Sunday, June 21, 2026

ஜேம்ஸ் ஜாய்ஸின் “யுலிசஸ்”: மொழிப் பரிசோதனைகளின் ரசவாதமும் அறிவுத்தோற்றவியல் கட்டமைப்பும் (Linguistic Alchemy and Epistemological Architecture in James Joyce's Ulysses)




ரோலாண்ட் பார்த்தின்  முறையை ஆதர்சமாகக் கொள்ளும் விமர்சகர்கள் ஜேம்ஸ் ஜாய்ஸின் “யுலிசஸ்” நாவலை எழுத்தாளப் பிரதி (writerly text) என்று வகைப்படுத்துவார்கள். ஜாய்ஸ் தன்னுடைய “யுலிசஸ்” நாவல் மூலமாக ஆங்கில உரைநடையையே பெரிய மாற்றத்துக்கு உள்ளாக்கினார் என்பதை வேறு சொற்களால் சொல்வதுதான் அந்த நாவலை எழுத்தாளப் பிரதி என்று அழைப்பதும். 


ஜாய்ஸின் நடை அவரது ஒவ்வொரு படைப்பிலும் மேலும் மேலும் நுட்பமாவதாக இருந்தது. 1914 இல் வெளியான அவருடைய சிறுகதைத் தொகுப்பான  “Dubliners” ஒரு கருமியின் எச்சில் கையால் காக்கையை விரட்டாத மினிமலிச நடையைக் கொண்டிருந்தது. 1916 இல் வெளியான அவருடைய நாவல் “A Portrait of the Artist as a Young Man” அக ஒழுக்கின் முழுமையை அடைவதில் வெற்றி பெற்றது. “யுலிசஸ்” நாவலோ ஒரு புதிய மொழி மண்டலத்தை உருவாக்கியது. “Fennigan’s Wake” மொழியை அதன் அடிப்படை ஒலிகளுக்குக் குறைத்தும் பெருக்கியும் மொழியின் உடல் ஆதாரங்களை அசைத்துப் பார்த்தது. “Fennigan’s Wake” நாவலின் பரிசோதனைகளுக்கான மொழிப் புலம் ஆனால் “யுலிசஸ்” நாவலில்தான் அடித்தளமிடப்பட்டது. 


ஜாய்ஸின் மொழிப் பரிசோதனைகள் வெற்று அழகியல் அலங்காரங்களோ ஆடம்பர டம்பாச்சாரித்தனங்களோ அல்ல; அவை மொழியின் எல்லைகளை உடைத்து விரிவாக்குபவை;  மொழி சார் அறிவுத்தோற்றவியல் நிலைப்பாடுகளை விசாலப்படுத்துபவை. 


1921 ஆம் ஆண்டு ஜாய்ஸ் அவருடைய நண்பர் ஸ்டூவர்ட் கில்பர்ட்டுக்கு எழுதிய கடிதத்தில் “யுலிசஸ்” நாவல் எப்படி ஹோமரின் காப்பியத்தைத் தன் அடிப்படைக் கட்டமைப்பாகக் கொண்டிருக்கிறது என்று விளக்கினார். ஜாய்ஸின் இந்தக் கடிதமும் அதனால் தெரியவந்த  “யுலிசஸ்” நாவலில் ஒளிந்திருக்கும் காப்பிய வடிவமும் இன்றளவும் நாவலை வாசிப்பதன் பொது நெறியை வழிகாட்டுவதாக அமைந்திருக்கின்றன. “யுலிசஸ்” நாவலின் ஹோமரிய காப்பியக் கட்டமைப்பு நாவலில் நிகழும் சாதாரண ஒரு நாள் சம்பவங்களுக்கு ஒரு காப்பிய சம்பவங்களின் இணை வடிவத்தை வழங்கியதோடு நாவலின் நிகழ்காலச் சாதாரணச் சம்பவங்களை அயர்லாந்தின் நவீன வரலாற்றின் அவ்வடிவங்களைக் கூர்ந்து பார்க்கவும் உதவியது. ஜாய்ஸ் ஸ்டூவர்ட் கில்பர்ட்டுக்கு எழுதிய கடிதத்தில் மேலும் நாளின் எந்த நேரத்தில் “யுலிசஸ்” நாவலின் இணை சம்பவங்கள் நடக்கின்றன, ஒவ்வொரு சம்பவமும் உடலின் எந்த உறுப்போடு தொடர்புடையவை, ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான நிறங்கள் என்னென்ன, அவற்றோடு தொடர்புடைய கலைகளும் அறிவியல்களும் யாவை, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உரிய கதைசொல்லும் உத்தி இதனால் என்னென்னவாக இருக்கிறது என்பதையெல்லாம் உள்ளடக்கியதாக இருந்தது. The Gilbert Schema என்று ஜாய்ஸ் வாசகர்கள் அழைக்கும் இந்தக் கட்டமைப்பைச் சுருக்கமாகவேனும் தெரிந்துகொள்வது நாவலில் ஜாய்ஸ் நிகழ்த்தியிருக்கும் மொழி அற்புதங்கள் என்ன என்பதை வாசிப்பின்போது அறிய உதவும். 


“யுலிசஸ்” நாவலில் காலை எட்டுமணிக்கு முதல் பகுதி, நான்காம் பகுதி என இரு பகுதிகளின் சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இந்த இரண்டு பகுதிகளுக்கும் பதினொரு மணிக்கு நடக்கும் பகுதிக்கும் ஜாய்ஸ் எந்தவித உடலுறுப்புகளையும் நடையியல் வழிகாட்டியாகக் (stylistic guide)  கொடுக்கவில்லை. மற்ற அத்தியாயங்களுக்கு காப்பிய வடிவமைப்பில் நிகழும் சம்பவங்களுக்கு உடலுறுப்புகள் நடையியல் வழிகாட்டியாக இருக்கின்றன. மூன்றாவது   காலை எட்டு மணி காலிப்ஸோ பகுதி  சிறுநீரகங்களையும், நான்காவது மதியம் பன்னிரெண்டு மணி ஏயிலோஸ் பகுதி நுரையீரல்களையும், ஐந்தாவது மதியம் இரண்டு மணி ஸ்கைல்லாவும் சாரிபிடிஸும் பகுதி மூளையையும், ஆறாவது மாலை நான்கு மணி சைரன்ஸ்  பகுதி காதுகளையும், ஏழாவது இரவு பத்துமணி சூரியனின் எருது பகுதி கருவறையையும் எட்டாவது அதிகாலை இரண்டு மணி இத்தாக்கா பகுதி எலும்புக்கூட்டினையும் இறுதி பெனிலோப்பி பகுதி  சதையையும் நடையியல் வழிகாட்டிகளாகக் கொண்டிருக்கின்றன. 


The Gilbert Schema இவ்வாறாக ஜாய்ஸின் நடை நடை ஒவ்வொரு பகுதிக்கும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது என்பதைச் சொல்கிறது. உதாரணமாக “யுலிசஸ்” நாவலின் ஏயிலோஸ் பகுதி சம்பவங்கள் ஒரு செய்தித்தாள் அலுவலகத்தில் நடக்கின்றன; அதன் நடையியல் வழிகாட்டியாக நுரையீரல்கள் இருக்கின்றன. நாவலின் இந்தப் பகுதியில் ஜாய்ஸின் நடை மூச்சை உள்ளிழுத்து விடும் அலங்காரங்களைக் கொண்ட சப்தங்களாலும் சந்தங்களாலும் நிரம்பியிருக்கிறது. கதை  சம்பவங்கள் செய்தித்தாள் அலுவலகத்தில் நடைபெறுவதால் செய்தித்தாள்களின் அதிர்ச்சி மதிப்பீடுகள், உச்ச ஸ்தாயி அலறல்கள், ஆகியவற்றையும்  ஜாய்ஸ்  தன் மொழிநடைக்குள் கொண்டு வந்துவிடுகிறார். இதுபோல சைரன்ஸ் பகுதியில் ஹோமரின் காப்பியத்தில் மயக்கி அடிமைப்படுத்தும்  பாடல்களை சைரன்ஸ்கள் பாடுகிறார்கள். இதற்கு இணையான ஜாய்ஸின் நாவலின் பகுதியில் ஜாய்ஸின் மொழிநடை இசையம்சங்கள் பொருந்தியதாக இருக்கிறது. ஹோமரின் காப்பியம் நாவலுக்குக் கட்டுமானத்தை வழங்குகிறதென்றால் அதிலிருந்து பெறப்பட்ட சமகால வடிவம் ஜாய்ஸின் கைகளில் அந்ததந்தப் பகுதிக்குரிய பிரத்யேக நடையையும் கொண்டிருக்கிறது. 


