Sunday, June 14, 2026

குறைபட்டுக்கொள்ளாது துன்பத்தை ஏற்றமைகிற தத்துவ நோக்கு (Stoicism) : சிட்டியம் நகரைச் சேர்ந்த ஜீனோ


ஜீனோ என்ற பெயரை சுஜாதாவின் கதைகளில் நாய்க்குட்டியின் பெயராக நீங்கள் வாசித்திருக்கக்கூடும். ஜீனோ (Zeno) ஒரு கிரேக்க தத்துவஞானி. அவர் உருவாக்கிய குறைபட்டுக்கொள்ளாது துன்பத்தை ஏற்றமைகிற தத்துவ நோக்கு (Stoicism) இன்றைக்கு தேர்தலில் தோற்றுப் போய் புலம்பிக்கொண்டிருக்கும் கட்சிகளுக்குத் தேவைப்படுவது. 


கற்பனை செய்து பாருங்கள். உலக சரித்திரத்திலேயே மோசமான திங்கட்கிழமை உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்டது. உங்கள் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. ஜீனோவுக்கு அதுதான் நிகழ்ந்தது. பண்டைய கிரேக்கத்தில் விலை மதிப்பில்லாத பழுப்பு சாயத்தை ஏறிக்கொண்டு சென்ற ஜீனோவின் கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. மூழ்கிய கப்பலிலிருந்து ஏதிலியாக ஏதென்ஸின் கடற்கரையில் ஒதுங்கிய ஜீனோ அழவில்லை, கடவுளை சபிக்கவில்லை,  தன்னுடைய நனைந்த தளராடையை நினைத்து மனம் வெம்பவில்லை அவர் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, தன் கப்பல்களைப் பறிகொடுத்தவர்களுக்கு ஆசுவாசத்தை வழங்கும் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். 


ஏதிலியாக ஏதென்ஸ் நகரில் சுற்றிக்கொண்டிருந்த ஜீனோ எந்தவொரு ஏதிலி புத்திஜீவியும் செய்யக்கூடிய காரியத்தைத்தான் செய்தார்; புத்தகக்கடை, புத்தகக்கடையாக ஏதென்ஸ் முழுக்க ஏறி இறங்கினார். ஜீனோஃபோன் (Xenophon) எழுதிய நினைவுக்குறிப்புகள் (Memorabilia) அவர் கண்ணில்பட்டது. சாக்ரட்டீசைப் பற்றி ஜீனோஃபோன் எழுதியிருந்ததைப் படித்த ஜீனோவுக்கு அவரைப் போல ஒருவரை ஏதென்ஸில் எங்கே தேடிக்கண்டுபிடிப்பது என்று வியந்தார். 


அந்த சமயம் பார்த்துத்தான் ஜீனோவின் வழியில், வாழ்க்கையில் தீப்ஸ் நகரைச் சேர்ந்த கிரேட்டஸ் குறுக்கிட்டார். கிரேட்டஸ் எதைப்பற்றியும் நல்ல அபிப்பிராயம் சொல்லாத தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.  Cynics சமூக விதிகள் எல்லாவற்றையும் நிராகரிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்; தெருவில் வாழ்ந்தார்கள்; மினிமலிச வாழ்க்கை வாழ்ந்தார்கள்; தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லொரையும் பார்த்து நாய் போல குரைத்தார்கள். Cynic என்ற சொல் கூட  நாயைக் குறிக்கும் கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. 


கிரேட்டசைக் தன் குருவாக ஜீனோ ஏற்றுக்கொண்டார். ஜீனோவுக்கு நாய் போல குரைக்க வரவில்லை அவருடைய சுபாவம் கண்ணியமான வார்த்தைகளை கூச்சத்துடன் வெளிப்படுத்துவதாக இருந்தது. கிரேட்டஸ் ஜீனோவின் கூச்சத்தைப் போக்க அவர் தலையில்  பருப்பு சூப் தளும்பும் பானையை ஏற்றி ஏதென்ஸின் வீதிகளில் நடக்கச்சொன்னார். சூப் சிந்தாமல் நடக்க வேண்டும்.  கிட்டத்தட்ட நாரதர் கையில் நீர் நிறைந்த கோப்பையைக் கொடுத்து பிரபஞ்சம் சுற்றி வரச்சொன்னபோது அவர் எத்தனை முறை நாராயண மந்திரத்தை மனதில் நிறுத்தினார் என்றொரு கதை நம்மிடம் இருக்கிறதல்லவா அதே போன்ற கதைதான் ஜீனோவின் வாழ்க்கை சம்பவம். சினிக்குகள் நல்ல ஆசிரியர்கள். ஜீனோ தலையில் சூப் பானையை சுமந்து ஏதென்ஸின் வீதிகளில் நடந்து சென்றபோது அவருடைய கால் சராய் அவிழ்ந்துவிட்டது. கிரேட்டஸ் அந்த நேரம் பார்த்து ஜீனோவின் தலையிலிருந்த பானையை உடைத்துவிட்டார், கால்களின் வழியே சூப் வழிய ஜீனோ நடுத்தெருவில் அம்மணமாக நின்றார்.


பருப்பு சூப் சம்பவம் ஜீனோவுக்கு, மூழ்கிய கப்பலை விட ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தந்தது. உன் கட்டுக்குள் என்ன இருக்கிறதோ அதைப் பற்றி மட்டும் கவலைப்படு. உன்னை ஒரு ஆபாச எழுத்தாளன் தன்னுடைய திடக்கழிவு சொற்களால் வன்மத்துடன் தாக்குகிறானா நீ என்ன செய்ய முடியும்?  உன் கட்டுக்குள் அது இல்லையல்லவா அதை உதாசீனப்படுத்தி நீ போகிற போக்கில் போ. 


ஜீனோவுக்கு சினிக்குகள் பொருளுலகை நிராகரித்ததும் அவர்கள் நற்குணத்துக்கும் நன்னடத்தைக்கும் கொடுத்த முக்கியத்துவமும் பிடித்ததிருந்தாலும் அவர் பொதுவெளியில் தன் கால் சராயை அணிந்திருக்கவே விரும்பினார். தனக்கென ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கினார்.


பிளேட்டோவைப் போல அக்கடெமி  அமைக்கும் அதிர்ஷ்டமெல்லாம் ஜீனோவுக்கு வாய்க்கவில்லை. அவர் ஏதென்ஸின் தெருவில் வர்ணமடிக்கப்பட்ட சுவரின் கீழ் நீன்று தன் போதனைகளைத் தொடங்கினார்.

தன்னுடைய தத்துவத்தை ஒரு கோழி முட்டைக்கு ஒப்பிட்ட ஜீனோ தர்க்கம் முட்டையின் ஓடு என்றும், பிபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவது முட்டயின் வெள்ளைக் கரு என்றும், எப்படி ஒரு நல்வாழ்க்கையை வாழ்வது என்ற அறம் முட்டையின் மஞ்சள் கரு என்றும் உருவகித்தார். 


நற்பண்பே (virtue) இவ்வுலகில் நிலையான செல்வம் என்று ஜீனோ போதித்தார். பொருட்செல்வம், ஆரோக்கியம், புகழ், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் என எதுவுமே நற்பண்புகளைப் போல தன்னளவிலேயே நல்லவை அல்ல. தீமை என்பது கெட்ட குணம் மாத்திரமே. கப்பலே மூழ்கினாலும் உன்னுடைய நற்பண்பை யாரும் உன்னிடமிருந்து எடுத்துவிட முடியாது என ஜீனோ போதித்தார். 


ஜீனோவுக்கு இப்பிரபஞ்சம் தெய்வீக நெருப்பு ஒன்றினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது. ஆகையால்  இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை வாழ ஜீனோ வலியுறுத்தினார். 


உணர்ச்சிகளற்ற ரோபோக்களாக வாழும்படி ஜீனோ போதிக்கவில்லை ஆனால் அனாவசிய கோபம், பதற்றம், அடுத்தவர் மேலான நியாயத் தீர்ப்புகள் ஆகியவற்றால் ஒருவர் மனதில் உண்டாகக்கூடிய பதற்றங்களையும் கோப தாபங்களையும் உதாசீனம் செய்து மகிழ்ச்சியையும் அமைதியையும் மனம் நிறைத்து வாழ ஜீனோ போதித்தார். 


கப்பல் மூழ்கி ஏதிலியாகக் கரை சேர்ந்தவரை ஏதென்ஸ் அவருடைய ஞானத்திற்காகவும் போதனைகளுக்காவும் கௌரவித்தது. அவருக்கு ஏதென்ஸ் நகரின் குடியுரிமையை வழங்கியது. ஆனால் ஜீனோ தனது நகரம் தான் பிறந்த சிட்டியம் மட்டுமே என ஏதென்ஸ் நகர குடியுரிமையை ஏற்க கண்ணியமாக மறுத்துவிட்டார். 


எழுபத்தி இரண்டு வயது வரை வாழ்ந்த ஜீனோ ஒரு நாள் பள்ளியிலிருந்து வரும்போது கால் தடுக்கி விழுந்து தன் பெருவிரலை உடைத்துக்கொண்டார். துன்பியல் நாடக வசனமாகிய “ நானே வருவதாக இருக்கும்போது நீ எதற்குக் கூப்பிடுகிறாய்?” என்பதை மேற்கோளாகச் சொன்ன ஜீனோ பெருவிரல் உடைந்த நிலையிலேயே மூச்சடக்கி உயிர் நீத்தார்.