Friday, September 4, 2026

பிராக் (Prague) நகர வீதிகளில்: பகுதி 3 ஹாவெல்




நாடக ஆசிரியரான வேக்லவ் ஹாவெல் (Václav Havel)  செக் குடியரசின் அதிபரான வரலாறு எனக்கு என்றுமே ஆச்சரியத்தை அளிக்ககூடியது. நானும் ஸ்டெஃபியும்  வல்டாவா (Vltava) ஆற்றைப் பாலத்தின் வழியே  ஹாவெலின் நாடகங்களைப் பற்றி பேசிக்கொண்டே கடந்துகொண்டிருந்தோம்;  புனிதர்களின் சிலைகளும் செல்ஃபி ஸ்டிக்குகளும் நிறைந்த அந்தப் பிரம்மாண்டமான சார்லஸ் பாலத்தின்  வழியாக அல்ல. அதற்குச் சற்று மேலே இருந்த, அமைதியான, எஃகாலும் கான்கிரீட்டாலும் கட்டப்பட்ட   ஒரு சாதாரணப் பாலம் வழியாகக் கடந்தோம்.   வல்டாவா நதி  கீழே பழுப்பு நிறத்தில், பாய்ந்துகொண்டிருப்பதை பார்த்தபடி பாலத்தில் சற்று நேரம் நின்று கொண்டிருந்தோம். நதியின் நீரோட்டம் என்னதான் சொல்கிறது? நான் ஹாவெலின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றைச் சொன்னேன்: “ஒரு மனிதனின் உண்மையான சோதனை, தனக்காக அவன் உருவாக்கிக்கொண்ட பாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக நடிக்கிறான் என்பதில் இல்லை; மாறாக, விதி அவனுக்கு ஒதுக்கிய பாத்திரத்தை அவன் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறான் என்பதில்தான் இருக்கிறது.”

“யாருக்குத் தெரியும்” என்றாள் ஸ்டெஃபி, “யாருக்குத் தெரியும் இது விதி  எனக்குத் தந்த பாத்திரம் என்று?” 

“ஹாவெலுக்குத் தெரிந்திருந்தது, இல்லையா?”

ஹாவெல் 1936 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று பிராக்  நகரில் ஒரு பணக்கார  குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்ப பின்னணி காரணமாக, கம்யூனிச அரசு இவருக்கு உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை மறுத்தது. அதனால் அவர் இரவு நேரப் பள்ளியில் படித்து தன் கல்வியைத் தொடர்ந்தார்.

1968 ஆம் ஆண்டு நடந்த 'பிராக் வசந்தம்'  என்றழைக்கப்படும் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, அவருடைய படைப்புகளுக்கு கம்யூனிச அரசு தடை விதித்தது.  அரசாங்கத்தின் பொய்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் பேசியதால், ஹாவெல் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள்  சிறைவாசம் அனுபவித்தார்.1989 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த வன்முறையற்ற 'வெல்வெட் புரட்சி'  மூலம் கம்யூனிச ஆட்சி வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு, மக்கள் செல்வாக்குடன் செக்கோஸ்லோவாக்கியாவின் அதிபராக ஹாவெல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1993 இல் நாடு பிரிந்த போது, செக் குடியரசின் முதல் அதிபராகப் பொறுப்பேற்று 2003 வரை பதவி வகித்தார். ஹாவெல் 2011 டிசம்பர் 18 அன்று மறைந்தார்.

 ஹாவெலின் The Garden Party  நாடகத்தில் ஹூகோ அரசாங்க வேலை ஒன்றைப் பெறுவதற்காக தோட்ட விருந்து ஒன்றிற்கு அனுப்பப்படுகிறான். அங்கே புழங்கும் அதிகாரிகளின் அபத்த அரசு மொழியை சீக்கிரமாக அவனும் பழகிவிடுகிறான். மனிதர்களை வெறும் எந்திரங்களாக மாற்றும் அரசாங்கத்தின் அதிகார மொழியையும், அர்த்தமற்ற விதிகளையும் அவன் தொடர்ந்து பேசும் போது அவனுக்கு என்று ஒரு சுயம் இல்லாமலாகிவிடுகிறது. ஆனால் அவன் பேசும் அரசு அதிகார மொழி அவனை வேலைக்கு எடுக்கவிருக்கும் இயக்குனரையே குழப்பத்திலும் ஆழ்த்திவிடுகிறது.

The Memorandum  நாடகத்தில்  அலுவலகங்களில் தகவல்தொடர்பை மேம்படுத்த 'பிடிபெட்' (Ptydepe) என்ற புதிய, செயற்கையான மொழியை அரசு அறிமுகப்படுத்துவதை புனைவாகக் கொண்டு கம்யூனிச ஆட்சியின் விசித்திரமான கட்டுப்பாடுகளை கேலி செய்தது.

The Increased Difficulty of Concentration   மனிதர்களின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் கணினிகள்  கட்டுப்படுத்த முயலும் எதிர்காலவியல் நாடகம். 

விதி என்பது ஹாவெலின் நாடகங்களைப் பொறுத்தவரை மொழிக்கட்டுமானமாக, குறிப்பாக, அரசு எந்திரத்தின் மொழியாக இருப்பதாகவும் விதியின் பாத்திரத்தை நடிப்பது என்பது அதற்கு ஒட்டி ஒழுகுவதாக இருக்க வேண்டியதில்லை அதற்கு எதிரானதாகவும் இருக்கலாம் என்று நான் ஸ்டெஃபியிடம் தெரிவித்தேன். 

அரசியல், மனித உரிமைகள் குறித்து ஹாவெல் எழுதிய கட்டுரைகள் உலகம் முழுவதும் இன்றும் பேசப்படுகின்றன. “அதிகாரமற்றவர்களின் அதிகாரம்” என்ற ஹாவெலின் கட்டுரை அவருடைய  மிகச்சிறந்த தத்துவக் கட்டுரையாகக் கருதப்படுகிறது. ஒரு சாதாரண குடிமகன் பொய்களுக்குப் பணியாமல், தன் அன்றாட வாழ்க்கையில் “உண்மையோடு வாழ்தல்" (Living in truth) மூலமே ஒரு சர்வாதிகார அரசை வீழ்த்த முடியும் என்பதை இதில் விளக்கியிருப்பார். அது ஒரு உள்ளுணர்வு மிக்க அரசியல் பார்வை என்று ஸ்டெஃபி சொன்னாள்.

ஐந்து ஆண்டு சிறைவாசத்தின் போது, தனது மனைவி ஒல்காவிற்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு Letters to Olga என்று வெளிவந்திருக்கிறது. சிறைத்துன்பங்களுக்கு மத்தியிலும் மனித நேயம், தத்துவம்,  சுதந்திரம் ஆகியவை  பற்றிய ஆழமான சிந்தனைகளையே ஹாவெல் தன் கடிதங்களில் பகிர்ந்திருந்தார்.

ஆற்றுப் பாலத்திலிருந்து நாங்கள் பிராக் ந்கரக் கோட்டையைப் பார்த்தோம். "இந்தக் கோட்டை ஒரு குறியீடு. அது எப்போதுமே ஒரு குறியீடாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், அந்த குறியீட்டின் அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இதற்கு அதிகாரம் என்று பொருள். பின்னர், கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில், இதற்கு ஒடுக்குமுறை என்று பொருள். அதற்குப் பிறகு ஹாவெல் இங்கே குடிவந்தார், அப்போது இதன் அர்த்தமே மாறிப்போனது.” 

“எப்படி?"

 "ஒரு எழுத்தாளரும் அதிபராக முடியும் என்பதுதான் அதன் புதிய அர்த்தம். உண்மையைச் சொன்னதற்காகப் பல ஆண்டுகள் சிறையில் கழித்த ஒரு மனிதன், அந்தக் கோட்டைக்குள் கைதியாக அல்லாமல், ஒரு தலைவனாக நுழைய முடியும் என்பதன் அர்த்தம். கற்பனை செய்ய முடியாத விசித்திரங்கள் கூட நிஜமாக மாறக்கூடும் என்பதன் அர்த்தம். இதுதான் ஹாவெல் விட்டுச் சென்ற மரபு. அவருடைய அரசியல் சீர்திருத்தங்களோ, அல்லது அவருடைய உரைகளோ அல்ல; மாறாக, 'சாத்தியமற்றதும் சாத்தியமே' என்பதை அவர் நிரூபித்துக் காட்டிய அந்த உண்மைதான் அவருடைய மரபு.”

பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பிற்குள், ஹாவெல் கூறிய "உண்மையோடு வாழ்தல்" (living in truth) என்ற தத்துவத்தைப் பற்றி நான் சிந்தித்தேன். அது ஒரு உன்னதமான, முற்றிலும் சாத்தியமற்ற ஒரு லட்சியவாதக் கருத்து போலத் தோன்றியது. ஆனாலும், அந்தக் கோட்டையின் நிழலில் நின்றுகொண்டு யோசிக்கும் போது, அது ஒரு வெறும் தத்துவமாகத் தெரியாமல், ஒரு நடைமுறை சவாலாகவே எனக்குப் பட்டது. உண்மையை மறைப்பதற்காகவே இங்கிருக்கும் தரைக்கற்கள் கூட பதிக்கப்பட்டிருக்கும் போது, நீங்கள் எப்படி உண்மையோடு வாழ முடியும்?  இரகசிய உளவுத்துறையின் அடித்தளத்தின் மீது, உங்களால் எப்படி ஒரு ஜனநாயகத்தைக் கட்டமைக்க முடியும்? அதிகாரத்தின் கோட்டையை எப்படிக் மனசாட்சியின் இல்லமாக மாற்ற முடியும்?

ஸ்டெஃபி சொன்னாள், “ஹாவெல் அதிபராவதற்கு முன்பு ஒரு நாடக ஆசிரியர். அரசியல் என்பது ஒரு நாடகம் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். அதிகாரம் என்பது ஒரு நடிப்பு என்றும், அரசாங்கம் என்பது நாம் நமக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு கதை என்றும் அவர் அறிந்திருந்தார். ஒரு சிறந்த நாடக ஆசிரியரைப் போல, இந்தக் கதையை மீண்டும் மாற்றி எழுத முடியும் என்பதும் அவருகுத் தெரிந்திருந்தது. ஒரு சோகக் கதையை நகைச்சுவையாக மாற்ற முடியும்; ஒரு கைதியை அதிபராக மாற்ற முடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

ஹாவெல் இந்த நாட்டின் கதையை மாற்றி எழுதினார்; கோட்டையின் இயற்பியல் அமைப்பை மாற்றுவதன் மூலம் அல்ல, மாறாக அதற்குள் நடந்த நிகழ்வுகளின் அர்த்தத்தை மாற்றுவதன் மூலம். ஒரு புரட்சியாளர் அதிபராக முடியும், ஒரு கைதி ஒரு சிறந்த ராஜதந்திரியாக முடியும், ஒரு எழுத்தாளன் தலைவனாக முடியும் என்பதை அவர் உலகிற்குக் காட்டினார். இது எல்லாக் கதை மரபுகளையும் உடைத்தெறியும் ஒரு கதை, மேலும் இதுதான் உலகிலேயே மிகச் சிறந்த 'செக்' (Czech) நாட்டுப் புரட்சிக் கதை.”

"இந்த ஆறு," என்றாள் ஸ்டெஃபி , பாலத்தின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்தபடி “ ஆனால்  ஹ்ரபாலினுடைய (Hrabal) ஆறு. ஹாவெலுடையது அல்ல” என்றாள்.

வல்டாவா ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் மேல் பல பாலங்கள் கட்டப்பட்டிருந்தன.  

“‘செக்' பெண்கள் எவ்வளவு wild ஆனவர்கள் என்று தெரிந்தால்தான் கவி ரபாலினுடைய (Hrabal) tenderness எப்படிப்பட்டது என்று தெரியவரும் “ என்றாள் ஸ்டெஃபி. 

அன்றிரவு நானும் ஸ்டெஃபியும் Karlovy Lazne இரவு விடுதியில் நடனமாடச் சென்றோம். 

---

புகைப்படம்:  வல்டாவா நதியின் மேல் கட்டப்படுள்ள பாலங்கள், பிராக் நகரம்