Monday, February 23, 2026

இட்லி மாவில் ஜவ்வரிசி சேர்ப்பது பற்றி சில கவிதைச் சிந்தனைகள்

நான் சமையலறைப் பக்கம் வெந்நீர் வைக்கக்கூட எட்டிப் பார்த்ததில்லை என்றாலும் எனக்கு சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மெய்யியல் நூல்களும் அப்படித்தானே எழுதப்படுகின்றன? ‘ஆவக்காய்: ஒரு தெலுங்கு சாகசக் கதை’, ‘கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி: காவியம்’ ஆகிய எழுதப்பட்ட குறிப்புகளும் எழுதப்போவதாக மட்டுமே சொன்ன ‘பஞ்சாபிய கரம் மசாலா, ஒரு நாடோடிப்பாடல்’ ஆகியனவும் எனக்குப் புகழையும் புதிய வாசகர்கள் பலரையும் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. பல Yummie Recipes broadcast channels என்னை நட்சத்திர எழுத்தாளனாக எழுதும்படி வரவேற்றிருக்கின்றன. ஃபேஸ்புக் வேறு "உன்னிடம் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறதே, இதை வைத்துக்கொண்டா குறுந்தொகைக்கு உரை எழுதி நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறாய்" எனக் கடிந்துகொள்கிறது.

உண்மையில் என் சுயசரிதை உணவுப் பதார்த்தங்களின் நினைவுகளால் நிரம்பியதுதான். கண்ணை மூடினால் எனக்கு முதல் முத்தத்தை விட வள்ளியூரில் சாலையோர குடிசை உணவகத்தில் எப்போதோ சாப்பிட்ட மென்பஞ்சு இட்லிதான் நினைவுக்கு வருகிறது. அதே வள்ளியூர் இட்லி போல பஞ்சு பஞ்சாய் இட்லி செய்ய இட்லி மாவு அரைக்கும்போது அதில் நான்குக்கு ஒன்று என்ற வீதத்தில் ஜவ்வரிசியை ஊற வைத்து சேர்க்கவேண்டும் என்று ஒரு குறிப்பு படித்தேன். அப்படியெல்லாம் இஷ்டத்துக்கு கவிதை எழுதுவது போல எதையும் எதோடு சேர்த்தும் உச்ச அழகினை சமையல் குறிப்புகளில் உருவாக்க முடியாது. நனவிலிக்கும் சந்தர்ப்பங்களின் வசக்கேடுகளுக்கும் கவிதையில் இருக்கும் பிரம்ம முகூர்த்தங்கள் சமையலிலும் எனவே சமையற் குறிப்புகள் எழுதுவதிலும் இல்லை.

ஒரு முறை ஆக்டேவியா பாஸ், சர்ரியலிசத்தின் பிதாமகரான ஆந்த்ரே ப்ரெத்தோனைப் பார்க்கப்போனார். பாரீஸில் தன்னுடைய அறையில் எழுதிக்கொண்டிருந்த ப்ரெத்தோன் பாஸை வெளியில் உட்கார வைத்துவிட்டார். ப்ரெத்தோன் ஆவேசமாக எழுதுவதை பாஸ் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ரெத்தோன் எழுதி, திருத்தி முடித்துவிட்டு வெளியே வந்து பாஸுடன் சாப்பிடப் போனபோது பாஸ் "நீங்கள் என்ன எழுதிக்கொண்டிருந்தீர்கள்" என்று கேட்டார். "நான் ஆட்டோமேட்டிக் எழுத்தை பயிற்சி செய்துகொண்டிருந்தேன்" என்று ப்ரெத்தோன் பதிலளித்தார். "ஆனால் நீங்கள் அடிக்கடி அடித்து திருத்துவதைப் பார்த்தேனே" என்று பாஸ் ஆச்சரியத்தோடு வினவினார். அதற்கு ப்ரெத்தோன் "நான் வேண்டிய அளவு ஆட்டோமேட்டிக் எழுத்து ஆட்டோமேட்டிக்காகக் கைகூடி வரவில்லை" என்று பதிலளித்தார். நனவற்றது என்பதற்கும் கூட நனவின் அளவு என்று ஒன்று வேண்டியிருக்கிறது என்பது என்ன ஒரு நகை முரண்!

நனவற்றது ஆச்சரியகரமாகச் சேர்ப்பதன் அழகு திகைக்க வைக்கக்கூடியது. சார்ல்ஸ் சிமிக்கின் (Charles Simic) கீழ்வரும் கவிதை வரிகளை வாசியுங்கள்:

“அவன் சில காகிதங்களைக் கிழிக்கிறான்

காடு

கிசுகிசுக்கிறது

தொலைபேசிப் புத்தகம்

ஒரு குழந்தையின் இதயம்

எலிக்கு ஒரு வளை இருக்கிறது

கச்சேரி பியானோ

தன் கள்ளமின்மையை இழந்துவிட்டது

என் தாயின் துஷ்டி ஆடை.” 

இப்படிப்பட்ட கவிதா சேர்க்கைகளில் உருவாகும் அர்த்தம் பலவகைப்பட்டாதாகவும் வாசக கற்பனையை விரிவுபடுத்துவதாக இருப்பதையும் வாசிக்கலாம். இது போல ஜேம்ஸ் டாட்டேயின் (James Tate) “சக்கர நாற்காலி வண்ணத்துப்பூச்சி”, பில் நாட்டின் (Bill Knott) ‘ரேசர்பிளேடு சேர்ந்திசை’ போன்ற சேர்க்கைகளும் திகைக்கவைக்ககூடியவை. இவற்றில் வாசக மனதைச் சுரண்டி, கன்னத்தைக் கிள்ளி, காதைத் திருகி பணிய வைக்கக்கூடிய நனவின் தந்திரங்கள் இல்லை.

நனவின் தந்திரங்கள் என்பவை எண்ணற்றவை என்பதையும் அவற்றில் சிலவற்றையேனும் இங்கே சுட்டிக்காட்டுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். வட்டார வழக்கு சொற்களைக் கையாண்டு வாசக மனதில் பிராந்திய உணர்வைத் தூண்டுவது, "அது எவ்வளவு அழகு தெரியுமா" என சுய ஆராதனையில் வாசகனை ஈடுபடச்செய்வது இந்த நனவின் தந்திரத்தில் தலையாயது. கூடவே ஜாதிய உணர்வு, "நம் தெருமுக்குக்கடை தேநீர் எப்படி உலகிலேயே உயர்ந்தது தெரியுமா" என்ற பீற்றல், குடும்ப உறவுகளை முன்வைத்து பேசி அவையே உயர்ந்த லட்சியங்கள் என்று அளப்பதும் வாசக மனதின் தெரிந்த செண்டிமெண்டுகளைச் சுரணடும் நனவின் தந்திரங்கள். பின்னே மழை, காதல், பெண்ணழகின் கவர்ச்சி நெகிழ்தல்கள், உருகுதல்கள், "நான் கவிஞன் தெரியுமா" என்ற சோக நாடகம் ஆகிய தந்திரங்களைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அனைவருக்கும் அவை தெரிந்தவைதான்.

நனவற்றதையும் சந்தர்ப்பங்களின் தற்செயல்களையும் எழுத்தில் அனுமதிப்பது நாம் அறியாதவற்றிற்கான அழைப்பிதழ்; அது படைப்பின் சுதந்திரத்தை முழுமையாகக் கோருவது. சமையலோ பரிசோதித்து அறிந்ததின் தெரிந்ததின் அனுபவ விநியோகம். அங்கே முதல் ஆதி கண்டுபிடிப்பே முக்கியம். ஆவக்காய் ஊறுகாய்க்கு மாங்காயைக் கொட்டையோடு சேர்ந்து வெட்டவேண்டும் என்று கண்டுபிடித்தது போல; அல்லது குருவாயூர் பால் பாயாசத்தில் பச்சை ஏலக்காயை சேர்க்கவேண்டும் என்று பாலகிருஷ்ண நாக்கினால் கண்டுபிடித்தது போல; அல்லது மீன் வறுவலில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு அமிர்தம் என்பதைக் கண்டுகொண்டது போல. சமையலில் அனைத்துமே முதல் கண்டுபிடிப்புகளின் பவித்திரங்களால் நிரம்பியது. பின்னர் வருவது அனைத்தும் திரும்பச் செய்தல்கள்தான். நனவின் கண்டுபிடிப்புகள் அதிர்ஷ்டங்களினால் கண் சிமிட்டி ஆசீர்வதிக்கப்படுபவை; நனவற்றதன் அழகோ அதி சுதந்திரத்தின் அணைப்பினால் கூடி வருவது.

நனவுக்கும் நனவற்றதற்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. அது மனப்பிரம்மைகளால் ஆனது. நான் சமீபத்தில் எழுதிய கவிதையொன்றில் சூறாவளியின் கூடுகட்டி முட்டைகளிட்ட புறாவொன்றைத் திரும்பிப் பார்க்கும்போது அதன் குஞ்சுகளை அவற்றாலும், அவற்றின் அலகுகளாலும், அவற்றின் இறகுகளாலும் எண்ணி ஒவ்வொரு முறை எண்ணும்போதும் வேறு வேறு எண்ணிக்கை வருவதாகவும் எழுதியிருந்தேன். அதை அடூர் கோபாலகிருஷ்ணனின் அனந்தரம் படத்தில் வரும் சிறுவன் குளத்தின் படிக்கட்டுகளை எண்ணுவதற்கும் ஒப்பிட்டிருந்தேன். அத்திரைப்படத்தில் படத்தின் கதாநாயகன் அஜயனுக்கு நிஜம் எது பொய் எது, கனவு எது கற்பனை எது யதார்த்தம் எது என்று தெரியாமல் குழம்பிவிடுகிறது. தாஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளின் கதாநாயகன் அப்படிப்பட்டவன்தான்; கென் கேசியின் ‘One who flew over cuckoo’s nest’ இன் கதாநாயகனும் அப்படிப்பட்டவனே. ஹருகி முராகமியின் நாவல்களிலும் சிறுகதைகளும் மனப்பிரம்மமையின் வழி சொல்லப்படுபவைகளாகவே இருக்கின்றன. எனது கவிதைகளின் இந்த அம்சத்தையே அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விமர்சனம் எழுதிய ஸ்டெஃபி புர்சோவா ‘Hallucinations as Epistemic Doubt” என்று குறிப்பிடுகிறார்.

எனது புறாக்குஞ்சுகளை எண்ணும் கவிதை,

“சூறாவளியின் அழிவை

எதிர்த்து வென்ற

ஒற்றை அலகின் மிகுதி

உயிரோசையின் இனிமை”

என்று முடிகிறது. இதில் சொல்லப்படும் உயிரோசையின் இனிமை பிரம்மையானாலும் உண்மையானால் எவ்வளவு அழகு, அதேசமயம் அது பிரம்மையின் பொய்யானால் அது எவ்வளவு பெரிய துயரம். இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்வது கவிதையின் விதி.

என்னை நனவில் தொடர்ந்து இருத்திக்கொள்ளவே சமையல் குறிப்புகளை தொடர்ந்து எழுத விரும்புகிறேன். சமையலின் முதல் கண்டுபிடிப்புகளை எழுதி எழுதி நனவுபூர்வமாகவே அடைந்துவிடலாமென்றும் நம்புகிறேன். சமையற் குறிப்புகளுக்கு என்று சாகித்ய விருதுகள் என்று ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

இப்போது எனது நினைவிலுள்ள வள்ளியூர் சாலையோர குடிசைக் கடை ஆச்சியின் மென்பஞ்சு இட்லியை, இட்லிக்கு மாவரைக்கும்போது நான்குக்கு ஒன்று என்ற வீதத்தில் ஜவ்வரிசி சேர்த்தால் திரும்பச் செய்துவிடலாம் எனப் பிரம்மையடைகிறேன்.


Sunday, February 8, 2026

ஆலெய்ன் பாத்யூவின் (Alain Badiou) Rhapsody for the theatre

 



ஆலெய்ன் பாத்யூவின் (Alain Badiou)  Rhapsody for the theatre தத்துவத்திற்கும் நாடகத்திற்கும் இடையிலான மிகப் பழமையான உறவையும் அந்த உறவில் இருக்ககூடிய சிக்கல்களை நுட்பமான மறு விசாரணைக்கு உட்படத்தக்கூடிய முக்கியமான நூல். கிரேக்க நகர அரசுக்கும் (Greek city state) துன்பியல் நாடகங்களுக்கும் (tragedies)  இருக்கக்கூடிய உறவை Poetics இல் அரிஸ்டாட்டில் விளக்கியதிலிருந்து மேற்கத்திய தத்துவத்தில் நாடகம் ஆய்வுக்குரிய முக்கிய கலைவடிவமாக இருந்து வருகிறது. பார்வையாளானை கிரேக்க  நாடகக் கதாநாயகனோடு அடையாளம் காணவைக்கக்கூடிய துன்பியல் நாடக வடிவம்  அவன் கிரேக்கா நகர அரசில் அடிமையாக இருப்பானேயென்றால் அவன் தன் அவல நிலையின் சோகங்களை நாடக அனுபவத்தில் மீண்டும் வாழ்ந்து தன் அடிமை நிலையை ஏற்றுக்கொண்டவனாக  நாடகம் முடிந்தவுடன் தன் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவான். பார்வையாளன் கிரேக்க நகர அரசில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், தன் கதாநாயக நிலை என்பது தொடர்ந்து கடவுளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அடிமைகளை அடக்கி வாழும் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவான். அரிஸ்டாட்டில் உருவாக்கிய இந்த நாயகனோடு அடையாளம் கண்டுகொள்ளும் செயல்பாடு நாடகம் எனும் கலை வடிவத்தைப் பற்றியும் அதன் நீட்சி வடிவமான சினிமாவைப் பற்றியும் எண்ணற்ற தத்துவ சிந்தனைகளையும் உருவாக்கியுள்ளது. 


பெர்டோல்ட் பிரெக்ட் அரிஸ்டாட்டிலிய துன்பியல் நாடகத்தில் பார்வையாளன் நாயகனோடு அடையாளம் கண்டுகொள்ளும் வடிவத்தை உடைத்தார். அவருடைய காப்பிய அரங்கில் பார்வையாளன் உணர்ச்சி பூர்வமாக பார்வையாளனாக மட்டும் இருக்காமல் சிந்திக்கக்கூடியவனாக மாறுவதற்கு உண்டான   விலகல் கதை உத்திகளைக் கொண்ட கதை சொல்லல் வடிவத்தை அறிமுகப்படுத்தினார். 


ஜெர்சி க்ரோட்டோவ்ஸ்கி நாடகம் நாடக நடிகனின் உடலை அடிப்படையாகக் கொண்ட மொழியையும் வடிவத்தையும் கொண்டது என்று வாதிட்டார். அவருடைய நாடகங்களில் நடிகனின் உடல் சொற்களால் வெளிப்படுத்த இயலாத சிக்கலான உணர்ச்சிகளை பார்வையாளனுக்குக் கடத்தியபோது அரசு கடந்த யதார்த்த வெளிகள் புலப்படத் தொடங்கின. 


ஆலெய்ன் பாத்யூ தன் நூலில் நாடகக்கலை அரசினை மறைமுகமாகவோ நேரடியாக ஆதரிக்கும் வடிவமாக இல்லாமல் வரலாற்றின் மிகப் பெரிய நிகழ்வுகளை (Event) இடையீடு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். நிகழ்வுகள் என்பது பாத்யூவின் சிந்தனையில் ஃப்ரெஞ்சுப் புரட்சி, மே 68 மாணவர் புரட்சி போல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தவை. மக்கள் ஒன்று கூடி தெருவிறங்கிப் போராடியதால் உண்டான சிந்தனை, சமூக மாற்றங்களையே பாத்யூ நிகழ்வுகள் எனக் குறிப்பிடுகிறார். மக்கள் பெருந்திரளாய் கூடுகிற அத்தனை சந்தர்ப்பங்களும் நிகழ்வுகள் என்றழைக்கப்படுவதற்குத் தகுதியானவை அல்ல. 


சிறிய மணிமொழிகளாலும்,  நாடகம்-தத்துவ சிந்தனை இரண்டுக்குமான சர்ச்சைகளாலும் நிறைந்த ஆலெய்ன் பாத்யூவின் நூல் அரசின் கருத்தியல் பிடியில் (ideological entrapment of state) அகப்படாத மேடை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பற்றிப் பேசுகிறது.  





Tuesday, February 3, 2026

மனதைக் குவித்தல்




தியான மரபுகளில் மனதைக் குவிக்க ஏராளமான பயிற்சிகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் ‘தாரணா’ (Dharana), - ஒரே புள்ளியில் கவனத்தைக் குவித்தல்- ஆறாவது அங்கமாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஒரு தீபச் சுடரையோ, தெய்வ உருவத்தையோ, ஒரு மலரையோ, நகரும் மேகத்தையோ, கடலையோ, மலை சிகரத்தையோ ஒருவர் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பது மனதைக் குவிக்கும் பயிற்சிகளில் அதிகமும் பயன்படுத்தப்படுவது.  வெளியில் இருக்கக்கூடிய பொருட்களின் மேல் கவனத்தைக் குவிப்பதை விட ஒருவர் தன் மூச்சையே கவனிப்பது, அல்லது மனதிற்குள் தொடர்ந்து பீஜாட்சர மந்திரத்தையோ ஜெபிப்பது மனதைக் குவிப்பதற்கு உடனடி பலனைத் தரக்கூடியது. 


மூளையின் செயல்பாடுகள் பற்றிய சமகாலத்திய ஆராய்ச்சிகள் மனதைக் குவிக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது மனதிற்குச் சுமையைக் கூட்டக்கூடியது என்று சொல்கின்றன. ஒற்றைப் பொருளில் கவனத்தைக் குவிக்காமல் மனதை சுதந்திரமாக அலையவிடுவது மனதை அமைதிப்படுத்தும் என்றும் அவை மேலும் கற்பிக்கின்றன. மனம் ஒடுங்கும் புள்ளியை ஒருவர் மனதை அலையவிட்டு கண்டுபிடிக்க வேண்டுமே தவிர முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு புள்ளியில் மனதைக் குவிக்கலாகாது என்பது அதன் நீட்சி. 


எனக்கு தியானம் கற்பித்த பௌத்த துறவி, பெயரிலி, தாரணா பயிற்சிகளில் எது சரி என்று ஆராய்வதை விட தாரணாவின் நோக்கம் என்ன என்பதே முக்கியம் என்று வலியுறுத்துவார். பெயரிலியைப் பொறுத்தவரை தாரணா பயிற்சிகளின் நோக்கம் மனதை இயல்பாக, தன்னிச்சையாக அகிம்சையின் முடிவை எடுக்கப் பயிற்றுவிப்பதே ஆகும். ஒருவர் தியானத்தில் தேர்ச்சி பெற்றவராக இருப்பாரேயானால் அவரால் கண் இமைக்கும் நேரத்தில், தயக்கம் ஏதுமில்லாமல், அகிம்சை சார்ந்த முடிவை எடுக்க முடிய வேண்டும். ஆனால் தொடர்ந்து வன்முறையை தினசரி உள்வாங்கும் மனதிற்கு எது அகிம்சை சார்ந்த முடிவாக இருக்க முடியும்?


ஊர்ந்து செல்லும் எறும்புகளை வாரியலால் கலைத்து குப்பைகளோடு ஒருவர் சேர்த்துவிடும்போது அதில் மடிந்த எறும்புகள் வாரியலைப் பற்றி என்ன நினைக்கும்? விதி என்றா? கடவுள் என்றா? விபத்து என்றா? அழிவுக்கு உள்ளான எறும்புகளின் பார்வையில் எது அகிம்சை என்ற கேள்விக்கு தியானி என்ன பதிலை தன்னிச்சையாக சொல்வான்?


அறம் சார்ந்த கேள்விகளில் மனம் திகைத்து ஸ்தம்பித்துவிடும் இடங்கள் கலை, இலக்கியத்திற்கு உரியவை என்றும் அந்தப் புதிர்களையே இலக்கியம் காலங்காலமாக முன்வைத்து வருகிறது என்றும், தத்துவம், இலக்கியம் முன்வைக்கும் புதிர்களை முடிவற்று விவாதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் பெயரிலி ஒருமுறை என்னிடம் சொன்னார். 


பெயரிலி விட்டுச்சென்ற கைப்பிரதிகளை வாசிக்க ஆரம்பித்திருக்கும் எனக்கு அவற்றை நான் புனைவாக எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.  


Photo: Pal Karma Zurmang Shedup Chokhor Ling Lingdum Monastery  (Ranka Monastery), Gangtok, Sikkim