ஒரு முறை நான் கௌஹாத்தியிலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். சிறிய பறக்கும் சோப்பு டப்பா போன்ற அந்த சிவப்பு ஹெலிகாப்டர் சப்பளிந்து போய் இருந்தது. பாவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் சேவை. மொத்தம் ஐந்து பயணிகள்தான். எனக்கு விமானிக்குப் பக்கத்து முன்னிருக்கை. விமானம் போல ஹெலிகாப்டர் ரன்வேயில் ஒடிப்போய் மெதுவாக மேலெழும்பாது. நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக மேலெழும்பும். மரக்கிளையில் கட்டிய ஊஞ்சல் காற்றில் பக்கவாட்டில் உதறி மேலெழுவதும், சரிந்து பக்கவாட்டில் திரும்புவதும் போல ஹெலிகாப்டர் பறத்தலில் வித்தைகள் காட்டக்கூடியது.
கௌஹாத்தியிலிருந்து இட்டாநகர் வரை பெரும்பான்மை தூரத்திற்கு பயணம் பிரம்மபுத்திரா நதிக்கு மேல்தான். நதிக்கென்று ஒரு ஆகர்ஷணம் இருப்பதை அன்றுதான் உணர்ந்தேன். பிரம்மனின் புத்திரன் என்ற பெயருக்கேற்ற பிரும்மாண்ட நதியின் மேல் பறக்கையில் எங்கள் ஹெலிகாப்டர் இக்கிணியூண்டாக ஒரு சிள் வண்டு போல குறுகிவிட்டதாக உணர்ந்தேன். பிரம்மபுத்ராவை, உயரத்திலிருந்து பார்க்கும்போது, அது சாகசங்களற்ற கரும்பச்சை நீலத்தின் நகர்வாய் இருந்தது. ஹெலிகாப்டர் இறக்கைகளில் சுழலொலி இல்லாவிட்டால், பறத்தலின் யதார்த்தம் கை நழுவிப் போய், அந்தரத்தில் வசித்தல் உண்மை உணர்வாகிப் போயிருக்கும். நீர் கொள்ளும் நதித் தோற்றங்களில் பிரம்மபுத்திரா ஒரு சிவ நடனம்.
அதற்கு இணையான சக்தியின் நடனத்தை கேங்டாக்கிலிருந்து சிலிகுரிக்கு ஹெலிகாப்டரில் பறந்தபோது டீஸ்டா நதியின் ஓட்டத்தில் கண்டேன். கேங்டாக்- சிலிகுரி பயணத்தின்போது எனக்கு ஹெலிகாப்டரில் பின்னிருக்கை. எனக்கு இரண்டு பக்கங்களிலும் என் நண்பர்களான புத்த பிக்குகள் இருந்தார்கள். அவர்கள் ஹெலிகாப்டர் காற்றில் ஏறிய உடனேயே “ஓம் மணிபத்மே ஹும்” என்று ஜெபிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் ஜெபம் வஜ்ராயண பாராயண முறை என்பதால் தொண்டையிலிருந்து கரகரப்பாக உச்சாடனம் செய்யப்பட்டது. டீஸ்டா அந்த பாராயணத்திற்கேற்ப பெருஞ்சலனத்தின் உறைவில் இருப்பதாகத் தோன்றியது.
ஹெர்மான் ஹெஸ்ஸே தன்னுடைய சித்தார்த்தா நாவலில் எழுதுவார்: “நதி அதனுடைய அத்தனை இடங்களிலும் ஒரேசமயத்தில் இருக்கிறது, அதன் முகத்துவாரத்திலும், அதன் கழி முகத்திலும், அதன் நீர்வீழ்ச்சியிலும், சமுத்திரத்திலும், நீரோட்டத்திலும், மலைகளிலும், எல்லா இடங்களிலும் என அது நிகழ் கணமெனவே எங்குமிருக்கிறது, இறந்த காலத்தின் நிழலென அல்ல, எதிர்காலத்தின் நிழலென அல்ல”. ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த டீஸ்டா அப்படியாகத்தின் நிகழ் கணத்தில் உறைந்ததாய் இருந்தது.
வாலஸ் ஸ்டீஃபன்ஸ் ஒரு கவிதையில் ஆச்சரியத்தில் துள்ளிக்குதிப்பார், ‘நதி நகர்கிறது, நதி நகர்கிறது , நதி நகர்கிறது’ என. எங்கே நகர்கிறாள் டீஸ்டா? ‘காலம்தான் நான் மீன் பிடிக்கும் நீரோடை, நான் அதில் நீரருந்தவும் செய்கிறேன், ஆனால் அதன் மணல் படுகை அப்படியே மேலீடாக இருக்கிறது. அதன் மெல்லிய நீரோட்டம் நழுவிச் செல்கிறது ஆனால் நிலைபேறுடைமை அங்கே அப்படியே அசையாமல் நிற்கிறது. என்று தோரோ எழுதுவது நினைவுக்கு வந்தது. பிரம்மபுத்ரா. டீஸ்டா. ஹலோ தோரோ கம் அண்ட் டேக் திஸ் கிளாஸ் ஆஃப் விஸ்கி. கையில்லா ரவிக்கை அணிந்த பெண் தன் அக்குளைக் காட்டுகிறாள். ஓம் மணி பத்மே ஹூம்