தியான மரபுகளில் மனதைக் குவிக்க ஏராளமான பயிற்சிகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் ‘தாரணா’ (Dharana), - ஒரே புள்ளியில் கவனத்தைக் குவித்தல்- ஆறாவது அங்கமாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஒரு தீபச் சுடரையோ, தெய்வ உருவத்தையோ, ஒரு மலரையோ, நகரும் மேகத்தையோ, கடலையோ, மலை சிகரத்தையோ ஒருவர் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பது மனதைக் குவிக்கும் பயிற்சிகளில் அதிகமும் பயன்படுத்தப்படுவது. வெளியில் இருக்கக்கூடிய பொருட்களின் மேல் கவனத்தைக் குவிப்பதை விட ஒருவர் தன் மூச்சையே கவனிப்பது, அல்லது மனதிற்குள் தொடர்ந்து பீஜாட்சர மந்திரத்தையோ ஜெபிப்பது மனதைக் குவிப்பதற்கு உடனடி பலனைத் தரக்கூடியது.
மூளையின் செயல்பாடுகள் பற்றிய சமகாலத்திய ஆராய்ச்சிகள் மனதைக் குவிக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது மனதிற்குச் சுமையைக் கூட்டக்கூடியது என்று சொல்கின்றன. ஒற்றைப் பொருளில் கவனத்தைக் குவிக்காமல் மனதை சுதந்திரமாக அலையவிடுவது மனதை அமைதிப்படுத்தும் என்றும் அவை மேலும் கற்பிக்கின்றன. மனம் ஒடுங்கும் புள்ளியை ஒருவர் மனதை அலையவிட்டு கண்டுபிடிக்க வேண்டுமே தவிர முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு புள்ளியில் மனதைக் குவிக்கலாகாது என்பது அதன் நீட்சி.
எனக்கு தியானம் கற்பித்த பௌத்த துறவி, பெயரிலி, தாரணா பயிற்சிகளில் எது சரி என்று ஆராய்வதை விட தாரணாவின் நோக்கம் என்ன என்பதே முக்கியம் என்று வலியுறுத்துவார். பெயரிலியைப் பொறுத்தவரை தாரணா பயிற்சிகளின் நோக்கம் மனதை இயல்பாக, தன்னிச்சையாக அகிம்சையின் முடிவை எடுக்கப் பயிற்றுவிப்பதே ஆகும். ஒருவர் தியானத்தில் தேர்ச்சி பெற்றவராக இருப்பாரேயானால் அவரால் கண் இமைக்கும் நேரத்தில், தயக்கம் ஏதுமில்லாமல், அகிம்சை சார்ந்த முடிவை எடுக்க முடிய வேண்டும். ஆனால் தொடர்ந்து வன்முறையை தினசரி உள்வாங்கும் மனதிற்கு எது அகிம்சை சார்ந்த முடிவாக இருக்க முடியும்?
ஊர்ந்து செல்லும் எறும்புகளை வாரியலால் கலைத்து குப்பைகளோடு ஒருவர் சேர்த்துவிடும்போது அதில் மடிந்த எறும்புகள் வாரியலைப் பற்றி என்ன நினைக்கும்? விதி என்றா? கடவுள் என்றா? விபத்து என்றா? அழிவுக்கு உள்ளான எறும்புகளின் பார்வையில் எது அகிம்சை என்ற கேள்விக்கு தியானி என்ன பதிலை தன்னிச்சையாக சொல்வான்?
அறம் சார்ந்த கேள்விகளில் மனம் திகைத்து ஸ்தம்பித்துவிடும் இடங்கள் கலை, இலக்கியத்திற்கு உரியவை என்றும் அந்தப் புதிர்களையே இலக்கியம் காலங்காலமாக முன்வைத்து வருகிறது என்றும், தத்துவம், இலக்கியம் முன்வைக்கும் புதிர்களை முடிவற்று விவாதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் பெயரிலி ஒருமுறை என்னிடம் சொன்னார்.
பெயரிலி விட்டுச்சென்ற கைப்பிரதிகளை வாசிக்க ஆரம்பித்திருக்கும் எனக்கு அவற்றை நான் புனைவாக எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
Photo: Pal Karma Zurmang Shedup Chokhor Ling Lingdum Monastery (Ranka Monastery), Gangtok, Sikkim
