Wednesday, August 19, 2026

லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள அமராவதி புத்த சிற்பங்கள்




நான் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் அமராவதி சிற்பப் பிரிவில் நின்று கொண்டிருந்தபோது எழுந்த எண்ணங்களை இன்று அசைபோட்டுக்கொண்டிருந்தேன்.

என்னைச் சுற்றி தாமரைகள், யானைகள், தர்ம சக்கரங்கள், புத்தரின் வாழ்க்கையின் அமைதியான தருணங்கள் செதுக்கப்பட்ட வெளிர் சுண்ணாம்புக்கல் பலகைகள் உள்ளன. வெளிச்சம் மிகச்சிறப்பாக உள்ளது. குளிர்சாதன வசதி மிகச்சிறப்பாக உள்ளது. விளக்கக் குறிப்புகள் மிகச்சிறப்பாக உள்ளன. எல்லாமே மிகச்சிறப்பாக உள்ளன. 

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், இந்தச் சிற்பங்கள் பளிங்குக்கற்கள் அல்ல. அவை ஒரு கன்னியாஸ்திரியின் இருமலைப் போல வெளிறியவை;   ஆற்றுப் பனியின் நிறத்தைக் கொண்ட சுண்ணாம்புக்கற்கள். அவை எஃகு அடைப்புகளுக்குள்   கண்ணாடித் தட்டுகளின் மேல் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு காலத்தில்  துறவியின் கரங்களின் வெதுவெதுப்பான தொடுதலைப் பெற்ற அந்தப் பலகையின் மையப்பகுதி, இன்று ஒரு பாதுகாப்பாளரின் வெள்ளை நிறக் கையுறையை மட்டுமே வரவேற்கிறது. இந்தச் செதுக்கல் வேலைப்பாடுகள் மிகவும் ஆழமானவை, அவற்றின் நிழல்கள் நள்ளிரவால் செய்யப்பட்ட ஒரு உளியைக் கொண்டு வெட்டப்பட்டது போல் தோன்றுகின்றன.

எல்லா இடங்களிலும் கதை சொல்லும் சிற்பப் பலகைகள்  நிறைந்துள்ளன: வீங்கிய மார்புடைய யக்ஷர்கள், கைகூப்பிய பக்தர்கள், கேள்விக்குறியைப் போலத் தும்பிக்கையைச் சுருட்டிய யானைகள், ஞானத்தின் பொறுமையோடு மலரும் தாமரைகள். ஒரு சிற்பப் பலகை புத்தரின் துறவறப் பயணம் காட்சியைக் காட்டுகிறது: இளவரசர் சித்தார்த்தர் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு குதிரையில் ஏறிச் செல்கிறார், யாரும் விழித்துவிடக் கூடாது என்பதற்காக அவரது குதிரையின் குளம்புகளைச் சிறிய தேவதைகள் தாங்கிப் பிடிக்கின்றனர். இது மிக அழகாக இருக்கிறது. எனக்குள் ஒருவித மென்மையான வேதனை எழுகிறது. அப்புறம் எனக்கு நினைவுக்கு வருகிறது, அந்தக் குதிரை, காந்தகா, தன் வீட்டை விட்டுத் தன் விருப்பப்படிதான் வெளியேறியது. ஆனால், இந்தச் சிற்பங்கள் அப்படி வெளியேறியவை அல்ல. 

மற்றொரு பலகையில் (panel), புத்தர் எங்குமே காட்டப்படவில்லை. அங்கு வெறும் வெற்று அரியணையும், ஒரு ஜோடி பாதச்சுவடுகளும், ஒரு போதி மரமும், ஒரு சக்கரமும் மட்டுமே உள்ளன.  புத்தர் மறைந்துவிட்டார், அதுவே இங்கு முக்கிய விஷயம். அவர் கட்டிடத்தை விட்டு வெளியேறிவிட்டார், அந்த கட்டிடம் தான் இந்த பிரபஞ்சம். சில நேரங்களில் மிக ஆற்றல்மிக்க இருப்பு என்பது ஒரு ‘இல்லாமைதான்’ என்பதை அமராவதி கலைஞர்கள் புரிந்து வைத்திருந்தனர். இதற்கு நேர்மாறாக, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தின் வெளிப்பாடகத் திகழ்கிறது: அதாவது இருப்பதே எல்லாம், இல்லாமை என்பது கண்ணாடிப் பெட்டிகளால் நிரப்பப்பட வேண்டிய ஒரு குறைபாடு.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தச் சிற்பங்கள் "பெறப்பட்டன" (acquired) என்று அங்கிருக்கும் ஒரு லேபிள் எனக்குக் கூறுகிறது. "பெறப்பட்டது" என்பது ஒரு பிரமாதமான வார்த்தை. அது ஏதோ ஒரு நாகரீகமான பரிமாற்றத்தையோ, ஒருவேளை ரசீதையோ அல்லது சமமான இருவருக்கு இடையேயான கைகுலுக்கலையோ குறிப்பது போல் தோன்றுகிறது. ஆனால் நிஜத்தில், இதன் பொருள் என்னவென்றால், ஒரு தொப்பியை அணிந்துகொண்டு, தனக்குத்தான் எல்லாம் சொந்தம் என்ற  திமிரோடு வந்த ஒருவர், புனிதமான கல் சிற்பங்களை லண்டன் செல்லும் ஒரு படகில் ஏற்றியுள்ளார் என்பதாகும். அந்தக் கற்கள் வைக்கோலால் சுற்றப்பட்டு, தேயிலைக்கும்  நீலச் சாயத்திற்கும் (indigo) அருகில் பத்திரமாக வைக்கப்பட்டு, லேசாகத் தட்டிக்கொடுக்கப்படுவதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். நீ லண்டனுக்குப் போகிறாய், கிழவா. அங்குள்ள பனிமூட்டம் உனக்கு மிகவும் பிடிக்கும். கற்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சுண்ணாம்புக்கல் அதன் வலுவான கருத்துக்களுக்காக அறியப்பட்டதொன்றும் இல்லை. ஆனால், ஒருவேளை அதற்குப் பேசத் தெரிந்திருந்தால், அது இப்படிச் சொல்லியிருக்கலாம்: நான் தக்காண பீடபூமியில் உள்ள ஒரு ஸ்தூபிக்காகச் செதுக்கப்பட்டவன். பருவமழையும், மல்லிகைப் பூவின் வாசனையும் எனக்குப் பிடித்தமானவை. தயவுசெய்து என்னை ஒரு  லண்டன் உணவகம்  அருகில் வைத்துவிடாதீர்கள்.

ஆனாலும் அவை இங்கே இருக்கின்றன. நானும் இங்கே இருக்கிறேன். அவற்றைப் பார்ப்பதற்காக நான் லண்டன் வந்திருக்கிறேன். அமராவதிக்கே நேரடியாகச் சென்றிருப்பது மிகவும் எளிதானதாகவும், உனர்வுரீதியாக  மிகவும் சரியானதாகவும் இருந்திருக்கும். ஆனால் நான் லண்டனில் இருக்கிறேன், இங்குள்ள  ரயில் (Tube) வசதியாக உள்ளது, அருங்காட்சியகமும் இலவசம். ஏகாதிபத்தியம்  இப்படித்தான் செயல்படுகிறது: அது ஒரு கிடங்கைக் கட்டி, அதற்கு 'அருங்காட்சியகம்' என்று பெயரிட்டு, ஒரு குற்றக் களத்திற்கு வந்து செல்வதை  பண்பட்ட, நாகரீகமான காரியமாக உணர வைக்கிறது.

நாம் அமராவதியைப் பற்றிப் பேசுவோம், ஏனென்றால் அருங்காட்சியகத்தின் லேபிள்கள் அதைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. அமராவதி என்பது ஏதோ அழகான சிற்பத் தோட்டம் கொண்ட ஒரு சிறிய கிராமம் அல்ல. அது பண்டைய உலகின் மிகச்சிறந்த பௌத்த மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது; தர்மம் என்பது வெறும் தத்துவமாக இல்லாமல், ஒரு வாழ்வியல் நிலப்பரப்பாகவே இருந்த இடம் அது. அமராவதியில் இருந்த ஸ்தூபி வெறும் கட்டிடத்தூண் அல்ல; அது ஞானத்தை உருவாக்குவதற்கான ஒரு இயந்திரம். நீங்கள் அதை  வலம் வந்தீர்கள், உங்கள் பாதங்கள் அந்தப் பாதையில் தடம் பதித்தன; உங்கள் எண்ணங்கள் உங்கள் மனதில் ஒரு புதிய பாதையை உருவாக்கின. அங்குள்ள செதுக்கல்கள் வெறும் அலங்காரங்கள் அல்ல. அவை பரிநிர்வாணத்தை நோக்கிய பாதையில் அமைக்கப்பட்ட வழிக்காட்டிகள்.  நாலகிரி என்ற யானை, தேனைக் காணிக்கையாக அளிக்கும் குரங்கு, எனப் பலதும் அடக்க முடியாத மனதை அடக்குவதை சொல்லித்தரும்  வழிகாட்டுதல்கள்.

அந்த ஸ்தூபி மிகவும் பிரம்மாண்டமானது, இந்தியாவின் மிகப்பெரிய ஸ்தூபிகளில் ஒன்று. கிருஷ்ணா நதிக்கரையில் உயர்ந்து நின்ற அந்த வெள்ளைச் சுண்ணாம்புக்கல் குன்று, சமவெளியான அந்தப் பசுமை நிலப்பரப்பில் பல மைல்களுக்கு அப்பாலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரீகர்கள் அங்கு வந்தனர். சீனப் பயணியான யுவான் சுவாங்  சூரியனின் ஒளிக்கு எதிராகத் தன் இல்லிக் கண்களைச் சுருக்கி அதன் முன்னால் நின்றிருக்கலாம். அந்தச் செதுக்கல்கள் ஒரு காலத்தில் ஸ்தூபியின் வட்டவடிவப் பகுதியையும் (drum) சுத்துப் சுவரையும் (railing) சுற்றி, ஒரு தொடர்ச்சியான கதைசொல்லலை அமைத்திருந்தன. எனவே, அந்த நினைவுச்சின்னத்தை வலம் வருவது என்பது துன்பங்களின் முடிவைப் பற்றிய ஒரு சித்திர சிற்பக் கதையை  வாசிப்பது போல இருந்தது. அந்த ஸ்தூபி ஒரு பிரபஞ்ச வரைபடம், புத்தரின் புனித எச்சங்களை  மையமாகக் கொண்ட பிரபஞ்சத்தின் வரைபடம்.

அமராவதியின் கண்டுபிடிப்பு வரலாறு என்பது  சோகமான முடிவைக் கொண்ட  குழப்பங்களின் நகைச்சுவை நாடகம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், காலின் மெக்கன்சி (Colin Mackenzie) என்ற பிரிட்டிஷ் நில அளவையாளர் ஒரு பசுமையான மேட்டைக் கண்டடைந்தார். உள்ளூர் மக்களுக்கு அதை நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்கள் அதை 'தீபாலதின்னே' (Dipaldinne) அதாவது 'விளக்குகளின் குன்று' என்று அழைத்தனர். ஒரு காலத்தில் வெள்ளை நிறக் கற்களால் ஆன மலையைத் தாங்கி நின்ற அந்த இடத்தில், அவர்கள் சிறிய விளக்குகளை ஏற்றி, நினைவின் சிறு சுடர்களாக அவற்றை எரிய விட்டனர். மெக்கன்சிக்கு அமராவதி புரிபடவில்லை. அதைத் தூக்கிச் செல்ல விரும்பிய மற்றுமொரு மனிதனைத்தான் மெக்கன்சி மூலமாக அமராவதி கண்டடைந்தது. அவர் 1798 இல் வந்தார், ஒரு வரைபடத்தை வரைந்தார், பின்னர் சென்றுவிட்டார். ஆனால் 1816 இல் அவர் மண்வெட்டிகளுடன் திரும்பி வந்தார்.  சுற்றுலாப் பயணிக்கும்  காலனீய அதிகாரிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்: முதலாவது நபர் ஒரு வரைபடத்தை எடுத்துச் செல்கிறார், இரண்டாமத்தவர்  படிக்கட்டுகளையே  பெயர்த்து எடுத்துச் செல்கிறார்.

பின்னர், வால்டர் எலியட் (Walter Elliot) என்ற அரசு அதிகாரி—இவரது பெயர் திருட்டுத்தனத்தில் ஆர்வம் கொண்ட  ஜேன் ஆஸ்டன்  நாவல் நாயகனைப் போல ஒலிக்கிறது—மற்றொரு படகு நிறைய சிற்பங்களை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அவர் அவற்றை 'எலியட் மார்பிள்ஸ்' (Elliot Marbles) என்று அழைத்தார், இது திருடப்பட்ட ஒரு நதிக்கு 'எலியட்டின் மழை' என்று பெயரிடுவது போன்றதாகும். அந்தச் சிற்பங்கள் "பண்டைய சிற்பங்கள்" (Ancient Sculptures) என்று லேபிளிடப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டன, இது  பெரிய பேராலயத்தை ‘பயனுள்ள கல்’ என்று லேபிளிடுவது போன்றது. சில சிற்பப் பலகைகள் கப்பலில் ஏற்றப்படவில்லை. சில பலகைகளை  உள்ளூர் ஒப்பந்தக்காரர்ர்கள் சுண்ணாம்பிற்காக எரித்துவிட்டனர்.  பேரரசுகளின் வீழ்ச்சி, புதிய மதங்களின் எழுச்சி, பருவமழையின் ஈரப்பதம்,  பல நூற்றாண்டுகளின் அலட்சியம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி உயிர் பிழைத்த ஒரு ஸ்தூபி, இறுதியில் ஒரு நில அளவையாளரால் பெயர்த்தெடுக்கப்பட்டது.

இன்றைய அமராவதியில்  இப்போது ஒரு சிறிய அருங்காட்சியகமும், ஒரு பெரிய நவீன ஸ்தூபியும் கொண்ட ஒரு கிராமமும் உள்ளன. அசல் ஸ்தூபியின் நகலாக  இருக்கும் அது, வெள்ளை வண்ணம் பூசப்பட்டு, தன் பெற்றோரின் ஆடைகளை அணிந்த குழந்தையைப் போல தர்மசங்கடமாக  நிற்கிறது. அசல் சிற்பங்கள் சென்னை, கொல்கத்தா, லண்டன் என சிதறிக்கிடக்கின்றன. பௌத்த மதம் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அது தன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, வங்காள விரிகுடாவைக் கடந்து இலங்கை, மியான்மர், தாய்லாந்து, திபெத், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளளுக்குச் சென்றுவிட்டது.  அமராவதி இன்று ஒரு துடிப்புள்ள பௌத்த மையமாக இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். அது ஒரு தொல்லியல் தளமாக மாறிவிட்டது; யாத்திரீகர்கள் வருவதை நிறுத்தி, நில அளவையாளர்கள் வரத் தொடங்கும்போது ஒரு புனிதத் தலம் இப்படித்தான் மாறுகிறது.

இருப்பினும், லண்டனில் உள்ள இந்தச் சிற்பங்கள் வெறும் தொல்லியல் பொருட்கள் மட்டுமல்ல. அவை புனித சிற்பங்கள். ஆரம்பகாலச் செதுக்கல்களில் புத்தர் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. அவர் ஒரு சக்கரமாக,  மரமாக,  ஸ்தூபியாக அல்லது ஒரு ஜோடி பாதங்களால் மட்டுமே குறிக்கப்படுகிறார். சிற்பிகளுக்கு புத்தரைச் செதுக்கத் தெரியாது என்பதில்லை —வற்றிய வயிறுகளுடனும், தாமரை இதழ் போன்ற விரல்களுடனும் மர்மமான மந்தகாச புன்னைகளோடும் அவர்களால் புத்த சிலைகளை  மிக நேர்த்தியாகவும் அழகாகவும் செதுக்க முடியும்தான்—ஆனால், புத்தர் என்பவர் வழிபட வேண்டியவரல்ல, அவர் நாம் செல்ல வேண்டிய பாதை என்பதே பௌத்தம் சொல்வது. அந்த வெற்று அரியணை என்பது ஒரு அழைப்பு: நீங்களே இங்கு வந்து அமருங்கள். அந்தப் பாதச்சுவடுகள்  எச்சங்கள் அல்ல; அவை வழிகாட்டுதல்கள். அந்தச் சக்கரம் ஒரு குறியீடு அல்ல; அது ஒரு வினைச்சொல். பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அந்த 'இல்லாமையையே' ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்றியிருக்கிறது. அது அந்த வெற்று அரியணையை எடுத்து, அதற்கு அருகில் ஒரு லேபிளை ஒட்டியுள்ளது. அந்த லேபிள் அதன் உள்ளடக்கக் குறியீட்டை (iconography) விளக்குகிறது. ஆனால், அந்த விளக்கம் எதையுமே புரிய வைப்பதில்லை. 

நாலாகிரி என்ற யானையை புத்தர் அடக்கும்  சிற்பத்தின் முன்னால் நான் நிற்கிறேன். அந்த யானை, உலக இன்பங்களால் வெறிபிடித்து, மதம் கொண்டு அலையும் ஒரு கட்டுக்கடங்காத மனதைக் குறிக்கிறது. புத்தர் அந்த யானையுடன் சண்டையிடவில்லை. அவர்  ஒரு ஏரியின்  அதிகாலை அமைதியை வெளிப்படுத்தியபடி, அதன் பாதையில் சாதாரணமாக நிற்கிறார். யானை மண்டியிடுகிறது. கூடியிருக்கும் கூட்டம் வியப்பில் மூச்சடைத்து நிற்கிறது. மற்றவர்களின் பொருட்கள் இருக்கும் ஓர் அருங்காட்சியகத்தில் நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று யோசித்துக்கொண்டு அலைந்து திரியும் என்னைத் தான் அந்த யானை குறிக்கிறது.

ஒரு கல் யாருக்கு சொந்தமானது? அது வெட்டப்பட்ட பூமிக்கா? அதைச் செதுக்கிய மக்களுக்கா? அந்த நிலப்பரப்பை இப்போது சொந்தம் கொண்டாடும் தேச-அரசுகளுக்கா (nation-state)? அல்லது ஒரு காலத்தில் அங்கு வந்து வழிபட்டவர்களின் வாரிசுகளுக்கா? அல்லது அது சிதைந்து போகாமல் பாதுகாத்து வைத்துள்ள அருங்காட்சியகத்திற்கா? 

இந்தச் சிற்பங்கள் அமராவதியின் நிலப்பரப்புக்கு  சொந்தமானவை என்று நாம் கூறுகிறோம். ஆனால் நாம் பெரும்பாலும் என்ன நினைக்கிறோம் என்றால் அவை அங்கே இருக்கும் கதையாடலையும், நாம் இங்கேயும் இருக்கும்  கதையாடலையும்  சார்ந்திருக்கிறோம். அந்த இரண்டு கதையாடல்களுக்கும் இடையே உள்ள தூரம் ஒரு பொருக்காடாத காயமாக இருக்கிறது. 

பள்ளி மாணவர்கள் குழு ஒன்று, மம்மிகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியபடி, இந்த அமராவதி சிற்பங்களை கடந்து வேகமாகச் செல்கிறது. கற்கள் பொறுமையாக இருக்கின்றன. அவை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பொறுமையுடன் இருக்கின்றன. அவை சாதவாகனர்கள், இக்ஷ்வாகுகள், பல்லவர்கள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஆகியோரைக் கண்டிருக்கின்றன; இப்போது கையில் ஜூஸ் பாக்ஸுடன் இருக்கும்  பத்து வயதுக் குழந்தை ஒன்றையும் பார்க்கின்றன. 

'தயவுசெய்து தொடாதீர்கள்' என்ற அறிவிப்புடன்  கண்ணாடி கூரையின் கீழ் அவை இருப்பதற்குப் பதிலாக, பறவைகள், சாம்பிராணி புகை,  தூரத்தில் கேட்கும் லாரியின் சத்தம் ஆகியவற்றுடன், ஒரு திறந்த வானத்தின் கீழ் அவை கம்பீரமாக நிற்பதை நான் கற்பனை செய்து ஏங்குகிறேன். காற்றின் தீண்டல் அவற்றின் மேல் பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவற்றின் மேல் மழை பொழிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சிற்பங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு ஆடியோ கைடு தேவைப்படாத  நிலப்பரப்பின் நினைவின் பகுதியாக அவை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

--

புகைப்படம் : லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் - அமராவதி சிற்பங்கள் காட்சிக்கூடத்தில்