Sunday, May 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-35

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-35

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 36

திணை: குறிஞ்சி

————-

துறுகல் அயலது மாணை மாக்கொடி

துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,

நெஞ்சு களன் ஆக நீயலென் யானென

நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்

தாவா வஞ்சினம் உரைத்தது,  

நோயோ தோழி நின்வயினானே.

————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய மாணையென்னும் பெரிய கொடியானது தூங்குகின்ற களிற்றின் மேல் படரும் குன்றங்களையுடைய நாட்டுக்குத் தலைவன் நின் நெஞ்சு களமாக இருந்து பிரியேனென்று எனது நல்ல தோளை அணைந்த போது அத தலைவன் கெடாத உறுதிமொழியைக் கூறியது உன்னிடத்தில் வருத்தத்திற்குக் காரணமாகுமோ? ஆகாதன்றே.

————

மாணைக்கொடி பாறை போலத் தோன்றும் களிற்றின் மேல் படர்தல்

——-

யானையைப் பெரும்பாறைக்கு உவமிப்பதை பல சங்கக் கவிதைகளில் வாசிக்கலாம். இந்தப் பாடலில் பெரும்பாறை போல இருந்த யானையின் மேல் படர்ந்த மாணைக்கொடியானது யானை துயில் நீங்கும்போது சிதைவுபடும்; தலைவனின் சூளுரையை நம்பியதால் தலைவியின் நிலைமை மாணைக்கொடியின் நிலைமையைப் போன்றது. உ.வே.சா. துஞ்சுகின்ற அளவும் துறுகல் என்று தோன்றும் யானையின் மேல் படர்ந்து, துயில் நீங்கி அது சென்ற இடத்துப் பற்றுக்கோடின்றி இருத்தலைப் போல என உரை வளம் சேர்க்கிறார். 

——

வஞ்சினம் உரைத்தல்

———-

சங்க இலக்கிய புறப்பாடல்களில் வஞ்சினம் உரைத்தல் வீரத்தின் உயர்பண்பாகப் போற்றப்படுகிறது. இது அஞ்சாமையின் அடையாளமாக வீரநிலைக் காலப் பாடல்களில் காணப்படுகிறது. தம் வீரத்தைப் பகைவர்க்கு உணர்த்த வேண்டிய சூழலில் வஞ்சினம் எழுகிறது. அகப் பாடல்களிலோ வஞ்சினம் உரைத்தல் தலைவன் தலைவிக்கு அவளைப் பிரியேன், மணமுடிப்பேன் என அளிக்கும் வாக்குறுதிகளைக் குறிப்பதாகும். அகத்திற்கும் புறத்திற்குமிடையே ஒழுங்கமைப்பு உறவுகளை (systemic relations) உருவாக்கும் கருத்தாக்கங்களில் வஞ்சினம் உரைத்தலும் சேர்வது ஒரு அரிய மொழிபு ஆகும். இப்பாடலில் தலைவியின் தோளணைந்து தலைவன் வஞ்சினம் உரைக்கிறான்.

———

‘நோயோ தோழி” என்பதிலுள்ள ஓகாரம் எதிர்மறை

——-

தோளணைந்து தலைவன் சூளுரைத்தபோது நற்றோளாய் இருந்தது இப்போது இல்லை; இப்பொது நலிந்து மெலிந்த தோளாய் இருக்கிறது. நற்றோள் என்பது தலைவிக்கு நினைவு என்பது போலவே தலைவனின் சூளுரையும் நினைவாகவே இருக்கிறது. இதைத் தலைவி தோழியிடத்து தலைவன் வஞ்சினம் உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பந் தருவது; அதனை நான் பொறுத்து ஆற்றியிருப்பது உனக்கு வருத்தமுண்டாக்க காரணமாயிருக்கக் கூடாது என்றும் சொல்லும் விதமாக ‘நோயோ தோழி’ என்று வினவுகிறாள்.  ஆகவே நோயோ என்பதிலுள்ள ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.

——-

நெஞ்சு களனாக

——

களம் என்ற சொல்லை களன் என எழுதலாம்; மனம் என்பதை மனன் என்று எழுதலாம் என்பதைப் போல. மகரத்திற்கு பதிலாக னகரம் வருவது மகரனகரப்போலி எனப்படும். நெஞ்சை நோக்கிப் பேசப்படும் கவிதைகளிலும், நெஞ்சின் போராட்டங்களைப் பேசும் கவிதைகளிலும் நெஞ்சு ஒரு களனாக, போர்க்களத்திற்கு இணையானதாக அகக்கவிதைகளில் வருகின்றன. இக்கவிதையில் 

வரும் “நெஞ்சு களன் ஆக நீயலென் யானென, நற்றோள் மணந்த ஞான்றை மற்று ,அவன்தாவா வஞ்சினம் உரைத்தது” எனும் வரிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஞான்றை என்ற சொல்லில் ஐ சாரியை. தாவா வஞ்சினமென்றது அது கூறிய காலத்தில் தலைவியின் நினைவு, இப்போது அது தவறியது என்பது குறிப்பு.

‘நெஞ்சு களனாக’ என்பதற்கு இரா. இராகவையங்கார்  தன் நெஞ்சு சான்றாக, தன் நெஞ்சே அறியும் அவைக்களனாக இருப்பதாக உரை எழுதுகிறார். 

——

காதலின் நிலம்

——-

மாணைக்கொடிகள் தூங்கும் யானைகளைப் பெரும்பாறைகளென நினைத்து அவற்றின் மேல் படந்திருப்பது என்ற காட்சி காதலர்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும் காதலின் மலைநிலத்தைச் சொல்கிறது.  குறிஞ்சித் திணையின்பாற்பட்ட அழகிய காட்சிகளில் இதுவும் ஒன்று. 

—-

Saturday, May 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-34

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-34

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொன்னது

இயற்றியவர்: கழார்க்கீரன் எயிற்றியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 35

திணை:மருதம்

————-

நாண் இல மன்ற எம் கண்ணே, நாள் நேர்பு

சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு அன்ன

கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ

நுண் உறை அழி துளி தலைஇய

தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, தலைவன் பிரிந்த நாளில் உடம்பட்டு, பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு

மலரும்படி நுண்ணிய மழை பொழிந்து அழிந்ததுளி பொருந்திய தண்ணிய வருதலையுடைய வாடைக்காற்றையுடைய கூதிர் காலத்தும் பிரிந்துறையும் தலைவன் பொருட்டு அழுதலால் எம்முடைய கண்கள் நிச்சயமாக நாணம் இல்லாதன.

————-

பச்சைப்பாம்பின் முதிர்ச்சியடைந்த கருவும் கரும்பின் அரும்பும்

———

இந்தப் பாடலில் வரும் ‘சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு’ - பச்சைப்பாம்பின் முதிர்ச்சியடைந்த கரு கரும்பின் அரும்பிற்கு ஒப்பிடப்படுவதும் இரண்டும் தலைவியின் கண்ணீர்த்துளிக்கு உவமையாதலும் சிறப்பானதாகும்.  ஒன்று முதிர்ச்சியடைந்த கரு இன்னொன்று அரும்பு என்பதிலுள்ள பருவ வேறுபாடு கவனிக்கத்தக்கது. தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றபோது, அவன் பிரிந்து செல்ல உடன்பட்டு அழாமல் இருந்தபோது அவளுடைய கண்ணீர்த்துளி எந்த நேரமும் சிந்தத்தயாராக, எந்த நேரமும் பிரசவமாகிவிடும் பாம்பின் முதிர்ச்சியடைந்த கரு போல இருந்தது; ஆனால் சிந்தவில்லை. ஆகவே அது கரும்பின் அரும்பிற்கு ஒப்பிடப்பட்டது. அரும்பியதும் சிந்தவில்லை.

———

தாமதமாக சிந்திய கண்ணீர்த் துளி

——-

அரும்பியதும் சிந்தாத கண்ணீர்த்துளி தாமதமாய்த் தலைவிக்கு சிந்துகிறது. கார்காலத்து மழை பெய்தபின் எஞ்சியிருக்கும் துளிகள் கூதிர்காலத்து வீழ்தல் போல என்பதை “நுண் உறை அழி துளி தலைஇய வாடை” என்று அவள் சொல்கிறாள். அதாவது தலைவன் பிரிந்து சென்றபோது அரும்பிச் சிந்தாமல் நின்ற கண்ணீர்த்துளிகள் இப்போது  பிரிவாற்றமையினால் சிந்துகின்றன. 

——-

உறை அழிதுளி வாடை

——

வாடைக்காற்றால் கரும்பின் பொதி அவிழ்தலைப் போல அதுவரை உறைந்திருந்த கண்ணீர்த்துளி இப்போது சிந்துகிறது என்று தலைவி “நீ அழுதது ஏன்” என வினவிய தோழியிடம் சொல்கிறாள். இத்க்கவிதையில் கவனிக்கத்தக்க இன்னொரு அழகான சொல் சேர்க்கை ‘நாள் நேர்பு’ ஆகும். இந்த நாள்தான் கண்ணீர்த்துளி சிந்துவதற்கு, நேர்வதான நாளாயிருக்கிறது. அபாரமான படிமங்களான பச்சைப்பாம்பின் கரு, கரும்பின் அரும்பு ஆகியன  அபாயம் சூல் கொண்டிருந்ததையும் இனிமை வருவதற்குக் காத்திருந்ததையும் ஒருங்கே சொல்கின்றன. ‘அழிதுளி’ என்ற பிரயோகமும் அபாரமானது. உ.வே.சா. அழிதுளி என்பதை அழிந்த துளி என்றும் பொ. வே. சோமசுந்தரனார்  அழிந்து விழும் துளி, இரா. இராகவையங்கார்  பெருந்துளி என்றும் விளக்கமளிக்கின்றனர்.  இரா. இராகவையங்கார்  பெருந்துளி என்று சொல்வதற்கு அத்துளி நாணமற்ற கண்களினால் சிந்தப்படுவது காரணமாகும். 

——

நாண் இல மன்ற எம் கண்ணே

————-

தொல்காப்பியம் இடையியல் சூத்திரம் 17, மன்ற என்ற சொல்லுக்கு மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் என்று சொல்கிறது. "கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே" என்ற நற்றிணையின்   34 ஆவது பாடலும் தேற்றம் என்பது ஈண்டு உறுதி செய்தலைக் கருதிற்று. தாமதமாகக் கண்ணீர்த்துளியை சிந்துகின்ற தலைவியின் கண்கள் நாணமற்றவை. 

இந்தக் கவிதையில் வாடைக்காற்று தலைவிக்கு துக்கத்தின் பூங்காற்றாக வீசுகிறது.  

——

Friday, May 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-33

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-33

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கொல்லிக் கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 34

திணை:மருதம்

————-

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவையின்றாய்,
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே,
முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்  
குட்டுவன் மரந்தை அன்ன, எம்
குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.

————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

முன்னிடத்திலுள்ளதாகிய கடற்கரையிலுள்ள வண்டாழங் குருகின் பெரிய தொகுதியானது, பகைவரைக் கொன்ற வீரரது வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுதற்கு இடமாகிய, குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற பனிச்சை விளங்குகின்ற, அழகிய நெற்றிக்கு உரிமையுடையோனும், வரைவொடு வரும் அத்தலைவனேயாவான்; ஆதலின், வருத்ததிலிருந்து நீங்கி தெளியராகித் தலவனைப் பிரிந்து தனியாய் உறங்குகின்ற வருத்தம் இல்லாதவராய் இவ்வூரிலுள்ளோர் கூறும் இனியது கேட்டு இன்புறுவாயாக.

———-

யானையங்குருகு

———

மதுரைக்காஞ்சிக்கு (674 ) உரை எழுதிய நச்சினார்க்கினியரின் குறிப்பைப்பின்பற்றி உ.வே.சா. யானையங்குருகு என்பது வண்டாழங்குருகு என்று அடையாளப்படுத்துகிறார். திருப்பாவையில்(பாடல் 7)  வரும் ஆனைச்சாத்தனென்னும் பறவையாகவும் இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். அகநானூற்றுப்பாடல் 145 இல் குஞ்சரக் குரல குருகு என்ற  பறவை குறிப்பிடப்படுகிறது. யானையைப் போன்ற  குரலுடைய பறவை என அதற்குப் பொருள் ஆகையால் அது யானையங்குருகு என்று பெயர் பெற்றிருக்கவேண்டும்.  தொல்காப்பியம் இந்தப் பறவை என்றில்லாமல் அனைத்து பறவைகளையும் ‘புள்’ என்ற பொதுச் சொல்லால் குறிக்கிறது. யானைக்குருகை திருவோண  நட்சத்திரத்திற்குரிய புள் எனவும் ஜோதிட நூல்கள் குறிக்கின்றன. 


பறவைக்கூட்டத்தை தோடு எனக்குறிப்பிடும் வழக்கத்தை இப்பாடலில் வரும் ‘கானலம் பெருந்தோடு’ என்ற வரியும் வேறு குறுந்தொகைப் பாடல்களில் வருகிற “காக்காய்ச் செவ்வாய்ப் பைந்தோடு”, “அன்னத்து வெண்டோடு”, “இருந்தோடுப் புள்ளினம்” ஆகிய வரிகளாலும் அறியலாம்.

இந்தப் பாடலில் பகைவர்களை வென்று அவ்வெற்றிக்களிப்பினால் நகைத்து ஆராவாரித்து நடனமாடும் வீரர்களின் ஆர்ப்பிசை கேட்டு கடற்கரையில் பெருங்கூட்டமாகக் கூடியிருந்த யானையங்குருகுகள் அஞ்சுகின்றன.


அப்படிப் பறவைகளும் அஞ்சுகின்ற வீரர்கள் புழங்கும் நிலத்தைச் சேர்ந்த தலைவனும் பெரும் வீரன் என்பது பெறப்பட்டது. தொல்காப்பியம் புறத்திணை 12 ஆம் சூத்திரமான “தும்பைதானே நெய்தலது புறனே” என்பதற்கு உரை எழுதுகிற இளம்பூரணர் போருக்கு பெரிய வெளி வேண்டியிருப்பதால் காடும் மலையும் கழனியும் அதற்கு ஆகாதென்பதால் அந்நிலம் கடல் சார்ந்த இடமென்று அறியலாம் என விளக்கமளிக்கிறார். 


“குட்டுவன் மரந்தை அன்ன” என்ற வரியில் வரும் குட்டுவன் என்பது சேரர்களுக்குரிய பெயர். சேரன் செங்குட்டுவன் என்ற பெயராலும் இது அறியப்படும். மரந்தை என்பது மேலக்கடற்கரையிலுள்ள பண்டைய ஊர். 

——

எம்குழை விளங்கு ஆய் நுதல் கிழவன்

———-

தோழி எம் நுதல் (கண் வழி) கிழவன் என்று கூறினாலும் அவள் கூறியது தலைவியின் பார்வை வழி என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும். தலைவியின் உடல் உறுப்புகளைத் தன்னுடையதாகத் தோழி  கூறுவதைப் புலனெறிவழக்காக தொல்காப்பியம் பொருளியல் சூத்திரம் 25 கூறுகிறது. மகளிர் தங்கள் குழல்களை வகுக்கும் ஐந்து பண்டைய முறைகளுள் பனிச்சையும் ஒன்று; குழல்களை எடுத்து முன்னுச்சியிலும் நெற்றியிலும்  அமைத்துக்கொள்வது பனிச்சை ஆகும்.  தலைவியின் அழகிய நெற்றிக்கும் அதில் கிடக்கும் குழலுக்கும் உரிமையாளன் தலைவன் என்று இப்பாடல் சொல்கிறது. தலைவியின் உடலுக்கு உரிமையாளனாகத் தலைவனைக் குறிப்பிடுதல் சங்கக்கவிதைகள் பலவற்றிலும் வருகிறது. கலித்தொகை பாடல் 19 இல் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் அவள் குழலையும் கண்களையும் நுதலையும் நீவிச் சென்றான் ஆகையால் ‘குழல் விளங் காய்நுதற் கிழவன்’ என அப்பாடல் அந்த மென்செய்கையைக் குறிப்பிடுகிறது. 

———

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்

———

இப்பாடலில் உள்ள பல சொற்களுக்கு அறிஞர்களின் உரைகளில் மிகுந்த வேறுபாடு உள்ளன.  ஓவலர் என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் தலைவியைவிட்டு நீங்காத செவிலி, நற்றாய் முதலியோர் எனவும்   மறுப்ப என்பதற்கு உ. வே. சா. தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறியதாகவும்,  பொ. வே. சோமசுந்தரனார் களவில் கூடியது தேறாத தந்தை முதலியோர் தலைவனுக்கு மணம் மறுத்தனர் என்றும்  முன்னர் மறுத்துப் பின்னர்த் தலைவனுடைய தகுதி கண்டு உடன்பட்டனர் என்றும் இப்பாடலுக்கு விளக்கம் எழுதியிருக்கின்றனர். இந்த வேறுபாடுகள்  தலைவியினுடைய கூந்தலையும் அது புரளும் அழகிய நெற்றியைப் பற்றிய விளக்கங்களிலும் இல்லை. 


தலைவன் விரைந்து வருவான் அவன் தலைவியைத் திருமணம் புரிந்துகொள்வான் என்று தலைவியைத் தோழி தேற்றியது இந்த அழகாக கவிதையின் உட்பொருள். அந்தப் பொருளை அஞ்சும் பறவைக்கூட்டத்தினுள்ளேயும் தலைவியின் நெற்றியில் புரளும் குழல்களுக்குள்ளேயும் இக்கவிதை ஒளித்து வைத்திருக்கிறது. 

——-


Thursday, May 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-32

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-32

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

இளம் பாணன் கேட்க தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: படுமரத்து மோசிகீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 33

திணை:மருதம்

————-

அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்

தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ

இரந்தூ ணிரம்பா மேனியோடு

விருந்தி னூரும்  பெருஞ்செம்மலனே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழியே, இவன் ஒரு இளைய மாணாக்கன். தனது ஊரிலுள்ள பொதுவிடத்து எத்தகையவனோ? இரந்து பெறும்  உணவினால் முற்ற வளராத மேனியோடு, புதியதாகப் பெறும் விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரிய தலைமையையுடையவன்.

———-

படுமரத்து மோசிகீரனார்

—————

படுமரத்து மோசிகீரனாரின் இந்தக் கவிதை தனித்துவமானது. குறுந்தொகையிலுள்ள பெரும்பான்மையான பாடல்களின் அமைப்பை இப்பாடல் கொண்டிருக்கவில்லை. இளம் பாணனின் மெலிந்த உடல், பெரு விருந்து ஆகிய இரண்டு குறிப்புகளே, அக்குறிப்புகளில்  அடங்கியிருக்கும் உள் ஆலோசனைகளே  ( suggestions) இதைக் கவிதையாக மாற்றப் போதுமானதாக இருக்கிறது. அந்தக் குறிப்புகளிலிருந்து விமர்சன விளக்கங்கள் அளித்தே இக்கவிதையை உள்வாங்கிக்கொள்ள வேண்டுமாகையால் வாசக பங்கேற்பினை அதிகம் கோரும் கவிதையாகவும் இது இருக்கிறது. உம்பர்ட்டோ எக்கோ தன்னுடைய நூலொன்றில் ஒவ்வொரு இலக்கிய பிரதியும் ஒரு சோம்பேறி எந்திரம் அது வாசகரை அர்த்ததைப் பெற உழைக்க வைக்கிறது என்று எழுதுவார். (பார்க்க: Eco, Umberto. The Role of the Reader: Explorations in the Semiotics of Texts. Indiana University Press, 1979.) அது இந்தக் கவிதைக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை இயற்றியதால்தான் மன்னன் சாமரம் வீச மோசிகீரனாரால் பரிசில் வாங்கச் சென்ற இடத்தில் அரசுக் கட்டிலில் தூக்கம் போட முடிந்தது போலும். 

—————

உடல் எனும் பிரதி (Body as text)

——-

இளம் பாணனின் உடலை இரந்து உண்ணும் மாணவனின் உடல் எனவும், மெலிந்த உடல் எனவும் தலைவி தன் தோழியிடம் சொல்வது ஒரு காமவிருப்பக் குறிப்பை உள்ளடக்கி வைத்திருக்கிறது.  இதையே உ.வே.சா. பாணன் வாயிலாகப் புக்குத் தலைவன் பெருமையைச் சொல்வன்மை புலப்பட பாராட்டியதால் அவனை ‘இள மாணாக்கன்’ என்றாள்; அவனை புகழ்ந்ததால் அவன் மேலும், தலைவன் மேலும் அவளுக்குள்ள பிரியம் புலப்பட்டது என்று எழுதுகிறார். மெலிந்த பசித்த உடலுக்கு விருந்து என்பது வெறும் உணவாக மட்டும் இருக்க முடியுமா? ‘ஊண் நிரம்பா மேனி’ என்பதிலும் காமக்கூடுதலை வேண்டுகின்ற மேனி என்ற உள்க்குறிப்பு அடங்கியிருக்கிறது. இரா. இராகவையங்கார் விருந்தோடு யானை, பரி, தேர் இவற்றில் ஊர்ந்து செல்லும் என்று பொருளை இன்னும் விரித்து எழுதுகிறார். விருந்தின் ஊர்தலாவது விருந்து பெறுதற்குரிய இடங்களுக்கெல்லாம் செல்லுதல். சீவகசிந்தாமணியில்  286 ஆவது செய்யுளில் “ ஊர்தல் ஈண்டு போதமேற்று” என்றொரு குறிப்பு வருகிறது. 

———

விருந்தினூரும் பெருஞ்செம்மலன்

——-

தலைவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணமுடையவளாக தலைவி இருப்பதால் தலைவன் வரும்போது விருந்தயர்தலும் அவனுக்கு வாயிலாக வந்த பாணனும் விருந்துணவு பெறுதலும் நேரும் என்பதால் விருந்தினூரும் பெருஞ்செம்மலன் என்றாள். தோழியை நோக்கி இப்படி தலைவி கூறியவற்றால் அவளது உடன்பாட்டுக் குறிப்பை அறிந்த பாணன் அதனைத் தலைவனிடம் சென்று உணர்த்த அவன் வந்து தலைவியோடு அளவாளவுவான் என்பது இன்னொரு உள்க்கிடக்கை.  


தோழியை ‘அன்னாய்’  ( அன்னை) என விளிப்பதும் மரபு.  

————-

என்னென்கொல்லோ

——-

அயலிடாமாகிய இங்கேயே இவ்வளவு சொல்வன்மையுடன் பேசுவோன் தன் ஊரில் தான் தங்கும் மன்றத்தில் எத்தைகைய சிறப்புடையவனோ என “என்னென்கொல்லோ’ என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் விள்க்கமளிக்கிறார். ‘கொல்’  என்பது ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்; ஆகையால் எப்படி சிறந்திருப்பானோ என்ற கேள்வியாக அதை வாசிக்கவேண்டும். 

பாணர்கள் காதலருக்கிடையில் தூது சென்றிருப்பது நல்ல மரபாக இருந்திருக்கிறது. 

——-


Wednesday, May 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 32

திணை:குறிஞ்சி

————-

காலையும் பகலுங் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலொடு மறுகிற் றோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காலைப்பொழுதும், உச்சிப்பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியற்காலமும் என்ற இச்சிறுபொழுதுகள் இடையே தோற்றுமாயின் அத்தகையோருடைய காமம் உண்மையானதன்று, பிரிவு வருமாயின் பனை மடலாற் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து யாவரும் இன்னாளால் இவன் இச்செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும். அது செய்யாது வாழ்ந்திருந்தாலும் பழிக்குக் காரணமாகும்.

———

கையறு மாலை

——

திருக்குறள் 1227 “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்” என்று கூறுவது போலவே தலைவனும் இக்கவிதையில் காம நோய் மிகுந்து செயலறுதற்கு ஏதுவாகின்ற மாலையை “கையறு மாலை” என்றழைக்கிறான். பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். சிறுபொழுது என்பது  ஒரு நாளின் சிறுபிரிவு:

மாலை, யாமம் (நள்ளிரவு), வைகறை (அதிகாலை நேரம்)

எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்),  நண்பகல்

எனச் சிறுபொழுது 5 பிரிவுகளை உடையது.


பெரும்பொழுது இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.இளவேனில் (சித்திரை, வைகாசி மாதங்கள்), முதுவேனில் (ஆனி, ஆடி மாதங்கள்)

கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்), முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்)

பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்) ஆகியன பெரும்பொழுதுகள் ஆகும். 


குறிஞ்சித்திணைக்கு  யாமம் சிறுபொழுது, கூதிர், முன்பனிக்காலங்கள் பெரும்பொழுதுகள். 

பாலைத்திணைக்கு   நண்பகல் சிறுபொழுது வேனில், பின்பனிக்காலங்கள் பெரும்பொழுதுகள். 

முல்லைத் திணைக்கு மாலை சிறுபொழுது, கார் காலம் பெரும்பொழுது. 

மருதத்திணைக்கு  வைகறை சிறுபொழுது  கார்காலம் முதலான ஆறும் பெரும்பொழுதுகள்.

நெய்தல் திணைக்கு எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்) சிறுபொழுது கார்காலம் முதலான ஆறும் பெரும்பொழுதுகள். 


தலைவன் இக்கவிதையில் முதல் யாமத்தை விடுத்து இடையாமத்தைக் கருதி ஊரினர் துஞ்சும் யாமம் என்றான். 

——-

தெற்றெனத் தூற்றல்

——-

தலைவி என்னைத் துன்புறுத்தினாள், அவள் என் குறையறிந்து நிறைவேற்றமையினால் மடலேறுவேன் எனத் தோழியிடம் தலைவன் அப்படி மடலேறி அவளை அடைந்தால் அது தலைவிக்குப் பழி தருவதாதலால் அதைச் செய்ய துணியமாட்டேன்; அது செய்யாது உயிர் வைத்துக்கொண்டு தலைவி இல்லாமல் வாழ்வதும் அரிது ஆகவே உயிர் நீத்தலே நன்று என்று தலைவன் தோழியிடம் இரக்கம் உண்டாகும்படிக் கூறுகிறான். 


களவொழுக்கத்தின் இலக்கணங்களில் இறுதியாகிய சாக்காடு என்பதை தொல்காப்பியம் களவொழுக்கம் சூத்திரம் 9 கூறுவது இதனுள் வரும்.


பொழுதுகள் பற்றியும் களவொழுக்க இலக்கணத்தைப் பற்றி அறியவுமே இக்கவிதை உதவியாக இருக்கிறது. 

——- 



Tuesday, May 14, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-30

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-30

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஆதிமந்தியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 31

திணை: மருதம்

————-

மள்ளர் குழீஇய விழவி னாலும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டுங் காணேன் மாண்டக் கோனை

யானுமோ ராடுகள மகளே யென்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த

பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே

———

யாண்டும் காணேன்

——-

ஆதிமந்தியார் தன் கணவனான ஆட்டனத்தியைத் தொலைத்துவிட்டுத் தேடுவது அகநானூற்றுப் பாடல்கள் 45, 76,135, 222, 236, 396  ஆகியவற்றிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. இரா. இராகவையங்கார்  ஆதிமந்தியார் மன்னன் கரிகாலன் மகள் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது (சிலப்பதிகாரம்  21:11).  எனக் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் எங்கேயுமே தன் தலைவனைக் காணோம் எனக்கூறும் தலைவி தேடிய இடங்கள் வீரர் கூடும் விழாக்களாகவும்  நடன அரங்குகளாகவும் இருக்கின்றன. ‘மள்ளர் குழீஇய விழவி னாலும்’ என்றது போர் வீரர்கள் கூடும் விழாக்களை. தலைவனது ஆணுடலானது பண்பாட்டுவயப்பட்டதாக, ஒரு வீர உடலாக எனவே பெண்டிரால் தழுவத்தக்கதாக  இருப்பதாக பொருள்கொள்ள வேண்டும். “யாண்டும் காணேன்’ என்றது விரக்தியின் உச்சம்.

——

துணங்கைக் கூத்து

———

பெண்களை ஆண்கள் தழுவி ஆடும் துணங்கைக்கூத்து இக்கவிதையின் மைய உருவகமாக இருக்கிறது.  துணங்கைக் கூத்தைப் பற்றி விரிவாக எழுதுகிற உ.வே.சா. இதை சிங்கிக் கூத்து என்றும் அழைப்பர் எனக் குறிப்பிடுகிறார். துணங்கை ஆடுதலின் போது ஆண்கள் பெண்களுக்கு முதற்கை கொடுத்தலும் பண்டைய வழக்கம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  மள்ளர் களமாடும் வீரக்களங்களிலும், பெண்டிற்கு முதற்கை கொடுக்கும் துணங்கைக் கூத்துகளிலும் வழக்கமாகக் காணப்படுகிற தலைவன் என்பதால் அவன் வீரனென்றும் தனக்குப் பொருத்தமானவன் என்றும் கருதும் தலைவி அவனை ‘மாண்டக் கோன்’ -  என்று அழைக்கிறாள். வீரர்களம், நடனக்களம் இரண்டிலும் தலைவனின் இன்மை (absence) அவனுடைய இருத்தலை (presence) ஐ சொல்வதாக அமைவது இக்கவிதையின் சிறப்பு. 

——

அக லயத்தை இழத்தல்

———

‘யானும் ஓராடு கள மகளே’ என தலைவி கூறுவதால் இக்கவிதையின் மைய உருவகமான நடனம், துணங்கைக் கூத்து, மேலும் துலக்கமாகிறது; தலைவன் அத்துணங்கைக்குத் த்லைக்கை கொடுத்தானென்பதையும் மேலும் புலப்படுத்துகிறது. பொ. வே. சோமசுந்தரனார்  இங்ஙனம் ஆண்டுஞ் சென்று தேடுதலானே யானும் கூத்தாடும் களத்திற்குரிய மகளே ஆயினேன் எனப் பொருளுரைக்கிறார். தனக்கு வேறு மணம் செய்விக்க இருக்கும் பெற்றோருக்குத் தான் வேறொரு பொருத்தமான தலைவனோடு உறவில் இருப்பதாகத் தோழி வழி தலைவி தெரிவித்ததாகவும் இக்கவிதையை வாசிப்பதற்கு இடம் உண்டு. ‘கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த’ என தனது சங்கு வளையல்கள் நெகிழ்ந்து நழுவுமாறு எரியூட்டிய தாபத்தைத் தன்னில் வளர்த்த தலைவனை, அதுவும் பெருமை மிகு தலைவனை (பீடுகெழு குரிசிலுமோ) ஆடுகள மகளிரில் ஒருவளாகிய தான் காணவில்லை என்றது தலைவியின் அக லய இழப்பினைத் தெரிவிக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட அகநானூற்றுப் பாடல்களில் ஆதிமந்தியார் பித்துற்று தன் தலைவனாகிய ஆட்டனத்தியத் தேடியதாக நாம் அறிகிறோம். ஆதிமந்தியாரின் பித்தின் ஆரம்ப நிலையான அக லய இழப்பினை இக்குறுந்தொகைப் பாடலில் நாம் அறிகிறோம். அகத்தின் லய இழப்பு நடனம் மைய உருவகமானதால் தெரிய வந்தது. 

——-


Monday, May 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-29

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-29

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 30

திணை: பாலை

————-

கேட்டிசின் வாழி தோழி யல்கற்

பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய

வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்த்

தம்ளி தைவந் தனனே குவளை

வண்டுபடு மலரிற் சாஅய்த்

தமியேன் மன்ற வளியேன் யானே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, கேட்பாயாக, இராக்காலத்தில் பொய் கூறுதலில் வன்மையுடைய தலைவன், என் உடம்புடன் அணைதலைப் பொருந்திய, மெய் போலுந்தன்மை உடைய, பொய்யாகிய கனவு மயக்கத்தை  உண்டாக்க, துயிலுணர்ந்து எழுந்து, தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்; வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிந்து, நிச்சயமாகத் தனித்தவளாயினேன்; அத்தகைய நான், அளிக்கத்தக்கேன்.

————-

ஏக்கம், ஏமாற்றுதல், மனமுறிவு

————-

மிக்ககுறைந்த, தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் இக்கவிதை காதலின் ஏக்கம், ஏமாற்றுதல், மனமுறிவு ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறது. ஒரு பொய்க்கனவை திரும்பச் சொல்வது போல ஆரம்பிக்கும் கவிதை , ‘கேட்டிசின் வாழி தோழி’ என தோழியை, (எனவே கவிதை வாசிப்போரை/கேட்போரைத்) தன் நன்னம்பிக்கைக்குரிய பாத்திரமாக மாற்றி அவளுடைய கவனத்தையும், அவளுடைய அனுதாபத்தையும் கோருகிறது.  அடுத்தவரின் அனுதாபத்தைக் கோரும் விளியின், வாழ்த்தின் பின்னணியில் ஆழமான மனமுறிவும், ஏக்கமும், பலவீனமும் இருக்கிறது. ‘கேட்டிசின்’ என்ற சொல்லிலுள்ள ‘இசின்’ முன்னிலை அசைச்சொல்லாகும். சின்’ என்பது இசின் என்பதன் முதற்குறை. மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் என தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26 ஆம் சூத்திரம் சொல்கிறது.

———

பொய்வலாளனும் பொய்க்கனவும்

———

தலைவி தலைவனைப் பொய்வலாளனென்றது தான் கூறிய நாளில் வந்து தலைவியைத் தான் கூறிய நாளில் வந்து மணம்புரியாததைப் புலப்படுத்தியது. வாய்த்தகைப் பொய்க்கானாவென்றது உணம்மையைப் போலத் தோன்றி பொய்யாக முடியும் கனவு. தலைவியின் கனவென்னும் மெய்ப்பாடு எதைப்பற்றியது?  தன்னைத் தலைவன் அணைத்தது போல உணர்ந்து வெறும் படுக்கையைக் கையால் தடவி விழித்ததா அல்லது தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட பிரிவாற்றமையினால் விழைந்த விரக்தியா? கனவும் நனவும் இவ்வாறாக ஒன்றன் மேல் ஒன்றாகப் பொருளீர்ப்பதால் இக்கவிதை செழுமை பெறுகிறது. சாஅய் – என்பது இசை நிறை அளபெடை தமியேன் என்பது தனியாக நின்றேன்;  மன்ற என்பது தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல். தனியாகத் தலைவி விரக்தியில் வாடி நிற்பதை இவை மேலும் சொல்கின்றன.

———-

வண்டுபடு குவளை மலர்

——-

வண்படு மலரைப் போல மெலிதல் என்பது இந்தக் குறுந்தொகைப் பாடலிலிருந்து பல்வேறு வகையான இடைக்காலச் செய்யுள்களிலும் எடுத்தாளப்பட்ட உவமையாகும். உ.வே.சா. இதற்கு வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல என விர்த்து உரை எழுதுகிறார். உழக்கியதால் மெலிந்து, நலிந்து கிடத்தலே அதன் பொருள். பொய்க்கனா கண்டு எழுந்த தலைவியின் அமளியும் அரற்றலும் அவள் உடல் மெலிந்து நலிந்திருத்தலால் மேலும் மெய்ப்பாடு கண்டது. 

——- 


Sunday, May 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-28

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-28

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 29

திணை: குறிஞ்சி

————-

நல்லுரையிகந்து புல்லுரை தாஅய்ப்

பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளத் தாங்கா வெள்ள நீந்தி

அரிதாவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு

மகவுடை மந்தி போல 

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, நல்ல உரைகள் நீங்கி, பயனற்ற உரைகள் பரவப்பெற்று, பெய்தலையுடைய மழையின் நீரை ஏற்றுக்கொண்ட பசு கலம் போல, சுடப்படாத பசுமண்ணாலாகிய பாண்டத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்கமுடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தா நின்று பெறுதற்கரியதை பெறவிரும்பினை. உயர்ந்த மரக்கொம்பிலுள்ள குட்டியையுடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப்பெற்று அமைவது போல மனம் பொருந்த என் குறையைக் கேட்டு நிறைவேற்றுவோரைப் பெறுவாயாயின் உனது போராட்டம் மிகவும் பெருமையுடையது.

———-

நல்லுரையும் புல்லுரையும்- நெஞ்சும் உள்ளமும்

—————-

தலைவனும் தலைவியும் இரவு நேரத்தில் களவில் சந்தித்துக் கூடி மகிழும் இடம் இரவுக்குறி எனப்படும். தலைவனின் விருப்பத்திற்கு இணங்கி இரவுக்குறி நேரும் உரை நல்லுரை என்றும் தலைவனின் விருப்பத்தை மறுத்து வரைவு கடாயது புல்லுரை எனவும் அறியப்படும். இக்கவிதையில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள நினையாது கூடுவதற்கு மட்டும் அவாவுற்ற அவன் தன் நெஞ்சிடம் பேசுகிறான். என்ன மாதிரியான அகம் நோக்கிய பேச்சு இது? பசுங்கலம் நீரைத் தாங்காமை, உள்ளம் ஆசை வெள்ளத்தைத் தாங்காமைக்கு உவமை. ஆகையால் தாங்க முடியாத ஆசைக்கும் மறுக்கப்பட்ட நிலைக்கும் இடையில் நெஞ்சில் நடக்கும் பூசலைப் பற்றியதாய் இக்கவிதை இருக்கிறது. உ.வே.சா இதற்கு நெஞ்சுக்கு உள்ளம் கூருதல் மரபு என்று உரை எழுதுகிறார். நெஞ்சம் உணர்ச்சியின் வெள்ளத்தால் நிரம்பித் ததும்புவதாகவும் உள்ளம் உண்மையைச் சொல்வதாகவும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.  நெஞ்சு அடிமனதையும் உள்ளம் அறிவின் பாற்பட்ட மேல் மனதையும் குறிப்பதாகும். 

———-

உயர் கோடு மகவுடை மந்தி

———

தலைவன் தனக்குத்தானே உயர்ந்த மரக்கொம்பிலுள்ள் குட்டியையுடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப்பெற்று இருப்பது போல , அகன் உற- மனம் பொருந்த, தழீஇ- என் கருத்தைத் தழுவிக்கொண்டு என் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாயின் உனது போராட்டம் பெருமையுடையது எனச் சொல்லிக்கொள்கிறாரன். உயர் கொம்பு மந்தி என்று சொன்னது உயரமான இடத்தில் இருக்கும் நோக்கம் நிறைவேறுமாயின் என்று பொருள்படும். இங்கே மேலான நோக்கம் என்பது அரிதாக அடையப்பட்ட தலைவியை , (அரிதாவா வுற்றனை), நெஞ்சம் கேட்பது போல அடையப் பெறுவதாகும். இரா. இராகவையங்கார் இதைத் தன்னைத் தழுவிய மகவைத் தான் தழுவி அணைத்து ஏறும் மந்தி போல என விளக்கமளிக்கிறார்.

———-

நீர் படு பசுங்கலம்

———-

நற்றிணை பாடல் 318 இலும்  ‘ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு’ என்ற வரி வருகிறது. சுடப்படாத பசுங்கலத்தில் மழைவெள்ளம் நிரம்பி வழிவது போல 

தலைவன் ஆசை வெள்ளத்தில் நீந்தா நிற்கிறான். ‘பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல’ - பெய்யும் மழைக்கு ஏற்ற பசுங்கலம் போல எனப் பொருள்படும். இதில் ‘நீர்க்கு’ என்பது ‘நீரை’ என இரண்டாவதன் பொருட் கண் வந்ததால் இதை வேற்றுமை மயக்கம் என திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் குறிக்கிறார். ஆசை வெள்ளத்தில் மூழ்குதல் இக்கவிதையின் மைய உருவகம்.  தாய் மந்தி தன் மகவை அணைத்துக்கொள்ளுதல் எனும் காட்சிப்படிமம் தலைவன் தன் மூழ்குதலில் இருந்து விடுபட்டு தன் விருப்ப நிறைவேற்றத்தை அடைவான் எனக் கொள்ளும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 


நெஞ்சே, நின் பூசல் கேட்கப்படுமாயின் பெரிது. 


Saturday, May 11, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-27

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-27

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 28

திணை: பாலை

————-

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்

ஒரேன் யானுமோர் பெற்றி மேலிட்

டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்

அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

சுழலுதலையுடைய, அசைந்து வருகின்ற தென்றற்காற்று வருந்தாது நிற்க, எனது வருந்துதலையுடைய காமநோயை உணர்ந்துகொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் ஊரிலுள்ளாரை நான், முட்டுவேன் கொல்- முட்டுவேனா, தாக்குவேன் கொல்- தாக்குவேனா, ஒருதலைக் கீட்டை மேற்கொண்டு ஆஅ ஒல்லென- ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாகக் கூவுவேன் கொல்- கூப்பிடுவேனா, இன்னது செய்வதென்பதை அறியேன்.

————

முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்

——-

காம நோய் பீடித்து என்ன செய்வதென்று அறியாத தலைவி, முட்டுவேன் கொல், தாகுவேன் கொல் என்று சொல்லும் ஆரம்பர வரி சுவாரஸ்யமானது. முட்டுதல் உடம்பால் செய்யப்பட்டதென்றும் தாக்குதல் கோல் முதலிய ஆயுதங்களால் செய்யப்ப்டுவது எனவும் உ.வே.சா. உரை எழுதுகிறார். கொல் என்ற சொல் கொல்லுதல் என்ற பொருளில் வரவில்லை. கொல் என்பது ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல் ஆகையால் முட்டுவேனோ, தாக்குவேனோ என்று தலைவி கேட்பதாக பொருள் கொள்ள வேண்டும். தலைவியின் ஆற்றாமை அறியாது தூங்கிக்கொண்டிருக்கும் மொத்த ஊரையும் தலைவி தாக்குவாளா என்றால் இல்லை என்கிறார் இரா. இராகவையங்கார்; அவருடைய உரையில் ஊர் என்பது செவிலி, தாய் முதலிய நெருங்கியோர் என்று எழுதுகிறார்.

——-

ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்

——-

தலைவியின் காம நோயானது, ‘ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்’ என்ற வரியில் இன்னும் அடிப்படையான தொன்மையான நனவிலியின் எல்லையற்ற விகாசத்தை அடைகிறது. மொழிக்கு முந்தைய சப்தங்களால் தன் காம நோயைக் கூவுவேனோ எனத் தலைவி  கேட்பது நனவிலியின் நீர்த்தேக்கம் பீறிட்டு உடைந்திருப்பதை உணர்த்துகிறது. தலைவியின் உயவு நோய் அறியாது துயிலும் ஊரை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற தர்க்கம் இந்த நனவிலியின் பீறிடலால் நியாயமாகிறது. உயவு என்பது உயா என்ற சொல்லின் திரிபு. தொல்காப்பியம் உரிப்பொருள் 71 ஆவது சூத்திரம் ‘உயாவே யுங்கல்’ எனக் குறிப்பிடுகிறது. இக்கவிதைவுன் இறுதி சொல், ‘ஊர்க்கே’ என்பது ‘ஊரை’ என்றிருக்க வேண்டும். அதாவது எனது துயர நிலை அறியாது துயிலுகின்ற இந்த ஊரை என்ன செய்வேன் என்பது கவிதை வரியின் பொருள். ஆகவே’ ஊர்க்கே’ என்பது ‘ஊரை’ என்பதன் உருபு மயக்கம்.

———  

அலமரல் அசை வளி

——-

இந்தக் கவிதையிலுள்ள ஒரே இயற்கைக் குறிப்பு ‘அலமரல் அசை வளி’ என்பதாகும்.  1141 ஆவது திருக்குறளில் ‘அலரெழ வாருயிர் நிற்கும்’ என்ற குறிப்பு இருக்கிறது. அலமரல்- சுழலுதலையுடைய, அசை வளி- அசைந்து வருகின்ற தென்றற்காற்று, அலைப்ப- வருந்தாமல் நிற்க- தலைவியின் அகமோ புயலடித்ததாய் இருக்கிறது. அகச்சூழலும், புறச்சூழலும் எதிரெதிராய் நிற்பதை இந்த இயற்கைக் குறிப்பு உணர்த்தியது. தொல்காப்பியம் சொல்லதிகாரம் 310 ஆவது சூத்திரம் அலமரல், தெருமரல் இரண்டும் சுழற்சி எனப் பொருளுரைக்கிறது. பொ. வே. சோமசுந்தரனார்  வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை என மேலும் விளக்கம் சேர்க்கிறார். 

——

ஓரேன்

——

இன்னது செய்வது அறியேன் எனத் தலைவி அரற்றுவது, ‘ஒரேன்’ என்ற சொல்லால் பெறப்பட்டது. ஊரை முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? கூவுவேன்கொல்? ஒரேன் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய ஒரு நிலை. 



Friday, May 10, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-26

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-26

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 27

திணை: பாலை

————-

கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமைக் கவினே

———————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நல்ல பசுவின் இனிய பாலானது அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல, எனது அல்குல் பகுதியில் தேமல் படர்ந்து எனது மாமையாகிய பேரழகு எனக்கும் ஆகாது, என் தலைவனுக்கும் இன்பம் பயக்காமல் பசலை படர்ந்திருக்கிறது.

——-

வாசிப்பு

———-

இந்தப் பாடலை இயற்றியது யார்?

—————

உ.வே.சா. தன்னுடைய 1937 குறுந்தொகைப் பதிப்பில் இந்தப்பாடலின் ஆசிரியராக கொல்லன் அழிசியைக் குறிப்பிடுகிறார். ஆனால் பல உரையாசிரியர்களும் இப்பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்றே குறிப்பிடுகின்றனர். வெள்ளிவீதியார் பெண்பாற் புலவர். பொ. வே. சோமசுந்தரனார்  இப்பாடல் வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமையாட்டியார் தம் கணவனைப் பிரிந்த காலத்தே கூறியது என்றும் தம் பெயரையோ கணவன் பெயரையோ கூறினால் இதுப் புறப்பாடல் ஆகிவிடும் என்று  அஞ்சி பெயர் கூறாமல் விட்டதால்  அகப்படாலாயிற்று என்றும் கூறுவார்கள் என்று விளக்கமளித்திருப்பது பொருத்தமானதாக இருக்கிறது.   இரா. இராகவையங்கார் தன் உரையில் நச்சினார்க்கினியரின் உரையை மேற்கோள் காட்டி இது வெள்ளிவீதியாரின் பாடல்தான் என்று உறுதி செய்கிறார்.

———-

அல்குல்- சொற்பொருளும் பதிப்பு வரலாறும்

——-

அல்குல் என்ற சொல்லுக்கு பெண் குறி என்ற பொருள் பொதுவாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அது பெண்ணின் அடிவயிற்றிலிருந்து பெண்குறியை உள்ளடக்கிய தொடைகள் வரை நீளும் பகுதி என்ற பொருளில் பல சங்கப்பாடல்களில் வருகிறது. இந்தக் கவிதையில் வரும் அல்குல் என்ற சொல்லுக்கு டி.வி.கோபாலய்யர் பின்பாகம் என பொருள் சொன்னதாக ஈவா வில்டன் குறிப்பிடுகிறார்; அவர் அல்குல் என்ற வார்த்தையை இடுப்பு (hip) என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வைதேகி ஹெர்பர்ட் ‘loins’ என மொழிபெயர்த்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. 


குறுந்தொகையை உ.வே.சா.வுக்கு முன்னதாக, முதன் முதலில் 1915 இல் பதிப்பித்த திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அல்குல் என்ற சொல் வருமிடங்களிலெல்லாம் அதை வேறு சொற்களால் நிரப்பிவிடுவதால பாடல் என்ன சொல்ல வருகிறது என்று தெரியாமல் பொருள் மங்கிவிடுகிறது. சி.வை.தாமோதரம் பிள்ளையும் தன்னுடைய கலித்தொகைப் பதிப்பில் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் போலவே அல்குல் என்ற சொல்லுக்கு வேறு சொற்களை பதிலீடு செய்திருக்கிறார். உ.வே.சா.வுக்கு மேற்கண்ட கட்டுப்பெட்டித்தனம் இல்லை. அவர் எப்போதெல்லாம் தோலின் நிறமோ அல்குலின் நிறமோ ‘மாமை’ (மாந்தளிர் நிறம்) எனக் குறிப்பிடப்படும்போது அதில் கவனம் செலுத்தி சங்கப்பாடல்கள் பலவற்றிலும் மாந்தளிர் நிறமே பேரழகு வாய்ந்ததாகச்  சொல்லி நம் கவனத்தை அந்த நிறத்தின் மேல் குவிக்கத் தவறுவதில்லை. இந்தப் பாடலுக்கும் உ.வே.சா. உரை எழுதும் போது அல்குலை விட்டுவிட்டு ‘திதலை யல்குலென் மாமைக் கவினே’ என்ற வரிக்கு “ மாமைக் கவின் ; இது மகளிருக்கு பேரழகு பயப்பது; இதன் நிறம் மாந்தளிர், ஆம்பலில் நாருரித்த மெல்லிய தண்டு, ஈங்கையென்னும் கொடியின் தளிர், அசோகந்தளிர் என்பவற்றின் நிறத்தைப் போன்றது ; பசலை படர்ந்தால் இந்நிறம் அழிந்துவிடும்’ என உரை எழுதுகிறார்.

———

பசலை பாய்தெலென்னும் மெய்ப்பாடு

———

பசலை பாய்தலை, தலைவனின் பிரிவைத் தலைவி, தன் உடலில் வெளிப்படையாக தோன்றிய அறிகுறியாய் உணர்ந்ததால் இது மெய்ப்பாடென அழைக்கப்படும். பசலை படர்தலை அல்லது வெள்ளைப்படுதலை பெண்ணுடலின் இழிநிலையாக (abjection) பெண்ணால் உணரப்படுவதாக ஜூலியா கிறிஸ்தவா எழுதுவார். (பார்க்க: Kristeva, Julia. Powers of Horror: An Essay on Abjection. Translated by L.S. Roudiez, Columbia University Press, 1982.) தமிழண்ணல் தன் உரையில் தேமல் படர்ந்த அடிவயிற்றின் அடிப்பகுதி தலைவனுக்கோ தனக்கோ பயன்படாமல் வீணாவதாக தலைவி விசனப்படுவதாக உரை எழுதுகிறார். பென்ணுடல் யார் பார்வையில் இந்த இழிநிலையை அடைகிறது எனக் கவனித்தல் அவசியம். இக்கவிதையில் தலைவி தோழியிடம் தன்னுடலின் மெய்ப்பாட்டினை விவரித்தாலும் அது ஒரு வெளிப்பார்வையை தலைவி அகவயமக்கிக்கொண்டதால்தான் எனக் கருத இடமிருக்கிறது. 

———

தாய்மையின் இழப்பு

———-

‘கன்று முண்ணாது கலத்தினும் படாது’ பசுவின் சீம்பால் வீணாவதைத் தலைவி தன் பசலை படர்ந்த அல்குலின் நிலைமைக்கு உவமிப்பதால் இழப்பு பாலியல் கூடுகை மட்டுமல்ல, தாய்மையின், வளமையின், படைப்பின், உயிருருவாக்கத்தின் இழப்பையும் சேர்த்தே தலைவி கூறுவதாக பொருள் கொள்ள வேண்டும். பசுவின் பால் யாருக்கும் பயனற்று நிலத்தில் கொட்டியது போல மாநிற அல்குலின் பேரழகு பசலை படந்ததால் அழிந்தது. அந்த அழிவு உயிருருவாக்கமே அழிவதற்கு ஒப்பானது. 


Thursday, May 9, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-25

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-25

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி செவிலித்தாயிடம் சொன்னது, கட்டுவிச்சியை அவள் வினவிய வேளையில்

—-

இயற்றியவர்: கொல்லன் அழிசியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 26

திணை:  குறிஞ்சி

————-

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை

பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்

தகாஅன் போலத் தான்றிது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே

தேக்கோக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்

வரையாடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனு மறியுமக் கொடியோ னையே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அரும்புத்தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றுதற்கு இடமாகிய நாட்டையுடைய தலைவன், இவளுக்கு உரியனாகுந்த தகுதியிலானென்பது போல கட்டுவிச்சி, தெய்வத்தால் வந்ததென்று தீங்கானதைக் கூறினாலும், தேமாவின் கனியை உண்ணுகின்ற முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையுமுடைய மலைகளில் விளையாடும்,வலிய குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கும் அந்தக் கொடியவனாகியத் தலைவனை அறியும்; ஆதலின் அது தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை காணேனென்று பொய் சொல்லாதது.

————

வாசிப்பு

———

கவிதை எனும் எதிர்க்குரல்

———

தோழி இக்கவிதையில் குறி கூறும் கட்டுவச்சியின் தெய்வ வாக்குக்கு எதிராகப் பேசுகிறாள். ஆகையால் ஒரு எதிர்க்குரலாக இக்கவிதை மிளிர்கிறது. தெய்வவாக்கின் அதிகாரத்திற்கு எதிராக தோழி இரண்டு இயற்கைக் காட்சிளை இணைத்து சொல்கிறாள்; மனித உடல்கள் அந்த இரண்டு இயற்கைக் காட்சிகளின் பகுதிகளாக இருக்கின்றன. ஒன்று  அரும்புத்தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றுவது; இரண்டு தேமாவின் கனியை உண்ணுகின்ற முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையுமுடைய மலைகளில் விளையாடும்,வலிய குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கும் அந்தக் கொடியவனாகியத் தலைவனை அறியும் எனச் சொல்வது. அரும்பு முழுவதும் மலர்வதற்கு முன்பே பறித்து அணிந்துகொள்ளுதல் என்பது கவனிக்கத்தக்கது. தோழி முழு உண்மையும் (இன்னும் முழுமையாக மலராத) அறிவதற்கு முன்பாகவே தலைவியின் நோய் தெய்வத்தினால் ஏற்பட்டது எனக்கூறுவது தவறு என்பது அரும்பால் சுட்டப்பட்டது; அரும்பைக் கொய்யும் பெண்டிர் கிளையில் இருக்கும் மயிலைப் போல அழகாகவும் இருக்கலாம் ஆனால் உண்மையோ வேங்கை மரத்தின் கரிய், பெரிய கீழ்ப்பகுதியைப் போன்றது. 

உ.வே.சா வேங்கையின் பூவைக் கொய்து அதன் அழகைக் கெடுக்கும்  மகளிரைப் போல மயில் தோற்றினும் உண்மையில் அம்மரத்திற்கு  மேலும் அழகைத் தந்து அமைவது போல தலைவன் இப்போது இவளது நலமழியச் செய்தவனாக இருப்பினும் அவளை மணப்பான் என்பது குறிப்பு என்று எழுதுகிறார். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கனும் பொ. வே. சோமசுந்தரனாரும் தங்கள் உரைகளில் இதை உள்ளுறை எனக் குறிப்பிடுகின்றனர்.

———-

குரங்கின் சாட்சி

———

குறி சொல்லும் கட்டுவச்சிக்கு எதிராக தோழி குரங்கு பார்த்ததை சொல்கிறாள். அது எப்படிப்பட்ட குரங்கு என்றால் கொக்கு மாமரத்தின் ( தேன் கொக்கு, தேமா, கொக்குக்காலி ஆகிய சொற்களால் குறிக்கப்படுவது) பழத்தை தன் கூரிய பற்களால் தின்கின்ற துவர் வாயை உடைய குட்டிகளுக்குத் தந்தையாகிய வலிய குரங்கு. அந்த தந்தைக் குரங்கு கொடியோனாகிய தலைவனை அறியும், அந்தக் கடுவன் குரங்கு பொய் சொல்லாதது. தலைவன் தகான் போல தீதுமொழிபவனாக இருந்தாலும், அக்கொடியோனைக் கடுவனும் அறியும்; ஆதலால் கடுவன் கண்டது பொய்க்காது என்பது இதனால் பெறப்படுகிறது. இந்த கவித்துவ தர்க்கம் பல சங்கக் கவிதைகளில் காணப்படுகிறது. இவற்றை வாசிக்கும்போது இயற்கையின் பகுதியாக இருப்பவற்றை கருத்துக்களை, உணர்வுகளைப் புலப்படுத்தும் குறிகளாக (communicative signs) வாசித்தார்கள் எனக் கருத இடமிருக்கிறது. மனிதர்களும் இய்றகையின் பகுதிகளாகவே கருத்தப்பட்டனர் என்ற உலக நோக்கும் (world view) இதனால் பெறப்படுவதாகிறது.

———

பொய்க்குவதன்றே எனும் அறுதியிடல்

——

தோழியின் ‘பொய்க்குவதன்றே’ எனும் அறுதியிடல் இந்தக் கவிதையின் உள்தர்க்கத்தின்படி எது உண்மை எது பொய் என கேட்போரை, இந்தக் கவிதையில் செவிலித்தாயை முடிவெடுக்கும்படி கோருகிறது. வாசகர்களாகிய நாமும் செவிலித்தாயின் இடத்தில் நின்று இக்கவிதையின் தர்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை வைக்கப்படுகிறோம்.  இவ்வாறாக வாசக வெளியை இக்கவிதை வைத்திருப்பதால்தான் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கனால் மலர்ந்த வேங்கையின் மேலோங்கிய சினையிலிருந்த தோகை, பூக்கொய் மகளிரைப்போன்று தோன்றினாற்போல, தலைவன் தன் நெஞ்சத்திடத்துப் பிறிது நினைத்திருக்கும் வெளித்தோற்றத்து வேண்டியன செய்வான்போற் காணப்பட்டான் என விரித்து உரை எழுத முடிகிறது.

———

பறள் என்றது குரங்கின் இளமைப் பெயர்

——-

அரும்பற மலர்தல், கருங்கால் வேங்கை, பூக்கொய்யும் பெண்டிர், பெருஞ்சினை யிருந்த தோகை மயில், தேக்கொக்கு, ஆகிய அழகிய காட்சிப்படிமங்களுக்கு இடையே  கூரிய பற்களும் செவ்வாயும் உடைய ஒரு குரங்குக் குட்டியும் ஒளிந்திருக்கிறது; அது அதன் தந்தையாகிய கடுவன் குரங்கைச் சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வரையாடு வன்பறழ்த் தந்தை’ என்ற வரியில் வரும் பறள் என்ற சொல் குரங்கின் இளமைப் பெயரைக் குறிப்பதாகும். இது தொல்காப்பியம் மரபியல் சூத்திரம் ஒன்று, “பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே” என்பதால் அறியப்பட்டது. 

———————-

Tuesday, May 7, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 25

திணை:  குறிஞ்சி

————-

யாரு மில்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தா ளன்ன சிறுபசுங்கால

ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவர் வேறு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தனன்; தலைவன் அப்போது கூறிய சூளுறவின்று தப்பினால் நான் என்ன செய்வேன்? ஓடுகின்ற நீரில் ஆரல் மீனை உண்ணும் பொருட்டு அதன் வரவை எதிர்பார்த்து நிற்கும் தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய நாரையும் இருந்தது.

———

வாசிப்பு

————-

தாம் என்ற பன்மையும் கள்வன் என்ற ஒருமையும்

———

தலைவனைத் தலைவி கள்வன் எனக் குறிப்பிடுவதை நாம் பல சங்கக் கவிதைகளில் வாசிக்கிறோம். தன்னைக் களவில் மணந்ததை நினைத்து பெருமிதம் கொள்ளும் தலைவி ‘தாம் மணந்த ஞான்றே’ என்று பன்மையில் தன்னைச் சொல்லிக்கொள்கிறாள் ஆனால் அதற்கு மனித சாட்சியில்லை என்பதாலும் அதை அவன் உறுதிப்படுத்துவானா என்ற ஐயப்பட்டினால் கள்வனாகிவிட்டபடியால் அவனை ஒருமையிலும் தலைவி அழைக்கிறாள். தலைவனைக் கள்வன் என்பது பல சமயங்களில் செல்லமாகவும், பல சமயங்களில் ஏசுதலாகவும் சங்கக் கவிதைகளில் பலவற்றில் வருகிறது. இக்கவிதையில் கள்வன் ஒருமையில் விளிக்கப்படுவதால் அவன் ஏசப்படுதலின் பொருட்டே ஒருமையில் அழைக்கப்படுகிறான். அவன் சொல்லியது பொய்க்கும் என்றால் ‘யான் எவன் செய்கோ?’ என்ற சொற்களில் தலைவியின் தன்னிலையின் பெருமிதம்  உடைந்து ஒருமையாகிவிடுகிறது.  ‘கள்வன்’ என்ற சொல் தலைவி தன்னை தலைவனின் அதிகாரத்திற்கு, அவனுடைய வலுவுக்கு ஒப்புக்கொடுத்து அதற்கு சாட்சியாய் ‘யாருமில்லை’ என உடைந்து போகிறாள். அவளுடைய தன்னிலையின் அடையாளம் மற்றவனின், தலைவனின் சொல்லை நம்பியிருக்கிறது அல்லது அந்த சொல்லின் உண்மையை நமபியிருக்கிறது. சொல்லின் உண்மை தரும் தலைவியின் தன்னிலையின் ஒருமை, சொல் பொய்யானால் சிதைந்துவிடும். 

——————

ஆரல் பார்க்கும் பசிய கால்களுடைய நாரை

——-

தலைவனும் தலைவியும் சேர்ந்திருந்த களவின் கூடுதல் ‘ஆரல் பார்க்கும் நாரை (குருகு) இருந்த இடத்தில் நடந்ததால் அந்த இடம் ஒரு நீர்த்துறை என அறியலாம். தலைவன் சூளுரைத்ததற்கு ஒரே சாட்சியாய் நின்றது பசிய நீண்ட கால்களை உடைய நாரை. அதுவோ ஆரல் மீன்களை மட்டுமே நோக்கிய கருத்தொருமையில் நின்றதால் தலைவன் கூறிய சொல்லைக் கவனமாய்க் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஏன் கேட்டிருக்கவே வாய்ப்பில்லை. ஆரல் பார்க்கும் நாரை என்ற  படிமம்  தலைவன் களவின் கண் கூடியதால் அவன் கவவனமும் கூடுதலில் மட்டுமே இருந்தது என்பதையும் சொல்கிறது. ஆகவே அவனுடைய சூளுரை பொய்யாக அதிகமும் வாய்ப்பிருக்கிறது; எனவேதான் அவன் கள்வன் எனவும் அழைக்கப்படுகிறான். 

——-

பேசப்படாததன் வன்முறை

———

குருகு ஆரல் மீனை எதிர்நோக்கிக் காத்திருப்பது வர இருக்கிற அபாயத்தை சொல்வதாகவும் வாசிக்கலாம். நீரின் அடியோட்டமாக பேசப்படாதது இக்கவிதையில் இருக்கிறது. ஒன்றையொன்று  காத்திருந்து வேட்டையாடித் தின்னும் இயற்கையின் உலகு ஆரல் பார்க்கும் நாரையால் சுட்டப்பட்டது.  அந்த இயற்கையின் வன்முறை கவிதையில் பேசப்படாததாக, அடியோட்டமாக காணப்படாததாக இருக்கிறது. நாரையின் நீண்ட பசிய கால்கள் குறிப்பிடப்படுவதாலும்  நாரையின் படிமம் இயறகை உலகை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது. அதற்கு எதிராக பண்பாட்டு உலகு களவு, கூடுகை, சூளுரை ஆகியவற்றால் கவிதையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

——

உம்மையின் இழிவுச் சிறப்பு

——————


கவிதையின் கடைசி வரியில் வரும், ‘குருகு முண்டு’ என்பதிலுள்ள உம்மை இக்கவிதையில் இழிவுச் சிறப்பு பெறுகிறது. அதாவது குருகு இருந்தும் சாட்சியாவதற்குத் தகுதி பெற்றதாய் இல்லை என்பதை உம்மை விகுதி சொல்கிறது. ‘செய்கோ’ என்ற சொல்லில் உள்ள ஓகார அசைநிலையையும், ‘ஞான்றே’ என்ற சொல்லில் உள்ள ஏகார அசைநிலையையும் கூடவே கவனிக்க வேண்டும். என்னை பிறரறியாதவாறு கவர்ந்த களவன் அவன் சொல்லியபடி செய்யவில்லை. அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் சாட்சியாய் நின்றது அங்கேயிருந்த தகுதியில்லாத நாரை ஒன்றே. இதற்கு நான் என்ன செய்வேன் என்று தலைவி தோழியை நோக்கி வினவுகிறாள். 




Monday, May 6, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-23

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-23

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 24

திணை:  முல்லை

————-

கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ

ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்

தெகுளிறு மிதித்த வொருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே

காதல ரகலக் கல்லென் றவ்வே.

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கரிய தாளையுடைய வேப்பமரத்தினது ஒள்ளிய பூவின் புது வருகையானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதுவோ? என் காதலர் என்னை நீங்கிச் செல்ல, ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெள்ளிய கொம்புகளையுடைய அத்திமரத்தினது, உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட ஒற்றைப்பழமானது குழைவது போலக் குழைய, நான் வருந்தும்படி அயலாராகிய கொடிமகளுருடைய நாக்கள் அலர் கூறிக் கல்லென்று முழங்கின. 

———-

வாசிப்பு

———

காதல், வலுவற்றமென்நிலை, இன்மையின் எடை

———-

இந்தக் கவிதை காதலியோடு காதலன் இல்லாதது எந்தவகையான வலுவற்றமென்நிலையைக் காதலிக்கு ஏற்படுத்தும் என்பதை ஒரு அழகிய படிமத்தோடும், அவளுடைய அகப் பதற்றத்தினைச் சொல்லும் குறிப்போடும் அவள் எந்தவகையான ஊராரின் குரூர சொற்களை எதிர்கொள்கிறாள் என்பதையும் சேர்த்துச் சொல்கிறது.  


‘கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்’ என்ற முதல் வரியில் உள்ள ‘யாணர்’ என்ற சொல் இளவேனிலில் வேப்பமரம் தழைத்துப் பூத்துக் குலுங்குவதைக் குறிப்பிடுவதாக தமிழண்ணல் உரை எழுதுகிறார். பாண்டியரும் அவர் படையும் சூடி நின்ற சிறப்பால் வேம்பூவை ‘ஒண் பூ’ என்றாள் என இரா. இராகவையங்கார் விளக்கமளிக்கிறார். கருங்கால் வேம்பு என்றது வேப்பம் பூவிற்கு எதிராக வேப்பமரத்தின் கருமையான நடுமரத்தை நிறுத்தியது பிரிவாற்றாமையினால் விளைந்த பூக்கள் என்பதைக் குறிப்பிடவாகும். 


‘என்னை யின்றியுங் கழிவது கொல்லோ’ - என்பதில் ‘கொல்’ என்பது ஐயப்பட்டு வந்து இடைச்சொல், ‘ஓ’ என்பது அசைநிலை. ‘என்னை’ என்பது தலைவனை என்று விளக்கம் எழுதுகிற உ.வே.சா. குறுந்தொகையில் பல பாடல்களில் தலைவி ‘என்னை’ என்று தலைவனைக் குறிப்பதை காணுமாறு அறிவுறுத்துகிறார். வேப்பம் பூக்கள் மலரும் இளவேனில் காலத்தில் என்னோடு இருக்க வேண்டிய தலைவன் என்னை விட்டு நீங்கி எப்படிச் சென்றான் எனத் தலைவி வினவுகிறாள்; ‘கொல்’ என்பது இரங்கற் குறிப்பும் ஆகையால் அவள் துயரத்திலிருப்பதும் தெரிகிறது. 

————

ஏழு நண்டுகள் மிதித்தொரு அத்திப் பழம்

—————

ஆற்றங்கரையில் ஏழு நண்டுகள் மிதித்துக் குழைந்த அத்திப்பழம் போலக் கிடப்பதாகத்  தலைவி தன்னைச் சொல்லிக்கொள்வது அக்கவிதையிலுள்ள அழகான படிமம். மரத்திலிருந்து விழுந்தது வரை

தலைவியின்  சுய-உணர்வு ஒரு பேரழிவுகரமான மாற்றத்திற்கு உட்படுகிறது. ஒரு காலத்தில் மரத்தின் மீது உயரமான இடத்தில்  இருந்த  அத்தி, இப்போது எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக, நண்டுகளின் கால்களில் கூட மிதிக்கப்படக்கூடிய இடத்தில் உள்ளது.  இங்கே எழு என்பது பலவென்பதைக் குறிக்கும் வாய்பாடு என உ.வே.சா.விளக்கமளிக்கிறார். ஜூலியா கிறிஸ்தவா அத்திப்பழம் குழைந்து முசிந்து கிடப்பது போன்ற பென்ணின் நிலைமைகளை விளக்கும்போது அதை இழிநிலைமை  ( abjection) என அழைக்கிறார். (பார்க்க: Kristeva, Julia. Powers of Horror: An Essay on Abjection. Translated by L.S. Roudiez, Columbia University Press, 1982.) கிறிஸ்தவாவின் இழிநிலை எனும் கருத்தாக்கம் பென்ணின் பாதுகாப்பு எல்லைகள் முழமையாக அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. கிறிஸ்தவா பெண்ணிற்கு இந்த நிலைமை தாய்மையடைதலின்போதும், மகப்பேறின் போதும் ஏற்படுவதாக விவரித்தாலும் பெண்களின் உளவியல் நிலைகளில் ஆரம்ப நிலை ஒடுக்குதல்களைச் சொல்லும் ஒரு மனோநிலை பற்றிய கருத்தாக்கமாகவும் கருதப்படுகிறது. முசிந்து போதல், அழுகுதல், அழிவுறுதல் போன்ற நிலைகளை அருவருப்பான அனுபவமாக உணர்தலையும் கிறிஸ்தவா விளக்குகிறார். இந்தக் கவிதையில் நண்டுகள் மிதித்துக் குழையும் அத்தி எனும் படிமம் அவள் தன் இழிநிலையை அருவருப்பான அனுபவமாக உணர்தலை எடுத்துச் சொல்கிறது.

———-

கொடியோர் நாவின் தாக்குதல்

———

ஏற்கனவே தலைவனைப் பிரிந்த துயரிலும் அச்சத்திலும் இருக்கும் தலைவி, தன்னைக் குழைந்து நசிந்து இழிநிலையில் இருப்பதாகக் கருதிக்கொள்ளும் தலைவி கொடியோர் நாக்குகளாலும் அவமதிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறாள். கொடியோரென்பது உயர்திணை இருபாபாற் பொதுப் பெயரென்றாலும் தொழிலால் ஆணொழித்தது என்று விளக்கமெழுதும் உ.வே.சா. கொடிமகளுடைய நாக்கள் என பெணகளின் நாக்குகளே தலைவியைப் புறம் பேசும் என உரை எழுதுகிறார்.  தலைவன் பிரிவினால் தலைவி வேறுபட்டிருத்தலை எடுத்துக்கூறிப் பழித்தல் கல்லென்றல் என அழைக்கப்பட்டது. கொடியமகளிரின் நாக்குகள் அலர் கூறி கல்லென்று முழங்கின. 



Saturday, May 4, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-22

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-22

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி அகவன் மகளிடம் கூறியது

—-

இயற்றியவர்:  ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 22

திணை:  பாலை

————-

அகவன் மகளே யகவன் மகளே

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டை

இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, சங்கு மணியினாலாகிய கோவையைப் போன்ற  வெண்மையாகிய, நல்ல நீண்ட கூந்தலையுடைய அகவன் மகளே பாட்டுக்களைப் பாடுவாயாக, நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக. இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்

—————-

ஓதுதல் போலத் திரும்பச் சொல்லுதல்

—————-

கவிதையின் தொடக்க வரி, "அகவன் மகளே யகவன் மகளே", ஒரு மந்திரம் போன்ற லயத்தைக் கொண்டு  பெண் மீது கவனத்தைக் குவிக்கிறது. திரும்பத் திரும்ப கூறுவது மொழியின் மீது பயன்படுத்தப்படும் தேர்ச்சியின் முதல் வடிவம்; இது கட்டமைக்கப்பட்ட அர்த்தத்தை விட மொழிக்கு முந்தைய, உடலின் இருப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. ‘அகவன் மகளே’ என்ற விளியை  உ. வே. சாமிநாதையர்  தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டவிச்சியே என்றும்   திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் வெறியாடும் மகளே என்றும் வேலனை அழைக்கும் மகளே என்றும் உரை எழுதுகின்றனர். இந்தக் கவனம் பெண்ணின் தலைமுடியைப் பற்றிய விவரிப்புடன் தொடர்கிறது.   ‘மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்’ - சங்குமணியினாலாகிய கோவையைப் போன்ற நல்ல நீண்ட கூந்த்லை உடைய  என அவளது கூந்தலைச் சொல்லி  முக்கியத்துவம் கொடுப்பது,  அவளுடைய தொன்மையையும் அதனால அவளுடைய சொல்லுக்கு இருக்கும் ஆதி வலுவையும் குறிப்பதாகிவிடுகிறது.

———-

பெண்ணின் உடலும் சொல்லும்

———

அகவன் மகளின் தலை முடி பற்றிய விவரிப்பால், அந்த முதிய பெண்ணின் பௌதீக  உடலில் தெய்வீக சக்தியைக் காண்பதற்கான  முகாந்திரம் நிறுவப்படுகிறது; ஆனால் அவள் பாட இருக்கும் சொல்லே அவளுடைய ஆதி சக்தியை வெளிப்படுத்தும் வல்லமை உடையதாகவும் கவிதை சொல்கிறது. பௌதீக உடல் குறியியல் தளத்திலும் (semiotic field) அவள் சொல் குறியீட்டுத்தளத்திலும் ( symbolic plane ) இயங்குவதாக கவிதை சொல்வதாக நாம் வாசிக்கலாம். குறியியல் தளத்திற்கும் குறியீட்டுத்தளத்திற்கும் இடையிலான பாலமாகவும் அவள் பாட்டு கருதப்படுவதாகவும் கவிதையை வாசிக்கலாம். எவா வில்டன், டி.வி.கோபாலய்யர் முதிய பெண்கள் தங்கள் கூந்தலை முடியும் வழக்கம் அப்போதில்லை எனவே அவள் கூந்தல் ‘மனவு’ என குறிப்பிடப்படுகிறது என விளக்கமளித்ததாகப் பதிவு செய்திருக்கிறார். 

——

குன்றம் பாடிய பாட்டு

———

தலைவியினுடைய காம நோயினை அறியாத தாயர் அவளிடத்தில் தோன்றியுள்ள வேறுபாட்டை அறிய அகவன் மகளாகிய கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப்பார்ப்பது வழக்கம். கட்டுவச்சி முறத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணி அதனால் சில நிமித்தங்களை அறிந்து ‘இவள் முருகனால் அணங்கப்பட்டாள்’ என்று கூறுவாள். அது கேட்ட தாயர் வேலனை அழைத்து வெறியாட்டெடுப்பர். இந்த வழக்கத்தைப் பின்பற்றித் தோழி மும்முறை அகவன் மகளை விளித்து தான் கூறும் கூற்றின் உண்மையை கூர்ந்து அறியும் பொருட்டு பாடுக என்றாள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘மனவுக்கோப்பென்ன’ என்றது அவள் அணிந்த அணியையே அவள் கூந்தலுக்கு உவமை கூறியதால் அகவன் மகள் நரை மூதாட்டியென்பது பெறப்பட்டது.  மலைவாழ்சாதினளாகிய அகவன் மகள் தான் கண்ட மலைகளின் வளத்தைப் பாடுவது இயல்பாதலலில் அவள் மலைவளங்களைப் பாடுவாள்; தலைவனது ‘நன்னெடுங் குன்றத்தின்’ வளத்தைக் கேட்பதில் தலைவிக்கு பெருவிருப்பம் உளதால் அதை மீண்டும் பாடென்றாள். நன்னெடுங் குன்றம் எனும் நிலப்பகுதி தலைவனுக்கு பதிலீடாக இக்கவிதையில் நிற்பது இக்கவிதையின் சிறப்பு.  இக்கவிதையில் பேசுவதும் கேட்பது பெண்கள் எனினும் பேசப்பட, பாடப்பட இருப்பது, ஆண் என்பதும், அப்படிப் பேசப்பட இருப்பது விரும்பப்பட இருப்பதாகவும் அறியப்பட இருப்பதாகவும் சொல்வது மொழியும் ஆசையும் எப்படி குறியீட்டுத்தளத்தில் இயங்குகின்றன என்பதையும் நமக்குச்  சொல்கின்றன. 


Friday, May 3, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-21

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-21

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  சேரமானெந்தை

குறுந்தொகையில் பாடல் எண்; 22

திணை:  பாலை

————-

நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய

யாரோ பிரிகிற் பவரே சாரற்

சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து

வேனி லஞ்சினை கமழும்

தேமூ ரொண் ணுத னின்னோடுஞ் செலவே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

சிலம்பு அணி கொண்ட மலைப்பக்கமானது தனக்கு அழகாகக்கொண்ட வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலரையுடைய வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில, நன் மணம் பரவிய விளக்கத்தையுடைய நெற்றியையுடையாய் துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி நீ இங்கே தனியாகத் தங்க நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றலுடையவர் யாவர்? தலைவன் செல்லுதல் நின்னோடே ஆகும்.

——-



குறியியல் ஒழுங்கின்  சீர்குலைவு, அதன் சாத்தியமான மீள் ஒருங்கிணைப்பு

——-


இந்த சிறுகவிதை, அதன் சாதாரண படிமத்துடனும் உணர்ச்சிகளில் ஏற்படுகிற  மாற்றங்களுடன் ஒரு குறியியல் ஒழுங்கின் சீர்குலைவையும் அதன் மீள் ஒருங்கிணைப்பிற்கான சாத்தியப்பாட்டையும் சொல்கிறது. ஜூலியா கிறிஸ்தவா கவிதையில் குறியியல் ஒழுங்கின்  சீர்குலைவு  மொழிக்கு முந்தைய சக்தியினால் ஏற்படுவதாகவும் அதே சமயம் குறியீடானது சமூக ஒழுங்கினையும் அதன் மொழியையும் குறிப்பதாகவும் விவரிப்பார். (பார்க்க: Kristeva, Julia. Revolution in Poetic Language. Trans. Margaret Waller. New York: Columbia University Press, 1984) .  இந்தக் கவிதை இந்த இரண்டு மொழிவிசைகளுக்கான மோதலை உண்ர்ச்சியின் அக மோதலாக  ஆராய்ந்து இறுதியில் அவை இரண்டும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதற்கான சாத்தியப்பாட்டினைச் சொல்கிறது. 


இதில் குறியியல் ஒழுங்கின் சீர்குலைவைச் சொல்வது தலைவியின் நெற்றியைப் பற்றிய சித்தரிப்பு. கடைசி வரியில் ‘தேமூ ரொண் ணுதல்’ என்றது தலைவியின் வாசனையை விரும்பி வண்டுகள் மொய்க்கும் நெற்றியையுடைவள் என்று உ.வே.சா. பொருள் கொள்ளச் சொல்கிறார். ஆற்றாமை மிக்க தலைவி, ‘யாரோ பிரிகிற்பவரே’ என்று தோழி கூறிய மாத்திரத்தில் துயர் நீங்கித் தலையெடுத்து நிமிர்ந்து நோக்கினாளாக, நெற்றியின் விளக்கங்கண்ட தோழி, ‘தேமூரொண்ணுதல்’ என விளித்தாள்.


ஒரு பெண்ணின் அழகை, உனது நெற்றி வண்டுகள் மொய்ப்பதற்கு ஏற்றாற்போலுள்ளது  என்றது சீர்குலைக்கும் அழகு என்றே அழைக்கப்படமுடியும். அதோடு துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி நீ (  நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய) என்பதும் சேரும்போது அங்கே முழுமையாக சீர்குலைந்த தலைவியின்  சித்திரம் ஒன்று தீட்டப்படுகிறது.

———-

இழப்பு பற்றிய பயத்தினால்  ஏற்பட்ட உருமாற்றம்

——-

நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய என்ற வரி இழப்பின் சோகத்தை தலைவியின் உடலில், கண்ணீரில் எழுதுகிறதென்றால், யாரோ பிரிகிற் பவரே என்ற வரி உன்னை யார் தான் பிரிய முடியுமென வினவுகிற அதே நேரத்தில் பிரிந்து விடுவாரோ என்ற பயத்தின் சோகத்தினை அவள் அகத்தில் எழுதுகிறது. வண்டுகள் மொய்க்க சாத்தியமுடையதாய் இருக்கும் நெற்றி என்பது இழப்பு பற்றிய பயத்தினால் ஏற்பட்ட உருமாற்றமென்பது தெளிவாகிறது.

——-

மீள் சேர்க்கைக்கான சாத்தியப்பாடு

——

குறியியல் சீர்குலைவை முதலில் சித்தரித்த கவிதை, தோழியின் கூற்றில் அதே சீர்குலைவை, ‘சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து’ என்ற வரியில் மீண்டும் குறியீட்டு ஒழுங்கிற்குள் (symbolic  order) கொண்டு வந்து தலைவனும் தலைவியும் சேர்வதற்கான சாத்தியப்பாட்டினைச் சொல்கிறது.  அதாவது எது சீர்குலைவின் சித்திரமாய், வண்டுகள் மொய்க்கக்கூடிய நெற்றியாய் சொல்லப்பட்டதோ அதுவே மலைச்சரிவினிலுள்ள கடம்ப மரக்கிளைகளின் பகுதியான பூக்களாய் சொல்லப்படுகிறது.  வலஞ்சுரியென்றது, பூவிற்கு அடை; மராம் என்பது ஆகுபெயர் அது இளவேனிலில் மலருமென்பது.  உ.வே.சா. “நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலிணர்கொய்தற்கு நின்ற” என்ற ஐங்குறுநூறு பாடலையும் மேற்கண்ட தலைவனும் தலைவியும் மீள் சேர்வதற்கான சாத்தியப்பாட்டை உணர்த்தும் விதமாக சான்றுரைக்கிறார். 

——-

யாரோ என்பது ஒருவருமிலரென்னும் பொருளில் வந்தது

———

ஒண்ணுதல், நீ ஒழியப் பிரிகிற்பவர் யார், தலைவன் செல்லுதல் நின்னோடே ஆகும், நின்னைப் பிரிந்து செல்லான் என்று தோழி தலைவிக்கு நல்லுரை கூறுதல் இக்கவிதையின் முடிபாகக் கருதலாம்

‘யாரோ பிரிகிற் பவரே’ என்ற வரியில் யாரோ என்பது ஒருவருமிலரென்னும் பொருளில் வந்தது என்பது கவனிக்கத்தக்கது.

பாலைத் திணைப்பாடல்களில் பிரிவாற்றாமையினால் மொழி முந்தைய உந்துதல் ( இதை ஜூலியா கிற்ஸ்தவா chora என்றழைப்பார்) ஒரு சீர்குலவை வர்ணிப்பதையும் அது ஒருங்கே மீட்டெடுக்கப்படுதலையும் வாசிக்கலாம். 



Thursday, May 2, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-20

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-20

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  ஓதலாந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 21

திணை:  முல்லை

————-

வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்

கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்

கானங் காரெனக் கூறினும்

யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி, செறிந்து மலர்ந்த நீட்சியுடைய பூங்கொத்துகளைத் தழைகளின் இடையே மேற்கொண்டு பொன்னாற் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளைக் கோர்த்துக்கட்டிய, மகளிருடைய கூந்தலைப் போன்ற, கண்ணுக்குத் தோன்றுகின்ற புதிய பூக்களையுடைய கொன்றைமரங்களையுடைய காடானது, இது கார்ப்பருவமென்று கூறினும் நான் தெளியேன் ஏனென்றால் தலைவன் பொய்மொழி கூறாதவன். 

——

கொன்றை மகளிரைப் போலத் தோன்றினும் மகளிரல்ல

——-

இயற்கை தன் பருவத்தைப் பற்றி என்றேனும் பொய் சொல்லுமா? இந்தக் கவிதையில் தலைவிக்கு இயற்கை பொய் சொல்கிறது; அப்படி பொய் சொல்வதாக அவள் சொல்கிறாள். கார் காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் திரும்பவில்லை ஆனால் கார் காலத்தின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் கானகத்தில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ஒன்று கானகம் பொய் சொல்ல வேண்டும் அல்லது தலைவன் பொய் சொல்லியிருக்க வேண்டும். தலைவியின் காதல்நம்பிக்கையைப்  பெற்ற தலைவனோ ‘பொய் வழங்கலரே’ எனவே கானகம்தான் பொய் சொல்லியிருக்க வேண்டும்; தலைவி உண்மையில் கார் காலம் வரும் வரை அவன் சொல் பற்றி அவனுக்காகக் காத்திருப்பாள். ‘புதுப்பூங் கொன்றைக் கானங் (கானகம்) கார் என்று கூறினும். தலைவி இயற்கையின் சமிக்ஞைகளை என்னைப் போல இன்னும் பல நவீன சம காலத்திய கவிஞர்களைப் போல சித்தபிரமையின் பாற்பட்ட பருவநிலை அறிக்கையை (paranoid seasonal weather report) முன்வைக்கவில்லை. தலைவி தன் காதலனின் சொற்களுக்கு காதல் உண்மையின் உயர் ரக அதிகாரத்தைக் கொடுக்கிறாள். தன் வாதத்தை வலுப்படுத்த அவள் கூறுவதை உ.வே.சா. பொன்னாற் செய்த தலையணிகளைக் கோர்த்துக்கட்டிய  மகளிரின் கூந்தலைப் போன்ற புதிய பூக்களையுடைய கொன்றை மரங்கள் உண்மையில் மகளிரில்லைதானே அது போல வந்துவிட்ட கார்காலத்துக்கும் அவை சமிக்ஞைகளல்ல என விளக்கமளிக்கிறார். 

———

காதலில் காத்திருத்தலின் அழகியலும் குறியியலும் (The semiotics and aesthetics of waiting in love)

———

ஓதலாந்தையாரின் இந்தக் கவிதையைப் போன்ற முல்லைத் திணை சங்கப் பாடல்கள் இருத்தலையும், இருத்தலின் நிமித்தத்தையும் பேசுகின்றன. இருத்தலும் இருத்தலின் நிமித்தமும் காதலில் காத்திருக்கையில் நீண்டுகொண்டே போகின்றன; அப்போது இயற்கையின் சமிக்ஞைகள் ஒன்று தவறாக இருப்பதாக புரிந்துகொள்ளப்படுகின்றன இல்லையென்றால் சமிக்ஞைகள் பேசா நிற்கின்றன. பேசும் இயற்கையின்  படிமங்களைத் தன் கவிதைகளில் சதா குறிப்பிடும் சங்கக் கவிதைகளுள் காத்திருத்தலின் அழகியலைச் சொல்லும் முல்லைத் திணை கவிதைகள் இயற்கை பேசாத எதிர் உலகத்தைக் கட்டமைப்பதாக வாசிக்கலாம். முல்லைத் திணையைச் சார்ந்த கவிதைகளுனூடாகவே இவ்வாறாக சங்கக்கவிதைகளின் அமைப்பாக்கம் (sturucture in the structuralist sense) நமக்குத் தெரியவருவதாக இருக்கிறது.  

———————

இயற்கையே பெண்மையின் உருவகமாக

———————

புதுப்பூ என்றதால் பருவம் தொடங்கியதைச் சொல்ல வேண்டும்; கொன்றை மரத்திற்கு மகளிரும் , தழைக்கு அவர் கூந்தலும், பூங்கொத்திற்கு பொன்னிழையும் உவமிக்கப்படுகின்றன. இய்றகையே பெண்மையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கொண்டால் அந்த உருவகம் அதன் செழுமையில் அதன் விகசிப்பில் பேசும் தலைவியின் உடலின் நீட்சியாகிறது. மழை வருவதைப் பற்றி, கார் காலம் வருவதைப் பற்றி கிசுகிசுப்பது உடலா, இயற்கையா? 

———

பருவகால சுழற்சிகளும் குறியியல் மாற்றமும்

———


கவிதை இரண்டு குறியியல் அமைப்புகளுக்கு இடையே ஒரு முரணை முன்வைக்கிறது. முதலாவது இயற்கை உலகம்: பூக்கும் மரங்கள், சலசலக்கும் தேனீக்கள், வரவிருக்கும் மழையின் கிசுகிசுப்புக்கள். இந்த அறிகுறிகள் உடனடி பருவ சுழற்சி மாற்றத்தைக் குறிக்கின்றன. இரண்டாவது குறியியல் அமைப்பு மனித அனுபவத்திலிருந்து வெளிப்படுகிறது, குறிப்பாக காதலமும்  அவனின் வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையும். இது இன்னொரு  குறியியல் புலமாகும், அங்கு அன்பின் குறிப்பான்கள் இயற்கையில் காணக்கூடிய மாற்றங்களைக் காட்டிலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனவாக இருக்கின்றன. 

கொன்றை மரங்கள் தொடக்கத்தில், எதிர்பார்க்கப்படும் மழைக்காலத்துடன் வாழ்க்கையின் வளர்ச்சியை, மாற்றத்தை உறுதியளிக்கும் அறிகுறிகளாக செயல்படுகின்றன. இருப்பினும், காதலனின் இருப்பு - கவிதையில் காணப்படாதது - இந்த வெளித்தோற்றத்தில் நிறுவப்பட்ட குறியீட்டை சீர்குலைக்கிறது. இயற்கை, பண்பாடு அல்லது மனித உலகு ஆகிய இரண்டு குறியியல் உலகங்களுக்கு இடையிலான போராட்டங்களாக, முரண்களாகவே குறுந்தொகைக் கவிதைகள் முழுக்க காதலுணர்வின் வெளிப்பாடு சௌந்தர்யம் கொள்கிறது. இயற்கையுலகு   வெல்கிறதா, மனித உலகு வெல்கிறதா அது நடக்கும் திணைக்களம் எது என்பதை நாம்தொகுக்கும்போது நமக்கு பழந்தமிழரின் அகக் கவிதையியல் என்ன என்பது பற்றிய முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும்; அப்படிக் கிடைக்கும் சித்திரத்தை நாம் நமது பாரம்பரியமாக வரித்துக்கொள்ளவேண்டும்.  முல்லைத் திணையின்பாற்பட்டு மனித விழைவை இயற்கையின் சமிக்ஞைக்கு  மீறிய முக்கியத்துவமுடையதாய் காட்டும் இக்கவிதையை முழுசித்திரத்தை நோக்கிய தூரிகைத் தீற்றுதலாய் குறித்தல் அவசியம். 


Wednesday, May 1, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-19

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-19

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  கோப்பெருஞ்சோழன்

குறுந்தொகையில் பாடல் எண்; 20

திணை:  பாலை

————-

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து

பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்

உரவோ ருரவோ ராக

மடவ மாக மடந்தை நாமே.

—————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழியே, அருளையும் அன்பையும் துறந்து தன் துணைவியை விட்டு பொருள்தேடும் முயற்சியின் பொருட்டு பிரியும் செயலையுடைய தலைவன் அறிவுடையவனாயின் அவ்வாற்றலையுடையோர் அறிவுடையவர் ஆகுக, அவனைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றலில்லாத நாம் அறிவிலேம் ஆகுக.

——

வாசிப்பு

——-

கூற்றும் கேட்போரை தன்னிலையாக்கம் செய்தலும்

————

இந்தக் கவிதை போல படிமங்கள் இல்லாத நேரடியான கவிதைகள் மொழியின் வேறு பல இயங்குதளங்களை ஆராய உதவியாக இருக்கின்றன. தலைவி தோழியிடம் கூறியது என்பதை உ.வே.சா. இன்னும் விளக்கமாக ‘செலவுணர்த்திய தோழிக்கு கிழத்தி உரைத்தது’ (செலவு- தலைவன் பொருள்வயிற் பிரிதல்) எனக் கூற்றின் தனமையை விர்த்து சொல்கிறார். ‘மடந்தை நாமே’ என்ற கவிதையின் இறுதி சொற்கள் தோழியையும் தலைவியைப் போலவே மடந்தை என கட்சி கட்டி சேர்த்துக்கொள்கிறது. கூற்று எவ்வாறாக யாரை நோக்கி எப்படி பேசப்படுகிறது என்பதை வைத்தே கேட்போரின் தன்னிலையாக்கம் (subjectivity) கட்டமைக்கப்படுகிறது. (பார்க்க: Silverman, Kaja. The Subject of Semiotics. Oxford University Press, 1983.) ‘மடந்தை நாமே’ என்ற  சொற்கள் அங்கதத்துடன் கூடிய தொனியில் சொல்லப்பட்டதால் அதில் ஒரு தோழமையின் கண் சிமிட்டல் இருக்கிறது; மடந்தை என்பதற்கான நேர் எதிரான பொருளைக் குறிக்கிறது; தோழி தலைவியின் வலியைப் பகிர்ந்துகொள்வாள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.  

————

தெரிவுகளின் மாயத்தோற்றங்கள்

———

இந்தக் கவிதை இரண்டு எதிரெதிர் பாதைகளைக் கட்டுகிறது. ஒன்று பொருளீட்டும் ஆசையால் பிரிதல் இன்னொன்று இதயத்தின், காதலின் பொருட்டு பிரியாது சேர்ந்திருத்தல். “அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து, பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக” எனும் போது தலைவனை பொருளுக்காக பிரிந்து செல்லும் அவன் வலுவுடையன் எனில் (உரவோர் ஆயின்) அவனே வலுவுடையவனாக இருக்கட்டும் என கசப்பின் தொனியில் சொல்கிறாள். மடந்தை நாமே என்பதற்கு எதிரானதாக ‘உரவோர் உரவோர் ஆக’ என்பது சொல்லப்பட்டதால் உரவோர்  புத்திசாலிகளும் ஆவர் என பொருளைச் சுட்டி அதற்கு நேரெதிராக முட்டாள்கள் என்ற அர்த்ததைத்க் கடத்திவிடுகிறது. கூற்றின் நாடக தொனி எப்படி தெரிவுகளின் மாயத்தோற்றங்களை உடனடியாகச் சொல்லிவிடும் என்பதற்கு இது ஒரு நல்ல எளிமையான சான்று. 

————-

அன்பும் அருளும்

—————

பொருள்வயின் பிரிந்து செல்லும் தலைவனை ஏசுகின்ற கவிதையில் வரும் முதல் வரியான “அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து” என்பதை எப்படிச் சரியாக புரிந்துகொள்வது? உ.வே.சா அருள் என்ற சொல்லுக்கு தம்மோடு ஒரு தொடர்பும் இல்லாதார் மாட்டும் அவர் துயரங் கண்டதால் உண்டாகும் இரக்கம் என்றும் அன்பு என்ற சொல்லுக்கு தொடர்புடையாரிடத்தும் தன்னாற் புரக்கப்ப்டுவார் மேலும் உளதாகிய காதல் எனவும் உரை எழுதுகிறார். அன்பினின்றும் அருள் உண்டாகுதல் தோற்றும் முறை; அருளின் பின் அன்பு நீங்குதல் நீங்கும் முறை. காதலியின் மேல் அன்பில்லாமல் பொருளுக்காக பிரிந்து செல்லக்கூடியவனுக்கு அருளும் வசப்படாது என்பது உட்குறிப்பு; அந்த உட்குறிப்பினுள் இருக்கிற சோகமும் கசப்புமே இந்த எளிய சொற்களைக் கவிதையாக்குகின்றன.