வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எலிஸபத் ஷம்பூகர், ஒரு முறை, மாணவர்களையும் என்னையும், வுர்ஸ்பர்க்கிலிருந்து இரண்டரை மணி நேர ரயில் பயண தூரத்தில் இருக்கும் காசல் (Kassel) நகரத்திலிருக்கும் “இறப்பும் இறப்பின் சடங்குகளும்” காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தனித்துவமான மியூசியத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த மியூசியத்திலிருந்து திரும்பி வரும் வழியில் நான் காசல் நகரில் ஜெர்மானிய தேவதைக் கதைகளையும் நாட்டுப்புற கதைகளையும் சேகரித்த கிரிம் சகோதரர்களுக்கான மியூசியம் இருப்பதைப் பார்த்தேன். வுர்ஸ்பர்க் நகருக்குத் திரும்பிய பிறகு, கிரிம் சகோதரர்கள் தொகுத்து வெளியிட்ட நாட்டுப்புறககதைகளில் ஒன்றான The Gobbler and the Elves வரும் நீண்ட காதுகளுடைய குள்ள தேவதைகள் என் கனவுகளில் வந்தபடி இருந்தார்கள். நான் அந்த குள்ள தேவதைகளை வைத்து ஒரு கவிதை எழுதினேன். அக்கவிதையில் ஒரு பத்தி இவ்வாறாக இருக்கிறது:
“நீண்ட காதுகளுடைய குள்ள தேவதைகள் வருகிறார்கள்
வீரர்களாக அல்ல
இரட்சகர்களாக அல்ல
பாதி எண்ணங்களாக
நினைவின் கரடுமுரடான வரைபடங்களாக
மூடுபனியில் முன்வரைவுகளாக எழுதப்பட்ட முணுமுணுப்புகளாக
எச்சிலாலும், காற்றாலும், வியர்வையாலும், உண்டாக்கபட்ட விரல்களை உடையவர்களாக
தங்கத்தை காற்றிலிருந்து இழுப்பவர்களாக
வாழ்வின் அர்த்தத்தை ஒன்றுமில்லையில் நெய்பவர்களாக
ஓவ்வொரு தையலும் விடுகதையாக
ஓவ்வொரு இணைப்பும் கூலிதரப்படாத அரும்பாடலாக
சின்னஞ்சிறிய புரட்சிகளின் புனித பாடல்களாக “
நீண்ட காதுகளையுடைய அந்த குள்ள தேவதைகள் வரும்போது செருப்புதைக்கும் அந்தக் கிழவனைப் போலவே எனக்கும் கடிகாரங்கள் தங்கள் இறுக்கமான குடல்களை அவிழ்ப்பதாகவும், நள்ளிரவு அருளற்றுத் தடுமாறுவதாகவும் தோன்றியது. நாட்டுப்புறக் கதைகளின் காலமற்றதன்மையால் எந்த மணியும் இந்த நேரத்தை சொந்தங்கொண்டாடுவதில்லை, எந்த அளவையும் இப்போது துடிக்கத் துணிவதில்லை என்றும் தோன்றியது.
நான் அடுத்த வார இறுதியில் தனியாக காசல் நகர கிரிம் சகோதரர்கள் மியூசியத்திற்குச் சென்றேன்.
நாட்டுப்புறக் கதைகளும் , புராணக்கதைகளும் குழந்தைகளுக்குச் சொல்லப்படுபவை என்ற கருத்து அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் இக்கதைகள் கடுமையான வன்முறைகளை சித்தரிப்பவை எனவே நாட்டுப்புறவியல் கல்விப்புலத்தில் இக்கதைகள் குழந்தைகளுக்குச் சொல்லத் தகாதவை என்ற கருத்து பலமுறை விவாதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, கிரிம் சகோதரர்களின் "ஸ்னோ ஒயிட்" (Snow White) கதையின் அசல் பதிப்பில், அந்த ராணி ஸ்னோ ஒயிட்டின் மாற்றாந்தாய் அல்ல, அவளது சொந்தத் தாய் ஆவார். இருப்பினும், அவளது சொந்த மகளான ஸ்னோ ஒயிட்டைக் கொன்று, அவளது நுரையீரலையும் கல்லீரலையும் தான் சாப்பிடுவதற்காக எடுத்து வருமாறு வேட்டைக்காரனுக்கு அவள் உத்தரவிடுகிறாள். அந்த ராணி பழுக்கக் காய்ச்சிய இரும்புச் காலணிகளை அணிந்து, மரணமடையும் வரை ஸ்னோ ஒயிட்டின் திருமணத்தில் நடனமாடுவதோடு இக்கதை முடிவடைகிறது. The Goose Girl என்ற மற்றொரு கதையில், ஒரு வேலைக்காரி நிர்வாணமாக்கப்பட்டு, உட்புறமாக கூர்மையான ஆணிகள் பொருத்தப்பட்ட ஒரு பீப்பாய்க்குள் தள்ளப்பட்டு, தெருவில் உருட்டிவிடப்படுகிறாள். The Frog Prince கதையின் கிரிம் பதிப்பு, இளவரசி தவளைக்கு முத்தமிடுவதற்குப் பதிலாக, அதைச் சுவற்றில் எறிந்து அடிப்பதாக விவரிக்கிறது. The Six Swans கதையில் சூனியக்காரிகளை உயிரோடு எரிக்கும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் உருவான மத்திய கால கலாச்சாரத்தையும், இருண்ட ஜெர்மானிய வனங்களையும் இந்த கொடூரங்களும் வன்முறைகளும் ஓரளவிற்குப் பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும்.
ஒரு தூறல் போடும் சனிக்கிழமை, இறந்துபோன கிரிம் சகோதரர்கள் அருங்காட்சியகத்தில் தனியாக நிற்கும்போது, எனக்குள் ஒரு விசித்திரமான அமைதி குடிகொள்கிறது. இது ஒரு ஜெர்மானிய தேவாலயத்தின் பயபக்தியோடு கூடிய அமைதியோ, அல்லது ஒரு பல் மருத்துவரின் காத்திருப்பு அறையில் இருக்கும் பதற்றமான அமைதியோ அல்ல. இது ஒரு ஆழமான, அதிகார ஒழுங்குமுறையின் அமைதி. பிரம்மாண்டமான பெல்லிவ் கட்டிடத்தில் அமைந்துள்ள கிரிம் சகோதரர்களின் அருங்காட்சியகம், குழப்பத்திற்கான, நாட்டுப்புறக் கதைகளின் வன்முறைக்கான சின்னம் அல்ல; மாறாக, அந்த குழப்பத்தை மிக நுணுக்கமாகப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தி தூய்மைப்படுத்தியதற்கான சின்னமாகும். இருண்ட காடுகளின் அராஜகமும் இரத்தமும் நிறைந்த இதயத்தைப் பிடித்து, துண்டித்து, பள்ளிக்குழந்தைகளின் கல்விக்காக தூய்மைப்படுத்தியதன் வரலாற்றைச் சொல்லும் இடம்.
கிரிம் அருங்காட்சியகத்தின் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிரிம் சகோதரர்களின் படங்களே அந்த அருங்காட்சியகம் என்ன கதையைச் சொல்ல விழைகிறது என்பதை சுட்டிக்காட்டிவிடுகிறது. ஜேக்கப் கிரிம், வில்ஹெல்ம் கிரிம் ஆகியோரின் உருவப்படங்கள் நிறைந்த ஒரு சுவர். அவர்கள் கனவினால் ஆழம் கண்ட கண்கள் கொண்ட கதைசொல்லிகளாக அல்லாமல், மரியாதைக்குரிய, சற்றே சோர்வடைந்த 19-ஆம் நூற்றாண்டுப் பேராசிரியர்களாக வெளியே உற்று நோக்குகிறார்கள். மூத்தவரான ஜேக்கப், தனது கூர்மையான, புத்திசாலித்தனமான முகத்தோடு, அவர் சேகரித்த கதைகளில் வருவதைப் போல மிட்டாய்களால் ஆன ஒரு வீட்டிற்கு இட்டுச்செல்லும் ரொட்டித்துகள்களால் ஆன பாதையைக் கண்டால் கடுமையாக எரிச்சலடையும் ஒரு மனிதரைப் போலத் தோன்றுகிறார். மென்மையான, சற்றே கற்பனை வளம் மிக்க இளையவரான வில்ஹெல்ம், அடுப்பிற்குள் தள்ளிவிடப்படுவதற்கு முன்பாக, குறைந்தபட்சம் அந்த சூனியக்காரியின் ஜன்னல் தொட்டிச் செடிகளைப் பாராட்டும் ஒரு மனிதரைப் போலத் தோன்றுகிறார்.
புகழ்பெற்ற கட்டுக்கதைகள் கூறுவது போல, இந்தச் சகோதரர்கள் பிளாக் ஃபாரஸ்ட்டில் பல்லில்லாத கிழவிகளிடம் நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்துத் திரிந்த நாடோடிகள் அல்லர். அவர்கள் அறிஞர்கள், ஒப்பீட்டு மொழியியலாளர்கள், நூலகர்கள். ஜேக்கப் தனது வீட்டு வேலைக்காரி தலையில் பூ வைத்திருந்ததை பயனற்ற அலங்காரம் என்று கூறி அவளை வேலையை விட்டு நீக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர்தான் இந்த மொழியியல் இயக்கத்தின் மையப்புள்ளி. Proto-Indo-European மொழி, ஜெர்மானிய மொழி ஆகியவற்றுக்கு இடையே உள்ள மெய்யெழுத்துக்களின் முறையான ஒலி மாற்றங்களை விவரிக்கும், வரலாற்று மொழியியலின் அடித்தளமான "கிரிம் விதி"-யை (Grimm’s Law) உருவாக்கியவர் அவரே ஆவார். நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே ஒரு கட்டமைப்பு ஒழுங்கைக் கண்டறிந்த மனிதர் அவர்.
பிரஷ்யர்களின் துல்லியத்திற்கும் நுணுக்கத்திற்கும் (Prussian rigour) முன்மாதிரியாக விளங்கிய இந்த இருவரும், உடல் உறுப்புகளைத் துண்டித்தல், குழந்தைகளைக் கைவிடுதல், சாதாரணமாய் நடக்கும் நரமாமிசம் உண்ணல் போன்ற கதைகளை உலகிற்கு எப்படிக்கொண்டு சேர்த்தனர்? அவர்கள் கையாண்ட மிக நுணுக்கமான ஆய்வு முறையை இந்த அருங்காட்சியகம் விரிவாக விளக்குகிறது. 1812-இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட தங்களது Kinder- und Hausmärchen - குழந்தைகளுக்கும் வீடுகளுக்குமான தொகுப்பிற்காக, அவர்கள் பலதரப்பட்ட மக்களிடம் நேர்காணல் செய்தனர்; அவர்களில் பெரும்பாலோர் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் மிகவும் பிரபலமானவர், நீடர்ஸ்வெஹ்ரன் (Niederzwehren) கிராமத்தைச் சேர்ந்த தையல்காரரின் மனைவியான டோரோதியா வீஹ்மேன் (Dorothea Viehmann) ஆவார், இவருடைய உருவப்படம் இந்த அருங்காட்சியகத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. அவர் மிகவும் யதார்த்தமானவராகவும், தேவையற்ற பேச்சுகள் இல்லாதவராகவும் தோற்றமளிக்கிறார். சாத்தானால் கைகள் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதையை உங்களிடம் கூறிவிட்டு, அப்படியே உங்களிடம் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரூடெல் (strudel - ஜெர்மானிய இனிப்புப் பண்டம்) சாப்பிடுகிறீர்களா என்று கேட்கக்கூடிய ரகத்தைச் சேர்ந்த பெண்ணாக அவர் தெரிகிறார். சிதறிக்கிடந்த ஜெர்மானிய தேசம் தனது அடையாளத்தைக் கண்டறிவதற்கான ஒரு கலாச்சார அடித்தளமாக விளங்கும், தூய்மையான, உண்மையான ஜெர்மானிய 'வோல்க்சீல்' (Volksseele - மக்களின் ஆன்மா) என்பதைத்தான் இந்தச் சகோதரர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.
கிரிம் சகோதரர்கள் செய்ய முயன்றது ஒரு வகையான இலக்கிய ரசவாதம் ஆகும். அவர்கள் வாய்மொழியாகக் கடத்தப்பட்ட, ஒழுங்கற்ற, பெரும்பாலும் வன்முறையான கதைகளை எடுத்து, அவற்றை ஒரு தேசிய இலக்கியத்தின் பொன்னான அங்கமாக மாற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் நாம் அறிந்தவரை, ரசவாதம் என்பது ஒரு சிக்கலான வேலை. இந்தக் கதைகளின் முதல் பதிப்பு வணிக ரீதியாகப் பெரும் தோல்வியையும், மக்கள் மத்தியில் மோசமான விமரிசனத்தையும் சந்தித்தது. அது மிகவும் அப்பட்டமாகவும், கல்வி சார்ந்ததாகவும், அடிக்குறிப்புகள் நிறைந்ததாகவும், உண்மையைச் சொல்வதானால், மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. முட்களால் இளவரசனின் கண்கள் குத்திக் கிழிக்கப்படும் அசல் "ரபுன்ஸெல்" (Rapunzel) கதையையோ, அல்லது நீ ராணியான பிறகு உனக்கு நடக்க வேண்டிய தேவையிருக்காது, அதனால் கத்தியை எடுத்து உன் குதிகாலை வெட்டிக்கொள் என்று மாற்றாந்தாய் தன் மகள்களைத் தூண்டும் "சிண்ட்ரெல்லா" கதையின் முதல் பதிப்பையோ தங்களது குழந்தைகளுக்குப் படித்துக் காட்டப் பெற்றோர் யாரும் வரிசையில் நிற்கவில்லை. இவை படுக்கையறையில் தூங்குவதற்கு முன் சொல்லும் கதைகளல்ல; இவை மனித மனதின் கொடூரமான இருண்ட பக்கத்திலிருந்து வெளிவந்த அறிக்கைகள்.
இளைய சகோதரரான வில்ஹெல்ம்தான் ஒரு சிறந்த பதிப்பாசிரியராகவும், கதைகளைத் தூய்மைப்படுத்துபவராகவும், மனித அடிமனதின் இருண்ட பக்கங்களை பொதுமக்களுக்கு ஏற்றவாறு மாற்றிய மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் மாறினார். ஆறு பதிப்புகளின் வழியே, அவர் கதைகளின் கொடூரமான பகுதிகளைச் சீரமைக்கவும், கிறித்தவ இரக்கத்தை சேர்க்கவும், பொதுவாக கதைகளை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும் படியாக மாற்றவும் விடாமுயற்சியுடன் உழைத்தார். Hansel and Gretel (இந்தத் தலைப்பில் பெர்க்மனின் திரைப்படம் ஒன்று வந்துள்ளது) கதையில் தன் குழந்தைகளைக் கைவிடும் பெற்ற தாய், பிற்காலப் பதிப்புகளில் மாற்றாந்தாயாக மாற்றப்படுகிறாள். பாலியல் சார்ந்த குறிப்புகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. வன்முறை இன்னும் இருந்தாலும், அதற்கு ஒரு ஒழுக்கநெறி சார்ந்த கட்டமைப்பு வழங்கப்படுகிறது. அருங்காட்சியகம் இந்த பரிணாம வளர்ச்சியை மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது; முதல் பதிப்புகளுக்கு அருகில் பிற்காலப் பதிப்புகளை வைத்து, ஒரு கலாச்சாரம் எவ்வாறு பண்படுத்தப்பட்டது என்பதன் முன்னும் பின்னுமான காட்சியை நமக்குக் காட்டுகிறது. இதைக் காண்பது மிகவும் சுவாரஸ்யமான, அதே சமயம் சற்றே நடுக்கமூட்டும் ஒரு அனுபவமாகும். இது ஒரு பிரதேசத்தின் முரட்டுத்தனமான, வன்முறையான இருண்ட ஆழ் மனதை, நேராக உட்காரவும், தலைவாரிக்கொள்ளவும், கொல்லப்படுவத்ற்கு முன்பாக தயவுசெய்து என்றும் நன்றி என்றும் கூறக் கற்றுக்கொடுப்பதைப் பார்ப்பது போன்றதாகும்.
அவர்களது தனிப்பட்ட பொருட்களின்—மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்ட இறகுப் பேனாக்கள், அவர்களின் நெருக்கமான, துல்லியமான கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதங்கள், ஜேக்கப்பின் கண்ணாடி ஆகியவற்றுக்கு—முன்னால் நிற்கும்போது, எனக்குள் தோன்றியதை the Problem of the Three Spinning Wheelchairs என்று அழைப்பேன். The Three Spinning Women என்ற கதையில், ஒரு சோம்பேறிப் பெண் சணலைத் தங்கமாக நூற்கக் கட்டாயப்படுத்தப்படுகிறாள், ஆனால் விகாரமான தோற்றமுடைய மூன்று கிழவிகள் (நூல் நூற்கும் மிதியடியை மிதித்ததால் அகன்ற பாதத்தைக் கொண்ட ஒருத்தி, நூலை நக்கியதால் தொங்கும் உதட்டைக் கொண்ட மற்றொருத்தி, நூலைத் திருகியதால் பெரிய கட்டைவிரலைக் கொண்ட இன்னொருத்தி) அவளது திருமணத்திற்குத் தங்களை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவளுக்காக அந்த வேலையைச் செய்து முடிக்கிறார்கள். இளவரசன் அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, தனது அழகான மனைவி இனிமேல் நூற்புச் சக்கரத்தைத் தொடவே கூடாது என்று தடை விதிக்கிறான். இக்கதை அழகின் பின்னணியில் மறைந்திருக்கும் விலைமதிப்பற்ற உழைப்பையும், ஒரு பளபளப்பான மேற்பரப்பைத் தாங்கி நிற்கும் விகாரமான மற்றொரு கடின உழைப்பையும் பற்றியதாகும்.
கிரிம் அருங்காட்சியகம் முழுவதுமே அந்த நூல் நூற்கும் அறையைப் போன்றது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாகவும் வினோதமாகவும் உருவாகிய கதைசொல்லல் மீது கட்டப்பட்ட அழகான, ஒழுங்கமைக்கப்பட்ட அரண்மனை. மெருகூட்டப்பட்ட தரைத்தளங்களும், தொடுதிரைகளும் இளவரசர்களுக்குரிய பார்வையைத் தருகின்றன. ஆனால், அவற்றிற்குப் பின்னால், சூன்யக்கிழவிகளின் இருப்பை நாம் உணர முடியும். கதைகளின் அகன்ற பாதம் கொண்ட, தொங்கும் உதடுடைய, பெரிய கட்டைவிரல் கொண்ட உண்மையை—கிரிம் சகோதரர்கள் இலக்கியத் தங்கமாக மாற்றிய அந்த வன்முறையான உள்ளடக்கத்தை உங்களால் உணர முடியும். கிரிம் அருங்காட்சியகம் ஒரு அழகான கட்டடம். இது ஒழுங்குமுறைக்கான ஒரு நினைவுச்சின்னம், ஆனால் அது ஒழுங்கின்மையின் முதன்மையான ஆற்றல்களைக் கொண்டாடுகிறது.
கிரிம் கதைகளின் உலகளாவிய தாக்கம், நிச்சயமாக, அளவிட முடியாதது. Kinder- und Hausmärchen - குழந்தைகள், வீட்டுக் கதைகள்- நூல் மனித வரலாற்றில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட, பரவலாகப் படிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று என்று அருங்காட்சியகக் குறிப்பு குறிப்பிடுகிறது. ஜெர்மனியின் ஒரு சிறிய ஹெசியன் (Hessian) நகரத்தில் இரண்டு நூலகர்களால் மிகவும் சிரமப்பட்டுத் தொகுக்கப்பட்ட ஜெர்மன் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு, கோடிக்கணக்கான மக்களின் குழந்தைப் பருவத்தை வடிவமைத்துள்ளது. இது டிஸ்னி, நவீன பேண்டஸி வகை கதைகள், ஆயிரக்கணக்கான கார்ட்டூன்கள், ஓபராக்கள், பாலே நடனங்களுக்கான கதைக்கள வரைபடத்தை வழங்கியிருக்கிறது. "லிட்டில் ரெட் ரைடிங் ஹுட்," "ஸ்னோ ஒயிட்," "தி ஃப்ராக் கிங்," "ரம்பல்ஸ்டில்ட்ஸ்கின்"—இந்த பெயர்கள் பூமியின் கூட்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. ஓநாய் என்று பொய் சொன்ன சிறுவனின் கதை, பாதையை விட்டு விலகுவதால் ஏற்படும் ஆபத்துகள், உண்மையான அன்பின் முத்தம் எந்தவொரு மந்திரத்தையும் முறித்துவிடும் ஆகியவற்றை நம் அனைவருக்கும் தெரிந்ததாக மாற்றியிருக்கிறது.
கிரிம் சகோதரர்கள், ஒரு தேசிய ஆன்மாவைத் தேடும் தங்களின் முயற்சியில், நமக்கு ஒரு ஜன்னலை அல்ல, ஒரு கண்ணாடியையே வழங்கினர். இருள், வன்முறை, திகில் ஆகியவற்றின் மீதான நமது ஆர்வம் ஒரு நவீன பிறழ்வு அல்ல, மாறாக அது மனித இயல்பின் அடிப்படைப் பகுதி என்பதை அவர்கள் நமக்குக் காட்டினார்கள். Hansel and Gretel கதையைப் படிக்கும் ஒரு குழந்தை வெறும் பயத்தை மட்டும் பெறவில்லை; அவர்கள் சமயோசித புத்தி, உலகின் ஆபத்துகள், உங்களைப் பராமரிக்க வேண்டியவர்களே உங்களைக் கைவிடக்கூடும் என்ற பயங்கரமான சாத்தியக்கூறுகளைப் பற்றிய ஒரு ஆழமான, தொன்மையான பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். சூனியக்காரியின் அடுப்பு என்பது நுகர்வின் சின்னம், பெரியவர்களின் பிரச்சினைகளால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தின் அடையாளம். இவை எளிமையான கதைகள் அல்ல; அவை சிக்கலான உளவியல் கருவிகள்.
அருங்காட்சியகத்தின் பரிசுப்பொருள் கடையில் ஒரு பனிக்கோளத்துனுள்ளே , சிறிய, புன்னகைக்கும் 'ஸ்னோ ஒயிட்' தன் குள்ளர்களுடன் நின்றிருந்தாள். அதை உலுக்கியபோது, அவளைச் சுற்றி வெள்ளை மினுமினுப்புகள் சுழன்றன. பொறாமை கொண்ட ஒரு ராணியால் ஒரு சிறுமியைக் கொலை செய்ய முயன்ற காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான, ஆழமான கதை, பெண்களிடையேயான போட்டி, பொறாமை ஆகியவற்றால் மரணத்தின் குளிர்ந்த உறக்கத்தின் பயத்தில் மூழ்கிய ஒரு கதை, மினுமினுக்கும் பிளாஸ்டிக் நிறைந்த ஒரு மலிவான அலங்காரப் பொருளாகக் குறைக்கப்பட்டிருந்தது. இது வில்ஹெல்மின் எடிட்டிங் பேனாவின் இறுதி வெற்றி. வினோதமான, வன்முறையான ஒன்று அழகானதாக மாற்றப்பட்டிருந்தது. ஆழ்மனதின் (id) காட்டு ஓலம் ஒரு மியூசிக் பாக்ஸின் மெல்லிய ஒலியாக மாற்றப்பட்டிருந்தது.
கிரிம் சகோதரர்களின் உண்மையான அருங்காட்சியகம் காசல்லில் உள்ள அரண்மனை அல்ல. அது மனித மனதின் இருண்ட, காட்டுத்தனமான நிலப்பரப்பு; எவ்வளவுதான் கத்தரித்தாலும் யாராலும் முழுமையாக அடக்க முடியாத ஒரு காடு.
டொனால்ட் பார்த்தல்மேயின் 'Snow White' நாவலில் கதை நிகழ்காலத்தில் நடக்கிறது; கதாபாத்திரங்கள் நவீனமானவர்களாக இருக்கிறார்கள்; கதையின் முடிவு சீரான நீதியை நோக்கி நகர்வது மறுக்கப்படுகிறது. பார்த்தல்மேயின் நாவலில் ஏழு குள்ளர்களும் ஒரு வகையான நவீன கம்யூனில் ஸ்னோ வைட் பெண்ணுடன் வசிக்கிறார்கள். ஏழு குள்ளர்களுக்கிடையே எந்த விதமான ஒற்றுமையும் இல்லை; ஒருவரிடமிருந்து ஒருவர் அந்நியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஸ்னோ வைட் இளவரசியோ, பார்த்தல்மேயின் நாவலில் மனோதத்துவமும் இலக்கிய விமர்சனமும் படித்தவளாக இருக்கிறாள். சிறு சிறு சேர்மன் மாவோ கவிதைகள் எழுதுபவளாகவும் இருக்கிறாள். ஏழு குள்ளர்களும் ஸ்னோ வைட்டும் சீன குழந்தை உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கின்றனர். மரபான கதையில் தூய கன்னியாக சித்தரிக்கப்படும் ஸ்னோ வைட் இளவரசி, பார்த்தல்மேயின் நாவலில் ஷவருக்கடியில் நின்று குள்ளர்களுடன் அடிக்கடி உடலுறவு கொள்கிறாள். உண்மையில் பார்த்தல்மேயின் நாவலில் கதாபாத்திரங்கள் கதாபாத்திரங்களாக உருத் திரள்வதில்லை. அவர்கள் வெறும் குரல்களாகவும் சிறு தூரிகைத் தீற்றல்களாகவும், சொல்லாடல்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.
என்னுடைய “நீண்ட காதுகளையுடைய குள்ள தேவதைகள்” கவிதை இவ்வாறாக முடிகிறது:
“எந்தப் பசி இந்தத் தையல்களை சவைத்துக்கொண்டிருக்கிறது
எந்தப் பயங்கர விழிகள் தொழிற்சாலையின் ஜன்னல்களுக்கு வெளியே இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றன?
எந்த நிலத்தின் கறுப்பு, பழுப்பு, எனத் தழும்பேறிய கரங்கள்
இதே ஊசியின் நூல் தைக்கப்படுவதை உணர்கின்றன
எந்த மிருகத்தின் பசிக்கு அவை இரையாகின்றன
எந்த உலகம் இதைத் திரும்பிப் பார்க்காமல்
மேலும் மேலும் வேண்டுமென கேட்டுக்கொண்டேயிருக்கிறது?”
https://www.grimmwelt.de/en/
புகைப்படம் : பழையது
