Thursday, September 3, 2026

பிராக் (Prague) நகர வீதிகளில்: பகுதி 2 குந்தேரா









ஆண்- பெண் காதலுறவுகளை அதிகார மேலாண்மைக்கான போராட்டமாகவும் நாட்டு வரலாறு, அரசியல் சித்தாத்தங்கள் ஆகியன இடையீடு செய்யும் வெளியாகவும் சித்தரித்து எழுதியதில் மிலன் குந்தேராவுக்கு நிகர் மிலன் குந்தேராதான். அவருடைய நாவல்களில் குறிப்பாக The Joke, Unbearable Lightness of Being ஆகிய நாவல்களில் உள்ளார்ந்து இருக்கும் ஆண்-பெண் அதிகாரமேலாண்மைக்கான போராட்டம் வெளிப்படையாக சொல்லப்படுவது The Hitchhiking Game சிறுகதையில்தான். பாலின்ப வெளியில்தான் நாம் மற்றமையை ( the Other) வேறு எந்த செயலையும் விட முற்றிலுமாக புதிதாகக் கண்டுபிடிக்கிறோம் என்பதையும் சொல்கிற கதை. Laughable Loves என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள இந்தக் கதையைப் பற்றி குந்தேரா கூறுகையில் தன்னுடைய அத்தனை படைப்புகளுக்குமே Hitchhiking Game என பெயர் வைத்திருக்கலாம் என்றார். கதையில் ஒரு இளைஞனும் அவனுடைய தோழியும் காரில் விடுமுறைக்காக செல்கிறார்கள். அவர்கள் பொழுதுபோவதற்காக role playing விளையாட்டு ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். அவன் நெடுஞ்சாலையில் காரோட்டி செல்லும் இளைஞன் அவள் சாலையில் வழிமறித்து அவன் காரில் பயணம் செய்யும் விபச்சாரி. விளையாட்டு தீவிரமடையும்போதெல்லாம் இளைஞனுக்கு அவள் எப்படி இப்படி தத்ரூபமாக நடிக்கிறாள் என்ற அச்சம் ஏற்படுகிறது. அவள் விளையாட்டிலிருந்து விலக நினைக்கும்போது அவன் விடுவதில்லை அவன் விரும்பும்போது அவள் விளையாட்டிலிருந்து வெளிவருவதாயில்லை. கடைசியில் விளையாட்டு அவர்களுக்கிடையே வன்முறையிலும் அழுகையிலும் முடிகிறது. குந்தேரா இந்தக் கதைக்கருவைப் பற்றி ஒரு முறை, "They reflect the small number of themes that obsess me, define me, and, unfortunately restrict me. Beyond these themes, I have nothing else to say or write" என்று கூறினார். ஒருவேளை நமக்கான பாத்திரங்களை நடிப்பதுதான் உறவோ?



காஃப்காவின் பிராக்  உள்மன  உளவியல் ரீதியான பிரமை என்றால், மிலன் குந்தேராவின் பிராக்  தீவிரமான அரசியல், உணர்ச்சி, சோகங்கள் நிறைந்த மேடையாகும். சர்வாதிகாரம், கலாச்சார மறுமலர்ச்சி, பேரழிவை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் ஊடாக, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த நகரம் கடந்து வந்த மாற்றங்களை குந்தேரா தனது எழுத்துகளில் படம்பிடித்தார்.

       

குந்தேரா புகழ்பெற்ற FAMU திரைப்படப் பள்ளியில் இலக்கியமும் திரைப்படத் தயாரிப்பும் கற்க பிராக் நகருக்கு குடிபெயர்ந்தார், பின்னர் அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றினார். 1968 இன் பிராக் வசந்தம் (Prague Spring) காலக்கட்டத்தில் அவர் ஒரு முக்கிய ஆளுமையாக இருந்தார்—செக் கலைஞர்களும் அறிவுஜீவிகளும் மனிதநேயமிக்க சோசலிசத்தை உருவாக்க முயன்ற  உற்சாகமான காலம் அது. குந்தேராவைப் பொறுத்தவரை, அக்காலத்து பிராக் நகரம் ஜாஸ் இசை, புதுமையான கலையைத் தேடிய  அரங்குகள், தத்துவ விவாதங்களால் நிறைந்த ஐரோப்பாவின் அறிவுசார் தலைநகரமாக விளங்கியது.


1968 ஆகஸ்டில், சோவியத் டாங்குகள் பிராக் நகருக்குள் நுழைந்து அந்த எழுச்சியை ஒடுக்கின. குந்தேராவின் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன, அவரது பேராசிரியர் பதவி பறிக்கப்பட்டது, மேலும் அந்த நகரத்தின் துடிப்பான கலாச்சார வாழ்க்கை கம்யூனிச ஆட்சியால் முறையாக அழிக்கப்பட்டது. நம்பிக்கையிலிருந்து விரக்திக்கு மாறிய இந்தத் திடீர் மாற்றமே அவரது மிகவும் பிரபலமான The Unbearable Lightness of Being  நாவலின் முக்கிய பின்னணியாகும். அவரது எழுத்தில் இந்த நகரம் அழகு, சோகம், ஆக்கிரமிப்பு நிறைந்த ஒரு தனித்துவமான பாத்திரமாகவே மாறுகிறது.


குந்தேராவின் செக் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர் 1975 இல் பிரான்சுக்கு தப்பி ஓடினார். பாரிஸிலிருந்து அவர் பிராகைப் பற்றி எழுதியபோது, சோவியத் ஆட்சியின் கீழ் இருந்த நகரத்தைப் பற்றி எழுதாமல், நினைவுகளில் தொலைந்து போன ஒரு சொர்க்கமாகவே அதை எழுதினார். அவர் மறதி என்ற கருத்தாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்; அந்த அரசியல் ஆட்சி பிராக்கின் வரலாற்று அடையாளத்தையே துடைத்தெறிய முயல்வதாக அவர் வாதிட்டார். இதனை The Book of Laughter and Forgetting புத்தகத்தில் எழுதியிருக்கிறார்: "அதிகாரத்திற்கு எதிரான மனிதனின் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவாற்றலின் போராட்டமே ஆகும்.”


நானும் ஸ்டெஃபியும் சிறிய சதுக்கம் ஒன்றில் நுழைந்தோம். தவறான பாதையில் சென்று, தத்துவக் கருத்தரங்கிற்குள் தங்களை அறியாமல் வந்துவிட்டவர்களைப் போல, அந்தத் திடீர் வெளிச்சத்தில் கண்சிமிட்டி நின்றோம். ஒரு இளம் ஜோடி கைகோர்த்தபடி எங்களைக் கடந்து சென்றது. அவர்களின் சிரிப்பொலி திடீரென ஒரு விசித்திரமான சத்தமாக ஒலித்தது. அவர்கள் அநேகமாக 'த்ர்தெல்னிக்' (trdelník) வாங்கப் போய்க்கொண்டிருக்கலாம். அது வெறும் கேக் என்பதை விட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அகோர கலோரி உருவம்; டயட்டை முற்றிலுமாக ஏளனம் செய்வது போன்ற மாவுவும் சர்க்கரையும் சேர்ந்த  சுருள் வடிவம் அது.


என் பார்வையை கவனித்த ஸ்டெஃபி, “அதைப்பற்றி யோசிக்கக் கூட செய்யாதே,” என்றாள். த்ர்தெல்னிக் செக் குடியரசின் பாரம்பரிய உணவு அல்ல. அது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் வேலை. புகைப்படம் எடுத்துவிட்டு, பிறகு தூக்கியெறிவதற்காகவே இருக்கும் கேக்.  அது சாப்பிடக்கூடிய ஒரு செல்ஃபி ஸ்டிக்.”


'ஆனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே,' என்றேன் நான், அந்த ஜோடியைப் பார்த்தபடி. த்ர்தெல்னிக் கேக்கை நினைத்து மனதில் சப்புக்கொட்டியபடி. 


“அவர்கள் காதலிப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.” அவள் பெருமூச்சு விட்டாள். “குந்தேராவுக்கு  இது புரிந்திருக்கும். காதல் என்பது பிரம்மாண்டமான செயல்களில் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். அது மிகச்சிறிய முடிவுகளில் இருக்கிறது. கைகளைக் கோர்த்துக்கொள்வதற்கான முடிவு. ஒரு கேக்கை பகிர்ந்து கொள்வதற்கான முடிவு. ஒருவரோடு ஒருவர் தங்குவது கடினமாக இருக்கும்போதும் தங்கியிருப்பதற்கான முடிவு. இதைப்பற்றித்தான் அவர் எழுதினார். பெரிய வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி அல்ல, மாறாக அவற்றின் நிழலில் நிகழும் சிறிய மனிதத் தருணங்களைப் பற்றித்தான்.”


குந்தேராவின் ஆன்மா இங்குள்ள கற்களில் இல்லை, மாறாக மனிதர்களுக்கு இடைப்பட்ட வெளிகளில், ஒருவரையொருவர் கடந்து செல்லும் வாழ்க்கையின் தர்மசங்கடமான நகர்வுகளில், ஒரே ஒரு மதியப் பொழுதில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்ட முடிவுகளில் இருப்பதை நான் உணர்ந்தேன். அவர் இந்த ஜோடியைப் பார்த்திருந்தால், அவர்கள் வேறு ஆயிரம் இடங்களில், வேறு ஆயிரம் மனிதர்களாக இருந்திருக்க முடியும் என்ற நிலையிலும்—இப்போது, இங்கே இருந்து இந்த கேக்கை வாங்க அவர்கள் எடுத்த முடிவின் unbearable lightness ஐ எண்ணி வியந்திருப்பார். இந்த நகரத்தின் வரலாற்றின் பாரம் எல்லோரையும் அழுத்துகிறது; அதன் மக்கள், குந்தேராவின் கதாபாத்திரங்களைப் போலவே, காதல், காமம் அல்லது வெறும் உத்வேகத்தின் பெயரால் சிறிய, ஆனால்  பெரும்பாலும்  தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.


"உனக்குத் தெரியுமா," என்றாள் ஸ்டெஃபி, "குந்தேரா நாட்டை விட்டு பிரான்சுக்குச் சென்ற பின் செக் மொழியில் எழுதுவதை நிறுத்தினார். ஒரு பிரெஞ்சு எழுத்தாளராக மாறினார். இங்குள்ள சிலர் அதனால் அவர் மேல் கோபமாக இருக்கிறார்கள். அவர் எங்களைக் கைவிட்டுவிட்டார் என்று சொல்கிறார்கள்.”


"நீ என்ன நினைக்கிறாய்?”


 "வெளியேறுவது என்பதும்கூட ஒரு முடிவுதான் என்று நான் சொல்வேன். ஒருவேளை அதுதான் மிகக் கடுமையான முடிவாக இருக்கலாம். அவர் பிரெஞ்சு மொழியில் எழுதியபோதும், பாரிஸில் வாழ்ந்தபோதும், பிராக்  நகரத்தை எப்போதும் தன்னுடனேயே சுமந்து சென்றார். இந்த நகரத்திலிருந்து உன்னால் தப்பிக்க முடியாது. அது உன்னைப் பின்தொடரும். அது உன் இரத்தத்தில், உன் எலும்புகளில், உன் கனவுகளில் கலந்திருக்கும். குந்தேராவுக்கு இது தெரிந்திருந்தது. அதனால்தான் அவருடைய புத்தகங்கள் இவ்வளவு சோகமாக இருக்கின்றன. அவருடைய கதாபாத்திரங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் அல்ல, மாறாக அவர்கள் எப்போதும், எப்போதும் வேறொரு இடத்தின் பாரத்தைத் தங்களுக்குள் சுமந்து கொண்டிருப்பதால்தான்.”


அந்த ஜோடி சந்தில் திரும்பி மறைந்தது, நான் அவர்களின் கதையைப் பற்றி யோசித்தேன். குந்தேராவுக்கு இது தெரிந்திருக்கும். குந்தேரா அவர்களின் கதையை மூன்று வெவ்வேறு வழிகளில் எழுதியிருப்பார்; ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு முரணாக இருந்திருக்கும், ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் உண்மையாகவே இருந்திருக்கும்.


குந்தேராவின் “Ignorance”  நாவலில் வரும் இரேனாவும் (Irena) ஜோசப்பும் (Josef)  செக்கோஸ்லோவாக்கியாவில் (தற்போதைய செக் குடியரசு) கம்யூனிச ஆட்சி இருந்தபோது நாட்டை விட்டு வெளியேறி, பிரான்ஸிலும் டென்மார்க்கிலும் குடியேறியவர்கள். இருபது ஆண்டுகள் கழித்து, கம்யூனிச வீழ்ச்சிக்கு பின் அவர்கள் பிராக்  நகரத்திற்குத் திரும்புகிறார்கள்.


அவர்களுடைய கதைகள் கேட்க ஆளில்லாத கதைகளாக இருக்கின்றன.

இரேனா பிராக் திரும்பியதும், அவளுடைய பழைய தோழிகளைச் சந்திக்கிறாள். பிரான்சில் அவள் அனுபவித்த கஷ்டங்கள், அவளது புதிய வாழ்க்கை முறையைப் பற்றி பேச முற்படுகிறாள். ஆனால், அவளது தோழிகளுக்கு அதைக் கேட்க எள்ளளவும் ஆர்வமில்லை. அவர்கள் அவளுக்கு பிரெஞ்சு ஒயின்  கொடுத்து உபசரிக்கிறார்கள்; அதாவது, அவள் ஒரு 'செக்' பெண் என்பதை மறந்துவிட்டு, அவளை பிரெஞ்சு சுற்றுலாப் பயணியாகவே தாயகத்தில் இருப்பவர்கள், வெளியேறியவர்களின் இருபது வருட வாழ்க்கையை ஒரு பூஜ்ஜியம் போலவே கருதுகிறார்கள். இரேனா தன் சொந்த மண்ணிலேயே அன்னியமானவளாக இருக்கிறாள்


 இரேனாவுக்கு நேர்மாறாக, ஜோசப் தன் கடந்த கால நினைவுகளைத் திட்டமிட்டு மறக்க நினைப்பவன். டென்மார்க்கில் அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கை இருக்கிறது. அவன் பிராக் திரும்பும்போது, அவனது அண்ணன் அவன் பதின்பருவத்தில் எழுதிய பழைய டைரியைக் கொடுக்கிறான். அதை வாசிக்கும் ஜோசப்பிற்கு, அதை எழுதியது தான் தான் என்பதை நம்பவே முடியவில்லை. அந்த டைரியில் இருக்கும் இளைஞன் அவனுக்கு ஒரு முற்றிலும் புதிய மனிதனாகத் தெரிகிறான். ஜோசப்புக்கு, அவனது கடந்த காலம் அவனுக்குச் சொந்தமில்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.


இரேனாவும் ஜோசப்பும் ப்ராக் நகரில் ஒரு ஹோட்டலில் தற்செயலாகச் சந்திக்கிறார்கள். கடந்த காலத்தில் அவர்களுக்குள் ஒரு சிறிய ஈர்ப்பு இருந்திருக்கும். இப்போது, இந்தத் தாயகம் திரும்பிய வேதனையான தருணத்தில், அவர்கள் ஒருவரையொருவர் தங்களின் கடந்த காலத்தின் சாட்சிகளாகப்  பார்க்கிறார்கள். இரேனாவுக்கு ஜோசப்பை நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் ஜோசப்பிற்கு இரேனா யார் என்பதே நினைவில்லை. அவர்களின் நினைவுகள் சமமாக இருப்பதில்லை. ஒருவரது நினைவு, மற்றவரது மறதியால் சிதைக்கப்படுகிறது.


இருவருமே தாங்கள் நினைத்து வந்த பிராக் நகரம் இனி தங்களுக்குச் சொந்தமானதல்ல என்பதை உணர்கிறார்கள். இரேனா மீண்டும் பாரிஸுக்கும், ஜோசப் டென்மார்க்கிற்கும் திரும்புகிறார்கள்.


The Joke நாவலின் இலக்கியப் பிரதியை, அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியின் பிடியிலிருந்து அதன் ஆசிரியர் குந்தேராவால் எப்போதும் மீட்டெடுக்க முடியும்; அதை ஒரு புதிய சூழலில் பொருத்தி, ஒரு புதிய வாசிப்பைப் பரிந்துரைக்கவும் அவரால் இயலும். இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக 1982-இல் எழுதிய முன்னுரையில் குந்தேரா இதைத்தான் செய்தார். அவர் எழுதுகிறார்: “1980-ஆம் ஆண்டில், எனது படைப்புகள் குறித்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது, ஒருவர் ‘தி ஜோக்’ நாவலை, ‘ஸ்டாலினியத்திற்கு  எதிரான ஒரு முக்கியமான குற்றப்பத்திரிகை’ என்று அழைத்தார். உடனே நான் குறுக்கிட்டு, "தயவுசெய்து உங்கள் ஸ்டாலினியத்தை என்னிடம் கொண்டு வராதீர்கள். ‘தி ஜோக்’ என்பது ஒரு காதல் கதை!" என்று உடனடியாகப் பதில் சொன்னேன்”


“தி ஜோக்” நாவலில்  விதிவசத்தால் எழுதப்பட்ட அந்த அஞ்சல் அட்டையால்  தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, லுத்விக் ஜான் (Ludvik Jhan) ஏதோ ஒரு வகையில் ஒரு வெற்றிகரமான விஞ்ஞானியாக மாறுகிறான்; மேலும் தனது பழைய நண்பர்களைப் பழிவாங்கவும், அந்த அஞ்சல் அட்டையைப் பெற்றுக் கொண்ட ஹெலினாவை  வசியப்படுத்தவும் முடிவு செய்கிறான். இந்த நாவல் கணிக்க முடியாத விளைவுகளை நோக்கி நகர்கிறது; இறுதியில் லுத்விக் ஜான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்கிறான். அதை மீண்டும் குந்தேராவின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: '.....ஒரு கதாபாத்திரம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அற்பத்தனமான நிலைக்குத் தள்ளப்பட்டால், அவனால் வரலாற்றின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முடியுமா? முடியாது. வரலாற்றின் முரண்பாடுகளும், தனிப்பட்ட வாழ்க்கையின் முரண்பாடுகளும் ஒரே மாதிரியான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்: லுத்விக் தனக்காக விரித்த ஏமாற்று வலையில் ஹெலினா வந்து விழுகிறாள்; லுத்விக்கும் மற்ற அனைவரும் வரலாறு அவர்கள் மீது விளையாடிய ஒரு நகைச்சுவை (joke) என்ற வலையில் வந்து விழுகிறார்கள்:  வரலாறு ஒரு நல்ல நகைச்சுவையை ரசித்துச் சிரிக்கிறது என்ற உணர்வை எனக்குத் தருவது இத்தகைய காலங்கள்தான்.


ஸ்டெஃபி “எனக்கு ஹெலினா கதாபாத்திரத்தை மிகவும் பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு என் கைகளோடு தன் கைகளைக் கோர்த்துக்கொள்கிறாள்.

—-

புகைப்படம் 1: Czech artist David Černý aims giant middle finger at Prague Palace

புகைப்படம் 2 : trdelník - The Czech street  food that's not Czech