Saturday, April 19, 2025

எம்.டி. முத்துக்குமாரசாமியின் "ரோஜாமொக்குக் கவிதைகள்” பற்றி கவிஞர் மா.காளிதாஸ்

 





"ரோஜாமொக்குக் கவிதைகள்” எம்.டி. முத்துக்குமாரசாமி


முன்னட்டை ஓவியம்: புல்லாங்குழல் வாசிப்பவர் -  கே. முரளீதரன் 


உள்பக்க கோட்டுச்சித்திரங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அட்டை வடிவமைப்பு: ஆர்.சி.மதிராஜ் பக்கங்கள் 260 விலை ரூ. 380 தமிழ்வெளி 


தொடர்புக்கு: +91 9094005600

-----


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.


- குறள் எண்: 645


எங்கு பார்த்தாலும் சொற்கள் தான். மௌனம் கூட, நன்றாகக் கெட்டிப்படுத்தப்பட்டுத் தூக்கி வீசப்பட்ட சொற்களின் கூழ் என்றே தோன்றுகிறது. கறித்துண்டைப் போல நம் மன இடுக்கில் சிக்கிக் கொண்ட சொற்களைத் துழாவித் துழாவி எப்படியாவது வெளியே கொண்டுவந்து விடுகிறோம்.


சொற்கள் நிரம்பிய நம் மனக்காடு, எப்போதும் பசுமையாக இருக்கிறது. அங்கே சிறு ஒலியும் பேரிரைச்சலும் சம விகிதத்தில் எதிரொலிக்கின்றன. சில சமயம் சொற்கள் சருகுகளைப் போல உதிர்கின்றன. மிக அரிதாக, சொற்கள் தன்னைச் சுற்றிக் கூடமைத்துக் கொண்டு, கூட்டுப்புழுவைப் போலத் தொங்கி, அழகான வண்ணத்துப்பூச்சியாக உருமாறி நம் மனவெளியெங்கும் பறக்கின்றன.


பசியோடு நம்மைச் சுற்றிச்சுற்றியே வரும் மனப்புறாவுக்கு, தானியங்களைப் போலச் சில சொற்களைத் தூவுகிறோம். ஆனால் வழக்கம் போல, அதன் குனுகலைச் செவிமடுக்கத் தவறுகிறோம். ஒரே சமயத்தில் நம் மனப்புறா எல்லாத் தானியங்களையும் தின்றுவிடுவதில்லை. ஆனால் அது தானியங்களைக் கொறிக்கும் அழகை எட்ட நின்று யாராவது ரசித்திருக்கிறோமா?


மிக அருகில் நின்று, ஒவ்வொரு சொற்களையும் தானியங்களாகத் தூவிவிட்டதோடு மட்டுமின்றி, மனப்புறா கொறிக்கும் அழகையும் படம்பிடித்துத் தந்துள்ளார், தனது ரோஜாமொக்குக் கவிதைகள் வழி கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமி.


சொற்கள் அவன் வாயில்


சிறு பாம்புகளென நெளிகின்றன


காதலுக்குச் சொற்களில்லை


நெளிவுகள் மாத்திரமே இருக்கின்றன


அவை, ஒருவேளை,


அவ்வப்போது கொத்தக்கூடும்


காதலன் சொல்லப்படாத சொற்களின் அகராதி


தன்னைத் தானே எரித்துக்கொள்ளும் நூலகம்


அவள் அவனுடைய சாம்பல் சொல்லசைகளை


ஜாடிகளில் சேகரிக்கிறாள்


சில ஜாடிகளை


ஒருவேளை என்றும்


என்றுமே இல்லை என்றும்


இப்படி இருக்குமானால் என்றும் பெயரிட்டு


வில்லைகளை ஒட்டுகிறாள்


அவன் அந்த ஜாடிகளில் ஒன்றை


முழுமையாக விழுங்கிவிடுகிறான்


அது அவன் தொண்டையை


இரவு போல அடைத்துக் கொள்கிறது


அவன் சொல்லற்ற ஒலியை எழுப்புவதை


அவள் கேட்கிறாள்


அது அவன் குரலில்


கசந்து வழியும் மொழியாய் இருக்கிறது.


இக்கவிதையில் ‘சொல்’ படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இதுவரை சொல்லப்படாதது. வெறுமனே காதல் கவிதையாக மட்டும் வாசித்து இதை நகர்ந்துவிட முடியாது. ‘தன்னைத் தானே எரித்துக்கொள்ளும் நூலகம்’ என்ற வரியைப் படிக்கும் போது, நம்மை அறியாமலே ‘யாழ் நூலகம்’ எரிக்கப்பட்ட காட்சி கண்முன் வருகிறது. ஒரு நூலகம் எரிந்து போதல் என்பது, ஒரு மாபெரும் வரலாற்றுச் சிதைவு இல்லையா?


‘சாம்பல் சொல்லசைகள்’ என்ற வார்த்தையின் கனத்தை மிகச் சரியாக உள்வாங்க வேண்டும். சொல்லப்பட்ட சொல் எவ்வளவு கொடூரம் மிக்கதாக இருந்தால், எதிராளியின் மனத்தைச் சுட்டுச் சாம்பலாக்கக் கூடியதாக இருக்கும்? அந்தச் சொற்களை அசைபோடுதல், ஒருவேளைக்கானது மட்டுமா? அதன் பொருள் இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா என்ற யூகித்தலில் ஏற்படும் மன உளைச்சல் தாங்காவொண்ணாததல்லவா? மனதுக்குள் சேகரமான கடுஞ்சொற்களை முடிந்தமட்டும் சமாதானப்படுத்தி அழிக்க முயலும் எத்தனத்தை,


அவன் அந்த ஜாடிகளில் ஒன்றை


முழுமையாக விழுங்கிவிடுகிறான்


அது அவன் தொண்டையை


இரவு போல அடைத்துக் கொள்கிறது


என்று காட்சிப்படுத்தும் போது வெளிப்படும் ஆதிக்க மனப்பான்மை ஒருபக்கம் இருந்தாலும், அவனே முழுங்க முயன்றாலும் கூட, அது அவன் தொண்டையில் வெளிச்சமற்ற ‘இரவு போல’ அடர்த்தியாக ‘அடைத்துக் கொள்கிறது’ என்பது இரு மனங்களுக்கு இடையிலான உணர்வின் வெளிப்பாடாக மட்டுமின்றி, கவிஞரே சொல்வது போல், ‘கசந்து வழியும் மொழி’யாகவும் இருக்கிறது தானே?


சொல் நீரில் எழும்


நீரின் நினைவைக் காற்று ஏந்தும்


காற்று ஏந்துவதை வான் சிந்தும்


வான் சிந்தும் சொல்


இவ்வாறாகவே அகம் திரும்பும்.


என இன்னொரு கவிதையில் வரும் ‘சொல்’லை, எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கவிஞரே கற்றுத் தருகிறார்.


இங்கே நீர் என்பது உவகை அல்லது உறுத்தலால் ஏற்படும் கண்ணீர். ஒரு கட்டத்துக்கு மேல் அதுமாதிரியான சொற்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்து, காற்றில் உலர்ந்துவிடும். ஆனால் மேகத்திரள் போல எப்போது வேண்டுமானாலும் அந்தச் சொல்லின் தீவிரத்தை நினைக்கும் போது, மீண்டும் பொழியத் தயாராக இருக்கும். இவ்வாறாக அந்தச் சொல் ஒருபோதும் மடியாமல் உள்ளுக்குள் உழன்று கொண்டே இருக்கும் என்பது தானே நிதர்சனம்?


‘காதறுந்த மதியம்’ கவிதையின் ஊடே வரும்,


-------------------------------


-------------------------------


காதறுந்த மதியங்களைத்


தனக்கென்று குடைகள் ஏதுமில்லாத


குடை ரிப்பேர்காரர் பழுது பார்க்கிறார்.


சொற்களின் முதுகுகளை இழந்தவராக


எந்தச்சொல் எந்தக் குடையை விரிக்கும்


எந்தச்சொல் எந்தக் குடையை மடக்கும்


-----------------------------------


-----------------------------------.


என்ற வரிகளும் கவனம் ஈர்ப்பவை. இங்கே ‘சொல்’லை வாக்குறுதியாகவும், ‘குடை’யை அரசாகவும், குடை ‘பழுது பார்ப்பவனை’ வாக்காளானகவும் பொருத்திப் பார்க்கும் போது, கவிதையின் தளமே முற்றிலும் மாறிவிடுகிறது.


ஒரு கவிதைக்குள், சிறுகதைக்குள், நாவலுக்குள், பத்திக்குள் ஆங்காங்கே பொதிந்து கிடக்கும் சில சொற்களை அதன் முன்னும் பின்னுமாக நகர்த்திக் கூட அல்லது அந்த இடத்தை மட்டும் கூடத் தனித்துப் பொருள் கொள்ளலாம் என்பதற்கு இக்கவிதை மிகச் சிறந்த உதாரணமாகப்படுகிறது.


‘சப்போட்டாவின் கறுப்பு விதைகள்’ கவிதையின் ஊடே வரும் இந்த வரிகளையும் வாசித்துப் பார்ப்போம்:


--------------------------------------


---------------------------------------


உங்களுக்குத் தெரியுமா


சொல்ல முடியாததைச் சொல்வதற்கு


மழைக்கரத்தின் பூமி தொடா


நிராசை அவசியமென்று.


அவரையும் இவரையும் உவரையும் போல


நான் இக்கு வைத்துப் பேசுவதில்லை


---------------------------------------


---------------------------------------


அந்தப் பெண் கூடக் கேட்டார்


மிஸ்டர் சோ அண்ட் சோ


உங்கள் முற்றத்தைத் தவிர


உங்களுக்கு என்ன தெரியும்?


அப்போது அவர் தோல் சீவிய


கனிந்த சப்போட்டா பழத்தைக்


கடித்துச் சாப்பிட்டவாறே


அதன் பளபளக்கும் கறுப்பு விதைகளை


அவரெதிரிலிருந்த சாம்பல் கிண்ணத்தில்


அடுக்கிக் கொண்டிருந்தார்


அதிலொரு விதை


என்னைப் பின்தொடரும்


நாயின் கண் போலவே இருந்தது என


நான் சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.


இப்படிச் சொல்ல நினைத்ததைச்


சொல்லாமல் விட்டுவிடுவதால் தான்


என் பெயர்


எல்லா இடங்களிலும் விட்டுப் போய்விடும்.


அதனால் எனக்குக் கவலை ஒன்றுமில்லை


அடைமழை பெய்யாமல்


அடி மன ஆசை சொல்லாகாதது தானே?


------------------------------------


------------------------------------.


இக்கவிதையில் சிதறிக் கிடக்கும் ‘சொற்கள்’ கிளர்த்தும் உணர்வுகள் எண்ணிலாடங்காதவை.


‘சொல்ல முடியாததைச் சொல்ல முயற்சித்தல்’, ஒவ்வொரு சொல்லிலும் ஒரு ‘க்’ வைத்துப் பேசுதல், தன் வீட்டுக்கு வெளியே என்ன மாதிரியான நகர்மய உலகம் பரந்து கிடக்கிறது என்கிற சிந்தனை துளியுமின்றித் தனக்குள் பேசிக் கொண்டிருத்தல், சொல்ல நினைத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டுப் பின்னர் அதற்காகத் தவித்தல், ஒரு அடைமழை பெய்யுமளவிற்குச் சொற்களை மேகவெடிப்பு போலப் பொழியக் காத்திருத்தல் என எவ்வளவு சொல்கிறது கவிதை!


இந்த உலகில் புதிதாகத் தோன்றும் ஓர் உயிர், இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்கிறது? உயிர் தான் என்றில்லை, எந்தவொரு கருத்தும் தனக்கான இடம் அல்லது முக்கியத்துவத்தைத் தக்க வைப்பதில் எப்படி முனைப்புக் காட்டுகின்றன? இந்த உலகத்தின் நல்லது கெட்டதுகளுக்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் சூட்சுமத்தை எப்படிக் கற்றுக் கொள்கிறது?


எல்லாம் புதியதாகத் தோன்றியவை தானே? பழையதிலிருந்து தோன்றினாலும் அதுவும் கூடப் புதியது தானே? புதியனவற்றை ஏற்பதில் இந்த உலகம் ஏன் முரண்டு பிடிக்கிறது? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பரந்த மனம் இல்லாமல் போவதற்குப் புதியன பற்றிய கற்பிதங்களும், அதனை மதிப்பிழக்கச் செய்வதில் காட்டும் கூடுதல் அக்கறையும் ஒரு காரணமென்றால், அது மிகையில்லை தானே?


கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இந்தக் கவிதை மேற்கண்ட கேள்விகளை என்னுள் எழுப்புவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை:


ரோஜாமொக்கு தன் இதழ்களை இறுக்கி


மூச்சுத் திணறத்


தன் பிறப்பைத்


தானே நிகழ்த்தத் துணிகிறது


காலத்துக்குப் பொறுமையிருப்பதில்லை


பூமி தாகத்துக்கு நீர் அளிப்பதில்லை


ஆகாயம் எதையும் கவனிக்கும் தூரத்திலில்லை


பெருவெடிப்பாய்


ரோஜாமொக்கு இதழ் அவிழ்க்கையில்


அதைச் சுற்றி


அழுக்கும் தூசும் படர்ந்திருக்கிறது


வெடித்து அவிழ்ந்ததன் இலக்கு அறியாமல்


திகைத்திருக்கிறது ரோஜாமொக்கு.


சினம், அமைதி, புரட்சி என ஒடுக்கி வைக்கப்படுகிற யாதொன்றும் கண்டிப்பாகப் ‘பெருவெடிப்பாய்’ வெளிப்பட்டே தீரும். அங்கே ஒரு புகைமண்டலம் எழும்; ஓர் அசுத்தம் முழுவதுமாக நீக்கப்படும்; ஓர் ஒடுக்குமுறை முழுவதுமாகத் துடைத்து எறியப்படும். அங்கே ஒரு புதிய ஆரோக்கியமான மனம் மற்றும் மணம் கமழும் சூழல் உருவாகும் என்பதன் உள்ளர்த்தம் தொனிக்கிறது கவிதையில்.


புதிய ஒவ்வொன்றின் மீதான எதிர்பார்ப்பும் எவ்வாறு மழுங்கடிக்கப்படுகிறது, அதையும் மீறித் தன் இருப்பை நிலைப்படுத்துவதில் உள்ள நியாயத்தை முன்வைக்க ஒவ்வொரு புதியதும் எவ்வாறு போராடுகிறது, போராட்ட காலத்தைச் சந்திக்க விரும்பாதவற்றின் மீது இவ்வுலகு எம்மாதிரியான எதிர்வினையாற்றும் என்பதை,


ரோஜாமொக்கு வெறுமைக்குத்


தன்னை ஒப்புக் கொடுக்கிறது


தான் கேட்க விரும்பும் கேள்வியைக் கேட்காமல்


அதன் மௌனம் இப்போது


இதழ் இதழாய்த் தன் நம்பிக்கையை


உதிர்ப்பதில் இருக்கிறது


காற்றில் உதிர,


பூமி முகம் திருப்பிக் கொள்ள


ஆகாயம் மாற்றமற்று இருக்கிறது,


நல்லது.


அதன் ஒற்றை இதழ் மெதுவாய் உதிர்கையில்


ஒரு கனவு மறக்கப்படுகிறது


மறக்கப்பட்ட கனவு யாருடையதென்று


பல சம்சயங்கள், பல அனுமானங்கள்


தோட்டத்தினுடையது கனவு எனச் சிலரும்


பூமியுடையது எனப் பலரும் வாதிடுவர்.


நிழல்களும் மௌனங்களும் மட்டுமே


ரோஜாமொக்கின் வலிகளுக்குச்


சொந்தம் கொண்டாடும்.


முழுவதும் குறியீடுகளால் ஆன இக்கவிதை, கனவு, தோட்டம், பூமி, ஆகாயம் என அதைச் சுற்றியுள்ளவற்றை மையப்படுத்துவதன் மூலம், ஒரு மொக்கு மலராக மாற்றம் பெற்றபின், காதலியின் தலைக்குச் செல்லும் முன் அது சந்திக்கும் இன்னல்கள் என்ன? பூஜையறைக்கா, கல்யாண மாலைக்கா, அட்சதையுடன் கலக்கப்பட்டு ஆசீர்வாதத்திற்கா? பிணத்தின் தோளுக்கா, அரசியல்வாதியின் தோளுக்கா அல்லது எவராலும் கண்டுகொள்ளப்படாமல் உதிர்ந்துவிடுமா?


