Friday, June 26, 2026

ஓரியானா ஃபல்லாச்சியின் பெண்ணிய கிளாசிக் “பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்” - முன்னுரை




இத்தாலியரான ஓரியானா ஃபல்லாச்சி (1929-2006) தனது நீண்டகாலப் பத்திரிகையாளர் தொழில் வாழ்க்கையில் நாவல்கள், வாதப் பிரதிவாதங்கள், போர் அறிக்கைகள்,  பிரபலங்களின் உண்மைகளை வெளிக்கொணரும் நேர்காணல்கள் என பலவகையான படைப்புகளை எழுதினார்.   ஆனால், இவரது புகழ், பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களுடனான மோதல் பாணி நேர்காணல்களால் நிலைபெற்றது. இந்த நேர்காணல்கள் 1970கள் மற்றும் 80களில் மிகவும் விற்பனையான புத்தகங்களாக மீண்டும் வெளியிடப்பட்டன. ஃபல்லாச்சியின் கேள்விகள்  துணிச்சலானவையாகவும் நேர்காணல் செய்யப்படுபவரை உலுக்குபவையாகவும்  இருந்தன. 

நடிகை ஜினா லோலோபிரிகிடாவுடனான ஒரு நேர்காணலில், "மக்கள் சொல்வது போல் நீங்கள் அவ்வளவு முட்டாள் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறி ஃபல்லாச்சி ஆரம்பித்தார். லிபியாவின் அல்-கடாஃபியிடம், "நீங்கள் இவ்வளவு வெறுக்கப்படுகிறீர்கள், விரும்பப்படாதவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

அவருடைய நேர்காணல்கள் கொரில்லா தாக்குதல்களைப் போன்ற சாதனைகளாகவும், உலகளாவிய நிகழ்வுகளாகவும் இருந்தன. அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும், நேர்காணல்களுக்குத் தேவையான விவரங்களைப் பிரமிக்கத்தக்க வகையில் தயாரித்துக்கொள்பவராகவும், நேர்காணல் காணும் பிரமுகர்களிடம் விரோதப் போக்கை வெளிப்படுத்துபவராகவும்  இருந்தார்; பொதுவாகப் பிரமுகர்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களை அவர்களை நேர்காணலில் சொல்ல வைத்தார். 1972இல் ஃபல்லாச்சி நேர்காணலில், தன்னை "தனியாகக் குதிரையில் முன்னேறிச் சென்று வண்டிகளுக்கு வழிகாட்டும் ஒரு கௌபாய்" என்று குறிப்பிட்டதற்காக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் வருந்தினார். இது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

1979இல் ஈரானில் அயதுல்லா கோமெனியுடன் நேர்காணல் கண்டபோது, ஃபல்லாச்சி  இஸ்லாமிய முக்காடு  அணிந்திருந்தார். ஈரானில் பெண்களின் நிலை குறித்து விமர்சித்தபோது, கோமெனி, "உங்களுக்கு இஸ்லாமிய உடை பிடிக்கவில்லை என்றால், அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இஸ்லாமிய முக்காடு  மரியாதைக்குரிய இளம் பெண்களுக்கு மட்டுமே" என்றார். ஃபல்லாச்சி  அதைத் தன் தலையிலிருந்து கிழித்தெறிந்து, "உங்கள் கருணைக்கு மிக்க நன்றி, இமாம். நீங்கள் அப்படிச் சொன்னதால், இந்த முட்டாள்தனமான, இடைக்காலக் கந்தல் துணியை இப்போதே கழற்றப் போகிறேன்" என்றார். ஓரியானா ஃபல்லாச்சி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயர் ஆகியோரையும் நேர்காணல் செய்திருக்கிறார். 

பல போர்முனைகளைக் களத்திலிருந்து செய்தி சேகரித்துச் சொல்லும் பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய ஃபல்லாச்சி இந்திய பாகிஸ்தான் போரின்போதும் களத்திலிருந்து செய்தி அனுப்புபவராகப் பணியாற்றியிருக்கிறார்.

ஃபல்லாச்சி  சில சமயங்களில் பகட்டாளர், தற்பெருமைக்காரர் என்று விமர்சிக்கப்பட்டார். அதே சமயம்  அவரைப் போல வேறு யாரும் துணிச்சலாக இருந்ததில்லை என்றும் பாராட்டப்பட்டார்.  அவரது வாழ்க்கை ஒருபோதும் மந்தமாக இல்லை.

ஃபல்லாச்சி  சிறிய உருவம் கொண்டவர் ஆனால் வெடிக்கும் குணம் கொண்டவர் அதனால்  அவர் 'லா ஃபல்லாச்சி ' என்று அழைக்கப்பட்டார். யார் சொல்வதையும் ஏற்காதவராகவும் சுதந்திரமானவராகவும் அவர் இருந்தார்;  அவர் முட்டாள்களைச் சகித்துக் கொள்ளவில்லை.

ஓரியானா ஃபல்லாச்சி புளோரன்ஸில் பிறந்தார். அங்கு அவரது தந்தை மரவேலை செய்பவராகவும், இரண்டாம் உலகப் போரின்போது பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் அங்கத்தினராகவும் இருந்தார். சிறுமியாக, அவர் எதிர்ப்பு இயக்கத்திற்குத் தூதராக இருந்தார்.  கீரைகளுக்கு நடுவில்  கையெறி குண்டுகளை வைத்துக் கடத்தினார்.

அவரது தாய் புத்திசாலியாக இருந்தபோதிலும், அவரது மனநலம் நாளடைவில்  குன்றியது; அவர் கணவரின் பெரிய கூட்டுக் குடும்பத்திற்காகச் சமைக்கவும் சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டார். ஃபல்லாச்சி , தனது தாய் பட்ட கஷ்டங்களுக்கு ஈடு செய்வதற்காக  அக்காலத்தில் பெரும்பாலும் ஆண்களின் தொழிலாக இருந்த பத்திரிகைத் தொழிலுக்கு வந்ததாகக் கூறினார்.

1950களின் நடுப்பகுதியில்,  ஃபல்லாச்சி ஹாலிவுட்டிலிருந்து இத்தாலியச் செய்தித்தாள்களுக்குப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு அவர் பிரபலமாக இருந்தார். அவரது நண்பர்களில் இங்க்ரிட் பெர்க்மேன்,  சீன் கானரி ஆகியோர் அடங்குவர். அவர் ஷர்லி மெக்லைனுடன் நீண்ட சாலைப் பயணம் ஒன்றையும் மேற்கொண்டார்.

1963 மற்றும் 1964இல், அவர் நாசாவில் நீண்ட காலம் செலவிட்டார்.  அமெரிக்காவின் விண்வெளித் திட்டம் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதினார். விண்வெளி வீரர்களைக் கவர்ந்தார்; அவர்களுடன் குடித்து நடனமாடினார். சந்திரனுக்குச் சென்ற இரண்டாவது பயணத்தில், விண்வெளி வீரர் சார்லஸ் கான்ராட், குழந்தையாக இருந்த ஓரியானாவின் புகைப்படத்தை எடுத்துச் சென்றார்.

ஓரியானா ஃபல்லாச்சி  ஒழுங்கற்றவராக இருந்தார். விமானங்களை விரும்பினார், ஆனால் மின்தூக்கிகளுக்குப் பயந்தார். ஒரு நாளைக்கு மூன்று பாக்கெட் சிகரெட்டுகளைப் புகைத்தார். அதனால் அவருடைய  பற்கள் மோசமாக இருந்தன. கடிதங்களை மாதக்கணக்கில் தாமதமாகவோ அல்லது திறக்காமலோ வைத்திருந்தார். தன் உடல்நலத்தை பற்றிய பல பிரமைகளைக் கொண்டவராகவும் அவர் இருந்தார். தனது அடுக்குமாடிக் குடியிருப்பு அழைப்பு மணியில் யாரும் தனது தனிமையைத் தொந்தரவு செய்யாமல் இருக்க  "தொலைந்து போ" என்று குறிப்புகள் ஒட்டி வைத்தார்.

அவர் திருமணம் செய்யவில்லை, ஆனால் பல நீண்டகாலக் காதல் உறவுகளைக் கொண்டிருந்தார். காதலில் விழுந்தபோது, அது குன்றிலிருந்து விழுவது போல இருந்தது. மோசமான கவிதைகளை எழுதினார் ("மழையை நான் மிஸ் செய்வது போல உன்னை மிஸ் செய்கிறேன்”).

ஃபல்லாச்சி , சோர்போனில் தனியாகப் பட்டம் பெற்றதாகக் கூற விரும்பினார். தனது வேலையைச் செய்ய அவர் தனியாக இருக்க வேண்டியிருந்தது. “யாராவது வீட்டில்  சுற்றித் திரியும்போது எனக்கு எழுதுவதில் சிரமம் உள்ளது," என்று எழுதினார். “ஆண்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்தி எழுதத் தெரியும், ஏனெனில் அவர்களுடைய மனைவிகள் அவர்களைத் தொந்தரவு செய்யத் துணிய மாட்டார்கள். ஆனால் பெண்களுக்கு இது வேறுபட்டது, ஏனெனில் ஆண்கள் எப்போதும் அவர்களைக் குறுக்கிடுகிறார்கள், ஒரு முத்தம் அல்லது ஒரு கப் காபி கேட்கிறார்கள்.”

ஃபல்லாச்சி  தனது வாழ்க்கையின் இறுதி தசாப்தங்களை டஸ்கனிக்கும்  நியூயார்க் நகரத்திற்கும்  இடையில் பிரித்து வாழ்ந்தார். 1990களில், தனது ஆலிவெட்டி தட்டச்சுப்பொறியைப் பழுதுபார்ப்பது கடினமானபோது, தனது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வருவதை அறிந்தார்.

1991இல், தனது மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பது ஃபல்லாச்சிக்குத் தெரியவந்தது. அது அகற்றப்பட்ட பிறகு, அதைப் பார்க்கவேண்டும் என்று மருத்துவமனையில்  கேட்டார். "கடவுளே சபித்த அயோக்கியனே, மீண்டும் வர நினைக்காதே, நீ எனக்குள் சந்ததியை விட்டுச் சென்றாயா? நான் உன்னைக் கொல்வேன்! நீ என்னைத் தோற்கடிக்க மாட்டாய்!” என்று கட்டியிடம் கத்தினார்.

செப்டம்பர் 11, 2001 அன்று, அவர் மன்ஹாட்டனில் இருந்தார். நீண்ட காலமாக இஸ்லாத்தை விமர்சித்து வந்த அவருக்கு , அந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் அவரது வெறுப்பை மீண்டும் தூண்டின. இஸ்லாம் மற்றும் மேற்குலகம் பற்றி மூன்று சர்ச்சைக்குரிய புத்தகங்களை வெளியிட்டார்.

”பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்" (அசல் இத்தாலியத் தலைப்பு: Lettera a un bambino mai nato) முதன்முதலில் 1975இல் இத்தாலியில் ரிசோலியால் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் தாக்கம் உடனடியாகவும் பரவலாகவும் இருந்தது. இது அசாதாரணச் சர்வதேச வெற்றியைப் பெற்று, விரைவாகப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருபத்தேழு நாடுகளில் விற்கப்பட்டது. உலகளாவிய விற்பனை நான்கு மில்லியன் பிரதிகளைத் தாண்டியது.  இது உலகளாவிய வாசகர்களிடையே அதன் வெற்றிக்கு ஒரு சான்றாகும். ஜான் ஷெப்லியின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1976இல் வெளியிடப்பட்டு, அதன் வாசகப் பரப்பை மேலும் விரிவாக்கியது.

இந்தப் பரவலான புகழ், இந்த நாவல்  ஆராய்ந்த கருப்பொருள்களான - பெண் தன்னாட்சி, தாய்மையின் சிக்கலான சங்கடங்கள், சமூக எதிர்பார்ப்புகளுக்கு எதிரான தனிநபரின் போராட்டம்,  ஆழ்ந்த இருத்தலியல் கேள்விகள் - பல்வேறு கலாச்சாரங்களில் உள்ள வாசகர்களை ஆழமாக எதிரொலித்ததைக் குறிக்கிறது. 1970களின் நடுப்பகுதி, பல மேற்கத்திய சமூகங்களில் குறிப்பிடத்தக்கப் பெண்ணிய விழிப்புணர்வு சமூக மாற்றத்தின் காலமாக இருந்தது. ஃபல்லாச்சி யின் கர்ப்பம், தொழில் வாழ்க்கையின் அர்த்தம் தொடர்பான ஒரு பெண்ணின் உள் முரண்பாட்டின் நேர்மையான ஆய்வு, இந்த மாற்றத்தக்கக் காலங்களில் பயணிக்கும் பெண்களின் சொல்லப்படாத கவலைகளையும் அபிலாஷைகளையும் நாவல் வெளிப்படுத்துவதாக இருந்தது.

"பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்" பரவலாக ஒரு சுயசரிதைப் படைப்பாகக் கருதப்படுகிறது. எதிர்பாராத கர்ப்பத்துடன் போராடும் பெயரிடப்படாத இளம் பெண் கதாநாயகி, பெரும்பாலும் ஃபல்லாச்சி யின் புனைகதையாக்கப்பட்ட பிரதிநிதித்துவமாகக் கருதப்படுகிறார். இத்தாலிய விமர்சகர்கள் பலரும் இந்த நாவலை "புனைகதையாக்கப்பட்ட சுயசரிதை, சுய-புனைகதை, ஆசிரியரின் சுயத்தைக் கதையின் புனைகதையுடன் பின்னிப்பிணைத்தல்" என்று விவரிக்கிறார்கள். புனைகதைக்கும் தனிப்பட்ட அனுபவத்திற்கும் இடையிலான இந்தக் கோடுகளின் மங்கல், நாவலின் உணர்ச்சிகரமான தீவிரத்திற்கு மையமானது. ஃபல்லாச்சி யின் பரந்த இலக்கிய, பத்திரிகைப் படைப்புகளுக்குள், “கடிதம்”  ஒரு தனித்துவமான, முற்றிலும் முன்னோடியில்லாத திருப்பமாக அமைந்திருக்கிறது. 

ஒரு போர் அறிக்கையாளராக அவரது விரிவான பணி மற்றும் சக்திவாய்ந்த உலகளாவிய பிரமுகர்களோடு அவரது நேர்காணல்களின் தொகுப்புகளுக்குப் பிறகு, இந்த நாவல் வெளிப்புற மோதல்களின் ஆய்விலிருந்து மாறுபட்டு  ஓர் உள், இருத்தலியல் போரின் சிதைவுக்கு  ஃபல்லஸியின் கவனத்தைத் திருப்பியதாக இருந்தது. உண்மையில், ஒருபோதும் பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம் ஃபல்லாச்சி ஓர்  எழுத்தாளராக வளர்ந்ததில்  ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.  பத்திரிக்கையாளராக அவர் வளர்த்துக்கொண்ட வலிமையான புலனாய்வுக் கண்ணோட்டம்,  இந்த நாவலில் அதே இரக்கமற்ற தீவிரத்துடன் உள்நோக்கித் திருப்பப்பட்ட ஒரு தருணத்தைக் குறிப்பதாக இருக்கிறது. இந்த நாவலில் "போர்" ஓர் அகப் போராக மாறுகிறது. இது கதாநாயகியின் மனசாட்சி, உடல் மற்றும்  ஆன்மாவிற்குள் நிகழ்கிறது. ஆயினும், வாழ்க்கை, இறப்பு, சுதந்திரம், அர்த்தம் - அவர் முன்பு விவரித்த எந்தவொரு வெளிப்புறப் போரிலும் இருந்ததை விட அதிகமாக இல்லாவிட்டாலும், சமமாக உயர்ந்தவையாகச் சித்தரிக்கப்படுகின்றன.

1975இல்  ‘பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்’ வெளியிடப்பட்ட இத்தாலி, குறிப்பாகப் பெண்களின் நிலை மற்றும் உரிமைகள் தொடர்பாக, ஆழ்ந்த சமூக, கலாச்சார மற்றும் சட்ட மாற்றங்களுக்கு உட்பட்ட ஒரு தேசமாக இருந்தது. 1970கள் தீவிரமான பெண்ணிய விழிப்புணர்வு மற்றும்  செயல்பாடுகளுக்கான ஒரு தசாப்தமாக இருந்தது, இது பெரும்பாலும் இத்தாலியப் பெண்ணியத்தின் "இரண்டாம் அலை" என்று குறிப்பிடப்படுகிறது. இந்தச் சகாப்தம் குடும்பச் சட்டம், பெண்களின் உரிமைகளை மறு வடிவமைத்த முக்கியமான சட்டமன்ற மாற்றங்களைக் கண்டது. விவாகரத்து 1970இல் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, வலுவான எதிர்ப்பு இருந்தபோதிலும், 1974இல் ஒரு தேசிய வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்யப்பட்டது. இத்தாலியக் குடும்பச் சட்டத்தின் ஒரு முக்கிய சீர்திருத்தம் (சட்டம் எண் 151/1975) நாவல் வெளியிடப்பட்ட அதே ஆண்டில், 1975இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் திருமணத்திற்குள் சட்டப்பூர்வ பாலினச் சமத்துவத்தை நிறுவியது; கணவரின் பாரம்பரியச் சட்ட ஆதிக்கத்தை ஒழித்தது; மேலும் கள்ளக்காதலைக் குற்றமற்றதாக்கியது. இந்தச் சீர்திருத்தங்கள் வளர்ந்து வரும் பெண்ணிய இயக்கத்திற்கு அரிதாகப் பெறப்பட்ட வெற்றிகளாகும்.  இந்தத் தசாப்தம் முழுவதும், பெண்ணியக் குழுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கின. கார்லா லோன்சியால் 1970இல் இணைந்து நிறுவப்பட்ட ரிவோல்டா ஃபெமினைல் ("பெண்கள் கிளர்ச்சி") போன்ற அமைப்புகள், ஆணாதிக்க நெறிகளுக்குச் சவால் விடும் செல்வாக்குமிக்க அறிக்கைகளை வெளியிட்டன. பெரிய அளவிலான பொதுப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.  குறிப்பாக விவாகரத்து மற்றும், ஃபல்லாச்சி யின் நாவலின் சூழலுக்கு முக்கியமாக, கருக்கலைப்பு பிரச்சினைகளில் பெண்ணிய இயக்கங்கள் கவனம் செலுத்தின. 

 கருக்கலைப்பு  ‘கடிதம்’ வெளியிடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1978இல் சட்டம் 194-ன் கீழ் இத்தாலியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்தப் பிரச்சாரங்களுடன், இத்தாலியின் பெண்ணியச் சொல்லாடல், இந்த ஆற்றல்மிக்க, பெரும்பாலும் சர்ச்சைக்குரிய சமூக-அரசியல் சூழலுக்குள்தான்  ‘பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம் ‘புரிந்து கொள்ளப்பட வேண்டும். நாவலுக்கான விமர்சனங்கள் உறுதிப்படுத்துவது போல, 1970களின் பெண்ணிய விமர்சனங்களின் ஒரு பகுதியாக இந்த நாவல் மிளிர்கிறது. கதாநாயகியின் தொழில், அவளது சுதந்திரம், ஒரு பெண்ணாக அவலது அடையாளம், தாய்மைக்கான வாய்ப்பு - கருக்கலைப்பு பற்றிய அவரது பிரதிபலிப்புகள் உட்பட - பல  வேதனையான உள் விவாதங்கள், இந்தத்  தசாப்தத்தில் எண்ணற்ற இத்தாலியப் பெண்களின் பொது விவாதங்களையும் தீவிரமான தனிப்பட்ட போராட்டங்களையும் நேரடியாகப் பிரதிபலிக்கிறது. தன்னாட்சி தொடர்பான அவளுடைய சங்கடங்கள், பாரம்பரியத் தாய்வழிப் பாத்திரங்களை அவள் கேள்விக்குள்ளாக்குவது,  அவளது சுதந்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு சமூகத்துடனான அவரது மோதல் ஆகியவை தெருக்களிலும், உணர்வு-உயர்த்தும் குழுக்களிலும், அரசியல் அதிகாரத்தின் தாழ்வாரங்களிலும் போராடப்படும் பிரச்சினைகளாகும். நாவல் இவ்வாறு சகாப்தத்தின் வளர்ந்து வரும் பெண்ணியப் பிரக்ஞையின் சக்திவாய்ந்த இலக்கிய வெளிப்பாடாகச் செயல்படுகிறது.

அட்டைப்பட ஓவியம்: சி.டக்ளஸ், தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடு