Pages

Tuesday, June 16, 2026

உள்ளங்கை நிறைத்த பவளமல்லி


இன்று பூஜைக்கு வீட்டுக்கு வந்த மலர்களில் கையளவு பவளமல்லி இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. திருநெல்வேலியில் சிந்துபூந்துறையில் என் அம்மாவின் வீட்டுக்கு முன்னால் இருந்த வீட்டு வாசலில் ஒரு பவளமல்லி மரம் நின்றிருந்தது; தினசரி காலையில் அது பூச்செறிந்து தரையில் அந்நாளின் நறுமண வட்டத்தை எனக்காக வரையறுத்திருக்கும். பவளமல்லி இரவில் பூப்பது என்றொரு பேச்சு இருந்தாலும் அது முன்னிரவில் மலர்வது என்பதே உண்மை. அது பிரம்மமுகூர்த்ததில் மலர்வதால்   சமஸ்கிருதத்தில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இன்று அது என் உள்ளங்கை நிறைத்திருக்கிறது. 

பவளமல்லியின் காம்பு செந்நிறத்தில் இருப்பதால் இது பழந்தமிழ் இலக்கியத்தில் சேடல் என்றழைக்கப்படுகிறது. கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் வரும் நீண்ட பூக்கள் பட்டியலில் சேடலும் ஒன்று. சிலப்பதிகாரத்தில் மதுரை மாநகரைக் காவல் காக்கும் பூதங்களில் ஒன்று கழுத்தில் பவளமல்லி மாலை அணிந்திருக்கிறது. நச்சினியார்க்கினியரைப் பின்பற்றி உ.வே.சா. சேடலை பாரிஜாதம் எனத் தன் உரையில் குறித்திருக்கிறார். 

சிவாகம விதிகள் பெண்கள் கழுத்தில் பவளமல்லியை அணியக்கூடாது என்று சொல்கின்றன. சீர்காழி, திருநாரையூர், திருக்கடிகை, திருக்கோட்டாறு, திருக்களர், தென்குரங்காடு துறை, மரக்காணம் ஆகிய ஊர்களிலுள்ள  சிவாலயங்களில் பவளமல்லி தலமரமெனப் படித்திருக்கிறேன்; பார்த்ததில்லை. 

நடந்தாய் வாழி காவேரி என்று நீங்கள் என்னைப் போல காவேரியின் ஓட்டத்தைபின்பற்றி காவேரி டெல்டா கிராமங்களில் நடந்து பார்த்திருந்தீர்கள் என்றால் பல இடங்களில் பவளமல்லி காடாய் செறிந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். தி.ஜானகிராமனும், சிட்டியும் சேர்ந்து எழுதிய இதே தலைப்புள்ள கட்டுரையில் தியாகராஜருக்கு இந்தக் காவேரியின் வழித்தடம்தான் அவருடைய கீர்த்தனைகளில் தூய்மை, பக்தி, நியாயமான கோபங்கள், அலுப்பு, ஏக்கம் ஆகியவற்றிற்கான முதல் இசைச்சுழிப்புகள் என்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள். 

தியாகராஜரின் நீலாம்பரி ராகத்தில் அமைந்த ‘என்னக மன்ஸுகு ரானி’ என்ற கீர்த்தனையில் வரும், ‘தாமரை, மல்லிகை, துளசி, இருவாட்சி, பவளமல்லி ஆகிய மலர்கொண்டு தொழாத கரங்களெதற்கோ? கரங்களெதற்கோ? இக்குடும்பமெதற்கோ?’ என்ற வரியை அவர் காவேரிக்கரை பவளமல்லிக்காடுகளை நேரடியாகப் பார்த்து அனுபவித்துதான் எழுதியிருக்கமுடியும். 

பவளமல்லியின் நறுமணம் நூறடிக்கு வீசும் என்பார்கள். மூவடுக்கிதழிகளாக வகைப்படுத்தப்படும் தாவரங்களின் மலரும் பூக்களின் குணமது. புராணக்கதையொன்றில் கிருஷ்ணன் சத்தியபாமாவின் முற்றத்தில் பவளமல்லியை நட்டு வைக்க அது வளர்ந்து ருக்மணியின் வீட்டு முற்றத்தில் பூக்களை சொரிகிறது; மணமோ இருவருக்கும் வீசுகிறது.

சிந்துபூந்துறை வீட்டு மாடியில் நின்று நானும் அம்மாவும் பவளமல்லி மரம் பூக்களைச் சொரிவதை கண் விழித்ததும் முதன்முதலாய்ப் பார்ப்போம். ஶ்ரீவைகுண்டத்தில் ஆண்டாளும் அப்படித்தான் கண்  விழிக்கிறாள். 

என் உள்ளங்கை நிறைத்திருக்கும் பவளமல்லியில் மலர்ந்த இந்த தினம் பொன்னுடைத்து.

---


No comments:

Post a Comment