அதன் நிறத்தால் ஈர்க்கப்படுமா? வெறுக்கப்படுமா? அதன் மகரந்தம் இன்னொரு மலருக்கு எடுத்துச் செல்லப்படுமா? அந்த ரோஜாமொக்கு, அச்செடியின் முதலா, இறுதியா? ரோஜாமொக்கை மனித வாழ்வோடு ஒப்பிட்டு நோக்கும்போது, சாதி, இன, மொழி, அறிவு ரீதியாக இங்கு நிகழும் ஒடுக்குமுறைகள் அல்லது ஏற்றத்தாழ்வுகளும் இயல்பாகப் பொருந்திப் போகிறது தானே?


சின்னஞ்சிறிய கவிதைகளில் ஜென் தத்துவங்கள் மிளிர்கின்றன. இருத்தல், இன்மை, பேரமைதி, இரைச்சல், புறவுலகு அகவுலகில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எனப் பல்வேறு சிக்கல்களையும் சிக்குண்ட நூல்கண்டு போல நம் கையில் கொடுத்து, நம்மை அதன் சிக்கல்களை விடுவித்துத் தரக்கோரி மன்றாடுகின்றன. அந்த மன்றாட்டு வெகு சுவாரஸ்யமானது. நம் வாழ்வின் ஒவ்வொரு நாளின் சுயத்தையும் நம்மைக் கொண்டே தோலுரிப்பது.


கண்ணாடி தரையில் துப்புகிறது


என் முகத்தின் துண்டுகளை


நான் எதையும்


பொறுக்கிக் கொள்வதில்லை.


..


நான் என் குரலை


உற்றுக் கேட்கிறேன்


அது வேறு ஏதோவொரு


பிம்பத்தின் கதையைச்


சொல்லிக் கொண்டிருக்கிறது.


..


வெற்று மேலங்கி காற்றுக்கு ஆடுகிறது


அதற்கு என் அளவு


ஆனால் அது


என் உடலை வேண்டுவதில்லை.


..


நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன்


என் முதுகுக்குப் பின்னால்


அது தன்னைத் தானே பூட்டிக்கொள்கிறது


கதவில் சாவி கண் சிமிட்டுகிறது.


..


நான் ஆற்றின் கரையிலிருந்து


என் பெயரைக் கூப்பிடுகிறேன்


அது மறுகரையிலிருந்து எதிரொலிக்கிறது


ஆனால் கடந்து வர மறுக்கிறது.


ஒவ்வொரு கவிதைக்குள்ளும் அத்தனை பொருள்கள்! ‘நான்’ உடைபட்டுவிட்டால் இங்கு எல்லாமே சிதறி ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். வேறுபாடுகள், மனக்கசப்புகள், குரோதங்கள், வெற்று ஆரவாரங்கள், புகழ் மயக்கங்கள், பாவ புண்ணியம் குறித்த நிலைப்பாடுகள், வெற்றி-தோல்விகள் இவை எல்லாவற்றுக்கும் நாண், ‘நான்’ தான். இதிலிருந்து விடுபட்டு விட்டால் எல்லாமே சுபம் தான், சுகம் தான். ஆனால் சாதாரண மனித வாழ்வுக்கு அது அவ்வளவு எளிதா என்ன?



கதவு திறந்து தான் இருக்கிறது


நீ தான்


என்றுமே நுழையப் போவதில்லை.


இங்கே கதவெனச் சுட்டப்படுவது எது? நுழைதல் என்பது உள்நுழைதலா? வெளியேறுதலா? நீ என்பது தன்மையா? முன்னிலையா? கதவு ஏன் திறந்தே இருக்கிறது? உன் நுழைவை ஏன் எதிர்பார்க்கிறது?


உறக்கத்தில்


நீ ஒரு கரிய நீரோட்டத்தில்


மிதக்கும் இலையாகிறாய்.


விழிப்பு நிலையில், நாம் என்னவாக நம்மைக் கருதிக் கொள்கிறோம்? பிறரை என்னவாக நாம் மதிக்கிறோம்? உறக்கம் நமக்கு எதிலிருந்து விடுதலை தருகிறது? ஒரு நீரோட்டத்தில் மிதக்கும் இலையாக நாம் உருமாறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம் உறக்கம் வற்றாத ஒரு தொடர் நீரோட்டமாக அமைவது என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை? அந்தக் கொடுப்பினைக்காகத் தானே சிலபோது சில இரவுகளில் நாம் கொட்டக் கொட்ட விழித்திருக்கிறோம்? நம்மைப் போலவே நம்மைப் பின்தொடர்ந்தும் சில இலைகள் மிதந்துவருமெனவும் நம்புகிறோம் தானே?


ஓர் இளம் கொடி, தன்னைத் தன் வாழ்வை நிலைநிறுத்த ஒரு பிடிப்பைத் தேடுகிறது. அது வேலியா, முள்ளா, இன்னொன்றின் தண்டா எது பற்றிய அக்கறையும் அதற்கு இல்லை. அதன் தற்போதைய தேவை படர்தல் ஒன்றே. சுருள்சுருளாக எளிதில் பற்றிக் கொண்டும் விடுகிறது, படர்ந்தும் விடுகிறது.


தன் படர்தல் நிலையானது என அது நம்புகிறது. அதன் நம்பிக்கை வீண்போகாதபடி, பூ பூத்து, காய்த்துத் தொங்கவும் செய்கிறது. அது எத்தனை நாள் நீடிக்குமென்று அதற்குத் தெரியவில்லை. அதற்கு மண்ணின், காற்றின் ஈரப்பதம் பற்றி எந்தக் கவலையும் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகமாகும் போது, தன் நுனி கருகும் போது முதல்முறையாக, அது ‘பற்றறுத்தல்’ குறித்து யோசிக்கிறது.


இந்தப் ‘பற்றறுத்தல்’ நிலை, மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பால் பேதமின்றி ஒருசிறு கணமேனும் மின்னலெனத் தோன்றி மறையத் தான் செய்கிறது. அதுவொரு தொடர் நிகழ்வாகும் போது தான், இரண்டுவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒன்று துறவுநிலை நோக்கி நகர்தல், இன்னொன்று தற்கொலைக்கு முயலுதல்.


ஒருவிதத்தில் சொல்லப்போனால், துறவுநிலை கூட ஒரு தற்கொலை தான். ‘தான்’ என்பதிலிருந்து விடுபடுதல், தன்னை மறத்தல், தனக்கென்று எதுவும் இல்லாதிருத்தல், தன்னை ஒரு தூசியென உணர்தல், பேரமைதியில் மூழ்குதல், எந்த இரைச்சலையும் உள்வாங்காதிருத்தல் இது தான் துறவு எனில், இதுதான் தற்கொலைக்கு முன்பான மனநிலையும்.


இங்கே கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமி அடையாளப்படுத்தும் ‘துறவுநிலை’ பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. நடப்புலகை உருட்டி அல்லது ஒன்றின் மீது குறிபார்த்து மோதச் செய்யும் கோலிக்குண்டைப் போலச் சித்தரிக்கும் விதம் பேரழகு.


துறவியின் யோக தண்டம்


இரண்டு ஆகாயங்களுக்கிடையே நீண்டிருக்கிறது


வேர்கள் மறந்து, வறண்டு, எடையற்று


முதிர்ந்த ஒரு கையிலிருந்து


இன்னொரு இளம் கைகளுக்கு


ஓர் இரகசியம் போல மாற்றிவிடப்படுகிறது.


ஒரு காலத்தில்


அதற்குப் பூமியின் துடிப்பு தெரியும்,


இப்போது அதன் தண்டு


வெற்றுக்குழலாய் இருக்கிறது.


அது பேசும்போது


யாரும் அதைக் கேட்பதில்லை.


அது சிதைந்துவிட்ட கதையொன்றின்


கடைசித் துண்டு.


காற்றாலும் தூசாலும் செதுக்கப்பட்டு


அது யாரேனும் ஒருவர்


தன் பெயரை நினைவுகூரக் காத்திருக்கிறது.


என்கிறார் ‘கிளையின் மௌனம்’ என்ற தலைப்பிலான கவிதையில். இக்கவிதையை வரிக்கு வரிச் சிலாகிக்கலாம்.


எல்லாக் கிளைகளுக்கும் ‘யோக தண்டம்’ ஆகிற சிறப்பு வாய்க்குமா? இதிலேயே ‘யோக தண்டமாக’ வாய்ப்பற்ற கிளைகள், தங்கள் நிலையறிந்து மௌனம் ஆகிவிடுகின்றன. இந்த வெளியே ஓர் அந்தரம் தானே? எனில், யோக தண்டம் இரண்டு ஆகாயங்களுக்கிடையே நீண்டிருப்பது தானே முறை?


எல்லாம் கடந்தது தான் துறவுநிலை. அந்தத் துறவுநிலையையும் இன்னொரு இளம் கைக்குக் கடத்திவிட்டு அங்கிருந்தும் துறவு பேணுதல் என்னவொரு மேம்பட்ட நிலையென யோசிக்கும் அதே சமயம், ‘வாரிசு அரசியலை’ அந்த வரிகள் நினைவூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.


ஒரு காலத்தில் எல்லாவற்றின் மீதும் ஈர்ப்புக் கொண்டு, எல்லாவற்றின் துடிப்பையும் துல்லியமாக அளந்த காலங்கள் கையைவிட்டு நழுவி, வெகுதூரம் போய்விட்டதை நினைத்துப் பார்க்கும் போது, தன் இப்போதைய நிலை, ஒரு ‘சுரைக்கூடு’ என உணர்தல், வாழ்ந்து முடித்த கதையினைக்கூடக் கேட்க நாதியற்ற வெறும் எலும்புக்கூடான ‘கடைசித்துண்டாக’ உலகில் உலவுதல், ‘எப்படி வாழ்ந்தவர் பார்’ என, யாரேனும் ஒருவர், முன்னால் விட்டுப் பின்னால் பேசினால் கூடப் பேருவகை அடைதல் எனத் துறவின் அத்தனை அம்சங்களையும் இம்மி பிசகாமல் அடுக்குகிறது கவிதை.


‘பெயர்களற்ற கரங்கள்’ என்று தலைப்பிட்ட கவிதையும் உற்றுநோக்கத்தக்கது. இதுவும் யோக தண்டத்தைத் தான் பேசுகிறது. ஆனால் அது யோகமற்ற நிலையை எடுத்தியம்பும் விதம் தான் புதியது.


யோக தண்டத்தை ஏந்தியிருக்கும்


துறவிகளுக்குப் பெயர்களில்லை


அவர்களுடைய கரங்களுக்கும் பெயர்களில்லை


------------------------------------


------------------------------------


இப்போது அது பெயரற்று இருக்கிறது


எப்போதும் பெயர் பெறப் போவதில்லை


------------------------------------


------------------------------------


துறவறத்தின் கரங்கள் மென்மையானவை


தண்டம் தன்னை முதலில் வடித்த


மூதாயின் கரங்களுக்கு ஏங்குகிறது


அவள் தண்டங்களை வைத்துக் கட்டிய


வேலிகளை அது கனவு காண்கிறது


தனியாக, தன் பெயரைக் குழறியபடி.


துறவிகளுக்குப் பெயர் அவசியமா? அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும், நடக்கும் என்று நம்பும் அவர்கள் கரங்கள், ஆசீர்வாதத்திற்குத் தகுதியானதாக மாறியது எப்போது, எப்படி? துறவுநிலை பூணும் முன், அந்தத் துறவி, தன்னைப் பெற்றெடுத்த தாயினைப் பற்றி ஒரு நிமிடமேனும் யோசித்திருக்கக்கூடும் தானே? அவள் இந்தத் துறவை விரும்புவாளா, இதற்குத் தான் தன்னைப் பெற்றெடுத்தாளா, எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு வாழ்வின் அத்தனை சுக துக்கங்களையும் அனுபவிக்க வேண்டும் என அவள் எவ்வளவு ஆசைப்பட்டிருக்கக்கூடும் என்பது குறித்து ‘பற்றறுத்த’ எந்தத் துறவியாவது யோசித்ததுண்டா? எல்லாவற்றையும் மீறி, துறவொன்றே சரியான தீர்வென முடிவெடுத்த அந்த மன உறுதிக்கு என்ன பெயர்?


‘அடுக்கடுக்காய் நீளும் கவிதைகள்’ வரிசையில், ‘வண்ணக்குடைகள்’ என்ற தலைப்பிலான கவிதைகள், புதிதாகக் கவிதை எழுதும் கவிஞர்களுக்கு ஒரு பால பாடம். தமிழகக் கவிதைப் பரப்பு சரியான திசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறதா என்பவர்களின் ‘முதல் சந்தேகத்தை’ தீர்த்து வைக்கிறது இக்கவிதை.


நகரச் சதுக்கத்தின் மத்தியில்


வண்ணக்குடைகள் விரிகின்றன


பிரகாசமான தயக்கங்கள் என.


காற்றின் வேகத்திற்கேற்ப


அவை கேட்கின்றன


அவை விரிய வேண்டுமா?


அவை மடங்க வேண்டுமா என.


காற்றின் ஒவ்வொரு வேகத்திற்கும்


வண்ணக்குடைகள் உப்புவதும்


உட்கம்பிகள் மீறி


எதிர்ப்பக்கம் விரிவதுமாய் இருக்கின்றன


------------------------------------------


------------------------------------------


அவற்றுக்கு வரும் முதல் சந்தேகம்


இந்தப் பூமி புகழிடமா, இல்லையா என்பதே.


------------------------------------------


------------------------------------------


குடைகளுக்குக் கீழேயுள்ள முகங்கள்


வான் நோக்கி அவ்வப்போது உயர்கின்றன


தங்கள் வெற்றுப்பார்வைகளுடன்


குடை நிழல் காக்கின்றதா


சரணாகதி அடையத் தூண்டுகிறதா என்ற


முரண்களில் அடித்துப் பெய்கிறது மழை.


இக்கவிதையில் வரும் ‘குடை’ அழகான குறியீடு. எதற்கு எதிராக நாம் பாதுகாப்புத் தேடுகிறோம், அந்தப் பாதுகாப்பு நமக்கு எந்த வகையில் உத்திரவாதமானது, நம்மைச் சுற்றி நாமோ அல்லது பிறரோ போட்டுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு வளையங்கள் எந்த அளவிற்கு உறுதித் தன்மையுடையன, பாதுகாப்பின் வண்ணக் கவர்ச்சியில் நாம் முழுவதுமாக மயங்கி விடுகிறோமா, பாதுகாப்பையும் மீறி இங்கே பின்னப்படும் வலைகளுக்குள் நாம் சிக்கிக் கொள்வதற்கு யார் அல்லது எச்சூழல் காரணம்?


குடை வடிக்கும் நீர் அல்லது வெக்கை குறித்து, நமக்குள் எவ்விதமான சிந்தனைகளும் ஏற்படுவதில்லையே ஏன்? எல்லாவற்றிலும் கலப்படம் பெருகிவிட்ட இக்காலத்தில், நமது ‘வெண்கொற்றக் குடைகள்’ மட்டும் தரமானவை என எப்படி நம்புவது?


வெயிலுக்கு நிழல் தருவேன், மழைக்கு இடம் தருவேன் என்ற வாக்குறுதிகள் ஒவ்வொரு முறையும் பொய்க்கும் போது, அந்தக் குடைகளின் பட்டன்கள் நம்மைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது, நாம் நனைகிறோமா, உலர்கிறோமா?


குடைகள் குறித்த தொடர்ச்சியான இன்னொரு கவிதையில், ‘குடைகள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதில்லை’ என்ற வரி, மேற்காண் ‘வெண்கொற்றக் குடை’ குறித்த சந்தேகங்களுக்கு மிகச் சரியாக விடை அளிக்கிறது.



கவிஞரின் கவிதைகளிலுள்ள ஆகப் பெரிய குறைபாடே, ‘கூறியது கூறல்’ தான். ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’, ‘ரோஜாமொக்குக் கவிதைகள்’ இரண்டு தொகுப்பையும் அடுத்தடுத்து வாசிக்கும் போது, ஒரு வாசகனுக்குச் சில சமயங்களில் அலுப்பை அல்லது தொடர் பின்பற்றுதலுக்கான ஒரு தொய்வை எனக்குள் ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டாக வேண்டும்.


காற்றின் வேகத்திற்கேற்ப


அவை கேட்கின்றன


அவை விரிய வேண்டுமா?


அவை மடங்க வேண்டுமா என.


என்ற வரிகளில் கூட, ‘அவை’ இத்தனை முறை இடம்பெற வேண்டுமா? வாசிக்கும் போது அதுவொரு ரிதத்தைத் தந்தாலும், அடுத்தடுத்த வாசிப்புகளில் அதுவொரு அயர்ச்சியையே தருகிறது.


காற்றின் வேகத்திற்கேற்ப


அவை கேட்கின்றன


விரிய வேண்டுமா?


மடங்க வேண்டுமா என.


என்றிருந்தாலே போதுமானது. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ‘அவை’யைத் தனித்துப் படிக்கும் போது, அது மக்களவை, ‘மாநிலங்கள்’ அவை என எல்லாவற்றுக்கும் பொருந்திப் போகின்றது.


ஆனால், இவற்றை ஒரு சிறிய குறையாகப் புறந்தள்ளிவிட்டு, கருத்து ரீதியாக, மொழி அடர்த்தி ரீதியாகப் பார்த்தோமானால், தமிழ் இலக்கியப் பரப்பில் கவனப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான கவி ஆளுமைகளில், கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமி தவிர்க்க முடியாதவர் என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் விரைவிலேயே புரிந்து கொள்ளும்.


- மா. காளிதாஸ்


ISBN: 978-93-92543-96-8


விலை ரூ: ₹ 380


பக்கங்கள்: 264


அளவு: டெமி


கட்டமைப்பு: கெட்டி அட்டை


முதற் பதிப்பு: டிசம்பர் - 2024


வெளியீடு: தமிழ்வெளி


(தமிழ்வெளி # 101)


தொடர்புக்கு: +91 9094005600


Monday, April 14, 2025

சித்திரைத் திருநாள் —— எம்.டி.முத்துக்குமாரசாமி

 சித்திரைத் திருநாள்

——

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தொல்காப்பியம், ஆண்டின் பெரும்பொழுதுகளை ஆறாக வகுக்கும்போது, இளவேனில் காலத்தைச் சித்திரை, வைகாசி எனச் சுட்டுகிறது. தொல்காப்பியர் பருவங்களை மழை, பனி, வேனில் என வரிசைப்படுத்துவது, வேளாண்மைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.


நெடுநல்வாடையில் 160-161 ஆம் வரிகள், "திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து" என்று குறிப்பிடுகின்றன. இதன் பொருள், "உறுதியான கொம்புகளை உடைய ஆடு (மேஷ ராசி) தலையாக/முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து செல்லும் விரைவான இயக்கமுடைய ஞாயிறு" என்பதாக எடுத்துக்கொள்ளலாம். மா. ராசமாணிக்கனார் தனது 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' நூலில் இந்த "ஆடு தலை" என்பது மேஷ ராசியே என்று விளக்கியுள்ளார் எனினும் இந்த விளக்கம் சரியானதுதானா என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. மேஷ ராசியை முதன்மையாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின், பிரம்மகுப்தர் போன்ற வட இந்திய வானியலாளர்களின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். சங்க காலத்தில் கார்த்திகை நட்சத்திரமே முதல் நட்சத்திரமாகக் கருதப்பட்டிருக்கலாம். சங்ககாலத் தமிழர் நுட்பமான வானியல் அறிவைக் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. விண்மீன்களையும் கோள்களையும் வேறுபடுத்தி அறிந்திருந்தனர் (நாண்மீன், கோள்மீன்), சூரிய, சந்திர நாட்காட்டிகளைப் பயன்படுத்தினர். பிற்காலத்தில், பௌர்ணமி அன்று நிலவும் நட்சத்திரத்தின் அடிப்படையில் மாதங்களுக்குப் பெயரிடும் வழக்கம் உருவானது. உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அப்பெயர் பெற்றது. இந்த வானியல் அறிவே பிற்காலக் காலக்கணிப்பு முறைகளுக்கு அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும். 


சிலப்பதிகாரமும் மணிமேகலையும்  சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழா பற்றிய விரிவான சித்தரிப்புகளைத் தருகின்றன. இந்த விழா சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டது. சிலப்பதிகாரம், "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" என்று இவ்விழாவின் தொடக்கத்தைக் குறிப்பிடுகிறது. மணிமேகலை இவ்விழா 28 நாட்கள் (நால்ஏழ் நாளினும்) நடைபெற்றதாகக் கூறுகிறது.  

விழாவின் தொடக்கமாகக் கால்கோள் நாட்டுதல் (மூங்கில் தண்டு நடுதல்) நிகழ்வு நடைபெற்றது. நகரமே தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. நாளங்காடிப் பூதத்திற்குப் பலியிட்டு, பூவும் பொங்கலும் படைத்து மறக்குடி மகளிர் வழிபட்டனர். இவ்விழாக் காலத்தில் தேவர்களும் மக்களும் கலந்து திரிந்ததாக மணிமேகலை கூறுகிறது. இசை, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  








மருத நிலக் கடவுளான இந்திரனைப் போற்றும் இவ்விழா, மழை வளம் வேண்டியும், பசி, பிணி, பகை நீங்கவும் எடுக்கப்பட்ட ஒரு 'சாந்திப் பெருவிழா'வாக மணிமேகலையில் சித்திரிக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறாத காரணத்தினாலேயே பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்ததாக மணிமேகலைக் காப்பியம் அறவண அடிகள் கூற்றாகப் பதிவு செய்துள்ளது.



பக்தி இலக்கியங்களில் மாசி மகம் , மார்கழித் திருவாதிரை போன்ற பிற மாத விழாக்கள் பெற்ற முக்கியத்துவம் சித்திரை மாத விழாக்களுக்கு இருந்ததா என்பது தெளிவாக இல்லை. திருஞானசம்பந்தர் மைலாப்பூரில் மாசி மாத விழாவையே சிறப்பித்துப் பாடியுள்ளார்,  மதுரையின் முக்கிய திருவிழா கூட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மாசி மாதத்தில்தான் கொண்டாடப்பட்டது என்றும், அதற்காகவே அங்கு மாசி வீதிகள் அமைக்கப்பட்டன எனப் பல  நாட்டார் வழக்காறுகளில் பதிவாகியிருக்கிறது. 


மதுரையின் சித்திரைத் திருவிழா, ஒப்பீட்டளவில் பிற்காலத்தைய உருவாக்கம் ஆகும். கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், அதுவரை வெவ்வேறு காலங்களில் தனித்தனியாக நடைபெற்ற சைவ சமய விழாவான மீனாட்சி திருக்கல்யாணத்தையும் (இது முன்பு மாசி மாதத்தில் நடந்திருக்கலாம் ), வைணவ சமய விழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் (இது முன்பு தேனூரில் வைகை ஆற்றில் நடைபெற்றது ) இணைத்து, ஒரே விழாவாக சித்திரை மாதத்தில் கொண்டாட ஏற்பாடு செய்தார். சைவ, வைணவ ஒற்றுமையை வளர்ப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இதற்காக அழகர் மதுரைக்கு வருவது, அதற்குள் திருமணம் முடிந்துவிடுவதால் வைகை ஆற்றிலிருந்து திரும்புவது ஆகியன  புதிய கதையாக  புனையப்பட்டதாக தொ.பரமசிவம் தன்னுடைய அழகர் கோவில் ஆராய்ச்சி நூலில் குறிப்பிடுகிறார். இந்த வரலாற்று மாற்றம் இடைக்கால இலக்கியங்களில் காணப்படும் சித்திரை மாதக் குறிப்புகளிலிருந்து வேறுபட்ட ஒரு பிற்கால வளர்ச்சியைக் காட்டுகிறது. 


சங்க காலத்தில் பருவகாலச் சுழற்சியின் ஒரு பகுதியாகவோ, வானியல் குறிப்புகளாகவோ இடம்பெற்ற சித்திரை மாதம், இடைக்காலத்தில் காப்பியங்களில் பூம்புகார் நகரத்தின் பெருவிழாவோடு தொடர்புபடுத்தப்பட்டு, பக்தி இலக்கியங்களில்  கோயில் விழா குறிப்புகளாக மாறி இன்று தமிழ் கேரள நிலப்பகுதிகளில் விஷுப் புண்ணியகாலமாக நிலைபெற்றிருக்கிறது. 


சித்திரைத் திருநாள் அல்ல தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பது பற்றிய வாத எதிர் வாதங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. தமிழ்ப் புத்தாண்டு இரண்டு நாட்களிலும் பிறப்பதாகக் கொள்வது கூட எனக்குத் தனிப்பட்ட முறையில் சம்மதமே. 


சித்திரைத் திருநாளை விஷு கனி பார்த்தலோடு தொடங்குதல் எனக்கு இனிய பல நினைவுகளைக் கொண்டு வருகிறது. அப்பாவும் அம்மாவும் ஆச்சிகளும் கை நீட்டமாகத் தந்த மொடமொட ரூபாய் நோட்டுகளின் மணம் இன்னும் என்னிடம் மாறாமலிருக்கிறது. அதிகாலையில் எழுந்து ஓட்டைக் கண் விட்டுப் பார்த்து கண்ணாடியின் முன் வைக்கப்பட்ட கனிகளின் முன் கண்களைத் திறத்தல் இன்றைக்கும் இனிமையைத் தருவதாகத்தான் இருக்கிறது.  


இப்போதெல்லாம் பருவங்கள் மாறிவிட்டனவா என்ற கேள்வியும் என்னை சதா அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. முன்பு என்னுடைய குறுந்தொகை உரையை வாசித்த முனைவர் தமிழ்மணி பாடல் 21 இல் கொன்றை கார்காலத்தில் ஆவணி புரட்டாசியில் பூப்பதாக வருகிறதே கொன்றை சித்திரை வைகாசியில் அல்லவா பூக்கும், இல்லை கொன்றை இருமுறையாக ஆவணி புரட்டாசியிலும் பூக்குமா என்று கேட்டு எழுதியிருந்தார். குறுந்தொகைப் பாடலில் “புதுப்பூங் கொன்றைக்கானங் காரெனக் கூறினும்” என்றுதான் இருக்கிறது. அதாவது ‘புதியதாகப் பூக்கின்ற கொன்றையையுடைய  கானகம் காலம் கார் காலம் என்று கூறினாலும்’ என்பது அதன் பொருள். நான் இந்த மாதிரியான சந்தேகங்கள் வரும்போது R.E. Hawkins - Encyclopedia of Indian Natural History-Oxford University Press, USA (1987) கலைக்களஞ்சியத்தை பார்ப்பது வழக்கம். அதிலும் கொன்றை பூக்குங்காலம் சித்திரை வைகாசி என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. கார்காலமாகிய ஆவணி புரட்டாசியிலும் கொன்றை பூக்குமா என்று நான் இன்னும்  பார்த்து உறுதி செய்யவில்லை. 


இருப்பினும் என் கவிதைகளில் வானிலை அறிக்கைகள்  

பல்வேறு வகைகளிலும் இடம் பெறுகின்றன. ஒருகவிதையை இப்படி எழுதியிருக்கிறேன்:

“இந்த ஆண்டும்

ஐப்பசியின் அடைமழை 

கார்த்திகையில்தான் பெய்தது

கார்த்திகை நண்பகலில் 

மார்கழியின் அதிகாலை ஊசி குத்தும் குளிர் அனுபவமானால்

பங்குனியில் தோலை எரிக்கும் வெயில் நிச்சயம்

என்பது புது நியதி

சித்திரை மத்தியின்

மாம்பூக்கள் 

இனி வைகாசி இறுதியில்தான்

எல்லா பழங்களுமே

ஒரே அளவில்

ஒரே நிறத்தில்

மெல்லியப் பனிப்படலம் போலொரு 

ஞெகிழிக் காகிதம் சுற்றி 

எல்லா பருவங்களிலும் கிடைக்கும்

உன்னையும் என்னையும் போல”. நிற்க.


அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள். எல்லா மங்கலங்களும், செல்வங்களும் பெருகட்டும், வாழ்வு குதூகலம்  நிறைந்ததாய் சிறக்கட்டும்.


 


Saturday, April 12, 2025

“ஒரு படிமம் வெல்லும், ஒரு படிமம் கொல்லும்” கவிதை நூல் பற்றி கவிஞர் மா.காளிதாஸ்

 “ஒரு படிமம் வெல்லும், ஒரு படிமம் கொல்லும்” கவிதை நூல் பற்றி கவிஞர் மா.காளிதாஸ்

தமிழில் திட்டமிட்டே அல்லது கண்டுகொள்ளப்படாமலே புறக்கணிக்கப்படுகிற எழுத்தாளர்களிடம் தான் இலக்கியம் இன்னும் வீரியமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது என் கருத்து.  அந்த எழுத்தாளர்களின் கவிதைகளையோ, சிறுகதைகளையோ, கட்டுரைகளையோ, பத்திகளையோ எந்த இடத்திலும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதில் இருக்கும் கவனம், எவ்வகை மனப்பான்மை கொண்டதெனக் கணிக்க முடியாத கள்ள மௌனம் தமிழில் நிலவுகிறது.  

திரும்பத் திரும்ப ஒரே வகையான அல்லது ஒரே வகைமைக்குள் அடங்கும் எழுத்துகளை மட்டும் முன்னிறுத்தும் இந்தப் போக்கு தமிழ் மரபில் மட்டும் தொடர்ந்து வருவதற்கான காரணங்களை வெறும் குழு மனப்பான்மைக்குள் மட்டும் அடக்கிவிட முயல்வது கூட அபத்தம் என்றே கருதுகிறேன். 

தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள், முகநூலில் விமர்சனம் உள்ளிட்ட பத்திகள் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர் எம். டி. முத்துக்குமாரசாமி.  அற்புதமான படிமங்களும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சிகளும் இவர் கவிதைகளில்  ஒரு நீரோட்டம் போலத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. 

‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற இவரது கவிதைத் தொகுப்பு குறித்து இதுவரை யாரும் பேசி இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.  ஆனால் அவசியம் பேசப்பட வேண்டிய தொகுப்பு இது. 

“மீண்டும் மீண்டும் 

ஒரே காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன் 

கவிதை எழுதுகிறேன் பேர்வழி என 

ஒரு படி உப்பை 

எடுத்துக் கொண்டு போய் 

கடலில் கரைத்துக் கொண்டிருக்கிறேன் 

கர்மவினை.”

என்ற கவிதையின் வழி, தமிழ் இலக்கிய சூழலின் முகத்தை ஒரு கைக்குட்டையை போலத் துவைத்துப் பிழிந்து காயப் போட்டிருக்கிறார். 

அறிவியல், புனைவு, இயற்கை, சாதி மதம் மற்றும் மரபு சார்ந்த விசயங்கள், தமிழின் தொன்மைகள், கடவுள் குறித்த நிலைப்பாடுகள், புராண இதிகாசங்கள் இன்றுவரை புகட்டிக் கொண்டிருக்கும் கட்டுக்கதை ‘பாக்கெட் பால்’கள் என இவர் தொடாத அம்சங்களே இந்தத் தொகுப்பில் இல்லை என்று கூறலாம்.

“நீங்களும் நானும் 

அந்த நதியைப் பார்த்திருக்கிறோம் 

அதில் இரண்டுமுறை இறங்க முடியாது என 

ஹெராக்லிட்டஸ் சொல்லாமலேயே 

நமக்குத் தெரியும் 

ஆடிப்பெருக்குக்கு 

முளைப்பாரியையும் 

தொன்னை தீபங்களையும் 

நதியலைகளில் மிதக்கவிட்டோம்

கம்பங்கூழ், காரக் குழம்பு, 

முருங்காய்க்கீரை வதக்கல் 

கொழுக்கட்டை, பொரி, சர்க்கரை

மாவிளக்கு எனப் படையலிட்டோம் 

தீபங்கள் நீரில் அசைந்தாடிச் செல்வதைப் 

பார்த்து நின்றோம் 

வீடு திரும்பினோம் 

இவ்வுலகு மட்டுமே நாம் அறிவோம் 

தீபங்களுக்கும் இல்லை 

மறுகரை என்றவாறே.”

என்னும் இக்கவிதையில், நதியையும் நதியோடு இயைந்த சடங்கு சமாச்சாரங்களையும் சொல்ல வந்தவர், ‘ஹெராக்லிட்டஸ்’ பெயரைக் குறிப்பிட்டிருப்பது தான், இக்கவிதையை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது.  

நெருப்பு குளிர்ந்து உருவானதே நீர் என்ற அவரது அண்டவியல் குறித்த பார்வை, நதி என்பது மாற்றம் மற்றும் நிலையான ஓட்டம் மற்றும் எதிர்நிலை ஒற்றுமையை உள்ளடக்கியது என்ற விளக்கங்களை வாசகனுக்குக் கடத்தும் அதே சமயம், தமிழ் மரபில் நதிக்கரை ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களையும் அசைபோட வைக்கிறார்.  

வாழ்வின் தொடக்கமும் முடிவும் இடைப்பட்டதை எதிர்கொள்தலும் ஒரு நதி போல இருக்க வேண்டும் என்பதை அறிவுரை பகர்தல் போலன்றி எதிர்ப்படும் மனிதரிடம் நலம் விசாரித்தல் தன்மையில் வெளிப்படுத்தி இருப்பது தான் இக்கவிதையின் சிறப்பம்சமே. 

கடவுள் குறித்த நம்பிக்கைகளை விட கடவுள் குறித்து இங்கு புனையப்பட்டிருக்கும் கதைகள் தான் மிகவும் பயமுறுத்துவனவாக உள்ளன.  அவை கதைகள் அல்ல என்று நம்பி விடாதபடி, தொடர்ந்து சொல்லப்படும் அதற்கான விளக்கங்கள், கடவுளுக்கே அலுப்புத் தட்டுவனவாக இருக்கக் கூடும். 

கடவுள் யார், அவர் ஏன் எந்நேரமும் கருவறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார், அவருக்கும் மனிதனுக்குமான இடைவெளியை அவர் விரும்புகிறாரா, ஆக்கல், அருள்பாலித்தல் அல்லது தீயன அழித்தல் தவிர்த்து வேறு தொழிலேதும் அவருக்கு உள்ளதா, தன் சந்ததிகள் பெருக்கம் குறித்த மறுசிந்தனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தொடராமல் நின்றுவிட்டதில் கடவுளுக்கு என்னவிதமான யோசனைகள் உள்ளன, கடவுள் நிமித்தம் இங்கே நடைபெறும் பெரும் வணிக நடைமுறைகள் குறித்து அவருக்கு எவ்விதமான கருத்தாக்கங்கள் உள்ளன என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்புவதாக உள்ளது கவிஞரின் இக்கவிதை:

“நான் எந்த ஜாலர் வைத்த 

வட்ட அடையாள அட்டையையும் 

நெஞ்சில் குத்தி இருப்பதில்லை 

நீங்கள் மிகவும் அழுத்திக் கேட்டால் 

நானொரு பகுதிநேரக் 

கடவுள் சல்லாபி என்று சொல்வேன் 

ஏனெனில் எனது கடவுள் 

பகுதி நேரம் 

வியாபார நிமித்தம் 

வெளியே சென்றுவிடுகிறார்.”

‘ஜாலர் வைத்த வட்ட அடையாள அட்டை’ என்ற சொற்றொடர் தரும் பொருள், எந்தக் கடவுளுக்கும் நான் அடிமையில்லை; நான் இன்ன அடையாளங்களோடு கடவுளை அணுக வேண்டிய அவசியமில்லை; அப்படி அடையாளங்களோடு அணுகினால் தான் என்னைக் கடவுள் ஆசீர்வதிப்பார் எனில், அத்தகைய கடவுளே எனக்கு அவசியமில்லை என்ற கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது.  ‘ஜாலர்’ என்பது ஒரு ஜால்ராக் கருவி, கடவுளின் பொருட்டுக் கூட   அதைக் கையில் எடுக்க மாட்டேன் என்பதையும் போகிறபோக்கில் உணர்த்திச் செல்கிறது கவிதை. 

எனக்கும் குடும்பம் குட்டி உள்ளது, அதை நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும், எந்நேரமும் கடவுளை நானோ அல்லது கடவுள் என்னை மட்டுமோ கவனித்துக் கொண்டிருக்க முடியாது, அது தான் உண்மை என்பதை, ‘நானொரு பகுதிநேரக் கடவுள் சல்லாபி’யும், ‘எனது கடவுள் பகுதி நேரம் வியாபார நிமித்தம் வெளியே சென்றுவிடுகிறார்’ என்பதும் தெளிவுபடுத்துகின்றன.

இன்றைய நவீன உலகு, உறவுகளை எவ்வாறு சுருக்கிக் கொண்டுள்ளது என்பதை,

“நம் உறவு 

ரிப்பன் கட்டிய முடிச்சுப் பூவோடு 

நமக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது 

அதை அவிழ்ப்பது பயம் 

அதை அவிழ்ப்பது முரண் 

எனினும் அதை அவிழ்ப்பது

விழிப்பும் கூட.”

என்கிறார்.  உறவை ‘ரிப்பன் கட்டிய முடிச்சுப் பூ’ எனச் சுட்டுவது என்னவொரு அழகான படிமம்!  அதனுள் என்ன இருக்கிறது? எதிர்பார்ப்புகளோடு அவிழ்க்காமல் அப்படியே இருந்தால் எந்தவொரு (ஏ)மாற்றமும் நிகழாது தானே? ஆனால் அப்படியே இருப்பதில் என்ன இருக்கிறது? சண்டையும் சச்சரவும் பின் கூடுதலும் கூடுதல் புரிந்துணர்வுடன் மேலும் நெருக்கமாகுதலும் தானே உறவு? எத்தனை பரிமாணங்களைத் தருகிறது கவிதை. 

(இன்னும் அடுக்கடுக்காக இருக்கின்றன படிமங்கள்... தொடர்ந்து பேசுவோம்.)


புதிய பொருளாதாரக் கொள்கையின் கூறுகளான உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலின் தாக்கங்கள் தாயின் கருவறையிலிருந்து கோயில் கருவறை வரைக்கும் இவ்வளவு அசாத்தியத் தாக்கங்களை ஏற்படுத்துமென்று அதனை வகுத்தவர்களும் நடைமுறைப்படுத்தியவர்களும் அறிந்திருக்கமாட்டார்கள் என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைத்துவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதற்கு நிகரானது. 

தானும் தன் சந்ததியும் மட்டும் உயிர் வாழ்வதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளையும் தயவு தாட்சணியமின்றி செயல்படுத்துவதற்கான, அன்பற்ற நிலையைக் கையாண்டு, அதிகார மற்றும் அடக்குமுறை விதிகளில் தேவைக்கும் அதிகமாகவே திருத்தங்களை மேற்கொள்ள அரசியல் ஆளுமைகளின் மீது பண ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் தான் நினைத்ததைச் சாதிக்கும் பிற்போக்கு மனப்பான்மையை, எல்லா மட்டத்திலும் ஊடுருவுவதற்கான வழிவகைகளை, எவ்வித மூடுமந்திரமுமின்றி வெளிப்படையாக அதேசமயம் எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற்றுவதற்கு அடித்தளமிட்டதே தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலின் அதியற்புதம் என்பதை,

“முகத்தைத் துடைத்துக் கொள் 

உன்னிடத்தில் நிலக்காட்சிகளும் 

ஊர்களும் தீர்ந்துவிட்டன 

இனியொரு உதயத்தில் 

நீ காணப்போவதெல்லாம் கடைத்தெருக்களே 

வாய்ச்சாலக்கில் இனிக் கட்டமுடியாது 

சிந்து பூந்துறையை 

அதன் பன்னீர்புஷ்பங்களும் 

ஆடி பிம்பங்களின் 

இறுதிவெளிகளாய்க் கலைந்துவிட்டன.

உன் அகத்தை 

நிலத்தில் தேடுவதற்கில்லை 

எல்லையற்ற நீல வானமோ 

அலைகளில் கரையும் நீரோ 

உனைக் காட்டப் போவதில்லை 

உன் வீட்டை 

இனி உன் ஊரால் அழைக்க முடியாது 

உன் வீட்டின் மணிமாடம் 

தாழ் திறப்பதில்லை 

உன் நிலவு ஏதோவொரு பாலையில்

எங்கோ ஒளிர்கிறது 

உன் பொருநை இனி உனக்கில்லை 

காலம் இனியொரு நிலமற்ற கடைத்தெரு.”

என்கிறார் கவிஞர் எம்.டி.முத்துக்குமாரசாமி.  இது பொருநைக்கு மட்டும் நேர்ந்த அவலமென அவ்வளவு எளிதில் நகர்ந்துவிட முடியாது.  வைகையின் அகலம் சுருங்கிவிட்டது.  கூவம் எப்போதோ காணாமலே போய்விட்டது.  தூர்ந்துபோக வைக்கப்பட்ட  கண்மாய்களில் எழுந்த நீதின்றம் தான் நீர்நிலைகள் குறித்த பல நீதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.  

சாலைகள் அகலப்படுத்துதல், ஆற்றின் குறுக்கேயும் சாலைகளின் குறுக்கேயும் பெரும்பாலங்கள் உருவெடுத்தல் என்பது சாமானியனை மட்டுமே முன்னிறுத்தியா?  வயல்களின் குறுக்கே எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்படுதல்,  மலைகளைக் குடைந்து அல்லது அழித்து பாதைகளை உருவாக்குதல் எளிய மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றவா? என்கிற எத்தனை கேள்விகளை எழுப்புகிறது, ‘காலம் இனியொரு நிலமற்ற கடைத்தெரு’ என்ற வரி. 

தனிமனித ஆசைகள் எல்லையில்லாமல் பெருகினாலும், இயற்கை ஒருபோதும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை.  சுனாமியாகப் பெருங்கோபம் கொண்டு சூழலை மறு உருவாக்கம் செய்கிறது.  கொரானா போன்ற பெருந்தொற்றை உருவாக்கி வீட்டைவிட்டே மனிதர்களை வெளியே வரவிட முடியாதபடி செய்தாவது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.  கூடுதல் வெப்பம், கூடுதல் மழை மற்றும் கூடுதல் வெள்ளப் பெருக்கைக் கொடுத்துத்  தன்னைச் சமநிலைப்படுத்துகிறது. 

ஒன்றும் முடியாவிட்டால், கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த கட்டிடத்தின் சுவரிலிருந்து ஆலாக பெரு உருவெடுத்து நிற்கிறது.  இதையே இன்னொரு வடிவில்,

“யாருக்கும் பலனற்று சிதைவுற்ற 

அடுக்ககத்தின் இண்டு இடுக்கொன்றில்

பரவசத்துடன் அடர்ந்திருக்கிறது 

மூலிகைத் திருநீற்றுப்பச்சை

அதன் சின்னஞ்சிறிய 

விரிந்த பூவிதழ்களுக்கு வானமும் 

கீழே விழும் விதைகளுக்குப் பூமியும் 

சாத்தியங்களின் எல்லையின்மையைக் 

காட்டிக் கொண்டே இருக்கின்றன.”

என்கிறார் கவிஞர்.  

பொதுவாகத் தத்துவங்கள் எப்போது பிறக்கின்றன, நம்மை நாம் உணர்வது எப்போது, நம் பிம்பங்கள் தான் நம்மைக் கேள்வி கேட்கின்றன என்கிற உண்மை நமக்கு எப்போது விளங்குகிறது, நமக்கும் இந்த உலகிற்குமான தாத்பரியங்கள் எதுவரை தொடரும் என்கிற உண்மை நமக்கு எப்போது உறைக்கத் தொடங்கும், இதுவரையிலான எல்லாக் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் யாரிடம் அல்லது எங்கு உள்ளது என்ற தேடல் நமக்கு எப்போது உருவாகும் என்பதற்கு 'வயது' என்கிற ஒற்றைச் சொல்லால் இப்படி விடையளிக்கிறார் கவிஞர்:

“மலைப்பாம்பின் தழுவல் 

மெல்ல மெல்ல இறுகுவது போல 

வயது 

உன் உயிர்ச்சரடை முறுக்கும் போது 

அந்தத் திரிமுனையில் 

ஒரு சுடரைக் காண விழைகிறாய். 

அச்சுடர் மற்றொரு திரியில் பற்ற 

அது வேறொன்றில் தொற்ற 

அனந்த கோடி தீபங்கள் 

ஒற்றைச்சுடராய்த் தரிசனமாகிறது 

இருளின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்கவிருக்கும்

முதல் தீப்பொறிக்காய் 

உன் உயிர்ச்சரடைத் திரித்தபடியே 

இப்போது காத்திருக்கிறாய்.”

‘இருளின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்கவிருக்கும் முதல் தீப்பொறி’ என்பதை, இதுவரையிலான எல்லா அறியாமைகளிலிருந்தும் 'விடுபடுதல்' என்பதாகப் பொருள் கொள்ளும் போது, இத்தனை நாளுக்கான ‘இதற்கான’ காத்திருத்தலுக்குத் தானா இவ்வளவு போராட்டமும் எனும் கேள்வி, நம் எல்லா பிம்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒரு சிறு கல்லின் இலக்கு தவறாத சரியான எறிதலால் சில்லுச்சில்லாக உடைத்தெறிந்து விடுகிறது. 

நாம் எண்ணிக் கொண்டிருக்கும் ‘இறைப்புனிதம்’ என்பது எவ்வளவு கேலிக்குரியதும், நகைப்புக்குரியதுமென நாம் எப்போதாவது நமக்குள் கேள்வி எழுப்பி இருக்கிறோமா? அவ்வாறான கேள்விகள் நமக்குள் எழும்பினால், இங்குள்ள இறைத்  தத்துவங்கள் என்னவாகும்?  நாம் ஒரு கட்டமைக்கப்பட்ட பொய் உலகத்திற்குள் உலவுவதன் தேவை குறித்து நாம் சிந்திக்கத் தொடங்கினால் ஒரு ‘விடுபடுதல்’ நமக்குள் நேர்ந்துவிடுமா?

இறைத் தத்துவங்கள் நமக்கு ஒழுக்கநெறிகளை மட்டுமே கற்றுத் தருகின்றனவா? ஒழுக்கநெறிகளுக்கான வரையறைகள் எதிலிருந்து களவாடப்பட்டவை? அவற்றின் மீது எழுப்பப்படும் கேள்விகள் ஏன் அவற்றை ஒரு கேலிச் சித்திரமாக்குகின்றன? அல்லது கேள்வி எழுப்புகிறவரை ஏன் புரட்சியாளராக அடையாளப்படுத்துகின்றன? 

“மனம் கசந்து நீ இயற்றிய 

இறை மன்றாட்டுப் பாடல்களை 

அவர் தன் காப்பிக் கொட்டை 

வறுத்து அரைக்கும் எந்திரத்திலிட்டுத் 

தூள் தூளாக்கினார். 

கையறுநிலை ஒரு தேக்கரண்டி 

கைவிடப்பட்ட அவலம் ஒரு தேக்கரண்டி 

அனாதையாகிய அவலம் ஒரு தேக்கரண்டி 

என அத்தனை பாடல் கூறுகளையும் 

தூக்கிக் கடாசினார் 

தன் நாத்திகம் 

தன் புனிதமென முரசறிவித்தார்

----------------------------------

---------------------------------- 

வேலை முடிந்ததென 

குவாட்டர் அடித்தார் 

கவிழ்ந்து படுத்தார் 

நீ இவரே உன் மேல் அன்பு கொண்ட 

இறை என

தானியக் கதிர்களைத் 

தன் அலகுகளில் ஏந்தியிருக்கும் 

ஒரு ஜோடி வெண்புறாக்களைப் பரிசளித்தாய்.”

இக்கவிதையில் வரும் ‘இறை மன்றாட்டு’, ‘தானியக் கதிர்கள்’, ‘வெண்புறாக்கள்’ போன்ற வார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாகச் சுருக்கினால், அங்கிருந்து தான் கடவுள் தன்மை மீதான நம் அத்தனை மடத்தனங்களும் வெளிப்படத் தயாராகின்றன என்பது புலப்படும். 

(கவிஞரின் ‘குறுங்கவிதைகள் 55’ நமக்கு மேலும் சுவாரஸ்யங்கள் கூட்டக் காத்திருக்கிறது…)


கடவுள் எங்கு எப்போது எப்படி ஏன் தோன்றினார் என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம், அவர் ஏன் பல்வேறு சமயங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டுள்ளார், ஏன் ஒரு பொதுவான சமயக் கோட்பாடுகள் அவருக்கென்று இல்லாமல் போனது, அவர் ஏன் தன்னையொரு மேன்மை மிக்கவராகவே வடிவமைக்கும்படி செய்தார் என்கிற கேள்விகளும் தொடர்ந்து கொண்டே உள்ளது. 

கடவுள் ஒருபோதும் தவறு செய்யமாட்டார், அதே நேரம் தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளிப்பார் அல்லது தவறு செய்தவரைத் தண்டிப்பார் என்பது மாதிரியான கருத்தாக்கங்களை எந்தக் கடவுள் எவர் மூலமாகக் கட்டமைத்தார்? இயற்கைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் இருந்து கொண்டு அருள்பாலிக்க வேண்டும்? அவர் ஏன் மனித உருவிலேயே வணங்கப்பட வேண்டும்? 

அவருக்கான படையல்கள், பாடல்கள், காணிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் அவரது வரங்கள் மற்றும் சாபங்களில் ஏன் ஒரு பொதுத்தன்மை இல்லை என்பதற்கான விடைகளோடு கூடவே ஏன் ஒரு புதிர்த்தன்மையைக் கொண்டுள்ளன எனப் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்புகிறது கவிஞர் எம்.டி.முத்துக்குமாரசாமியின் குறுங்கவிதைகள். 

“மீண்டும் கடவுள் மாறாட்டம் 

ஆனால் இம்முறை பிடிபடவில்லை 

அசல் யாரென்று 

அனைவருக்கும் தெரிந்துவிட்டது.”

என்ற கவிதையில், ‘பிடிபடவில்லை’ என்ற சொல்லில் தொனிக்கும் இரட்டைப் பொருள் அபாரமானது. பொதுவாக, ஒரு கருத்து குறித்து குழப்பமான சூழலில் நாம் எளிதாகச் சொல்கிற ஒரு வாசகம்: ‘எனக்கு ஒரேயொரு விசயம் மட்டும் பிடிபடவே மாட்டேங்குது’.  

இந்தக் கருத்தோடு, ‘அசல் யாரென்று அனைவருக்கும் தெரிந்தாலும்’ என்ற வரிகளைப் படிக்கும் போது, கடவுளின் பொய்முகமே வெளிப்பட்டாலும் கூட, ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி, அவரது கட்டமைக்கப்பட்ட உண்மை முகத்திற்கே பெரும்பாலான வாக்குகள் செலுத்தப்படும் என்பது புலப்படுத்தப்படுகிறது.  அதே சமயம் ‘கடவுள் மாறாட்டங்களும்’ காலத்திற்கேற்ப நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதையும் கவிஞர் உணர வைக்கிறார். 

“புற்களின் நுனிகளில் 

பலி ஆட்டின் ரத்தத் துளிகள் 

மந்தை மந்தையாய்ப் புல் மேய்கின்றன 

இதர ஆடுகள்.”

தனக்கென்று வராத வரைக்கும் எந்தப் பெருந்துயரும் கடந்து போகக்கூடிய ஒன்றுதான் என்ற மனநிலை, இன்றைய தலைமுறையிடம் மேலோங்கி இருப்பதை அட்சரம் பிசகாமல் சொல்கிறது கவிதை. 

“கடைசி உணவின் போது 

மேய்ப்பருக்கும் கேட்கவில்லை 

உணவாய்ச் சமைந்திருந்த 

ஆட்டின் சிணுங்கல்.”

கடைசி விருந்து,  கடைசி அப்பம், கடைசி ரத்தம், கடைசிப் புன்னகை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு கடைசிக் கடவுள் அல்லது கடைசியில் இவர் தான் கடவுள் என்பதில் வந்து நின்றுவிடும் போல. வளர்க்கப்படும் எல்லா ஆடுகளும் பலியிடத் தான் என இப்போது வரை அறியாத ஆடுகள் இன்னும் எதை அசை போடுகின்றன என்பது தான் விளங்கவில்லை. 

“புத்தனுக்குப் போட்ட நாமம் 

அரிதாரம் கலைந்தவுடன் 

ஆள்மாறாட்டம் உறுதியாகிவிட்டது 

பிரம்மம் அல்ல மாயை 

மாயை அல்ல சூன்யம்.”

“மர்ம முடிச்சு 

இன்னும் அவிழவில்லை 

புத்தரை 

விஷ்ணுவின் அவதாரமாக்கியது 

திட்டமிட்ட சதியா 

திட்டமிடாதா சதியா?”

மேற்கண்ட இரண்டு கவிதைகளிலும் ஒலிப்பது ஒரே குரல் தான்.  ‘பகவத் கீதை’ என்பது எதன் சாரம்?  அதிலுள்ள தத்துவங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன?  அதில் கூறப்படும் ஞானம், உள்ளொளி, ஆசையை அடக்குதல், பொறுமை காத்தல் எல்லாம் யாரால் அருளப்பட்டது? ‘எதுவும் நிந்தரமல்ல, இதுவும் கடந்து போகும்’ என்பதன் ‘மூலம்’ எங்குள்ளது என்கிற பேருண்மைகளை எல்லாம் கண்டதுண்டமாக்குகின்றன.  அவற்றின் நீட்சியாகத் தான்,

“எது சுடரைப் பாதுகாக்கிறதோ 

அதன் மேல் கரி அப்புவது 

சுடரின் இயல்பு.”

என்ற கவிதையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

“மின்மயான வாயிற்கதவில் 

ஒரு தபால் பெட்டி.”

என்ற இரண்டு வரிகள் ஏற்படுத்தும் கிளர்ச்சி ஒரு தனி ரகம்.  அங்கு யார் கொண்டு வந்து என்னவிதமான உணர்வுகளை, யாரிடம் சேர்க்கச் சொல்லிக் கடிதம் இடுவார்கள்? கடிதத்தை எழுதியவர் உயிரோடு இருக்கிறாரா? அல்லது அது இறந்தவருக்கு எழுதப்பட்ட கடிதமா? 

ஒவ்வொருநாளும் அந்தத் தபால் பெட்டியைத் திறக்கும் தபால்காரரின் மனநிலை என்னவாக இருக்கும்? அதிலிருப்பவை புகார்க் கடிதங்களா? நன்றி தெரிவிக்கும் கடிதங்களா? ஒருதலைக் காதல் கடிதங்களா? நிராகரிக்கப்பட்ட காதலின் கடைசிக் கையெழுத்துகளா? கைவிடப்பட்ட ஒரு முதுமையின் கடைசிக் கோரிக்கையா? அனுப்புநர்-பெறுநர் முகவரி, சரியான அஞ்சல் வில்லையுடன் ஒட்டித்தான் போடப்பட்டுள்ளதா? இத்தனை கேள்விகள் இருக்கும் போது நொடியில் சாம்பலாகிவிடுமா மின்மயானத்தில் திணிக்கப்பட்ட அந்த உடல்?

தனிமையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் அவரவர் மனநிலையும் ஒரு தனிப்பங்கு வகிக்கிறது.  மகிழ்ச்சியான, விட்டேத்தியான, கைவிடப்பட்ட, எதிலும் பற்றற்ற மனநிலைகள் தனிமையை ஒரேமாதிரியாக அணுகுவதில்லை.  தனிமைக்கும், அது உருவான அல்லது உருவாக்கிக் கொண்ட சூழலுக்கும், தனியறை அல்லது வெட்டவெளி தனிமையைக் கையாளும் விதத்தின் வெவ்வேறு சாதக பாதகங்கள் குறித்து மிக எளிய சொற்களால் எடுத்தியம்புகிறது இக்கவிதை:

“வெட்டவெளிக்கும் உனக்குமான 

ஒரு பரிமாற்றம் 

அதில் 

நரகம் தண்டிக்கப்பட்ட தனிமை

சொர்க்கம் விரும்பித் தேர்ந்த தனிமை.”

ஒவ்வொரு காதலிலும் ஒரு செய்தி இருக்கும்.  அதன் மறுபக்கங்கள் அவ்வளவு கனமானவை என்பதை உண்மையான காதலில் துய்த்தவர்களே உணரமுடியும்.  முதல் பார்வை, முதல் தயக்கம், முதல் வெளிப்பாடு போல் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது முதல் முத்தம் என்பதை, 

“முதல் முத்தமே 

இவ்வுலகின் 

இறுதிச் செய்தி.” 

என்கிறார் கவிஞர். 

(நம் மனதை வெல்லவும் கொல்லாமல் கொல்லவும் இன்னும் கூட மிச்சமிருக்கின்றன கவிஞர் முத்துக்குமாரசாமியின் படிமங்கள்.)


நாம் காணும் வானம் என்பது வேறொன்றுமில்லை, நம் மனம் தான்.  அங்கங்கே கலைந்து கிடக்கும் மேகம் என்பது வேறொன்றுமில்லை, நம் எண்ணங்கள் தான்.  அவை காட்டும் உருவங்கள் என்பது வேறொன்றுமில்லை, நம் மனதின் கிளர்வுகள் தான்.  நம் வானில் தோன்றும் நிற மாற்றங்கள் என்பது வேறொன்றுமில்லை, நம் மனதின் பிரதிபலிப்பு தான்.  

நம் எண்ணங்கள் சில சமயம் மேலோட்டமாகப் பெய்து, நமக்கும் பிறர்க்கும் சூட்டைக் கிளப்புகின்றன.  அடித்துப் பெய்து அதுவரையிலான அத்தனை வெக்கையையும் தணித்து, நம் சூழலையே குளுமையாக்கிவிடுகின்றன.  தேங்கி நிற்கும் நமது குளுமையும் நமக்குள் இருக்குள் வெக்கையுமே மற்றொரு மேகமாக நமக்குள் திரள்கின்றது. 

இப்படியான ஒரு சிந்தனையை, ஒரு கவிஞனால் இன்னொரு மனதிற்குள் விதைக்க முடியுமென்றால், அது தான் அந்தக் கவிதையின் வெற்றி என்று கருதுகிறேன். இளைப்பாறுதல் வேண்டி மரத்தின் அடியில் நிற்கும்  ஒருவனை, ஆசீர்வதிப்பது போல ஒரு பூவை உதிர்த்து விடுதலை நிகழ்த்தியிருக்கிறது எம். டி. முத்துக்குமாரசாமியின் கீழ்க்காணும் கவிதை. 

“உண்மையில் மேகம் என்று 

எதையும் அழைக்கலாம் 

கம்பா நதி மண்டபத்தில் 

உன் கண் கட்டி அடர்ந்திருக்கும் 

நீலக்குவளை மலர்களை 

நம் கண்ணாடிகளில் படிந்திருக்கும் 

புகைமூட்டத்தை 

உன் கண்களடியில் அடர்ந்திருக்கும் 

தூக்கமின்மையின் கருவளையத்தை 

வெட்கத்தினால் 

முன்பு நீ மறைத்த கட்கத்தினை

நம்மிடையே 

இப்போது கனத்திருக்கும் மௌனத்தை.”

இக்கவிதை முடிந்துவிட்டது போலத் தோன்றலாம்.  ஆனால் மிச்சமுள்ளதை ‘நீயே உன் எண்ண ஓட்டத்துக்குத் தக இட்டு நிரப்பிக் கொள்’ என வாசகனிடம் அப்பொறுப்பைக் கடத்தியதில் தான், இக்கவிதையின் முழுமையே உள்ளதென உணர்கிறேன்.   

‘கண்ணாடிகளில் படிந்திருக்கும் புகைமூட்டம்’ என்ற வரியில் சுட்டப்படும் ‘கண்ணாடி’ என்ற சொல், கார்க் கண்ணாடியையா, இரும்பைப் பற்ற வைப்பவன் வெக்கை தாக்காமலிருக்க அணிந்திருக்கும் கண்ணாடியையா, தன் பார்வை இழப்பு வெளியே தெரியாமலிருக்க அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியையா,  வெள்ளெழுத்து அல்லது அழகுக்காக அணிந்திருக்கும் கண்ணாடியையா, நம்மை அழகுபடுத்திக் கொள்ள சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கண்ணாடியையா, உடைந்ததால் அவசியமற்றதெனத் தூக்கியெறியப்பட்ட கண்ணாடியையா என்கிற கேள்விகளை எழுப்புவதோடு மட்டும் இக்கவிதை நின்றுவிடவில்லை;  ஒரு குறியீடாக நின்று பல்வேறு எதிரொளிப்புக் கோணங்களைத் தருகிறது.  

தூக்கமின்மையின் கருவளையம், மறைத்த கட்கம், கனத்திருக்கும் மௌனம் போன்றவற்றுக்கான சூழல் பின்புலங்களோடு இக்கவிதையை அணுகும்போது, கவிஞர் சொல்ல வந்ததைத் தாண்டியும் ‘மேகம்’ என்பதை எவ்வெவற்றோடு பொருத்திக் கொள்ளலாம் என்கிற ஆழமான புரிதலையும் நமக்குள் ஏற்படுத்துகிறது கவிதை.   

இக்கவிதையில் உள்ள அடர்ந்திருக்கும், படிந்திருக்கும், மறைத்த, கனத்திருக்கும் போன்ற சொற்கள் மேகத்தோடு பொருந்திப் போகச் செய்திருப்பது கவிஞரின் கைவண்ணத்தைக் காட்டுகிறது.   அதே சமயம், ‘அடர்ந்திருக்கும்’ என்ற சொல், ஒரே கவிதையில் அடுத்தடுத்து மிக நெருக்கமாக அமைந்திருப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதில் வேறொரு சொல்லைத் தேர்ந்திருக்கலாமோ என்ற கருத்தையும் எழுப்புகிறது. 

மேற்கண்டவாறு ஒரு கவிதையைப் பொருள் கொள்ளுதலே அக்கவிதையைச் சரியாகப் புரிந்து கொண்டதற்கான நேர்மை என்பதை, 

“கவிதை 

எழுதப்படுவதல்ல 

வாசிக்கப்படுவது 

பார்க்கப்படுவது 

கேட்கப்படுவது 

எதில் வேண்டுமென்றாலும் 

ஒரு கவிதையை வாசிக்கலாம் 

என்ன,

ஒளி எங்கேயிருந்து வருகிறதோ 

அதற்கு நேரெதிர்த் திசையில் 

பார்க்க வேண்டும் 

ஒலியின் அலைகளுக்கிடையிலுள்ள 

மௌனத்தைக் கேட்க வேண்டும்.”

என்ற கவிதையின் வழி, கவிதையை அல்லது எவ்வகையான எழுத்தையும் வாசிக்கும் முறைமையையும், மறைமுகமாக எப்படி ஒரு கவிதை அல்லது கதை எழுதப்பட வேண்டும் அல்லது சொல்லப்பட வேண்டும் என்ற முறைமையையும் மிகத் தெளிவாக ஒரு தேர்ந்த வாசக மனநிலையிலிருந்தே வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

நகர மனிதர்களின் மனங்களைப் போலவே தான் அவர்கள் வசிக்கும் கட்டடங்களும் உள்ளன என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் அதுவொரு வழக்கமான அறிக்கையாக மட்டுமே அமைந்திருக்கும்.  ஆனால் அந்த இண்டு இடுக்குகளிடையேயும் கம்பீரமாகச் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் மயானங்களைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிக் கொண்டே வந்தவர்,

“---------------------------------- 

----------------------------------- 

அவற்றைக் கூறு போட்டு விற்றால் 

நல்ல விலைக்குப் போகும்

ஒரே சங்கடம் 

சின்னதாய் ஓரமாய் அமைதியாய் இருக்கும் 

அங்காளபரமேஸ்வரி 

ஆவேசமாய்க் கிளம்பி வருவாள் 

மயானக் கொள்ளைக்கு.”

என்கிறார்.  ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என ஒரு நீர்நிலைகளைக்கூட, காடுகள், மலைகள், வயல்கள் என ஒரு இயற்கைப் பிரதேசங்களைக் கூட விடாமல், எல்லாவற்றையும் அழித்து வாழ்விடங்களாக்கிக் கொண்டே வரும் உங்களிடம் எனக்குப் பிடித்திருப்பதே, உங்களைப் புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கென ஒரு இடத்தை நீங்களே விட்டு வைத்திருப்பது தான் என்ற கேலிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு வெற்றிடத்தை வாசகன் உணர வைத்திருப்பது அசாத்தியமானது.

கடவுள் மற்றும் கடவுள் தன்மை பற்றிய கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கும் சூழலில், 

“உங்களிடம் சொல்லவேயில்லையே 

தேடிப்பிடித்து ஒரு கூரிய மூக்கு 

புத்தர் தலை சிலையை வாங்கிவிட்டேன் 

------------------------------------- 

------------------------------------- 

புத்தர் சிலையை வாங்கியதிலிருந்து 

எந்தக் கேள்விக்கும் தடுமாறுவதில்லை 

------------------------------------- 

------------------------------------- 

அவர்தானே கடவுள் இருக்கிறாரா 

என்ற கேள்விக்குக்கூட 

மையமாகப் புன்னகைத்த உச்ச நட்சத்திரம்.”

என்ற கவிதையின் வழி, ‘மந்தகாசப் புன்னகை’ மூலம் ‘கடவுளின் இருப்பு குறித்து நீ தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று வழிகாட்டிய புத்தரையே,  கடவுளாக்கி வழிபடுவதையும் கேள்விக்கும் கேலிக்கும் உள்படுத்தியுள்ளார். 

எங்கே எது நடந்தாலும் அது பற்றிய துளி அக்கறையுமின்றி, அது குறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், ‘என் வீடு என் மக்கள்’ என்ற சுயநலப் போக்கில் இருப்பவர்களைப் பொட்டில் ஆராய்ந்து சாத்துகிறது ‘மடித்து வைத்த துணிகளுக்குள்’ என்ற தலைப்பிலான இக்கவிதை:

“----------------------------------------- 

------------------------------------------ 

ஒரு முளை கிளம்பிய போது 

ஒரு மொட்டவிழ்ந்து

பூ இதழ் விரித்த போது 

கூட்டைவிட்டு ஒரு பறவை 

வெளியே பறந்தபோது

எங்கோ ஒரு சாப்பிடும் தட்டு 

காலியாக இருக்கும் போது

யாரோ நாடுவிட்டு

அகதியாய் வெளியேறிய போது 

நீ எதற்கும் 

உன் சட்டை முன்பகுதி பொத்தானைப் 

பத்திரமாய் மாட்டிக்கொள்  

உன் உள்ளாடை 

உறுதியாக இருக்கிறதாவெனப் பார்த்துக்கொள் 

எப்போதுமே எங்கேயுமே எதுவுமே 

அப்படி அப்படியே இருப்பதில்லை.”

இக்கவிதையை வியந்து பார்க்கும் அதே நேரம், பொருளும் தொனியும் மாறாமலிருக்கும் பொருட்டு, ‘ஒரு சாப்பிடும் தட்டு எங்கோ காலியாக இருக்கும் போது’  என்று இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.  

(கவிஞர் எம். டி. முத்துக்குக்குமாரசாமியின் ‘ரோஜாமொக்குக் கவிதைகள்’ குறித்தும் விரைவில் உரையாடுவோம்.)



Thursday, April 10, 2025

சுந்தரர், சேக்கிழார், மைலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவம் —— எம்.டி.முத்துக்குமாரசாமி

 சுந்தரர், சேக்கிழார்,  மைலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவம்

——

எம்.டி.முத்துக்குமாரசாமி

——




நான் பல பத்தாண்டுகளாகச் சென்னையில் நடைபெறும் அங்காளபரமேஸ்வரி கோவில் வைபவமான மயானக்கொள்ளையையும், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை ஒட்டி நடைபெறும் அறுபத்துமூவர் உற்சவத்தையும் களப்பணி செய்து ஆய்வு செய்துவருகிறேன்.

இரண்டு விழாக்கள் பற்றியும் 2016 ஆம் ஆண்டு Times of India நாளிதழில் எழுதிய சிறிய கட்டுரைகளைத் தவிர, நான் இந்தத் தரவுகளைப் புத்தகங்களாக இன்னும் இறுதி செய்யவில்லை.


மயிலைக் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழாவுக்கு நூறாண்டு கால வரலாறு இருப்பதாகச் சென்னையின் வரலாற்றாசிரியரான எஸ். முத்தையா குறிப்பிட்டிருக்கிறார். என்னுடைய ஆய்வுகளின்படி இந்தத் திருவிழா 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்க வேண்டும்.


அகோரசிவாச்சாரியாரால் எழுதப்பட்ட பன்னிரண்டாம் நூற்றாண்டுப் பனுவலான ‘மஹோத்சவ விதி’ ரிச்சர்ட் டேவிஸினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அகோரசிவாச்சாரியாரின் நூல் சிலாலயங்களில் திருவிழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிவாலயங்களில் அரசர்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, பக்தர்களை முன்னிலைப்படுத்தித் திருவிழாக்களைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தைப் பரிந்துரைக்கிறது. அகோரசிவாச்சாரியார் சிவபெருமானின் முதன்மை பக்தரான சண்டிகேஸ்வரரை அடையாளப்படுத்தி, அவருக்குச் சிவாலயங்களில் பிராகாரத்தில் சன்னிதி அமைய வேண்டியதன் அவசியத்தையும் சொல்கிறார். ‘மஹோத்சவ விதி’ இப்படியாகத் திருவிழாக்களின் விதிமுறைகளைப் பற்றி மட்டும் பேசாமல், கோவில் கட்டுமானங்களையும் அவற்றின் ஆகம விதிகளைப் பற்றியும் பேசுவதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் இந்த ஆகம விதிகளைத் திருவிழாக்களிலும் கட்டிட அமைப்புகளிலும் பின்பற்றுபவை. சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டுமே வேதங்களைப் பின்பற்றுவதாகும்.


சமஸ்கிருதத்திலுள்ள 28 சைவ ஆகமங்கள், சைவசித்தாந்தத்தின் இறையியலின் (theology), தத்துவத்தின் பகுதியாகக் கருதப்படுகின்றன. இருமையை (duality) வலியுறுத்தும் சைவசித்தாந்தம், சிவனை அனைத்து ஆன்மாக்களின் பதியாக உருவகிக்கிறது; அனைத்து ஆன்மாக்களும் பசுவாக இருக்க, இரு தெய்வீக இருப்புகளிடையே ஊடாடுவதாகப் பொருளுலகாகிய பாசம் இருக்கிறது. கோவில் விழாக்களைப் பொதுவெளிக்கும், தனிப்பட்ட முறையில் வீட்டில் செய்யப்படும் ஆத்மார்த்த பூசையைக் கிரஹஸ்தர்களுக்கும் (இல்லறத்தார்க்கும்) சைவசித்தாந்தம் பரிந்துரைக்கிறது. 


தனிநபர் சிவனாதல் திருவிழா, வீட்டுப் பூஜை ஆகியவற்றின் நோக்கம் என டேவிட் ஷுல்மன் (பார்க்க: Shulman, David Dean, and Guy G Stroumsa. 2002. Self and Self-Transformation in the History of Religions. Oxford; New York: Oxford University Press.) தன்னுடைய விரிவான கட்டுரையொன்றில் கூறுகிறார். பல வீடுகளில் சிவ பூசை செய்யப்படும் வழிமுறைகளைக் களப்பணி செய்து திரட்டிய அடிப்படையில் நான் எழுதிய கட்டுரையும் ஷுல்மனின் கட்டுரையை உறுதி செய்வதாக இருக்கிறது. (பார்க்க: Vedic Chanting as a Householder’s Meditation Practice In the Tamil Śaiva Siddhānta Tradition in Meditation and Culture: The Interplay of Practice and Context, ed. Halvor Eifring. London; New York: Bloomsbury Academic.2015)

பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ் நிலப்பகுதியில் ஏராளமான சைவ தத்துவ ஆகம நூல்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டன; அவை அனைத்தும் மெய்கண்ட சாத்திரங்கள் எனப் பொதுவாக அழைக்கப்பட்டன. இவற்றில் கோவில் திருவிழா விதிகளை விவரித்த நூல்கள் சமஸ்கிருத ஆகம நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் சைவ மடங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தன. இந்த வரலாற்றுக் காலகட்டத்தைப் பற்றி விரிவாகத் தன்னுடைய ‘Sanskrit and Tamil in the service of Śaivism’ கட்டுரையில் எழுதுகிற டி. கணேசன், சைவ சித்தாந்தம் இந்தக் காலகட்டத்தில் சைவ பக்திக்கு சேவை செய்யக்கூடியதாக மாறிவிட்டதைக் குறிப்பிடுகிறார். பதினாறாம் நூற்றாண்டில் இந்த சேவை வடிவம் முழுமையானதாக நிலைபெற்றுவிட்டதாகக் கணேசன் “Two Śaiva Teachers of the Sixteenth Century: Nigamajñāna I and his disciple Nigamajñāna II,” நூலுக்கு எழுதிய முன்னுரையில் மேலும் குறிப்பிடுகிறார்.


இதற்கு இணையாகச் சைவத் திருமுறைகளைத் தொகுக்கும் பணியும் ஆரம்பித்துவிட்டது. சுந்தரரின் (780–830 CE) ‘திருத்தொண்டர் தொகை’ நாயன்மார்களின் கதைகளை வரலாறாக எழுதி, அவற்றின் தொகுதியைத் திருமுறையாக்கும் பணிக்கு வித்திட்டது. நம்பி ஆண்டார் நம்பி (c. 10th-11th Century CE?) சம்பந்தர், அப்பர், சுந்தரர் பதிகங்களை முதல் ஏழு திருமுறைகளாக ஒழுங்குபடுத்தினார். மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் திருவாசகமும் எட்டாம் திருமுறைகளாகச் சேர்க்கப்பட்டன. திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேரின் பாடல்கள் திருப்பல்லாண்டுத் தொகுப்பில் ஒன்பதாம் திருமுறையாக அமைந்தது. திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பன்னிருவரின் பாடல்களின் தொகுப்பு பதினொன்றாம் திருமுறையாகவும், சேக்கிழாரின் பெரிய புராணம் (1135 CE) பன்னிரண்டாம் திருமுறையாகவும் அமைந்தன.

காரைக்கால் அம்மையார் (500 CE), பல்லவ அரசன் ஐயடிகள் காடவர்கோன் (600-750 CE) ஆகியோரின் பாடல்களை ஆரம்ப இலக்கியங்களாகவும், சேக்கிழாரின் பெரிய புராணத்தை (12 ஆம் நூற்றாண்டு) திருமுறைகளில் இறுதியாகவும் கொண்டால், நாம் 600 ஆண்டுகாலச் சைவ, இலக்கிய, இறையியல், தத்துவ வரலாற்றை இத்திருமுறைகள் கொண்டிருக்கின்றன என்று அவதானிக்கலாம்.


இந்த வரலாற்றின் போக்கினை, அரசனையும் கடவுளையும் கொண்டாடுவதை விட்டுவிட்டுத் தொண்டனை, நாயன்மாரை, பல்வேறு சாதி, தொழில் பின்புலங்களிலிருந்து வந்தவர்களைக் கொண்டாடும் விதமாகச் சைவம் ஜனநாயகமானதன் வரலாறு என்று சுட்டலாம்; இந்த வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடுதான் மைலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவாகும்.


மயிலை அறுபத்து மூவர் திருவிழாவில், சம்பந்தர் சாம்பலிலிருந்து பூம்பாவையை உயிர்ப்பித்த கதை சடங்காக நிகழ்த்தப்படுகிறது. சண்டிகேஸ்வரர், மூவர் முதலிகள் ஆகியோருக்குத் தனிச் சப்பரங்களும், மீதி நாயன்மார்கள் 18 சப்பரங்களிலும் வீதியுலா வருவார்கள். முண்டகக்கண்ணி அம்மன், வாசுகி - திருவள்ளுவர், கோலவிழி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முருகன், திரௌபதி அம்மன் ஆகியோரின் சப்பரங்களும் வீதியுலாவில் சேர்ந்துகொள்கின்றன. மைலாப்பூர் தெப்பக்குளத்தின் மூலையில் இருக்கும் கிராம தேவதைகளும் இந்தத் திருவிழாவின் பகுதியாக இருக்கின்றனர். கிட்டத்தட்டப் பத்து லட்சம் பேர் பங்கேற்கும் இத்திருவிழாவில், பெரும்பாலோர் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வருகிறார்கள். இவர்களிடமிருந்து நான் சேகரித்த வாய்மொழிச் சுயசரிதைகளைப் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.


Wednesday, April 9, 2025

சேக்கிழாரின் வியப்புணர்ச்சி- எம்.டி.முத்துக்குமாரசாமி

 சேக்கிழாரின் வியப்புணர்ச்சி

——-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

ஏப்ரல் 8, 2025

இன்று காலை நடைக்குப் போனபோது அந்தப் பெரியவரைப் பல மாதங்களுக்குப் பின் சந்தித்தேன். அவருக்கு ஜென் பௌத்தத்தில் ஆர்வம் அதிகம். அவர் அவ்வப்போது, அவர் படித்த ஏதாவது ஜென் கதைகளை என்னிடம் சொல்வார். நான் கேட்டுக்கொள்வேன். இன்று அவர், ஜென் பௌத்தத்தில் இருப்பது போலத் திடீர் விழிப்பு நிலையைச் சொல்லும் கதைகள் சைவத்திலோ வைணவத்திலோ இருக்கிறதா என்று கேட்டார்.

நான் அவருக்குச் சுந்தரமூர்த்தி நாயனாரின் கதையைச் சொன்னேன். சேக்கிழார் திருத்தொண்டர்புராணத்தில் சுந்தரரின் கதையைச் சோழர் அவையில் சொல்கிறார். இளைஞரான சுந்தரருக்குத் திருமணம். அவர் தாலி கட்ட வேண்டிய தருணம். அப்போது ஒரு முதியவர் வந்து சுந்தரரைப் பார்த்து, "நீ எனது அடிமை, இதோ அதற்குரிய ஓலைச் சுவடி ஆவணம்" என்று காட்டுகிறார். முதியவரின் கூற்றில் மயங்கி, தாலி கட்டாமல், சுந்தரர் அவர் பின்னாலேயே சென்று விடுகிறார். அந்த முதியவரோ திருவெண்ணெய்நல்லூர் சிவாலயத்தின் அருகில் மறைந்து விடுகிறார். அத்தலத்தில் நடராஜரைப் பார்த்துப் ‘பித்தா, பிறைசூடி பெருமானே அருளாளா’ என்ற பதிகத்தைப் பாடுகிறார். தாலி கட்டப் போகிற தருணத்தில் தடுத்தாட்கொள்ளப்பட்ட சுந்தரருக்கு ஏற்பட்டது திடீர் விழிப்பு நிலை தானே என்று கேட்டேன்.

முரட்டு பக்திக்குப் பெயர் போன சுந்தரர், பதிகங்களில் எத்தனை இடங்களில் அவர் பித்து நிலையை அடைகிறார்; அந்தப் பித்து நிலையைப் பாடவும் செய்கிறார். அவரும் பித்தன்; அவர் வணங்கும் சிவனும் பித்தன். சுந்தரரின் பதிகங்களில், நாம் இந்தத் திடீர் விழிப்பு நிலைக்கு ஆட்படுவோமே என்று பாதி பிரார்த்தனையாகவும் பாதி தன் பித்து நிலையை எடுத்துச் சொல்வதாகவும் உள்ள ‘மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை’ என்ற பதிகத்தையும் அவருக்குச் சொன்னேன். அது ஒரு கவியின் திடீர் விழிப்பும் கூட.

திருநெல்வேலிப் பக்கம் துன்பங்கள் அதிகமாகும்போது பெரியபுராணத்தில் நூல் போட்டுப் பார்ப்பார்கள். பெரியபுராண புத்தகத்தில் நூல் போட்டு எந்தப் பக்கம் வருகிறதோ, அதிலுள்ள செய்யுளை, கதைச் சூழலைத் தெய்வ வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்வார்கள். என் ஆச்சி இப்படிப் பெரியபுராணத்தில் நூல் போட்டுப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அந்தப் பழக்கமும் கூட, ஒரு சாதாரணனும் தன்னை ஒரு தடுத்தாட்கொள்ளுதலுக்கு, திடீர் விழிப்பு நிலைக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான் என்று நான் நினைப்பதுண்டு.

-------

ஏப்ரல் 9, 2025

---

இன்று காலை நடைக்குச் செல்ல சோம்பலாக இருந்தது. கடுங்கோடையின் வெப்பமும், புழுக்கமும் அவற்றினால் உண்டாகும் பொங்கும் வியர்வையும் வீட்டிலிருந்தாலே கொள்ளாம் என்று தோன்ற வைத்திருந்தது. ஆனாலும் வீட்டிலிருந்து சற்றே தாமதமாகத் தெருவிறங்கினேன். நேற்று சந்தித்த பெரியவர் என் வீட்டு முன்னாலேயே அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்தார். நான் வீடு விட்டு இறங்கியதுதான் தாமதம் என்னை ஓடி வந்து பிடித்துக்கொண்டார். நேற்று நான் அவருக்கு சுந்தரமூர்த்தி நாயனார் கதையைச் சொன்னேன் அல்லவா மனிதர் நேற்றே போய் பெரியபுராணத்தை வாங்கிவிட்டிருக்கிறார். இணையத்திலும் தேடிப்படித்திருக்கிறார். ஆங்கிலத்தில் அதிகமும் படிக்கக்கூடியவர் என்பதால் பெரியபுராணத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள் எல்லாம் அதை hagiograpahy (அதீதப் புகழுரை வரலாறு) என்று மட்டம் தட்டுகிற விதமாய் எழுதுகிறார்களே  என்று அவருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. என்னிடம் அதைக் கேட்காவிட்டால் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் என்பது போல இருந்ததால் என் தெருவிலேயே சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.  பெரியபுராணத்தை நான் மிகவும் மதிக்கும் மேற்கத்திய அறிஞரான டேவிட் ஷுல்மன் உட்பட அனைத்து மேற்கத்திய அறிஞர்களும் இயல்பாக hagiography என்றழைக்கிறார்கள்; அதை ஒட்டியே ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள் அனைவரும் அப்படியே எழுதித்தொலைக்கிறார்கள்; இது உண்மையில் கடும் கண்டனத்திற்குரியது என்று சொன்னேன்.  


வீட்டுக்கு வந்தவுடன் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். 


பெரியபுராணத்தின் ஆதார உணர்ச்சி வியப்பு.  பக்தியின் மிகுதியில் திருத்தொண்ட நாயனார் சிவனடியாராக வந்த சிவனுக்குத் தன் பிள்ளையைக் கறியாக சமைத்துப்போடுகிறார்; கண்ணப்ப நாயனார், தன் கண்ணைப் பிடுங்கி சிவலிங்கத்தின் கண்ணில் வழியும் குருதியை நிறுத்தத் துணிகிறார்; மெய்ப்பொருள் நாயனார் தன்னைக் கொல்ல வந்து உடைவாளால் குத்தியவன் சிவனடியார் வேடத்தில் இருந்ததால் அவனைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்; இயற்பகை நாயனார் தன் மனைவியைத் தானமாகக் கொடுத்துவிட்டு கூடவே காவலாக வேறு செல்கிறார்; பின்னே சுந்தரரோ தாலி கட்ட வேண்டிய தருணத்தில் அதை விடுத்து பித்தா பிறை சூடி பெருமானே என்று பாடப்போய்விடுகிறார். இப்படிப் பெரியபுராணம் முழுக்க பேரதிசய, பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிற நிகழ்வுகளால் நிரம்பியிருக்கிறது. இவற்றைக் கண்கள் விரிந்த வியப்பினால் அணுகாமல் வேறெப்படி ஒரு கவி அணுலவான்? சேக்கிழாரின் இந்த வியப்புணர்ச்சியோடு நாம் நம்மைப் பொருத்திக்கொண்டு பெரியபுராணத்தை வாசிக்கவில்லையென்றால் பெரியபுராணத்தை நாம் இலக்கியமாக வாசிக்கவில்லையென்று பொருள்.  “உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்” என்று திருவள்ளுவர் நமக்குக் கற்றுத்தரவில்லையா, என்ன?  அதற்கு நாம் ‘மனதின்கண் மாசிலன் ஆதலும்’ வேண்டும்.  


சேக்கிழாரைப் பெரும் கவியாகவும் பெரியபுராணத்தை இலக்கியப் பனுவலாகவும் வாசிக்கும் ஒருவன் சேக்கிழாரின் வியப்புணர்ச்சி எந்ததெந்த சமயங்களில் எப்படியெப்படி என்னென்ன உத்திகளின் வழி வெளிப்படுகிறது என்றே வாசிப்பான்.  தெய்வீகப் பெண்ணழகு போன்றே தெய்வீகம் வெளிப்படும் இடங்களில் எல்லாம்  சேக்கிழார் வியப்புணர்ச்சி மிகுந்து பாடுவதை நாம் கவனித்தால், சேக்கிழார் எவற்றையெல்லாம் சமனப்படுத்துகிறார் (semiotic equivalences) , பெரியபுராணத்தின் உள்க்கட்டுமானம் என்ன என்பதும் நமக்கு விளங்கும்.  இதை ஐந்து உதாரணங்கள் கொண்டு விளக்கலாம். இந்த ஆய்வு முறை அமைப்பியல் சார்ந்ததுதான். அதாவது வியப்புணர்ச்சியின் வெளிப்பாடுகளை அடிப்படை அமைப்பியல் அலகுகளாகக் கொண்டு (basic structural units) பெரியபுராணத்தின் பெரும் அமைப்பு ( system) எவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது என்று ஆராய்வதாகும். 


சுந்தரர் சரிதையில் திருவாரூர்த் திருக்கோயிலில் தேவரடியாராக விளங்கிய பரவையார் என்பவரைத் திருநாவலூரில் உள்ளவர்கள் முதன்முதலில் காணும் செய்யுளில், அவருடைய வடிவழகைக் கண்டு வியந்து கூறுவதாக அமைந்துள்ள பாடலை சேக்கிழாரின் வியப்புணர்ச்சிக்கான அடிப்படைக் கட்டுமானங்களைக் கொண்ட பாடலாக எடுத்துக்கொள்ளலாம்.  சுந்தரர் பின்னாளில் மணந்துகொள்ளவிருக்கும் பரவையாரின் தோற்றம், காண்பவர் மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதுவே சுந்தரரின் மண்ணுலக வாழ்வின் திருப்பங்களுக்கும், இறைவன் அவரைத் தடுத்தாட்கொள்ளும் திருவிளையாடல்களுக்கும் ஒருவகையில் தொடக்கமாகவும் அமைகிறது. பரவையாரின் பேரழகு ஏற்படுத்திய அந்தப் பிரமிப்பை, மக்களின் வியப்பு மொழிகளாகச் சேக்கிழார் இப்பாடலில் பதிவு செய்கிறார்:



“கற்பகத்தின் பூங்கொம்போ

காமன் தன் பெருவாழ்வோ

பொற்புடைய புண்ணியத்தின்

புண்ணியமோ புயல் சுமந்து 

விற்குவளை பவளமலர் 

மதிபூத்த விரைக்கொடியோ

அற்புதமோ சிவனருளோ

அறியேன் என்று அதிசயத்தார்”


இப்பாடலின் ஒவ்வொரு அடியும் பரவையாரின் அழகை வியந்து வினவுவதாக அமைந்துள்ளது:


"கற்பகத்தின் பூங்கொம்போ?": தேவலோகத்தில் உள்ள, கேட்டதைத் தரும் கற்பக மரத்தின் மலர் நிறைந்த பூங்கொம்பு போன்றவளோ? (தேவலோகப் பொருளுடன் ஒப்பிடுவதன் மூலம் அவளது ஒப்புயர்வற்ற அழகையும், கண்டோர் விரும்பும் தன்மையையும் குறிக்கிறது).


"காமன் தன் பெருவாழ்வோ?": அன்பின் கடவுளான மன்மதனுடைய பெரும் செல்வமோ? அல்லது அவனுடைய வாழ்வின் ஆதாரமோ? (அவள் அன்பின், கவர்ச்சியின் ஒட்டுமொத்த உருவம் என்பதைக் குறிக்கிறது).


"பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ?": ஒளிபொருந்திய, சிறப்பு வாய்ந்த நல்வினைகள் பல சேர்ந்து உருவான நல்வினையின் பயனோ? (அவளது அழகு என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமல்ல, அது நல்வினைகளின் திரண்ட பயன், அறத்தின் வெளிப்பாடு என்பதைக் குறிக்கிறது).


"புயல் சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ?": மேகத்தை (கூந்தல்) சுமந்து, வில்லை (புருவம்), நீலோற்பல மலரை (கண்கள்), பவளத்தை (இதழ்), மலரை (முகம் அல்லது பிற உறுப்புகள்), சந்திரனை (முகம்) ஆகியவற்றைத் தாங்கி மலர்ந்து மணம் வீசும் கொடியோ? (இது ஒரு விரிவான உருவக அணி (உருவகம்). இயற்கை உவமைகளைக் கொண்டு அவளது அங்கங்களை விவரித்து, அவளை ஒரு மணம் வீசும் பூங்கொடியாக உருவகிக்கிறது. இது அவளது ஒருங்கிணைந்த, இயற்கையான அழகை வலியுறுத்துகிறது).


"அற்புதமோ?": இவள் ஒரு அதிசயப் பிறவியோ? (வியப்பின் பொதுவான வெளிப்பாடு).


"சிவனருளோ?": இவள் சிவபெருமானுடைய திருவருளின் வடிவமோ? (அவளது அழகை வெறும் மானுட அழகாகக் கருதாமல், தெய்வீக நிலைக்கு உயர்த்தி, இறைவனின் கருணையோடு தொடர்புபடுத்துகிறது).


"அறியேன் என்று அதிசயத்தார்": "இவள் இன்ன தன்மையள் என்று எங்களால் அறிய முடியவில்லை" என்று கூறி மக்கள் வியப்படைந்தனர். (இது உச்சகட்ட நிலை. எந்த உவமையும், எந்த வரையறையும் அவளது அழகை முழுமையாக விளக்கப் போதுமானதல்ல என்பதை ஒப்புக்கொள்வதாகும்).


இச்செய்யுளின் அமைப்பையும் உத்தியையும் இனிமேல் பார்க்கலாம்:

ஐய அணி (சந்தேக அலங்காரம் / மயக்க அணி): இப்பாடல், அடுத்தடுத்து ஐய வினாக்களை எழுப்பி, விவரிக்கப்படும் பொருளின் தன்மையைப் பலவாறாகச் சிந்தித்து வியக்கும் பாங்கில் அமைந்துள்ளது. இது ஐய அணி அல்லது மயக்க அணி எனப்படும். பரவையாரின் அழகை வரையறுக்க இயலாத திகைப்பை இவ்வணி வெளிப்படுத்துகிறது.


தற்குறிப்பேற்ற அணி : ஒவ்வொரு வினாவும், கவிஞர் அல்லது காண்பவர், அப்பொருளை வேறு ஒரு உயர்ந்த பொருளாக இருக்குமோ என்று ஐயுற்று நோக்கும் தற்குறிப்பேற்ற அணியின் தன்மையையும் கொண்டுள்ளது.


உவமை/உருவகம்: கற்பகம், காமன், புண்ணியம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது அது உவமையாகவும் (வினா வடிவில்), மூன்றாவது அடியில் இயற்கை அங்கங்களை கொடியின் உறுப்புகளாகக் கூறும்போது அது உருவகமாகவும் (உருவகம்) அமைகிறது.


படிநிலை வளர்ச்சி: உவமைகள் தேர்ந்துள்ள வரிசை கவனிக்கத்தக்கது. தேவலோகப் பொருட்கள் (கற்பகம், காமன்), அருவமான கருத்து (புண்ணியம்), இயற்கை உவமைகளின் தொகுப்பு (கொடி), பின்னர் முற்றிலும் வியப்பானது/தெய்வீகமானது (அற்புதம், சிவனருள்) என உவமைகள் ஒரு படிநிலையில் உயர்ந்து செல்கின்றன.


'அறியேன்' எனும் உச்சம்: இறுதியில் "அறியேன்" என்று கூறுவது, அவளது அழகு அனைத்து ஒப்பீடுகளையும், அறியப்பட்ட வரையறைகளையும் கடந்தது என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது. இதுவே வியப்பின் உச்சநிலையாகும்.



இதே போன்று பெண்ணின்தெய்வீக அழகை வருணிக்கும் இன்னொரு செய்யுள் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தில் வரும் “திருமகளோ? நிலமகளோ? தேவருல கரசமகள்?அருந்தவத்தின் பயனேயோ? அழகென்னும் பெருங்கடலில்பிறந்தெழுந்த அமுதமதோ? பேசரிய வடிவுடைய

வருங்கொடிபோல் நின்றாளை மாந்தரெல்லாம் அதிசயித்தார்.” பாடலாகும்.

பரவையாரைப் பாடிய பாடலைப் போலவே, அமைப்பு முறையிலும், உவமைகளின் தன்மையிலும் ஏறக்குறைய ஒத்த மற்றொரு பாடல், வேறொரு நாயனாரின் வரலாற்றில் (கலிக்காமர்) இடம்பெறுவது  முக்கியமானதாகும். இது, சேக்கிழார் இத்தகைய "பேரழகை வியந்து பாடும்" உத்தியை ஒரு குறிப்பிட்ட, வலுவான வடிவமாக (trope) தன் கவிதை மரபில் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. இது வெறும் தற்செயலான ஒற்றுமை அல்ல; மாறாக, காண்போரைக் கட்டுக்கடங்காத வியப்பில் ஆழ்த்தும் பெண்ணழகைச் சித்தரிக்க இந்த வடிவமே மிகவும் பொருத்தமானது, ஆற்றல் வாய்ந்தது என்று அவர் கருதியிருக்கலாம். 


இந்த வியப்புணர்ச்சியின் அடுக்கு வினாக்கள் வடிவத்தை சேக்கிழார் வேறெவற்றுக்கெல்லாம் எடுத்துச் செல்கிறார் (transference) இனிப் பார்க்கலாம்:


குழந்தை திருஞானசம்பந்தரைக் கண்ட மக்கள், அவரின் தெய்வீக அம்சங்களையும், அவர் தோன்றியதன் நோக்கத்தையும் எண்ணி வியப்படையும் சூழலை விவரிக்க சேக்கிழாரின் செய்யுள் மேற்கண்ட வியப்புணர்ச்சி உத்திகளைப் பயன்படுத்துவதை வாசிக்கலாம்.  அவர் அழுத ஒலி கேட்டு உமையம்மை ஞானப்பால் ஊட்டிய நிகழ்வுக்கு முன்னரோ பின்னரோ இத்தகைய வியப்பு நிகழ்ந்திருக்கலாம்.


 “வேதநெறி தழைப்பதற்கு மெய்ஞ்ஞானம் தானுருவாய் நாதனுரை செய்ததமிழ் நல்கவந்த நற்பொருளோ?தீதகல வந்தருளும் திருவருளின் திருவுருவோ? யாதுகொலிச் சிறுமகவென் றெண்ணியெண்ணி யதிசயித்தார்.” 


இங்கும் அடுக்கடுக்கான ஐய வினாக்கள் (ஐய அணி) அல்லது தற்குறிப்பேற்றங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பரவையாரைப் பாடிய பாடலில் அழகு சார்ந்த உவமைகள் முதன்மை பெற்றதைப் போலன்றி, இங்கு சமயம், தத்துவம், இறையருள் சார்ந்த கருத்துக்களே (சைவ நெறி, மெய்ஞ்ஞானம், திருவருள்) ஒப்பீடுகளாக வருகின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். 


கண்ணப்பர் திருக்காளத்தி நாதரைக் கண்டபோது கொண்ட வியப்பையும் அன்பையும் வெளிப்படுத்தும், விவரிக்கப்படும் உணர்வை வெளிப்படுத்தும் சேக்கிழாரின் பாடல் இப்படியாக இருக்கிறது: 


“என்னையிது? என்கொலிது? இப்பெருமான் தனியிருத்தல்

முன்னைவினை தீரவந்த முதல்வனோ? முக்கண்ணன்

றன்னை நிகரில்லா அன்பு தந்தளித்த தற்பரனோ?

இன்னுமுயிர் தாங்கியிருப்ப தழகோவென் றன்பு கூர்ந்தார்.”


இங்கும் வியப்பு, ஐயம் கலந்த வினாக்களும், உணர்ச்சிப் பெருக்கின் வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. ஆனால், இதன் மையம் புற அழகோ (பரவையார்), இயல்பான தெய்வீகமோ (சம்பந்தர்) அல்ல; மாறாக, இறைவனைக் கண்ட மாத்திரத்தில் பக்தனின் உள்ளத்தில் பொங்கி எழும் தீவிரமான, ஆதிநிலை சார்ந்த பக்தி அனுபவமே  ஆகும்.


திருநீலநக்க நாயனாரின் மனைவி, பூசை செய்யும் போது சிவலிங்கத்தின் மீது சிலந்தி விழுந்ததைக் கண்டு, அன்பின் மிகுதியால் அதைத் தன் வாயால் ஊதி அகற்றுகிறார். இதை ஆகம விதிகளுக்கு முரணானது எனக் கருதி நாயனார் வருந்தும்போது, "அவள் செய்தது அன்பின் மிகுதியால், அது எமக்கு உகந்தது" என ஒரு வானொலி (அசரீரி) கேட்கிறது. அந்த தெய்வீகக் குரலைக் கேட்டு நாயனார் வியப்படையும் சூழலை விவரிக்க சேக்கிழார், 


“விண்ணிடை யெழுந்தமொழி வேதத்தின் விழுப்பொருளோ?

எண்ணரிய கருணையினால் எம்பிரான் பணித்ததோ? என்

புண்ணியத்தின் வடிவமெனப் பூவையன்பைச் சொன்னதுவோ?

நண்ணரிய தவப்பயனோ?” என்று எழுதுகிறார். 


அதே அடுக்கு வினா அமைப்பு இங்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வியப்பின் பொருள் இங்கு காட்சி சார்ந்ததாக (visual) இல்லாமல், செவிப்புலன் சார்ந்ததாக (auditory) இருக்கிறது. ஒப்பீடுகள் வேத ஒலி, இறைவனின் கருணை, அன்பின் ஏற்பு, தவப்பயன் என அந்த அசரீரியின் பொருளோடும் முக்கியத்துவத்தோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன.


திருநாவுக்கரசர் (அப்பர்), உடல் தளர்ந்த நிலையிலும் கயிலை மலைக்குச் செல்ல வேண்டும் என்ற பேராவலுடன் யாத்திரை மேற்கொள்கிறார். வழியில் உடல் தளர்ந்து பயணத்தைத் தொடர இயலாத நிலையில், சிவபெருமான் அவரைத் தடுத்து, திருவையாற்றில் உள்ள குளத்தில் மூழ்கி எழும்படி பணிக்கிறார். அவ்வாறு அவர் குளத்தில் மூழ்கி எழும்போது, அவருக்கு அந்தக் குளத்திலேயே கயிலைக் காட்சி தெரிகிறது. அந்தக் காட்சியைக் கண்ட அப்பரின் வியப்பையும் பரவசத்தையும் சேக்கிழாரின் இப்பாடல் வெளிப்படுத்துகிறது:


“விண்ணவர்கள் போற்றிசைக்கும் வெள்ளிமன்றோ? வேதங்கள்

பண்ணமையப் பாடியேத்தும் பரமன்வாழ் பதியிதுவோ?

எண்ணரிய ஊழிகண்டும் இறவாத நிலையமிதோ?

கண்ணெதிரே திருவையாற்றில் கண்டனன்யான் கயிலையையே!”


சேக்கிழார் இந்த உத்தியை வியப்பு, பிரமிப்பு, பக்திப் பரவசம், இறை அச்சம் கலந்த மரியாதை (reverence) போன்ற ஒரு குறிப்பிட்ட உணர்ச்சித் தொகுதியை (spectrum of emotions) வெளிப்படுத்தத் திறம்படக் கையாள்கிறார் என்பது தெளிவாகிறது. ஆயினும், ஒவ்வொரு சூழலுக்கும், விவரிக்கப்படும் பொருளுக்கும் ஏற்ப அந்த உணர்வின் சாயல் நுட்பமாக வேறுபடுகிறது. பரவையாரைக் கண்டபோது ஏற்பட்ட வியப்பு அழகியல் சார்ந்தது (aesthetic wonder). கண்ணப்பர் இறைவனைக் கண்டபோது கொண்ட வியப்பு பக்திப் பரவசம் சார்ந்தது (devotional awe). அப்பர் கயிலையைக் கண்டபோது கொண்ட வியப்பு ஆன்மீக அற்புதம் சார்ந்தது (mystical astonishment). இந்த வேறுபாடுகளை, அவர் தேர்ந்தெடுக்கும் ஒப்பீடுகளின் தன்மை மூலமும், பாடலின் முடிவில் தொனிக்கும் குறிப்பு மூலமும் சேக்கிழார் நுட்பமாகச் சாதிக்கிறார்.


வெவ்வேறு சூழல்களில் (அழகு, தெய்வீகம், ஒலி, காட்சி, உணர்வு) இந்த உத்தி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருப்பது, இது சேக்கிழாரின் கவிதை நெறியின் ஒரு முக்கிய அம்சம் என்பதையும்,  பெரியபுராணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அல்லது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய தருணங்களைக் குறிக்க அவர் பயன்படுத்திய ஒரு 'கவிதை அடையாளம்' (poetic spotlight) என்பதையும் காட்டுகிறது. பரவையாரைக் கண்டது (சுந்தரர் கதைத் தொடக்கம்), கண்ணப்பர் இறைவனைக் கண்டது (பக்தி மாற்றம்), சம்பந்தரின் தெய்வீகம் உணரப்பட்டது, அப்பரின் கயிலைக் காட்சி (ஆன்மீக உச்சம்), திருநீலநக்கருக்குக் கிடைத்த தெய்வீக ஏற்பு – இவை யாவும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. இத்தகைய முக்கியத் தருணங்களில் இந்த உத்தியைக் கையாள்வதன் மூலம், அந்த நிகழ்வின் அசாதாரணத் தன்மையையும், அதன் தீவிரத்தையும் வாசகர்களுக்கு  சேக்கிழார் உணர்த்துகிறார்.


மேலும், ஒரே உத்தியைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினாலும், அதில் காணப்படும் உள்ளடக்க வேறுபாடுகள் சேக்கிழாரின் மாற்றியமைக்கும் மேதைமையைக் (adaptive genius) காட்டுகின்றன. அவர் ஒரு வடிவத்தை அப்படியே படியெடுக்கவில்லை; மாறாக, ஒவ்வொரு குறிப்பிட்ட கதைச் சூழலுக்கும், பாத்திரத்திற்கும், கருத்து நோக்கத்திற்கும் ஏற்ப ஒப்பீடுகளையும், முடிவுநிலையையும் நுட்பமாகச் சரிசெய்து கொள்கிறார். பரவையார் பாடலின் ஒப்பீடுகளும், 'அறியேன்' என்ற முடிவும், சம்பந்தர் அல்லது கயிலைக் காட்சிப் பாடல்களின் ஒப்பீடுகளிலிருந்தும், அவற்றின் முடிவுகளிலிருந்தும் வேறுபடுகின்றன. வடிவத்தில் ஒரு நிலைத்தன்மையையும் (structural consistency), உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றத்தையும் (contextual adaptability) ஒருங்கே கையாளும் இந்தத் திறன், ஒரு தலைசிறந்த கவிஞருக்கே உரியதாகும்.

சேக்கிழார் ஒரு சிறந்த நாயன்மார் வரலாற்றாசிரியர் மட்டுமல்ல; அவர் ஒரு தலைசிறந்த கவிஞரும் ஆவார். அதை உணரும்போதுதான் பெரியபுராணத்தை hagiography என்று குறிப்பிடுவது எத்தனை பொருத்தமற்றது என்று தெரியவரும்.


பெரியவருக்கு இந்தக் கட்டுரையை அவசர அவசரமாக எழுதி அனுப்பிய பின்புதான் மனம் சாந்தியடைந்திருக்கிறது. 




Saturday, April 5, 2025

அறிவு, அதிகாரம், அவற்றுக்கு எதிரான கவிதை —— எம்.டி.முத்துக்குமாரசாமி

 அறிவு, அதிகாரம், அவற்றுக்கு எதிரான கவிதை

——

எம்.டி.முத்துக்குமாரசாமி

—-

நேற்று மிருணாளினி ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கூட்டத்தில் Fables of Tthe Third Eye கவிதை நூலில் இருந்து கவிதைகளை வாசித்து அவர்களோடு உரையாடினேன். அப்போது எழுந்த ஒரு கேள்வி மிஷல் ஃபூக்கோவின் தத்துவம் அறிவும் அதிகாரமும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறதே, அறிவு தரும் மேலாண்மையைத் துறப்பதில் கவிதையின் பங்கு என்ன என்பதாக இருந்தது.


நான் எனது கவிதைகள் பொதுவாகவே அதிகாரமற்றுப் போகுதல், powerlessness is where poetry is என்று அறிதல் என்பவற்றைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகின்றன என்று சொன்னேன். அதிலும் Fables of the Third Eye தொகுப்பில் பல கவிதைகளும் கவிதை வரிகளும் அதிகார இழப்பை என்னுடைய மற்ற கவிதைத் தொகுப்புகளை விட அதிகமாகவும் மாற்று கவிதா அறிவுக்கும் தரிசனத்திற்குமான வழியைச் சுட்டுவதாகவும் இருப்பதாகத் தெரிவித்தேன். என்னுடைய தமிழ்க் கவிதைத் தொகுப்பான ‘ரோஜாமொக்குக் கவிதைகளில்’ பின்வரும் கவிதை நாம் ஒவ்வொருவருமே படைப்பின் மொக்கவிழக் காத்திருக்கும்போது அதிகாரமிழந்தவர்களாக நம் அடிப்படை உயிரிருப்பில் தவித்திருக்கிறோம் என்பதைச் சொல்கிறது: 


ரோஜா மொக்கு நடுங்குகிறது

அதன் இதழ் இன்னும் அடர்ந்திருக்கவில்லை

வைகறைக்கு எதிராய் தன்னைத் தானே

உந்தித் திறக்க வலுவற்று பலவீனமாய் இருக்கிறது

வைகறை அதன் இதழ் விரிப்பை, 

அதன் வருகையை என்றுமே 

வேண்டுமென்று கேட்டதில்லை


வானம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறது

கவனிக்காதது போல 

சிறிய பிறப்பு, அதை விடச் சிறிய சாவு


வேகக் காற்று வீசுகிறது

அதன் இருப்பை கணத்தில் அழித்துவிட 

எதுவும் எஞ்சியிருப்பதில்லை

ஒன்றுமில்லையைத் தாங்கியிருக்கும்

ஒரு தண்டைத் தவிர


காற்று தன் போக்கில் கடந்து செல்கிறது

அது ரோஜாமொக்கைத் தொட்ட தன்

நினைவு எதையும் தாங்காமல்

நிலம் தன் இழப்பைத் தாங்குகிறது


கவனமோ, கவலையோ, கேள்வியோ இல்லாமல்

காலம், திருடன், அக்கணத்தைத்

களவாடிக்கொள்கிறது 

அதை இறந்தகாலத்தினுள் மடித்து வைக்க,


இனிமையாக மறந்துவிட, அமைதியாக ஓய்வெடுக்க

நிழல்கள் கூட அங்கே தொடர்ந்து நீடித்திருப்பதில்லை

இரவு கடைசி நெடுமூச்சுக்கான 

தன் உரிமையைக் கோருகிறது


கேட்கப்படாத கிசுகிசுப்பு

பார்க்கப்படாத மலர்

நொடிகளில் இழந்தது

————-

(“ரோஜாமொக்கின் பத்து சம்பவங்கள்”-ரோஜாமொக்குக் கவிதைகள் - எம்.டி.முத்துக்குமாரசாமி -தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடு, பக்கம் 58)


இந்த அதிகாரமற்ற கவித்துவ இருப்பின் தொடர்ச்சியை Fables of the Thiird Eye பல கவிதைகளில் பேசுகிறது. 


“ The Moon-Kissed Mind" -  கவிதை

அமைதி எதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதால் அடையப்படுவதில்லை அது தன்னை பலவீனனாக ஒப்புக்கொடுப்பதால் அடையப்படுகிறது எனச் சொல்கிறது:


A gradual release. 

A letting go of the striving, the seeking, the grasping. 

A surrender to the…what is.


“The Mountain That Breathes" -  கவிதையோ 

ஒன்றிணைவின் மூலமாகவே உள்ளுணர்வு தூண்டப்படுகிறது அது மேலாட்சியினால் அடைப்படுவதல்ல என்று பாடுகிறது:


No summit, 

no final knowing found, 

only the opened eye, the altered air, the ongoing breath.


"The Bridge of Smoke" -  கவிதை பொருளில் அல்லாமல் பெரும் வெறுமையில் நம்பிக்கை வைப்பதை எடுத்துச் சொல்கிறது: 


This is the pact: to walk what dissolves 

as you name it. 

To trust the hollow beneath your heel, the nothing 

that sounds like a plucked wire.


“The Scholar and the Mirror Ocean" -  கவிதையை ஒருவர் கரைவதன் மூலம் அறிவுத்துலக்கம் பெறுவதைச் சொல்வதாக வாசிக்கலாம்:


What he once called drowning 

is now the ocean’s invitation, 

its salt his salt, 

and when the dawn puts the sky back together, 

he does not rise.


"The Well of Half-Truths" -  கவிதை சுயம் தொலைந்து போவதை இறுதியானதாக வே அறிவிக்கிறது:


that I was the water now, 

the liquid amnesia, 

the answer that asks, the hunger that feeds.


"The Sword That Could Not Cut" -  கவிதை குறைபாடற்ற நிறைநலம் பயனற்றுப் போவதைச் சொல்கிறது:


he lifted it, not to carve or conquer, but to stir 

the soup of twilight. 

The blade sang, 

splitting sunlight into spectra, and the broth 

drank the sky’s bruised hues.


"The Path of Half-Light" - கவிதை உயிர்பிழைத்துக் கிடப்பதையும் முட்டாளாக இருப்பதன் வழியையும் சுட்டிக்காட்டுகிறது: 


Only the fool who walks sideways survives— 

not facing the abyss, nor fleeing its wet invitations— 

her spine a pendulum swinging between terror 

and the quiet thrill of wings in the mind.


"The Mirror That Swallowed the World" - உண்மையான ராஜ்ஜியம் ஒன்றுமில்லையில் முகிழ்த்திருபபதைக் கூறுகிறது:


Yet here, 

in the cave of nothing, 

he found the arithmetic 

of bees in a dead hive, 

the echo before rainfall...


சரணாகதிக்குப் பிறகுத் தீர்க்கவியலா முரண்பாடுகளோடு ஜீவித்திருப்பதை "The Garden of Floating Stones" - கவிதை பின்வருமாறு சொல்கிறது:


Notice how your pulse 

mimics their chaos, how your bones grow porous, 

how the ground forgets your name. 

This is the risk: 

that the sky might keep you. 

That surrender could taste so much like hunger 

you’ll forget the heft of your own feet.


நேரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை "The Clock That Ticked Twice" - கவிதை பின்வருமாறு பேசுகிறது:


You reached for it, 

and your hand passed through the illusion 

like a blade through gauze, 

finding nothing but the heat of your own living, 

the infinite, coiled tight 

in the spiderweb of ‘this’ breath.


நேற்று இன்னும் பல சக பயணிகள் நண்பர்களானார்கள்.