Wednesday, August 26, 2026

ஜூரிக்: ஜேம்ஸ் ஜாய்ஸின் கல்லறை




நான் ஸ்டுட்கார்ட்டிலிருந்தும், வுர்ஸ்பர்க்கிலிருந்தும் ஸ்விட்சர்லாந்தின் தலைநகராக இருக்கும் ஜூரிக்கிற்கு பலமுறை ரயிலில் சென்றிருக்கிறேன். ஜேம்ஸ் ஜாய்ஸின் கல்லறை ஜூரிக்கில் இருக்கிறது அது ஜாய்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய டப்ளின் நகரில் இல்லை  என்பதே ஜாய்ஸின் வாழ்க்கையைப் பற்றியும் அவருடைய கலைக்கோட்பாட்டைப் பற்றியும் பல விஷயங்களைச் சொல்லிவிடுகிறது. 

நான் ஜூரிக் நகரத்திலுள்ள  ஒரு குன்றின் மீதுள்ள ஃபளன்டர்ன் மயானத்தில் (Fluntern Cemetery), ஜேம்ஸ் ஜாய்ஸின் கல்லறைக்கு முன்னால் நிற்கிறேன். கீழே இருக்கும் அந்த நகரம் மிகவும் ஒழுங்காகவும், அமைதியாகவும் இருக்கிறது; அவர் தனது எழுத்துகளால் நிலைபேறுடையதாக மாற்றிய  டப்ளின் நகரத்தின் தெருக்களுக்கு முற்றிலும் மாறாக இது உள்ளது. வானம் வழக்கத்திற்கு மாறாக சூரிய ஒளியால் நிறந்திருக்கிறது. மரங்கள் இலைகளுடன் செழித்திருக்கின்றன. இலைகளூடே சூரிய ஒளி என் மேல் சித்திரங்களை வரைந்திருக்கிறது. தரை ஈரப்பதமாக உள்ளது. எனக்கு முன்னால் வெண்கலத்தாலான ஜாய்ஸின் சிலை, கால் மேல் கால் போட்டுக்கொண்டு கையில் ஒரு ஊன்றுகோலைப் பிடித்தபடி, நான் கேட்க முடியாத ஏதோவொன்றை உற்றுக்கேட்பது போலத் தலையைச் சற்றே சாய்த்துக்கொண்டு என்றென்றைக்குமாக அமர்ந்திருக்கிறது. இந்தச் சிலையை மில்டன் ஹெபால்ட் (Milton Hebald) வடித்தார்.  வானிலை மாற்றங்களாலும் காலத்தினாலும் பச்சை நிறமாக மாறியுள்ள ஒரு சோர்வான, சிந்தனைமிக்க, ஏதோவொரு நினைவால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு உருவம்.

சிலையின் அடிப்பகுதியில், தரையோடு தட்டையாகப் பதிக்கப்பட்ட ஒரு எளிய பலகை உள்ளது. அதில் அவருடைய  பெயரும் அவருடைய மனைவியின் பெயரும் மட்டுமே உள்ளன: ஜேம்ஸ் ஜாய்ஸ். நோரா பர்னகிள். அருகருகே. அங்கே எந்தவொரு இரங்கற்பாவும் இல்லை. புகழ்பெற்ற மேற்கோள்களும் இல்லை. பளிங்குக்கல் தேவதையும் இல்லை. மேலே ஒரு வெண்கல மனிதனும், கீழே ஒரு கற்பலகையும் மட்டுமே உள்ளன; மரணத்திலும் கூட, பிரம்மாண்டத்திற்கும் சாதாரணத்திற்கும் இடையில் தொடர்ந்து ஊடாடுவதை அவரால் நிறுத்த முடியவில்லை என்பது போல இது தோற்றமளிக்கிறது. எனக்கு ஜாய்ஸ் நோராவுக்கு எழுதிய “Letters to Nora” நூல் நினைவுக்கு வருகிறது. நோராவுக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றில் “"Nora, my faithful darling... you are always my beautiful wild flower of the hedges, my dark-blue rain-drenched flower.” என்று எழுதுகிறார். இன்னொரு கடிதத்தில் “O that I could nestle in your womb like a child born of your flesh and blood, be fed by your blood, sleep in the warm secret gloom of your body!” மற்றுமொரு கடிதத்தில் “God Almighty, what kind of language is this I am writing to my proud blue-eyed queen! Will she refuse to answer my coarse insulting questions? I know I am risking a good deal in writing this way, but if she loves me really she will feel that I am mad with lust and that I must be told all” 

டப்ளின் நகரின் நாசாவ் தெருவில் , ஜூன் 10, 1904 அன்று, இருபத்திரண்டு வயதான ஜேம்ஸ் ஜாய்ஸ் (அப்போது அவர் கண்ணாடி அணியாததாலும், பார்வை பலவீனமாக இருந்ததாலும் அவரால் எவ்வளவு தெளிவாகப் பார்க்க முடியுமோ அவ்வளவு தெளிவாக) இருபது வயதான நோரா பர்னகிளைப் பார்த்தார். அப்போது ஒரு இளம் விடுதிப் பணிப்பெண்ணாக இருந்த நோரா, அந்தத் தெருவில் ஒய்யாரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். நோரா தங்களின் முதல் சந்திப்பைப் பற்றிய கதையை பிற்காலத்தில் அடிக்கடி கூறுவார், ஆனால் ஒவ்வொரு முறையும் அதை வெவ்வேறு விதமாகக் கூறுவார். சில சமயங்களில் ஜாய்ஸ் ஒரு மாலுமித் தொப்பியை  அணிந்திருந்ததாகக் கூறுவார்; வேறு சில சமயங்களில் அவர் ஒரு பெரிய வெள்ளை நிற சோம்பிரெரோ (sombrero - மெக்சிகோ நாட்டுத் தொப்பி) தொப்பியையும், கால் வரை தொங்கும் ஒரு நீண்ட மேலங்கியையும் அணிந்திருந்ததாகக் கூறுவார். 

ஜாய்ஸ் அவரிடம் ஒரு நாள் வெளியில் சந்திக்கலாமா என்று கேட்டார், நோராவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், ஜாய்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றபோதிலும், நோரா அங்கே வரவில்லை. இதனால் ஜாய்ஸ் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்: "எனக்குக் கண் தெரியவில்லை போலிருக்கிறது. நான் ஒரு செம்பட்டை கலந்த பழுப்பு நிற முடிகளைக் கொண்ட ஒரு தலையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அது உன்னுடையது அல்ல என்று முடிவு செய்தேன். மிகவும் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்பினேன். உன்னுடன்  ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன், ஆனால் அது உனக்கு வசதியாக இருக்குமா என்று தெரியவில்லை. நீ என்னை மறக்கவில்லை என்றால்—தயவுசெய்து என்னுடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வாய் என்று நம்புகிறேன்!”

சில நாட்களுக்குப் பிறகு, அநேகமாக ஜூன் 16, 1904 அன்று—இந்தத் தேதியைத்தான் ஜாய்ஸ் பிற்காலத்தில் தனது ‘யுலிசஸ்'  நாவலின்  நாளாக அமைத்தார்—அவர்கள்  முதல் முறையான சந்தித்தனர்; ஆனால் அது எந்த விதத்திலும் ஒரு 'முறையான' சந்திப்பாக இருக்கவில்லை. ஜாய்ஸ், நோராவை கிழக்கு நோக்கி, கப்பல்துறைகளையும் துறைமுகத்தையும் தாண்டி, ரிங்ஸ்வால்ட்  என்று அழைக்கப்படும் டப்ளினின் ஒரு பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, ஜாய்ஸுக்கு ஆச்சரியமளிக்கும்  வகையில், நோரா தனது கையை ஜாய்ஸின் காற்சட்டைக்குள் நுழைத்து, ஜாய்ஸின் வார்த்தைகளில்,   “ஒரு முழு மனிதனாக்கினார்.”

அதே ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஜூரிக் நகரத்திற்கு ஓடிச் சென்றார்கள். அவர்கள் 1931 ஆம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களுடைய உறவு இறுதிவரை மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது. ஜாய்ஸ் தனது “டப்ளின் நகரவாசிகள்” (Dubliners) சிறுகதைத் தொகுப்பை வெளியிடும் முயற்சியில், 1909 இல் முதன்முறையாக டப்ளினுக்குத் தனியாகத் திரும்பியபோது இந்தக் கடிதங்களை நோராவுக்கு எழுதினார். அவை வியப்பூட்டும் வகையிலும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் மிகவும் அந்தரங்கமானவை. ஜாய்ஸின் கடிதங்களுக்கு சிறிய விமர்சன குறிப்பையும் கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளையும் பிரசுரித்த “பாரிஸ் ரெவ்யூ” இதழ்  ஜாய்ஸின் கடிதங்களை deliciously dirty என்று விவரித்தது. Dirty, it is. ஆனால் இரு உடல்களின் கூடுகை என்பது புனிதங்களால் அல்ல அசிங்கங்களால் நிரம்பியது; அந்த அசிங்கங்களே இருவருக்கிடையில் ஆத்மார்த்தத்தை உருவாக்குகின்றன. கலைஞனாக அனைத்து transcendence -ஐயும் மறுத்து உடலின் பௌதீக உண்மையை இறுதி உண்மையாக அறிவித்த ஜாய்ஸ் காமமும் காதலும் உடலின் அசிங்கங்களும் கொப்பளிக்க நோராவுக்குக் கடிதங்கள் எழுதியதில் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. ஜாய்ஸின் இலக்கியம் நோராவுக்குப் புரிந்ததாகச் சொல்லமுடியாது; நோரா ஜாய்ஸைப் புரியும்படி எழுதும்படி கேட்டதாகக் கூட சில வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். நோராவின் உடலும் ‘சாதாரணமும்’தான் ஜாய்ஸின் உயர்ந்த கலையின் இறுதி உண்மை என்பதுதான் எத்தனை அங்கதங்கள் நிரம்பியது! அவர்கள் இருவரும் கல்லறையிலும் சேர்ந்திருப்பதன் மாண்பு அவர்கள்  ஒன்றிணைந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டது. 

ஜாய்ஸ் அக்டோபர் 1904 இல் அயர்லாந்தை விட்டு நோராவுடன் ஜூரிக்குக்குத்தான்  தப்பியோடினார். ஜாய்ஸுக்கு அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயது, அரைக்குருடு, கையில் காசில்லை, அத்தோடு பைத்தியக்காரத்தனம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான தற்பெருமையும் கர்வமும் அவரிடம் இருந்தது. அவர் தனது சொந்த வீடு, தாய்நாடு அல்லது கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு சேவை செய்ய விரும்பவில்லை. மொழி, தேசியம் அல்லது மதம் என்ற அடையாளங்களில் அவர் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் அவர் வெளியேறினார். ஜாய்ஸின் “டப்ளின் நகரவாசிகள்” (Dubliners) சிறுகதைத் தொகுப்பு வரலாற்று செயலின்மையில் சிக்கி அதிலிருந்து வெளியேற தைரியமில்லாத மாந்தர்களைப் பற்றிப் பேசியது. A Portrait of the Artist as a Young Man நாவல் மதம், இனம், மொழி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தன்னடையாளங்களையும் தேசியவாதத்தையும் விட்டு வெளியேறி பிரபஞ்சப் பொதுத்தன்மையை அடைவதை கலையாக அடையாளம் கண்டது. “யுலிசஸ்” நாவலோ மீமெய்யிலை மறுத்து உடலை இறுதி உண்மையாகப் பார்க்கும் அதே வேளையில் உயிர்க்கொடி உறவுகளை மீறிய தந்தை-மகன், தாய்-மகன் உறவுகளையும் அவற்றின் முக்கியத்துவதையும் ஒரே சமயத்தில் கலை இலக்கிய பார்வையாக முன்வைத்தது. “ஃபென்னிகன்ஸ் வேக்”, உலகப் பொதுமை வாய்ந்த மொழியை உண்டாக்கியது. இவை அனைத்துமே எந்த டப்ளினை விட்டு ஜாய்ஸ் ஓடிப்போனாரோ அந்த டப்ளினிலேயே நடக்கின்றன என்பது மிகப் பெரிய ஆழமும் விரிவும் கொண்ட இலக்கிய அங்கதம்.  

 ட்ரைஸ்டே, ரோம், ஜூரிக் , பாரிஸ் ஆகிய நகரங்களின் குறுகிய வாடகை அறைகளில் இருந்து கொண்டு, தான் கைவிட்ட டப்ளினை மீண்டும் தன் எழுத்தில் கட்டமைப்பதிலேயே அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை செலவிட்டார்.  அவருடைய படைப்புகள் டப்ளின் நகரத்தின் தெருக்கள், மதுக்கடைக்கள், தேவாலயங்கள், விலைமாதர் விடுதிகள், டிராம் வண்டிகள், நதி, படகுத்துறைகள்,  குரல்கள்   ஆகியவற்றின்  பரந்த, நுணுக்கமான, வெறித்தனமான மறுசீரமைப்பாகும். டப்ளின் நகரத்தை உலகிற்கு முழுமையாகக் கொடுக்க அவர் விரும்பினார், ஒருவேளை அந்த நகரம் என்றாவது ஒரு நாள் அழிந்து போனால் கூட, அதை அவருடைய புத்தகங்களிலிருந்து மீண்டும் உருவாக்கிவிட முடியும் என்கிற அளவுக்கு அவர் எழுதினார்.  தன்னைத்தானே நாடுகடத்திக்கொண்டு வாழ்ந்த  ஜாய்ஸ் , தான் வாழ மறுத்த இடத்தின் மிகச்சிறந்த cartographer ஆனார். அவர் அயர்லாந்திலிருந்து ஓடினார், ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் அயர்லாந்திற்குள்ளேயே ஓடிக்கொண்டிருந்தார். "நீ தப்பித்து ஓடுவதாக நினைக்கிறாய், ஆனால் உனக்குள்ளேயேதான் ஓடி வந்து சேருகிறாய்," என்று அவர் யுலிசஸில் எழுதினார். அவர் டப்ளினை விட்டு எவ்வளவு தூரம் தள்ளியிருந்தாரோ, அவ்வளவு அதிகமாக அவர் ஒரு டப்ளின்காரராகவே வாழ்ந்தார். ஆனாலும் அவர் கிளாஸ்நெவினிலோ (Glasnevin), அல்லது தான் ஒரு மொழியின் நதியாக மாற்றிய லிஃபி (Liffey) நதிக்கரையிலோ இல்லாமல், சுவிஸ் மண்ணில் கிடக்கிறார். மாலி ப்ளூமின்  இறுதி ஆமாம் என்ற வார்த்தையை நமக்குத் தந்த நகரம், அதன் எழுத்தாளரை ஒரு வெளிநாட்டு நகரத்திற்கு மேலே உள்ள ஒரு வெளிநாட்டு மயானத்தில் புதைத்து வைத்துள்ளது. அவரது வெண்கலக் கையில் இருக்கும் கைத்தடி ஒரு பயணியின் தடி, ஆனால் அந்த உருவம் அமர்ந்திருக்கிறது. தன்னைத்தானே நாடுகடத்திக்கொண்டவர் தன் நடையை நிறுத்திவிட்டார். அவரது உடல் ஒருபோதும் தன் சொந்த வீட்டிற்குச் செல்லவில்லை.

வறுமையும் கர்வமும் மற்றுமொரு கொடூரமான இணையாகும். ஜாய்ஸ்  தனது படைப்பு வாழ்க்கையின் பெரும்பகுதியை கடுமையான வறுமையிலும், அது உண்டாக்கிய நிச்சயமற்ற தன்மையோடும் வாழ்ந்தார். அவர் ஆங்கிலம் கற்பித்தார், பணம் கடன் வாங்கினார், ஹாரியட் ஷா வீவர், எஸ்ரா பவுண்ட், டி.எஸ்.எலியட், சாமுவேல் பெக்கெட்  போன்ற ஆதரவாளர்களின் நம்பிக்கையையும், வேறு யாரும் முன்வராதபோது யுலிசஸை வெளியிட்ட சில்வியா பீச்சின்  துணிச்சலையும் நம்பியிருந்தார். அவரது புத்தகங்கள் தடை செய்யப்பட்டன, எரிக்கப்பட்டன, திருட்டுத்தனமாக அச்சிடப்பட்டன. அவரது குடும்பம் ஒரு மலிவான வாடகை வீட்டிலிருந்து மற்றொரு மலிவான வீட்டிற்கு மாறியது, பெரும்பாலும் கடன் கொடுத்தவர்களிடமிருந்து ஒரு அடி முன்னால் தப்பி ஓடிக்கொண்டிருந்தது. ஆயினும்கூட அவரது கர்வம் பிரம்மாண்டமாக இருந்தது. அவர் ஒரு வாக்கியத்தை எளிமையாக்க மறுத்தார், தணிக்கையாளர்களுக்கு ஏற்ப யுலிசஸை மாற்ற மறுத்தார், சந்தைக்காக எழுத மறுத்தார். பேராசிரியர்களை பல நூற்றாண்டுகளுக்கு மும்முரமாக வைத்திருக்கும் அளவுக்கு தனது படைப்புகளில் புதிர்களையும் விடுகதைகளையும் சேர்த்துள்ளதாகவும், அழியாத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான் என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

அவர்களுடைய மகள் லூசியா 1907-இல் பிறந்தார். அவர்  நடனக் கலைஞராக வளர்ந்தார். ஜாய்ஸ் பதினேழு ஆண்டுகள் ‘ஃபின்னிகன்ஸ் வேக்' நாவலுக்காக உழைத்துக் கொண்டிருந்தபோது, லூசியா மனநலப் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஜாய்ஸ் அந்த மருத்துவக் கணிப்பை ஏற்க மறுத்தார். அவள் பைத்தியம் அல்ல, அசாதாரணமானவள் என்று அவர் வாதிட்டார். மருத்துவர்களுக்காக  பெரும் தொகைகளைச் செலவழித்தார், யுங்  போன்றோரிடம் ஆலோசனை பெற்றார், எல்லாவற்றையும் செய்து பார்த்தார். ஆனால் லூசியா  schizophrenia  என்னும் தீவிர மனச்சிதைவு நோய்க்குள் மூழ்கி, தனது நீண்ட ஆயுளின் எஞ்சிய பகுதியை இங்கிலாந்தில் உள்ள மனநலக் காப்பகங்களிலேயே கழித்தார்; தன் தந்தையை விட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் உயிர் வாழ்ந்தார். நவீன மொழியின் தந்தை—வார்த்தைகளைக் கனவு காணவும், சிலேடையாகப் பேசவும், ஒன்றிணையவும், பாடவும் வைக்க தெரிந்த மனிதரால்—தன் சொந்த மகளைப் பேசி குணப்படுத்த முடியாமல் போனது. சில வாசகர்கள் 'ஃபின்னிகன்ஸ் வேக்' புத்தகத்தின் உடைந்த இரவு-மொழியிலும், அதன் கிசுகிசுப்புகளிலும், சிலேடைகளிலும், நதிக்கரையில் கேட்கும் தந்தை-மகள் முணுமுணுப்புகளிலும் லூசியாவின் குரலைக் கேட்கிறார்கள். அது உண்மையானால், அந்தப் புத்தகம் ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பு மட்டுமல்ல, அது ஒரு நீண்ட, குறியீட்டு வடிவத்திலான புலம்பல் பாட்டும் கூட. அவரால் தன் ஆன்மாவின் உலைக்களத்தில் தன் இனத்தின் இன்னும் உருவாக்கப்படாத மனச்சாட்சியை வடித்தெடுக்க முடிந்தது, ஆனால் அவரால் தன் சொந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. 

