Wednesday, November 23, 2022

இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி: கவிதை, முறையீடு, தியானம்

இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி: கவிதை, முறையீடு, தியானம் -- தத்துவத்தில் மார்டின் புயுபரின் ‘I and Thou’ என்ற சிறிய ஆனால் முக்கியமான நூலில் கட்டமைக்கப்பட்ட தன்னிலை-பிறன்மை பிரச்சினைப்பாடு (problematic) தத்துவம் என்று மட்டுமில்லாமல் மானிடவியல், இறையியல், சமூக அறிவியல், அரசியல், இலக்கியம், இலக்கிய கோட்பாடு ஆகிய துறைகளில் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியுள்ளது. புயுபரின் பிரச்சினைப்பாடு ‘நீ’ என்பதினை அடுத்த ஆள் என்று மட்டுமில்லாமல், கடவுள், இயற்கை என தான் என் உணரப்பட்டது தவிர்த்த அனைத்திற்குமானதாக விஸ்தரித்தது. அதாவது ‘நீ’ எனப்படுவது ‘பிறன்மை’ என விரிவு கண்டது. தன்னிலைக்கும் அல்லது தன்னடையாளத்திற்கும் பிறன்மைக்கும் உள்ள உறவின் தன்மையே அறவியலின் நம் சமகால தத்துவத்தின் அடிப்படையென மாறியுள்ளது. புயுபரின் நேரடியான தாக்கத்திற்கு உள்ளான சார்த்தர் இருத்தலியல் சூழ்நிலையின் இறுக்கத்திலும் பரிதவிப்பிலும் Other is hell என்ற தத்துவ சறுக்கலுக்கு ஆட்பட்டதும் அதனால் அவருக்கும் காம்யுவுக்கும் இடையில் மோதல் முற்றியதும் பிரசித்தமான ஒன்றே. சார்த்தர் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொண்டதாக அறிவித்தபின்பும், தன் சிந்தனை சறுக்கலின் வெளிப்பாடக அமைந்துவிட்ட No Exit நாடகத்தினை நிராகரித்த பின்னரும் கூட சார்த்தரின் சறுக்கல் இன்றுவரை அவருடைய தத்துவத்தில் படிந்த அகலாக்கறையாகவே கருதப்படுகிறது. தவிர, எழுதப்பட்ட அத்தனை நவீன கவிதைகளையுமே தான் - பிறன்மை என்பவனவற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு கூட பிரசித்தம். மார்டின் புயுபரின் வாழ்க்கை வராலாற்றை Martin Buber: The Life of Dialogue என்ற புத்தகமாக எழுதிய மௌரிஸ் ஃப்ரீட்மன் புயுபரின் சிந்தனை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் சிந்தனையிலும், பண்பாட்டிலும் எவ்வளவு தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் விவரித்துள்ளார். பல மதங்களிடை உரையாடல்கள், இடைசமய நம்பிக்கைகள், மனித உரிமை போராட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியன தன்னிலையயும் தன் அடையாளத்தையும் விட பிறன்மைக்கும், பிற அடையாளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே அறம் என்ற நிலைப்பாட்டினை பியுபரின் சிந்தனையிலிருந்தே பெற்றுகொண்டன என ஃபிரீட்மன் விவரிக்கிறார். பால் டில்லிச், ரெய்ன்ஹோல்ட் நீபுர் ஆகிய இறையியல் சிந்தனையாளர்களையும் பியுபரின் சிந்தனைக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதைச் சொல்கிறார்கள். மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 இல் எழுதிய பிர்மிங்ஹாம் ஜெயிலிலிருந்து ஒரு கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டுகிறார். மதங்களின் இறுதி விதிகளை உதறி இங்கே இப்போது நடக்கும் மானுட நிகழ்வுகளினூடே நடக்கும் உரையாடல்களை செழுமைப்படுத்துவதன் மூலமே மனித குலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும் என்று வாதிட்ட பியுபர் தினசரி வாழ்க்கையின் உரையாடல்கள், தான் -மற்றது என்ற தன்னிலை பொருளுலகு உரையாடலாகவும் தான் -மற்றவர் என்ற தான்- கடவுள் உள்ளிட்ட மற்ற மனிதர்களின் உலகு என்ற உரையாடலாகவும் பரிணமிக்கிறது என்று விளக்கினார். மார்ட்டின் புயுபரின் நூலை தன்னுடைய தம்மபதம் நூலில் குறிப்பிடும் ஓஷோ உரையாடலின் இருமையை துவதைத்தை கிறித்தவம், இஸ்லாம் யூதம் ஆகியவை பிரார்த்தனை மதங்களாக வலியுறுத்துவதால்தான் புயுபரின் நூல் மேற்குலகில் பிரசித்திபெந்ற்றது என்கிறார். இது ஓஷோவின் கவனிக்கத்தக்க அவதானங்களில் ஒன்று. இதற்கு நேர் எதிரானதாக பௌத்தத்தை விளக்கும் ஓஷோ பௌத்தம் ஒரு பிரார்த்த்னை மதமன்று அது தியான மதம். பிரார்த்தனை ஒரு உரையாடல், தியானம் மௌனம். இதுதான் வேறுபாடு என்று எழுதுகிறார். பிரார்த்தனை உண்மையோ உண்மையில்லையோ யாரிடமோ முறையிடுவது தியானத்தில் முறையீடே கிடையாது ஒருவர் மௌனத்தில் வீழ்ந்துவிடுவது அது என்றும் எழுதுகிறார். நான் இதுவரை எழுதியிருக்கும் கவிதைகளை மீண்டும் வாசிக்கும்போது - இதற்கு நண்பர் ஜேபியின் என் கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் கூத்துப்பட்டறையில் என் கவிதா நாடகங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்டதும் இரண்டு முக்கிய காரணங்கள். இவை இரண்டும் நடந்திராவிட்டால் நான் ஏன் என் கவிதைகளை மீண்டும் அணுக்கமாக வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகப் போகிறேன்?- என் கவிதைகள் உரையாடல்களில் முறையீடுகளில், பிரார்த்தனைகளில் கட்டப்பட்டவை என்று ஒரு அவதானம் எனக்குத் தோன்றுகிறது. முறையீடுகளில் இருந்து தியானம் நோக்கி நகர்வதே என் கவிதைகளின் அடுத்த கட்ட பயணமாக இருக்கும் என்றும் எனக்குத் தோன்றுகிறது. இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி. எப்போது நீ இந்த நாற்காலியின் வெறுமையைக் காண முடிகிறதோ, இந்த இருப்பின் வெறுமையைக் காணமுடிகிறதோ அப்போதுதான் நீ இருந்தும் இல்லாமல் போகிறாய். அகங்காரத்தின் ஏழ்மை சிறிதும் பாதிக்காதவனாக ஷுபூதி இருந்தான். அதனாலேயே ஆயிரக்கணக்கான சீடர்களில் ஷுபூதியை தன்னுடைய தனிப்பட்ட கவனத்திற்கு உரியவனாக புத்தர் கருதினார். ஷுபூதியின் தியானம் இன்மை குறித்ததாக இருந்தது. இன்மையை ஆதாரமாக அவன் அகம் கண்டு விழித்தபோதெல்லாம் பூக்கள் சொரிந்தன. அகங்காரிகளின் கண்களுக்கு அந்த பூக்கள் புலப்படுவதில்லை.

No comments: