Friday, June 5, 2026

தூயதில் எழும் தீயது

தாஸ்தோவ்ஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள்” ஏன் உலக இலக்கியத்தில்  தலைசிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுகிறது என்று யாரேனும் கேட்டால் அதற்கு நான் எப்போதுமே அந்த நாவலில் வரும் தந்தை கரமசோவ் கதாபாத்திரமாகிய ஃப்யோடர் பாவ்லோவிச் கரமசோவ்தான் என்று தயங்காமல் சொல்வேன். பாவ்லோவிச் கரமசோவ் போன்ற அதி தீய கதாபாத்திரத்தை தூய கிறித்தவரான தாஸ்தோவ்ஸ்கியால் கற்பனை செய்ய முடிந்திருக்கிறது என்பதைத் தன்னை விடுத்து மற்றமையை கற்பனை செய்த தாஸ்தோவ்ஸ்கியின் படைப்பாற்றல் என்று கொண்டாடும் மிகைல் பக்தின் இதை dilalogic imagination என்று பெயரிட்டு, அந்த ஒரே காரணத்திற்காகவே தாஸ்தோவ்ஸ்கியை உலக இலக்கியத்தின் உச்சமாகக் கொண்டாடுகிறார்.


பாவ்லோவிச் கரமசோவ் செய்யக்கூடிய காரியங்களும் லேசுப்பட்டவை அல்ல. பாவ்லோவிச் கரமசோவை சித்தரித்து எழுதும்போது மட்டும் தாஸ்தோவ்ஸ்கியின் எழுத்தில் ஒரு வகையான anarchic humour கூடிவிடுகிறது. பாவ்லோவிச் கரமசோவின் முதல் மனைவி அவர்களுக்குப் பிறந்த டிமிட்ரிக்கு மூன்று வயதாக இருக்கும்போது இறையியல் மாணவன் ஒருவனோடு ஓடிப்போகிறாள். டிமிட்ரியை பாவ்லோவிச் கரமசோவ் கவனிக்கமால் அவனை அனாதையாக விட்டுவிடுகிறான். வேலைக்காரனும் உறவினர்களுமே டிமிட் ரியை வளர்க்கிறார்கள். ஓடிப்போன மனைவி,  அடிலெய்டா இவனோவனா பீட்டர்ஸ்பர்கில் ஒரு சிறிய அறையில் வறுமையிலும் பட்டினியிலும் மரித்துப் போகிறாள். அவளுடைய மரண செய்தியை அறியவரும் பாவ்லோவிச் கரமசோவ் தெருவிறங்கி களிப்பில் குடித்துக் கொண்டாடி ஆடிப்பாடுகிறான். இன்னொரு கதைசொல்லலில் அவன் அழுது புலம்புவான் என்று தாஸ்தோவ்ஸ்கி எழுதுவார். பாவ்லோவிச் கரமசோவின் பணமும் சொத்தும் அடிலெய்டா இவனோவனாவிடமிருந்து வந்தது. அவனுடைய சொத்துக்கு, எனவே உண்மையான வாரிசு அடிலெய்டா இவனோவனாவின் மகனாகிய டிமிட்ரி. அந்த சொத்தை டிமிரட் ரிக்கு கொடுக்காமல் பாவ்லோவிச் கரமசோவ் எல்லா விளையாட்டுகளையும் விளையாடுவான். 


அடிலெய்டா இவனோவனாவின் சொத்தால் பணக்காரனாகிய பாவ்லோவிச் கரமசோவ் அந்தப் பணத்தை காட்டி  சோஃபியா இவனோவ்னா எனும் பதினாறு வயது அனாதை சிறுமியை மணந்துகொள்கிறான். சோஃபியா இவனோவ்னாவை பாவ்லோவிச் கரமசோவ் மருத்துக்கும் மதிப்பதில்லை. அவள் வீட்டிலிருக்கும்போதே பல பெண்களை கூட்டி சம்போகத்தில் ஈடுபடுகிறான். சோஃபியா இவனோவ்னா நரம்பு நோய்களுக்கு ஆளாகிறாள். அல்யோஷா, இவான் என்ற இரண்டு மகன்களை குழந்தைகளாக விட்டுவிட்டு அவளும் மரித்துப் போகிறாள். 


டிமிட் ரி, அல்யோஷா, இவான் தவிர பாவெல் ஸ்மெர்டியாகோவ் எனும் திருமண உறவுகளுக்கு அப்பால் பிறக்கும் கள்ளக்குழந்தையும் பாவ்லோவிச் கரமசோவிற்கும் இருக்கிறான். பாவெல் ஸ்மெர்டியாகோவை பாவ்லோவிச் கரமசோவ் தன் வேலைக்காரனாக வீட்டில் வளர்க்கிறான்.  


நாவலில் பல சமயங்களில் பாவ்லோவிச் கரமசோவ் ஒரு பஃபூனா, தீமையின் மொத்த உருவமா, இரண்டும் கலந்த கோளாறா என்று அறுதியிடமுடியாமல் இருக்கிறது. 


முதல் மகனாகிய டிமிட் ரி குருஷென்காவை விரும்பும்போது தன் பணத்தைக் காட்டி பாவ்லோவிச் கரமசோவ்வும் அவளை அடைய முயற்சி செய்கிறான். தன்னுடைய மகன்களின் மேல்  பாவ்லோவிச் கரமசோவ் பிரயோகிக்கும் அதிக பட்ச வன்முறையாக இதைக் கருதலாம். 


அல்யோஷாவையும் இவானையும் அவர்கள் பிறந்ததிலிருந்தே, டிமிட் ரியைப் போலவே பாவ்லோவிச் கரமசோவ் கைவிட்டுவிடுகிறான். அவர்களும் வேலைக்காரன் தயவிலும், உறவினர் தயவிலும் வளர்கிறார்கள். அவர்கள் மூவருமே தங்களுக்கான தந்தையைத் தேடுவதில் அவர்களுடைய வாழ்க்கை கழிகிறது. அல்யோஷா அருட்தந்தை முதியவர் சோசிமாவிடம் தன் தந்தையைக் காண விழைகிறான். இவான், சூனியக்கார்களைத் தீயிலிடும் திருச்சபை நீதிபதிகளைப் போல இறையியல் கட்டுரைகளை எழுதும் தத்துவ எழுத்தாளனாகிறான். 


கடைசில் பாவ்லோவிச் கரமசோவை, நாவலில், போட்டுத் தள்ளுவது அவனுடைய கள்ள மகனும் வேலைக்காரனுமாகிய பாவெல் ஸ்மெர்டியாகோவ். 


தூயது,  தீயது என்ற கிறித்துவச் சொல்லாடலில் பாவ்லோவிச் கரமசோவ் தாஸ்தோவ்ஸ்கியின் கால, தன் மகன்களைக் கைவிட்ட ரஷ்யாவின் உருவகமாகிறான். தி.ஜானகிராமனின் யமுனா, நகுலனின் சுசீலா போன்ற மென் கதாபாத்திரங்களைக் கொண்டாடும் தமிழ் வாசகர்களுக்கு பாவ்லோவிச் கரமசோவ் ஒரு கெட்ட கனவு. ஆனால் அவனே உலக இலக்கியத்தில் என்றென்றும் நினைவில் வைக்கப்படும் கதாபாத்திரம். 


தூயதில் எழும் தீயது வலியது.