Saturday, August 22, 2026

ஷேக்ஸ்பியர் யார்?




நான் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரான ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவனில் (Stratford-upon-Avon) உள்ள ஷேக்ஸ்பியர் புத்தகக் கடையின் முன்னால், புகைப்படத்தில்,  நின்று கொண்டிருக்கிறேன். கடை ஜன்னலில் இருக்கும் விளம்பரம்  “ஷேக்ஸ்பியரின் முழுமையான படைப்புகள் — £9.99"  என்று கூறுகிறது. அதற்கு கீழே, "ஷேக்ஸ்பியர் யார்? 27 புதிய கோட்பாடுகள்"  என்று இன்னொரு  சிறிய விளம்பரப் பலகை சொல்கிறது. அதற்கு பக்கத்தில், அரசி எலிசபெத்தின்  காலத்து கழுத்துப்பட்டை  அணிந்த ஒரு ரப்பர் வாத்து இருக்கிறது. இன்னார்தான் ஷேக்ஸ்பியர் என்று உறுதிபடச் சொல்ல முடியாத ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊரில் அவர் அந்த ரப்பர் வாத்தாய் கூட இருந்திருக்கலாம்.  

ஷேக்ஸ்பியரின் முழுமையான படைப்புகளைக் கொண்ட புத்தகத்தை விட அந்த ரப்பர் வாத்து ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவன் வந்து போனதற்கான நல்ல  நினைவுப் பொருள் என்று நினைக்கிறேன். அதன் எலிசபெத் கால கழுத்துப்பட்டை குறைந்தபட்ச வரலாற்று  உண்மையைச் சொல்வதாக இருக்கிறது. என்னால் அந்த வாத்தை எனக்குப் பிடித்த குளத்தில் மிதக்கவிடமுடியும். உலகப்புகழ் பெற்ற ஆசிரியன் அவனுடைய ஊரிலேயே, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு என்னவாக இருக்கிறான் என்பதற்கு குவாக் குவாக் என்று அந்த ரப்பர் வாத்து கத்துமானால் நல்ல வரலாற்று சாட்சியமாக இருக்கும். மூன்றாவது ரிச்சர்ட் அரசனையும், எட்டாவது ஹென்றியையும் நெறிந்த தொண்டை வாத்துகளாக மாற்றியவன் அல்லவா ஷேக்ஸ்பியர்?.  

வரலாற்று ரீதியாக, மூன்றாம் ரிச்சர்டும், எட்டாவது   ஹென்றியும்  ஆகிய இருவருமே தங்களது குடிமக்களையும் அரசவை பிரபுக்களையும் தற்காப்பற்ற விலங்குகளைப் போலவே நடத்தியவர்கள். ஷேக்ஸ்பியர், மூன்றாவது ரிச்சர்டை "நரகத்து நாய்", "அசிங்கமான கூன்முதுகுத் தவளை”,  "காட்டுப்பன்றி"  என  அடிக்கடி இரையை வேட்டையாடும் கொடிய விலங்குகளுடன் ஒப்பிடுகிறான். நான் லண்டன் குளோப் தியேட்டரில் மூன்றாம் ரிச்சர்ட் நாடகத்தைப் பார்த்துவிட்டு ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவனுக்கு வந்தது தற்செயலானது அல்ல என்று இப்போது தோன்றுகிறது .

எட்டாவது ஹென்றி , தனக்கு அதிருப்தி உண்டானபோதெல்லாம், தனது அரசியல் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்களையும் இரண்டு மனைவிகளையும்  கோடரியால் துண்டிக்கச் செய்தான். ஆட்சியாளர்களின் எல்லையற்ற அதிகாரம் என்ன செய்யும் என்று அடையாளம் காட்டிய ஷேக்ஸ்பியர் எனக்கு அணுக்கமானவன்.

இந்த ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவனே ஒரு மேடை, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நடிகர்கள், இந்த புத்தகக் கடை சாத்தியமான எழுத்தாளர்களின் ஒரு நூலகம். நான் ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிசஸ்’ நாவலின்  பிரதியை கையில் வைத்திருக்கிறேன், ஏனென்றால் ஷேக்ஸ்பியர் யார் என்ற கேள்வியை  ஆவி அழைக்கும் அமர்வாக மாற்றும் எனக்குத் தெரிந்த ஒரே புத்தகம் அது மட்டும்தான்.

"அங்கே யார் இருக்கிறார்கள்?"  என்பதுதான் “ஹேம்லெட்” நாடகத்தின் முதல் வரி. ஸ்ட்ராட்ஃபோர்டுக்கு வரும் எவரும் கேட்கும் முதல் கேள்வியும் அதுதான். அதற்கான பதில் பொதுவாக "வில்லியம் ஷேக்ஸ்பியர்" என்பதாக இருக்கும், ஆனால் அதற்குப் பிறகுதான் சிக்கல் தொடங்குகிறது. ஏனெனில் அடுத்த கேள்வியான — "சரி, ஆனால் அவர் யார்?" — என்பதற்கு தெளிவான பதில் எதுவும் இல்லை. அவர் ஒரு தோல் கையுறை தயாரிப்பவரின் மகன், சட்டவிரோதமாக வேட்டையாடுபவர், ஒரு நடிகர், ஒரு நாடக ஆசிரியர், தானியங்களை பதுக்குபவர், ஒரு கணவர்,  மகனைப் பறிகொடுத்த  தந்தை,  தன் மனைவி ஆன் ஹாத்தவேக்கு  இரண்டாவது சிறந்த படுக்கையை  மட்டுமே  உயில் எழுதி வைத்த ஒரு மனிதர். அவரது முதல் படுக்கை யாருக்குச் சென்றது என்ற தகவல் இல்லை. அமரிக்க நடிகை ஆன் ஹாத்தவே ஈறு தெரிய சிரிக்கும்போது,  பிரிட்னி ஸ்பியர்ஸ் போல “ஓ பேபே ஓ பேபே” என்று மிக்கிரி செய்து பாடும்போது, இன்னும் பல படுக்கை அறைக் காட்சிகளில் அசத்தும்போது  நான் அவளைப் பார்த்து சொக்கிப்போவது, அவளது பெயர் ஷேக்ஸ்பியர் மனைவியின் பெயர் என்பதால்தான். நம்புங்கள். 

“ரோமியோவும் ஜூலியட்டும்” நாடகத்தில் அவன் தானே கேட்டான் “பெயரில் என்ன இருக்கிறது?" என்று. பெயரில் என்னதான் இல்லை என்பதாக ஸ்ட்ராட்ஃபோர்டில், அந்தப் பெயர் ஒவ்வொரு மதுக்கடையிலும், தேநீருக்கு அருகே வைக்கப்படும் துண்டிலும், நாப்கின்களிலும்,  திரையரங்கிலும்,  நாடக அரங்கிலும் இருக்கிறது. அவனேதானே மேலும் சொன்னான் ரோஜாவை வேறு பெயரால் அழைத்தாலும் அது வேறு மணமா வீசும் என்று. அவன் அப்படியெல்லாம் எழுதியதால் அல்லவா நான் உம்பர்ட்டோ எக்கோவின் “ரோஜாவின் பெயர்” நாவலை மொழிபெயர்த்தேன். 

அதற்குப் பின்னால் இருக்கும் மனிதர், ஹேம்லெட்டின் வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு விசித்திரமான படைப்பு . “யுலிசஸ்” நாவலில், ஸ்டீஃபன் டெடலாஸ் டப்ளினில் உள்ள தேசிய நூலகத்திற்குள் நுழைகிறான். அங்கு, புகையிலை புகையுடன் இலக்கியக் கோட்பாடுளைக் கலந்து, “ஹேம்லெட்”  நாடகத்தைப் பற்றிய ஒரு கோட்பாட்டை அறிவிக்கிறான். நான் அதை முதன்முதலில் படித்ததிலிருந்து அது என் மனதை விட்டே அகலவில்லை. ஷேக்ஸ்பியர் என்பவர் ஹேம்லெட் அல்ல, அவர்தான் நாடகத்தில் வரும் அந்த ஹேம்லெட்டின் அப்பாவின் பேய் என்பது அவனது வாதம். ஹேம்லெட் நாடகத்தில் வரும் பேய், வில்லியம் ஷேக்ஸ்பியரின் சொந்த ஆவியே ஆகும்; அது ஹேம்லெட் என்ற பெயரின் மற்றொரு வடிவத்தைக் கொண்ட, இறந்துபோன அவரது மகன் ஹாம்னெட்டிடம் (Hamnet) பேசுகிறது.  என் நினைவிலிருந்து ஸ்டீஃபன் கூறுவதை அப்படியே மேற்கோள் காட்டுகிறேன்:

"நாடகம் தொடங்குகிறது. நிழலின் கீழ் ஒரு நடிகர் மேடைக்கு வருகிறார், அவர் ஒரு அரசவை ஆடம்பர மனிதரின் பழைய இரும்பு கவசத்தை அணிந்திருக்கிறார்... அதுதான் பேய், அரசன், ஒரு அரசனாகவும் அரசனற்றவனாகவும் இருக்கும் அந்த நடிகர் ஷேக்ஸ்பியர் தான்... அவர் பர்பேஜிடம் ... அவனது பெயரைக் கூப்பிட்டு இந்த வார்த்தைகளைப் பேசுகிறார்: ஹேம்லெட், நான் உனது தந்தையின் ஆவி, சொல்வதைக் கவனி. தன் ஆன்மாவின் மகனான இளவரசன் இளம் ஹேம்லெட்டிடமும், தன் உடலின் மகனான ஹாம்னெட் ஷேக்ஸ்பியரிடமும் (Hamnet Shakespeare) அவர் பேசுகிறார். தன் பெயரைக் கொண்டவன் என்றும் வாழ வேண்டும் என்பதற்காக அந்த மகன் ஸ்ட்ராட்ஃபோர்டில்  இறந்துவிட்டான்.”

இவ்வாறாக, இந்த நாடகம் ஒரு தந்தையின் துயரமாகவும், ஒரு கணவனின் சந்தேகமாகவும் மாறுகிறது. கெர்ட்ரூட் (Gertrude) என்பது ஆன் ஹாத்தவே (Anne Hathaway - ஷேக்ஸ்பியரின் மனைவி அமெரிக்க நடிகையல்ல); கிளாடியஸ்  என்பது ஒரு சகோதரன், அல்லது   ஒரு தாடி வைத்த ஏதோவொரு மனிதன். நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்த ஷேக்ஸ்பியர், கல்லறையைத் தாண்டி ஹாம்னெட்டைக் கூப்பிடுவதற்காகவே அந்தப் பேய் வேடத்தை ஏற்று நடித்தார். இக்கோட்பாடு அபத்தமானது, நிரூபிக்க முடியாதது, ஆனால் முற்றிலும் அவசியமானது. ஜாய்ஸ் தனது பாணியில், புத்தகக் கடையின் கண்ணாடி ஜன்னலுக்குப் பொருத்தமான ஒரு சிறந்த பொன்மொழியை ஸ்டீஃபன் மூலம் எனக்குக் கொடுக்கிறார்: "மனநிலை தவறிய அனைத்து மனிதர்களின் சிந்தனைகளும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் புகலிடம் ஷேக்ஸ்பியர் தான்." நான் ஜன்னல் வழியே பார்க்கிறேன். அந்த சிந்தனைகள் உள்ளே புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

வரலாற்று ரீதியான ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை என்பது சட்டப் பதிவுகள்,  வதந்திகள் ஆகியவற்றை வைத்துச் செய்த  ஒட்டுத்துணி  தையல் வேலைப்பாடு.  அவர் 1564-ல் ஒரு கையுறை தயாரிப்பாளரின் மகனாகப் பிறந்தார். 1582-ல் ஆன் ஹாத்தவேயை  மணந்தார்: அப்போது அவருக்கு பதினெட்டு வயது, அவளுக்கோ இருபத்தாறு வயது, அதோடு அவள் கர்ப்பமாகவும் இருந்தாள். சிலர் அது காதல் என்கிறார்கள்; சிலர் அது ஒரு நிர்ப்பந்தம் என்கிறார்கள்;  ஷேக்ஸ்பியரின் சான்னெட்டுகளோ  "முதிர்ந்த வயதும் இளமையும் ஒன்றாக வாழ முடியாது" என்று கூறுகின்றன. 1585-ல் அவருக்கு ஹாம்நெட் (Hamnet),  ஜூடித் (Judith) என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஹாம்நெட் 1596-ல், பதினொரு வயதில் இறந்துபோனான். அதற்குப் பிறகு வருவதுதான் காணாமல் போன ஆண்டுகள்:  1585 இலிருந்து  1592-க்கு இடைப்பட்ட காலம், இதில் வரலாற்றுப் பதிவுகள் இருண்டுவிடுகின்றன, வாழ்க்கை வரலாற்றாசிரியர்களோ கற்பனையில் மூழ்கிவிடுகிறார்கள். அவர் ஒரு பள்ளி ஆசிரியராக, ஒரு சிப்பாயாக, ஒரு வழக்கறிஞராக அல்லது சட்டவிரோதமாக வேட்டையாடுபவராக இருந்திருக்கலாம். ஷேக்ஸ்பியர் மான் வேட்டையாடிய கதை மிகவும் சுவாரஸ்யமானது என்பதால் அதை யாரும் ஆராய முற்படுவதில்லை: சார்ல்கோட்டில்  உள்ள சர் தாமஸ் லூசியின் பூங்காவிலிருந்து அவர் மான்களைத் திருடி, லண்டனுக்குத் தப்பி ஓடி, பின்னர் லூசியை 'ஜஸ்டிஸ் ஷாலோ'  என்ற கதாபாத்திரமாக மாற்றி பழிவாங்கினார் என்று சொல்லப்படுகிறது. தப்பியோடிய ஒரு எழுத்தாளர் எழுதிய வசனம்தான்: "விவேகமே வீரத்தின் சிறந்த பகுதி." வார்விக்ஷைரை  விட்டு வெளியேறும் அளவுக்கு அவர் விவேகமுள்ளவராக இருந்தார் என்று தெரிகிறது.

லண்டனில் அவர் ஒரு நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் மாறினார். ராபர்ட் கிரீன்  அவரை "எங்கள் இறகுகளால் அழகுபடுத்தப்பட்ட ஒரு திமிர்பிடித்த காகம்"  என்று அழைத்தார் — ஆக்ஸ்போர்டியன்களுக்கு  நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய முதல் 'ஆன்டி-ஸ்ட்ராட்ஃபோர்டியன்'  அவர்தான். கிராமப்புறத்திலிருந்து வந்த ஒரு மனிதனுக்கு நாடகங்களை எழுதும் அளவுக்கு அறிவு இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. ஆனால் அவருடைய  நாடகங்களிலேயே அதற்கான பதில் இருக்கிறது: "ஹோரஷியோ, உனது தத்துவத்தில் கற்பனை செய்ததை விட வானத்திலும் பூமியிலும் இன்னும் பல விஷயங்கள் உள்ளன." ஒரு கையுறை தயாரிப்பாளரின் மகனால் சட்டம், கடல்,  இத்தாலி ஆகியவற்றைப்  பற்றி தெரிந்து கொள்ள முடியும், ஏனென்றால் கற்பனை என்பது ஒரு பாஸ்போர்ட் அல்ல. கற்பனை என்பது ஒரு ஆவி. ஹேம்லெட்டின் தந்தையின் ஆவி.

ஷேக்ஸ்பியர் யார் என்ற கேள்விக்கு சில புத்தகங்கள் பிரான்சிஸ் பேகன்  தான் நாடகங்களை எழுதினார் என்று கூறுகின்றன, ஏனென்றால் ஒரு கையுறை தயாரிப்பாளரின் மகனுக்கு சட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேறு சில புத்தகங்கள் ஆக்ஸ்போர்டு பிரபுவான எட்வர்ட் டி வெர் (Edward de Vere) எழுதினார் என்கின்றன, ஏனென்றால் ஒரு சாமானியனுக்கு அரசவை தெரிந்திருக்க முடியாது. இன்னும் சில கிறிஸ்டோபர் மார்லோ  என்கின்றன, ஏனென்றால் அவர் ஒரு உளவுத்துறை அதிகாரி, மேலும் நாடகங்கள் பல இரகசியங்கள் நிறைந்தவை. ஒரு புத்தகம் மேரி சிட்னி  என்கிறது; இன்னொன்று ஒரு குழு என்கிறது; மற்றொன்று எலிசபெத் ராணி என்கிறது. மார்க் ட்வைன்  தனது Is Shakespeare Dead? என்ற புத்தகத்தில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மனிதர் தனது உயிலில் புத்தகங்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை, எனவே அவரால் இந்த படைப்புகளை எழுதியிருக்க முடியாது என்று வாதிட்டார். அந்த வாதம் என்னவென்றால்: நூலகம் இல்லை என்றால், எழுத்தாளரும் இல்லை. ஆனால் அந்த உயில் அவரது மனைவிக்கு  இரண்டாவது சிறந்த படுக்கையையும் அதன் அறைக்கலன்களையும் விட்டுச் சென்றது, இது 'ஃபர்ஸ்ட் ஃபோலியோ'வை (முதல் ஷேக்ஸ்பியர் அச்சாக்கப் பிரதிகள்)  விட அதிக ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. அது ஒரு அவமதிப்பா? ஒரு சட்டபூர்வமான ஏமாற்று வித்தையா? திருமண படுக்கையா? "இரண்டு முதுகுகளைக் கொண்ட மிருகம்" (the beast with two backs) என்ற ஒரு நகைச்சுவையா? நமக்குத் தெரியாது. நமக்கு அது எப்போதும் தெரியாது. யாரோ சொல்வது போல், மீதமுள்ளவை ஆழமான மௌனத்தில் அமிழ்ந்திருக்கின்றன.

ஸ்டீபன் கிரீன்பிளாட்டின் (Stephen Greenblatt) Will in the World புத்தகம், ஜேம்ஸ் ஷாபிரோவின் (James Shapiro) Contested Will புத்தகத்திற்கு பக்கத்தில் இருக்கிறது. முதலாவது புத்தகம் படைப்புகளில் இருந்து வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முயல்கிறது; இரண்டாவது புத்தகம் கற்பனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து கற்பனைகளை மீண்டும் உருவாக்க முயல்கிறது. இரண்டுமே ஆவிகளுடன் பேசும் மந்திர வித்தைகள். ஷேக்ஸ்பியர் ஒரு இறந்து போன ராஜா; வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் ஹேம்லெட்டைப் போல, அந்த ஆவியைப் பேச வைக்க முயல்கிறார்கள். அந்த ஆவியோ, ஒரு ஆவியாகவே இருந்து கொண்டு, "கேள், கேள், ஓ, கேள்!" (“List, list, O, list!”) என்று மட்டும் கூறிவிட்டு, மீண்டும் பாதாள அறைக்குள் சென்றுவிடுகிறது.

ஆவணங்களின்படி அறியப்படும் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை ஒன்றும் அத்தனை காதல் வயப்பட்டதாக இல்லை. அவர் சிறிய கடன்களுக்காக வழக்குத் தொடர்ந்தார், பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் தானியங்களைப் பதுக்கினார், நிலங்களை வாங்கினார், பின்னர் 'நியூ பிளேஸ்'  என்ற இடத்திற்கு ஓய்வெடுக்கச் சென்றார். "கருணையின் குணம் வற்புறுத்தப்படுவதில்லை" என்று அவர் எழுதினார், ஆனால் அவரே,  "காதல் கண்களால் பார்ப்பதில்லை, மனதால் பார்க்கிறது" என்று எழுதினார், பின்னர் தன் மனைவிக்கு இரண்டாவது சிறந்த படுக்கையை மட்டுமே விட்டுச் சென்றார். "கனவுகள் எதனால் செய்யப்படுகின்றனவோ, நாமும் அதே போன்ற ஒரு பொருள்தான்" என்று எழுதினார், பின்னர் யாரும் தன் எலும்புகளை நகர்த்தக் கூடாது என்பதற்காக தன் கல்லறையை சபித்து வைப்பதையும் உறுதி செய்தார். அந்த சாபம் இவ்வாறு கூறுகிறது: "என் எலும்புகளை நகர்த்துபவன் சபிக்கப்படட்டும்." அவர் ஒரு எலும்புக்கூடாக இருந்தாலும், தனக்கு மட்டுமாவது  ஒரு எழுத்தாளராக நிலைத்திருக்க விரும்பினார்.

இதில் நாம் அறிவது என்னவென்றால்   ஷேக்ஸ்பியர் ஒரு நயவஞ்சகர் அல்ல. அவர் ஒரு மனிதராக இருந்தார், ஒரு மனிதன் என்பவன் ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல,  அவன் மாறாக பல நடிகர்களைக் கொண்ட ஒரு மேடை. ”உலகமே ஒரு மேடை, ஆண்களும் பெண்களும் அனைவரும் வெறும் நடிகர்கள்; அவர்களுக்கு வெளியேறும் வழிகளும் நுழைவு வழிகளும் உண்டு; ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல வேடங்களில் நடிக்கிறான்." ஷேக்ஸ்பியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பாத்திரத்தில் நடித்தார், ஆவியின் பாத்திரத்திலும் நடித்தார், மேலும் எழுத்தாளரின் பாத்திரத்திலும் நடித்தார். நாடகங்கள்  நாட்குறிப்பு  அல்ல; அவை ஒரு கனவு. "வாழ்க்கை என்பது வெறுமனே நடந்து செல்லும் நிழல், ஒரு பாவப்பட்ட நடிகன், மேடையில் தன் நேரத்தை வீம்பாகவும் கவலையுடனும் கழித்துவிடுகிறான். அதற்குப் பிறகு அவன் குரல் கேட்பதில்லை." ஸ்ட்ராட்ஃபோர்டைச் சேர்ந்த அந்த மனிதன் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் வீம்பாக கவலையுடன் மேடையில் ஆடினார். அந்த ஆடலுக்குப் பிறகு எஞ்சியிருப்பவைதான் இந்த நாடகங்கள்.

புத்தகக் கடையின் ஜன்னல் இப்போது எனது பிரதிபலிப்பைக் காட்டுகிறது. ‘யுலிசஸ்'  நாவலையும்  ஒரு பேனாவையும் கையில் வைத்திருக்கும் ஒரு மனிதனை நான் பார்க்கிறேன். "அங்கே யார் இருக்கிறார்கள்?" என்று என் பிரதிபலிப்பைக் கேட்கிறேன். நானும் ஷேக்ஸ்பியரைப் போல, வாசிக்கப்படாத பக்கங்களின் ஒரு அடுக்குதான். வித்தியாசம் என்னவென்றால், அவருடைய பக்கங்கள் என்னுடையதை விடச் சிறந்தவை. ஆகச் சிறந்தவை

நான் உள்ளே செல்கிறேன். எலிசபெத் அரசி காலத்து இரட்டை ஆடை  அணிந்திருந்த, அதோடு அந்த ஆடையின் மேல் தெளிவாகவே சலிப்படைந்திருந்த அந்த எழுத்தர், எனக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்கிறார். நான், "உங்களிடம் ஷேக்ஸ்பியர் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்கிறேன். அவர் ஒட்டுமொத்த கடையையும் கைகாட்டுகிறார். நான் நாடகங்களின் மலிவான ஒரு பதிப்பையும் , யோரிக்கின் மண்டையோடு  வடிவத்திலான ஒரு காந்தத்தையும் வாங்குகிறேன். அந்த மண்டையோடு காந்தத்திற்கு "அந்தோ, பரிதாபத்திற்குரிய யோரிக்!"  என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஸ்ட்ராட்ஃபோர்டின் மிகச் சரியான நினைவுப் பொருள்: நெகிழியால்  செய்யப்பட்ட ஒரு மரணத்தின் நினைவுச் சின்னம் (memento mori).

புத்தகக்கடைக்கு வெளியே மழை பெய்ய ஆரம்பிக்கிறது. புத்தகக்கடை கண்ணாடி ஜன்னலில் நீராவியும் மழைத்துளிகளுமாக நீர்ப்படலம் படர்ந்திருக்கிறது. அரசன் லியரின் வசனங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன: How much do you love me? என் முகம் நீர்ப்படல கண்ணாடி பிரதிபலிப்பாய் எனக்குத் தெரிகிறது. Even when mad Lear is every inch a King எனக்கு அவனை நன்றாகத் தெரியும். எனக்கு ஷேக்ஸ்பியர் யாரென்று தெரியும். மிக மிக நன்றாகத் தெரியும்.