்றன. இந்தி எதிர்ப்புப்போரட்டத்துக்குப் பின் உருவாகிய பெருநிகழ்வுகள் என இந்தியாவில் ஏற்பட்ட கடும் உணவுப்பஞ்சம் வேலை இல்லா திண்டாட்டம் எமெர்ஜென்சி அறிவிப்பு ஆகியவற்றின் தொகுப்பினைச் சொல்லலாம். கலாப்ரியாவின் நூல்களில் உணவுப் பஞ்சம், வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கும் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. 1980 களின் கொதி நிலை 1990 களில் பொருளாதார தாராளயமாக்கல் எனும் இன்னொரு பெருநிகழ்வுக்கு இட்டுச் சென்றது. கலாப்ரியாவின் இரு நூல்களும் நமக்கு நம் வரலாற்றையும், சமூகத் தன்னிலை உருவாக்கத்தையும், நவீன கவிதையையும் புரிந்துகொள்ளக் கிடைத்த பெருங் கொடைகள் . நான் இன்னும் கலாப்ரியாவின், ‘ஓடும் நதி’ ‘சுவரொட்டி’ ‘காற்றின் பாடல்’,
‘மறைந்து திரியும் நீரோடை’, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்’ ‘போகின்ற பாதையெல்லாம்’,
‘சில செய்திகள் சில படிமங்கள்’, ’அன்பெனும் தனிஊசல்’, ’பாடலென்றும் புதியது’ ஆகிய கட்டுரைத் தொகுப்பு நூல்களையும் வாசிக்க வேண்டும். கலாப்ரியாவின் நாவல் ‘வேனல்’ இப்போது வாசிப்பில் இருக்கிறது.

அடிஸ் அபாபாவில் நான்மீண்டும் கற்றுக்கொண்ட பிரார்த்தனை

 அடிஸ் அபாபாவில் நான்மீண்டும் கற்றுக்கொண்ட பிரார்த்தனை

—-
எத்தியோப்பியாவின் ஏழ்மையை நேரடியாகப் பார்த்தவர்கள் யாரும் மனம் கலங்காமல் இருக்க முடியாது. நான் தங்கியிருந்ததென்னவோ நட்சத்திர விடுதிதான் என்றாலும் அதைச் சுற்றிலும் ஏழைக்குடியிருப்புகள். பெரும் செல்வமும் கடும் வறுமையும் அடுத்தடுத்து இருக்கும். இந்தியாவிலும் நாம் ஏழ்மையைப் பார்த்திருக்கிறோம் என்றாலும் எத்தியோப்பியாவின் வறுமை இன்னும் நூறு மடங்கு அதிகமானது. இன்றைய எத்தியோப்பியாவின் பெரும்பகுதி ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்கத்துக்குள் வராதது. இத்தாலிய காலனி ஆதிக்கத்துள் வந்த பகுதியில் இத்தாலிய கட்டிடக் கலையில் அமைந்த பெரிய கட்டிடங்களைக் காணலாம். அடிஸ் அபாபா நகரம் தாண்டி கிராமங்களுக்குச் சென்றாலோ இன்னும் வறுமை தாளமுடியாதாய் இருக்கும். எத்தியோப்பியவிற்கும் அதன் அண்டை நாடான எரித்ரேயாவுக்கும் இடையில் அவ்வபோது நடக்கும் போர் வேறு எத்தியோப்பிய பொருளாதாரத்தை வெகுவாக சீரழித்திருக்கிறது.
எத்தியோப்பியாவில் 80 விதமான இனக்குழுக்கள் இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலோர் செமிடிக் குடும்பத்தைச் சேர்ந்த அம்ஹாரிக் என்ற மொழியைப் பேசுகிறார்கள். எத்தியோப்பிய கிறித்தவர்கள் அனைவரும் ஏசு கிறிஸ்துவானவர் ஒரு கறுப்பர் என்றும் அவருடைய தாய்மொழி அம்ஹாரிக் என்றும் நம்புகிறார்கள். இப்போது வரலாற்றாசிரியர்களும் ஏசுவானவர் அம்ஹாரிக்தான் பேசியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அடிஸ் அபாபாவின் நான் பார்த்த கிறித்துவ தேவாலாயங்கள் பழமைவாத கிறித்துவப்பிரிவைச் (Orthodox church) சார்ந்தவை; இந்தப் பிரிவு இப்போது எத்தியோபியாவைத் தவிர ரஷ்யாவிலும் (தாஸ்தோவ்ஸ்கி இந்தக் கிறித்தவப் பிரிவின் நம்பிக்கைகளின்படியே வளர்க்கப்பட்டார்) இலங்கையிலும் மட்டுமே இருப்பதாக அறிந்தேன். சுற்றுலாவாக அடிஸைச் சற்றி இருந்த பல தேவாலயங்களையும் சென்று பார்த்தேன்.
அடிஸ் அபாபாவின் தேவாலயங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று தாரை தாரையாய் கண்ணீர் வழிய பிரார்த்தனை செய்வதைப் பார்த்தபோது திகிலாகவும் பின் பெரும் மனக்கலக்கத்தை உண்டாக்குகிறதாகவும் இருந்தது. அப்படி கூட்டம் கூட்டமாய் அழுது அவர்கள் பிரார்த்தனை செய்தபோது ஒருவர் திடீரென அம்ஹாரிக் மொழியில் ஏதோ கூவினார் உடனே அங்கிருந்த அத்தனை பேரும் வெடித்துக் கதறி அழுதார்கள். நான் என் மாணவ உதவியாளரிடம் அவர் என்ன கூவினார் என்று கேட்டேன். சிலுவைப்பாதையில் ஏசுவானவர் கூறிய வாசகங்களையே, “ தந்தையே தந்தையே நீவிர் ஏன் என்னைக் கைவிட்டீர்” ( ஏலி ஏலி லாமா சபச்தானி) என்பதையே அவர் அம்ஹாரிக் மொழியில் கூவினார் என்று என் உதவியாளர் சொன்னார். மீண்டும் ஒரு முறை கூவல் பின்னர் கதறி அழுதல் எனப் பிரார்த்தனை தொடர்ந்த போது என் நெஞ்சும் விம்மி வெடித்துவிடும் போல இருந்தது. உடம்பெல்லாம் படபடத்தது. அரை மணி நேரத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் விடுதிக்குத் திரும்பி வந்துவிட்டேன்.
விடுதிக்குத் திரும்பியபின்பும் கூட என் படபடப்பு அடங்கவில்லை; தூக்கமும் வரவில்லை. எதையாவது படிக்கவோ எழுதவோ முயற்சி செய்து பார்த்து தோற்று உட்கார்ந்திருந்தேன். யாரோ ஒரு மனிதன் ரத்தக்களறியாய் அடித்து இழுத்துச் செல்லப்படுவது போன்ற துர்க்கனவுகள் வர அலறி விழித்தேன் .மறு நாள் கடும் காய்ச்சல் வந்துவிட்டது. நல்லவேளையாக அன்று பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை. அறையிலேயே அடைந்து கிடந்தேன். நான் அன்று முழு நாத்திகனாய் மாறியிருந்தேன்.
அடுத்த மூன்று நான்கு நாட்கள் விட்டேத்தியாக பல்கலைக்குச் செல்வதும் பாடம் நடத்துவதுமாய் எந்திரத்தனமாய் செய்து கொண்டிருந்தேன். சீக்கிரம் ஊர் திரும்பிவிட்டால் கொள்ளாம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
பல்கலையின் நிலைமையும் பரிதாபமாய் இருந்தது. நூலகம் என்ற பெயரில் யாரோ கொடுத்த நிதியில் கட்டிய பெரிய கட்டிடம் இருந்தது ஆனால் அதில் மருந்துக்குக்கூட ஒரு புத்தகம் இல்லை. பேராசிரியர் அசிஸ் ஃபெக்கெடெ போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பல துறைகளையும் நிர்வகிக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். என்னுடைய பணி ஒன்றரை மாதத்திற்குத்தான் அதற்குள்ளாகவே ஒரு செமஸ்டர் பாடங்களை முடிக்க வேண்டும். என் பணி ஆய்வு மாணவர்களோடு மட்டும்தான். ஃபெக்கெடெ சிரமப்படுவதைப் பார்த்து இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும் நானே கேட்டு வாங்கி வகுப்புகள் எடுத்தேன்.
மீண்டும் நான் என் சமநிலையை அடைய ஒரு வாரம் ஆனது. லத்தீன் அமெரிக்க கிறித்துவ விடுதலையிலாளரான எர்னெஸ்டோ கார்டினல் வேதாகமத்தின் அறிவிப்பை (proclamation of the gospel) பற்றி எழுதும்போது ஏசுவை மனிதராகவும் சிலுவைப்பாதையில் கைவிடப்பட்டவராகவும் பார்ப்பவர்கள் மரபான மதப் பார்வைகளை மறுத்து நாத்திகத்தையே விவிலியம் முன்வைப்பதாக வாசிப்பார்கள் என்று எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. அவரே According to some liberation theologians atheism is not the cause of the conflict between Christianity and Marxism, but is rather the link between them. என்று எழுதிருப்பதும் ஞாபகத்துக்கு வந்தது.
ஆனால் இவை எதுவுமே எனக்கு சாந்தியளிக்கவில்லை. ரவீந்தர நாத் தாகூரின் கீதாஞ்சலியை வாசித்தது என்னை அமைதிப்படுத்தியது.
அந்த அனுபவத்துக்குப் பிறகு ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் என்னுடைய பிரார்த்தனை ரவீந்திர நாத் தாகூரின் கீதாஞ்சலியில் வரும் இந்த வரியாக இருக்கிறது:
“Give me the strength never to disown the poor or bend my knees before the insolent might”
என்னுடைய ‘அனாதையின் காலம்’ நீள்கவிதையில் பின்வரும் கவிதையை எழுதினேன்:
சுவரிலிருந்து உதிரும் காறை போல
நான் சிதிலமடைந்துகொண்டிருக்கிறேன்
அதன் முனகல்களை வாஞ்சையோடு கேட்பீரா
ஒரு சில மிருக ஒலிகளை மட்டுமே
நான் எழுப்ப இயலும்
ஆம் அவ்வளவுதான் தெய்வத்தின் குமாரரே
விழி நரம்பை நாராய் உரித்து
நான் செய்த படிமங்கள் என்னிடத்தில் வற்றிவிட்டன
என் சொல் முந்திய கேவல்
உம் இதயத்தின் செவிகளை தீண்டும்தானே
நீவிர் வியாபித்திருக்கும் பெரு வெளியில்
நான் கூட்டும் ஓசைகளின் பிரார்த்தனை
பித்தன்றி வேறென்ன
தந்தையீர் நீர் அறிவீர்
என் சிதிலம் என்றுமே பிறர் பொருட்டு
என் பிறை என்றுமே முழு மதி

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றிக் கொள்ள என சில

 திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றிக் கொள்ள என சில

“இனித் திரும்பி வரவே முடியாத ஒரு வழிப் பயணத்திற்கு, வேறொரு அறியாத, கடல் கடந்த தேசத்திற்கு நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்தோடோ அப்புறப்படுத்தப்படப் போகிறீர்கள் என்றால் நீங்கள் என்னென்ன எடுத்துப் போவீர்கள்?” என்று ஃப்ரெஞ்ச் உச்சரிப்பில் தமிழில் கேட்டார் கேமலோன்; அவர் ரீயூனியனிலிருந்து வந்திருந்தார். எனக்கு அவரை முன்னே பின்னே அறிமுகமில்லை. சென்னை விமான நிலையத்திலிருந்து ஃபோன் பண்ணிவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிட்டார். கேமலோனின் முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கில/ஃப்ரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் போது வலுக்கட்டாயாமாகவோ விரும்பியோ பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளாக 1848-1850 களில் ரீயூனியனுக்கு கூட்டிச்செல்லப்பட்டவர்கள். இந்து மகாசமுத்திரத்திலுள்ள ரீயூனியன் ஃபிரான்ஸின் காலனியாக இருந்து இப்போது ஃப்ரான்ஸ் நாட்டின் பகுதியாகியிருக்கிறது, சுதந்திர நாட்டிற்குரியச் சில சலுகைகளுடன். இன்றைய ரியூனியனின் மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம் அதில் மூன்று லட்சம் பேர் தமிழகத்தைப் பூர்விகமாகவும் தமிழைத் தாய்மொழியாகவும் கொண்டவர்கள்.
கேமலோன் என்ற பெயர் ஆதியில் கமலன் என்றிருந்திருக்க வேண்டும். ரீயூனியனின் ஃப்ரெஞ்சு மொழி கலந்து கேமலோன் என்றாகிவிட்டது. கேமலோன் பேசிய தமிழும் அப்படித்தான் இருந்தது. மூன்று நூற்றாண்டுகளாக ஃப்ரெஞ்சு மொழியோடு கலந்து உருமாறிய தமிழ்; அந்தத் தமிழ் கூட அதற்கே உரிய வார்த்தை அர்த்தங்களோடுதான் புழங்குகிறது. கேமலோன் ரீயூனியன் பல்கலையில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்; தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக ரீயூனியனில் பொங்கல் பண்டிகையின் போது நிகழ்த்தப்படும் வள்ளிதிருமணம், திரௌபதி நாடகம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் / கூத்துகள் தமிழகத்தில் எங்கே எப்படி நடத்தப்படுகின்றன அவற்றின் பொருள் என்ன என்பதையெல்லாம் அறிவது அவர் நோக்கமாக இருந்தது; அதற்காக என் உதவி நாடி வந்திருந்தார்.
கேமலோன் என்னிடம் காட்டிய வீடியோக்களில் ரீயூனியனின் வள்ளிதிருமணம் மற்றும் திரௌபதி நாடகம் விசித்திரமாக இருந்தன. அந்த நாடகங்களின் நடிகர்கள் பாப் பாடகர்கள் போல ஜிகினா உடைகளணிந்து மாலை மாலையாய் தங்கச்சங்கிலிகள் அணிந்துகொண்டு மந்திர உச்சாடனம் செய்வது போல நாடக வசனங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிய ஃப்ரெஞ்சு கலந்த தமிழில் ( creole) வார்த்தைகள் தெரிந்த மாதிரி இருந்ததே தவிர சுத்தமாகப் புரியவில்லை. கேமலோன் அந்த நாடக நடிகர்களுக்கும் அந்த வசனங்களின் பாட்டுக்களின் அர்த்தங்கள் தெரியாது என்று கூறினார். பார்வையாளர்களுக்கும் அவற்றின் அர்த்தங்கள் தெரியாதாம்.
கூலித்தொழிலாளிகளாக ரியூனியனுக்குக் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்கள், பொங்கல் கொண்டாடுவது, தைப்பூசம் கொண்டாடுவது, வள்ளி திருமணம், திரௌபதி நாடகம் நடத்துவது ஆகியனவற்றைத் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களாக காலனி ஆதிக்கத்தின் போது மாற்றியிருக்கிறார்கள். பொங்கலுக்காக நான்கு நாட்கள், தைப்பூசத்திற்காக மூன்று நாட்கள் எனக் கொண்டாடி அவற்றை தங்களுக்கான விடுமுறை தினங்களாகப் பெற்றிருக்கிறார்கள். போராட்டங்களாகவும் கொண்டாட்டங்களாகவும் கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்ட இந்நாடக நிகழ்வுகளுக்கு மூலங்களாக வள்ளி திருமணம், திரௌபதி நாடகம் ஆகியவற்றின் அச்சுப்பிரதிகளும் வாய்மொழிக்கதைகளும் இருந்திருக்கின்றன. கேமலோன் என்னிடத்தில் நைந்து போயிருந்த அந்த அச்சுப்பிரதிகளின் புகைப்படங்களைக் காட்டினார். மனனம் செய்த பகுதிகளை அர்த்தம் புரியாமல் இன்றும் அவற்றை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்ற கேமலோன் திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்துக்கு நீங்கள் எதையெல்லாம் எடுத்துச் செல்வீர்கள் என்று கேட்டார். அவரே தொடர்ந்து, “என் மூதாதையர் எடுத்துச் சென்றது ; கொத்துமல்லி விதைகள், கறிவேப்பிலைச் செடிகள், பதியன்கள், விதை மாங்கொட்டைகள், மாங்கன்றுகள், சீரகம், மஞ்சள், மல்லிகை, வள்ளிதிருமணம், திரௌபதி நாடகம், கந்த சஷ்டி கவசம், காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை ஆகியனவற்றின் அச்சுப்பிரதிகள்” என்று சொல்லி முடித்த போது நான் அசந்து போய் உட்கார்ந்திருந்தேன். இந்தக் கையளவு பொருட்களும் புத்தகங்களும் போதுமா பற்றிக்கொள்ள, தமிழ்ப் பண்பாட்டையே எடுத்துச் செல்ல?!
கேமலோன் சொன்னார்: இன்று ரீயூனியன் தமிழர் வீடுகளனைத்திலும் கொத்துமல்லி, கறிவேப்பிலைச் செடிகளைப் பார்க்கலாம்; தமிழர் பகுதிகளில் மாங்காடுகள் அடர்ந்திருக்கின்றன. முருகன் கோவில் இருக்கிறது. தெருவில் நவீன உடை அணிந்து செல்லும் தமிழ்ப் பெண்களின் கூந்தலிலும் மல்லிகைப் பூவைக் காணலாம்.
கேமலோன் புறப்பட்டுச் சென்றபின் நான் இந்த இரு கவிதைகளையும் எழுதினேன்:
புறப்படுதல்
---
நூலகத்தை ஜாதிக்காய் பெட்டிகளில்
அடைத்து இறுக்கி ஆணியடித்து
தொழுவத்து குடிசையில் வைத்தாயிற்று
பெற்றோரை நடுக்கூடத்தில்
மார்போடு அணைத்த குழந்தை
கையடக்க மலிவுப் பதிப்பு
கந்த சஷ்டிக் கவசம்
அம்மியையும் குழவியையும்
எடுத்துச் செல்லவியலா துக்கத்தில்
ஒரு கையில் மாங்கன்று
மறு கையில் கறிவேப்பிலைச் செடி
ஏந்தி நிற்கும் துணைவி
கூடுதல் பாதுகாப்பிற்கு
வள்ளி திருமணம் நாடகம்
ரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பு
கன்றுகள் பயணம் பிழைக்காவிடில்
மறு ஏற்பாடென
சிறு சாக்கு நிறைய மாங்கொட்டைகள்
சீரகம் கொத்துமல்லி
வேறு என்ன என்ற திகைப்பில்
ஒரு பிடி பச்சை விரலி மஞ்சள்
எந்த ஊரிலும்
விரிந்த வானும்
ஆழ் கடலும்
சேரும் கோடு
கரு நீலம்தான்
என்று ஒரு ஆறுதல்.
—————
பேறு
---
வீடு திரும்புவற்கான பாதையில்
இருள் சூழ்ந்துவிட்டது
பசியடங்கிய வயிறு போல
எங்கும் மௌனம் கவிந்துவிட்டது
இனியெங்கும் செல்வதிற்கில்லை
ஆதலால்
சொற்களின் நினைவுகளில்
மகரந்தங்களை யாசிக்கிறாய்
ஏதோ ஒரு கூடுதலில்
லயம் கூடுமென நினைக்கிறாய்
ஏதோ ஒரு ஒடுங்குதலில்
உத் கீதம் எழுமென நம்புகிறாய்
ஏதோ ஒரு அபத்தம் பற்றுகையில்
அழகு விகசிக்குமென ஏங்குகிறாய்
உன் ஆழ் மனக் குகையில்
விடாது சொட்டும்
நீர்த்துளிகளுக்கு
கண் என்றும்
மீன் என்றும்
சிறகென்றும்
பெயரிடுகிறாய்
கண் ஒளியாக
மீன் கடலாக
சிறகு வானாக
உன் ஈடு
வீடு பேறாகிறது.

