Monday, October 11, 2010

கோட்டி

என் முன் ஜென்ம ஊரில் பைத்தியத்தை கோட்டி என்பார்கள். கோட்டியின் மொழி, சிரிப்பு, அழுகை ஆகியவற்றில் ரகசிய சங்கேதங்கள் நிரம்பியிருப்பதாக அடிக்கடி நான் நினைப்பதுண்டு. ஓர் உச்சகட்ட ஒழுங்கில் அந்த சங்கேதங்களை ஆற்றுப்படுத்தினால் நம் அக வரலாற்றினை எழுதிவிட முடியும். ஒவ்வொரு காலகட்டத்திற்கென்றும் பிரத்யேகமாக உருவாகும் பிறழ்வுகளை தொகுக்கிற கதையல்ல நான் சொல்வது. அர்த்தங்களின் சிதைவிற்கு அப்பால், முழு அபத்தத்தில், பயனின்மையின் உச்சத்தில் அழகு விகசிக்கிறதே அதை கோட்டி என்று சொல்லாமல் எப்படி பெயரிட? கவிதையின் இயங்கு தளத்தில் அதை எப்படி கோர்க்க? திவாகரம் முதல் கடைசியாகக் கிடைத்த சமண நிகண்டு வரை சேகரித்து அவற்றின் வார்த்தைகளை அப்படியே ஊதிக் குவித்தால் கிடைத்து விடுமா கோட்டியின் பிம்பம்? நிச்சயமாக இல்லை. தா என்றால் தூ என்பேன் என்பது போன்ற சிறு சிறு ஒலி நயங்களுக்கு மயங்குவதிலிருந்து மொழி விளையாட்டின் அபாயகர அபத்த எல்லையை தொடுவது வரை உள்ள வளைவில் மறைந்திருக்கிறது கோட்டியாகிய கவிதை.

No comments: