Tuesday, June 23, 2026

“யுலிசஸ்” நாவலில் ஊடிழைப்பிரதியியல் நுட்பங்கள்







விளாடிமிர் நபக்கோவ் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றியபோது “யுலிசஸ்” நாவலை இரண்டு வரைபடங்களை வைத்து விளக்குவார் என்று எப்போதோ படித்திருந்தேன்: ஒன்று டப்ளின் நகரின் வரைபடம்; நபக்கோவ் அதில் எந்தெந்த இடத்தில் நாவலின் பதினெட்டு காப்பியச் சம்பவங்களும் நடக்கின்றன என்று விளக்குவாராம்; இரண்டு ஜாய்ஸ் எத்தனை குறிப்பீடுகளை (references) நாவலுக்குள் வைத்திருந்தார் என்ற வரைபடம். நாம் சாதாரணமாகக் குறிப்பீடுகள் என்று சொல்வதை ஜூலியா கிறிஸ்தவா ஒரு பனுவல் இன்னொரு பனுவலோடு படைப்பூக்கத்தோடு எப்படி உறவு கொள்கிறது என்று விளக்கி அதை ஊடிழைப்பிரதியியல் (intertexulaity) என்றழைத்து இலக்கியப் பிரதிகளின் வாசிப்பைச் செழுமையாக்கினார்.

 அந்தச் செய்தியைப் படித்த பிறகு நபக்கோவின் இரண்டு வரைபடங்களையும் நான் விடாமல் தேடிக்கொண்டே இருந்தேன். எந்த அளவுக்கு என்றால் ஒரு முறை கார்னெல் பல்கலைக்கழகத்திற்கு எழுதிக் கேட்டேன். டப்ளின் நகரத்துக்குப் பயணம் மேற்கொண்டபோது நாவலின் காப்பியச் சம்பவங்கள் நடக்கும் பதினெட்டு இடங்களுக்கும் நேரில் சென்றும் பார்த்தும் நபக்கோவ் உண்டாக்கியது போல ஒரு வரைபடம் கிடைத்தபாடில்லை. 2022 ஆம் ஆண்டு “யுலிசஸ்” நாவல் பிரசுரமாகி நூறாவது ஆண்டு கொண்டாடப்பட்டபோது இரண்டு வரைபடங்களும் தற்செயலாய் இன்ஸ்டாகிராமில் கிடைத்தன; அவை நபக்கோவ் உண்டாக்கியதில்லை; யாரோ கணினியில் உருவாக்கி பகிர்ந்திருந்தார்கள். வாழ்க்கையிலும் படைப்பிலும் மகத்துவங்கள் இப்படியாக தற்செயல்களாகவே நிகழ்கின்றன.  அந்த வரைபடங்களை இக்கட்டுரையோடு இணைத்திருக்கிறேன். 

“யுலிசஸ்” நாவலின் பெரும் கட்டமைப்பாக இயங்கும் ஹோமரின் காப்பியம் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். ஜூன் 16 ஆம் தேதி 1904 ஆம் ஆண்டு டப்ளின் நகரில் நடக்கும் சாதாரணச் சம்பவங்கள் ஹோமரின் காப்பியப் பின்னணியில் அர்த்தப் பிரம்மாண்டம் பெறுவது உண்மைதான் என்றாலும் ஜாய்ஸ் அந்த ஒற்றைக் குறிப்பீட்டில் நாவலை நிலை நிறுத்தவில்லை. ஜாய்ஸின் உரைநடை அதன் வாக்கியங்களின் அளவில் மேற்கத்திய இலக்கிய, தத்துவ, இறையியல் சிந்தனைகள், அயர்லாந்தின் வரலாறு, நாட்டுப்புற கலைகள், கதைகள்  எனப் பெரிய மொழிமண்டலத்தோடு  வெட்டியும் ஒட்டியும் உரையாடுவதன் விசையாக இருக்கிறது. நேரடிக் குறிப்பீடுகள் என்ற அளவில் இல்லாமல் இந்த ஊடிழைப்பிரதி நுட்பங்கள் இந்த உரையாடல்களின் வழி பல சமயங்களில் தத்துவ இறையியல் ஆழங்களுக்கும், ஏன் நகைச்சுவைக்கும் கூட இட்டுச் செல்கின்றன. கிறிஸ்தவாவின் ஊடிழைப்பிரதியியல் என்ற கருத்தாக்கம் போலவே மிகைல் பக்தினின் இரட்டைக் குரல்தன்மை (double voicedness) என்ற கருத்தாக்கமும் ஜாய்ஸின் உரைநடையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. 

தத்துவ அறிஞரான அரிஸ்டாட்டில், கிறித்தவ இறையியலாளரான தாமஸ் அக்வினாஸ், இலக்கிய மேதைகளான ஷேக்ஸ்பியர், தாந்தே, ரொமாண்டிக் இறையியல் தரிசனங்களை முன்வைத்த வில்லியம் பிளேக் என ஜாய்ஸின் உரைநடையில் மிளிரும் ஊடிழைப்பிரதி நுட்பங்கள் நாவலின் தத்துவ நெறியை (philosophical condition) அடுக்கு அடுக்காகக் கட்டுகின்றன. ஜாய்ஸின் கைவண்ணத்தில் ஒரு கலைக்களஞ்சியத்தின் பிரம்மாண்டத்தைப் பெறும் “யுலிசஸ்” நாவலில் கருத்துக்கள், பனுவல்கள், வரலாற்று அடையாளங்கள் அனைத்தும் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, கலாச்சார வலைப்பின்னலை உண்டாக்கி அதனுள் வாசகனைத் தனக்கான அர்த்தத்தைத் தேட அனுமதிக்கின்றன. ஜாய்ஸின் ஊடிழைப்பிரதி நுட்பங்கள் சிருஷ்டி, அடையாளம், காலம், மனிதப் பிரக்ஞை ஆகியவை பற்றிய தியானங்களாக “யுலிசஸ்” நாவலை மாற்றுகின்றன. 

ஸ்டீபன் டெடலாஸ் தன்னுடைய சேசு சபைக் கல்வியை நாவலில் நிராகரிக்கிறான். அவனுடைய சிந்தனைக் கட்டுமானத்திற்கு அரிஸ்டாட்டிலும் தாமஸ் அக்வினாஸுமே உரமிடுகிறார்கள். சாண்டிமௌண்ட் ஸ்டிராண்டில் ஸ்டீபன் நடந்து செல்வதை விவரிக்கும் புரோட்டியஸ் அத்தியாயம் அரிஸ்டாட்டிலிய அறிவுத்தோற்றவியலால் பொலிவு பெறுகிறது. அரிஸ்டாட்டிலின் டி அனிமா (De Anima) நூலில் அவர் முன்வைக்கும் நிறம், ஒளி, ஒளி ஊடுறுவிகள் ஆகியன பற்றிய கருத்துக்கள் ஸ்டீபனின் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கின்றன. கண்களை மூடி தியானிக்கும் ஸ்டீபன் ஒன்றின் பிறகு ஒன்றாக காலம் வெளியில் (space) அடுக்குவதையும், ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக அது வெளியில் அமைந்திருப்பதையும் தரிசிக்கிறான். அது அவனை ஆத்மா என்பது வடிவங்களின் வடிவம் என்ற சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. பௌதீக உலகிலிருந்து மனித உடல் பெரும் விடுதலையாக ஸ்டீபன் உணர்கிறான். நாவலில் அவன் புற உலகை நோக்கியும்  தனக்குத்தானே  எனவும் “ எல்லாவற்றையும் எடுத்துக்கொள், எல்லாவற்றையும் வைத்துக்கொள், எனது ஆத்மா என்னுடனே நடந்து வருகிறது, வடிவங்களின் வடிவமாக” என்று சொல்லிக்கொள்கிறான்.  அதைத்தொடர்ந்து ஸ்டீபனின் நனவோடை சாத்தியப்பாட்டிலிருந்து தூலமான வடிவத்துக்கு  ஒன்று நகர்வதையும் பதிவு செய்கிறது. இப்படிப்பட்ட உள்ளுணர்வு தரிசனத்தைக் கொடுத்த அரிஸ்டாட்டிலையும்  தாந்தே தன்னுடைய டிவைன் காமெடியில் பாராட்டுவதையும் ஸ்டீபனின் நனவோடையில் ஜாய்ஸ் இணைத்துவிடுகிறார்.

கலைஞனான ஸ்டீபனுக்கு அரிஸ்டாட்டிலின் தத்துவம் ஸ்டீவன் தன் அடையாளத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறதென்றால் ஷேக்ஸ்பியரின் “ஹேம்லெட்” நாடகமும் ஆரம்பக்காலக் கிறித்துவ இறையியலில் எதிர்ப்பாளர்களாக அறியப்பட்டவர்களின் சிந்தனை கலாசிருஷ்டி, தந்தைமை,  பாரம்பரியமாக வழிவழியாகப் பெறப்பட்ட கலாமரபு ஆகியவற்றிடையே உள்ள உறவை அறிய உதவுகிறது. ஸ்டீபன் புனைவுலகைச் சிருஷ்டிக்கும் கலைஞன் தன் படைப்புக்கு ஒரே சமயத்தில் தந்தையாகவும் மகனாகவும் இருக்கிறான் என்று கண்டடைகிறான். ஸ்டீவனின் கண்டுபிடிப்பு  கத்தோலிக்க கிறித்தவ இறையியலில் மும்மை அல்லது திரித்துவம் என்று அழைக்கப்படுகிற தந்தை, மகன், புனித ஆவி என்பதன் கூட்டமைவை ஒத்துப்போகக்கூடியது. 

ஜாய்ஸின் வாழ்நாள் வாசிப்பான தாந்தேயின் “டிவைன் காமெடி”, “யுலிசஸ்” நாவல் முழுக்க ஜவ்வுப் பரவல் போல விரவியிருக்கிறது. ஹோமரின் காப்பியம் நிலம், கடல் என அலைவுறுதலின் கதையாடலை “யுலிசஸ்” நாவலுக்கான கட்டுமானத்தைத் தருகிறதென்றால் தாந்தேயின் “டிவைன் காமெடி” அகநிலை அலைவுறுதலான பாவம், அதன் சுத்திகரிப்புக்கான யத்தனங்கள், ஆன்மிக நாடுகடத்தல் ஆகியவை அடங்கிய மனதின் கதையாடல் கட்டுமானத்தை நாவலுக்குத் தருகிறது. தாந்தேயின் “டிவைன் காமெடியில்” கீரேக்க காப்பிய நாயகனான யுலிசஸ் நரகத்தின் எட்டாவது வட்டத்தில் என்றென்றைக்குமாக எரிந்துகொண்டிருக்கிறான். டிரோஜன் போரின் போது மரக்குதிரையை வைத்துப் போரில் ஏமாற்றியது, தெய்வீகம் மீறிய அறிவை பகுத்தறிவின் துணை கொண்டு தேட முற்பட்டது ஆகியவை யுலிசஸின் பாவங்கள். அதற்காகத்தான் அவன் நரகத்தில் தாந்தேயின் காப்பியத்தில் எரியும் தீயில் தொடர்ந்து தண்டிக்கப்படுகிறான். தாந்தே யுலிசஸை தன் காப்பியத்தில் நரகத்திலிட்டு தண்டிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் யுலிசஸுக்கு தெய்வீக தடுத்தாட்கொள்ளல்  சாகசங்கள் நிரம்பிய வாழ்வில் அதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளமாக இருந்தாலும் அவன் வாழ்வில்  அது என்றுமே நடப்பதில்லை. ஜாய்ஸ் தன்னுடைய நாவலில் கிரேக்க வீரனான யுலிசஸை சாதாரண விளம்பரங்கள் விற்கும் விற்பனையாளனாக குறுக்கி அவனைத் தண்டிக்கும் அதே சமயத்தில் தாந்தேயின் தெய்வீகத் தண்டனையிலிருந்து விடுவித்துவிடுகிறார். 

தாந்தேயின் காப்பியம் ஜாய்ஸின் கவித்துவத்தினுள் நிரம்பியிருப்பது அவருடைய கதாபாத்திரங்களின் மனோரீதியான உடைவுகளில் தெரியவருகிறது. “யுலிசஸ்” நாவலில் ஒரு அத்தியாயத்தில் கதாபாத்திரங்கள் மனோரீதியாக உடைந்துபோய் அவர்கள் தங்களை மிருகங்களாக உணரும் பிரமைக்கு ஆட்படுகிறார்கள். ஹோமரின் காப்பியத்தை அடியொற்றிய சர்க்கே (Circe) அத்தியாயத்தில் ஜாய்ஸ் தாந்தேயின் நரகம் (inferno) காண்டத்தில் கொடூரமாக எரியும் தீயில் தவிக்கும் திருடர்களின் விவரணைகளை ஒத்திருக்கும்படி தன் கதாபாத்திரங்களின் மன அவஸ்தைகளை அமைத்திருக்கிறார். ஆகையால் “யுலிசஸ்” நாவலில் வரும் டப்ளின் நகரம் தாந்தேயின் நரகத்தை ஒத்திருக்கிறது; ஒரே ஒரு வித்தியாசம் ஜாய்ஸின் டப்ளின் வாழும் நரகம். அதனூடே சென்னையைப் போலக் கழிவு நீர் சாக்கடையாக கூவம் மட்டும்தான் ஓடவில்லை.  ஸ்டீவன் டெடலாஸை சாகக் கிடந்த தன் தாயின் மரணப்படுக்கை அருகே இருந்து பிரார்த்தனை செய்யவில்லை என்ற குற்றவுணர்வு அலைக்கழிக்கிறது. லியோபோல்ட் ப்ளும் தான் ஈடுபட்ட அத்தனை கள்ளப் பாலியல் உடலுறவுகளாலும் உளவியல்ரீதியாக அலைக்கழிக்கப்படுகிறான்.

ஹோமர், தாந்தே ஆகியோரின் காப்பியங்கள் தவிர மில்டன், பிளேக், ஸ்வின்பர்ன் ஆகியோரின் கவிதைகளுக்கான குறிப்பீடுகளும் ஜாய்ஸின் நாவல் முழுக்க விரவியிருக்கின்றன.

மில்டனின் கவிதை “லூசிடாஸ்” அவருடைய நண்பர் எட்வர்ட் கிங் ஐரிஷ் கடலில் மூழ்கி இறந்ததை ஒட்டி எழுதப்பட்ட இரங்கற்பா. மில்டன் கிறித்துவ இறையியலின் முக்கிய அம்சமான புத்துயிர்ப்பு (ressurrection) என்பதைப் பயன்படுத்தி “லூசிடாஸில்”, “மேலும் அழாதீர், துக்கம் நிரம்பிய மேய்ப்பர்களே, மேலும் அழாதீர், லூசிடாஸுக்கான உங்கள் துக்கம் மரணமடையவில்லை, நீரின் அடியாழத் தரையில் அவன் மூழ்கியிருந்தாலும்” என ஆறுதலளிப்பார். ஸ்டீபனுக்கோ புத்துயிர்ப்பில் நம்பிக்கை இல்லை. அவனுக்கு நீரின் அடியாழம் என்பது தொடர்ந்து அரித்து, அழுகவைத்து அழிவை நிலைநிறுத்தும் இடம்.  பொருளாயத்தையும், இழப்பையும் குறியீடாகக் கொண்டிருக்கும் இடம். ஐரிஷ் வளைகுடாவில் மூழ்கி இறந்தவர்களை நினைவுகூரும் ஸ்டீபனுக்கு அந்த மரணங்கள் உண்டாக்கிய பேரதிர்ச்சியும் அதனால் உண்டான உட்குலைவுகளுமே மனதில் ஆறா ரணங்களாக அவனை மேலும் குத்திக் கிழிக்கின்றன.    

ஸ்டீபனின் இன்னொரு எதிர் மாதிரியாகக் கவி வில்லியம் பிளேக்கினை ஜாய்ஸ் தன்னுடைய நாவலில் புனைகிறார். “நெஸ்டர்” அத்தியாயத்தில் ஸ்டீபன் தான் வரலாறு எனும் கொடுங்கனவிலிருந்து தப்பிக்க விரும்புவதாகக் கூறுகிறான். ஆனாலும் ஸ்டீபன் ப்ளேக்கை ஆராதிப்பவனாகவும் இருக்கிறான். ஜாய்ஸ் ப்ளேக்கின் “A Vision of the Last Judgment”,  “The Book of Urizen” ஆகிய இரண்டு நூல்களுக்கான குறிப்பீடுகளையும் தன் நாவலில் வரலாற்று நிர்ணயவாதத்தினை எப்படி கலைஞனின் கற்பனை  மீறி வெற்றியடையும் என்பதைச் சொல்லப் பயன்படுத்துகிறார். ப்ளேக் கதைகளும் உருவகங்களும் நினைவின் மகள்கள் ஆனால் தீர்க்கதரிசனத்தின் உள்ளுணர்வு மாற்றத்தினை உண்டாக்கும் எதிர்கால மகள் என்று நம்பினார். பிளேக்கின் இந்த லட்சியவாதத்தில் ஜாய்ஸ் நம்பிக்கை வைத்தவரில்லை. ஜாய்ஸின் நாவல் பல இடங்களில் பிளேக்கின் லட்சியவாதத்தின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அதை ஆன்மிகத்தின் வழி தப்பித்தல் என்பதையும் எடுத்துக்காட்டி தினசரி வாழ்வின் புலனுணர்வுகளின்  சாதாரணங்களில் தன்னை மீண்டும் மீண்டும் தக்கவைத்துக்கொள்கிறது. 

ஸ்வின்பர்னின் கவிதைகளின் ஊடிழைப்பாவு ஜாய்ஸின் நாவலைச் செழுமையாக்கும் இன்னொரு அம்சமாகும். ஸ்வின்பர்ன் , “நான் எனது இனிமையான தாயான கடலுக்குத் திரும்பிச் செல்வேன், மனிதர்களின் தாயும் காதலியுமான கடல், கடல் “ என ரொமாண்டிக் ஏக்கமும் இனிமையும் கொண்டு பாடுவதை ஜாய்ஸ் கடலை ‘சளிப்பச்சை’ (snotgreen) என்றும் ‘விதைப்பைகளை இறுக்கும் உறை’ (scrotumtightening) என்றும்  விவரிப்பதன் வழியாக ரொமாண்டிசம் களைந்த உடலாக மாற்றிவிடுகிறார். ஸ்வின்பர்னின் ரொமாண்டிசிசம் ஜாய்ஸினால் இவ்வாறாக செயற்கையானதாக அம்பலப்படுத்தப்படுகிறது. 

ஐரிஷ் தேசியவாதத்தை முன்னெடுத்த பெரும் கவியான டபிள்யூ.பி.யேட்ஸ் அதை செல்டிக் புராணங்களிலிருந்தும் , நாட்டுப்புறக் கதைகளிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்; தன்னுடைய கவிதைகளிலும் அவ்வாறே எழுதிக் காண்பித்தார். “யுலிசஸ்” நாவலின் ஸ்டீவனுக்கு ஐரிஷ் தேசியவாதத்தின் இந்த நெறி, கோரிக்கை என்றுமே முழுமை செய்யப்பட இயலாதது. ஸ்டீபன்  ஐரிஷ் தேசியவாதத்திற்காக யேட்ஸ் காட்டும் வழியை நிராகரிக்ககூடியவனாக இருக்கிறான். ஜாய்ஸினுடைய நிலைப்பாடு ஐரிஷ் தேசியவாதத்தை நகர் சார் நவீன சமகால உணர்வுகளிலிருந்து கட்டவேண்டும் என்பதாக இருக்கிறது. 

“யுலிசஸ்” நாவலின் அழகியலை வரையறுப்பதற்கு ஜாய்ஸ் இதர ஐரிஷ் எழுத்தாளர்களான ஆஸ்கார் வைல்ட், வால்டர் பேட்டர், ஆகியோரின் எழுத்துக்களோடு பூசலிடும் கருத்துக்களை முன்வைக்கிறார். “யுலிசஸ்” நாவலின் முதல் அத்தியாயத்தில் ஸ்டிபனின் முகத்துக்கு நேராக உடைந்த கண்ணாடியைத் தூக்கிக்காட்டும் பக் மல்லிகன், ஸ்டீபனின் ஒழுங்கற்ற சவரம் செய்யப்படாத முகத்தைக் கிண்டலடிக்கும் விதத்தில் ஆஸ்கார் வைல்ட் அப்படிப்பட்ட முகத்தை ஷேக்ஸ்பியரின் “புயல்”    நாடகத்தில் வரும் காட்டுமிராண்டியான காலிபானின் முகத்தைக் குறிப்பிட்டு, “ தன் முகத்தை கண்ணாடியில் பார்க்காத காலிபானின் கோபம், உன்னை மட்டும் வைல்ட் பார்க்க நேர்ந்திருந்தால்” என்று சொல்லிச் சீண்டுகிறான். ஸ்டீபன் அதற்கு கசப்பின் துல்லியத்துடன் பதிலளிக்கிறான்: “ அது (எனது முகம்+ கீறல் விழுந்த கண்ணாடி ) ஐரிஷ் கலையின் குறியீடு. ஒரு வேலையாளின் கீறல் விழுந்த முகம்பார்க்கும் கண்ணாடி”. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கீழும் ஐரிஷ் தேசியவாதமும் கலை இலக்கியமும் வேலையாளாக இருப்பதை அந்த ஒரே பதிலில் ஸ்டீபன் சொல்லிவிடுகிறான். 

ஆத்மாக்களின் பிறவிகள் கடந்த பிறப்புகள் (transmigration of souls) என்ற கருத்தாக்கத்தை ஜாய்ஸ் விக்கோ (Vico), திஸோஃபிஸ்டுகள் ஆகியோரிடமிருந்து எடுத்து  பிரிட்டிஷ் காலனியம் கடந்த ஐரிஷ் தேசியவாதத்தைக் கட்ட “யுலிசஸ்” நாவலின் பல பகுதிகளில் பயன்படுத்துகிறார். 

தத்துவம், வரலாறு, இறையியல் ஆகிய துறைகளிலிருந்து வரும் ஊடிழைப்பாவுகளை  ஒன்றாக இணைக்க மொசார்ட்டின் இசை நாடக (opera)  உத்திகளை ஜாய்ஸ் பயன்படுத்துகிறார். சில சமயங்களில்  மொசார்ட்டின் இசை நாடகங்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மாலி ப்ளூம் ஒரு பாடகியாக இருப்பதும் அவளுடைய கள்ளக்காதலன் ப்ளேசஸ் பாய்லன் அவளுடைய இசைப்பயணங்களை ஒருங்கிணைக்கும் அவளுடைய மேனஜராக இருப்பதும் ஜாய்ஸுக்கு மொசார்ட்டின் இசைநாடக வரிகளையும் அவற்றின் இசைத்தன்மையையும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகளைக் கொடுக்கின்றன. மாலியின் பாடல்வரிகள் அவளுடைய கள்ளக்காதல்களை அறிந்த ப்ளூமுக்கு காதுப்புழுக்கள் (earworms) ஆகச் சதா மனதிற்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 

மேலும் ஊடிழைப்பாவுகளை ஒன்றாகக் கோர்க்க ஜாய்ஸ் மாத்யூ ஆர்னால்ட், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலியத் தத்துவ அறிஞரான நோலாவைச் சேர்ந்த கியார்டானோ ப்ரூனோ  ஆகியோரின் கருத்துக்களையும் பயன்படுத்துகிறார்.  கியார்டானோ ப்ரூனோ  அவருடைய மத எதிர்ப்பு கருத்துக்களுக்காகக் கிறித்துவத் திருச்சபையால் வேட்டையாடிக் கொல்லப்பட்டவர். ப்ரூனோ பிரபஞ்சத்தின் எதிரெதிர் இயற்கை சக்திகள் அதிகபட்சச் சூடு, அதிகபட்சக் குளிர்  ஆகியன போலவே அதிக ஆழமான நன்மையும், அதிக ஆழமான தீமையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து முடிவிலியை உண்டாக்கிவிடும் என்ற கருத்தையும் அதனால் பிரபஞ்ச பன்மைவாதம் (Cosmic Pluralism) என்ற தத்துவத்தையும் முன்வைத்தவர். ஜாய்ஸ் ப்ரூனோவின் இயங்கியலைப் பயன்படுத்தி தேசக் குடிமகன், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவன், ஆகிய அடையாளங்களின் எல்லைகளின் இறுக்கங்களை உடைத்துவிடுகிறார். மாத்யூ ஆர்னால்டின் விமர்சன சிந்தனைகளான நீதியறிவுடன் கூடிய பிரக்ஞை, கீழ்ப்படிதல், செயல்திறன் ஆகியவற்றுக்கும் அறிவுஜீவி சுதந்திரம், கலைத்தன்மையின் அழகு, யதார்த்தத்தை யதார்த்தமாக எதிர்கொள்ளும் பண்பு ஆகியவற்றுக்கிடையிலான  போராட்டங்களையும் ஜாய்ஸ் தன்னுடைய கதையாடலின் விசையாக (narrative force) பயன்படுத்துகிறார். 

ஊடிழைப்பாவுகளை நெய்யும் மேற்சொன்ன ஜாய்ஸின் திறமைகளாலும் கலை நுட்பங்களாலும், “யுலிசஸ்”  மொழியாலான மனிதப் பிரக்ஞையைப் பற்றிய தன்னிகரற்ற நாவலாக மிளிர்கிறது.