Monday, July 13, 2026

பூமணி: அஞ்சலி



தமிழ்ச் சிறுகதைகளில் நவீனத்துவக் கட்டுமானத்தை உருவாக்கிய சிறுகதைகள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் பூமணியின் “வயிறு”, “ரீதி” ஆகிய கதைகள் முதலிடங்களில் வரும் என்பது என் எண்ணம். பூமணியின் “பிறகு”, “வெக்கை” ஆகிய நாவல்கள் கரிசல் நிலப்பகுதியை அதன் வாழ்வியலை அசலாகப் படம் பிடித்தன. “அஞ்ஞாடி” அதே நிலப்பகுதியின் சாதிய உறவுகளை நுட்பமாகச் சிறு தூரிகைகளால் சித்திரமாகத் தீட்டியது. பூமணியின் எழுத்தை இயல்பு வாத எழுத்து என்று மட்டும் அணுகமுடியுமென்று நான் நினைக்கவில்லை. “அஞ்ஞாடி” நாவல் வட்டார வழக்குச் சொற்களும், பழமொழிகளும் நிறைந்த கலைக்களஞ்சியமும் கூட. பூமணியை வாசிக்கும்போதெல்லாம் இவ்வளவு அணுக்கமாகத் தமிழ்நாட்டின் ஏதேனும் ஒரு நிலப்பகுதியைக் கூட நான் அறிந்தேனில்லையே என்ற ஏக்கம் என்னுள் உண்டாகும். “அஞ்ஞாடி”யில் பள்ளர், வண்ணார், நாடார் சமூகங்களின் வம்ச வரலாறுகளும் ஒடுக்குமுறைக்கு ஆளான சமூக வரலாறும், புனைவாக பூமணியின் கைகளில் உருமாற்றம் பெற்றிருக்கின்றன. அதனால் இந்த நாவலைக் கரிசல் பகுதியின் சமூக வரலாற்றைச் சொல்லும்  நாவலாகவே வாசிக்கவேண்டும். 

பள்ளர் ஆண்டி குடும்பன், வண்ணார் மாரி என்னும் இருவேறு ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வை வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையில் முடிவதாக அமைகிறது. சிறு நிலப்பகுதி ஒன்றின் சமூக வரலாறுகளும், பெரும் இந்தியத்தேசத்தின் வரலாறும் என்னென்ன தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன என்பதை அறியவும் “அஞ்ஞாடி”யை வாசிக்கலாம்.


கழுகுமலைக் கோவிலில் பல்லக்கு தூக்கிச் செல்வதற்கான உரிமைக்காக நாடார்கள் நடத்திய போராட்டம், விடுதலைப் போராட்டத்தில் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் ஆகியோரின் பங்கு, சமணர்கள் கழுவேற்றம், எட்டயபுரம் ஜமீனின் அதிகாரம், சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் ஆரம்பம், தலித்துகள் கிறித்துவத்துக்கும் மாறியது என எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் “அஞ்ஞாடி”யில்” வருவதால் பூமணியை கரிசல் நிலப்பகுதியின்  சமூக வரலாற்று ஆசிரியர் என்றே நாம் அழைக்கலாம். 


பனைமரத்தின் மேல் இருந்துகொண்டே சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்றுவிடும் காட்சி, மாரி ஆண்டிக்குச் சொல்லும் கதைகள் எனப் பல காட்சிகளும் கதைக்குள் கதைகளும் அபாரமானவை.  

பூமணி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.