கிரேக்க துன்பியல் நாடகங்கள் மகத்தானவை அவை மனிதனுக்கு எந்த ஆசுவாசத்தையும் வழங்காதவை; அவற்றில் மனிதனுக்கு மீட்பும் விமோசனமும் இல்லை. பாவம்- புண்ணியம் என்ற மதங்களுடைய புனித மயக்கங்களின் ஜாலவித்தையை அவை காட்டுவதுமில்லை மனிதனை காப்பாற்றிவிட்டதான பாவனையை மேற்கொள்வதுமில்லை. கடவுளுக்கு எதிரான மனிதனின் போராட்டமே வாழ்க்கை என்ற தீர்க்கதரிசனத்தை கிரேக்க துன்பியல் நாடகங்கள் முன்வைப்பவை. அதி அற்புத கடவுளுக்கு எதிரான போராட்டத்தில் அற்ப மனிதனால் எப்படி வெற்றியடைய முடியும்? அவனுடைய வாழ்க்கை துன்பியலாக முடிவடைய முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. கிரேக்க துன்பியல் நாடகங்களை எழுதிய சோஃபக்ளிஸ் நம்மால் எப்போதும் பயிலப்பட வேண்டியவர்.
துன்பியலைப் பற்றிப் பேசும்போது இந்திய இலக்கியத்தில் துன்பியலின் இடம் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது. மகாபாரதத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் துன்பியல் கதாபாத்திரங்களே என்றொரு பார்வையுண்டு. குருடனாகிய அரசன் திருதாராஷ்டிரன், தந்தை சந்தனுவுக்காக பிரம்மச்சரிய விரதம் பூண்ட பீஷ்மர், ரோகத்தால் பீடிக்கப்பட்ட பாண்டு, சூதாடும் தர்மன், மந்த புத்தியையுடைய பலசாலியான பீமன், போரிட வேண்டிய தருணத்தில் சந்தேகத்தால் பீடிக்கப்படும் அர்ஜுனன், சொல்லவொணா அவமானத்துக்கு உள்ளாகும் காளி அம்சமாகிய திரௌபதி, தன்னுடைய நூறு புத்திரர்களையும் போரில் இழந்துவிடும் காந்தாரி, கணவனின் காம இச்சைக்கு இணங்கி அவனுடைய மரணத்துக்கு காரணமாகிவிடும் மாத்ரி, தாய் மாமனைப் போரில் கொல்லும் நகுலன், எதிரியான துரியோதனனுக்கு வெற்றி நாள் குறித்துக்கொடுக்கும் ஜோதிடனாகிய சகாதேவன் என எண்ணிப் பார்த்தால் அத்தனை கதாபாத்திரங்களுமே மகாபாரதத்தில் துன்பியல் கதாபாத்திரங்களாகவே தேறும்.
இவர்கள் அனைவரையும் விட ஆகப் பெரிய அவலங்களுக்கு ஆளாகும் கர்ணனே இந்தியத் துன்பியலின் சின்னம். ஒளி நிரம்பிய சூரிய குமாரானாகப் பிறக்கும் கர்ணன் பிறந்த உடனேயே தாய் குந்தியால் பிரம்புக் கூடையில் வைத்து ஆற்றின் போக்கிற்கேற்ப மிதக்க விடப்படுகிறான். இறந்த பிறகே தாய் குந்தியால் மகனாக அங்கீகாரம் பெறுகிறான். கௌரவசபையில் அர்ஜுனனை எதிர்த்து நிற்கும் ஆகச் சிறந்த வில்லாளியான கர்ணன் தேரோட்டியின் மகன் என இகழப்படுகிறான். கேட்டதைக் கொடுக்கும் வள்ளலாகிய கர்ணனிடம் அர்ஜுனன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல் ஏவாதிருக்கும் வரத்தை வேண்டிப்பெறுகிறாள் குந்தி. அவனுடைய கவச குண்டலங்களை இரந்து பெறுகிறான் இந்திரன். அவன் தன் புண்ணியங்களையும் கிருஷ்ணனுக்கு இரத்தத்தில் தாரை வார்க்கிறான்.
மகாபாரதக் கூத்து கர்ணனின் அவலங்களை ‘கர்ண மோட்சம்’ கூத்தில் வெகுவாகக் கொண்டாடும். மூச்சு மூட்டும் அவலங்கள் நிறைந்த கர்ண மோட்சம் கூத்து இறந்தோரின் பதினாறாம் நாள் சடங்காக மோட்ச சாதனமாக வட தமிழக மாவட்டங்களில் நிகழ்த்தப்படுவது ஏனெனில் கிருஷ்ணன் கர்ணனுக்கே கடவுளாக தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டித்தருகிறான். தமிழ்த் திரைப்படம் ‘கர்ணனில்’ சிவாஜி கணேசன் உதடு துடிக்க, இரத்த நாள்ங்கள் முறுக்கேற நடித்துவிட்டதால் கர்ணனை நிதானமாக அணுகும் வாய்ப்பு நமக்கு கிடைக்காமலேயே போய்விட்டது.
ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களை ஆராய்ந்த இலக்கிய விமர்சகர் ஏ.சி.பிராட்லி துன்பியல் கதாபாத்திரங்களின் குணக்கேடுகளே அவர்களுடைய துன்பங்களுக்குக் காரணமாயின என்றொரு கோட்பாட்டினை முன் வைத்தார். அரசன் லியரின் குணக்கேடு அன்பினை சொற்களால் அறிய விரும்பியது. நான் இதையே குணக்கேடுகளிலேயே கேடு கெட்ட குணக்கேடு என்று நினைப்பதுண்டு. ஒதெல்லோவுக்கோ தீராத சந்தேகம், மேக்பத்துக்குப் பற்றி எரியும் பதவி ஆசை, ஹேம்லட்டுக்கு சரியான சமயத்தில் செய்ய வேண்டியதை செய்ய முடியாத தன்மை, காரியங்களை ஒத்திப்போடும் பழக்கம். கர்ணனின் குணக்கேடுதான் என்ன?
மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் நாவல் ‘இனி நான் உறங்கட்டும்’ கர்ணனின் குணக்கேடு என்ன என்பதை நேரடியாகச் சொல்வதில்லை ஆனால் காட்டித் தருகிறது. குருட்சேத்திரப் போர் முடிந்த பின்பு நிகழும் திரௌபதியின் பின்னோக்கிய நனவோடையாக எழுதப்பட்ட இந்த நாவல் ஆ.மாதவனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலிலும் கர்ணன் வள்ளல்தான், மகாவீரன்தான், ஒளி பொருந்திய சூரிய குமாரன்தான். ஆனால் தர்மன் சூதில் தோற்ற பிறகு கௌரவ சபைக்கு இழுத்து வரப்படும் திரௌபதியைப் பார்த்து தாசி என ஆர்ப்பரிக்கும் கர்ணனின் குணக்கேடு எந்த வகையில் சேர்த்தி? ஓரிழை சீலையை அணிந்து, உதிரப் போக்கில் இருக்கும் திரௌபதியை முடியைப் பிடித்து இழுத்து வரும் துச்சாதனை கௌரவ சபையில் மூப்பர் வெட்கி அமர்ந்திருக்க விகர்ணன் மட்டுமே தன்னந்தனியனாக எதிர்ப்புக் குரல் எழுப்புகிறான். எதிர்ப்புக்குரல்கள் எப்போதுமே விகர்ணனுடையதைப் போல பலவீனமானதாகத்தான் இருக்கும். பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலில் கர்ணன் விகர்ணனின் குரலை அடக்குகிறான். ஆடை விலக்கி, தொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு திரௌபதியை ஆபாசமாகப் அழைக்கும் துரியோதனனை கர்ணன் ஆதரித்து திரௌபதியை, சூதில் தோற்றவர்களின் மனைவி தாசி என்று ஏளனம் பேசுகிறான். அந்த சமயத்தில் என்ன ஆயிற்று ஒளி பொருந்திய சூரியகுமாரனுக்கு? கர்ணனின் குணக்கேடு அவனது விமோசனமில்லாத கீழ்மை; திரௌபதியை அம்மணமாக ஓடவிட்டுப் பார்க்க விழையும் மிருக ஆசை.
பி.கே.பாலகிருஷ்ணனின் மொழி மலையாள பௌராணிக மொழி. சமஸ்கிருதமா மலையாளமா என்ற குழப்பத்தை ஏற்படுத்துவது. ஆ.மாதவனின் மொழிபெயர்ப்புத் தமிழ் மூலத்தின் மலையாளத்துக்கு விசுவாசமாக இருக்கிறது.
கர்ணன்தான் திரௌபதியால் மனதின் ரகசிய ஆழங்களில் விரும்பப்பட்டவன் என்ற கர்ணபரம்பரைக் கதையை நாவலில் எந்த இடத்திலும் பி.கே.பாலக்கிருஷ்ணன் சுட்டுவதில்லை. ஆனால் திரௌபதியின் நனவோடையில் கர்ணனை அவள் கண்கள் நிலைகுத்தப் பார்த்தாள் என்ற ஒரு வரி விவரிப்பு வருகிறது, அந்த வரி அபாரமானது.
துன்பியலே வாழ்க்கையைச் சொல்லும் உண்மையான தத்துவம் என்பதை அறிய கண்கள் நிலைகுத்தப் பார்க்க வேண்டும். அதற்குக் கண்கள் சிவந்து முழுமையாக விழிக்கவேண்டும். அதற்காக அழுது புலம்புவதல்ல நெறி. இவ்வுலக வாழ்வு மனிதனுக்கு இப்படியாகவே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அடையக்கூடிய தரிசன முழுமை தரும் அமைதி துறவறத்துக்கு இட்டுச்செல்லாது, பிறவாமை வேண்டும் என வேண்டவைக்காது, மீண்டும் போராடுவேன் என்ற வைராக்கியத்தைத் தரும்.
நீட்ஷே தன்னுடைய “Birth of tragedy” நூலில் கிரேக்க துன்பியல் நாடகங்கள் காட்டும் உண்மையை அப்பலோனிய பார்வை மறைத்துவிடுகிறது என்று வாதிடுவார். மனித வாழ்வையும் அதன் படைப்பியக்கத்தையும் இரண்டு எதிரெதிர் சக்திகளாக இந்த நூலில் சட்டகமிடும் நீட்ஷே, அப்பலோனிய பார்வை என்பது ஒழுங்கு, பகுத்தறிவு, எல்லைகள், தனித்துவம் ஆகியவற்றால் ஆனது என்றும், டயனோஷிய பார்வை என்பது குழப்பங்கள், தலைக்கேறிய போதை, பகுத்தறிவுக்கு ஆட்படாத தன்மை ஆகியவற்றால் ஆனது என வரையறுப்பார். கிரேக்க துன்பியல் நாடகங்களில் அவற்றின் வடிவம், கரு, கதை சொல்லலாக அரிஸ்டாட்டிலால் தர்க்கமாக்கப்பட்ட நியதி ஆகியவை அப்பலோனிய சார்பு கொண்டவை என்றால் அவற்றில் வரும் வசனங்கள், கிரேக்க கோரஸ் பாடும் பாடல்கள் டயனோஷிய சார்பு கொண்டவை. டயனோஷிய பெரு நகை நீட்ஷேயின் பெரு நகையும் கூட. நாடகாசிரியர் யூரிபிடிஸும், தத்துவ அறிஞர் சாக்ரடீஸுமே கிரேக்க துன்பியல் நாடகங்கள் காட்டும் உண்மையைக் கொலை செய்துவிட்டவர்கள் என்று நீட்ஷே தன் நூலில் வாதிடுவார்.
யூரிபிடிஸ் சாதாரண மனிதனையும் அவனுடைய மனதின் சாதாரண குமுறல்களையும் மேடைக்குக் கொண்டுவந்து, துன்பியலில் ஆதி ஆழம் காணாமல் போன யதார்த்தவாதம் நிலைபெற வழிவகை செய்துவிட்டார் என்று நீட்ஷே மூக்கை சிந்தி புலம்புவார். அழகாக இருப்பதற்கு எல்லாமே புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்ற அழகியல் கோட்பாட்டினை விதைத்ததன் மூலம் பகுத்தறிவு, இயங்கியல், அறிவால் மனித துயரத்தை சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை ஆகியவற்றை உண்டாக்கி சாக்ரடீஸ் துயருருதலை மென்மையாக்கிவிட்டார் என்று நீட்ஷே கூறுவது மாயத்திரைகள் பலவற்றை நமக்கு விலக்கிக் காட்டக்கூடியது.
நிலைகுத்திய பார்வையும், நீட்ஷேவிய/ டயனோஷிய பெருநகையும் சேரும்போதே துன்பியல் காட்டித்தரும் உண்மை நமக்குத் துலக்கமாகிறது. குமாஸ்தா படைப்புகளால் நிரம்பிருக்கும் தமிழ் இலக்கியம் செவ்விலக்கியம் காட்டும் தரிசனங்களுக்கு அப்பால் தங்கள் அசமந்த கதியின் சிறுமைகளில் கேவலப்பட்டு நிற்கின்றன.