Thursday, January 8, 2026

டி.தருமராஜின் நூலை வாசிக்கவிருக்கிறேன்




டி.தருமராஜ் அனுப்பிக்கொடுத்த அவருடைய நூல் “ஜல்லிக்கட்டு” இன்று கிடைத்தது. தருமராஜின் “யாதும் காடே, யாவரும் மிருகம்” நூலின் பகுதிகளை இணையத்தில் வாசித்தபோது எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பகுதிகளைப் பற்றி பத்தொன்பது இருபது வயதுகளில் தருமராஜ் இருந்தபோது அவர் எழுதிய சிறுகதையைப் படித்த நினைவு வந்ததாக நெகிழ்ந்து எழுதியிருந்தேன். மொத்தமாக நூலாகப் படித்தபோது அந்த நூலின் அரசியல் கூர்மையும், அந்தத் தலைப்பு சுட்டுகிற கடும் அவநம்பிக்கையும் என்னைத் திகைக்க வைத்தன. வாழ்க்கையில் சொல்லவொணா துயரங்களையும் இழப்புகளையும் சந்தித்த எனக்குக்கூட மனிதர்கள் மேல் அப்படியொரு அவநம்பிக்கைத் திரளவில்லை. மனிதர்கள் எனக்குத் துரோகமிழைக்கையில் நான் என்னுடைய உள்ளுணர்வும், அப்பாவித்தன்மையும் பொய்த்துவிட்டதாக வருந்தக்கூடியவனாகவே இருக்கிறேன். உண்மைக்கான தேட்டம், அழகில் மயங்கிவிடுதல், அப்பாவித்தன்மையை ஒரு விழுமியமாக, பொக்கிஷமாக பாதுகாத்தல், உள்ளுணர்வின் (intuition) மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை, ஆகிய என்னுடைய இயல்புகள் தருமராஜின் எழுத்தில் அரசியல் கூர்மையைக் கண்டு திகைத்துப் போனதில் வியப்பில்லை. அழகின் சத்தியத்தை நம்பும் எனக்கு, ராஜன் குறை ஒரு முறை எழுதியது போல அரசியல் அந்நியமான துறையாக இருக்கக்கூடும். எனக்கு அரசியல் தெரியும் என நான் மார்தட்டிக்கொண்டலும் கூட.  தருமராஜை, பலப்பல வருடங்களுக்குப் பிறகு, சமீபத்தில் சென்னையில் ஒரு கருத்தரங்கில் சந்தித்தபோது, கருத்தரங்கு நடந்த நட்சத்திர விடுதியில் லிஃப்டில் அவருடன் மேலே சென்றபோது, என்னுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஒருவிதமான excitement-உடன் உரையாடிக்கொண்டே வரும் பையன் கண்ணுக்குப் புலப்படுகிறானா என்று உற்றுப் பார்த்தேன். அவர் தலை நரை கண்டுவிட்டதாகவும் சாயம் பூசி இருப்பதாகவும் தெரிவித்தார். அந்தப் பையன்தான் சந்தேகமில்லை என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.  எனக்கு இப்போதுதான் ஆங்காங்கே நரை தென்பட ஆரம்பித்திருக்கிறது. நல்லது. 


என்னைப் போல அல்லாமல்,  அரசியல் கூர்மை வாய்க்கப் பெற்றவர்கள் தங்கள் கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கோட்பாடுகளை முலாம் பூசும்போது எனக்கு அந்த எழுத்தின் மீது ஆர்வம் போய்விடுகிறது. மானிடவியல், நாட்டுப்புறவியல் என இரண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த துறைகளுமே களப்பணி மூலம் பெறப்படும் தரவுகளின் கட்டப்படுபவை. தரவுகளை, அடர்த்தியான விவரணையின் வழி  இனவரைவியல் எழுத்தில் சேர்க்கவேண்டும். கற்பனையோ, யூகங்களோ வேலைக்கு ஆகாது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தருமராஜின் “ஜல்லிக்கட்டு” நூலில் எனக்குத் தெரிந்த, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கூட நடந்து வந்த இளைஞன், தென்படுகிறானா என்று வாசிக்கவிருக்கிறேன்.  

Tuesday, January 6, 2026

உலகின் தலைசிறந்த புத்தகங்கள் | 1001 அரேபிய இரவுகள்

 



முன்பு நண்பர் சஃபியின் 1001 அரேபிய இரவுகள் மொழிபெயர்ப்பு பற்றி தளவாய் சுந்தரத்துடன் வாவ் தமிழா வுக்காக உரையாடிய காணொளி 


பகுதி 1

https://www.youtube.com/watch?v=2fJzYFQe9_8  Part 1

பகுதி 2


https://www.youtube.com/watch?v=-rGPH24ouJw Part 2


முருகபூபதியின் நாடகம் “யாக்கைக்களறி”




நேற்று முருகபூபதியின் மணல்மகுடி நாடகக்குழுவும், பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையும் இணைந்து அரங்கேற்றிய “யாக்கைக்களறி” நாடகத்தை சென்னை மியூசியம் தியேட்டரில் பார்த்தேன். நாடகம் முடிந்தவுடனேயே முதல் பேச்சாளராக அழைக்கப்பட்டதால் நாடகத்தைப் பற்றிய  உடனடி அவதானங்களைப் பகிர்ந்துகொண்டேன். அந்த சிறிய உரையின்வேறு வடிவம் இந்தப் பதிவு.


முருகபூபதியின் நாடகங்களை நான் அவர் பாண்டிச்சேரிப் பல்கலையில் தியேட்டர் மாணவராக இருந்த காலத்திலிருந்தே  பின் தொடர்ந்து வருகிறேன்.  அவர் மாணவராக தன் பட்டமேற்படிப்புக்கு அரங்கேற்றிய தாஸ்த்தோவ்ஸ்கியின் “Notes from the Underground” நாடகத்திற்கு examiner ஆக நான் அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது நாடகத்துறைத் தலைவராக இந்திரா பார்த்தசாரதி இருந்தார். நாடகத்தின் பிரதி ரமேஷ் பிரேதனால் எழுதப்பட்டது என்று நினைவு. அந்த நாடகத்திலிருந்து இன்று வரை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முருகபூபதி தன்னைத் தனித்துவம் மிக்க அரங்க இயக்குனராகவும்,  நாடக ஆசிரியராகவும் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார். 


முருகபூபதியின் தனித்துவம் அவர் தன் நாடகங்களுக்கு உருவாக்கும் அபூர்வமான இசையிலும் காட்சிப்படிமங்களிலும் இருக்கிறது. முருகபூபதி பல பழங்குடி இசைக்கருவிகளிலிருந்து, அறியப்படாத பல இசைக்கருவிகள் வரை பயன்படுத்துவது நான் வியக்கக்கூடியது.  நான் பார்த்த அவருடைய இன்னொரு நாடகத்தில்  பின்னணி இசை சுரக்குடுக்கைகளை சிறிய முரசு போல இசைப்பதால் உண்டாகக்கூடியதாக இருந்தது; இன்னொன்றிலோ பழங்குடிமக்கள் மழைச் சத்தத்தை உண்டாக்கும் மூங்கில் குழாய்களைக் கொண்டிருந்தது. முருகபூபதி என்றுமே பதிவு செய்யப்பட்ட இசையை பயன்படுத்தவதில்லை. அவர் live music ஐயே பயன்படுத்துபவராக இருக்கிறார். அரங்கக்கலையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்குத் தெரியும் live music -ஐ நடிகர்களை வைத்தும், பின்னணி இசையாகவும் பயன்படுத்துவது எத்தனை சவால்கள் நிறைந்தது என்பது. அதில் ஒரு excellence ஐயும் நேர்த்தியையும் அடைவது என்பதை ஒரு அசாத்திய சாதனையாகக் கருதவேண்டும். முருகபூபதி இந்த அசகாய சாதனையைத் தன் நாடகங்களில் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நேற்று நான் பார்த்த “யாக்கைக்களறி” நாடகமும் இதற்கு விதிவிலக்கல்ல.  


பின்னணி இசையாக தொடர்ந்து மூங்கில் வெட்டுவது போன்ற டிரம் சப்தம் பின்னணி இசையாக இருக்க நடிகர்கள், திபெத்திய மணியோசை இசைக்கருவிகள், பழங்குடி முரசுகள் ஆகியவற்றை  இசைத்துக்கொண்டே நடித்தார்கள். வெறும் நாற்பது நாள் பயிற்சியில் இந்த அபூர்வமும் பேரழகும்  கொண்ட  இசை சாத்தியமாகி இருக்கிறது என்பது வியந்து பாராட்டத்தக்கது.


முருகபூபதியின் காட்சிப்படிமங்கள் சொற்களால் சொல்ல இயலாத, சமகால complex emotions ஐ சொல்லக்கூடியவை. அவை அவர் பயன்படுத்தும் தனித்துவம் மிக்க ஆனால் விசித்திரமான ஆடைகள், மேடை ஒளி அமைப்பு, முகமூடிகள், சிறிய பொருட்கள் ஆகியவற்றால் உருவாகுபவை. 

  “யாக்கைக்களறி” நாடகத்தில் வெள்ளை மேலங்கிகள், திகைக்கவைக்கும் பின்னலாடைகள், துணிப் பின்னல்கள் கொண்ட துடைப்பான்கள், அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தும் கார்ட்டூன் கண்கள் கொண்ட வெள்ளை முகமூடிகள், நட்டு தரையில் நிறுத்தி  வைக்கக்கூடிய முகமூடிகள்  ஆகியவற்றை முருகபூபதி அசரவைக்கும் வகையில் பயன்படுத்தி இருந்தார். Stunning visuals என்று அவற்றை விவரிப்பது கூட அவற்றுக்கு முழு நியாயம் சேர்ப்பது ஆகாது.


போர் எதிர்ப்பு நாடகமான “யாக்கைகளறி” முழுவதுமாக எனக்குப் பிடித்திருந்தது என்றாலும் அதில் மூன்று தருணங்களை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.


முதல் தருணம் வெள்ளைப் பின்னலாடை ஆணிந்த ஒரு பெண் முறத்தில் பல தரையில் நட்டு வைக்கக்கூடிய முகமூடிகள்/ தலைகளைக் கொண்டு வந்து மேடை முழுவதும் வட்டவடிவமாக அடுக்குவது. போரின் ஓலமும், ஒப்பாரியும், கத்தல்களும், கதறல்களும் உண்டாக்க முடியாத போரின் தீவிர துக்கத்தை மேடை முழுவதும் நட்டு வைக்கப்பட்ட தலைகள் விம்மி எழச்செய்தன. 


இரண்டாவது தருணம் கையில் வெள்ளைத் துணித் துடைப்பானும், வெள்ளை அப்பாவி முகமூடிகளும், மேலங்கிகளும் அணிந்த ஒரு கூட்டம் முகமூடி அணியாத ஒரு பெண்ணின் ஓலத்தினால் திடுக்கிடுகிறது. அந்தப் பெண் சீனமொழிப் பாடல் போன்ற ஏதோ ஒன்றை அந்நியமாக, ஓலமாகப் பாடுகிறாள்.  முகமூடி அணிந்த கூட்டம் திடுக்கிடுகையில் அவற்றின் கார்ட்டூன் கண்களால் அவர்களின் அப்பாவித்தனம் பேரழகு கொண்டது. அந்தக்கூட்டம் அந்த அந்நிய மொழியில் ஓலமிடும் பெண்ணை அணைத்து அரவணைத்து அவளுக்குத் தங்கள், மேலங்கியை அணிவித்து, முகமூடி மாட்டி, கையில் தங்களைப் போலவேத் துணித் துடைப்பானைக் கொடுத்துத் தங்களோடு சேர்த்துக்கொள்கிறது. அந்தத் தருணம் நாடகம் உண்டாக்கிய பிரமாதமான political statement  மட்டுமல்ல அது ஒரு moment of tenderness கூட. Moments of tenderness ஐ உருவாக்கும் எந்த ஒரு கலைப்படைப்பும் கொண்டாடத்தக்கதாகும். 


மூன்றாவது தருணம் மேடையில் நடிகர்கள் முக்கியமான வருடங்களையும், அபத்தமான எண்ணிக்கைகளையும் எண்களாக மட்டுமே உச்சரித்து மரித்துப்போவது. வெறும் எண்களுக்காகத்தானே மனித வாழ்வுகள், போரின் போதும் சரி அமைதியின்போதும் சரி பலியிடப்படுகின்றன? 


முருகபூபதிக்கும். மணல்மகுடி நாடகக்குழுவினருக்கும், பாண்டிச்சேரி பல்கலை நாடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும். 

ஜேம்ஸ் ஜாய்ஸும் புதுமைப்பித்தனும் -இரு சிறுகதைகள்


இன்று காலை ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டிகளை நீக்கிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்பும்போது ஐஸ்கட்டி ஒன்றில் ஈக்குஞ்சொன்று சிக்கி கண்ணாடிப்பெட்டிக்குள் இருப்பதைப் போலக் காட்சி அளிப்பதைப் பார்த்தேன். ஐஸ் கட்டியை உடைத்து ஈக்குஞ்சை வெளியேற்றியபோது அது ஏற்கனவே இறந்து போய் பதனிடப்பட்டிருந்தது. பனிக்கட்டிக்குள் சிக்கிக்கொண்ட ஈக்குஞ்சு போலத்தான் நாமும் நம் வாழ்க்கைச் சூழல்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோமா என யோசித்துக்கொண்டிருந்தேன். 

அந்த ஈக்குஞ்சு போலவே தங்கள் சூழல்களுக்குள் சிக்கிய மனிதர்களைப் பற்றிய இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன. ஒன்று ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய ‘எவெலின்’ மற்றொன்று புதுமைப்பித்தன் எழுதிய ‘மனித எந்திரம்’.

ஜேம்ஸ் ஜாய்ஸின் Dubliners சிறுகதைத் தொகுதியில் உள்ள ‘எவெலின்’  சிறுகதையைத் தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். 

 மொழிபெயர்ப்பு அல்லையன்ஸ் 1987இல் வெளியிட்ட அவருடைய ‘ஐரோப்பிய சிறுகதைகள்’ தொகுதியில் இருக்கிறது. ஜாய்ஸ் நனவோடை நடையைப் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்பு எழுதிய கதை.  

எவெலினின்  தாய் இறந்துவிட  குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பு எவெலினுக்கு வந்து சேருகிறது; அவள் தந்தை  வீட்டுக்குத் தேவையான பணத்தைத் தராமல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவளை ஏசிக்கொண்டே இருக்கிறான். எவெலினின் ஒரு சகோதரன் இறந்துவிட்டான். இன்னொரு சகோதரன் வேறு வேலையில் வெளியூரில் இருக்கிறான். பத்தொன்பதே வயதான எவெலினுக்கு டப்ளின் வாழ்க்கை மிகவும் அலுப்பூட்டக்கூடியதாக இருக்கிறது அவள் அவளுடைய காதலன் ஃபிராங்க்குடன் அர்ஜெண்டினாவுக்கு கப்பல் வழி ஓடி விடத் திட்டமிடுகிறாள். ஃப்ராங்க்குடன் பேசுவதையும் பழகுவதையும் எவெலினின் தந்தை தடை செய்திருக்கிறான். அதை மீறி துணிச்சலாக ஃப்ராங்க்குடன் துறைமுகம் வரை வரும் எவெலின் கப்பலில் ஏறாமல், கடைசி நொடியில், தன் காதலனைப் போகவிட்டு விட்டு கடற்கரையிலேயே தங்கிவிடுகிறாள்.  

புதுமைப்பித்தனின் ‘மனித எந்திரம்’ கதையில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு பலசரக்குக் கடையில் கணக்கு எழுதுபவராக வேலை பார்க்கிறார். குறைவான சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அவருக்கு கொழும்புக்கு போய் நிறைய சம்பாதித்துவிட்டு ஊர் திரும்பவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு நாள் துணிச்சலாக கடையிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புவுக்கு கப்பல் ஏற ரயில் நிலையத்துக்கு வந்து தூத்துக்குடிக்கு பயணச்சீட்டு எடுத்துவிடுகிறார்; ரயிலில் ஏறி பதைபதைப்புடன் இருக்கும் அவர் கடைசி நொடியில் ரயிலிருந்து இறங்கி ஓடி வந்துவிடுகிறார். மீனாட்சி சுந்தரம் கடையிருந்து எடுத்த பணத்தை தன் கணக்கில் பற்று வைக்குமாறு கடை முதலாளியிடம் சொல்லி கடைச்சாவியை அவரிடம் ஒப்படைப்பதோடு கதை முடிகிறது. 