மீன் பிடி படலம்

 மீன் பிடிப் படலம்

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. நகரில் செய்வதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கையில் அங்கே ஓடும் போடொமாக் நதியின் மீன் பிடிக்கச் சென்றவன் நான் ஒருத்தனாகத்தான் இருப்பேன். ஒரு சனிக்கிழமை என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் உள்ளிட்ட பல மியூசியம்களையும் பார்த்துவிட்டேன். நியுயார்க், பென்சில்வேனியா நகரங்களுக்கு அதற்கு முந்தைய வார இறுதிகளில்தான் போய் வந்திருந்தேன். நான் தங்கியிருந்த கதீட்ரல் அவென்யூவில் மாலையில் பண்டிட் ரவிஷங்கரின் சிதார் கச்சேரியை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. எனக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. கச்சேரி கதீட்ரலில். நான் தங்கியிருந்த bed and breakfast விடுதிக்கும் கதீட்ரலுக்கும் நடுவில் அமெரிக்கன் ஃபோக்லைஃப் செண்ட்டரின் இயக்குனர் ஆலென் ஜபோரின் வீடு இருந்ததுஆலென் காலையில் ஃபோன் பண்ணி என்ன செய்கிறாய் பக்கத்தில் மிருகக்காட்சி சாலையில் பாண்டாக்கள் வந்திருக்கின்றன போய் பார்த்துவிட்டு வரவேண்டியதுதானே என்றார். அருகாமையில் இருந்த அந்த தேசிய மிருகக்காட்சி சாலையை நான் பலமுறை ஏற்கனவே பார்த்துவிட்டேன். எந்த ஊருக்குப் போனாலும்அந்த ஊரில் ஓடும் நதியைப் போய் பார்த்துவிடுவது எனக்கு வழக்கம். போடொமாக் நதியை இந்த முறை  வந்ததிலிருந்து பார்க்கவில்லை அதைப்போய் பார்க்கலாமென்றிருக்கிறேன் என்றேன். ஆலென் அப்படியென்றால் பொடொமாக்கில் மீன் பிடிக்கப் போகலாமா என்று கேட்டார்


அரை நிக்கரும் கேன்வாஸ் ஷூவும் அணிந்து நான், ஆலென், அவரது என் வயது ஒத்த மகன் மூவரும் கிளம்பினோம். ஆலென் எனக்கு ஒரு கௌபாய் தொப்பியும் தூண்டிலும் கொடுத்தார்அமெரிக்க தூண்டில்கள் கோல்ஃப் விளையாட்டில் பயன்படுத்தப்படும் உலோகமட்டைகள் போல உறுதியாக இருக்கும். கைப்பிடி அருகே உள்ள சக்கரத்தில் தூண்டிலை வீசுவதற்கான உறுதியான நைலான் கயிறு சுற்றியிருக்கும். அந்த தூண்டிலை எப்படிப்பன்படுத்துவது என்று ஆலெனும் அவர மகனும் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். மீன் பிடித்தல் என்பது ஒரு விளையாட்டு, மனதுக்கு சோர்வு நீக்கி உற்சாகம் அளிக்கக்கூடியது, பிடித்த மீனை திரும்ப ஆற்றில் வீட்டு விட வேண்டும்; ஆலெனின் மகன் சின்ன வயதிலிருந்து பிடித்த மீன்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆலெனின் வீட்டு வரவேற்பறையில் இருந்தன


பொதுவாக இந்திய நதிகளில் அவை சுழித்து ஓடும் விதம், தண்ணீரின் நிறம் போன்றவற்றை வைத்து சில குணாதிசயங்களை உடனடியாக உணரலாம். போடொமாக் நதிய குணாதிசியங்களற்று பெரிதாக அகலமாக ஆழமாக இருந்தது. வாஷிங்டன் நகர எல்லையில் ஓடும் பொடொமாக்கை பாலத்தில் கடந்தால் பாலத்தின் எதிர்க்கரை ஆர்லிங்டன், அங்கே இருக்கும் மேரியட் ஹோட்டலில் நான் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். நானும் ஹிந்துஸ்தானிப் பாடகர் சத்யஷீல் பாண்டேயும் ஒரே கருத்தரங்குக்கு வந்திருந்தபோது அங்கே தங்கியிருந்தோம். ஆர்லிங்டன் மேரியட் ஹோட்டலிலிருந்து பாலத்தின் வழி நடந்து போய் நானும் சத்யஷீலும் வாஷிங்டனின் ஜார்ஜ் டவுணில் விஸ்கி வாங்கியது , சத்யஷீல் குடித்துக்கொண்டே பாலத்தில் பாடியது, நடனமாடியது என முன்பு நடந்தவற்றை நான் சொல்ல ஆலென் அவருக்கு பாலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார்


போடொமாக் கரையில் நானும் ஆலெனும் எங்கள் தூண்டில்களை வீசிவிட்டு அமர்ந்திருக்கையில் ஆலெனின் மகன் நடந்து கொண்டே தூண்டிலை வீசிக்கொண்டிருந்தார்.


ஆலென் மீன்பிடிப்பது என்பது கவிதா தருணத்துக்கான உருவகம் என்று சொன்னார். காத்திருத்தல், எதிர்பார்ப்பு, அதிர்ஷ்டம், காலத்தின் கருணை, காலத்தின் இரக்கமின்மை, போராட்டம், ஏமாற்றம், வெற்றி என மீன் பிடிப்பில்தான் எத்தனை நுண்ணோக்குகள் அடங்கியிருக்கின்றன என வியந்தோம். ஆலென் அமெரிக்க இலக்கியத்தில் மீன் பிடிப்பு ஹெர்மன் மெல்வில்லின்மோபி டிக்என்ற செவ்வியல் நாவல் அமெரிக்கா என்ற நாட்டின் உருவாக்கத்தின் உருவகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். (  தமிழினி மின்னிதழில் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் மோபி டிக் பற்றி எழுதியிருக்கும் , ‘நீர் மேல் ஆடிய வேட்டை நாடகம்ஹெர்மன் மெல்வில்லின் மோபி டிக் என்ற அருமையான கட்டுரை பிரசுரமாயிருக்கிறது).


தமிழிலக்கியத்தில் மீன் பிடித்தலைப் பற்றி பேச்சு வந்தபோது எனக்கு உடனடியாக சா.கந்தசாமியின்தக்கையின் மேல் நான்கு கண்கள்சிறுகதையைச் சொன்னேன். பாதசாரியின்மீனுக்குள் கடல்என்ற கவிதை மீன் பிடிப்பதைப் பற்றி இல்லையென்றாலும் அந்த உருவகம் இந்திய தத்துவ சிந்தனையின் ஒரு பெரும் பிரிவின் சாராம்சத்தை உடனடியாக நமக்குச் சொல்லிவிடுகிறது என்று எடுத்துச் சொன்னேன். ஆத்மாநாமின் ஒரு சிறிய கவிதை மீன் பிடிப்பை வைத்து existential cruelty, dilemma எல்லாவற்றையும் சொல்லிவிடுவதைப் பற்றி பேசினோம். ஆத்மாநாமின் கவிதை:


"முத்தைப் பறிகொடுத்துக் கதறும்

சிப்பியின் ஓலம்

கடற்கரையில்

தூண்டில் மீன்களுக்கு

உண்டு ஒரு கூடை

என்றும் நிரந்தரம்


ஆலெனின் மகனுக்கு ஒரு மீன் சிக்கிவிட்டது. அவர் அதோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு தூண்டில் முள்ளை நீக்கி மீண்டும் அதை ஆற்றில் தூக்கிப் போட்டார். ஆலென் பார்த்தாயா கந்தசாமியின் கதை இப்போதும் நடப்பதை, நம்மை விட வயதில் இளையவனான என் மகனுக்குத்தான் மீன் மாட்டுகிறது என்று கூறி சிரித்தார்.


ஆலெனும் நானும் இந்தியாவில் பயணங்கள் மேற்கொண்டபோது நான் என் தினசரி அனுபவங்களை ஹைக்கூ கவிதைகளாக டைரி எழுதுவதை ஆலென் கவனித்திருந்தார். நான் ஹைக்கூ அந்த ஹைக்கூ கவிதைகளை பிரசுரம் செய்வதில்லை; அவற்றை நினைவுக்குறிப்புகளாகவோ அல்லது பிற நீண்ட படைப்புகளை எழுதுவதற்கானத் தீப்பொறிகளாகவோதான் பயன்படுத்துகிறேன் என்றும் அவருக்குத் தெரியும்


இப்பொது ஒரு ஹைக்கூ சொல்லேன் என்று ஆலென் தூண்டினார்நான் போடொமாக் பாலத்தில் நடந்த சத்யஷீல் சம்பவத்தை நினைத்து,


பிரிக்கும் நதி

இணைக்கும் பாலம்

பாலத்தில் குடிகாரக் கலைஞனின் இசை


என்பத்தைச் சொல்லி இது,


"அமைதியான களம்

பறக்கும் பட்டாம்பூச்சி

தூங்கும் பட்டாம்பூச்சி


என்ற புகழ் பெற்ற ஹைக்கூவை போலி செய்வது என்றும் சொன்னேன்.

ஆலென் இன்னொன்று என்று தூண்டினார்.


மாலை  வாஷிங்டன் கதீட்ரலில் நடக்கவிருக்கும் பண்டிட் ரவிஷங்கரின் கச்சேரி எனக்கு நினைவுக்கு வந்தது.


பழைய தேவாலயம்

பகல் வெளிச்சத்தில் இசைக் கச்சேரி

இரவின் இருட்டில் ஓநாயின் ஊளை


என்று நான் சொன்னவுடன் ஆலெனுக்கு சிரிப்பு தாளமுடியவில்லை, “ Where the hell the wolfes came from?”  என்று மேலும் சிரித்தார். நம் கதீட்ரல் அவென்யூவுக்கு எதிர்ப்பக்கத்திலுள்ள நேஷனல் மிருகக்காட்சிசாலையிலிருந்துதான் என்று நாங்கள் மேலும் சிரித்தோம்


ஆலென் நான் சொன்ன ஹைக்கூக்கள் இரண்டுமே இரண்டு எதிரிணைகளைச் சொல்லி அவற்றை சமன்படுத்துவதை கவிதையாக்குபவை இது ஐசன்ஸ்டையினின் சினிமா மொழியின் அடிப்படை அலகான  montage  போல ஆனால் இவை மிகச் சிறப்பான கவிதைகளை உருவாக்காது என்றார். எனக்கு அவர் அபிப்பிராயாத்தோடு உடன்ப்படில்லை என்றாலும் நான் ஒன்றும் சொல்லவில்லை


கொஞ்ச நேரம் கழித்து ரஷ்ய சினிமாப்பட இயக்குனர் தார்க்கொவ்ஸ்கி தன்னுடைய சினிமா மொழியின் அடிப்படையை விளக்க எடுத்துக்காட்டும் இரு ஹைக்கூக்களைச் சொன்னேன். அவை:


"அலைக்குள் நீண்டிருக்கும் தூண்டில்

மெலிதாக தீட்டப்பட்டிருக்கிறது

முழு நிலவின் ஒளியால்


"பனித்துளிகள் விழுகின்றன

முள் நுனிகளை நோக்கி

சில அந்தரத்தில்


ஆலென் இப்படி நிகழ்வுகளைக் காட்சிப்படிமங்களாக்கும் கவிதைகள் மிகவும் நுட்பமானவை உயர்வானவை என்றார். எனக்கு க்லாப்ரியாவின் எண்ணற்ற காட்சிப்படிமக் கவிதைகள் நினைவுக்கு வந்தன.


அப்போது என் தூண்டிலில் ஒரு மீன் சிக்கிவிட்டது. பழக்கமின்மையால் எனக்கு தூண்டிலின் சக்கரத்தை விரைவாகச் சுற்றத்தெரியவில்லை. ஆலென் என் தூண்டிலை வாங்கி சக்கரத்தைச் சுற்ற சிக்கிய மீன் மேலே துடித்தபடி வந்தது. மெரிய மீன். மூன்று மூன்றரைக் கிலோ எடை இருக்கும். நான் பதற்றமாக அந்த மீனைப் பிடித்து தூண்டில் முள்ளை வாயிலிருந்து எடுக்க முற்பட்டேன். நான் ஒரு மீனை கையால் தொடுவது அதே முதல் தடவை. மீனின் சொரசொரப்பும் அதன் வழவழப்பும் என்னுள் வித்திர உணர்வை ஏற்படுத்தின. மீன் துடித்துக்கொண்டே இருந்தது முள் ஏற்படுத்திய காயத்தை அதிகமாக்கியது. ஒரு வழியாக முள்ளை நீக்கி ஆற்றில் தூக்கி மீனை எறிந்தபோது அது ஆற்றில் ஒரு முறை துள்ளி மீண்டும் நீந்தியதைப் பார்த்தபோது மனம் அமைதியானதுமீனின் முள்ளை எடுக்க நான் முயற்சித்தபோது அதன் இமைகளற்ற கண் என்னை ஆத்திரக் கனலோடு உற்றுப்பார்த்ததாக நான் நினைத்துக்கொண்டேன்.


அறைக்குத் திரும்பிய பிறகு இந்தக் கவிதையை எழுதினேன்:


ஒரு கண் பார்ப்பதை மறு கண் பார்ப்பதில்லை மீன்களுக்கு


முகத்தோடு முகம் பார்த்து நிற்பதில்லை அவை

மற்றதன் முகம் நோக்கி நீந்துவதுமில்லை

முத்தத்தின் நிர்ப்பந்தமுமில்லை 

முற்றிய பகையில் முகம் திருப்புவதுமில்லை


ஒன்றன் வால் பிடித்து மற்றொன்று

ஒன்றன் முதுகில் மற்றொன்று 

கூட்டம் கூட்டமாய் 

ஒரே திசையில் துடுப்பசைத்துச் செல்கின்றன


ஒரு நொடி

ஒரு துடுப்பு

கனவெனவே 

விரிகிறது

கடலாழம்


(‘நீர் அளைதல்தொகுதியிலிருந்து)