Sunday, February 1, 2015

போர்ஹெஸ் எழுதிய முன்னுரை

பியூனஸ் அய்ரிஸ் நகரின் புத்தகக் கடையொன்றில், இளைஞனான புகைப்படக் கலைஞர் ஒருவர், முழுவதும் பார்வையிழந்து விட்ட போர்ஹெஸ் தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் துழாவிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். இளைஞருக்கு அந்த பெரிய எழுத்தாளரை தற்செயலாகப் பார்க்க நேரிட்டதில் பெரும் மகிழ்ச்சி. அவர் ஓடிச்சென்று போர்ஹெஸிடம் தான் புகைப்பட புத்தகம் ஒன்றை தயாரித்துக்கொண்டிருப்பதாகவும் அதற்கு போர்ஹெஸ் முன்னுரை எழுதித்தர முடியுமா என்று கேட்டார்.  குருடாகிவிட்ட ஒருவரிடம் புகைப்பட புத்தகத்திற்கு முன்னுரை கேட்பது போல பைத்தியக்காரத்தனம் ஏதும் இருக்க முடியாது என்றாலும் இளைஞர் போர்ஹெஸின் மேல் கொண்ட அபிமானம் எல்லையற்றதாக இருந்தது.

போர்ஹெஸ் அந்த இளைஞரை வா என்னோடு என்றழைத்துக்கொண்டு பியூனஸ் அய்ரிஸ் நகரின் வீதிகளில் நடந்து சென்றார். ஒவ்வொரு கட்டடத்தின் முன்பும் நின்று, அவர் தான் ஏற்கனவே பார்த்திருந்த கட்டிடமாக இருந்தால் அதை அந்த இளைஞனுக்கு  வார்த்தைகளில் விவரித்தார், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுந்திருந்தால் அந்த கட்டிடடங்களை இளைஞனை விவரிக்கச் சொன்னார். புதிய கட்டிடங்கள் எல்லாவற்றையும் இவ்வாறாக கணக்கிலெடுத்தபின் போர்ஹெஸ் இளைஞரின் புத்தகத்திற்கு முன்னுரை எழுத சம்மதித்தார்.

'அர்ஜெண்டினா' என்று தலைப்பிடப்பட்ட அந்த புகைப்படபுத்தகத்திற்கு போர்ஹெஸ் எழுதிய முன்னுரையில், தென்னமெரிக்காவின் புகழ் பெற்ற வறண்ட புல்வெளி (Pampas)  புகைப்படங்களைப் பற்றிய குறிப்பு இவ்வாறாக இருந்தது:

"Darwin observed, and Hudson corroborated  him that this plain, famous among the plains of the world , does not leave an impression of vastness  on regarding it from the ground, or on horseback, since its horizon is that of the eye, and does not exceed three miles. In other words, the vastness is not in each view of the pampas (which is what photography can register) but in the imagination of the traveller, in his memory of days on the march and in his prevision of many to follow."

தென்னமெரிக்க புல்வெளிகளின் பிரும்மாண்டத்தை புகைப்படங்கள் காட்ட இயலாமல் தவிக்கலாம் ஆனால் மனவெளியில் நகரும் காலம் அகக்கண்களினால் அந்த பிரும்மாண்டத்தைப் படம் பிடித்துவிடும்.




No comments: