Friday, September 18, 2026

அகமும் புறமும் : பயணம் எனும் உருவகம்




நான் நானாகியதை பயணமாக உருவகிப்பதிலுள்ள பிழை என்னவென்றால் அது ஒரு நேர்கோட்டினை உடனடியாக கண்முன் விரிக்கிறது. இலக்கும் குறிக்கோளும் கண் முன் தெரிகின்றன. அர்ஜுனனின் காண்டீபத்திலிருந்து புறப்பட்ட அம்புபோல கிளம்பி இலக்கினைக் கிழித்து நான் நானாகிவிடலாம் என்று மாயத்தோற்றம் கிடைக்கிறது. காண்ட் What is enlightenment? என்ற கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சோம்பேறித்தனமும் கோழைத்தனமும் இல்லாதிருந்தால் விழிப்புணர்வின் ஞானத்தினை அடைந்துவிடலாம் என்பதாக ஒரு தோற்றம் கிடைக்கிறது; எக்கி எக்கி குதித்துக்கொண்டிருந்தால் கனி கைக்கு எட்டாமலா போகும்? குருவுக்கு பாதபூஜை செய்து கொண்டேயிருந்தால் பயணமும் ஆகுதலும் சித்திக்காமலா போகும்? ஆகுதலின் இலக்கு, அடைதலின் இலக்கு மரணம் எனினும் மரணம் தாண்டுவது முடியாத காரியமா என்ன? பயணம் மேற்கொண்டாலும் சரி, பயணம் மறுத்து உறைந்தாலும் சரி காலத்தின் சுழிப்பு நானாகுதலை நிறைவேற்றியே தீரும். 


நான் நானாகியது எனும்போது இடமிருந்து வலம் எழுதுவதுபோல நானாவதற்கு ஒரு திசை இருப்பது போலவும், நானாகும் பயணம் டிக்கெட் எடுத்து ரயிலேறி அடுத்த ஸ்டேஷனில் இறங்குவது போலவும் எளிய சித்திரம் உருவாவது மொழியின் மாயம். காண்ட், The critique of pure reasonஇல், நான் நானாகுவது, தன்னிலை, தன்னிருப்பு கடந்த கற்பனையின் வழித்தடம் என்று வரைந்து காட்டினார். மெய்யியலின் தோற்றுவாய் இது என அழிக்கப் புறப்பட்டனர் ஹைடெக்கரும் தெரிதாவும்.


உலகளாவிய நவீன பொதுமைகள் (universals) உருவாவதற்கான தத்துவார்த்த அடிப்படைகளை நாம் காண்ட்டிடம் அடையாளம் காணும் அதே நேரத்தில் மதங்களின் மெய்யியல் அடிப்படைகளும் நான் நானாகுதலை பயணமாக உருவகிப்பதிலும் ஆகுதலை தன்னிருப்பு தாண்டிய நிலையினைக் குறிப்பதிலுமேதான் அடங்கியிருக்கிறது என்றும் அடையாளம் காணவேண்டும். ததாகதரின் மரணம் தாண்டிய பல ஜென்மங்களும் மறுபிறவியெடுத்தல்களும் பயணம் என்ற உருவகத்தினை தாண்டுவதில்லை. 


தற்செயல்கள், விபத்துகள், தலைகீழ் மாற்றங்கள், செயல்கள், செயல் விளைவுகள், விருப்பு வெறுப்புகள், உள்ளார்ந்த குணங்கள், துன்பக் கதாபாத்திர குறைபாடுகள், அகஸ்மாத்தான சந்திப்புகள், என பலவற்றையும் உறிஞ்சி உள்வாங்கும் வல்லமைகொண்டது பயண உருவகம். 


தத்துவத்தில் நிகழ்வியலின் முன்னோடியான ஹைடெக்கருக்கு தன்னிருப்பு காலம் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஆராய பயண உருவகம் தானே பின்னணியில் இருக்கிறது? மத நூல்கள் விவரிக்கும் கர்மமும், கர்ம வினைகளும், கர்ம பலன்களும் நான் நானாகுதலை பயணமாக உருவகிப்பதில்தான் அடங்கியிருக்கிறது. மதங்களின் அறக்கோட்பாடுகளும் நான் நானாகுதல் பயணத்தின் கற்பிதத் தளத்தினைச் சுட்டுவதிலேயே உள்ளது. தத்துவமும், ஒப்பீட்டு மத ஆய்வும் சந்திக்கும் புள்ளி இது. உதாரணமாக ஞானநாத் ஒபயசேகரேவின் 'கர்மாவை கற்பனை செய்தல்' (Imagining Karma) என்ற பிரமாதமான ஆய்வினைக் குறிப்பிடலாம். நான் நானாகுதல் என்பதன் பயண உருவகம் என்னை பொறுத்தவரை ஒரு மாயப்பிசாசு. இந்த உருவகத்தைத் தற்காலிக ஆரம்பப்புள்ளியாகக் கொள்ள வேண்டும்.


பயண உருவகத்தின் உள்ளும் புறமுமான நகர்வுகளை நிகழ்த்துதல் மூலம் மெய்யியல் (metaphysics) வலைகளிலிருந்து விடுபடலாம். உள்ளார்ந்த நகர்வுகளில் ஒன்று நான் நானாகுதலின் பயணத்தை நாடோடிப் பயணமாக மாற்றுவது. A gypsy travel. நண்பர்களைக் கண்டடைந்தைக் கொண்டாடுவது இடங்களைப் பார்த்ததைவிட முக்கியமானது. 


பயண உருவகத்தை முழுமையாக விலக்கி நான் நானாகுதலை பல்திசைப் படர்தல் எனவோ காமக் களியாட்டங்களின் கலவியின் பூர்த்தியற்ற முன்னோடி நடவடிக்கைகளாகவோ விவரிக்கலாம்.


பயண உருவகத்திலிருந்து தப்பிப்பதை விட கடினமானது நான் நானாகுதலை அனுபவ சேகரமாக விவரிக்கும்போது மறைமுகமாக உருவாகிற கிடங்கு உருவகத்திலிருந்து தப்பிப்பது. சேகரமற்ற நிலையை ஆணவம், கன்மம், மாயை, வாசனை, நினைவு ஆகியவற்றிலிருந்து விடுபட்ட நிலையாய் மதங்கள் உன்னதப்படுத்தத் தவறவில்லை. சேகரக்கிடங்காகிய உடல் சிக்கியிருக்கும் வர்க்கம், குழுமம், வரலாற்று காலகட்டம் ஆகியனவற்றை அரசியலாக்கவும் அரசியல் கோட்பாடுகளும் நடை முறைகளும் தவறவில்லை. சேகரமற்ற தன்னெழுச்சியை தழுவலாமென்றொரு எண்ணம் இனிமையானது.


காண்ட்டிற்கு அகச் சமிக்ஞைகள் வெளியுலக ஊடாட்டத்தை சாத்தியப்படுத்துவது மட்டுமல்லாமல் தன்னை மீறிய கற்பித தளத்தோடும் பாலம் அமைக்கின்றன. ஹைடெக்கருக்கு இந்த உள்மனப் பேச்சு இடம் காலம் இல்லாமல் சாத்தியமாவதில்லை. தன்னிருப்பு காலத்தோடு கொள்ளும் உறவு உடலின் எல்லைகளைச் சுட்டுகிறது. நான் நானாகுதல் இலக்கும் திசையும் நிர்ணயிக்கப்பட்ட பயணமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்த நகர்வுகள் ஒரு கதை சொல்லலை வா வாவென்று மர்மமாக அழைக்கின்றன. 


கதை சொல்லல் நாடகீயமாகிறது. நாடகம் காரண காரியத் தொடர்பினை அறுதி செய்கிறது; காரண காரியத் தொடர்பினை  கற்பித வெளிக்குள் தள்ளிவிட்டால் அனுபவ சேகரத்திற்குக் குந்தகம் விளைந்துவிடும். ஜான் கேஜின் புகழ் பெற்ற 4.33 (மௌனத்தைக் கேட்டல்) என்ற மேற்கத்திய இசைக் கச்சேரியைப் போல; திரை விலகிவிட்டது, இசைக்கலைஞர்கள் அவர்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்துவிட்டார்கள், இசை நடத்துனரும் வந்து விட்டார். ஆனால் ஒன்றுமே நடப்பதில்லை நான்கு நிமிடங்களுக்கு எதுவுமே நடப்பதில்லை. நிச்சலனம். பேரமைதி. கச்சேரியின் அந்த குறிப்பிட்ட இசைக்கோவை முடிந்துவிட்டதாக நடத்துனர் அறிவித்து மேடையில் நடந்து வந்து தலைவணங்கி கைதட்டல்களை ஏற்றுக்கொள்கிறார். மௌனத்தைக் கேட்டபடியே முழு வாழ்க்கையும் கடந்து செல்வதும் நடக்கக்கூடியதுதானே. இமானுவேல் காண்ட்டினால் ஜான் கேஜின் 4.33 கச்சேரியை ஒரு நிமிடம் கூட கேட்டிருக்க முடியாது.


நான் நானாகுதல் மௌனமாகக் கழியும் பயணமாய் பரிணமிக்க இருப்பது ஒரு வாய்ப்பென்றால், ஒன்றோடொன்று தொடர்பற்று நகரும் கணங்களாகவும் இருப்பது இன்னொரு வாய்ப்பு.


உனக்குத் தெரியும்தானே, நான் யார் என்பதன் மேல், சிறு புவிப் பரப்பின் 

வரைபடத்தைத் திணிக்க விரும்பவில்லை,  இதில் ஒரு கேள்வி இருப்பது

உனக்குத் தெரியும்தானே.  ‘கன்னியாகுமரியில்’ என்றொரு கவிதையில் இப்படி எழுதியிருக்கிறேன்:


தேவீ

திரிசங்கமத்தில்

நீ என் மீது மோதுவதில்லை

நீ எனக்குள்ளே எழுகிறாய், 

என்னை மூழ்கடிக்கும் பாற்கடலாக. 


அவர்கள் பின்வாங்கும் அலையின்

மீது தன் மாயக்கால்களால் 

நடக்கும் ஒளியைப் பற்றிப் பேசுகிறார்கள், 

ஆழ்கடலின் கண்ணீர்த்துளிகளையே 

வைரங்களாகக் கொண்ட 

மணப்பெண்ணைப் பற்றி. 


உண்மை என்னவென்றால் 

அந்த மூக்குத்தியின் ஒளி ஆழத்தில் இருக்கிறது, 

அது உன் முகத்தை அணிந்துகொண்டு, 

என்னை நோக்கித் திரும்பி வரும், 

நீரில் மூழ்கிய சூரியன்.


என் பெயரிலிருந்து நீ என்னை விடுவிக்கிறாய். 

நான் இப்போது நீர்மை

ஒரு கலப்பு, உவர்ப்பும் உன்னதமும் 

கலந்த  புதிய கரைசல். 


அவர்கள் சங்குகளை, 

அந்த இறந்த எதிரொலிகளை விற்கிறார்கள். 

அந்தச் சுருளுக்குள் இருக்கும் ரீங்காரத்தை,

அழுத்தத்தின் நினைவை, 

அலையின் துடிப்பின் நிழலை 

அவர்கள் கேட்பதில்லை. 


அந்த ரீங்காரமே நான் சொல்வது 

அது வெகு தூரம் தனக்குள்ளேயே

உள்நோக்கிச் சுருங்கும் சத்தம்.

இதுவே நமது ஓயாத, 

நிலவொளியின் உரையாடல், 

இருளுக்குள் உள்ளிளுப்பதற்கான

தைரியம், பின்னர் மீண்டும் மீண்டும், 

கடலின் செல்வங்களைச் சுமந்தபடி 

திரும்புவதற்கான இன்னும் பெரிய தைரியம். 


அப்படியாகவே

அடிவானத்தின் வளைவை

கடல் மீதான  இந்தக் காதலை, 

ஒரு கணத்திற்குப் பின்னால் 

விட்டுச்செல்லப்பட்டவற்றின் அழகை, 

நீ எனக்குத் தந்தாய்.


உனக்குள் நான் சந்தித்தது 

என்னுடைய சொந்த,  அமைதியற்ற

மூன்றாம் பிறை நிலவை.


—-

புகைப்படம் : கன்னியாகுமரியில் கடல் அழைக்கிறது.