லாரா எஸ்கிவெல் (Like Water for Chocolate- Laura Esquivel )
| உலக இலக்கிய கிளாசிக் நாவல் - மொழிபெயர்ப்பு |
தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி
அட்டை ஓவியம்: ஜெயக்குமார்
• பக்கங்கள்: 238
• விலை ரூ. 350
• தமிழ்வெளி வெளியீடு
------
லாரா எஸ்கிவெலின் “கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல” சமையல் குறிப்புகளால் ஆன ஓர் அபூர்வமான நாவல்
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
—-
2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் நான் “எனக்குப் பிடித்த நூறு நாவல்கள்” என ஒரு தொடரை எனது வலைத்தளத்தில் எழுதிவந்தேன். அந்தத் தொடரில் மெக்சிக்கோவை சேர்ந்த லாரா எஸ்கிவெலின் (Laura Esquivel), “கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல” (Like Water for Chocolate) நாவலைப் பற்றி எழுதிய கட்டுரை நண்பர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அந்நாவலை நான் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தேன். பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாவல் இப்போது பிரசுரமாகிறது
பெண்களின் வரலாறு சமையலறை, உணவு ஆகியவற்றின் மூலமாக சொல்லப்படுகிறது என்று பேட்டியளித்த லாரா எஸ்கிவெல்லின் நாவல் “கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல” மெக்சிகோ புரட்சியினைப் பின்புலமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் கதையை சொல்கிறது. பன்னிரெண்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலின் ஓவ்வொரு அத்தியாயமும் மாதங்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. முதல் அத்தியாயம் ஜனவரி. ஒவ்வொரு அத்தியாயமும் மெக்சிக உணவுப் பதார்த்தம் ஒன்றை செய்வதற்கான சமையல் குறிப்புடன் தொடங்குகிறது. தேவையான பொருட்களின் பட்டியலைத் தொடர்ந்து உணவு பதார்த்தத்தை எப்படி தாயாரிப்பது என்று விளக்கும்போது எஸ்கிவெல் அதை கதை மாந்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களோடு இணைத்துவிடுகிறார்.
நாவலின் கதை மெக்சிகோவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள எல்லைப் பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் நடைபெறுகிறது. கதையின் நாயகியான டீட்டாவுக்கு நாவல் ஆரம்பிக்கும்போது பதினைந்து வயது. அவள் தன் தாய் எலெனா, சகோதரிகள் கெர்ட்ரூடிஸ், ரோசவரா ஆகியோருடன் பண்ணையில் வசித்து வருகிறாள். டீட்டா பக்கத்து பண்ணையில் வசிக்கும் பெட்ரோவின் மேல் காதல் வசப்படுகிறாள். மெக்சிகோவின் மரபுப்படி வீட்டின் கடைசி மகள் தாய் தந்தையரை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறபடியால் டீட்டா- பெட்ரோ திருமணத்திற்கு தாய் எலெனா அனுமதி தர மறுக்கிறாள். வேண்டுமென்றால் பெட்ரோ தன்னுடைய இன்னொரு மகள் ரோசவுராவை மணம் புரிந்துகொள்ளலாம் என்று எலெனா சொல்ல பெட்ரோ டீட்டாவின் அருகாமையிலேயே ரோசவுராவை மணம்புரிந்துகொண்டாவது இருக்கலாமே என்ற எண்ணத்தில் அவளை மணந்துகொள்கிறான். டீட்டாவுக்கும் பெட்ரோவுக்குமான காதல் வெளிச் சொல்லப்படாததாக ஆனால் பண்ணை முழுக்க அதன் கொதிநிலையில் மறைந்திருக்கிறது. டீட்டா தன் உணர்ச்சிகளை சமையலில் மட்டுமே வெளிப்படுத்துவளாக இருக்கிறாள்.
சொற்களால் வெளிப்படுத்த முடியாத தன் காதலையும் ஏக்கத்தையும் டீட்டா தான் சமைக்கும் உணவில் கலக்கிறாள். அவளுடைய சமையலறையில் நடக்கும் விசித்திரங்கள், அந்த உணவை உண்பவர்களின் உடலில் மாயஜால மாற்றங்களையும் கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றன. ரோஜா இதழ் சாஸ் முதல் திருமணக் கேக் வரை ஒவ்வொரு உணவும் ஒரு கதையைச் சொல்கிறது.