ஹோமரின் காப்பியம் “யுலிசஸ்” நாவலுக்குரிய கட்டுமானத்தைத் தருகிறதென்றால் வில்லியம் ஷேக்ஸ்பியரும் அறிவார்ந்த தத்துவ அறிஞர்களின் (Scholastic philosophers) கருத்துக்களும் நாவலின் தத்துவார்த்த மோதலுக்குரிய சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்றன. நாவலின் ஒன்பதாவது அத்தியாயமான ஸ்கைல்லாவும் சாரிபிடிஸும் பகுதியில் ஸ்டீபன் டெடலாஸ் அயர்லாந்தின் தேசிய நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் “ஹேம்லட்” நாடகத்தைப் பற்றி உரையாற்றுகிறான். மிகவும் சுயத்தன்மை வாய்ந்த அந்த உரையில் ஸ்டீபன், ஜார்ஜ் ரஸ்ஸல் தியொஃபிஸ்டு தத்துவத்தைப் பின்பற்றி  கலையை வடிவமற்ற ஆன்மீகச் சாரம்சங்களாகவும், உலகாயதச் சரிதை இல்லாததாகவும் கூறுவதை எதிர்த்து வாதிடுகிறான். ஹேம்லட் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் இளமையான இளவரசன் ஹேம்லட்டோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை, ஹேம்லட்டின் தந்தையின் ஆவியுடனேயேதான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஹாம்லெட் இளவயதில் மரித்துப் போன ஷேக்ஸ்பியரின் மகன் ஹேம்னெட் என்றும்,  கள்ளக்காதலில் ஈடுபடும் நாடகத்தில் வரும்  அரசி ஜெர்ட்ரூட்  ஷேக்ஸ்பியரின் விசுவாசமற்ற  மனைவி ஆன் ஹாத்வே என்றும் வாதிடுகிறான். அவனுடைய வாதத்தின் ஒரு பக்கத்தில் ஸ்கைல்லாவின் பாறையாக அரிஸ்டாட்டிலிய நெறிகள், ஷேக்ஸ்பியரின் பிறப்பிடமாகிய ஸ்டான்ஃபோர்ட் அப்பான் ஏவென் என்ற கிராமம், பொருளாயவாதம் ஆகியவை இருக்கின்றன; பரபக்கமாக சாரிபிடிஸின் விழுங்கும் சுழலென பிளேட்டோனிய மெய்யியல், மறைபொருளியல், லட்சியவாதம், லண்டன் எனும் நகரம் ஆகியன இருக்கின்றன.  ஸ்டீபன் தாமஸ் அக்வினாஸின் தத்துவத்தில் இருக்கின்ற ஒருங்கிணைப்பையும் தன் உரையில் செய்ய முயற்சி செய்கிறான். ஜாய்ஸின் கதை சொல்லலும் நடையும் இதனால் ஸ்டீபனின் அகத்தின் தனிமொழியாகவும், மூன்றாவது நபரின் விவரணையாகவும், நாடகப் பிரதியாகவும் மாறி மாறி அழகு பெறுகிறது. ஸ்டீபன் கலைஞன் என்பவன் நிலைபேறுடைய கற்பனையின் புரோகிதன் என்று தன்னுடைய உரையில் நிறுவுகிறான். கலைஞனால் சாதாரணத் தினசரி நிகழ்வையும் அனுபவத்தையும் என்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒளிபொருந்திய கலைப்படைப்பாக மாற்றமுடிகிறது. ஜாய்ஸ் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை ஊடிழைப் பிரதியாகக் கையாளுவதன் மூலம் தன்னுடைய அழகியல் முறைமை என்ன என்பதையும் தெரிவித்துவிடுகிறார். 


பத்தொன்பதாம் நூற்றாண்டின் வளரும் துறையாக இருந்த ஒப்பீட்டு மொழியியலில் (philology)  ஜாய்ஸுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. டப்ளின் நகரத் திருச்சபை ஆயராக இருந்த ரிச்சர்ட் ஷெனவிக்ஸ் டிரெஞ்ச் (Richard Chenevix Trench) எழுதிய On the Study of Words (1851) என்ற நூல் ஜாய்ஸின் எழுத்துக்கலையை வெகுவாக பாதித்தது. டிரெஞ்ச் இந்த நூலில் எந்தவொரு மொழியிலும் உள்ள ஒவ்வொரு சொல்லுமே புதைபடிவ கவிதை (Fossil Poetry)  என்று வாதிட்டிருந்தார்.


ஆங்கில மொழி என்பது நீதியின் வெப்பமானி என்று வாதிட்ட டிரெஞ்ச் , அது ஒரு தேசத்தின் வரலாற்று அவதாரம் எனவும் அது செல்டிக், ஜெர்மானிய, லத்தினீய, நார்மன் வெற்றிகளை, கையகப்படுத்துதல்களை தன்னகத்தே புதைபடிவ அடுக்குகளாகக் கொண்டிருக்கிறது என்றும் நிறுவினார். டிரெஞ்ச்சின்  நூல் முன்வைத்த நுட்பங்களை ஜாய்ஸ் தன்னுடைய மொழித் தொல்லியலை உருவாக்கப் பயன்படுத்திக்கொண்டார். ஜாய்ஸின்  Portrait of the Artist as a Young Man நுண்ணுணர்வுள்ள பெரிய அளவிலான வேர்ச்சொல்லியலைப் பயன்படுத்தி ஸ்டீபன் கலை முதிர்ச்சி அடைவதை மறைமுகமாக விளக்கியது.  “யுலிசஸ்” நாவலிலோ ஒப்பீட்டு மொழியியல் கதையாடலின் மைய எந்திரமாக இருக்கிறது. ஜாய்ஸின் நுண்ணுணர்வு மிக்க சொற்களின் தேர்வு “யுலிசஸ்” நாவலை இதனால் மொழிக்கான ஒரு  தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்கான இடமாக மாற்றிவிடுகிறது.


“யுலிசஸ்” நாவலின் மொழிப்பரிசோதனைகளை மேற்சொன்ன வேர்ச்சொல் விரிவாக்கம் தவிர பல வகைமைகளாகப் பிரிக்கலாம். உண்மையில் அதனுடைய எண்ணற்ற மொழிப்பரிசோதனைகளில் “யுலிசஸ்” தன்னிகரற்றது. 


அகத்தனிமொழிகளும், நனவோடை உத்திகளும் ஜாய்ஸுக்கே உரியவை. அகத்தனிமொழிகளில் ஜாய்ஸ் கதாபாத்திரங்களின் பேசப்படாத எண்ணங்களைத் தரும்போது அவற்றின் அடிப்படை இலக்கண வாக்கிய அமைப்புகளை, தர்க்கத்தை,  சிதைப்பதில்லை ; ஜாய்ஸின் நனவோடை உத்திகளோ தடைசெய்யப்படாத, சப்தத்தாலும், அர்த்தத்தாலும், நினைவாலும், நனவாலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, ஒன்றை ஒன்று தழுவியும் ஒழுகியும் செல்கிற ஓட்டத்தைத் தருகின்றன. ஜாய்ஸின் நனவோடைகள் புலனுணர்வு அவதானங்கள், உடனடி உணர்ச்சிகள், உயிர்த்தெழுந்த நினைவுகள் என  ஒழுகியும் வழுக்கியும் செல்கின்றன. இவை கதாபாத்திரத்துக்குக் கதாபாத்திரம் மாறுபடுகிறது என்பது கூடுதல் சிறப்பு.


மூன்றாவது அத்தியாயத்தில் ஸ்டீபனின் நனவோடை ஒரு புத்திஜீவியின் நனவோடையாக இருக்கிறது. சாண்டிமௌண்ட் ஸ்டிராண்டில் நடந்து செல்லும் ஸ்டீபனின் மனம் ஓர் அறிஞருடைய மனம் ; அது ஒரு கருத்துக்கு இன்னொரு கருத்தில் தொடர்புப்படுத்திச் சிந்தித்துப் பழக்கப்பட்டது. ஸ்டீபனின் நனவோடையில் எனவே அரிஸ்டாட்லிய கருப்பொருள்கள், கவித்துவப் படிமம் ஆகியவற்றோடு அவனது தாயாரின் நினைவுகளும் சேர்ந்து அலையடிக்கின்றன. 


எட்டாவது அத்தியாயத்தில் இதற்கு நேரெதிராக லியோபோல்ட் ப்ளூமின் நனவோடை ஓடுகிறது. ப்ளூமின் நனவோடை நேரடிக் காட்சி அனுபவங்களைச் சேர்ந்தது, புலனுணர்வுகளின் விழிப்பும் மயக்கமுமாகச் சொற்களாவது எனவே சிதறுண்டது. ப்ளூமின் நனவோடை கிட்டத்தட்ட உண்டு செரித்தலைப் போல இருக்கிறது. உணவு, கடந்து செல்லும் விளம்பரம், ப்ளூமின் மனைவி மாலியைப் பற்றி வேட்கை கலந்த நினைவுகள் அனைத்தும் ப்ளூமின் புலனுணர்வுகளால் உள்வாங்கப்பட்டுச் சிதறுண்ட சொற்களாகச் செரிக்கப்படுகின்றன.  டப்ளின் நகரமே ப்ளூமின் நனவோடைக்குச் செரிமானமாகிறது. 


ஜாய்ஸின் நனவோடைகளில் உச்சபட்சச் சாதனை “யுலிசஸ்” நாவலின் கடைசி அத்தியாயத்தில் மாலி ப்ளூமின் நனவோடையில் நடந்தேறுகிறது. முற்றுப்புள்ளிகளில்லாமல், இலக்கணத்தின் தடைகள் ஏதுமில்லாமல், மாலியின் உதிரப் போக்கு போல, ஜிப்ரால்டர் ஜலசந்தியும், டப்ளின் நகரமும் என தொடர்புறுத்தும் நினைவுகளோடு மனிதப் பிரக்ஞையின் எல்லைகளற்ற தொடர்ச்சியாகப் பெண்மையாக உயிரின் அலைகளை ஆமாம் ஆமாம் என்று ஆமோதிக்கும் சக்தியாக அவளுடைய நனவோடையுடன் “யுலிசஸ்” முடிகிறது. 


ஜாய்ஸ் தன் கதைசொல்லலில் மூன்றாவது நபர் கதை சொல்லல் என்பதன் இயல்பையே அடிப்படையில் மாற்றிவிடுகிறார். நூலாசிரியரின் குரலில் அத்தனையும் விவரிக்கப்படுவதில்லை. கதாபாத்திரங்களும், நூலாசிரியரும் சேர்ந்தும் சேராமலும் அவர்களுடைய நனவோடைகள் பன்மையாக மாறுகின்றன. இந்தப் பன்மை வாசகர்களைத் தன் மையமற்ற தன்மையால் அசரடிக்கக்கூடியது. “யுலிசஸ்” நாவலில் கதை சொல்லும் குரல் நுண்ணுணர்வு மிக்க நீர் தளும்பும் பாத்திரம் போலச் செயல்படுகிறது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிக்கும் எண்ணத்திற்கும் எற்ப பாத்திரம் ததும்புகிறது, நீர் சிந்துகிறது, தன்னை சமனப்படுத்திக்கொள்கிறது, தத்தளிக்கிறது. இது உத்திகளின் திறன்களைக் காட்சிப்படுத்தும் தோரணை அல்ல; மாறாக ஒவ்வொரு நடையும் என்னவாக கருத்தியலால் எல்லைகள் உடையதாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகும். குழந்தை பிறப்பு நிகழும் மருத்துவமனை ஒன்றில் ஜாய்ஸின் மொழி பிறப்பின் நோவுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் பிரசவத்தின் போது கூட இருக்கும் மருத்துவ மாணவர்களின் உரையாடல்களோ கலவி, கருத்தரித்தல், ஆகியன பற்றிய களியேறிய நகைப்புகளாக இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தின் அத்தனை கிளைமொழிகளும் சேர்ந்து பிறப்பு அதற்கே உரிய குழப்பங்களும், கலக்கங்களும், கொண்டாட்டங்களும் நிறைந்ததாக மாறுகிறது. ஒவ்வொரு பேச்சும் குரலும் கொண்டிருக்கும் கருத்தியல் இறுக்கம் அதன் பல்குரல்தன்மையால் உடைந்துபோக உலகம் உலகமாக வாசகருக்குப் பரிச்சயமாகிறது. அந்தோணி பர்கஸ் இதனால் ஜாய்ஸின் நாவலை உலகமயமாக்கலின், பல கலாச்சாரத்தன்மைகளின், நமது சமகாலத்தைக் கட்டியங் கூறிய படைப்பு என அறுதியிட்டார். 


கதையாடலின் மரபுகள் அனைத்தையும் மீறியதாலும் உடைத்ததாலும் மேற்கத்திய நவீனத்துவத்தில் இருக்கும் அறிவுத்தோற்றவியல் நெருக்கடிகளை முன்னுக்குக்கொண்டுவந்த அதே சமயம் “யுலிசஸ்” மொழி, புற உலகு, மனிதப் பிரக்ஞை ஆகியவற்றுக்கிடையிலான உறவுகளைக் கவனப்படுத்தியது.


ஜாய்ஸின் “யுலிசஸ்” உலக இலக்கியத்தில் தன்னிகரற்ற படைப்பு.


“யுலிசஸ்” நாவல் பற்றி இன்னும் இரண்டு அல்லது மூன்று  கட்டுரைகள் எழுதுவேன்.