Thursday, July 2, 2026

தெய்வீகத் திருக்காட்சி எனும் நகைச்சுவை


மகா கவி தாந்தேயின் சமாதி இத்தாலியில் அவர் பிறந்த ஃப்ளாரன்ஸ் நகரில் இல்லை; அது ராவென்னா என்ற நகரில் இருக்கிறது. தாந்தே ப்ளாரன்ஸில் இருந்து நாடுகடத்தப்பட்டு வாழ்ந்தான். அவனுடைய மண்ணுடல் அடங்கிய  சிறிய சமாதியை ஏழை, எளியோர் உருவாக்கி பராமரித்தனர். அவன் சமாதியில்   , “பகல் மெலிந்தழிந்தது; அதற்காக மாலை மணி வருந்திப் புலம்பும் ஓசை அதோ தொலைவில் கேட்கிறது. அது மாலுமிகள் மனதில் ஆசையைப் பெருக்குகிறது; காலையில் விடை பெற்றுச் சென்றவரை நினைத்து காதல் மனம் உருகுகிறது. காதலின் பாதையில் செல்லும் புதிய பயணி இன்பச் சிலிர்ப்படைகிறான். அந்த நேரம் இதுதான்: அதோ அந்தி மணி அடிக்கிறது.” என்று எழுதியிருக்கிறது. 


தாந்தே நாடு நாடாக அலைந்தான்; காடுகளிலும், மலைகளிலும், கிராமங்களிலும் சுற்றினான். எங்கெல்லாம் அமைதியாக உட்கார்ந்து எழுத முடிகிறதோ அங்கெல்லாம் அமர்ந்து அவனது காவியமான “தெய்வீக நகைச்சுவை”யை  எழுதினான். மனிதர்களின் மண்ணுடல் வாழ்வை திவ்ய நகைச்சுவையாகத் தரிசிக்கும் பார்வை இத்தாலியர்களுக்கே உரியது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. பொக்காஷியோவின் ‘டெக்கமரான் கதைகளும்” நகைச்சுவைக் கதைகள்தானே.  


தாந்தேயைப் பற்றித் தன்னுடைய “The Open Work” என்ற கட்டுரை நூலில் எழுதும் உம்பர்ட்டோ எக்கோ தாந்தேயின் உலகை, அவருடைய உலகப் பார்வையை எல்லாம் இறுக்கமான ஒரு தெய்வீக ஒழுங்கின் கீழ் நடைபெறுபவை என வரையறுத்தார். அந்த தெய்வீக ஒழுங்கு மனிதக் கண்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறது என்பதுதான் எனக்கு விசேஷமாகப்படுவது.  தாந்தேயின் “தெய்வீக நகைச்சுவை” காவியத்தில் வரும் நரகம் (inferno) பகுதியைப் போலவேதான் “ரோஜாவின் பெயர்” நாவலின் சம்பவங்களை  எக்கோ ஒருங்கமைத்திருக்கிறார்; அதாவது ஏழு நாட்களில் மடாலயச் சடங்குகளின் நேரத்தில் நடைபெறும் சம்பவங்களாக நாவலின் அத்தியாயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன. தாந்தேயின் பயணம் இறுதி உண்மையை நோக்கி அவரது காவியத்தில் நகரும்போது, எக்கோவின் நாவலோ இறுதியிலும் ஓர் அங்கதத்தை நோக்கியே நகர்கிறது. “ரோஜாவின் பெயர்” நாவலில் மடாலயத்தின் அதன் அறிவுச் சுரங்கமான நூலகத்தின் சுழற்பாதைகளில் சுற்றித் துப்பறியும் வில்லியமிற்கு இறுதியில் நூலகம் எரிந்து போகும்போது தெரியவருவது தான் தேடியத் தெய்வீக திவ்ய ஒழுங்கு என்பது ஒரு மாயை என்பது மட்டுமே. தாந்தேயின் மூடிய இறுக்கமான காவிய அமைப்பை எடுத்து எக்கோ சிதறுண்ட பின் நவீனத்துவ யதார்த்தமாகத் தன் நாவலில் அதை மாற்றினாலும் அதன் இறுதி தரிசனம் நகைச்சுவையே.


தாந்தே தன்னுடைய காவியத்தை நகைச்சுவை என்று அழைக்க இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவருடைய காவியம் துயரத்திலிருந்து இன்பத்தை நோக்கிச் சென்றது. இரண்டு தாந்தே தன் காவியத்தைத் தன் சமகால பேச்சு மொழியில் எழுதினார். தெய்வீக உண்மைகள் திருச்சபையின் உயர் மொழியான லத்தீனில்தான் வெளிப்படமுடியும் என்ற மத்திய கால மத நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடு இது.


இத்தாலிக்குப் பயணம் செய்தபோது ஒரு முறை தாந்தேயின் சமாதியைப் போய் பார்த்திருக்கிறேன். அந்தச் சமாதியின் அந்தி மணியோசை கலகலவென நகைத்தது.