மெக்சிகோ புரட்சியின் பின்னணியில் கண்ணீர், பெருங்காதல் என நாவலின் கதாபாத்திரங்களின் அனைத்து உணர்ச்சிகளும் ‘சாக்லேட்டுக்கான வெந்நீர் போல -உச்சபட்ச கொதிநிலை’யில் இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சமையல் குறிப்புகளோடு கலந்து எழுதப்பட்ட இக்காவியப் பெண்ணிய நாவல் தன் புதுமையான வடிவத்தோடு வாசகர்களை ஒரு புதிய உணர்வுபூர்வமான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
லாரா எஸ்கிவெல்லின் நாவல் மெக்சிகோவின் வெகுஜன பத்திரிக்கையில் வெளிவந்தபோது இலக்கிய நாவலாக அறியப்படவில்லை. காதலையும் அது சார்ந்த உணர்ச்சிகளையும் வெகு ஜன தளத்தில் எடுத்தியம்பும் பாப்புலர் நாவலாகவே கருதப்பட்டது. ஆனால் சில இலக்கியப் பிரதிகள் இலக்கியமாக கண்டடையப்படுவதற்கு வருடங்கள் தேவைப்படுகின்றன. சில சமயங்களில் மொழிபெயர்ப்புகளும் உதவுகின்றன. “கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல” ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் திரைப்படமாகவும் புகழ்பெற்ற இந்த நாவல் அது சொல்லப்பட்ட முறைகளினால் மட்டுமல்லாமல் அதன் உள்ளார்ந்த கலைப்பார்வைக்காகவும் சிறந்த இலக்கியமாக விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. கார்லோஸ் ஃபுயெந்தெஸின் “Death of Artemio Cruz” மெக்சிக புரட்சியின் வரலாற்றினை ஆண்களை மையப்படுத்தி சொல்லியதென்றால் எஸ்கிவெல்லின் நாவல் அதே மெக்சிக புரட்சியின் வரலாற்றினை பெண்களின் கதை வழி சொல்கிறது.
மரபுகள் ஒரு சமூகத்தின் சரித்திரத்தில் வன்முறையான இறுக்கத்தை உண்டாக்கக்கூடும். நாவலில் டிடாவின் தாய் எலெனா அம்மாதிரியான மரபின் வன்முறைக்கு குறியீடாகிறாள். தாய் எலெனா இறந்த பிறகும் கூட டீட்டாவை வாழவிடுவதில்லை. அவள் பேயாக வந்து டீட்டவை அலைக்கழிக்கிறாள். நாவலின் இறுதிப் பகுதியில் எலெனாவின் ஆவியோடு பேசிக் கொண்டிருக்கும் டீட்டா ஒரு கட்டத்தில் எலெனா உருவாக்கும் மன இறுக்கத்தின் வன்முறை தாளமுடியாமல் பண்ணையை தீயிட்டு கொளுத்திவிடுகிறாள். டீட்டாவின் சமையல் குறிப்புகள் அடங்கிய நோட்டுப்புத்தகம் மட்டும் கடைசியில் எஞ்சுகிறது.
நாவலில் வரும் பெண்கள் அனைவருமே தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். டீட்டா, ஒரு முறை பெட்ரோவை நிணைத்துக்கொண்டே காம உணர்ச்சிகள் மேலிட்டவளாய் ரோஜா இதழ்களில் வெந்த காடைக்கறி செய்கிறாள். அதை சாப்பிடும் அவள் சகோதரி கெர்ட்ரூடிஸுன் காம உணர்ச்சிகள் வெகுவாகத் தூண்டப்படுகின்றன. கெர்ட்ரூடிஸ் அவளைக் காதலிக்கும் புரட்சிகரப்படையின் சிப்பாய் ஒருவனுடன் வீட்டை விடு ஓடிப்போகிறாள். அவர்கள் ஓடும் குதிரையின் மேலேயே உடலுறவு கொள்கிறார்கள். “கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல” திரைப்படத்தில் ஓடும் குதிரைமேல் கெர்ட்ரூடிஸும் அவள் காதலனும் முழு நிர்வாணமாக உறவு கொள்ளும் காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்சிகர சிப்பாய் காதலன் கெர்ட்ரூடிஸை ஒரு விபச்சார விடுதியில் சேர்த்துவிட்டு காணாமல் போகிறான். பலப் பல வருடங்களுக்குப் பின் வீடு திரும்பும் கெர்ட்ரூடிஸை எலெனா ஏற்றுக்கொள்வதில்லை. அவள் ஊரினாலும் குடும்பத்தினாலும் ஒதுக்கப்பட்டவளாக வாழ்கிறாள். ஒரு தேசத்தின் வரலாற்று நிகழ்வுகள் தனி மனித வாழ்க்கையில் எப்படியெல்லாம் குறுக்கீடுகளை நிகழ்த்துகின்றன என்றும் “கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல” நாவலை வாசிக்கலாம்.
மெக்சிகோ நிலப்பகுதியின் வெப்பமும், அந்த நாட்டு உணவின் காரமும், மக்களின் அதீத உணர்ச்சிகளும் நிறைந்த நாவல் “கொதிநிலை: சாக்லேட்டுக்கான வெந்நீர் போல”. மெக்சிகோவின் காதல் பற்றிய அதிக கவனக்குவிப்பையும் அதன் ரொமாண்டிசிச மரபினையும் வெளிப்படுத்தும் பாப்புலர் நாவல் இது என்று சில விமர்சகர்கள் லாரா எஸ்கிவெல்லின் நாவலை விமர்சிக்காமலும் இல்லை.
ஆனால் ரொமாண்டிசிசம் முழுமையாக செத்துவிட்டால் கவிதையே எழுதமுடியாது, கற்பனாவாதம் கண்டிப்பாக இலக்கியத்திற்கும், கவிதைக்கும் தேவை என்று லாரா எஸ்கிவெல்லின் சக மெக்சிகரான ஆக்டேவியா பாஸ் வாதிடவில்லையா, என்ன?
லாரா எஸ்கிவெல்லின் நாவல் மாதாந்திரத் தவணைகள், சமையல் குறிப்புகள், காதல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்களுடன் கூடிய ஒரு நாவல் என்ற துணைத் தலைப்புடன் வெளியான இந்நூல், ஒரு எளிய வீட்டுக்கையேடு போலத் தோன்றினாலும், பெண்மை சார்ந்த வெளியை தீவிரமாக மறுமதிப்பீடு செய்கிறது. சமையலறை என்பது அடிமைத்தனத்திற்கான இடம் அல்ல, மாறாக அது உயர் ரசவாதம் (alchemy), வரலாற்று நினைவு என்றும் அதிகாரத்திற்கான களம் என்ற கருத்தையும் முன்வைக்கிறது. வெங்காயம் நறுக்குதல், மசாலா அரைத்தல், மெதுவாகக் கொதிக்க வைத்தல் போன்ற செயல்கள், எந்தவொரு அரசியல் அறிக்கையையும் விட சக்திவாய்ந்த படைப்புகள், தகவல் தொடர்பு சாதனங்கள் என்று இந்நாவல் வாதிடுகிறது.
ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ், காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மரியோ வர்காஸ் யோசா, பாப்லோ நெரூதா, கார்லோஸ் ஃப்யூந்தெஸ், ஹூலியோ கொர்த்தஸார் போன்ற லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பெரும் மாஸ்டர்கள் ஆண்களாகவும் அவர்களுடைய உலகளாவிய செல்வாக்கு 1970 களிலும் 1980 களிலும் நீடித்திருந்தபோது அவர்களை மீறி பெண் எழுத்தாளர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வது பெரும்பாடாக இருந்தது. லாரா எஸ்கிவெல்லின் நாவலை லத்தின் அமெரிக்க விமர்சகர்கள் பலர் அது இலக்கிய நாவலல்ல என்றும் மார்க்வெஸிடம் நிலைபெற்றுவிட்ட மாந்தரீக யதார்த்த பாணியை மலினமாகப் போன்மை செய்யும் நாவல் என்றும் நிராகரித்தனர்.
மேலும் லாரா எஸ்கிவெல் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் உலகளாவிய எழுச்சிக்குப் பின் எழுத வந்ததால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின்பால் உலகளாவிய அளவில் ஏற்பட்ட திகட்டுதலையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும் இசபெல் ஆலெந்தெ, ஏஞ்சல்ஸ் மாஸ்ட்ரெட்டா, எலெனா பொனியடோவ்ஸ்கா ஆகிய லத்தீன் அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களுடன் லாரா எஸ்கிவெல்லின் பெயரும் சேரும்போது பெண் எழுத்துக்கு லாரா எஸ்கிவெல்லின் பங்களிப்பு என்ன என்பது தெளிவாகிறது.
மெக்சிக இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான எலெனா பொனியடோவ்ஸ்கா (Elena Poniatowska) இந்நாவலை ஆதரித்தார். முதலில் இதை ஒரு சாதாரணக் கதை என்று நினைத்த அவர், பின்னர் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். "நான் மோசமான மனநிலையுடன் படிக்கத் தொடங்கினேன்... ஆனால் 15 ஆம் பக்கத்திலிருந்து நேரம் பறந்தது... முடித்ததும் லாரா எஸ்கிவெலை வாழ்த்தினேன்... நறுக்கிய வெங்காயத்தோடு மகிழ்ச்சியால் அழ விரும்பினேன்" என்று எழுதினார்.
ஆண் எழுத்தாளர்கள் செய்யத் தவறிய ஒன்றை எஸ்கிவெல் செய்திருப்பதாக பொனியடோவ்ஸ்கா சுட்டிக்காட்டினார்: மெக்சிக பெண்களின் துயரமத்தையும் அன்றாட வாழ்க்கையையும் எஸ்கிவெல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சமையல் குறிப்பை வைப்பதன் மூலம், பெண்களின் வாய்வழி அறிவை இலக்கிய அந்தஸ்திற்கு எஸ்கிவெல் உயர்த்தினார்.
“கொதிநிலை” நாவலின் வடிவப் பரிசோதனை, அது இலக்கியம் சாராத வடிவங்களைப் பின்பற்றுவதில் உள்ளது. இது ஒரு சமையல் புத்தகத்தைப் போல பாசாங்கு செய்யும் ஒரு நாவல்.
லாரா எஸ்கிவெல்லின் நாவல் பன்னிரண்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொன்றும் ஆண்டின் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கின்றன (ஜனவரி முதல் டிசம்பர் வரை). ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறிப்பிட்ட சமையல் குறிப்புடன் தொடங்குகிறது (எ.கா., "ஜனவரி: கிறிஸ்துமஸ் ரோல்ஸ்", "மார்ச்: ரோஜா இதழ் சாஸில் காடை"). இந்த அமைப்பு novela de folletín என்ற தொடர்கதையையும் 19 ஆம் நூற்றாண்டு பெண்கள் நாட்காட்டிகளையும் நினைவுபடுத்துகிறது. இந்த பாப்புலர் நாட்காட்டி பெண்கள் பத்திரிகைகள் பெரும்பாலும் சமையல் குறிப்புகள் வீட்டு வைத்தியங்கள் ஆகியவற்றுடன் புனைகதைகளையும் வெளியிட்டன.
இந்த எளிய வடிவத்தைப் பின்பற்றுவதன் மூலம், எஸ்கிவெல் பல இலக்குகளை
சாதிக்கிறார்.
நாவலில் சமையல் குறிப்புகள் சும்மா மேம்போக்காக சேர்கப்படவில்லை. அவையே கதையை நகர்த்துகின்றன. உணவைச் சமைப்பதே அந்த அத்தியாயத்தின் நிகழ்வுகளைத் தீர்மானிக்கிறது.
மாதாந்திர நாவல் அமைப்பு வீட்டுச் சூழலுக்குரிய சுழற்சி நேரத்தைக் (cyclical time) குறிக்கிறது. இது வெளியே நடக்கும் புரட்சியின் நேர்கோட்டு வரலாற்று நேரத்திற்கு (linear time) மாறுபட்டது.
சமையல் குறிப்புகளில் வரும் "வெங்காயத்தை நறுக்கவும்", "மசாலாவை அரைக்கவும்" போன்ற வாக்கியங்கள், கதைசொல்லிக்கும் வாசகருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன.
கதையை கதையின் நாயகி டீட்டா விவரிக்கவில்லை, மாறாக அவளது அக்காள் மகள் வழிப் பேத்தி விவரிக்கிறார். தீ விபத்தில் அழிந்த டி லா கர்ஸா பண்ணையிலிருந்து தப்பிய ஒரே பொருளான சமையல் டைரியை வைத்து அவர் கதையை மீண்டும் உருவாக்குகிறார். இது பெண்களின் வரலாறு எவ்வளவு எளிதில் அழியக்கூடியது என்பதையும், வீட்டுப் பொருட்கள் மூலமாகவே அது கடத்தப்படுகிறது என்பதையும் காட்டுகிறது.
எஸ்கிவெலின் மாய யதார்த்தவாதம் கார்சியா மார்க்வெஸினுடையதிலிருந்து வேறுபட்டது. மார்க்வெஸின் உலகில் மாயாஜாலம் என்பது உலகின் ஒரு இயல்பான பகுதியாக இருக்கும். ஆனால் எஸ்கிவெலின் உலகில், மாயாஜாலம் உளவியல்ரீதியானது, உணர்வுபூர்வமானது . இந்த நாவலில் மாயாஜாலம் உணவு மூலமாகவே நிகழ்கிறது. சமையல் செய்யும் டீட்டாவின் தீவிர உணர்ச்சி உணவில் கலந்து, அதைச் சாப்பிடுபவரைப் பாதிக்கிறது. இது அன்போடு சமைப்பது என்ற உருவகத்தின் மிகைப்படுத்தப்பட்ட வடிவம்.
உனக்குக் கருத்து சொல்ல உரிமையில்லை என்று தாயால் அடக்கப்படும் டீட்டா, உணவு மூலம் பேசுகிறாள். வாந்தி, கட்டுப்பாடற்ற காமம், சோகம் போன்ற விளைவுகள் அவரது அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகளாக மற்றவர்வர்களைப் பீடீக்கின்றன.
லத்தின் அமெரிக்க இலக்கியத்தின் ஆண் பிதாமகர்கள் நாட்டின் சர்வாதிகாரிகளைப் பற்றியும் புரட்சிகளைப் பற்றியும் நாவல்கள் எழுதினார்கள் என்றால் லாரா எஸ்கிவெல் வீட்டை பற்றியும் வீட்டின் சர்வாதிகாரியைப் பற்றியும் இந்த நாவலில் பேசுகிறார். அம்மா எலெனா சர்வாதிகாரி என்றால், டீட்டா ஒரு புரட்சியாளர். ஆனால் அவளது ஆயுதம் துப்பாக்கி அல்ல, கரண்டி. சமையலறையைத் தனது கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி, உணவின் மூலம் அடக்குமுறையாளர்களின் உடல்களை அவள் ஆக்கிரமிக்கிறாள். புரட்சிப் படையில் ஜெனரலாகும் கெர்ட்ரூடிஸ் மெக்சிகோவின் புதுமைப் பென்ணை அடையாளப்படுத்துகிறாள். அவள் ஆணின் களமான போர்க்களத்திற்குள் நுழைகிறாள். அவளால் சமையல் செய்ய முடியாது. தனது அடையாளத்தைத் தக்கவைக்க அவள் டீட்டாவின் சமையல் குறிப்புகளைச் சார்ந்திருக்கிறார்.
மெக்சிக உணவை வெறும் தெரு உணவு என்ற நிலையிலிருந்து கலாச்சாரப் பாரம்பரியமாக உலக அரங்கில் உயர்த்த இந்நாவல் உதவியது. உணவு என்பது ஆழமான உணர்வு , மாயாஜாலத்துடன் தொடர்புடையது என்றும் இது உலகுக்குக் கற்பித்தது. கரோல், தாமஸ் கிறிஸ்டென்சன் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பு (1992) நாவலின் வெற்றிக்கு முக்கியக் காரணம். இது நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனைப் பட்டியலில் ஓராண்டுக்கும் மேலாக இருந்தது. தொடர்ந்து “கொதிநிலை” முப்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்ப்பட்டு உலக அளவில் முதன்மையான படைப்புகளில் ஒன்றாக இருந்துவருகிறது.
செப்டம்பர் 30, 1950 அன்று மெக்சிகோ சிட்டியில் பிறந்த எஸ்கிவெல், நவீனத்துவமும் பாரம்பரியமும் கலந்த ஒரு சூழலில் வளர்ந்தார். அவர் வளர்ந்த வீடு நவீனமானது, ஆனால் சாலையின் மறுபுறம் தேவாலயங்கள் சட்டவிரோதமாகக் கருதப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட அவரது பாட்டியின் பழைய வீடு இருந்தது. அந்தப் பழைய வீட்டில் சமையலறைக்கும் சாப்பாட்டு அறைக்கும் நடுவில் ஒரு மறைவான வழிபாட்டுத் தளம் இருந்தது. புனிதமான இடத்திற்கும் (வழிபாட்டுத் தளம்) வீட்டு வேலை நடக்கும் இடத்திற்கும் (சமையலறை) இடையிலான இந்த நெருக்கமே எஸ்கிவெல்லின் புனைகதையின் மையப் படிமமாக மாறியது. கொட்டைகள், வெங்காயம் பூண்டு ஆகியவற்றின் வாசனை, வழிபாட்டுத் தலத்தின் வாசனையோடு கலந்திருந்த அவரது வீட்டுச்சூழல் ஆன்மீகமும் சமையலும் பிரிக்க முடியாத உணர்வுபூர்வமான புனைவாக அவருடைய எழுத்தில் மாறியது.
1960களிலும் 70களிலும் வளர்ந்த எஸ்கிவெல், தன்னை ஒரு ஹிப்பி என்று அடையாளப்படுத்திக் கொண்டார். மெக்சிக அரசின் சர்வாதிகாரப் போக்கு, முந்தைய தலைமுறையின் கத்தோலிக்க தார்மீக நெறிகளள் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கிய எதிர் கலாச்சார இயக்கங்களை நோக்கி அவர் ஈர்க்கப்பட்டார். இந்த இளமைக்கால கிளர்ச்சி உணர்வை நாவலின் நாயகி டீட்டாவிடம் காணலாம். தனது தாயார் எலெனாவின் தன்னிச்சையான சட்டங்களை எதிர்ப்பவராக டீட்டா சித்தரிக்கப்படுகிறார். நவீனத் தொழில்மயமாக்கலுக்கு எதிராக உண்மையான அல்லது பூர்வீகவாழ்க்கை முறைகளை மீட்டெடுக்கும் எதிர் கலாச்சார உந்துதல், நாவலில் நவீன வசதிகளை விட பாரம்பரிய சமையல் முறைகளை உயர்த்திப் பிடிப்பதில் வெளிப்படுகிறது.
நாவலாசிரியர் ஆவதற்கு முன்பு, எஸ்கிவெல் ஒரு கல்வியாளராக இருந்தார். அவர் மெக்சிகோ சிட்டியில் ஆசிரியர் பள்ளியில் பயின்று, மழலையர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் கற்பித்தல் அனுபவமே நாவலின் எளிமையான நடைக்குக் காரணம் என்று விமர்சகர்கள் கூறினாலும், உண்மையில் இதுவே அவரது கதைசொல்லலின் வலிமை. ஒரு ஆசிரியராக, நேரடி உணர்வுபூர்வமான ஈடுபாடு, வாய்வழி மரபு மூலம் கவனத்தை ஈர்ப்பதன் அவசியத்தை எஸ்கிவெல் கற்றிருந்தார். அவர் தனது மாணவர்களுக்காக நாடகங்களை எழுதத் தொடங்கினார், அதில் கதைசொல்லலை ஒரு முதன்மையான கற்பித்தல் கருவியாகப் பயன்படுத்தினார்.
குழந்தைகள் நாடகத்துடனான இந்த அனுபவம், கதைசொல்லலின் நிகழ்த்துக்கலை (performative) அம்சத்தின் மீது அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது—அதாவது ஒரு கதை புரிந்து கொள்ளப்பட வேண்டுமானால், அது நிகழ்த்தப்பட வேண்டும். இது “கொதிநிலை” நாவலை நேரடியாகப் பாதித்துள்ளதை நாம் வாசிக்கலாம். இந்த நாவலில் வாசிப்பு என்பது சமையல் செய்யும் செயலாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வாசகர் வெறும் பார்வையாளர் அல்ல, மாறாக டீட்டாவின் சமையலறையில் ஒரு மாணவர் போல, சமையல் குறிப்புகள் மூலம் வழிநடத்தப்படுகிறார்.
1970கள் மற்றும் 80களின் பிற்பகுதியில், எஸ்கிவெல் கல்வியிலிருந்து திரைக்கதை எழுதுவதற்கு மாறினார். ஹாலிவுட் படங்களுக்குப் புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான அல்போன்சோ அராவிடம் (Alfonso Arau) திரைக்கதை பயிலரங்கில் சேர்ந்தார். இந்த ஆசிரியர்-மாணவி உறவு படைப்பு-காதல் உறவாக மலர்ந்தது; அவர்கள் திருமணம் செய்து கொண்டு பல திட்டங்களில் இணைந்து பணியாற்றினர். குறிப்பாக Chido Guan, el tacos de oro (1985) என்ற படத்திற்கு எஸ்கிவெல் திரைக்கதை எழுத, அராவ் இயக்கினார். இப்படத்தின் வெற்றி, கலாச்சாரத் தன்மையை இழக்காமல் வெகுஜன மக்களையும் கவரும் கதைகளை உருவாக்கும் எஸ்கிவெலின் திறனை உறுதிப்படுத்தியது.
“கொதிநிலை” நாவல் முதலில் ஒரு திரைக்கதையாகவே உருவாக்கப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். படத் தயாரிப்பிற்கு நிதி கிடைக்காதபோது, எஸ்கிவெல் அதை நாவலாக மாற்றினார். நாவலின் வேகமான ஓட்டம், காட்சிப் பிரம்மாண்டம் (பண்ணையை மூடும் படுக்கை விரிப்பு, தீப்பற்றி எரியும் குளியலறை), குறைவான உள்மன ஓட்டங்கள் ஆகியவற்றில் இந்த திரைக்கதையின் டிஎன்ஏ (screenplay DNA) இருப்பதை ஒருவர் வாசிக்க முடியும். 1992 இல் அராவ் இயக்கத்தில் வெளியான இந்த நாவலின் திரைப்பட வடிவம் உலகளாவிய வெற்றியைப் பெற்றது. இது புத்தகத்தின் விற்பனையை மேலும் அதிகப்படுத்தியது.
கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் எஸ்கிவெலின் ஈடுபாடு எழுத்துக்களோடு நின்றுவிடவில்லை. 2009 இல் மெக்சிகோ சிட்டி உள்ளூர் கவுன்சிலுக்கும், 2015 இல் 'மொரேனா' (Morena) கட்சி சார்பாக மெக்சிகோ நாடாளுமன்றத்தின் கீழவைக்கும் (Chamber of Deputies) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு அரசியல்வாதியாக, கலை, கலாச்சாரம், சமூக நீதி ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். உலகமயமாக்கலால் அழியும் உள்ளூர் அறிவு (சமையல் குறிப்புகள், பூர்வீக மருந்துகள்), சர்வாதிகாரத்திற்கு எதிரான தனிமனித சுதந்திரம் ஆகிய நாவலின் மையக் கருத்துக்களே அவரது அரசியல் பணிகளிலும் எதிரொலிக்கக்கூடியனவாக இருக்கின்றன.
இந்த நாவலில் வரும் அத்தனை சமையல் குறிப்புகளும் உண்மையானவைதானா அல்லது புனைவுகளா என்பதற்கான விடை ஒரு அத்தியாயத்தில் வரும் தீக்குச்சி தயாரிப்பைப் பற்றிய குறிப்பில் இருக்கிறது. தீக்குச்சி உணவுப் பதார்த்தமா, என்ன? மேலும் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த நாவலின் இறுதியில் பதிப்பகத்தார் இந்த நாவலிலுள்ள சமையல் குறிப்புகள் சமைத்துப் பார்க்கப்படாதவை எனப் “பொறுப்புத் துறப்பு” அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்கள்.
டாக்டர் ஜான் பிரவுனின் பாட்டி மார்னிங் லைட் (Morning Light) மூலம் இந்த நாவலில் அறிமுகப்படுத்தப்படும் தீக்குச்சிகளின் கோட்பாடு முக்கியமானது. மார்னிங் லைட் ஒரு கிக்காபு (Kikapu) பழங்குடிப் பெண். அவர் ஜான் பிரவுனுக்கு ஒவ்வொருவர் உள்ளும் தீக்குச்சிகள் உள்ளன; அன்பானவரின் மூச்சுக்காற்று, உணவு, இசை ஆகியனவே காதலிக்கப்படுபவரின் உள்ளார்ந்த நெருப்பை ஏற்றத் தேவை எனக் கற்பிக்கிறார். அத்தகைய பழங்குடி அறிவும் இந்த நாவலில் உள்ளார்ந்து இருப்பது ஒரு நாட்டுப்புறவியலாளனாக எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிப்பது. See less
