Sunday, February 12, 2012

பராக்கு பார்த்தது: அழகுக் குறிப்புகள் 4

கள்ளிப்பெட்டி வலைத்தளத்தில் என்னுடைய 'சூத்திரங்களுக்கு' மேலும் பாஷ்யம் எழுதியிருக்கிறார் நட்பாஸ். பார்க்க: பராக்கு பார்ப்பது எப்படி? இந்த முறை 'சூத்திரங்களுக்கு' 'பாஷ்யம்' எங்கெங்கோ சென்று விட்டது. நான் எல்லா வகையான பராக்கு பார்த்தல்களைப் பற்றியும் எழுதவில்லை. எல்லா பராக்கு பார்த்தல்களையும் பற்றி எழுதினால் உலகில் சாட்சியாக இருப்பது எப்படி என்ற ஆன்மீக உபன்யாசத்திற்கும் குரு வழி உபதேசத்திற்கும் எளிதாகச் சென்றடைந்து விடலாம். அதுவல்ல நான் உத்தேசித்ததும் எழுதியதும். சாகாமல் தப்பிக் கிடப்பதால் நான் நானாகியதும் பராக்குப் பார்த்ததும் என்ற தலைப்பு பராக்கு பார்க்கும் சூழலைத் தெளிவாகத்தானே சொல்கிறது? i survived therefore I am என்ற நிலையில் உள்ளவன் வீட்டின் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தா சாவகாசமாகப் பராக்குப் பார்த்துக்கொண்டிருப்பான்? ஊழிக்கு, பேரழிவுக்கு, இனப்படுகொலைக்கு சாகாமல் தப்பிவிட்டவனின் பராக்கு பார்த்தல் புத்தம் புதிதாக உலகை அணுகுவதாக அல்லவா இருக்கும்? மொழியும் அர்த்தமும் தொலைந்து மீண்டும் ஆவி சேர்த்துக் கட்டி அணைத்து அல்லவா எழுப்பி நிற்க வேண்டும்? அர்த்தங்களின் உருவாக்கத்திற்கு முந்தைய ஜுலியா கிறிஸ்தவா குறிப்பிடும் chora அல்லவா அந்த நிலை? அந்த பராக்கு பார்த்தலில் காண்ட்டின் உலகளாவிய லட்சியங்களா அகத்தில் எழும் என்பதல்லவா விசாரிக்க புறப்பட்டது?

From http://geniscarreras.com/philosophy.html


 பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானிய பல்கலைக் கழகம் அறிவித்த What is enlightenment? என்ற கட்டுரைப் போட்டியில் இமானுவேல் காண்ட்டிற்குக் கிடைத்தது இரண்டாம் பரிசு. முதல் பரிசு பெற்றக் கட்டுரையை எழுதியவர் ஒரு யூத தத்துவ அறிஞர் என்று மட்டுமே இப்போது நினைவு இருக்கிறது. பெயர் மறந்துவிட்டது மன்னிக்கவும். அந்த முதல் பரிசுக் கட்டுரை ஒரு பண்பாட்டிற்குள் தன்னை இருத்திகொள்வதைப் பற்றியும், நட்பு, உறவுகள், குறிப்பிட்ட கால இட இணைவு இவைகளிலிருந்து உலகளாவிய லட்சியங்களை நோக்கி நகர்வது குறித்தும் பேசியது. 1929 இல் (ஆண்டெல்லாம் கூட நினைவு இருக்கிறது ஆனால் அவர் பெயர் மறந்துவிட்டது) நாஜி ஜெர்மனியில் அந்த யூத தத்துவ அறிஞர் யூதர் என்பதால் விலக்கப்பட்டபோது அவருடைய இடத்திற்கு வந்தவர்தான் ஹைடெக்கர். ஹைடெக்கரை ஒரு முனையிலும், காண்ட்டை எதிர் முனையிலும் வைத்து தெரிதாவின் வழி எழுதிப்பார்ப்பதுதானே என் உத்தேசம்? உரைகாரர் நட்பாஸ் ஹைடெக்கர் பற்றிய குறிப்பினால் என்ன புதிதாய் சேர்த்திருக்கிறார்?



No comments: