Friday, August 21, 2026

சியோல் : உண்குச்சி (chopstick) மகாத்மியம்




ஜெர்மானிய திரைப்பட இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் ஒரு முறை தன்னுடையை ஷூவைச் சாப்பிடுவதாக சவால் விட்டு அதற்காக உண்மையாக  முயற்சி செய்து தோற்றுப்போனார். ஷூவைச் சாப்பிடுவதாகச் சொன்ன ஹெர்சாக் அந்த நாளின் காலையிலிருந்தே வெறுங்காலுடன் சுற்றிக்கொண்டிருந்தார். சாப்பிடப்போவதை அணிந்திருக்க முடியாதல்லவா. ஷூவை வேகவைத்து சாப்பிட  முயற்சி செய்வதை “Werner Herzog Eats HIs Shoes” என்ற ஆவணப்படமாகவும் எடுத்திருக்கிறார்.  

ஆண்டி வார்ஹ்ல்  ( Andy Warhol), ‘My name is Andy Warhol, I just finished eating a hamburger’ என்றொரு photo art installation செய்திருக்கிறார். நான் காலி கொக்கோகோலா பாட்டில்களின் நடுவே படுத்திருப்பதாக ஒரு புகைப்படம் இருக்கிறது. 

ஹெர்சாக், வார்ஹ்ல் ஆகியோரின் வாழ்நாள் தருணங்களுக்கு சற்றும் குறைவானதல்ல நான் சியோல் நகரில் கொரிய உணவுப் பதார்த்தங்களை உண்குச்சிகளால் சாப்பிட்டு இன்புற்ற தருணங்கள்.  

உண்குச்சிகள்  வாழ்க்கையின் தருணங்களைப் போலவே பல ரூபங்களில் வரும். பல சமயங்களில் அவை  உணவகங்களில் தரப்படும் எளிதான மரக்குச்சிகள்; உலோகத்தால் ஆனவை வேறு ரகம். அவை கோ யுன்னின் நீண்ட கவிதைகளை  விடக் கனமானவை.  மரக்குச்சியோ, உலோகக்குச்சியோ உண்குச்சிகள்  ஒரு இருத்தலியல்வாதியின்  உணவுக் கருவி: அவை உங்களுக்கு உணவு உட்கொள்ள உதவுவது போல் ஒருபோதும் நடிக்காது. அதனால் அவை உங்களைப் பரிதாபமாகப் பார்க்கும் உங்கள் சடைநாயைப் போலவே நேர்மையானவை. “வேறொன்றாக மாறுவதன் சாஸென்” (Zazen தியானம்) என்றொரு கவிதையை நான் எழுதியிருப்பது உங்களுக்கு நன்றாகத் தெரியுமல்லவா அதில் “சாஸென் என்பது எந்தவொரு முடிவுக்கான வழிமுறையும் அல்ல" என்று நான் வலியுறுத்தியிருக்கிறேனல்லவா , இந்த உண்குச்சிகளும் அப்படித்தான். அவை உணவிற்கான ஒரு வழிமுறை அல்ல. அவை காண்ட்டிய thing-in- itself. அதாவது அவை தங்களுக்குள்ளேயே ஒரு முழுமையான  இறுதி நிலையை அடைந்தவை.

ஹான் காங்  தனது 'தி வெஜிடேரியன்'  நாவலில் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்துடன் தொடங்குவார்: "என் மனைவி சைவமாக மாறுவதற்கு முன்பு, நான் அவளை எல்லா வகையிலும் முற்றிலும் சாதாரணமானவளாகவே நினைத்தேன்."  (இந்த நாவல் சமயவேலின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்திருக்கிறது) கொரிய  உண்குச்சிகளை சந்திப்பதற்கு முன்பு என் கைகளைப் பற்றி நானும் அப்படித்தான் நினைத்தேன். சியோலுக்கு வருவதற்கு முன்பு, சாப்பிடுவது என்பது ஒரு சாதாரணமான விஷயம் என்று நான் நினைத்து இறுமாந்திருந்தேன். சியோல் பயணத்திற்குப் பிறகு, வெற்றிகரமாக வாய்க்குள் செல்லும் ஒவ்வொரு பிடியையும் ஒரு பேரதிசயமாகவும், தவறவிடுகிற ஒவ்வொரு கவளத்தையும் ஒரு ஜென் புதிராகவும் (koan ) பார்க்கிறேன்.

சியோல்  அசைவப் பிரியர்களின் சொர்க்கபுரி. நான் சைவ உணவு உட்கொள்பவன் என்று சொன்னவுடன் என்னைச் சுற்றியுள்ள கொரிய பொம்மைப்பெண்கள் அனைவரும் என்னைக் கழிவிரக்கத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் புல்லுக்கட்டுகளையும், வினிகரில் ஊறிய முட்டைக்கோஸ்களையும், வெங்காயங்களையும், கீரைகளையும், கடற்பாசிகளையும் லாலலோ லாலலோ என்று சொல்லியபடி வைக்கிறார்கள். 

 'ஜாப்சே' (japchae),  ஹெராக்லிட்டஸின்  நதியைப் போலச் செயல்படும் மரவள்ளிக்கிழங்கு நூடுல்ஸ்: நீங்கள் ஒரே நூடுல்ஸை இரண்டு முறை தூக்க முடியாது.  ஜென் மனோநிலையில் கோ யுன், "ஒரு நெல்மணி என்பது பிரபஞ்சத்தின் ஒரு துகள். ஒன்றை கீழே போட்டால் நீங்கள் ஒரு நட்சத்திரத்தையே கீழே போடுகிறீர்கள்" என்று எழுதியிருக்கிறார். நான் கண்ணாடி நூடுல்ஸின் முழு விண்மீன் கூட்டத்தையே, உண்குச்சிகளால் எடுக்க முயன்று கீழே போட்டேன். என்னைச் சுற்றிலும் லாலலோ லாலலோ அல்லோகலம். 

சியோலில் உள்ள உணவு மேஜை லட்சிய உலகின் சொர்க்கம்.  கோ யுன்னின் 'பத்தாயிரம் வாழ்வுகள்'  தொகுதியைப் போல, 'பஞ்சான்' (Banchan - Korean side dishes) இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கின்றன; ஒவ்வொரு சிறிய தட்டும் ஒரு மறுபிறவி போன்றது. கிம்ச்சி  ஒரு புரட்சியாளன்;  முளை கட்டிய பாசிப்பயறு  துறவிகள்; மீன் கேக்  முதலாளித்துவ வர்க்கம். மீன் கடற்பாசியைப் போல சைவம்தான் லாலலோ லாலலோ.  மேலும் மேலும் பஞ்சான்கள் என் மீது கொட்டப்படுகின்றன. கோ யுன் எழுதுகிறார், "சாதக் கிண்ணம் காலியாக உள்ளது. இதயம் நிறைந்துள்ளது."  என் இதயம் வெட்கம், ஏக்கம் கடுங்கார மிளகாய் சட்னியால் (gochujang) நிறைந்திருக்கிறது.

சிவப்பு சாஸில் நனைத்த அந்த உருளை வடிவ அரிசி கேக்குகளான 'டாக்போக்கி'யில் (tteokbokki)  தனித்துவமான பயம் ஒளிந்திருக்கிறது; அவை  மீனின் வழுவழுப்புத் தன்மையையும்,  சிறிய கிரகத்தின் அடர்த்தியையும் ஒன்றாகக் கொண்டிருக்கின்றன. ஹான் காங் தனது The White Book நாவலில், "பனியின் வெண்மை, வெற்றுப் பக்கத்தின் வெண்மை, துணியால் சுற்றப்பட்ட உடலின் வெண்மை" என்று எழுதுகிறார். என் உண்குச்சியிலிருந்து தப்பிக்கும்  ஒற்றை அரிசி கேக்கின் வெண்மையை அவர் குறிப்பிட மறந்துவிட்டார், அதுதான் எல்லாவற்றையும் விட மிகவும் பயமுறுத்தும் வெண்மை. அது தூய்மையான சாத்தியக்கூறுகளின் வெண்மை; "நான் சுதந்திரமாக இருக்க விதிக்கப்பட்டவன்" என்று கூறும் ஒரு சிறிய, உருளை வடிவ சார்த்தரின்  வெண்மை. அதாவது, மேஜைக்கு அடியில் உருண்டோடுவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய கவிதை ஒன்றில்  இதற்கான ஒரு சொற்றொடர் உள்ளது: "இருத்தலின் சாத்தியமான திரும்புதல்" (possible reversion of existence). மூன்றாவது அரிசி கேக்கும் என்னை விட்டுத் தப்பிய பிறகு, இருத்தலின் ஒரு சாத்தியமான திரும்புதலைப் பற்றி நான் யோசித்தேன்,—ஒருவேளை நான் கட்டைவிரல் இல்லாத  உயிரினமாக,  கொரிய  உணவாக அல்லது நிர்வாண நிலையை அடையும்  மிகச்சிறிய கிம்ச்சி துண்டாக மாறிக்கொண்டிருக்கிறேனோ என்றும் தோன்றியது.

உண்குச்சிகள்  நமது சுயத்தின் நீட்சி.  சியோலில் அந்த சுயம் என்பது ஒரு விகாரமான, பேராசை பிடித்த விலங்காக வெளிப்படுகிறது. ஷோபென்ஹர்  விருப்பம் குருட்டுத்தன்மையுடையது என்பார். என் உண்குச்சிகளும் குருடாக இருந்தன, அதோடு  அவை லேசான மூட்டுவலியால் பாதிக்கப்பட்டது போலவும் இருந்தன. முள்ளங்கி கிம்ச்சியின்  ஒரு துண்டை இறுக்கிப் பிடிக்க நான் செய்த ஒவ்வொரு முயற்சியும், சார்த்தரை  அதிகமாகப் படித்துவிட்டு, அனைத்து வகையான பிடிமானங்களையும் நிராகரிக்க முடிவு செய்த ஒரு சிறிய, இளஞ்சிவப்பு நிற இருத்தலியல்வாதியைப் போல, அந்த முள்ளங்கி மேஜையின் குறுக்கே ஓடித் தப்பிப்பதில்தான் முடிந்தது. முள்ளங்கி உறுகாயின் மேல் என் கை வட்டமிடுவதை விவரிக்க, என் கவிதை வரியான "துரோகத்தின் தற்காலிக முன்னங்கால்"  என்பது மட்டுமே மிகவும் பொருத்தமாகும். அந்தக் கவிதை இதையும் குறிப்பிடுகிறது: "சுய விருப்பம் என்பது ஒரு விசித்திரமான யோசனை, / அமைதி இல்லாமல் மனச்சாட்சி / முழுமையாக இருக்கவே முடியாது." பதினேழு வகையான 'பஞ்சான்'களும் (banchan) இரண்டே இரண்டு உண்குச்சிகளும் மட்டுமே இருக்கும்போது, சுய விருப்பம் என்பது உண்மையிலேயே ஒரு விசித்திரமான யோசனைதான். அமைதி இல்லாமல் மனச்சாட்சி இருக்க முடியாது—எனவே நான் கிம்ச்சி என்னை மதிப்பிட அனுமதித்தபடி, மிக அமைதியாக அமர்ந்திருந்தேன். லாலலோ லாலலோ.

ஹான் காங்கின் நாவலில் வரும் அந்த சைவப் பெண், வன்முறைக்கு எதிரான போராட்டமாக இறைச்சியை மறுக்கிறாள். நானோ இறைச்சியை உண்குச்சிகளால்  பிடிக்க முடியாததால் அதை மறுத்தேன். அதன் விளைவு கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருந்தது: ஒரு தட்டு 'புல்கோகி' (bulgogi) தொடப்படாமல் அப்படியே இருந்தது; கொள்கையினால் அல்ல, என் திறமையின்மையால். 

ஹான் காங் 'தி வெஜிடேரியன்' நாவலில் எழுதுகிறார், "எனக்கு ஒரு கனவு வந்தது. நான் அடர்ந்த மரங்கள் கொண்ட ஒரு காட்டில் இருந்தேன். அந்த மரங்கள் எல்லாம் நானாகவே இருந்தன." எனக்கும் ஒரு கனவு வந்தது, அதில் நான் சாப்ஸ்டிக்ஸ் நிறைந்த ஒரு காட்டில் இருந்தேன். அந்த உண்குச்சிகள் எல்லாம் நானாகவே இருந்தன, நாங்கள் அனைவரும் ஒரே ஒரு துண்டு வேகவைத்த டோஃபுவை  கீழே போட்டுக் கொண்டிருந்தோம். என்னுடைய அந்தக் கவிதை சொல்கிறது, "வடிவத்திற்கு சவால் விடும் தூரிகை வீச்சு" (the brushstroke in defiance of form). என் உண்குச்சி உத்தியும் சரியாக அப்படித்தான் இருந்தது—ஒரு தூரிகை வீச்சு ஒரு எள் விதையை எடுக்க முயற்சிப்பதும், அதன் வடிவம் புவியீர்ப்பு விசையாகவும் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி வடிவத்திற்கு சவால் விடும் தூரிகை வீச்சாக அது இருந்தது. 

கொரிய உண்குச்சிகள் பிடிமானத்தின் வலிமை என்பது ஒரு தார்மீகப் பண்பு என்று கற்றுக்கொடுக்கின்றன. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வேறுபாடு ஒரு மில்லிமீட்டரின் ஒரு பகுதியும், வாழ்நாள் முழுவதுமான பயிற்சியும்தான் என்பதை அவை கற்றுக்கொடுக்கின்றன. பல ஆண்டுகள் துறவியாக வாழ்ந்த கோ யுன், தோல்வியின் மதிப்பை அறிந்திருந்தார். அவர் எழுதுகிறார், "மிக எளிமையான கருவிதான் மிகக் கடினமான மாஸ்டர்." அவர் இதை உண்குச்சியைப் பற்றித்தான் எழுதினாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் எழுதியிருக்க வேண்டும்.  என்னுடைய அந்த கவிதை சொல்கிறது, "உள்ளுணர்வு தர்க்கத்தை வெல்லும், / அனைத்தும் / மாறும் நிலையில் உள்ளன." நான் உள்ளுணர்வை முயற்சித்தேன். உண்குச்சிகள் மாறும் நிலையில் இருந்தன—முதலில் ஒரு இடுக்கி  போல, பின்னர் ஒரு கவண்  போல, பிறகு ஒரு சிறிய காகிதப் பறவை போல மாறின. தர்க்கம் கரண்டியைப் பயன்படுத்து என்றது. உள்ளுணர்வு விரல்களைப் பயன்படுத்து என்றது. உணவகமோ, எப்படியிருந்தாலும் பில் அதேதான் என்றது. 

ஹான் காங் தனது Human Acts  நாவலில், "இறந்தவர்கள் இறந்துவிடுவதில்லை. அவர்கள் காற்றில், மழையில், மரங்களில் வாழ்கிறார்கள்" என்று எழுதுகிறார். 'கிம்பாப்'பை (gimbap) எடுக்க நான் செய்த தோல்வியுற்ற முயற்சியில் சிதறிய எள் விதைத் துகள்களுக்கும் இது பொருந்தும். அவை மறைந்துவிடவில்லை. அவை என் மடியில், என் காலணிகளில், உணவகத் தரையின் இடுக்குகளில் வாழ்கின்றன. அவை கடந்த கால உணவுகளின் பேய்கள், நான் ஒவ்வொரு முறை கால்களை மாற்றிப் போட்டு உட்காரும் போதும் அவை என்னை உலுக்கப் போகின்றன. என்னுடைய அந்தக் கவிதை சொல்கிறது, "துக்கத்திற்கு நிறமில்லை" . இது எனக்கு வசதியாகப் போய்விட்டது, ஏனென்றால் இப்போது என் சட்டை பல நிறங்களைக் கொண்டுள்ளது, அவை எல்லாமே சிவப்பு மிளகாய் சட்னி (gochujang) கறைதான். என்னுடைய அந்தக் கவிதை, "பருத்திப் பஞ்சு போன்ற புன்னகையின் மேல் கடவுளின் எலும்பாலான இறக்கையின் கைரேகை"  என்றும் குறிப்பிடுகிறது. அந்த கைரேகையை நான் என் முகத்தில் கண்டேன்; அது என் கன்னத்தில் ஒட்டியிருந்த ஒரு சோற்றுப் பருக்கை.

ஒரு கட்டத்தில்,  நல்ல  உணவின்  நடுவே, நான் ஒரு பலவீனமான ஞானோதயத்தை  அடைந்தேன். நான் ஒரு ஒற்றை சோற்றுப் பருக்கையை எடுத்து, என் நாவில் வைத்து, பிரபஞ்சத்தைப் புரிந்து கொண்டேன். பின்னர் அந்த உண்குச்சிகளை கீழே போட்டேன். கோ யுன் எழுதுகிறார், "ஞானோதயம் என்பது ஒரு சேருமிடம் அல்ல. அது ஒரு வீழ்ச்சி" மேஜையின் மேல் குச்சிகள் விழுந்து எழுப்பிய சத்தம் தான் என் சூத்திரம் . ஹான் காங்கின் 'தி வெஜிடேரியன்' நாவலில், ஒரு கதாபாத்திரம் மரமாக மாறக் கனவு காண்கிறது. நானோ ஒரு கரண்டியாக மாறக் கனவு கண்டேன். சியோலில் உங்களை மதிப்பிடாத ஒரே உணவுக் கருவி கரண்டி மட்டும்தான். கரண்டி என்பது சாப்பிட உதவும் பாத்திரங்களில்  போதிசத்துவர் போன்றது: அது ஏன் என்று கேட்காமல் சூப்பைத் சுமந்து செல்கிறது.

ஒரு முறை நான் என் உண்குச்சிகளால் வினிகரில் நனைந்த முட்டைகோஸை எடுத்துவிட்டேன். லாலலோ லாலலோ  லாலலோ லாலலோ லாலலோ லாலலோ  லாலலோ லாலலோ எனப் பொம்மைப்பெண்கள் பாடுகிறார்கள். ஆயிரம் கேமராக்கள் கண் சிமிட்டுகின்றன. அதில் ஒரு ஒளிப்படம் என்னிடம் தங்குகிறது. ஒரு பொம்மைப் பெண்ணின் உதட்டு சாயக் கறையுடன். 

என்னுடைய அந்தக் கவிதை, "புளிய மரத்திலிருந்து / நீல மார்புக் குருவி பாடுகிறது" என்று முடிகிறது, அல்லது மீண்டும் அங்கிருந்தே தொடங்குகிறது. கோ யுன் சொல்கிறார், "உலகம் ஒரு ஒற்றை மலர். ஒரு தேனீ அது எப்படி என்று கேட்பதில்லை." நான் ஒரு தேனீ அல்ல. நான் இரண்டு உண்குச்சிகளையும், வழுக்கும் நூடுல்ஸ் கிண்ணத்தையும் கொண்ட ஒரு மனிதன், நான் ஒவ்வொரு முறையும் அது எப்படி நழுவியது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். மனிதனாக இருப்பது என்பது “நினைவை வைத்திருக்கும் ஒரு உடல்"  என்று ஹான் காங் எழுதுகிறார். என் உடல் சியோலை நினைவில் வைத்திருக்கிறது: அந்த மிளகாய், அந்த உண்குச்சிகள், அந்த வீழ்ச்சி. பிரபஞ்சம் இறுதியாக நான்  இருக்கிறேன் என்று நம்பும் வரை—அல்லது யாராவது என்னிடம் ஒரு முட்கரண்டியை  நீட்டும் வரை, அல்லது புளிய மரத்திலிருந்து நீல மார்புக் குருவி பாடும் வரை, இதில் எது முதலில் நடந்தாலும்—நுண்குச்சியால் உணவை எடுப்பதை நான்  மீண்டும் செய்வேன், பருக்கை பருக்கையாக, துளித் துளியாக.