திபெத்திய வஜ்ராயன பௌத்த மரபில் விநாயகர் காலபைரவரோடு (மகாகாலா) தொடர்புடைய தெய்வமாக பூஜிக்கப்படுகிறார். நான் குரு பத்மசம்பவர் ( கி.பி. எட்டாம் நூற்றாண்டு) பூட்டான் தேசத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை கள ஆய்வு செய்தபோது பத்மசம்பவரே தாந்தரீக தியானத்தின்படி விநாயகரை அறிந்து பூட்டான், திபெத், நேபாளம், சிக்கிம் என பரவியிருக்கும் பௌத்த மரபில் விநாயகர் வழிபாட்டினை அறிமுகப்படுத்தினார் என்று அறிந்தேன். சோக் டாக் (Chog Dhak) என்று திபெத்திய மொழியில் அழைக்கப்படும் கணபதி சிவப்பு நிறத்தில் இருக்கிறார். திபெத்திய ஓவியங்களில், விநாயகர் நடனமாடும் வடிவத்தில் அதிகமாக காணப்படுகிறார். இந்த வடிவம், மகிழ்ச்சி, வெற்றி, உளத்தூய்மை ஆகியவற்றைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
தமிழிலுள்ள விநாயகர் துதிகளில் விநாயகர் அகவல் தாந்தரீக, யோக மரபுகளின் தரிசனங்களை எளிமையாக வெளிப்படுத்தக்கூடிய பனுவல். விநாயகர் அகவல் ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பாடலின் ஆசிரியரான ஔவையார், சங்க கால ஔவையார் அல்லர். இவர் பிற்காலத்தைச் சேர்ந்தவர்; தமிழ் சித்தர் மரபோடு நெருங்கிய தொடர்புடையவர். விநாயகர் அகவலின் வரிகள், திருமூலரின் திருமந்திரம் பதினெண் சித்தர்களின் தத்துவங்கள் ஆகியவற்றோடு ஆழமான உரையாடலை உள்ளடக்கியிருக்கிறது. விநாயகரை வழிபட்டு, ஔவையார் ஆன்மீக முதிர்ச்சியையும், பக்தி மார்க்கத்தின் உச்சமாக அவர் அடைந்த யோக சித்தியையும் விநாயகர் அகவல் சொல்வதாகவும் இருக்கிறது. இந்த ஔவையாரின் காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு என்று கணித்தோமென்றால் கிட்டத்தட்ட பூட்டான், திபெத் என்று பயணம் செய்த பத்மசம்பவரின் காலத்தைச் சேர்ந்தவர் என்று ஒப்பீட்டுக்காக வைத்துக்கொள்ளலாம்.
விநாயகர் அகவல் உருவத்திலிருந்து அருவத்தை நோக்கி உடலை மையமாக வைத்து நகர்கிறது. அகவலின் தொடக்கம், "சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு..." என விநாயகரின் புற உருவ வர்ணனையாக இருக்கிறது. ஆனால், சில வரிகளிலேயே இந்த வர்ணனை அகவயமான தேடலாக மாறுகிறது. யானை முகம், பேழை வயிறு ஆகிய புற அடையாளங்கள் மெல்லக் கரைந்து, சைவ சித்தாந்தம், சாக்த மரபுகளின் ஆணிவேரான நாதம் (ஒலி), விந்து (ஒளி) தத்துவங்களை விநாயகர் அகவல் நேரடியாகப் பேசுகிறது.
விநாயகர் அகவலின் மையப்பகுதி திருமூலரின் உடல் வளர்த்து உயிர் வளர்க்கும் வித்தையையும் சௌந்தர்ய லகரியின் யோக சாத்திரத்தையும் சுருக்கமாகக் கூறிவிடுகிறது. "மூலாதாரத்தின் மூண்டெழுங் கனலை, காலால் எழுப்பும் கருத்தறிவித்தே” என்ற வரி மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை, மூச்சுப் பயிற்சியின் மூலம் தட்டியெழுப்பும் நுட்பத்தை குறிக்கிறது. இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளின் ஓட்டத்தை முறைப்படுத்தி, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தும் யோகத்தை “சுழுமுனை மார்க்கக் கமுக்கமுங் காட்டி” எனப் பேசும் விநாயகர் அகவல் “ஆதாரம் ஆறையும் அகநிலையாக்க” அடுத்து வழிகாட்டுகிறது.
தாந்தரீகம், யோக, சித்தர் மரபுகளின் ரத்தினச் சுருக்க வடிவமான விநாயகர் அகவல் "என்னை அறிவித்து எனக்கருள் செய்து, முன்னை வினையின் முதற்களைந்து” என யோகப் பயிற்சிகளின் இறுதி இலக்கைப் பாடுகிறது. அந்த இலக்கு சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பாற்பட்ட "சும்மா இருக்கும் சீரருள்" அனுபவமாகுதலாக இருக்கலாம்.
யோகம், தாந்தரீகம், சித்தர்களின் உடல் மைய சிந்தனை ஆகியன இந்திய திபெத்திய சிந்தனைகளில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. இந்த சிந்தனைகளின் மனோன்மணி விநாயகர் அகவல்.
