Friday, April 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

—-

இயற்றியவர்: தேவகுலத்தார்

குறுந்தொகையில் பாடல் எண்; 3

திணை; குறிஞ்சி

——

நிலத்தினும் பெரிதே வானினுமுயர்ந்தன்று

நீரினு மாராள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தே னிழைக்கு  நாடனோடு நட்பே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

மலைப்பக்கத்திலுள்ள கரிய கொம்புகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக்கொண்டு, பெரிய தேனை வண்டுகள் செய்தற்கான இடமாகிய நாட்டையுடைய தலைவனோடு யான் செய்த நட்பானது நிலத்தினும் பெரிது, ஆகாயத்தைக்காட்டிலும் உயர்ந்தது, கடலைக்காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது.

——-

வாசிப்பு

பிரம்மாண்டத்தின் பிரசன்னம் உலகப் பொருளாயத்துக்குத் திரும்புதல்

—-

இந்தக் கவிதை அதன் ஆரம்பக் கருத்தறிவிக்கும் செயற்குறிப்பாய், பிரம்மாண்டத்தின் பிரசன்னமாய், ‘நிலத்தினும் பெரிதே, வானத்திலும் உயர்ந்ததே’ எனக் காதலைத் தெரிந்தவற்றின் வரைபடத்திற்குள் பிடிபடததாய், அதை விடப் பெரியதாய், ஏதோ அந்த எல்லயற்றது இந்த கட்டற்ற உணர்ச்சியான காதலில் மூழ்கியிருப்பதை நமக்குத் தெரிவித்துவிடும் என்ற  நம்பிக்கையில் தொடங்குகிறது. அது ஒருவகையில் நமக்கு அறிமுகமான, உலகியல் சர்ந்ததை விட மேலான, பெரியது ஒன்றை முன்னுரிமைப்படுத்தும் மெய்யியல் சமிக்ஞை. இருப்பினும் அது கட்டுக்கடங்காததைச் சொன்னவுடனேயே உலகப்பொருளாயத்துக்குத் திரும்பி மலைச்சரிவுகளையும், குறிஞ்சி மலரையும், தேனுறிஞ்சும் வண்டுகளையும் சொல்லி கீழிறிங்கி வந்துவிடுகிறது. காதலானது அதன் உலகப் பொருளாயாத இருப்பிலிருந்து தப்பிச்செல்ல இயலாததாகத் தோன்றுகிறது.


துணைப்பொருளும் முரணும்

————

கவிதை ஒரு நிலைத்த ‘இந்த மனிதனுக்கான; இந்தக் காதலு’க்காக ஏங்குகிறது; ஆனால் அந்த குறிப்பிட்டதன்மை நிலையின்மையை விளைவிக்கிறது. ஏனெனில் இந்த ‘மலைச்சரிவுகளின் மனிதன்’ ஒரு மனிதன் மட்டுமல்ல; அவன்  நிலத்தின் பகுதியான, உரு; அந்த நிலப்பகுதியில் வாழ்வு வண்டுகளின் ரீங்காரத்துடனும், மொட்டவிழும் குறிஞ்சிகளோடும்  தன்போக்கில் உயிர்த்திருக்கிறது. அந்த மனிதன் அந்த நிலப்பகுதியில் இருக்கும் பண்பாட்டு வலைப்பின்னலில் ஒரு கணு.  குறிஞ்சிப் பூ, அது போலவே கவிதையின் சட்டகத்திற்கு வெளியே இருக்கும் வரலாற்றை கிசுகிசுக்கிறது. 


நாம் இங்கே காலத்தை வென்று நிற்கிற, சாசுவதமான விருப்பங்களின் முரண் ஒன்றை எதிர்கொள்கிறோம்; ஒன்றை அடையும் மனித செயல் என்பது அதிலிருந்து விலகுவதாகவும் இருப்பது. பெயரிடுவது என்பது சட்டகமிடுவது, எந்த சட்டகத்தின் உள்ளுமோ அதற்கு வெளியே இருக்கக்கூடிய ஒன்றின் உரு எப்போதுமே பழிப்பு காட்டுவது. ஆசை எதையும் உடைமையாக்க விழைவதில்லை, மாறாக அறிந்ததை ஆழம் காண இயலாததின் பிரதிபலிப்பாய் அது உருமாற்றுகிறது.  உலாகாய்த பொருளாயத்தை எந்த சொற்கள் கடந்து மேல் செல்ல விரும்பினவோ அவையே துணைப்பொருட்களாய் மாறி எந்த உலகை விட்டுச் செல்ல முயன்றனவோ அவற்றையே மீண்டும் சுட்டுகின்றன. இந்தக் கவிதை எந்தக் காதலை வரையறை செய்ய முயன்றதோ அதுவே இந்தக் கவிதையால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட இயற்கை என்பதை வெளிக்காட்டுகிறது. 


எழுதப்படாததும் தீர்மானிக்கமுடியாததும்

——

கவிதையில் பேசுகுரலாக இருக்கும் தலைவியின் அடையாளம் காதல் எனும் பெரு உணர்ச்சியில் கரைந்துபோய்விடுகிறது. அவளுடைய பின்னணிக்கதை எதுவும் நம் மேல் பாரமாக சுமத்தப்படவில்லை; எந்த ஒரு உறவின் உளியக்கமும் நமக்குச் சொல்லப்படுவதில்லை. நாம் ஒரு உண்ர்ச்சியின் பொங்குநிலைக்கு சாட்சியாக இருக்க மட்டுமே அழைக்கப்படுகிறோம்.  ஒரு பச்சையான உணர்ச்சியை அதை இவ்வுலகின் அடிப்படை மூலக சக்தியாக, நம்மை மூழ்கடிக்கக்கூடியதாக இருப்பதை உணர அழைக்கப்படுகிறோம். அடையாளமற்ற குரலாய் தலைவி இருப்பதால் அங்கே எழுதப்படாததும், தீர்மானிக்கமுடியாதுமாய் இருப்பது அனைவருக்குமானதாய் பரந்து விரிந்து விடுகிறது. வாசகி ஒருவர் இயல்பாய் இந்த தலைவியின் குரலில் ஏறி உட்கார்ந்து இது தன்னுடைய குரல் என சுவீகரித்துக்கொள்ளலாம்.


தூய இருப்பு உணர்ச்சிக்கு இல்லை

—-

இந்தக் கவிதை ஒரு கட்டுக்கடங்கா உணர்ச்சியை கட்டுக்கடங்கும் பொருட்களை வைத்து சொல்ல முயன்று அவ்வுணர்ச்சி தொடர்ந்து நழுவி நழுவிச் செல்வதை மொழியின் விரக்தியுடனும்  அதன் எழிலுடனும் சொல்கிறது.  தூய இருப்பு உணர்ச்சிக்கு இல்லை என்பதை அறிந்து நாம் பெருமூச்செறிகிறோம். 

-


No comments: