Pages

Wednesday, May 1, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-19

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-19

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  கோப்பெருஞ்சோழன்

குறுந்தொகையில் பாடல் எண்; 20

திணை:  பாலை

————-

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து

பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்

உரவோ ருரவோ ராக

மடவ மாக மடந்தை நாமே.

—————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழியே, அருளையும் அன்பையும் துறந்து தன் துணைவியை விட்டு பொருள்தேடும் முயற்சியின் பொருட்டு பிரியும் செயலையுடைய தலைவன் அறிவுடையவனாயின் அவ்வாற்றலையுடையோர் அறிவுடையவர் ஆகுக, அவனைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றலில்லாத நாம் அறிவிலேம் ஆகுக.

——

வாசிப்பு

——-

கூற்றும் கேட்போரை தன்னிலையாக்கம் செய்தலும்

————

இந்தக் கவிதை போல படிமங்கள் இல்லாத நேரடியான கவிதைகள் மொழியின் வேறு பல இயங்குதளங்களை ஆராய உதவியாக இருக்கின்றன. தலைவி தோழியிடம் கூறியது என்பதை உ.வே.சா. இன்னும் விளக்கமாக ‘செலவுணர்த்திய தோழிக்கு கிழத்தி உரைத்தது’ (செலவு- தலைவன் பொருள்வயிற் பிரிதல்) எனக் கூற்றின் தனமையை விர்த்து சொல்கிறார். ‘மடந்தை நாமே’ என்ற கவிதையின் இறுதி சொற்கள் தோழியையும் தலைவியைப் போலவே மடந்தை என கட்சி கட்டி சேர்த்துக்கொள்கிறது. கூற்று எவ்வாறாக யாரை நோக்கி எப்படி பேசப்படுகிறது என்பதை வைத்தே கேட்போரின் தன்னிலையாக்கம் (subjectivity) கட்டமைக்கப்படுகிறது. (பார்க்க: Silverman, Kaja. The Subject of Semiotics. Oxford University Press, 1983.) ‘மடந்தை நாமே’ என்ற  சொற்கள் அங்கதத்துடன் கூடிய தொனியில் சொல்லப்பட்டதால் அதில் ஒரு தோழமையின் கண் சிமிட்டல் இருக்கிறது; மடந்தை என்பதற்கான நேர் எதிரான பொருளைக் குறிக்கிறது; தோழி தலைவியின் வலியைப் பகிர்ந்துகொள்வாள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.  

————

தெரிவுகளின் மாயத்தோற்றங்கள்

———

இந்தக் கவிதை இரண்டு எதிரெதிர் பாதைகளைக் கட்டுகிறது. ஒன்று பொருளீட்டும் ஆசையால் பிரிதல் இன்னொன்று இதயத்தின், காதலின் பொருட்டு பிரியாது சேர்ந்திருத்தல். “அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து, பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக” எனும் போது தலைவனை பொருளுக்காக பிரிந்து செல்லும் அவன் வலுவுடையன் எனில் (உரவோர் ஆயின்) அவனே வலுவுடையவனாக இருக்கட்டும் என கசப்பின் தொனியில் சொல்கிறாள். மடந்தை நாமே என்பதற்கு எதிரானதாக ‘உரவோர் உரவோர் ஆக’ என்பது சொல்லப்பட்டதால் உரவோர்  புத்திசாலிகளும் ஆவர் என பொருளைச் சுட்டி அதற்கு நேரெதிராக முட்டாள்கள் என்ற அர்த்ததைத்க் கடத்திவிடுகிறது. கூற்றின் நாடக தொனி எப்படி தெரிவுகளின் மாயத்தோற்றங்களை உடனடியாகச் சொல்லிவிடும் என்பதற்கு இது ஒரு நல்ல எளிமையான சான்று. 

————-

அன்பும் அருளும்

—————

பொருள்வயின் பிரிந்து செல்லும் தலைவனை ஏசுகின்ற கவிதையில் வரும் முதல் வரியான “அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து” என்பதை எப்படிச் சரியாக புரிந்துகொள்வது? உ.வே.சா அருள் என்ற சொல்லுக்கு தம்மோடு ஒரு தொடர்பும் இல்லாதார் மாட்டும் அவர் துயரங் கண்டதால் உண்டாகும் இரக்கம் என்றும் அன்பு என்ற சொல்லுக்கு தொடர்புடையாரிடத்தும் தன்னாற் புரக்கப்ப்டுவார் மேலும் உளதாகிய காதல் எனவும் உரை எழுதுகிறார். அன்பினின்றும் அருள் உண்டாகுதல் தோற்றும் முறை; அருளின் பின் அன்பு நீங்குதல் நீங்கும் முறை. காதலியின் மேல் அன்பில்லாமல் பொருளுக்காக பிரிந்து செல்லக்கூடியவனுக்கு அருளும் வசப்படாது என்பது உட்குறிப்பு; அந்த உட்குறிப்பினுள் இருக்கிற சோகமும் கசப்புமே இந்த எளிய சொற்களைக் கவிதையாக்குகின்றன. 


 


No comments:

Post a Comment