 ஜாய்ஸின் கண்கள் பல தசாப்தங்களாக அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் அறுவை சிகிச்சைகளையும், வலியையும், கிட்டத்தட்ட குருட்டுத்தன்மையையும் சகித்துக்கொண்டார்; பெரும்பாலும் ஒரு கண் பட்டையை அணிந்துகொண்டு, பெரிய தாள்களில் பெரிய கிரேயான்களால் எழுதினார். இருப்பினும், அவருடைய படைப்பு இலக்கியத்திலேயே மிகவும் துல்லியமான காட்சிப் படைப்புகளில் ஒன்றாகும்: டப்ளின் வளைகுடாவின் ஒளி, சேறு போன்ற நிறமுடைய வீடுகள், மதுக்கடைப் பெண்ணின் பித்தளை ஆபரணங்கள், சளிப்பச்சை நிறக் கடல் என எல்லாவற்றையும் துல்லியமாக அவரால் சித்தரிக்க முடிந்தது. அவரால் சரியாகப் பார்க்க முடியவில்லை, ஆனால் மொழி மூலம் அவர் அனைத்தையும் பார்த்தார். அவர் தனது உடல்ரீதியான இருளை ஒரு உள் ஒளியாக மாற்றினார், அது சாதாரண கண்களுக்குப் புலப்படும் உலகத்தை விட மிகவும் தெளிவான உலகமாக இருந்தது. அந்த வெண்கலச் சிலை பார்வையாளரைக் கடந்து, சுவிஸ் மரங்களுக்கு அப்பால் ஏதோவொன்றை இன்னும் உற்று நோக்குவது போல் தெரிகிறது: அது அவர் மீண்டும் பார்க்கவே முடியாத அந்த டப்ளின் நகரம்.

 1940-இல் நாஜிக்களின் படை பாரிஸை நெருங்கி வந்தபோது அவர் பாரிஸிலிருந்து தப்பி, முதல் உலகப் போரின்போது தான் வாழ்ந்த நடுநிலையான ஜூரிக் நகரத்திற்குத் தன் குடும்பத்தை அழைத்து வந்தார். குடலில் ஏற்பட்ட துளைக்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் 1941 ஜனவரியில் இறந்தார். அப்போது அவருக்கு வயது ஐம்பத்தெட்டு. உலகம் போரில் மூழ்கியிருந்ததால், அவரது இறுதிச் சடங்கு  அவசரமாக நடந்துமுடிந்தது. அவரது கல்லறையின் அருகில் ஒரு சிலரே நின்றிருந்தனர். பெரிய சடங்குகளோ, அதிகாரப்பூர்வமான பெருமைகளோ இல்லை. நான் எதற்கும்  சேவை செய்ய மாட்டேன், நான் சுதந்திரமான கலைஞன் என்று சொன்ன மனிதனுக்கு, மரணத்தில் உரிமை கொண்டாட எந்த நாடும் இருக்கவில்லை. இப்போது அவர் ஜூரிக்கில்  ஒரு சுற்றுலாத் தலமாக மாறிவிட்டார். அயர்லாந்தை விட்டு ஓடிய மனிதர், இப்போது அயர்லாந்தின் சொத்தாகிவிட்டார். அவரது கல்லறையை ஜூரிக்கிலுள்ள  ஜேம்ஸ் ஜாய்ஸ் எஸ்டேட்டும், ஃபவுண்டேஷனும் பராமரிக்கின்றன. 

நான் மீண்டும் அந்தத் தட்டையான நினைவுப் பலகையைப் பார்க்கிறேன், ஜாய்ஸுடையதும்  நோராவினுடையதுமான  பெயர்கள் அருகருகே செதுக்கப்பட்டுள்ளன. அங்கு எந்த ஒரு மேற்கோளோ, கல்லறைக் குறிப்போ, ஆடம்பரமான சொல்லாட்சியோ இல்லை. அவர் எழுதிய அத்தனை வார்த்தைகளுக்கும் மாறாக, இந்தக் கல் கிட்டத்தட்ட மௌனமாகவே இருக்கிறது.  வார்த்தைகளை  ஒளிரும் பேராலயமாக மாற்றுவதற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு மனிதனின் கல்லறை, அவனுடைய பெயராலும் அவன் நேசித்த பெண்ணின் பெயராலும் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கிறது. மேலே உள்ள வெண்கலச் சிலை, அவர் மீண்டும் எழுந்து நடமாடப் போவது போல் ஒரு கைத்தடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் அவர் அமர்ந்திருக்கிறார். தன்னைத்தானே நாடுகடத்திக்கொண்ட  வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மௌனம் கல்லாக மாறிவிட்டது.

இருப்பினும் அது முழுமையான மௌனம் அல்ல. ஏனென்றால் புத்தகங்கள் இன்னும் இருக்கின்றன. அவரது மொழியின் நதி ஓட்டத்தையும்,  மாலி ப்ளூமின் ஆமாம்  என்ற இவ்வுலக வாழ்க்கைக்கான ஆமோதிப்பையும், ஸ்டீஃபன் டெடலாஸின் மறுப்பையும், செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் மணிகளையும், சாண்டிமவுண்ட் கடலையும் லேசாகக் காதுகளில் கேட்காமல் என்னால் இந்த கல்லறையின் அருகில் நிற்க முடியாது. அவர் தன் பார்வையை, தன் மகளை, தன் தாயகத்தை, தன் ஆரோக்கியத்தை,  தன் வாழ்க்கையின் பாதுகாப்பை இழந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தன் குரலை இழக்கவில்லை. அவர் அழியாததாக மாற்றிய டப்ளினிலிருந்து அல்ல, மாறாக அவர் தற்செயலாக இறக்க நேரிட்ட ஜூரிக் நகரத்தின் தட்டையான கல்லறையிலிருந்து அவரது குரல் இன்னும் பேசுகிறது.

அதுதான் ஃபிலுன்டர்ன் கல்லறை தரும் ஒரு விசித்திரமான ஆறுதல். ஜேம்ஸ் ஜாய்ஸ் உண்மையில் இங்கு இல்லை. அவர் எழுதிய ஒவ்வொரு வாக்கியத்திலும் அவர் இருக்கிறார். கைத்தடியுடன் இருக்கும் அந்த வெண்கல மனிதன் ஒரு அடையாளம் மட்டுமே; இறுதியாக வீட்டிற்குச் சென்ற ஒரு அகதிக்கான இருக்கை அது—அவர் சென்றது டப்ளினுக்கு அல்ல, மாறாக அவர் ஒரு நகரமாக உருவாக்கிய அவரது சொந்த மொழிக்கு. நோரா எப்போதும் போல அவருக்கு அருகிலேயே படுத்திருக்கிறாள், எதையும் படிக்காமல், எதற்கும் கவலைப்படாமல், வெறும் விசுவாசத்தோடு மட்டும் என.

ஒருவேளை அதுதான் இங்குள்ள மிக உண்மையான விஷயமாக இருக்கும். ஆங்கில மொழியின் மிகச்சிறந்த கலைப் படைப்பாளி, தன்னை வெறுமனே நேசித்த ஒரு பெண்ணுக்கு அருகில் ஓய்வெடுக்கிறார். பெருமை மேலே வெண்கலமாக அமர்ந்திருக்கிறது. அன்பு கீழே, தரையில் புதைக்கப்பட்டிருக்கிறது.  அவரது கையில் உறைந்துபோயிருக்கும் கைத்தடி எதனையும் சுட்டிக்காட்டவில்லை. பயணம் முடிந்துவிட்டது. சொற்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றன.

வேறொரு காலம், வேறொரு பிறவி, வேறொரு உலகில் எனக்கு ஜீவிதம் வசப்பட்டிருக்குமென்றால் நானும் சாமுவெல் பெக்கட் போல ஜாய்ஸின் காலடிகளில் அமர்ந்திருந்திருப்பேன்.