Tuesday, July 7, 2026

தமிழ் இலக்கியத்தில் அரசியல் நனவிலி

 

என்.ஶ்ரீராமின் ‘துருத்தி நடனம்’ தொகுப்பில் தலைப்புக் கதை என்.ஶ்ரீராமின் புனைவுலகுக்கான திறவுகோல் கதை எனலாம். கதையோட்டத்தோடு இழைந்த இயற்கை வருணனைகள், ஊடு பாவாகக் கோர்க்கப்படும் அரிச்சந்திரன் கதை, இறந்த கன்றுகுட்டியின் உடல் துருத்தியாகச் செய்யப்பட்டு தாய்ப்பசுவிடம் பால் கறக்கப் பயன்படுத்துதல் கதையின் மைய உருவகமாதல், பெண்ணை வைத்து ரேக்ளா பந்தயத்தில் சூதாடும் ஆண்கள், பெண்ணின் இறுதி வெற்றியில் அடங்கியிருக்கும்  வாழ்வின் ஆழமான அங்கதங்கள் என என்.ஶ்ரீராமின் கதை அவருடைய கதைகளின் நெசவுகள் அனைத்தையும் கொண்டதாக இருக்கிறது. 

சுதாகர் கத்தக்கின் தொகுப்பில் ‘திருமணஞ்சேரி’ அபாரமான கதை.  ‘திருமணஞ்சேரி’ திருமணப் பந்தம் என்பதன் நடுத்தர வர்க்க புனிதங்கள் அனைத்தையும் கலைத்துப் போட்டு விடுகிறது. தெய்வுவை அம்சாவைக் கட்டிக்கொள் அல்லது இரண்டு பெண்களும் ஒரே ஆணைக் கட்டிக்கொண்டு பிரியமா அடிச்சு பிடிச்சு கிடக்கலாம் என்று அறிவுரை சொல்லும் தாய். கன்னி கழியவேண்டும் என்பதற்காகத்தானே திருமணஞ்சேரிக்கு வந்தாய் எனக் கேட்ட முரட்டு ஆணிடம் தன்னை இழக்கும் தெய்வு, பூட்டுக்காரனோடு புளியமரத்தடியில் கலவி கொண்டு கிடக்கும் சின்னம்மா, என வேறொரு தமிழ்நாட்டின் நாட்டுப்புற உலகம் சுதாகர் கத்தக்கின் கதையில் விரிகிறது. 

என்.ஶ்ரீராமும், சுதாகர் கத்தக்கும் தமிழின் அரசியல் நனவிலியை எழுதுகிறார்கள் என்பது எனது கருதுகோள்; அந்த நனவிலியின் மையத்தில் பெண் இருக்கிறாள், எல்லாவற்றையும் கலைத்துப்போடும் சக்தியாக, அதேசமயம் அதன் பலிகடாவாகவும். 

மேற்கண்ட கருதுகோளை மேலும் விரிவாக்க புரத வண்ணார்களின் வாழ்வியலை எழுதிய இமயத்தின், “கோவேறு கழுதைகள்”, ச.பாலசந்திரனின் “சோளகர் தொட்டி”, செஞ்சி தமிழினியனின் 'ஊத்தாம்பல்லா' , என்.ஶ்ரீராமின் பெரு நாவல் “இரவோடி” ஆகியவற்றைச் சேர்க்கவேண்டும். 

ஶ்ரீராமின் “இரவோடி” சாமக்கோடாங்கிகளின் வாழ்வியலைப் பிரமாதமாகப் பதிவு செய்கிறது. "கோவேறு கழுதைகள்" பேசும் புரத வண்ணார்களை வண்ணார்களுக்கு வண்ணார்கள் என்று அழைப்பார்கள். அவ்வளவுதூரம் ஜாதிய அடுக்கில் கீழே புறந்தள்ளப்பட்டவர்கள். “ஊத்தம்பல்லா” எலி பிடிப்பவர்கள், பாம்புப்பிடாரன்கள் என்று அறியப்பட்ட இருளர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. 

என். ஶ்ரீராமின் “இரவோடி” நாவலை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக வாசித்துவருகிறேன். இன்னும் முடித்தபாடில்லை. ஶ்ரீராமின் அபாரமான கொங்கு நிலக்காட்சி, இயற்கை வருணனைகள், மனித வாழ்வின் கூரிய அங்கதங்களைப் புனைவுச் சம்பவங்களின் வழி சொல்லுதல், இயல்பாகப் புனைவையும் புராணங்களையும், தொன்மங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும் இணைத்தல், கொங்கு வட்டாரப் பேச்சு வழக்கினை வசனங்களில், வாய்மொழிப் பேச்சின் கவித்துவம் குறையாமல் கொண்டுவருதல் போன்ற, நான் என்.ஶ்ரீராமின் எழுத்தில் வியக்கின்ற கலை அம்சங்கள் இந்த நாவலிலும் இருக்கின்றன. 

இந்த நாவல்களை ஜெயமோகனின் “ஆலம்”, “படுகளம்”  “தற்கணம்”, “காவியம்”, “மரீஃபா” ஆகிய சமீபத்திய நாவல்களோடு ஒப்பிடும்போதுதான் ஜெயமோகனின் புனைவுலகம் எவ்வளவு செயற்கையானது, வலிந்து செய்யப்பட்டது, வணிகசினிமாத் தனமானது, எந்திரத்தனமானது,  தத்துவத்தைப் பேசுவதாகப் பீற்றிக்கொண்டு கேளிக்கையின் படுகுழியில் விழுவது என்பது தெரியவரும்.