Sunday, June 7, 2015

அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’ - எஸ். சண்முகம்

எஸ்.சண்முகம் 
அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’ - எஸ். சண்முகம்

1


    மொழியுள் உறையும் புனைவை கதைசொல்லி இடம்மாற்றி முன்னும் பின்னுமாக நகர்த்தி சுயபிரக்ஞையின் எல்லையில் வாசகனை நிற்க வைத்து கண்களுக்கு அப்பால் உள்ள கதையுலகை காட்சிப்படுத்தும் கதைகள்தான் அபூர்வமானவை. எழுதப்படும் கதையில் மற்றொரு கதையின் சுவட்டை அழிப்பாக்கம் செய்வதும், அழிப்பாக்கத்திலிருந்து மீளுரு கொள்ளும் எழுதப்படும் கதையின் கதையாடல் எம்.டி.முத்துக்குமாரசாமியின் ‘பெண் வேடமிட்ட பெண்’. தன்னுணர்வின் எல்லைகளை யத்தனிப்பின்றி கடப்பதும், மீண்டும் அதிலேயே உழல்வதும் மொழிப்பித்தத்தின் பாதப்பதிவுகளாய் நீள்கிறது எம்டிஎம்மின் கதையாடல். பிரதியின் மூன்று மொழிவெளிகள் -ஹம்ஸேஸ்வரி, ஜெயராஜ், கதைசொல்லி- இவைகளிடையே நிகழ்ந்து கலைந்த கதையாடல்களை மறுபடியும் சீட்டுக்கட்டை கலைத்து மீள்பரப்பில் ஏற்படும் புதிய வகைமாதிரிகளின் எண்ணற்றதன்மையில் புனைவு விரிகிறது. இம்மூன்று பிரதியின்மொழிநிலைகள் ஒன்றையொன்று அடுத்ததின் வெளியை மீறியும் பகிர்ந்தும் சொல்லும் பரஸ்பரத்தில் கதையாகித் திளைக்கிறது ‘பெண் வேடமிட்ட பெண்’.

Adrian Moore's 'Erasure'


    கதையின் வடிவத்தை எழுதி அதற்குள்ளிருக்கும் எதிர் வடிவத்தை கதையாடல்களில் சொல்லிச்செல்வது நவீனத்துவம் பிறழும், நவீனத்துவத்துக்குப் பிந்தைய பொருண்மையைப் பிரதிப்படுத்தும் இக்கதையில் நிகழ்கிறது. கதையாடலின் மொழி வேடத்தில் கதை என்ற வகையைச் சார்ந்த அம்சம் தன்னையிழந்த சொல்லுதல்களாக சேகரமாகின்றன. மூன்று புள்ளிகளிலிருந்து சுழித்து, வெளிப்படும் கதையாடல் வெவ்வேறு பிரதியின் சகநிகழ்வுகளாக கதையுறுகிறது. மூன்று கதைகளின் மூன்று எதிரெதிர் புள்ளிகளின் மறுசொல்லல் ‘பெண் வேடமிட்ட பெண்’ணின் கதைமொழி. மூன்று வட்டங்கள் முக்கோண நிலைப்புள்ளிகளில் தன்னை மற்றமையோடு புணரும் மொழிவெளியை கதையாடலாக்கும் வினோத விளையாட்டு எம்.டி.எம்மின் புனைவு. தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் கதையை நமக்குச் சொல்கிறது இவரின் கதையாடல். 





2


    ஒரு நிகழ்வை முன்னிறுத்தி முன்நிகழ்வாகப் பார்த்தல் கதையின் நுட்பம். எழுதும் கதியில் எழுதப்படும் பிரதியியல் குறி தன் முன்னே வார்த்தையாகி நிற்பதை பன்மைப்படுத்துதல் எனலாம்.
“சந்தோஷத்தை விகார இளிப்பில் காட்டியபடி, காதை மலைமேட்டில் அழுத்தி, மண்டியிட்டு படுத்துக்கிடந்தவனுக்கு கொலுசுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. இதயத் துடிப்பை காலில் கட்டியல்லவா பெண்கள் நடக்கிறார்கள் என்றபடி நிமிர்ந்தவனின் முன்னே காலில் கொலுசுகளுடன் ஹம்ஸேஸ்வரி நின்றிருந்தாள், ஹம்ஸேஸ்வரி”

    இந்தக்குறிப்பில் வெளிப்படும் ஹம்ஸேஸ்வரியின் உடலியத்தின் நிலையின்மையைச் சொல்லும் மாற்றுக் கதையாடலை இதன்மேல் அடுக்கிச் செல்வதைப் பாருங்கள்.

    “எழுதிக்கொண்டிருந்த சந்திரன் கதையை நிறுத்திவிட்டு வெளியே பார்த்தான். ஆமாம் பெண் வேடமிட்ட பெண்’ பூமிதானென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கதைப்பிரதி எழுதும் தருணத்தில் அசட்டையாக நிகழும் பார்த்தலில் கதையே பூமியுருவாக தோற்றம் கொள்ளுதல் பிறரின் வார்த்தையில் பொருளடைதல் கதைசொல்லியின் பாதத்தில் உண்டாகிறது. அப்படியெனில் கதைசொல்லியின் இடையீட்டுப் பார்த்தலில் மொழி ஸ்தூலம் பெறுகிறது. கதைசொல்லியின் இப்பார்த்தல்போல்தான் கதைப்பிரதியின் வாசகனின் வாசிப்புக்கிடையே நிகழ்ந்துவிடும் பார்த்தல். அதன் மூலம் கதை பொருள்பெறுகிறது. இது ஒவ்வொரு அநித்திய கணத்தில் நிகழ்கிறது.

    “என்னை நீ கைவிடமாட்டாய், எதிர்காலமாய் எனவே சாவாகவும் இறந்தகாலமாக எனவே மதமாகவும் விளங்கும் மேற்குதிசையிலிருந்து உன் வெப்ப மூச்சுடன் கூடிய மந்திரக்குரல் ஒலிக்கிறது.”

    மந்திரக்குரலின் மொழி லயத்தில் ஹம்ஸேஸ்வரி பிரதிக்குள் மிதக்கிறாள். இப்படி பிடிபடும் ஹம்ஸேச்வரியின் என்ற ‘குறி’யின் உடலியம் - புறவயம் எப்படி சுட்டப்படுகிறது கதையின் போக்கில்….

    “ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸேஸ்வரி ஹம் என்பது அகத்தையும், அகம் இயற்கையின்வழி தன்னைதானே பொருளாக பார்த்துக்கொள்வதையும் குறிக்கட்டௌம். ஸே என்பது இப்படி பிரபஞ்சத்தில் இயக்கத்திலிருக்கும் சக்தியை குறிக்கட்டும்…..
ஹம்ஸாத்மன் அகமும் புறமும் இணைந்த தன்னிலையாக எட்டு இதழ்களுடைய தாமரையாக மலரட்டும். ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே”

    எம்.டி.எம்மின் கதையில் வரும் ஹம்ஸேஸ்வரி என்ற குறியின் பிரதியியல் வடிவத்தின் வரைபடும் மேரற்காட்டப்பட்ட பத்தியின் வரிகள் குறி அகமாகவும் சுயம்பார்த்தல் -பிரபஞ்ச சக்தியை குறித்தல்- இயற்கையின் பெரு விஸ்தீரணத்தில் மீண்டு மனமாதல் ஆகியவற்றை சுட்டுகின்றன இந்தப் பிரதியில் காணப்படும் குறியின் கதையாடலில் அகம் இயற்கை பொருளின் மீதேற்றப்பெறும் அபூர்வ மீள்வாகிறது. 


3


    மொழியால் பீடிக்கப்ப்பட்ட மற்றமையின் ‘குறி’ ஜெயராஜ். திக்கின்றி அலையும் ஒரு பருண்மையின் அகம் இவன். தன்னைத்தாண்டிய ஒன்றைத் துரத்திக்கொண்டே செல்லும் இவனது தடம் வடிவமற்றது. காற்றில் பதியும் ஒலியின் படிவமாக கதையுள் திரிகிறான் ஜெயராஜ். ஹம்ஸேயை யார் என அறியும் ஆகர்ஷத்தோடு கதையாடலை நகர்த்துபவன். “அறிவுக்கு அப்பாற்பட்டதை அறிவு வழி காண முயன்றதும்’ என்ற தன்னிலையை சுழற்றி வீசி திரிபவனான இவனது பைத்தியம் கதையின் ஓரங்களை தீர்மானிக்கிறது. வழமையான சட்டகங்களில் பிடிபடாதவை இவனது மொழி அலைவில் சிக்குகின்றன. தனது உள்ளுருவின் புறவய பிடித்தலாக ஹம்ஸேயை எழுதுகிறான்.

