Monday, September 7, 2026

பிராக் (Prague) நகர வீதிகளில்: பகுதி 4 ஹ்ரபால் (Hrabal)








மத்திய ஐரோப்பாவின் மிகப் பெரிய நடன விடுதியான, பிராக் நகரத்தின், கார்லோவி லாஸ்னிக்கு (Karlovy Lazne) நானும் ஸ்டெஃபியும் நடனமாடச் சென்றபோது  பொஹுமில் ஹ்ரபாலின் (Bohumil Hrabal) நாவல் 

“வயதில் மூப்படைந்தவர்களுக்கான நடன பாடங்கள்” (Dancing Lessons for the Advanced in Age ) எனக்கு ஞாபகம் வந்தது. மிலன் குந்தேரா, இவான் கிலிமா போன்ற செக் குடியரசின் முக்கியமான இலக்கிய எழுத்தாளர்கள் ஹ்ரபாலை தங்களுடைய முன்னோடி எழுத்தாளாராக அடிக்கடி குறிப்பிட்டிருந்தாலும், ஹ்ரபால் வெளியுலகில் அதிகமும் அறியப்பட்டவரில்லை.  நான் எழுதும் இந்தப் பயண இலக்கிய கட்டுரைதான் பொஹுமில் ஹ்ரபாலை முதன் முதலாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். எனக்கும் ஸ்டெஃபிக்குமான உரையாடல்களில் ஹ்ரபால், அவருடைய நகைச்சுவைக்காக, அடிக்கடி இடம் பெறுவார். நகைச்சுவையே என்னையும் ஸ்டெஃபியையும், ஏன் என் வாழ்க்கையில் வந்த அனைத்து பெண்களையும், எனவே பிரபஞ்சத்தையும் என்னையும் இணைத்திருப்பது. சில நகைச்சுவைகள், குரூரமாக, என் வாழ்க்கையை சீரழித்திருக்கின்றன. பல நகைச்சுவைகள் என்னைக் காப்பாற்றி முலையூட்டியிருக்கின்றன. 


முதலில் நடனங்கள் பற்றி. நான் வால்ட்ஸ், போல்க்கா நாட்டுப்புற நடனம், சாம்பா ( ஆமாம் கொலம்பிய சாம்பா),  தெருக்கூத்தின் பல அடவுகள் ஆகியவற்றில் நாடக இயக்குனர், நாடக நடிகன் என்ற அளவில் முறையாக பயிற்சி எடுத்திருக்கிறேன். நாடகத்திற்கு அந்தப் பயிற்சிகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் ஆனால் எனக்குக் குறைவாகவே அமைந்திருக்கின்றன. ஐரோப்பிய, அமெரிக்க நடனவிடுதிகளில் நடனமாடவே அவை எனக்கு அதிகமும் உதவியிருக்கின்றன. தேள் கொட்டியது போல கை காலை உதறாமல், கூச்சலிடாமல், நல்ல நங்கை ஒருத்தியின் பெல்லி நடனத்திற்கு என்னால் நளினமாக ஈடுகொடுக்க முடியும்.


ஆனால் இரவு முழுவதும் ஆடுவதற்கான வலு எனக்கு என்றுமே இருந்ததில்லை. இரவு ஒரு மணிக்கு தூக்கம் சொக்கிவிடும். ஐரோப்பிய நடனமணிகளோ வெள்ளி, சனி இரவுகளில் நள்ளிரவில்தான் நடனமாடவே ஆரம்பிப்பார்கள். அதிகாலை நான்கு மணி அளவில் ஜோடி ஜோடியாக வீடுகளை நோக்கி செல்வார்கள். ஜோடியாகவே அவர்கள் வந்திருக்கலாம், ஜோடியை நடனத்தில் கண்டுபிடித்திருக்கலாம், ஜோடிகள் மாறியிருக்கலாம் என என்னென்னவோ நடந்திருக்கலாம். இப்படி மூச்சு முட்டக் குடித்துவிட்டு, ஆட்டம் போட்டுவிட்டு  காலை நான்கு மணிக்கு படுக்கைக்கு செல்பவர்களால்  என்னதான் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றும். பெரும்பாலும் ஞாயிறு காலைகளில் ஐரோப்பிய பெரு நகரங்கள் வெறிச்சோடி கிடக்கும். இளையோர் ஞாயிறு மதியம் அல்லது மாலைதான் துயிலெழுவார்கள். தேவாலய மணிகள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஒலிக்கும்போதும் காலைக் கடுங்காப்பிக்கும் க்ரொய்சாண்ட்டுக்கும் (croissant)  அல்லாடி ரயில் நிலைய 24 மணி நேரக் கடைகளை நோக்கி தூக்கம் கலையாமல் நடப்பது நான் மட்டுமாகத்தானிருக்கும். ஆமாம், தேவாலய மணிகள் யாருக்காக ஒலிக்கின்றன? யார்தான் இன்று தேவாலயங்களுக்குச் செல்கிறார்கள்? ஸ்டெஃபி, ஒரு முறை, ஐரோப்பிய கிராமப்புறங்களில் இருக்கும் கைவிடப்பட்ட தேவாலயங்களை மலிவான வாடகைக்கு எடுத்து அவற்றில் நீ நாடகங்கள் நடத்தலாம் என்று யோசனை சொன்னாள். 


ஐரோப்பிய ரயில் நிலயங்களைப் பார்க்கும்போது எனக்கு ஹ்ரபாலின் “Closely Watched Trains” நினைவுக்கு வரும். அது  ஹ்ரபாலுக்குப் புகழை ஈட்டித்தந்த நாவல் ; துயரமும் எள்ளலும், அன்றாட இயல்புகளும் விபரீத அபத்தங்களும் விசித்திரமாகக் கலந்த அவருடைய தனித்துவமான பாணியை உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் அதுவே. நாஜி ஆக்கிரமிப்புக் காலத்தின்போது, செக் நாட்டின் ஒரு சிறிய ஊரில் தொடர்வண்டித் துறைப் பயிற்சிப் பணியாளனாக  இருக்கும் மிலோஷ் ஹ்ர்மா (Miloš Hrma) என்ற இளைஞனைப் பற்றிய கதை; அவன் கவனிக்கும் ரயில்களாலும், அவனால் நிறுத்த முடியாமல் தவறவிட்ட ரயில்களாலும் தன் வாழ்க்கை அளவிடப்படுவதை அவன் தொடர்ந்து சிந்திக்கிறான். தன் பாலியல் அனுபவமின்மை குறித்த அச்சமும் பதற்றமும் அவனை ஆட்கொண்டிருக்கின்றன. அந்தப் பதற்றம் ஹ்ரபாலின் எழுத்தில் இன்னும் பிரம்மாண்டமான ஒன்றின் உருவகமாக மாறுகிறது: அந்நிய ஆக்கிரமிப்பில் முடங்கிக் கிடக்கும் ஒரு தேசத்தின் செயலற்ற தன்மை, வரலாற்றின் பேராற்றலுக்கு முன்னால் தனிமனிதனின் கையாலாகாத்தனம், அந்தரங்கமான சஞ்சலங்களும் உலகளாவிய பேருலக நிகழ்வுகளும் எவ்விதப் பிடிப்பும் இன்றி, வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் ஓர் உலகின் அபத்தம் இந்த நாவல் முழுவதும் வெளிப்படும். 

ஒருமுறை ஸ்டெஃபி என்னிடம் இந்த நாவலைப் பற்றிப் பேசியிருந்தாள்; 


"ரயில்கள் என்பவை வெறும் ரயில்கள் மட்டுமல்ல," என்று அவள் சொன்னாள், "அவை அரசின் கண்கள், ஆக்கிரமிப்பாளர்களின் கண்கள், வரலாற்றின் கண்கள். அவை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அதே சமயம் அவை அழகானவையும்கூட. அவை ஒருவகையான விடுதலையும்கூட. அந்தப் பையன் ரயில்களைப் பார்க்கிறான்; ரயில்களும் அவனைத் திருப்பிப் பார்க்கின்றன. அந்தப் பார்வையில் ஓர் ஆத்மார்த்தமான பிணைப்பு நிகழ்கிறது; ஒருவிதப் புரிதல் பிறக்கிறது. அவன் அதிகாரமற்றவன், அளப்பரியதும் கொடூரமானதுமான இந்த உலகத்தில் வெறும் எளிய மனிதன் மட்டுமே என்பதை ரயில்கள் அறியும். இருந்தும், அவை அவனை எடைபோடுவது இல்லை. அவை தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன; ஓடிக்கொண்டே இருக்கின்றன. எல்லாமே சுக்குநூறாக உடைந்து சிதறுவதுபோல் தோன்றும் தருணங்களிலும், வாழ்க்கை தன் போக்கில் இயங்கிக்கொண்டேதான் இருக்கும் என்பதை அவை அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.” ஹ்ரபாலின் நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. 


கார்லோவி லாஸ்னி ஐந்து தளங்கள் கொண்ட பெரிய நடன விடுதி. ஒரு காலத்தில் பெரிய பொதுக் குளியல் கூடமாக இருந்த கட்டிடம் தொன்னூறுகளில் நடனவிடுதியாக மாற்றி அமைத்தார்கள். நடனம் வல்டாவா நதி போன்றது எங்களின் ஆழ்மனம் என்று ஸ்டெஃபி சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் பால் வேலரியின் “நடத்தலும், நடனமும்” கட்டுரையைப் பற்றி ஸ்டெஃபியிடம் சொன்னேன். பால் வேலரியின் கட்டுரையைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். “அஸ்வமேதா” இதழில் அந்த மொழிபெயர்ப்பு வெளிவந்திருந்தது. பால் வேலரி அக்கட்டுரையில் நடத்தலை உரைநடைக்கும் நடனத்தை கவிதைக்கும் ஒப்பிட்டிருப்பார். நடனம் கவிதை மட்டுமல்ல முற்றுப்புள்ளியில்லாத பல பக்கங்களுக்கு நீளும் ஒற்றை வாக்கியம், சுழித்தோடும் நதியின் உயிராற்றல் என்பதும் எனக்கு அந்த இரவு தெரியவந்தது. 


இரண்டாம் தளத்தில் நாங்கள் நடனமாட ஆரம்பித்தபோது இரவு முதிர்ந்திருந்தது. ஆட்ட தளத்தின் மத்தியில் இருந்த உயர்ந்த மேடையில் அரை நிர்வாண பெண்கள் பாளம் பாளமாக இடைவெட்டிச் சென்ற ஒளிவெள்ளத்தில் உலோகக் கம்பம் ஒன்றைச் சுற்றி ஆடிக்கொண்ட்டிருந்தார்கள். நடனமாடுவதற்கு எந்தப் பயிற்சியும் தேவையற்றதாக இருந்தது. ஒரு உடலோடு இன்னொரு உடல் உரசாமல் ஆடமுடியாத அளவுக்குக் கூட்டம் நெருக்கி அடித்தது. எங்கும் வெறிக்கூச்சல் இசையை மூழ்கடிப்பதாக இருந்தது. தளத்தின் ஓரங்களில் இருந்த பெரிய தூண்களிலிருந்து ஒளிப் பாளங்கள் இசைக்கான மத்தளம் போல வெடித்து வெடித்து சிதறிக்கொண்டிருந்தது. காமமும் உன்மத்தமும் ஏறிக்கொண்டிருந்தன. எத்தனை நூறு உடல்களின் உயிராற்றல் அங்கே சங்கமித்துக்கொண்டிருந்தன என்று என்னிடம் கணக்கில்லை. ஸ்டெஃபி எனக்கு முன்னால் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொரு முறை சுழலும் போதும் அவளுடைய அவிழ்த்து விடப்பட்ட கூந்தல் என் முகத்தில் வருடிச்சென்றது. உடல்கள், யாருடையவை, எந்த தேசத்தினுடையவை, எந்த மொழி சார்ந்தவை,எந்த அடையாளங்களுடையவை என்ன வரலாறுகளுடையவை என்ற எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இணைந்தும், பிணைந்தும் விலகியும் உரசியும், ஆற்றலின் தூய வெளிப்பாடாக, உன்மத்தமாக, பெருங்களிப்பாக, வெறிக்கூச்சலாக, நனவற்றும் நனவுடனும், போதையுடனும் பிரக்ஞையுடனும், மயங்கியும் தெளிந்தும் ஒரே உயிரியாக பேதமற்று, கவித்துவ உச்சத்தின் முற்றுப்புள்ளியில்லாத  ஒரே வாக்கியமாக காலத்தை விஞ்சிய களிவெறி அரங்கேறிக்கொண்டிருந்தது. 


ஜேம்ஸ் ஜாய்ஸின் “யுலிசஸ்”   நாவலின் கடைசி அத்தியாயத்தில் மாலி ப்ளூமின் உதிரப்போக்குடன் கூடிய நனவோடை இவ்வுலக உடல் வாழ்வுக்கான் பெரும் ஆமோதிப்பாய் ஆமாம் ஆமாம் என கார்லோவி லாஸ்னியின் நடன அரங்கு என அப்படித்தான் நடந்தேறுகிறது. ஜாய்ஸின் பாதிப்பில் எழுதிய பொஹுமில் ஹ்ரபாலின் “வயதில் மூப்படைந்தவர்களுக்கான நடன பாடங்கள்” நாவலும் முற்றுப்புள்ளி இல்லாத ஒர்றை வாக்கியமாகத்தான் நீள்கிறது. உம்பர்ட்டோ எக்கோவும் லாஸ்லோ கிராஸ்னஹோர்காயும் கூட சொல்லின் கற்பிலிருந்து வாக்கியத்தின் ஒழுக்கமற்ற சுதந்திரத்திற்கு ஜாய்ஸிடமிருந்தே செல்கிறார்கள். ஆம் நடனம் என்பது உடலின் சுதந்திரம், கவிதை என்பது மொழியின் சுதந்திரம். 


“வயதில் மூப்படைந்தவர்களுக்கான நடன பாடங்கள்” நாவலில் பெயரற்ற கதைசொல்லி வெயிலாடிக்கொண்டிருக்கும் ஆறு பெண்களிடம் மூச்சுவிடாமல் பேசுகிறார். தன்னைக் காலணி தயாரிப்பவராகவும், மது தயாரிப்பவராகவும் தன்னை அறிவித்துக்கொள்ளும் கதைசொல்லி காலணிகளைத் தயாரிப்பதில் தனக்கிருந்த மந்திரக் கைகளைப் பேசுகிறார். அவரது பேச்சு பெண்களின் உள்ப்பாவாடைகளைத் தூக்கிப்பார்க்கும் பேரரசர்களின் அபத்தங்களை சொல்வதாக நீண்டு அதிகாரங்கள் அனைத்தையும் கேலிக்குரியதாக்கிவிடுகிறது.  


“உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ரயில்கள்” நாவலினால் ஹ்ரபாலுக்குக் கிடைத்த  பணத்தால் பிராக் நகருக்கு வெளியே கெர்ஸ்கோவில் ஒரு வீட்டை வாங்கினார். அங்கே அவரும் அவர் மனைவியும் ஏகப்பட்ட பூனைகளுடன் வாழ்ந்தனர்.   All my cats  என்ற ஹ்ரபாலின் சுயசரிதைக் குறிப்புகள் ஒவ்வொரு பூனையும் அவரிடம் வந்தபோது பூனைக்கும் அவருக்குமான உறவு என்னதாக மாறியது என்று “எனது எல்லாப் பூனைகளும்” நூல விவரிக்கிறது. பெர்றவனாக, நண்பனாக, பராமரிப்பாளனாக என்று பூனைகள் அவரிடம் பலவிதமான பொறுப்புகளைக் கோருகின்றன. பொறுப்புகள் அவரை எழுதவிடாமல் துன்புறுத்துகின்றன. அனப்புக்கும் பொறுப்புக்கும் செயலினைக்கும் இடையில் அவர் கிட்டத்தட்ட  பைத்தியமாகிறார். தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசிக்கிறார். 


பொஹுமில் ஹ்ரபால் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து போனார். சிலர் அவருடைய மரணத்தை தற்கொலை என்று சொல்கிறார்கள். சிலர் அவர் புறாக்களுக்கு தானியம் வைக்கும்போது தவறி விழுந்துவிட்டார் என்கிறார்கள்.    

 

ஸ்டெஃபி  ஹ்ராபாலின் இறுதிச் சடங்கைப் பற்றி, அவருடைய நண்பரும் இலக்கிய விமர்சகருமான ராட்கோ பிட்லிக் சொன்ன ஒரு கதையை எனக்குச் சொன்னாள். இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்தவர்கள்  Fascination  என்ற பழைய வால்ட்ஸ்  பாடலை இசைக்க விரும்பினர். அந்த நிகழ்விற்காக வரவழைக்கப்பட்ட ஜிப்ஸி இசைக் குழுவினர், தங்களுக்கு அந்தப் பாடல் நன்றாகத் தெரியும் என்று அனைவருக்கும் உறுதியளித்தனர். ஆனால், அது வெறும் ஆசையாக மட்டுமே இருந்தது என்பது பிறகுதான் தெரியவந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஹ்ராபாலியன்பாணியைச் சேர்ந்த ஜிப்ஸி இசைக் குழுவினர் அல்லவா! அதனால் அவர்கள் “Fascination" பாடலுக்குப் பதிலாக, "ஜிப்ஸியின் கண்ணீர்"  என்று அழைக்கப்படும் ஒரு சோகமான நாட்டுப்புறப் பாடலை இசைத்தனர்.


ஸ்டெஃபியும் நானும் கார்லோவி லாஸ்னியின் ஐந்தாவது தளத்தில் மெல்லிசையைக் கேட்டுக்கொண்டு அமைதியாக பிராக் நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். பிராக்கில் இருக்கும் நடனமாடும் இரட்டையர் கட்டிடத்தையும் காஃப்காவின் பிரம்மாண்ட சிலையும் தெரிகிறதா என்று தேடிப்பார்த்துக்கொண்டிருந்தோம்.


நானும் ஸ்டெஃபியும் அவளுடைய வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தபோது ஞாயிறு அதிகாலை மணி நான்கு அரையாக இருந்தது.