பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி, தமிழ்வெளி பதிப்பக வெளியீடு. புத்தக வடிவமைப்பு: யுகாந்தன், ஜப்பானிய மரச்செதுக்கு ஓவியங்கள் அடங்கியது: தொடர்பு எண்: +91 90940 05600
———
கவிதை, கவிதையியல் ஆகியன பற்றிய என் சிந்தனைகளுக்கும் அவற்றின் தொடரிழைகளுக்கான, ஊடுபாவுகளுக்கான அடிகட்டுமானங்களை பாஷோவின் கவிதை மொழிபெயர்ப்புக்கு நான் எழுதிய ஒன்பது பாகங்களைக் கொண்ட ஜென் தருணங்களைப் பற்றிய முன்னுரையில் வாசிக்கலாம்.
——-
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 1. மலைப்பாதை
———-
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் ஜென் தருணங்கள் பலவற்றை உருவாக்கக்கூடியன. ஜென் தருணங்கள் திடீரென உருவாகக்கூடிய உணர்வறிதலை கவனப்படுத்தப்படக்கூடியவை. பாஷோ கவிதைகளில் பின்வரும் மொழிபெயர்ப்பை வாசியுங்கள்.
ப்ளம்மின் வாசனையினூடே
சூரியனின் திடீர் எழுச்சி
மலைப்பாதை!
இதன் ஜப்பானிய மூலம்:
Ume ga ka ni
notto hi no derà
yama ji kana
இதற்கு ஆங்கிலத்தில் பல மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன:
Mountain path –
sun rising
through plum scent.
என்பது லூசியன் ஸ்டிர்க்கின் மொழிபெயர்ப்பு
A waft of ume
and out of the blue the sun
on the mountain path
என்பது ஆண்ட்ரூ ஃபிட்ஸிமோன்ஸின் மொழிபெயர்ப்பு. உணர்வெழுச்சி ப்ளம்மின் வாசனையால் தூண்டப்பட்டாலும் சூரிய தரிசனமானது மலைப்பாதையாலேயே சாத்தியமானது. ஆகவே ஜென் தருணத்திற்கான realisation உணர்வெழுச்சியின் அழகு ஈர்த்தாலும் தரிசனத்திற்கு இட்டுச்சென்றது பாதையே அது கரடு முரடான pathless path என்று எனக்குத் தோன்றியதால் என் மொழிபெயர்ப்பு பின்வருமாறு இருக்கிறது;
ப்ளம்மின் வாசனையினூடே
சூரியனின் திடீர் எழுச்சி
மலைப்பாதை!
இதில் சூரியனுக்கல்ல, மலைப்பாதைக்கே என் ஆச்சரியக்குறி.
——
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 2. செர்ரி பூத்திரள்
———-
மரச்செதுக்கு ஓவியத்தில் (1899) சாமுராய் வீரனொருவன் செர்ரி மரத்தடியில் செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்கும் காலத்தில் பாரம்பரியமாக நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் போது செர்ரி பூக்கள் அவன் மேல் சொரிகின்றன; அவன் ஏதோ ஒரு அறிப்படாத அபாயத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்பவன் போல நிற்கிறான்.
ஜப்பானிய கலாச்சாரத்தில் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கும் காலங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறன. மக்கள் செர்ரி மரங்களலடியில் அமர பிக்னிக் போவது, குடிப்பது என அவற்றை வெகுவாகக் கொண்டாடுவார்கள். பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்கள் செர்ரி பூப்பதற்கான பருவங்கள். செர்ரி பூக்கையில் அபரிதமாகப் பூத்துக் குலுங்கி அம்மரங்கள் இருக்கும் இடங்களை வண்ணமயமாகக் கோலாகலமாக மாற்றிவிடும். ஆனால் அவை வெகு குறைவான காலமே நீடித்திருக்கும். செர்ரி மரங்கள் தங்கள் பூக்களை வெகு சீக்கிரம் கொட்டிவிடும். செர்ரி மரங்களின் பூப்பு ஜப்பானிய கலாச்சாரத்தில் நிலையாமையையும் பற்றற்ற தன்மையையும் குறிப்பிடுபவையாகக் கருதப்படுகின்றன.
பாஷோவின் கவிதைகளில் செர்ரி மரங்களும் அவற்றின் பூத்திரள்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. பாஷோ நிலையாமை, நிலைத்திருத்தல், மறைதல், கொண்டாட்டம், நமது பங்கேற்பு என பல கருத்துக்களை செர்ரி மரங்களையும் அவற்றின் பூக்களையும் வைத்து சொல்கிறார்.
பாஷோவின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயப்புகளின் Blossom என்ற வார்த்தை பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. நான் அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படுமிடங்களில் நான் ‘பூத்திரள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
பாஷோவின் பின்வரும் ஹைக்கூ பற்றிய சுயச் சுட்டு கவிதை ( self referential poem) அதி நவீனமானது:
இன்னொரு ஹைக்கூ?
இன்னும் செர்ரி பூத்திரள்கள் இருக்கின்றன
-என்னுடைய முகமல்ல
செர்ரி பூத்துக்குலுக்கும் காலத்தை ஹைக்கூவோடு அதாவது மிகச் சிறிய வடிவம் , எனவே மிகச் சிறிய காலத்திற்கு உரியதாக ஒப்பிடும் பாஷோ உலகம் தொடர்ந்து இளமையாக இருப்பதை, ‘இன்னும் செர்ரி பூத்திரள்கள் இருக்கின்றன’ என்றும் தான் அதில் இல்லாதிருப்பதையும் சொல்கிறார்.
பாஷோவின் இன்னொரு meta haiku:
எனக்குத் தனித்திறன் இருக்குமானால்
செர்ரி மெல்லிதழ்கள் விழுவதைப் போல
பாடுவேன்
பாஷோவின் ஹைக்கூக்கள் விடுபடலைப் பாடுகின்றன.
——
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 3. சிள்வண்டு
———-
பாஷோவின் கவிதைகளை வாசிப்பதென்பது நுண்ணுர்வுகளை வளர்த்துக்கொள்வதாகும். நுண்ணுணர்வு பயிற்சியால் வளர்த்துக்கொள்ளப்படுவதே அன்றி இயல்பிலேயே பிறப்பிலேயே யாருக்கும் வாய்ப்பதில்லை. நுண்ணுணர்வு, கூரிய அவதானங்களைத் தொடர்ந்த பயிற்சியாலும் கல்வியாலும் பரிசீலித்துக்கொண்டே இருப்பதன் மூலம் உருவாகும் மனப்பழக்கத்தின் விளைவு. சின்னஞ்சிறிய விபரங்களைக் கூர்மையாகக் கவனித்தல், அவற்றைப் பதிவு செய்தல், அவற்றை உருவகமாக்குதல் பாஷோவின் கவிதைகளில் தொடர்ந்து காணப்படுகிறது. பாஷோவின் கவிதைகளில் அடிக்கடித் தென்படும் சிள்வண்டு பாஷோ சின்னச் சின்ன சப்தங்களையும் கவனிப்பதையும் அவற்றை தன்னுடைய கவிதைகளில் கொண்டுவருவதையும் சொல்வதற்கு நல்ல உதாரணமாகும். பாஷோவின் சிள்வண்டு ஹைக்கூக்கள் இரண்டைக் கீழே தருகிறேன். அவற்றுக்கு விளக்கம் எழுதி வாசக நண்பர்களின் நுண்ணுணர்வைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.
1
சிள்வண்டு
தொடர்ந்து ரீங்கரித்ததா
வேறெதுவும் அதற்குத் தெரியாதவரை?
2
தனிமை-
மாட்டிக்கொண்ட சிள்வண்டு
சுவரில் தொங்குகிறது
——-
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 4. இலையுதிர் காலம்
———-
பாஷோவின் கவிதைகளில் பருவங்களும் வானிலை மாற்றங்களைப் பற்றிய அவதானங்களும் அறிக்கைகளும் சதா இடம் பெறுகின்றன. அவற்றில் இலையுதிர்காலம் பற்றிய அவதானங்கள் தொடர்ந்த மாற்றத்துக்குள்ளாகும் மனித வாழ்வைப் பற்றிய துல்லியமான படிமங்களை முன் வைக்கின்றன. வைர சூத்திரம் எல்லாமே கனவாக, குமிழியாக, அதீத கற்பனையாக, பனித்துளியாக, ஒரு மின்னலடிப்பாக இருப்பதைக் குறிப்பிடும். பாஷோவின் கவிதைகளில் இந்தத் தற்காலிக குமிழி என்னவாக இருக்கிறது, அதில் நேர்த்தியான விடைபெறுதல் என்னவாக இருக்க முடியும், இலையுதிர்காலம் என்பது மறுஜனனத்திற்கான காலம் என்பதைச் சுட்டுதல் என பல அவதானங்களைக் காணலாம். பாஷோவின் இலையுதிர்காலம் உள்ளிட்ட பருவங்கள் பற்றிய கவிதையாக்கங்கள் பெரும்பாலும் ஒரு பருவம் என்ன செய்கிறது என்பதை கூர்மையாக விவரிப்பதில் அடங்கியிருக்கிறது. பாஷோவின் கவிதையாக்க பருவகால விவரிப்புகள் யதார்த்தத்தில் நிலை கொண்டிருப்பவை; நவீனத்துவ கவிதைகளில் காணப்படுவது போன்ற (உதாரணம் டி.எஸ்.எலியட்- “When the evening is spread out against the sky
Like a patient etherized upon a table”) மனநிலையின் புறத்தோற்றமான paranoid அறிக்கைகள் அல்ல. இலையுதிர்காலம் பற்றிய எண்ணற்ற பாஷோவின் கவிதைகளில் மூன்று கீழே:
1
ஒரு தெரு கேளிக்கையாளன்
வாழ்க்கை வழி செல்கிறான் ஒரு குரங்கைச் சுமந்தவாறு
-இலையுதிர்கால நிலா
2
ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும்-
நெல் வயல்கள், சமுத்திரம்
ஒரே பச்சை
3
பயணத்தின் முடிவில்
இன்னும் உயிருடன்
இலையுதிர்கால மாலை
——-
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 5. பயணமும் பயணியும்
--------------------------------
பாஷோவின் கவிதை ஒன்று:
எனது பெயர்
பயணி என்பதாக இருக்கட்டும்
முதல் மழை
மட்சுவோ கின்சாகு பாஷோ (1644-1694) சாமுராய் பாரம்பரியம் கொண்ட ஜப்பானிய குடும்பத்தில் யுயெனோ என்ற ஊரில் பிறந்தார்; தன் வாழ்நாள் முழுக்க அலைந்து திரிபவராக வாழ்ந்தார். 1679 இல் தன் தலையை மழித்து மடாலயம் எதிலும் சேராத பௌத்த துறவியாகிய பாஷோ 1681 இல் புட்சோ என்ற பௌத்த துறவியை குருவாக ஏற்றுக்கொண்டு ஜென் பௌத்த வழிமுறைகளையும் சீன தாவோயிசத்தையும் பின்பற்ற ஆரம்பித்தார். பாஷோவின் கவிதைகளோடு இணைத்து லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் நூலை வாசிப்பது பாஷோவின் கவிதைகளை ஆழமாகவும் அணுக்கமாகவும் வாசிக்க உதவும். 1683 ஆம் ஆண்டு பாஷோவின் குடிசை அவர் வாழ்ந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் தீக்கிரையானது. அதிலிருந்து வீடற்றவராக அலைந்து திரிந்த பாஷோ யார் அழைக்கிறார்களோ அவர்கள் ஊருக்குச் சென்று குறுகிய காலம் தங்குவது, கவிதைகள் புனைவது என வாழ்ந்தார். பாஷோ பயணங்கள் மேற்கொண்ட வழித்தடங்கள், மலைப்பாதை, தங்கிய வீடுகள், ஊர்கள், அவற்றின் பருவகாலங்கள், செடிகள், கொடிகள், பூக்கள் எனப் பலவும் அவருடைய கவிதைகளில் பதிவாகியிருக்கின்றன. சைவ பக்தி கவிஞர்கள் ஊர் ஊராகச் சென்று சென்று சிவத்தலங்களைப் பாடியது போலவே வைணவ பக்தி கவிஞர்கள் நடைபயணங்கள் மேற்கொண்டு விஷ்ணு தலங்களை மங்களாசாசனம் செய்தது போலவே பாஷோவும் ஊர் ஊராய் சென்று கவிதைகள் இயற்றிப் பாடினார். என்ன, பாஷோவின் பயணங்களிலும் கவிதைகளிலும் கோவில்களும் மடலாயங்களும் வெகு குறைவாகவே இருந்தன. பாஷோவின் ஹைக்கூ ஒன்று:
நான்கு கோவில் வாயில்கள்
ஒரு நிலவின் கீழ்
நான்கு மதப்பிரிவினைகள்
வாழ்க்கையை ஒரு புனித பயணமாகக் கருதுவது என்பது ஒரு நைந்து தொய்ந்த உருவகம் என்றாலும் பாஷோவின் கவிதைகளில் புனிதப் பயணத்தை, எனவே வாழ்க்கையை எந்தச் சூழலிலும் விடாது வாழ்வதை, அதை மேற்கொள்வதற்கான விடாப்படியான மனோபலத்தை வலியுறுத்தும் அம்சத்தை முக்கியமானது எனலாம்.
இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் பாஷோவின் கவிதை:
நான் உறுதியாக இருக்கிறேன்
தரிசு நிலங்களை வெளிறச் செய்வதற்கு
எனது உடல் காற்றினால் துளைத்தெடுக்கப்படுகிறது
வாழ்வதற்கான மனோபலம் ( will to live), வாழ்வதற்கான வேட்கை ஜப்பானிய பண்பாட்டின் ஆதாரமான விழுமியங்களில் ஒன்று எனக் குறிப்பிடும் பல அறிஞர்கள் இது இந்திய மெய்யியல் மரபுகளிலிருந்தே ஜப்பானுக்குச் சென்றிருக்கவேண்டும் என எழுதத் தவறுவதில்லை.
பயணிப்பது பயணிகள் மட்டுமல்ல.
பயணத்துக்கான மனோபலத்தை வலியுறுத்தும் பாஷோவின் இன்னொரு கவிதை:
குளிர்கால முதல் மழை
நான் சோர்வாய்த் தொடர்ந்து நடக்கிறேன்
என் பெயர்- பயணி
——-
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 6 ஆலங்கட்டி மழை
—————————
ஜென் தருணங்கள் திடீரென உருவாகக்கூடிய உணர்வறிதலை கவனப்படுத்தப்படக்கூடியவை என ஏற்கனவேக் குறிப்பிட்டேன்.
1681 ஆம் ஆண்டு பாஷோவின் மாணவர் ரிக்கோ பாஷோவுக்கு ஒரு மலர்ச்செடியை பரிசளித்தார். அதைத்தொடர்ந்து பாஷோவிடம் பதினைந்து மாணவர்கள் ஜென் பௌத்தத்தைக் கற்றுகொள்ள சேர்ந்தார்கள். கவிதையை மையமாகக் கொண்ட இந்த புத்த சங்கத்தில் திடீர் உணர்வறிவை, தரிசனத்தைப் பெறுவதற்கான பல புத்த சங்கத்திற்கான கவிதைகளை பாஷோ இயற்றினார். இந்தக் கவிதைகள் பெரும்பாலும் குழந்தை விளையாட்டுக்களையும் திடீரென ஆனால் குறைந்த நேரமே பெய்யும் ஆலங்கட்டி மழையையும் கவனப்படுத்துவதாக இருந்தன. ஆலங்கட்டி மழை அனுபவம் எந்த மாற்றத்தையும் யாரிடமும் உண்டாக்கவில்லை எனில் அதை பாஷோ கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். உதாரணமாக பாஷோவின் ஒரு கவிதை:
ஆலங்கட்டி மழை-
பழைய கருவாலி மரத்தைப் போல
நான் என்றுமே மாறுவதில்லை
ஜென் தருணங்களை உருவாக்குவதற்காக இயற்றப்பட்ட கவிதைகளை எப்படி மொழிபெயர்ப்பது என்பது சில வழிமுறைகளைக் காட்டுவது போலவே சில சிக்கல்களையும் கொண்டதாக இருக்கிறது. பாஷோவின் கவிதைகளில் பல தெளிவற்ற படிமங்களைக் (ambiguous images) கொண்டதாக இருக்கின்றன. நான் மொழிபெயர்ப்பளானாக தெளிவற்ற சில கவிதைப் படிமங்களை தெளிவற்ற விதத்திலேயே வைத்திருப்பது என முடிவு செய்து அதை அவ்வாறே மொழிபெயர்த்திருக்கிறேன். ஏனெனில் தெளிவற்றதாக உடனடி வாசிப்பில் தோன்றக்கூடிய சில கவிதைகள் மனதில் அசை போட்ட வண்ணம் இருக்கையில் அனுபவத்தின் உரைகல்லில் உரசுகையில் திடீரென ஒளிரக்கூடும்.
ஆலங்கட்டி மழை எப்போது பெய்யும் என யாருக்குத் தெரியும்?
பின்வரும் கவிதை மொழிபெயர்ப்பில் தெளிவற்ற தன்மையை நான் வேண்டுமென்றே விட்டு வைத்திருக்கிறேன்:
நிலவு மலர் வளையமான
மூங்கில் தோப்பு
குயிலின் பாடல்
மேற்கண்ட கவிதையில், அதன் மொழிபெயர்ப்பில், மூலத்தில் இருப்பது போலவே நிலவா, மூங்கில் தோப்பா, குயிலின் பாடலா எது எதற்கு மலர் வளையமாக இருக்கிறது என்ற தெளிவற்ற தன்மை (ambiguity) இருக்கிறது. அதை அப்படியே வைத்திருப்பதுதான் வாழ்பனுபவத்தில் ஆலங்கட்டி மழை போல திடீர் உணர்வறிவுக்கு, தரிசனத்திற்கு வழிவகுப்பதாக இருக்கும்.
பாஷோவின் எந்தக் கவிதையில் தெளிவற்றதன்மையை வைத்திருப்பது எந்தக் கவிதையில் அதை வைத்திருக்கக்கூடாது என்பதை தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முறை இருக்கிறது. ஜப்பானிய மொழியில் இதை kireji - கிரெஜி என்றழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இது ‘வார்த்தையை வெட்டுதல்’ என்று அப்படியே மொழிபெயர்க்கப்படுகிறது. அதாவது கவிதையில் ஒரு வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்த திசைகளைச் சுட்டுமானால் அங்கே அந்த ஹைக்கூவின் தெளிவின்மையை அப்படியே வைத்திருக்கவேண்டும். அதை நகாசு வேலை செய்து தெளிவாக்கக்கூடாது. இல்லை அதை நான் தெளிவாக்குவேன் என்று கிளம்பினீர்களென்றால் அது பழைய கருவாலி மரத்தின் மேல் பெய்த ஆலங்கட்டி மழையாகத்தான் முடியும்.
மற்றபடிக்கு கவிதையோ கவிதை மொழிபெயர்ப்போ எனக்கு பாஷோவின் பினவரும் கவிதை போலத்தான்:
குயில்-
பாடு, பற, பாடு
மீண்டும் ஆரம்பி
இதில் ‘குயில்’ என்ற சொல்லோடு ஒரு ஏகாரம் கூடச் சேர்க்க மாட்டேன்.
—-
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 7. உண்மை
————
ஜென் பௌத்தத்திலும் தாவோயிசத்திலும் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்கான வழியை பாஷோ அடையாளம் கண்டுகொண்டார். தியானமும், கூரிய அவதானமும், உணர்வுகள் செழுமைப்படுத்தப்பட்ட தினசரி வாழ்க்கையும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான கூரிய மொழியும் அவருக்கு வாய்த்திருந்தன. பாஷோவின் கவி வாழ்வை ஜப்பானிய மொழியில் fūgo என்றழைக்கிறார்கள். அதை உணர்வுகளின் செழுமை மிகுந்த வாழ்வு எனத் தமிழ்ப்படுத்தலாம். தன்னுடைய கவி வாழ்வில் என்ன தேடினார் பாஷோ? இயற்கையின் பகுதியான ( கவனிக்க இயற்கையிலிருந்து வேறுபட்ட அல்ல) மனித மனதின் நிரந்தர உண்மைகள் என்ன என்பதை பாஷோ தேடினார் என்று சொல்லலாம். பாஷோவின் கவித்துவ உண்மைகள் என்ற தலைப்பில் ஒரு முழு நீள புத்தகமே எழுதலாம். பாஷோவின் பார்வையின் சில அம்சங்களை மட்டும் கவனப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
பாஷோவின் கவிதை ஒன்று ஜப்பானிய மரபான நாடகமான நோ அரங்கத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வசனம் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறது:
ஓஹ் எனக்கு ஒன்றுமே நடந்திருக்கவில்லை!
நேற்று கடந்து சென்றுவிட்டது
ஃபுகு சூப்
ஃபுகு என்பது மிகவும் சுவையான, ஜப்பானில் கிடைக்கக்கூடிய மீன் வகைகளுள் ஒன்று; அது ஆளை உடனடியாகக் கொல்லக்கூடிய விஷமும் நிரம்பியது. விஷம் சரியாக நீக்கப்படாத ஃபுகு மீனின் சூப்பை அருந்தினால் மரணம் நிச்சயம். வாழ்க்கையின் ஒவ்வோரு நாளும் அருஞ்சுவையும் விஷமும் சமமான அளவில் கலந்தவையே; அதைப் பற்றிய தன்னுணர்வு இல்லாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உயிர் பிழைத்துக்கிடப்பதென்பதே ஆச்சரியத்திற்கும் நன்றியுணர்வுக்கும் உரியது என்று பாஷோவின் இந்தக் கவிதை சொல்கிறது.
உண்மையைக் காண்பதற்கு நம்முடைய விழிப்படலங்களை விருப்பு வெறுப்புகள் மறைக்காமலிருக்க வேண்டும். இதற்காகவே திபெத்திய பௌத்த தியான மரபுகளில் நிர்வாணமாகிய கண்களோடு பார்த்தல் என்ற தியான முறையை உண்டாக்கினார்கள். பார்க்க: “Naked Seeing” by Christopher Hatchell, The Great Perfection, the Wheel of Time and Visionary Buddhism in Renaissance Tibet Oxford University Press 2014. பாஷோவின் கவிதை ஃபுயுஜி நகரை மூடுபனி இல்லாமல் பார்க்கப்படுவதன் அழகை (அது ஒரே ஒரு முறை லபிக்குமென்றாலும் கூட) வியக்கிறது:
எத்தனை இனிமை-
ஃபுயுஜியை ஒரே ஒரு முறை
மூடுபனி வழியே பார்க்காதிருப்பது
உண்மையை எப்போதும் பல்லாயிரக்கணக்கான விழிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. பாஷோவின் கவிதை:
இங்கே கியோட்டோ நகரில்
பூத்திரள்களைப் பார்க்க, வெளியே
தொண்ணூற்று ஒன்பதாயிரம் மக்கள்
உண்மை என்பது பருவகாலங்களைப் போலவே பல்வேறு காரண காரிய தொடர்புகளாலும், உணர்வுப் பிணைப்புகளாலும் ஆனது; பாஷோவின் கவிதை:
பிரிந்து செல்லும் வசந்தம்
பறவைகள் அழுகின்றன, மீன்களின்
கண்கள் கண்ணீரால் நிரம்பியிருக்கின்றன
பார்க்கப்படக்கூடிய கோணத்திலிருந்து உண்மை என்னவாக இருக்கிறது என்ற விவரணை மாறக்கூடியதாக இருக்கும். பாஷோவின் கவிதை:
வசந்தம் வந்ததா
அல்லது வருடம் கடந்து சென்றதா
இரண்டாவது கடைசி நாள்
இதில் ‘இரண்டாவது கடைசி நாள்’
என்பது ஜப்பானிய மரபான நாட்காட்டியில் அபூர்வமாக, ( லீப் வருட ஃபெப்ருவரி 29, தமிழ் நாட்காட்டியில் சில வருடங்களில் வரும் ஆடி 32 ஆகியன போல) வரும் ஒரு கூடுதல் நாளைக் குறிப்பது. பாஷோ அந்த நாட்காட்டி நாளைப் பயன்படுத்தி புனைவின் கணக்குகள் நம் அளவிடலைத் தீர்மானிப்பதை சுட்டுகிறார்.
பாஷோ உண்மையை இயற்கையில் தேடினார், தன் தேடலைத் தொடர்ந்து பதிவு செய்தார். உண்மைக்குக் கடப்பாடு உடையதே இலக்கியம் என்பதை பாஷோவின் கவிதைகள் நமக்குக் காட்டித் தருகின்றன.
——
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 8. தூய்மை
—————
சிவந்தி, சாமந்தி, செவ்வந்தி என்று பலவாறாகத் தமிழில் அழைக்கப்படும் சிவந்திப் (Chrysanthemum) பூக்களில் வெண்மை நிறமானவற்றைத் தூய்மையின் குறியீடாக ஜப்பானிய கலாச்சாரத்தில் கருதுகிறார்கள். ஜப்பானிய அரண்மணைகளில் வெள்ளைச் சிவந்தி அதிகமும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஜென் பௌத்தத்தில் தூய்மை எனப்படுவது ஒன்றுமின்மையை, சூன்யத்தைக் குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஜென் குருக்கள் “ காலி ஆகாயத்தில் ஒரு துளி மேகம் கூட இல்லை; அதுவே என் கண்களை சந்திக்கிறது” என்று பேசும்போது அவர்கள் தங்கள் மாணவர்களீன் கவனத்தை இன்மையை நோக்கி ஈர்க்கிறார்கள்.
பாஷோவின் பின்வரும் கவிதை சிவந்தி மலரை வைத்து இன்மையின் தூய்மையைச் சொல்கிறது:
நான் எவ்வளவு உற்று நோக்கினாலும்
வெள்ளைச் சிவந்தியில்
மிகச் சிறிய புள்ளி கூட இல்லை
தூய்மை எனப்படுவது ஒரு வெளியுலக நிலையைச் சொல்வதில்லை, அது ஒரு மனப்பாங்கினை, கள்ளம்கபடற்ற தன்மையை, புற உலகு நிகழ்வினை உணர்வுகளின் வழி நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதிலிருந்து உருவாவது. பாஷோவின் ஒரு கவிதை இதை நுட்பமாகச் சுட்டுகிறது;
தோட்டத்தில்
ஒரு வியர்வையில் நனைந்த காலணி
சிவந்தியின் மணம்
தூய்மை அமைதிக்கு இட்டுச் செல்லும்; தூய்மையில் செயல்கள் மனத்தைப் போலவே அமைதியானவை; செயல்களின் காரண காரியத் தொடர்ச்சியின் சங்கிலி உடைக்கப்படும்போது கர்மவினையிலிருந்து ஒருவன் விடுபடுகிறான். பாஷோ சிவந்தியைக் குறியீடாகக் கொண்ட இன்னொரு கவிதையில் இதைச் சொல்கிறார்:
சிவந்தி
மௌனம்- துறவி
தன் காலைத் தேநீரை அருந்துகிறார்
—-
பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 9. பண்பாட்டின்/ நாகரிகத்தின் தொடக்கம்/ நிலாப் பார்த்தல்
——-
மானிடவியலாளர் மார்கரெட் மீட்டின் (Margaret Mead) வகுப்பில் மாணவி ஒருவர், களப்பணிக்காகச் செல்லும்போது ஒரு சிறிய சமூகம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான அறிகுறி என்ன என்று எப்படிக் கண்டுகொள்வீர்கள் என்று கேட்டாராம். வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையில் இருக்கும் சிறிய சமூகமாக இருக்குமென்றால் அதில் யாரேனும் தொடை எலும்பு முறிந்து காயம் ஆறி இயல்பு நிலைக்குத் திரும்பி இருப்பவர் தென்பட்டால் உடனடியாக இது மிகவும் நாகரிகமடைந்த சமூகம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஏனென்றால் மிருகங்களின் உலகில்
கால் எலும்பு முறிந்துவிட்டால் அந்த மிருகம் சாவதைத் தவிர வேறு வழியில்லை. வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தில் ஒருவருக்கு கால் எலும்பு முறிந்து குணமாகியிருக்கிறதென்றால் அவரைப் பார்த்துக்கொள்ள வேறு யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி பலகீனர்கள், தடுக்கி விழுந்துவிட்டவர்கள் ஆகியோரைப் பாதுகாக்கிற சமூகமே, ஒருவருக்கொருவர் நிற்கிற சமூகமே, நாகரிகமடைந்த சமூகம் அதற்கான அறிகுறிகள் பலவகைப்பட்டவையாக இருக்கும் என அதற்கு மார்கரெட் மீட் பதிலளித்தாராம். இந்த உயர்கல்விப்புலக் கதை உண்மையில் நடந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பண்பாடுகள் எப்படி மதிப்பிடப்படுகின்றன என்பதைச் சொல்வதற்கான நல்லதொரு கதை.
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின், தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றிய பாஷோவின் வெளிப்படையான கவிதை ஒன்று:
கலையின் பிறப்பு
நாற்று நடுபவர்களின் பாடல்
எங்கிருந்தின்னாதபடி வரும் சேர்ந்திசை
பாஷோவின் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதை கவனப்படுத்துவதாக இருக்கிறது. அவருடைய இன்னொரு வெளிப்படையான கவிதை;
ஏழ்மையின் குழந்தை
அவன் அரிசியை மாவாட்டுகிறான்
நிலவை உற்று நோக்குகிறான்
நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணுதல், காற்றில் அசையும் புற்களைக் கவனித்தல் என பல அழகியல் அனுபவங்கள் ஏழ்மையில் இருப்போருக்கே, நாடோடிகளாய் அலைவோருக்கே, ஏதிலிகளுக்கே பாஷோவின் கவிதைகளில் சாத்தியமாகின்றன. இதனால் பாஷோவின் கனிந்த ஆன்மிக அழகியல் சமூகத்தின் பலவீனர்களின் பொருட்டான அரசியலாகிறது. பாஷோவின் கவிதைகளில் ஆன்மிக அழகியல் அரசியலை வாசிக்க நாம் பின் வரும் கவிதையில் வரும் சிறுமி போல சற்றே ஒருக்களிக்க வேண்டும்.
அரிசியைப் புடைத்தவாறே
சிறுமி ஒருக்களிக்கிறாள்
நிலவைக் காண