நேற்று என்னுடைய இத்தாலிய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆன் லைன் கருத்தரங்கில் Subversions in Eco’s “The name of the Rose” and Joyce’s “Ulysses” என்ற தலைப்பில் உரையாற்றினேன். கருத்தரங்கை “ரோஜாவின் பெயர்” நாவலில் வரும் லத்தீன் பகுதிகளை மொழிபெயர்க்க எனக்கு உதவிய என் இத்தாலிய நண்பர் கிளாரா ஏற்பாடு செய்திருந்தார். “ரோஜாவின் பெயர்” நாவலில் எக்கோ மடாலய அறிவு மேலாண்மை, போப்பாண்டவரின் அதிகாரம் ஆகியவற்றைத் தலைகீழாக்குகிறார் என்றால் ஜாய்ஸ் “யுலிசஸில்” ஹோமர் உண்டாக்கிய காப்பிய மரபு, பிரித்தானிய காலனி ஆதிக்கம், கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரம் ஆகியவற்றைத் தலைகீழாக்குகிறார் என்பதாக என் உரை அமைந்திருந்தது. நகைச்சுவை, மதமறுப்பு, அரிஸ்டாட்டிலின் மறைந்து போன நகைச்சுவை பற்றிய புத்தகம் ஆகியன எக்கோவுக்கு மேலாதிக்கக் கருத்துக்களைக் கீழறுப்பு செய்ய உதவுகின்றன என்றால் ஜாய்ஸுக்கு மனித உடலின் தினசரித் தேவைகளும் அசிங்கங்களும், நனவோடை, தினசரி வாழ்வின் கேவலங்கள் காப்பிய மேலாண்மையின் பொய்மைகளைக் கவிழ்க்க உதவுகின்றன. எக்கோ ஒற்றை தெய்வீக ஒழுங்கமைவு என்று எதுவும் மனித வாழ்வில் இல்லை அர்த்தம் என்பது எப்போதுமே முடிவிலா விளக்கங்களுக்கு உட்படக்கூடியது என்பதை கலாபூர்வமாக நிறுவுகிறார். ஜாய்ஸ் புராண வகைமைகள் மனிதர்களாக இருந்தாலும் சரி தெய்வங்களாக இருந்தாலும் சரி சிதறுண்டவையாகவே நவீன, சமகால வாழ்வில் அனுபவங்களாகின்றன என்று நிறுவுகிறார். இரண்டு நாவல்களுமே மானுட வாழ்வை பேரிலக்கியங்களின், மதங்களின் பின்னணியில் வைத்துத் தரிசிக்க நமக்கு உதவுகின்றன. பெரிய இலக்கியப் படைப்புகள் செய்யக்கூடிய காரியம் அது.
உரையைத் தொடர்ந்த விவாதத்தில் கிறிஸ்டோபர் நோலனின் “ஒடிசி” திரைப்படம் பற்றியும் பேசப்பட்டது. நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்பதால் அமைதியாக இருந்தேன். கிளாரா, நோலனின் “ஒடிசி” ஜாய்ஸின் “யுலிசஸ்” நாவலின் கால் தூசிக்குக் கூட வராது என்று வாதிட்டார். நோலன் கடவுளர்களைத் தன்னுடைய படத்திலிருந்து சுத்தமாக நீக்கிவிட்டதாகவும் அதனால் படம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய புராண நாடகமாக மட்டுமாக எஞ்சியிருப்பதாகவும் தெரிவித்தார். நான் மகாபாரதம், இராமாயணம் ஆகிய இந்திய இதிகாசங்களை அப்படிப் பௌராணிக நாடகங்களாக மட்டுமே மாற்றிய திரைப்படங்கள் வெளியாகியிருப்பதைத் தெரிவித்தேன்.
இன்று காலை “நியுயார்க்கரில்” நோலனின் திரைப்படம் ஹோமரின் கவித்துவத்தை இழந்ததாக இருக்கிறது என்ற விமர்சனக் கட்டுரையை வாசித்தபோது கிளாராவின் அவதானம் மேலும் உறுதிப்பட்டது.
நோலனின் படத்தைப் பார்க்கவேண்டும்.