ஜாய்ஸ்சின் ‘எவெலின்’ கதை என்றில்லாமல் டப்ளினர்ஸ் கதைத்தொகுதி முழுதுமே ஒரு வரலாற்று காலக்கட்டத்தில் எப்படி துணிச்சலாக முடிவெடுக்கும் திறனின்மையால் அயர்லாந்தே எப்படித் தேங்கிக்கிடந்தது எனச் சொல்கின்ற கதைகள் என இலக்கிய விமர்சகர்கள் எடுத்துச் சொல்கிறார்கள். புதுமைப்பித்தனுக்கு வேறு விமர்சகர்களே வேண்டாம் கதை தலைப்பான ‘மனித எந்திரம்’ என்பதிலிருந்து, கதை முழுக்க மீனாட்சி சுந்தரத்தின் முடிவெடுக்கத் திறனில்லாத பயந்தாங்கொள்ளித்தனத்தை தன் விவரிப்புகள் மூலம் திட்டிக்கொண்டே இருக்கிறார். புதுமைப்பித்தனின் கதையின் தொடர்ச்சியாக, முடிவெடுக்க முடியாததன்மை, நிலவுடமை கிராமப் பின்னணியில் செயலின்மையாக எப்படி மாறுகிறது என்பதை ந.முத்துசாமியின் ‘செம்பனார் கோவிலுக்குப் போவதெப்படி’ கதையில் வாசிக்கிறோம். அந்த நிலவுடமை சமூகத்தின் செயலின்மையை ‘எலிபத்தாயம்’ (எலிப்பொறி)  என்றே அழைக்கிறது அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படம். எலிபத்தாயத்தில் பெரிய தாரவாடு வீட்டிலிருந்து வெள்ளையும் சொள்ளையும் குடையுமாக வீட்டை விட்டு கிளம்புகிற நாயகன் ஒரு சிறிய அழுக்கு மழை நீர் தெருத் தேக்கத்தை தாண்டாமல் வீடு திரும்பிவிடும் காட்சி இருக்கிறது. எலிப்பத்தாயமான வீடு பெரிய உத்தரங்களாலும் பெரிய பெரிய கதவுகளாலும் ஆனதாக இருக்கிறது. 

வரலாற்று காலகட்டம் என்பது ஒரு சில உணர்வுநிலைகளின் தொகுப்பே ஆகும்; அந்த உணர்வுநிலைகளை தன்னகத்தே பிடிக்கின்ற படைப்புகளே காலத்தை விஞ்சி நிற்கும் படைப்புகளாக அமரத்துவம் பெறுகின்றன. வரலாற்றை இலக்கியப் படைப்புகளில் எழுதுதல் என்பதும் இவ்வாறே நிகழ்கிறது.



Monday, January 5, 2026

பெயரில் என்ன இருக்கிறது அல்லது பெயரில் என்னதான் இல்லை?


“ரோஜாவின் பெயர்” நாவல் மொழிபெயர்ப்பு பல உரைநடை வகைமைகளை தன்னுள் வைத்திருக்கிறது என்பதை ஏற்கனவே கவனப்படுத்தி எழுதியிருக்கிறேன. அவற்றில்  வாக்கிய சிதறல்களும் (fragments), சிதைவுகளும், திருச்சபையின் தூய உயர் லத்தீன் பயன்பாடும் கூட அடக்கம்.  நிற்க. 


மொழியின் கருத்தியல் வன்முறை (ideological violence) உரைநடையை பத்திரிக்கைத் தமிழாக தரப்படுத்துவதிலும் நிலைநிறுத்துவதிலும், அதைத் தவிர இதர உரைநடை வடிவங்களை மறுதளிப்பதிலும் இருக்கிறது. பெயரிடலும் (Naming), கதைசொல்லலும் (Narrativizing) இன்னொரு வகையான கருத்தியல் வன்முறைகள். இவற்றை அம்பலப்படுத்துவது சமகால இலக்கியத்தின் முக்கிய நோக்கம்.


இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் “ஸில்வியா எனும் புனைபெயருக்கான அஞ்சலிக்குறிப்புகள்” நாவலில் பல்வேறு உரைநடை வகைமைகள், கதை சொல்லல் முறைகள், விதவிதமான பெயரிடல்கள் ஆகியவற்றைச் சேர்த்திருக்கிறேன். சமீபத்தில் தமிழ்வெளி இலக்கிய இதழில் வெளிவந்த சிறுகதை “காகங்கள் கரையும் முது மதியம்”, என்னுடைய “மைத்ரேயி மற்றும் பல கதைகள்” தொகுப்பிலுள்ள “சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” , “மைத்ரேயி” ஆகிய சிறுகதைகளையும் நாவலில் சேர்த்திருக்கிறேன். 


இந்த உரைநடை வகைமைகள், வாக்கியப் புதுமைகள், பெயரிடல்கள், கதை சொல்லல்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் எனது நாவலுக்கான முன்னோட்டமாக இந்த மூன்று சிறுகதைகளையும் வாசித்துப் பார்க்கலாம்.


சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு”


https://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/blog-post_26.html 


மைத்ரேயி

https://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/blog-post_18.html 


காகங்கள் கரையும் முது மதியம் 


https://mdmuthukumaraswamy.blogspot.com/2025/07/blog-post.html 



 

  

Sunday, January 4, 2026

நிலவின் மறுபக்கம்


எது இல்லாமலிருக்கிறதோ அதிலிருந்தே இருக்கக்கூடியது உணரப்படுகிறது. எது பேசப்படாமலிருக்கிறதோ அதுவே பேசப்படுவதை தீர்மானிக்கிறது. எது புறக்கணிப்படுகிறதோ அதுவே புகழ்பெற்றதன் அடிப்படையாக இருக்கிறது. எவரை விடுத்து நீங்கள் ஒரு பட்டியல் தயாரிக்கிறீர்களோ அவர்களே உங்கள் பட்டியல் வழி துலக்கமாகிறார்கள். யாரைப் பற்றி நீங்கள் பேச மறுக்கிறீர்களோ அவரே உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கிறார். பேச்சு, பேசப்படாததை உடனடியாக அறிவிக்கிறது. 

நிலவின் மறுபக்கம் -நாம் கண்ணில் பார்க்கக்கூடிய, புலனுணர்வுகளால் உணரக்கூடிய எல்லாவற்றுக்கும் நாம் கண்களால் பார்க்க இயலாத, புலனுணர்வுகளால் நேரடியாக உணர இயலாத மறுபக்கம் ஒன்றிருக்கிறது என்பதைக்குறிக்கும். நிலவைப் பொறுத்தவரை அப்படி ஒரு மறுபக்கம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அது போலவே புலனுணர்வுகள் நேரடியாக அறியும் ஒவ்வொன்றுக்கும் மறுபக்கம் ஒன்று இருக்கிறது. மூன்று வகையான புலனுணர்வுகளால நேரடியாக அறிய இயலாத மறுபக்கங்களை நமக்குத் தெரியும்; ஒன்று மனதின் அடியாழம், இரண்டு எதிர்காலம், மூன்று வரலாற்றின் இயங்கு விசைகள்.  

இவற்றையோ இவற்றிற்கு மேற்பட்ட மறுபக்கங்களையோ உணர்த்துவதாகத்தான் கவிதையின் மொழி இயங்குகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நான் ஷிவ்குமார் ஷர்மாவின் சந்தூர் இசையை என் அந்தரங்க அகராதியில் நிலவின் மறுபக்கம் என்று குறிக்கிறேன் என்று எழுதினால் நான் மேற்சொன்ன மூன்று வகையான மறுபக்கங்களையோ அல்லது அவற்றில்  ஏதாவது ஒன்றையோ அவருடைய இசை எனக்கு அர்த்தப்படுத்துகிறது  என்பதாக புரிந்துகொள்ளலாம்.

ஷிவ்குமார் ஷர்மாவிடம், மாணவர் உரையாடலின் போது, அவரிடம் ஒருவர் உங்கள் இசை எங்கிருந்து வருகிறது என்று கேட்டார். அதற்கு  ஷிவ்குமார் ஷர்மா தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வருவதாகவும் அங்கே நீர்நிலைகளில் பனிக்கட்டிகள் உருகி வரும் காட்சி தினசரி அனுபவமென்றும் அந்த பனிக்கட்டிகளின் நகர்வுகளிலிருந்தே தன் இசை உருவாகி வருவதாகவும் சொன்னார்.

ஷிவ்குமார் ஷர்மாவின் இசை என்னிடத்தில் வரும்போது அது என் மனதின் அடியாழத்திலுள்ள நிலக்காட்சிகளை எனக்குத் தரக்கூடியதாக இருக்கலாம். இதே போலத்தானே கவிதை வாசிப்பும் நிகழ்கிறது? 

Saturday, January 3, 2026

கவிதை, நாடகம், இசை


குஸ்டாஃப் மெஹ்லருடைய ஐந்தாவது சிம்ஃபொனியில்  வாத்தியக்கருவிகளின் இசைக்குப் பிறகு இடையில் மாட்டுக்கழுத்தில் மாட்டியிருக்கும் மணிகள் குலுங்கும் ஓசை வரும். ஐந்தாவது சிம்ஃபொனிக்குப்பிறகு மெஹ்லரின் இசைக்கோவைகளில் இவ்வாறாக ‘உயர்ந்த சப்தங்களையும்’, ‘தாழ்ந்த சப்தங்களையும்’ அடுத்து அடுத்து ‘இசைத்து’ நாடக முரணை உருவாக்குவது அவருடைய முறைமைகளில் ஒன்றாகிவிட்டது. இது மேற்கத்திய இசையில் எதிர்ப்புள்ளிகள் (counterpoints) எனப்படும் தன்னளவில் சுதந்திரமான  வேறுபட்ட டியூன்களை ஒன்று மாற்றி ஒன்று இசைப்பதற்கு ஒப்பானது. எதிர்ப்புள்ளிகளால் அதிகமும் ஆன இசைக்கோவைகளும் மெஹ்லரால் ஐந்தாவது சிம்ஃபொனிக்குப் பிறகு இயற்றப்பட்டன. 

தமிழ்த் திரைஇசையில் இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் இசையையும் தினசரி சப்தங்களை மாறி மாறி கோர்வைப்படுத்தி பாடலுக்குள்ளாக நாடக முரணை நிகழ்த்தியிருப்பதைக் கேட்கலாம். “கொத்து மல்லிப் பூவே, புத்தம் புது காற்றே வாசம் வீசு, வந்து வந்து ஏதோ பேசு” என்ற பாடலில் துணிதுவைக்கிற ஓசை இடையில் வரும். “ராக்கம்மா கையைத் தட்டு” பாடலில் “ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும் ஜா” என்ற ஓசையும் “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்” என்ற தேவாரமும் மாற்றி மாற்றிக் கோர்வையாக்கபட்டிருக்கும்.  “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி” பாடலில் கிழவி வெற்றிலை இடிக்கிற சப்தம், புகையிலை அதக்குகிற ஓசை, பல சிறார்கள் ஒரு சிறுவனின் தலையில் தட்டுகிற ஓசை என பல சப்தங்கள் பாடலுக்குள் வரும். இந்த ‘உயர்ந்த’ இசை, ‘தாழ்ந்த’ தினசரி சப்தங்கள் இவற்றை சமன்படுத்தாமல் ஒன்றுக்கொன்று எதிராக இளையராஜா பயன்படுத்துவதால்  நாடகீய முரண் நமக்கு அனுபவமாகிறது. 

கவிதையில் ஒரு சீரிய வரிக்கு அடுத்தாற்போல தினசரி பேச்சுமொழி ஒன்றை இணைத்து நாடகீய தருணங்களை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் டி.எஸ்.எலியட். அவருடைய ‘பாழ்நிலம்’ நீள்கவிதையில் பிருகாதாரண்ய உபநிடதத்திலிருந்து மேற்கோளும் வரும் Jug jug to dirty ears  என்று புணர்ச்சியைக் குறிக்கும் கொச்சையும் வரும். 

நாடகத்தைப் பொறுத்தவரை, எதிரிணை கவிதா வரிகளுக்கு ஒரு நடிகன் நடிக்கப் பழகுவதற்கு முன்பு சிறு சிறு ஒலிகளுக்கு எப்படி எதிர்வினை புரியவேண்டுமென நடிகன் நடிக்கப்பழகவேண்டும். என்னுடைய கவிதைகளில் நிறைய சிறு ஒலிகளை எழுதியிருக்கிறேன். சரியாக அடைக்க மறந்த குழாயிலிருந்து நீர் சொட்டுவது, பாத்திரங்கள் கை தவறி விழுவது, ஈனஸ்வரத்தில் திறக்கும் கதவுகள், விசை குறைந்து சுற்றும் மின்விசிறி, சீனக் குழல் காற்றிசைப்பான்கள் எழுப்பும் குமிழொலி, கோவில்மணியோசை என பல சப்தங்களை எழுதியிருக்கிறேன். அவை அனைத்துமே பிரேமைகளை, hallucinatory effectsஐ உருவாக்க கவிதைகளில் வந்திருக்கின்றன. இவை தவிர இசை அகவய அனுபவமாவதையும் ஒரு நடிகனால் நடித்துக்காட்ட முடியவேண்டும்.  இசை அகவயமாவது பற்றி நான் எழுதிய கவிதைகளில் இரண்டு நாடகப்பயிற்சிக்கு உதவக்கூடும். 

———

டாகர் சகோதரர்களின் துருபத்

——

டாகர் சகோதரர்களின் துருபத்

மெல்லிய மொழி முந்திய

கொஞ்சும் சப்தங்களாக

கேவல்களாக ஒலிக் கசங்கல்களாக

துணுக்கொலிகளாக 

அவ்வொலிகளுக்கிடையேயான

மதுர மௌனங்களாக 

என் மனதில் அடியாழத்திலொரு

கர்ப்பகிரக மணற்கேணி

தொட்டு தோண்டத் தோண்ட

ஊறும் நீர்த்தாரையில் 

பருகியும் களித்தும் திளைத்தும் குளித்தும்

இதோ இதோ நஸீர் ஜாகிருத்தீன்

இதோ இதோ நஸீர் ஃபய்யாஸுத்தீன்

என ஒரு  சோதர மென் இழை 

இன்னொரு சோதர என் இழையில் நெசவாக 

என்னுள் நிரம்பித் தழும்புகிறது

நள்ளிரவில் ஒரு

அமிர்தகலசம்

————

சுபின் மேத்தா நடாத்திய

—-

சுபின் மேத்தா நடாத்திய

ஷோப்பெய்னின் இரவின் 

இசைக்கோவைகளை என்றோ பரிசளித்தாய்

இன்றும் கூட

சுபின் மேத்தாவின் கையசைவுகளில்

நீச்சல் குளத்தில் குழந்தை தவறவிட்ட

ஒரு கரடி பொம்மை நீரில் 

மூழ்கிக்கொண்டிருக்கிறது

அதிரகசியம் எனவும்

பரமானந்தம் எனவும் 

அதனை சூரியக்கதிர்கள் 

நீர்மூழ்குதலிலும் 

பின் தொடர்கின்றன

பொம்மையின்

நிலைத்த கண்களிலும் அரவணைக்க 

விரித்த கைகளிலும்

பகல்கள் இரவுகளின் ஏக்கங்களாக

அது கனவின் லயமெனவே

அமிழ்கிறது பளிங்கு நீலத்தில்

பெரிய புசுபுசு பட்டிழை

உன் தழுவுதலின் கதகதப்பு

நீரடி ஒளித்துகள் தரைவிரிப்பில்

என் பரிநிர்வாணம் 

——

Chopin’s Nocturnes