Thursday, June 11, 2026

அவமானத்தின் தருணங்கள்

அசோகமித்திரனின் கசந்து வழியும் கதைகளில் அவரது கதாபாத்திரங்கள் கடுமையான அவமானங்களுக்கு உள்ளாவார்கள். வறுமையின் காரணமாக அந்த அவமானங்கள் பல சமயங்களில் நடந்தேறும். வேறு பல சமயங்களில் அதிகாரத்திலுள்ளோர் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களை அவமானப்படுத்துவார்கள். வக்கற்றவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தவும் செய்வார்கள். கும்பல் சேர்ந்து தனி நபரை அவமானப்படுத்துவதாய் அசோகமித்திரன் கதை எழுதியிருக்கிறாரா,  என்று எனக்கு நினைவில்லை.

மாரி செல்வராஜின் படங்களில் மனதை உலுக்கும்  அவமானத்தின் தருணங்கள் என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதலாம்.  

காரணங்கள் ஏதுமில்லாமல் வெறும் பொறாமையின் பொருட்டே  வேறொருவரை அவமானப்படுத்துதல் மனித இயல்புகளில் ஒன்று.  

அரு.ராமநாதனின் ‘வீர பாண்டியன் மனைவி’ நாவலில் பாண்டியனின் இளைய மகனைக் கட்டி வைத்து விசாரிக்கும் போது அவன் சோழர் படைத் தலைவன் வாள்நிலை கண்டான் ஜனநாத கச்சிராயனின் முகத்தில் காறி உமிழ்வான். அதைப் பொறுமையாக வாங்கிக்கொள்ளும் ஜனநாதன் இது என் முகத்தில் உமிழப்பட்ட எச்சிலல்ல இந்த சோழ சாம்ராஜ்யத்தின் மேல் உமிழப்பட்ட எச்சில் என ஒரு உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்துவான். அந்த உணர்ச்சிகரமான பேச்சின் வீச்சுக்கு ஆட்படும் இன்னொரு தளபதி தன் வாளால் பாண்டியன் மகனின் தலையை ஒரே வீச்சில் துண்டித்துவிடுவான். பின்னால் ஜனநாதனிடம் எதற்காக அவனைக் கொல்லும்படித் தூண்டினீர்கள் என்று கேட்கும்போது அவன் அந்தப் பையனை சிறையிலடைத்து அநியாயத்துக்குத் துன்புறுத்துவார்கள் அவனுக்கு நேர்ந்த இந்த மரணம் ஒரு விடுதலையாகும் என்று சாதாரணமாகச் சொல்லுவான்.  பெரிய ராணுவத் தளபதிகளும் அரசியல் தலைவர்களும் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களை வன்மமாகவும் தங்கள் உள்ளார்ந்த வலுவை உண்டாக்குவதற்கான சந்தர்ப்பங்களாகவும் பயன்படுத்திக்கொள்வது ஒரு வகையான பாப்புலர் கதையாடல். அது பொதுப்புத்தியின் அறிவீனத்திற்குத் தீனி போடுவது. ஆனால் அதிலிருந்தும் சில படிப்பினைகளை சிலர் பெறலாம். 

ஜேன் ஆஸ்டனின் Pride and Prejudice நாவலில் எலிசெபத் பென்னெட்டுக்கு டார்சியின் உண்மையான நல்ல குணம் தெரியவரும்போது அவள் உள்ளார்ந்த அவமானத்தை அனுபவிப்பாள். அது சுய சிந்தனைப் புரிதல் நிரம்பிய கண்டுபிடிப்பின் கணங்களுக்கு அவளை இட்டுச் செல்லும். சார்ல்ஸ் டிக்கன்ஸின் ‘Great Expectations’ நாவலில் எஸ்டெல்லாவால், அவனுடைய கீழான சமூக அந்தஸ்தின் காரணமாகக்  குரூரமாக நிராகரிக்கப்படும் பிப்பின் வலுவான குணமும் அவன் தன்னை உயர்த்திக்கொள்ளப் போராடுவதும் அந்த நிராகரிப்பின் அவமானத்திலிருந்து எழுவதாக நாவல் விரியும். தாஸ்தாவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவலில் ஒருவனைத் தவழ்ந்து வந்து இந்த பணத்தை எடுத்துக்கொள் என்று சொல்லும்போது அவனுக்கு உயிர் போகிற அளவு அந்த பணத்தின் தேவை இருப்பினும் அவன் தவழ்ந்து செல்ல மறுத்துவிடுவான்.

தெரிவுகளற்று அவமானப்படும் சந்தர்ப்பங்கள் இலக்கியத்தில் ஏராளம். ஹார்ப்பர் லீயின் To kill a mocking bird நாவலில் டாம் ராபின்சனின் மேல் கற்பழிப்புக் குற்றம் சாட்டப்படும். டாம் கறுப்பன் என்பதால் ஆதாரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட டாம் தண்டிக்கப்படுவான். மார்கரெட் ஆட்வுட்டின் நாவல் ‘ Handmaid’s Tale’ இல் பணிப்பெண் தொடர்ந்து சம்பிராதயமான, சடங்கியல் சார்ந்த வன் உடலுறவுக்கு  உள்ளாவாள். விமோசனமே இருக்காது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 இல் அறை எண் 101 இல் சிந்தனைப் போலிஸினால் மூளைச்சலைவைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாகும் வின்ஸ்டன் ஸ்மித்  ஒரு யதேச்சதிகார ஆட்சியின் கீழ் அடையாளம் இழந்து அவமானத்தால் நிர்மூலமாகிவிடுவான்.  நாதானியல் ஹத்தோர்னின் The scarlet letter நாவலில் ஹெஸ்டர் ப்ரின் ஒரு மேடையில் நகரச்சதுக்கத்தில் A என்ற எழுத்தைத் தாங்கியபடி நிற்க வைக்கப்படுவாள். ஹெஸ்டர் பிரின் செய்த குற்றம் கள்ளக் காதலில் ஈடுபட்டது. 

காஃப்காவின் உருமாற்றம் கதையில் விழித்தெழுகையில் பூச்சியாய் மாறிவிட்ட கிரெகர் சாம்சா தனிமைப்படுத்துதலின் அவமானத்தைத் தொடர்ந்து உணர்கிறான். அது நவீன சமகால சமூகத்தில் ஒவ்வொருவரும் உணரும் அந்நியமாதலின் அருவ அவமானம். 

ஷேக்ஸ்பியரின் king Lear இல் கந்தாலாடையில் மனம் பிறழ்ந்து மனதிற்குள் பழைய வசனம் ‘how much do you love me?’ இப்போது அவமானத்தின் குரலாய் ஒலிக்க லியர் அரசன் அலைவுறுகையில் குளூசெஸ்டர் பிரபு அவனைப் பார்த்து சொல்லுவான் பைத்தியமாய் இருக்கும்போதும் லியர் ஒவ்வொரு அங்குலமும் அரசன் என்று.

எனக்கு அவமானப்படுத்துபவர்களை ஜனநாதனைப் போலத் தலையைக் கொய்துவிடுவதுதான் பிடிக்கும்; ஆனால் வாளினால் அல்ல காருண்யத்தினால். பௌத்தம் அவமானத்திற்கு உள்ளாவதை துயருறும் வகைகளில் ஒன்றாக வகைப்படுத்துகிறது; மானத்தை இழந்த மற்றவர்களின் சொற்களிலும் துயரைக் கண்டுகொள்கிறது.  துயருறுதல் உயர் கவித்துவ பிரக்ஞைக்கு இட்டுச்செல்கிறது. அப்போது காருண்யம் நம் விழிகளைப் பற்றுகிறது.

----