Sunday, August 9, 2026

ஃபூக்கோ: சில குறிப்புகள்



1

பழுதுபட்டுவிட்ட என் நினைவில் 1985 இலிருந்து 1987 -88க்குள் ஏதோ ஒரு வருடத்தில்  என்னுடைய நூல் ‘பிற்கால அமைப்பியலும் குறியியலும்’ வெளிவந்தபோது மிஷேல் ஃபூக்கோவின் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய நூலாக அது இருந்தது. அதாவது ஜுன் 25, 1984இல் ஃபூக்கோ  57 ஆவது வயதில் இறந்ததிலிருந்து ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே தமிழில் ஃபூக்கோவின் சிந்தனைகள் அறிமுகமாகிவிட்டன. என்னுடைய நூலின் அதிர்ஷ்டம் அது ஒரு கல்லூரியின் முதுகலை மாணவர்களுக்கு பாடநூலாக இருந்தது; என்னுடைய நூலின் துரதிருஷ்டம் அந்த நூல் அந்தக் கல்லூரிக்கு வெளியே சுற்றுக்குக் கிடைக்காதது. அதாவது கடந்த முப்பத்தைந்து சொச்ச வருடங்களாக ஒவ்வொரு வருடமும் முதுகலை மாணவர்கள் அந்த நூலைப் பயின்று அதன் வழி அந்த நூல் அறிமுகப்படுத்திய  ஃபூக்கோ, தெரிதா, லக்கான் ஆகிய சிந்தனையாளர்களை மேலே தொடர்ந்து பயின்று வருகிறார்கள். அன்றொரு நாள் ரோஜா முத்தையா நூலகத்திற்கு சென்றபோது இரண்டு பேர் அந்த நூலைத் தங்கள் பாடத்திட்டத்தின்படி படித்ததாகக் கூறினார்கள். 

———————-

2

சிறைச்சாலையின் பிறப்பு’ நூலில் ஃபூக்கோ எழுதுவார், “ஒழுங்குபடுத்தப்பட்ட உடல் என்பது பொருளாதார உற்பத்திக்காக சீரமைக்கப்பட்ட உடல்; அந்தந்த பொருளாதார பாங்கிற்கு ஏற்ப உடல்கள் ஒழுங்கமைக்கப்படும். “ஒழுங்கு இவ்வாறாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, தன்னிலை ஒடுக்கப்பட்ட மந்தமான (docile) உடல்களை உருவாக்குகிறது. ஒழுங்கு உடலின் பொருளாதார பயன்பாடு சார்ந்த சில சக்திகளை வளர்த்தெடுக்கிறது; கீழ்ப்படியாமை போன்ற வேறு சில உடல் சார் அரசியல் சக்திகளை குறைத்துவிடுகிறது. வேலை சார்ந்த உற்பத்தி சார்ந்த மனப்பாங்கினையும், பலத்தையும் அதிகரிக்கின்ற அதே வேளையில் அவற்றுக்கு எதிரான உடல் சக்திகளை கணிசமாகக் குறைத்துவிடுகிறது.” (Foucault in ‘Discipline and Punish’)  

————

3

Technologies of the self

-------

ஜக்கி வாசுதேவின் விளம்பர  யுடூப் வீடியோ ஒன்று பார்த்தேன் அதில் அவர் தன்னுடையது மதமல்ல, போதனையல்ல, ஆன்மீகம் அல்ல, தத்துவமல்ல, தொழில்நுட்பம் என்கிறார். உதாரணமாக நாம் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு உபயோகிப்பது போல நம் தன்னிலையை, 'நானை' ஏழு படிநிலைகளில் அதன் முழு கொள்ளளவுக்கு பயன்படுத்த வைக்க தன்னால் பயிற்சி கொடுக்கமுடியும் என்கிறார். அதைத் தொடரும் இன்னொரு விளம்பர வீடியோவில் மலச்சிக்கலுக்கு கொய்யாப்பழம் சாப்பிடச்சொல்கிறார்; வயிற்றுப்போக்குக்கு கொய்யா இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து அருந்தச் சொல்கிறார். இரண்டு வீடியோக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்தன. 

தொடர்புடையதா தொடர்பில்லாததா என்றபடிக்கு இன்னொரு விபரம். 

மிஷெல் ஃபூக்கோ 1982 இல் வெர்மோன்த் பல்கலைக்கழகத்தில் "Technologies of the self" என்ற தலைப்பில் தொடர் உரைகளாற்றினார். அவை அனைத்தும் பின்பு புத்தகமாகத் தொகுக்கப்படுள்ளன. ஃபூக்கோவின் உரைகள்  தன்னிலைக்கான தொழில்நுட்பங்கள் நம்மை எப்படி ஒரு கண்காணிப்பு சமூகத்தின் லாபமீட்டும் அடிமை அலகாக மாற்றுகின்றன என்பதை விளக்குவதாக அமைந்தன.

———

4

தன்னிலை-மற்றவை என்ற எதிர் இருமையாக இதர தத்துவவாதிகள் கட்டமைத்ததை மொழி ஊடாட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொண்டுவந்ததன் மூலம் தன்னிருப்பினை அரசியலுக்கான களனாகவும் கிறிஸ்தவா மாற்றிவிடுகிறார். தன்னிருப்பு (Subjectivity) மனத்தின் உள்ளார்ந்த தளத்திற்குள் எடுத்துச் செல்லப்படுவதால் அரசு, அதிகாரம், அடையாளப்படுத்தும் செயல்பாடு ஆகியனவும் மனம்-மொழி சார்ந்த மனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளாகிவிடுகின்றன. தன்னிருப்புகளின் தொகுதிகளாக தன்னிலையை கணிக்கும்போதே எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன தொகுதிகள் உருவாகி கலைகின்றன என ஃபூக்கோவினால் வரலாறுகளை புது விதமாக எழுதமுடிந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அரசும் அதிகாரமும் ஒருவனிடத்து மேற்பரப்பின் ஒழுங்காக தன்னிலையில் செயல்படுகிறதென்றால் அதன் மற்றதான எதிர் நிலை அரசு, அதிகார எதிர்ப்பும் அடிப்பரப்பில் செயல்படுவதாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் நீதியும்-குற்றமும், அறமும்-விகாரமும், எழுச்சியும் -வீழ்ச்சியும், ஒவ்வொரு தன்னிருப்பிலிருந்தும் கிளம்புவதாகவே ஒவ்வொரு வரலாற்றுக்கட்டமும் அமைவதாக இருக்கிறது. வெகுஜன தளத்திலிருந்து வரலாற்றினை ஒவ்வொரு குடிமகளின் தன்னிலைக்குமாக கிறிஸ்தவா நகர்த்தியது நீட்ஷேயிடம் தொடங்கி ஃபூக்கோ, தெல்யூஸ் என்று நீளும் தத்துவ பாரம்பரியத்தின் பகுதியாகும். 

——

5

மிஷெல் ஃபூக்கோ கத்தோலிக்க பாவ சங்கீர்த்தனத்தின் வேலை பாவ மன்னிப்பு வழங்குவதல்ல பாவங்களின் சொல்லாடல்களைப் பெருக்குவது என்று எழுதுவார். தேவதைகள் போன்ற அழகிகள் நம் திரைப்படங்களில் தங்களின் அங்கங்களின் நிலை மறந்து மரத்துப் போய் ஆடும்போது நமக்கு Fair is foul, Foul is fair என்று தோன்ற ஆரம்பித்துவிடுமல்லவா அந்த நிலையில் நம் பார்வைகளுக்கும், பாவ மன்னிப்புகளிக் கேட்கும் பிரதிநிதிகளைப் போலவே, கடவுளின் omnipotence வந்துவிடுகிறது. ஃபூக்கோ History of Sexulaity நான்காவது பாகத்தை Confessions of the Flesh (Les Aveux de la chair) என்று பெயரிட்டிருப்பார்.  முதல் பாகத்தில் [The Will to Knowledge (Volume 1 of The History of Sexuality)]  பாவ மன்னிப்பு சொல்லாடல்கள் பெருகிப் பெருகி அவற்றை அகம் நோக்கித் திருப்புவதற்குப் பதிலாக பிறர் நோக்கித் திருப்பிய மேற்கத்திய மனிதன்  சமூகக் கண்காணிப்புக்கான கருவியாக அதை மாற்றினான் என்று எழுதும் ஃபூக்கோ நான்காவது பாகத்தில் கண்காணிப்பின் இன்பமே அதிகாரமாக, அதுவே தண்டிக்கும் அதிகாரமாக மாறுகிறது என்று மேலும் விவரிப்பார். 

மேற்கத்திய உலகில் கத்தோலிக்க பாவமன்னிப்புச் சொல்லாடல்களின் இடத்தை தமிழ்நாட்டில் film voyuerism , அதன் pornography of violence ஆகியவை  எடுத்துக்கொண்டிருக்கின்றன.

6

The Spirit of a Spiritless World

1978 - 1979 ஆகிய ஆண்டுகளில் மிஷெல் ஃபூக்கோ Corriere della Sera என்ற இத்தாலிய பத்திரிக்கையின் செய்தியாளராக இரானில் ஷாவுக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சியை நேரில் பார்த்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார்.

அவர் எழுதிய கட்டுரைகளில் “The Shah is a Hundred Years Late”, “Tehran: Faith Against the Shah”, “What Are the Iranians Dreaming About?”, “A Revolt with Bare Hands”, “The Spirit of a Spiritless World”, “Is it Useless to Revolt?" ஆகிய கட்டுரைகள் முக்கியமானவை. இந்தக் கட்டுரைகள் ஃபூக்கோவின் மறைவுக்குப் பின் Janet Afary, Kevin Anderson ஆகியோர் தொகுத்த “Foucault and the Iranian Revolution: Gender and the Seductions of Islamism”  என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் இரானில் பெண்களுக்கான சமத்துவம் இல்லை என்ற மேற்கத்திய பார்வையை ஃபூக்கோ மறைமுகமாக முன்வைத்தாலும். அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த ஷாவின் ஆட்சிக்கெதிரான புரட்சியை நேரில் பத்திரிக்கையாளராகப் பார்த்த ஃபூக்கோ இரானிய மக்களைப் பற்றியும், அவர்களுடைய குணநலன்களைப் பற்றியும் பல முக்கியமான கருத்துக்களை முன்வைக்கிறார்.

ஃபூக்கோவின் அவதானங்களில் முக்கியமானது எப்படி இரானியர்கள் தனிநபர்களாக தங்களுடைய உள்ளார்ந்த அகத்தை தங்களுடைய புரட்சிகர எதிர்ப்பின் மூலமாக வடிமைத்துக்கொண்டார்கள் என்பது பற்றியது. ஷாவின் ராட்சச அதிகாரத்தையும் அதற்குத் துணை நின்ற அமெரிக்க ராணுவத்தையும் புரட்சியில் பங்கேற்ற மக்கள் ஒரு துளிக் கூட பயப்படவில்லை. அவர்களுக்கு இஸ்லாத்தின் ஆன்மீகப் பற்று எதிர்ப்பின் பின்னணியில் இருந்த வலுவாக விளங்கியது. இரான் இந்தப் புரட்சியின் போது, ஃபூக்கோ எழுதுகிறார், ஐரோப்பிய பத்தொன்பதாம் நூற்றாண்டு சோஷலிச சிந்தனையைப் பயன்படுத்தி எதிர்ப்பில் ஈடுபடவில்லை. “The Spirit of a Spiritless World” என்ற கட்டுரையில் ஃபூக்கோ இரானின் மக்கள் சக்தி தங்கள் ஆன்மீக நம்பிக்கையை தெருவிறங்கிப் போராடும் எதிர்ப்பாக கவித்துவமாக நிகழ்த்திக்காட்டுவதில் அடங்கியிருந்தது என்று எழுதுகிறார்.  இரானிய மக்களை ஆன்மீக அரசியல் சக்தி நிறைந்த மக்கள்  என்றும் ஃபூக்கோ விவரிக்கத் தயங்கவில்லை. 

—-

7

முல்லா நஸ்ருதீன் நேற்று சனிக்கிழமை இரவு தத்துவ நூல்கள் வாசிப்பதாயில்லை. விடுமுறையும் இல்லை, சனி இரவின் காய்ச்சலும் இல்லை, அவருடைய தத்துவ நூல்களுக்கான இரவு நோயும் குணமானபடியில்லை. பின்னே என்ன காரணம்? புத்தகக்கண்காட்சியில் கேட்ட கிசுகிசு ஒன்றே இரவுக்கும் போதுமான தத்துவமாய் முல்லா நஸ்ருதீனுக்கு இருந்தது. “கட்சிக்காக நாயாய்ப் பேயாய் உழைத்த எழுத்தாளன் அடையும் மேடையை, இன்னொரு எழுத்தாளன் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அல்லது மூன்று அரசு குமாஸ்தாக்கள் அல்லது இரண்டு பிஆர்ஓ அல்லது ஒரு பியூன் தயவிலேயே அடைந்துவிடுகிறான். மிஷெல் ஃபூக்கோவால் கூட  அதிகாரத்தின் பாம்பு நெளிவுகள் நம்மூரில் எப்படி இயங்குகின்றன என்று விளக்க இயலாது.”

—-

8

ஒரு இலக்கிய வாசகன் அறிந்திருக்க வேண்டிய மிஷெல் ஃபூக்கோவின் முக்கியமான வாசகங்கள்;

1. நம் எல்லோரிடமும் இருக்கக்கூடிய ஃபாசிஸம்  அதிகாரத்தின் மேல் நமக்கு விருப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது- எந்த அதிகாரம் நம்மை அடக்கி ஆள்கிறதோ, எந்த அதிகாரம் நம்மைச் சுரண்டுகிறதோ அதே அதிகாரத்தை நாம் விரும்புகிறோம்.

2. அதிகாரம் என்பது நிறுவனமோ அமைப்போ அல்ல.. அது ஒரு சமூகத்தில் நிலவக்கூடிய ஒரு திட்டத்தை நிறைவேற்ற உதவுகிற உத்திகளின் தொகுப்புக்கான பெயர்.

3. அடையாளமும் அதன் குணநலன்களும் கூடிய தனிநபர்- உடல்கள், பன்மைகள், இயக்கங்கள், ஆசைகள், சமூக சக்திகள் ஆகியவற்றின் மேல் தொழிற்படுகின்ற அதிகாரத்தின் விளைபொருள். 

4. எங்கெல்லாம் அதிகாரம் இருக்கிறதோ அங்கெல்லாம் எதிர்ப்பு இருக்கும்.

பின்வருவது ஃபூக்கோவின்  வாசகங்களல்ல:


சொல்லாடல்களுக்கு இடையிலான யுத்தமே அதிகாரத்துக்கும் அதன் எதிர்ப்புக்கும் இடையிலான யுத்தங்களாகும் . 


சுரண்டலுக்கான அதிகாரத்தை தொழிற்படுத்தும் சொல்லாடல், பெரும்பணி, அர்ப்பணிப்பு, தியாகம், தன்னழிவு, ஞானம், ஆகிய வார்த்தைகளால் நிரம்பி ‘அறம்’ ‘நீதி’ என்பவற்றை கட்டமைத்து உங்கள் பணத்தையும் நேரத்தையும் உங்களிடமிருந்து உருவுவதற்கு பயன்படுத்தும்; அது இந்தத் தன்னறமே பொது அறம் என உங்களை மூளைச்சலவை செய்யும். இந்த அதிகாரச் சொல்லாடல் உழைப்புக்கேற்ற கூலி, தனி நபர் உரிமை, சுதந்திரம், ஜனநாயகம், ஏற்றதாழ்வின்மை ஆகிய சொற்களால் ஆன சொல்லாடலை எதிர்ப்பு என்று முன்மொழியும்.