என்னுடைய புகைப்படத்தின் பின்னணியாக இருப்பது ரிச்சர்ட் வாக்னர் வடிவமைத்து, கட்டிய, அவருடைய இசை நாடகங்களுக்கான அரங்கு. 1876-இல் கட்டி முடிக்கப்பட்ட ரிச்சர்ட் வாக்னரின் ஓபரா தியேட்டர் ஃபெஸ்ட்ஸ்பீல்ஹாஸ் (Festspielhaus), கட்டிட வடிவில் மறைக்கப்பட்டிருக்கும் தத்துவம் என்றுதான் சொல்ல வேண்டும். வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போது, இது ஒரு தொழிற்சாலையைப் போலவே காட்சியளிக்கிறது. இது மிகவும் பொருத்தமானதுதான், ஏனென்றால் வாக்னர் ஒரு வகையில், முற்றிலும் புதிய வகையான பார்வையாளர்களை இங்கே ‘உற்பத்தி செய்ய’ முனைந்தார். : பக்தியுள்ள, அமைதியான, தும்மவே கூடாத பார்வையாளர்கள். பவேரியாவின் மன்னர் இரண்டாம் லுட்விக் (King Ludwig II) இதன் பெரும்பாலான செலவுகளை ஏற்றார். அதாவது, உண்மையைச் சொல்வதானால், இந்த ஃபெஸ்ட்ஸ்பீல்ஹாஸிற்கு நிதியளித்தவர், கலை நயமிக்க அனுபவங்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மனிதர். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், பிற்காலத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு அந்த அர்ப்பணிப்பு தீவிரமாக இருந்தது.
வாக்னரின் மிகச் சிறந்த கட்டிடக்கலை கண்டுபிடிப்பு—இங்கு "சிறந்த" என்ற வார்த்தையை, நடத்துனர்கள் (conductors) ஒன்றரை நூற்றாண்டுகளாக இதற்காகக் கண்ணீர் வடித்து வருகிறார்கள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன்—அங்குள்ள கண்ணுக்குத் தெரியாத இசைக்குழு அமரும் இடம் (invisible orchestra pit) ஆகும். இந்த இசைக்குழு மேடைக்கு அடியில், ஒரு மூடியால் மறைக்கப்பட்டு, ஆறு படிகளாகக் கீழ்நோக்கி இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கும் முதல் வரிசை இருக்கைகளுக்கும் இடைப்பட்ட இந்த இடத்தை வாக்னர் ‘மறைபொருள் வளைகுடா’ என்று அழைத்தார், ஏனெனில் அவர் உண்மையையும் அடையாளத்தையும் தனித்தனியாகப் பிரிக்க விரும்பினார்.
இது, சுருக்கமாகச் சொன்னால், உங்கள் தலையில் ஒரு ஹூடியை ( என் புகைப்படத்தில் நான் செய்திருப்பது போல) மாட்டிக்கொண்டு அதற்கு ஆன்மீகம் என்று பெயரிடுவதற்குச் சமமான ஒரு தத்துவமாகும்.
ஆர்ப்பாட்டங்களுக்குப் பஞ்சமில்லாத வாக்னர், பாரம்பரிய இத்தாலிய ஓபரா தியேட்டர்களைப் பார்த்தபோது அவற்றில் ஒரு பிரச்சனையைக் கண்டார்: அதாவது பார்வையாளர்களால் இசைக் கலைஞர்களைப் பார்க்க முடிந்தது. இடி மின்னலோடு பெய்யும் மழையில் டாக்ஸியை நிறுத்தக் கையாட்டுவதைப் போல, நடத்துனர் தன் கைகளை அசைப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. வயலின், செல்லோ கலைஞர்கள் தங்களுக்குரிய இடைவேளையை எண்ணிக் கொண்டிருப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால், கலையின் பின்னணியில் இருக்கும் செயல்பாடுகளை அவர்களால் பார்க்க முடிந்தது—இதை வாக்னரால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. கலை என்பது ஒரு கடவுளைப் போலவோ, அல்லது திடீரென ஏற்படும் வயிற்று உபாதையைப் போலவோ, அல்லது இரண்டுமே ஒரே நேரத்திலோ எங்கிருந்தோ திடீரென்று தோன்றுவது போல் இருக்க வேண்டும். எனவே அவர் இசைக்குழுவை உயிரோடு தியேட்டரில் புதைத்துவிட்டார். இதனால் ஃபெஸ்ட்ஸ்பீல்ஹாஸில் தனிப்பட்ட இசைக் கருவிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இசைக்குழுவையுமே எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. இசை வெறுமனே. ஒலிக்கிறது. பனியைப் போல. விதியைப் போல. அல்லது இந்த நாற்காலியில் நீங்கள் நான்கு மணி நேரமாக அமர்ந்திருப்பதால் உங்கள் கால்கள் மரத்துப்போய்விட்டன என்ற உணர்வைப் போல.
இத்தாலிய ஓபரா தியேட்டர்களில் இருந்த பாரம்பரிய அடுக்கு இருக்கை (box seating) முறையை வாக்னர் ஒழித்தார். இனி பிரபுக்கள் தங்களுக்கு விசிறிக் கொள்வதோ, பாடல்களுக்கு இடையே கிசுகிசுப்பாகப் பேசுவதோ, மற்றவர்களைப் பார்ப்பதோ அல்லது தங்களைப் பிறர் பார்க்க வேண்டும் என்று நினைப்பதோ சாத்தியமற்றது. அதற்குப் பதிலாக, அவர் செங்குத்தாகச் சாய்ந்த ஒரு திறந்தவெளி அரங்கத்தை (amphitheatre) வடிவமைத்தார். அங்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு இருக்கையிலிருந்தும் மேடை மிகத் தெளிவாகத் தெரியும்—அதாவது, மறைவதற்கு எங்குமே இடமில்லை. பார்வையாளர்கள் அனைவரும் வழிபாட்டுக் கூட்டத்தைப் போல, கலைப்படைப்போடு ஒன்றிணைந்து அமர வைக்கப்பட்டிருப்பார்கள். இது வாக்னர் தனது பாணியில், வெவ்வேறு அளவிலான ஆர்வத்தைக் கொண்ட அனைவரும் ஒரே பொதுவான அனுபவத்திற்குள் ஒன்றாகச் சிக்கியிருக்கிறார்கள் என்று சொல்வதாகும்.
இந்தக் கட்டிடம் மரத்தால்—தேவதாருவாலும் மேப்பிளாலும்—அம்மைகப்பட்டதாகும். இதற்கு முக்கியக் காரணம் வாக்னர் செலவைக் குறைக்க நினைத்ததுதான், அதோடு இது ஒரு தற்காலிகக் அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஒட்டுமொத்த திட்டத்திலேயே மிகவும் தற்செயலான நகைச்சுவையான விஷயம் இதுவாகத்தான் இருக்கும். பதினைந்து மணி நேரம் நீடிக்கும், கடவுள்கள், டிராகன்கள், ஒரு மாய மோதிரம் ஆகியன தேவைப்படும் ஒரு பிரம்மாண்டமான இசை நாடகத் தொடரை உருவாக்கிய வாக்னர், தனது கலைக் கோயிலை மலிவான மரப் பலகைகளைக் கொண்டு கட்டிவிட்டு, இப்போதைக்கு இது போதும் என்று நினைத்தார். இந்த ஃபெஸ்ட்ஸ்பீல்ஹாஸ் தற்காலிகமாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால், இது கட்டி முடிக்கப்பட்டு இப்போது நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இது இன்னும் வாக்னரின் இசை நாடகங்களை நிகழ்த்துமிடமாக இருக்கிறது.
இதன் இரட்டை மேடை வளைவு (double proscenium arch), மேடை உண்மையில் இருக்கும் தூரத்தை விட இன்னும் அதிகத் தொலைவில் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது. இதனால் நடிகர்கள் பெரியவர்களாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்டமான அளவிலும் தோற்றமளிக்கிறார்கள். இதை வாக்னர் தன் பாணியில், நீங்கள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாலும், அடுத்த ஊரிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வுதான் உங்களுக்கு இருக்கும் என்று கூறுகிறார்.
கெசாம்குன்ஸ்ட்வெர்க் (Gesamtkunstwerk) எனப்படும் 'முழுமையான கலைப்படைப்பிற்கு' ஒரு இடைவெளி தேவைப்படுகிறது. உங்களால் ஒரு கடவுளுடன் நெருக்கமாக இருக்க முடியாது; மலையடிவாரத்தில் இருந்து கொண்டு, கண்களைச் சுருக்கி, அவர் கையில் வைத்திருப்பது ஈட்டியா அல்லது மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கைத்தடியா என்று யோசித்துக்கொண்டே அண்ணாந்து மட்டும்தான் பார்க்க முடியும்.
பைரவ்த் விழாவில் (Bayreuth Festival) (வாக்னர் வடிவமைத்த ஓபரா தியேட்டரின் நடக்கும் நாடக விழ்ழ்) கலந்துகொள்வது என்பது நீண்டகாலமாக, திருவாரூர் தியாகராஜர் இசை விழாவில் கலந்து கொள்வது போலவே ஒரு புனிதப் பயணம் என்றே வர்ணிக்கப்படுகிறது. எந்தவொரு நல்ல புனிதப் பயணத்தையும் போலவே, இதிலும் அர்ப்பணிப்பும் அவதிகளும் நிறைந்திருக்கின்றன. இதற்கான டிக்கெட்டுகளைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று. பத்து வருட காலம் கூடக் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் இருக்கிறார்கள். நாடகங்கள் மிக நீண்ட நேரம் நடக்கும்; அதாவது ஒவ்வொரு இசை நாடகமும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரம் வரை நடக்கும். அங்குள்ள இருக்கை வசதி—இதை நான் எப்படிச் சொல்வது?—சமரசம் இல்லாதது, அதாவது சௌகரியமாக இருக்காது. இடைவேளையின் போது, நீங்கள் புகழ்பெற்ற 'பைரவ்த் பிராட்வர்ஸ்ட்' (Bayreuth bratwurst) என்ற இறைச்சியை சாப்பிட்டு யானை விலை குதிரை விலை விற்கும் ஷாம்ப்பெய்னைக் குடிக்கலாம். ஆனால் பைரவ்த் பிராட்வர்ஸ்ட் ஜெர்மானியர்களின் திருமண வாழ்க்கையை விடவும் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய ஒரு கடுகுக் கறையை உங்கள் ஆடம்பரமான உடையில் ஏற்படுத்திவிடும். வாக்னரின் ஓபாராவைப் பார்க்க ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் முழு கோட் சூட் டை சகிதம் வரவேண்டும் என்பது நியதி.
இதுவும் ஒரு தத்துவம்தான். வாக்னர் நீங்கள் சௌகரியமாக இருப்பதை விரும்பவில்லை. சௌகரியம் என்பது உயர்தர வர்க்கத்தினருக்கானது . சௌகரியம் என்பது லா ஸ்காலா (La Scala) தியேட்டருக்குச் சென்று, இசை நாடகம் தொடங்குவதற்கு முன்பே கிசுகிசு பேசும் மனிதர்களுக்கானது. கலைக்காக நீங்கள் துன்பப்பட வேண்டும் என்று வாக்னர் விரும்பினார், ஏனென்றால் துன்பப்படுவதுதான் மேன்மையான நிலையை அடைவதற்கான விலை. ஆடையில் ஏற்படும் அந்தக் கடுகு கறை ஒரு விபத்து அல்ல; அது ஒரு புனிதச் சடங்கு. அது உங்கள் பக்தி உணர்வின் வெளிப்படையான அடையாளம்; நான் அங்கு சென்றிருந்தேன், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன், அந்த இறைச்சியை சாப்பிட்டு ரசித்தேன் என்று பெருமையுடன் சொல்லும் ஒரு மஞ்சள் நிற கௌரவ முத்திரை அது.
இந்தக் கட்டிடத்தின் வரலாறு கூட அபத்தமான பல திருப்பங்களைக் கொண்டது. 1883-இல் வாக்னரின் மறைவுக்குப் பிறகு, இந்த ஃபெஸ்ட்ஸ்பீல்ஹாஸ் ஜெர்மானிய தேசியவாதக் கொள்கை வழிபாட்டின் மையமாக மாறியது. இறுதியில் அது ஹிட்லரின் அரச தியேட்டராக தன்னைத் தரம் தாழ்த்திக் கொண்டது.
இருந்தபோதிலும்—இங்குதான் உண்மையான தத்துவார்த்த நகைச்சுவை ஒளிந்திருக்கிறது—ஃபெஸ்ட்ஸ்பீல்ஹாஸ் இன்னும் நிலைத்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஐம்பத்தெட்டாயிரம் பார்வையாளர்கள் இந்த அனுபவத்தால் மெய்மறந்து தங்களை இழக்கிறார்கள். இசை நடத்துனர்கள் அதன் சாத்தியமற்ற ஒலி அமைப்புடன் (acoustics) தொடர்ந்து போராடி வருகிறார்கள். பார்வையாளர்கள் இருட்டில் அமர்ந்து, கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் தொலைவிலும் பிரம்மாண்டமாகவும் தோன்றும் மேடையை நோக்கியபடி, எங்கிருந்தோ வரும் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த இசையை அவர்களால் பார்க்க முடியாத இசைக் கலைஞர்கள் வாசிக்கிறார்கள்; பாடகர்களின் குரலைக் கூட கேட்க முடியாத ஒரு மனிதர் அதை நடத்துகிறார்.
உண்மையையும் அடையாளத்தையும் பிரிக்கக்கூடிய ஒரு இடத்தை உருவாக்க வாக்னர் விரும்பினார். அவர் நினைத்தது நடந்தது, ஆனால் அவர் எதிர்பார்த்த வழியில் அல்ல. உண்மையான பிரிவினை என்பது இசை நாடகத்தைப் பற்றிய ‘ சிந்தனைக்கும் (idea), அதை நேரில் காணும் அனுபவத்திற்கும் (experience) இடையேதான் இருக்கிறது. அதன் சிந்தனை மிக உன்னதமானது, மேன்மையானது, புராணத்தன்மை வாய்ந்தது. ஆனால் அதன் நேரடி அனுபவமோ: உங்கள் முதுகு வலிக்கிறது, உங்கள் tuxedo உடையில் ஒரு கடுகு கறை படிந்திருக்கிறது, பாடுபவர் சுருதி தவறிப் பாடுகிறார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள், அதோடு இந்த பகுதி எப்போது முடியும் என்றும் உங்களுக்குத் தெரியவில்லை.
அதுதான் உண்மையான 'கெசாம்குன்ஸ்ட்வெர்க்' (Gesamtkunstwerk—முழுமையான கலைப்படைப்பு) என்று நான் நினைக்கிறேன். இதில் இசை, நாடகம் மட்டுமல்லாமல், சௌகரியமின்மை, குழப்பம், அந்தக் கடுகு கறை, ரைன் நதிக்கரையோர பெண்கள் இந்த நாடகம் சீக்கிரம் முடித்தால் நன்றாக இருக்குமே என்ற அமைதியான, ஏக்கமான எதிர்பார்ப்பும் அடங்கும்.
அந்த மறைபொருள் வளைகுடா, மேடைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இல்லை என்பது இப்போது புரிகிறது. அது வாக்னர் கொடுத்த வாக்குறுதிக்கும், அவர் நிஜத்தில் கொடுத்த கட்டிடத்திற்கும் இடையேதான் இருக்கிறது. அந்தப் புகழ்பெற்ற, கடக்க முடியாத, ஆழமான மனிதநேயம் மிக்க வளைகுடாவில், நாம் மேன்மையான ஆன்மீக நிலையை அடைவதில்லை; மாறாக அதைவிட மிகவும் மதிப்புமிக்க ஒன்றைக் கண்டடைகிறோம்: அது நம் ஆடையில் இருக்கும் கடுகு கறைகளோடு சேர்த்து, நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்ளும் மனப்பக்குவம்.