    “ஹம்ஸே என்ற பெயரில் பழங்குடிப்பெண் யாருமில்லை என்பதைக் கண்டறிந்தேன். இருந்தபோதிலும் எனக்கு எல்லா பழங்குடிப்பெண்களுமே ஹம்ஸேஸ்வரியாகத் தோன்றினர். விடுமுறை நாட்களில் சமவெளிக்கும் நகரங்களுக்கும் சென்று வந்தபோது அங்கேயுள்ள பெண்களும் ஹம்ஸேஸ்வரிகளாகத் தோன்றினர். மொத்தத்தில் உலகிலுள்ள அத்தனை பெண்களின் மீதும் மோகம் கொண்டவனானேன்”
   
    உலகின் அத்தனை மற்றமையரும் தனது பிரதிபலித்தலில் காணும் ஜெயராஜ் நிலப்பரப்புகளில் இடையே உள்ள வடிவ வேறுபாடுகளை கடந்து செல்கிறான். சமவெளிக்கும் நகரங்களுக்கும் மலைகளுக்கும் மாறி மாறி பிராயணப்பட்ட பிறகு மற்றமையின் உருக்கவில் ஒருமையுறும் குறியாக ஹம்ஸேஸ்வரியைக் காண்கிறான். அந்தத் தோற்ற பிறழ்ச்சியில் பயப்பட்டு ஜெயராஜ் ‘தான்’ என்ற நிலையை கட்டமைத்துக்கொள்கிறான். தனது பிரமையின் மன அலைகளில் தழைத்து வரும் ஒலி பிம்பமாக ஹ்மஸேயை உச்சாடனம் செய்து அதன் மிகையில் கரைந்து தன்னிலை அழிப்பாக்கத்தை பிரதியுள் செய்கிறான். இங்கு கதைசொல்லி யாரென்ற கேள்விக்கு இவனோ என்ற சந்தேகம் மேலெழுகிறது. ஆயினும் நகைமுரணை தலைகீழாக்கும் பிரதியியல் தந்திரம் இவனுடையதல்ல. கதைசொல்லியின் கதையாடலில் வரும்…

    “பௌர்ணமியன்று சூரியோதயம் காணப் புறப்பட்ட முட்டாள் நீ என்றாள் அவள்”
    இங்கே கதைசொல்லி அல்லாத ஒருவனான் ஜெயராஜின் நகைமுரண் தலைகீழாகிறது பாருங்கள். பௌர்ணமி அன்று சூரியனைப் பார்க்க கிளம்பியவன் பர்றிய மற்றொரு கதையாடல்…

    “பௌர்ணமிக்குள் குணமாகிவிட வேண்டும் என்றும் பிதற்றினான். அவனை குணமாக்கிவிடுவதாக ஆசுவாசப்படுத்திய நான் அவனுடைய முழுக்கதையையும் நான் கேட்டேன்” என்பதில் ஜெயராஜின் கதையைக் கேட்கும் மற்றொரு குரல் எது என கேள்வி நீள்கிறது. கதைசொல்லியை கதைகேட்போனாக தலைகீழாக்குதல் எம்.டி,எம்மால் நிகழ்த்தப்படுகிறது. கதைகேட்கும் கதைசொல்லியை வாசிக்கும் நாம் வாசகர்களா அல்லது கதைசொல்லியின் மற்றவைகளா?

4


    பிரதியின் நினைவிலியின் நிலவறையிலிருந்து தோன்றும் மென்னொளிக்கீற்று போல கதையாடல் ஆங்காங்கே குறியீட்டின் திசையைக் காட்டிச்செல்கிறது. நினைவின் பக்கங்களில் பல்கிப்பெருகும் ரேகையாய் ஹம்ஸேயின் பிரதி நுண்மையடைகிறது.. ஜெயராஜின் நோக்கமற்ற பிரயாணம் மெல்ல காரணத்தை அழித்த வெலியில் நுழைகிறது. மறதியின் தொடர்பற்ற நினைவுறுத்தல் போல கதையாடல் மொழியில் தட்டுப்படுகிறது. மற்றமையின் சொரூபம் இதுதான் என்று அறிந்திட முடியாத நுனியில்தான் வாசகன் தோன்றுகிறான். அப்படியெனில் கதைசொல்லியின் மற்றமை வாசகன். வாசகனின் மற்றமை கதைசொல்லி. ஒருவர் மாறி ஒருவராக கண்ணாடி முன் சொல்லிக்கொள்ளும் ஆடியில் மிதக்கும் பிம்பம்தான் இந்தக் கதைப்பிரதி. நம்மால் யூகிக்க இயலாதவைகள் இங்கு நிகழ்கின்றன. ஒரு பிம்பம் தன் நில எல்லைகளைத் தாண்டி வேற்று நிலப்பிரப்பில் வடிவம் பெர்றிருத்தல் ‘கதையின் யூகம்’ பிரதிப்படும் புள்ளி.

    “ஊரிலிருந்து என்னைப் பார்க வந்திருந்த என் இலக்கிய நண்பன் மூலமாக ஹம்சேச்வரிக்கென்று வங்காளத்தில் கோவில் ஒன்ரு இருப்பதாக அறிந்தேன். அந்தக் கோவில் தாந்த்ரீக முறைகளின்படி சுழல்பாதைகளால் அமைக்கப்பட்டதென்றும் அபூர்வமானக் கட்டிடக்கலையென்றும் என் நண்பன் தெரிவித்தான். ஜெயராஜிடம் இதைக் கூறியபோது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் ஆந்திராவிலும் கூட மனித மனங்களின் உள் அறைகளில் ஹம்ஸேஸ்வரியின் கோவில்கள் உள்ளன என்றான்”

    இங்கு மனித மனங்களின் உள் ளறைகளில் ஹம்ஸேஸ்வரிக்கு கோவில்கள் உள்ளன என்று சொல்கிறது கதையாடல். பருண்மையான குறிப்பீடாய் அனைத்து மலைகளிலும் இருக்கும் ஜெயராஜின் ஹம்ஸே குறிப்பீட்டு பன்மை. இதை கதைசொல்லி பெண் வேடமிட்ட பெண் புரியாத சங்கேதம் என்கிறான்.  கதைக்குள்ளிருந்து காணாமல் போகும் ஜெயராஜின் மறைவிலிருந்து மீண்டும் ஒரு கதை கிளைக்கிறது. குணமாகிவிட்ட ஜெயராஜ் மறைவதில் அவிழ்கிறது பெண் வேடமிட்ட பெண்ணின் சங்கேதம். மனவெளியின் கூக்குரலின் ஓசையின் லயத்தில் கதையின் அகஸ்மாத்து சுழற்சியில் திடீரென்று நிற்கும் ஹம்ஸேஸ்வரியால் மனங்களின் உள் அறைகளிலிருந்து ஒரு எதிர் நிலை பிரதி கட்டமைகிறது.

    “உடல் வெளியே கோவிலாய் சமைந்த ஹம்ஸேஸ்வரி கோவிலுள் நின்றுகொண்டிருக்கிறேன். ஏழு சக்கரங்களின் வழி வேப்பமரத்தாலான மூலஸ்தானம் நோக்கி ஏணிகள் இடப்பட்டுள்ளன. குழப்பமான சுழல் பாதைகளில் திகைத்து திகைத்து நிற்கிறேன். சக்கரப்பாதைகளில் சந்திர ஒளி இடது நாடியாகவும் சூரிய ஒளி வலது நாடியாகவும் என்னுள் துடிக்கிறது. இடா, பிங்களா, சூஷ்மணா, வஜ்ரஷா, சித்திரினீ என்று வழிகள் பெயரிடப்பட்டிருக்கின்றன. அகஸ்மாத்தாய் சுழலும் என் வழியில் திடீரென ஹம்ஸேஸ்வரி நிற்கிறாள்”
“நீங்கள் ஆணாயிருந்து இக்கதையை வாசித்தால் இக்கதைப் பனுவலே ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதை சொல்லியாகவும் நீங்கள் ஜெயராஜாகவும் உணர்வீர்கள்.
நீங்கள் பெண்ணாயிருந்து இக்கதையை வாசித்தல் இக்கதைப் பனுவலே ஜெயராஜாகவும் நீங்கள் ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதைசொல்லியாகவும் உணர்வீர்கள்.
வேறு சிலர் வேறு விதமாக உணர்ந்தால் கதையின் ஆரம்பப்பீடிகையை தயவுசெய்து மீண்டும் வாசிக்கவும். தயவுசெய்து. “

    சுய பிரக்ஞையுள்ள எழுத்தின் வாசிப்புக்கான பிரயத்தனத்தில் புனைவு எழுகிறது. மூன்று நிலைகளிலிருந்து பிரதி மொழிப்படுகிறது. ஒவ்வொன்றின் வாசிப்பு சுழற்சியில் மற்றமைகளின் பன்மைகள் வெளிப்படுகின்றன. தன்மை மங்கி வாசித்தலில் கரைகிறது. மற்றமையின் உடலியல் பிரதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது எம்.டி.எம்மின் பிரதி. 







பெண் வேடமிட்ட பெண்


   


   

No comments: