Monday, May 5, 2025

கார்ல் மார்க்ஸ் பற்றி ஜார்ஜ் லூக்காஸ்: பண்டமாற்றின் சந்தை வடிவங்களுக்குள்ளாக வாழ்தல்

கார்ல் மார்க்ஸ் பற்றி ஜார்ஜ் லூக்காஸ்: பண்டமாற்றின் சந்தை வடிவங்களுக்குள் வாழ்தல்

——

எம்.டி.முத்துக்குமாரசாமி

——




றியாஸ் குரானாவின் நூலைப் பற்றிச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது இலக்கிய வடிவங்களின் மேல் என்னுடைய அதீத அக்கறையைப் பற்றிக் குறிப்பிட்டேன். அப்படிக் குறிப்பிடும்போது நான் மறந்துவிட்ட பெயர் ஜார்ஜ் லூக்காஸினுடையதாகும். குறிப்புகள் இல்லாமல் நினைவிலிருந்து பேசும்போது ஏற்படக்கூடிய விடுபடலுக்கு இது ஓர் உதாரணமாகும். நிற்க.


லூக்காஸின் ‘நாவலின் கோட்பாடு’ என் சிந்தனையை வெகுவாகப் பாதித்த நூல்களுள் ஒன்று. நான் லூக்காஸின் “History and Class Consciousness” என்ற நூலின் ஓர் அத்தியாயமான "Reification and the Consciousness of the Proletariat” ஐப் பற்றி 2015 ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினேன். 


அக்கட்டுரையைக் கார்ல் மார்க்ஸ் பிறந்த தினமான இன்று வெகுவாகத் திருத்தங்கள் செய்து மீண்டும் பகிர்ந்துகொள்கிறேன்.


முதலில் ஜார்ஜ் லூக்காஸ் பற்றி ஒரு சிறு அறிமுகம்.


ஜார்ஜ் லூக்காஸ் (1885-1971) இருபதாம் நூற்றாண்டின் மார்க்சிய விமர்சனக் கோட்பாட்டில் மிக முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர் ஆவார். ஜார்ஜ் சிம்மல், மேக்ஸ் வெபர், எர்ன்ஸ்ட் ப்ளோச் ஆகியோரின் நண்பரான இவரது சிந்தனை, ஜெர்மானிய சிந்தனையின் நியோ-கான்டியன் பள்ளிகள், சோரன் கீர்கேகார்ட், நீட்ஷே ஆகியோரின் சிந்தனைகள் மீதான ஆரம்பகால ஆர்வத்திலிருந்து உருவானதாகும். இவரது மார்க்சியத்திற்கு முந்தைய இலக்கியக் கட்டுரைகள், குறிப்பாக 'ஆன்மாவும் வடிவமும்' (Soul and Form - 1910), 'நாவலின் கோட்பாடு' (The Theory of the Novel - 1916), மற்றும் பின்னர் யதார்த்தவாதம் குறித்த இவரது கட்டுரைகள், வால்டர் பெஞ்சமின், லூசியன் கோல்ட்மேன், ரேமண்ட் வில்லியம்ஸ், ஃபிரடெரிக் ஜேம்சன் போன்ற சிந்தனையாளர்களை வெகுவாகப் பாதித்தன.


மார்க்சிய சிந்தனைக்கு இவரது மையப் பங்களிப்பு 'வரலாறும் வர்க்க உணர்வும்' (History and Class Consciousness - 1923) எனப்படும் கட்டுரைகளின் தொகுப்பு என்பது என் எண்ணம். மார்க்சிய இயங்கியல் பற்றிய இந்த ஆய்வுகள், ஹெகலுடனான மார்க்சிய உரையாடலைப் புதுப்பித்து, பண்டத்தின் மேல் பாலியல் ஆசைக்கு நிகரான ஆசை வைத்தல் (commodity fetishism), அந்நியமாதல் (alienation), பொருள்வயமாதல்/பண்டமயமாதல் (reification) போன்ற முக்கியக் கருத்துகளுக்கு ஒரு புதிய தத்துவார்த்த புரிதலை வழங்குகின்றன. லூக்காஸ், மார்க்ஸின் விளக்கத்தை மேக்ஸ் வெபரின் பகுத்தறிவுபடுத்தல் (rationalization), அதிகாரப்பணித்துறை (bureaucracy) ஆகியன பற்றிய கருத்துகளுடன் இணைத்து, நவீன முதலாளித்துவத்தின் பண்டக் கட்டமைப்பின் (commodity structure) கருவை மார்க்ஸின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் மறுவரையறை செய்கிறார்.


பொருள்வயமாதல்/பண்டமயமாதல் நிகழ்வை விளக்கிய பின்னர், லூக்காஸ் நவீன, 'முதலாளித்துவ' விமர்சனத் தத்துவம் இந்த நிகழ்வில் வேரூன்றியுள்ளது என்றும், அதை விமர்சிப்பதாக இல்லை என்றும் வாதிடுகிறார். 'வரலாறும் வர்க்க உணர்வும்' கான்ட் மீதான விமர்சனமாக இத்தகைய கூற்றுகளை வளர்க்கிறது. லூக்காஸின் கூற்றுப்படி, கான்ட்டின் விமர்சனத்தின் வடிவவியலை (formalism), தத்துவத்தைப் புரட்சிகர நடைமுறையாக (revolutionary praxis) மாற்றுவதன் மூலம் மட்டுமே கடக்க முடியும் என்று வாதிடும் லூக்காஸின் கட்டுரை, பாட்டாளி வர்க்க உணர்வின் மூலம் பொருள்வயமாதலைக் கடக்க ஒரு புரட்சிகர உத்தியைத் தேடுகிறது.

லூக்காஸின் 'வரலாறும் வர்க்க உணர்வும்' என்ற புத்தகம், மார்க்ஸின் 1844 ஆம் ஆண்டு 'பொருளாதார மற்றும் தத்துவவியல் கையெழுத்துப் படிகள்' (Economic and Philosophical Manuscripts) கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்படுவதற்கு முன்னரே எழுதப்பட்டது. இக்கையெழுத்துப் படிகள் இளம் மார்க்ஸின் சிந்தனைகளில் ஹெகலியப் பரிமாணத்தை வெளிப்படுத்தின. லூக்காஸின் பிற்காலப் படைப்புகளில் 'வரலாறும் வர்க்க உணர்வும்' புத்தகத்தில் காணப்படும் விமர்சனக் கூர்மை இல்லை. உண்மையில், அடோர்னோ 'பகுத்தறிவின் அழிவு' (The Destruction of Reason - 1962) என்ற லூக்காஸின் நூல், லூக்காஸின் சொந்தப் பகுத்தறிவின் அழிவை வெளிப்படுத்தியது என்று கேலி செய்தார். லூக்காஸ், பதிலுக்கு, தனது முந்தைய படைப்புகளை சுயவிமர்சனம் செய்தார், மார்க்ஸின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகளைப் படித்தது 'வரலாறும் வர்க்க உணர்வும்' புத்தகத்தின் கோட்பாட்டு அடித்தளங்களை எவ்வாறு தகர்த்தது என்பதை விவரித்தார். லூக்காஸ் தனது சொந்தப் படைப்புகளில் ஹெகலிய  பொருள்முதல்வாதம் (idealism), அகவய-புறவய இயங்கியல் (subject-object dialectics) ஆகியவற்றின் மிச்சங்களையும் விமர்சித்தார். 'வரலாறும் வர்க்க உணர்வும்' புத்தகத்தில் அரசியல் நடைமுறைக் கருத்தை (concept of political praxis) மிகைப்படுத்தியதாகவும், உழைப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டதாகவும், அந்நியமாதலை புறவயமாதலுடன் (objectification) தவறாகச் சமன்படுத்தியதாகவும் அவர் வாதிட்டார். ஆயினும்கூட, மார்க்ஸ் பற்றிய லூக்காஸின் ஆரம்பகால விளக்கம், மார்க்ஸின் சிந்தனைக்கு மிக நுட்பமான அறிமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது.


அதன் ஆசிரியரால் பெருமளவு நிராகரிக்கப்பட்ட பின்பும், 'வரலாறும் வர்க்க உணர்வும்' ஒரு முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. 'லூக்காஸும் ஹைடெக்கரும்' (Lukács and Heidegger - 1973) என்ற புத்தகத்தில், லூசியன் கோல்ட்மேன், 'இருப்பும் காலமும்' (Being and Time - 1927) நூலில் ‘உணர்வின் பொருள்வயமாதல்' (reification of consciousness) பற்றிய குறிப்புகள், ஹைடெக்கரின் சிந்தனை லூக்காஸுடன் உரையாடலில் இருந்ததைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். 'வரலாறும் வர்க்க உணர்வும்' தியோடர் அடோர்னோ, மாக்ஸ் ஹோர்கைமர், ஹெர்பர்ட் மார்க்யூஸ் ஆகியோரைக் கொண்ட ஃபிராங்ஃபர்ட் பள்ளி விமர்சனக் கோட்பாடு (Frankfurt School critical theory) என்று அறியப்பட்டவற்றில் நேரடிச் செல்வாக்கு செலுத்தியது. பொதுவாக, லூக்காஸ் கிழக்கு ஐரோப்பிய மார்க்சியத்துடன் தன்னை இணைத்துக் கொண்டாலும், 'வரலாறும் வர்க்க உணர்வும்' மேற்கத்திய மார்க்சியத்திற்குள்  ஒரு மூல நூலாகவும், இருத்தலியல் (existentialism), மார்க்சியம் ஆகியவற்றுக்கு இடையிலான உரையாடலில் ஒரு முக்கியச் செல்வாக்கினைச் செலுத்துவதாகவும் உள்ளது.


இனி லூக்காஸின் "Reification and the Consciousness of the Proletariat” என்ற கட்டுரை, மார்க்ஸின் சிந்தனைகள் எப்படி இன்றைய சமகாலப் பண்டமாற்றின் சந்தை வடிவங்களுக்குள் வாழ்தலைப் பற்றிய அபாரமான புரிதல்களை வழங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.


லூக்காஸ், மார்க்ஸின் பகுப்பாய்வு பண்டங்களிலிருந்து தொடங்குகிறது, ஏனெனில் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் பண்ட-கட்டமைப்பே (commodity-structure) மையமான, கட்டமைப்பு ரீதியான சிக்கலாகும் என்பதை முதலில் விளக்குகிறார். பண்டத்தின் மேல் பாலியல் ஆசைக்கு நிகரான ஆசை வைத்தல்  (Commodity fetishism), அதாவது மக்களுக்கிடையிலான உறவுகளில் பொருட்களின் தன்மையை ("மாய புறநிலைத்தன்மை") எடுத்துக்கொள்வது, நவீன முதலாளித்துவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையாகும் என்றும் விளக்குகிறார்.


பழமையான சமூகங்களில், பண்டப் பரிமாற்றம் அவ்வப்போது நிகழ்ந்தது; நவீன முதலாளித்துவத்தின் கீழ் மட்டுமே அது மேலாதிக்கம் செலுத்தும் அமைப்பொழுங்கை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியது.


பண்டக் கட்டமைப்பு மையமாக இருத்தல், நவீன சமகாலச் சமூகம் எவ்வளவு தூரம் வாங்குவதையும் விற்பதையும் சுற்றி சுழல்கிறது என்பதை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது. நமது வேலைகள் பொருட்களை வாங்குவதற்காகப் பணம் சம்பாதிக்கவே இருக்கின்றன, நமது சமூக அந்தஸ்து பெரும்பாலும் நாம் வைத்திருக்கும் பொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பண்டப் பரிமாற்றத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றுடன் தனிப்பட்ட உறவுகளைக் கூட பாதிப்பதாக இருக்கிறது.


உலகளாவிய பண்டப் பரிமாற்றம், அனைத்தும் பண்டமயமாகும் நிலைக்கு (பொருள்வயமாதலுக்கு - reification) வழிவகுக்கிறது, அங்கு ஒரு மனிதனின் சொந்த செயல்பாடு (உழைப்பு) புறநிலையாகவும், சுதந்திரத்தின் எல்லையாகவும் மாறி, அவனைக் கட்டுப்படுத்துகிறது.


இதனால் உதாரணமாக, ஒரு ஸ்மார்ட்போனை சிக்கலான உலகளாவிய உழைப்பு  வளங்களைப் பிரித்தெடுப்பதன் விளைவாகப் பார்ப்பதற்குப் பதிலாக, நாம் பெரும்பாலும் பிராண்ட் (ஆப்பிள் போன்றவை), அதன் அம்சங்கள்  அது தரும் அந்தஸ்து ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாக மாறுகிறோம். அதை உருவாக்குவதில் உள்ள மனித உறவுகளும் உழைப்பும் மறைக்கப்படுகின்றன. இதேபோல், ஆடம்பர கைப்பைகள் அவற்றின் செயல்பாட்டிற்காக மட்டுமல்லாமல், பிராண்டிங்  விளம்பரத்தால் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட குறியீட்டு மதிப்பிற்காகவும் (செல்வம், புதுப்பாணி) விரும்பப்படுகின்றன. இது உற்பத்தி செயல்முறையை மறைக்கிறது.


புறநிலையாக, பொருள்வயமாதல், பொருட்களுக்கான சந்தை இயக்கங்களின் உலகை உருவாக்குகின்றன, அவற்றின் விதிகள் மனிதனைக் கண்ணுக்குத் தெரியாத, கட்டுப்பாடற்ற சக்திகளாக ஆக்கிரமிக்கின்றன. அகநிலையாக, முழுமையாக வளர்ந்த சந்தைப் பொருளாதாரத்தின் கீழ், மனிதனின் செயல்பாடு அவனிடமிருந்து அந்நியமாகிவிட, சமுதாயத்தின் புறநிலை விதிகளுக்கு உட்பட்ட ஒரு பண்டமாக அதை மாற்றிவிடுகிறது. 


பழங்காலச் சமூகங்களில் வர்த்தகம் ஓரத்தில் இருந்திருக்கலாம், இன்று வாழ்க்கையின் ஏறக்குறைய ஒவ்வொரு அம்சத்தையும் வாங்கலாம் அல்லது விற்கலாம் – வீடுகள், சுகாதாரம் போன்ற அத்தியாவசியங்கள் சந்தைப் பொருட்களாகக் கருதப்படுவதிலிருந்து "அனுபவங்கள்" போன்ற அருவக் கருத்துகள் தொகுக்கப்பட்டு விற்கப்படுவது வரை நவீன முதலாளித்துவத்தில் பண்டப் பரிமாற்றத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது.


பண்ட வடிவத்தின் உலகளாவிய தன்மை, பண்டங்களில் இணைக்கப்பட்டுள்ள மனித உழைப்பின் அருவம் (abstraction) - வேறுபட்ட பொருட்களின் சமமற்ற  பரிமாற்றம் - புறநிலையாகவும், அருவ உழைப்பு உற்பத்தியின் கொள்கையாக மாறுதல் - அகநிலையாகவும் இது மாறக் காரணமாகிறது.


கைவினைப்பொருட்கள் முதல் இயந்திரத் தொழில் வரை உழைப்பின் வளர்ச்சி, தொழிலாளரின் தரம் சார்ந்த, மனிதப் பண்புகளை நீக்கி, அதிகமும் இயந்திரமயப் பகுத்தறிவுபடுத்தலை நோக்கிய தொடர்ச்சியான போக்கைக் குறிக்கிறது எனப் பொருள்வயமாதல் சுட்டுகிறது. உழைப்புச் செயல்முறையை இயந்திர செயல்பாடுகளாக உடைத்து, நிறைவு செய்ய்ப்பட்ட பொருளுடன் தொழிலாளியின் தொடர்பைக் குறைத்து, வேலையை மீண்டும் மீண்டும் செய்வதாக இந்த அமைப்பு மாற்றுகிறது. 


உதாரணமாக, பொருள்வயமாதல் ஒருவரது உழைக்கும் திறனைச் சந்தையில் விற்கும் ஒரு 'பொருளாக' மாற்றிவிடுகிறது. இதனால் உழைக்கும் திறன் ஒருவரது முழு ஆளுமை அல்லது நலனிலிருந்து பிரிக்கப்பட்டுவிடுகிறது. நிறுவனங்கள் அதன் மதிப்பைச் சந்தை விகிதங்கள் மற்றும் தேவையான உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில், உழைப்புத் திறன் என்ற பொருளைக் கணக்கிடுகின்றன. இது ஒரு தனிப்பட்ட மனித ஆளுமையைச் சிதைத்துத் துண்டு துண்டானவராக அவரை உணர வைக்கிறது. 


பண்டங்களின் புறநிலை உலகம், அதை உருவாக்குகிற நம்மிடமிருந்து வேறுபட்டதும், தனித்துவமானதும், சுதந்திரமானதுமான சக்திகள் கொண்டதாக நம்மையே நம்பவைக்கக்கூடியதாக மாறிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, நாம் பங்குச் சந்தையுடன் அதன் சொந்த விதிகளைக் கொண்ட ஒரு புறநிலை நிறுவனமாகத் தொடர்பு கொள்கிறோம். தனிப்பட்ட முதலீட்டாளர்கள் அதன் நகர்வுகளுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள், ஆனால் அதன் ஒட்டுமொத்த போக்கை மாற்ற சக்தியற்றவர்களாக உணர்கிறார்கள், குறியீடுகள் (எ.கா., நிஃப்டி 50) போன்ற சந்தைசார் கருத்துக்களைச் சக்திவாய்ந்த, சுயாதீனமான பொருட்களாக நம்மைக் காணவைக்கின்றன.

உழைப்புக்குத் தேவையான நேரத்தின் அடிப்படையிலான கணக்கீடு, உழைப்பை, உழைப்பாளியை ஒரு நிலையான யதார்த்தமாக எதிர்கொள்கிறது. இது உளவியல் பகுப்பாய்வு வரை நீண்டுள்ளது.


அகநிலையாக அந்நியப்பட்டு, உழைப்பு பண்டமாக, தொழிலாளர்கள் (எ.கா., டெலிவரி டிரைவர்கள், ஃப்ரீலான்ஸ் பணியாளர்கள்) பெரும்பாலும் தங்கள் வேலையைப் பணம் செலுத்துவதற்காகப் பரிமாறிக்கொள்ளப்படும் அளவிடக்கூடிய பணிகளின் தொடராக மட்டுமே அனுபவிக்கிறார்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துடனோ அல்லது இறுதித் தயாரிப்பு/சேவையுடனோ சிறிதளவும் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதில்லை. அவர்களின் திறமைகள் பல தளங்கள் வழியாக வர்த்தகம் செய்யப்படும் அருவப் பண்டங்களாக மாறுகின்றன. 


இதனால் உழைப்பாளி ஏற்கனவே இருக்கும், சுயாதீனமான இயந்திர அமைப்பில் இணைக்கப்பட்ட ஒரு இயந்திரப் பகுதியாக மாறுகிறான், இது அவரைச் செயல்திறனற்றவராக (agency less), அஃறிணைப் பொருள் போல ஆக்கிவிடுகிறது.


உலகளாவிய உற்பத்தியில், ஒரு தயாரிப்பிற்கான (விமானம் அல்லது ஸ்மார்ட்போன் போன்றவை) கூறுகள் வெவ்வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு தொழிலாளர்களால் செய்யப்படுகின்றன, அவர்கள் ஒருபோதும் சந்திக்கவோ இறுதிப் பொருளைக் காணவோ மாட்டார்கள். அவர்களின் குறிப்பிட்ட திறன்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிக்குள் செயல்திறனுக்காக அளவிடப்படும் அருவ உழைப்பு நேரத்தின் பரிமாற்றக்கூடிய அலகுகளாகக் குறைக்கப்படுகின்றன.


காலம் அதன் தரம் சார்ந்த தன்மையை இழந்து, உழைப்பாளியின் பொருள்வயமாக்கப்பட்ட "செயல்திறன்" நிரப்பப்பட்ட அளவிடக்கூடிய தொடர்ச்சியாக உறைந்து, இடம் போல ஆகிறது.


உழைப்பு சக்தி மனிதர்களின் ஒட்டுமொத்த ஆளுமைக்கு எதிராக தினசரி புறநிலைப்படுத்தப்படுகிறது; இயந்திரமயமாக்கல் சமூகப் பிணைப்புகளைக் கலைத்து, அருவச் சட்டங்களால் இணைக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அருவநிலை ஒவ்வொருவரையும் சூழ்கிறது.


இந்த நிலைமை முதலாளித்துவத்தின் கீழ் உலகளாவியதாகிறது.

பொருள்வயமாதல்/பண்டமயமாதல், பொருட்களின் தரம் சார்ந்த, பொருள் தன்மையை மறைக்கிறது; பயன்பாட்டு மதிப்புகள் (use-values) உலகளவில் புதியதும், சிதைந்ததுமான புறநிலையை அடைகின்றன. 


பண்டமாற்றின் சந்தை வடிவங்களுக்குள் வாழ்தல் குறித்த கார்ல் மார்க்ஸின் கருத்துக்களை ஜார்ஜ் லூக்காஸ் விளக்குவது, நம் சமகால வாழ்வைப் புரிந்துகொள்ளப் பயனுள்ளதாக இருக்கிறது.


No comments: