Wednesday, November 14, 2012

இந்திய தேசம் பற்றி கோவை ஞானி

ஜெயமோகன் தன்னுடைய ஆசானாக பல முறை அறிவித்த கோவை ஞானி இணையதள பேட்டி ஒன்றில் இன்றைய இந்திய தேசத்தின் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் என்னென்ன என்ற கேள்விக்கு விடையளிக்கும் முகமாகச் சொல்கிறார்:

"இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்திய தேசமென்று சொல்வதில் உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள்/பலதேசிய இனங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு தேசமென இராணுவம் முதலியவற்றை கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன் மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. காஷ்மீர் என்பது ஒரு மாபெரும் சிக்கல். அறுபது ஆண்டுகளாக காஷ்மீரை இந்தியாவோடு வைத்திருக்கவேண்டும் என்ற முயற்சியில் பலநூறுகோடி வீண் செலவு. ஆயிரக்கணக்கில் படுகொலைகள். இதுபோல பிற கிழக்கு மாநிலங்களிலும்
கடுமையான சிக்கல். இந்தியா என்ற ஒரு தேசத்திற்கு ஒரு மொழி தேவையென்ற நம்பிக்கையில் இந்தியின் ஆதிக்கத்தை தமிழ் முதலிய பலமொழிகள் மீது திணிக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பண்பாடு என்று ஒன்று இருப்பதாக நம்பி இந்துத்துவம் என்ற பிசாசை வளர்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் சட்டத்தினுள்ளும் சாதிக்கு இடம் தரப்பட்டிருக்கிறது. அந்நிய நிறுவனங்களின்
பொருளியில், ஆதிக்கத்திற்கு அணுசரணையாகவும் இந்தியாவை ஒரு தேசம் என்று வைத்திருக்க வேண்டியிருக்கிறது." பார்க்க http://koodu.thamizhstudio.com/nerkaanal_3.php

கோவை ஞானி சொல்லும் கருத்துக்களை அப்படியே பிசகாமல் குற்றங்களாக அடுக்கும் ஜெயமோகன் எழுதுகிறார்:

“இந்தியாவில் வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் நாட்டாரியல், மானுடவியல், சமூக அரசியல் தளங்களில் நிகழும் ஆய்வுகளில் பெரும்பகுதி பொதுவாக மூன்று ‘அஜென்டாக்களை’ கொண்டதாகவே இருக்கும். அவற்றை மீறி, அந்த முன் சட்டகத்தை மறுத்து ஓர் ஆய்வை எவரும் செய்துவிடமுடியாது.

1. இந்தியா பண்பாட்டு ரீதியாக ஒரே நாடல்ல. இது பல தேசியங்களை ஒடுக்கி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தேசியம்.
2. இந்து மதம் என்பது அடக்குமுறையாலும் மோசடியாலும் உருவானது. அதன் மையமான பிராமணியம் பிற கூறுகளை அடக்குகிறது, அழிக்கிறது.
இந்தியாவிலுள்ள சாதியவேறுபாடு என்பது இன [Race] வேறுபாடு. ஆகவே தலித்துக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது சமூகப்பிரச்சினை அல்ல இனப்பிரச்சினை.

இவற்றை நிரூபிக்கவே மீண்டும் மீண்டும் இந்த ஆய்வுகள் எழுதப்படுகின்றன. இங்குள்ள அறிஞர்கள் அந்த ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு நூல்களை உருவாக்குகிறார்கள். அந்நூல்கள் மூலநூல்களாக மேலைநாடுகளில் அங்கீகரிக்கப்படுகின்றன. அவை அவர்களால் மேற்கோள் காட்டப்படுகின்றன.

எஸ்.வி.ராஜதுரையின் ‘இந்து இந்தி இந்தியா’ என்ற நூலை மட்டும் வாசித்தாலே போதும். இந்திய தேசியம் ஒரு மோசடி, அது உடைந்து இந்தியா துண்டாகவேண்டும் என ஆவேசத்துடன் வாதிடுகிறது இந்நூல்.” பார்க்க http://www.jeyamohan.in/?p=28449

எஸ்.வி.ராஜதுரை ‘இந்து இந்தி இந்தியா’ நூலை எழுதுவதற்கு எந்தவித அந்நிய நிதியும் பெறப்படவில்லை என்று கூறியிருப்பதை ஒரு கணம் நாம் மறந்துவிடுவோம். எஸ்.வி.ஆர் எழுதுகிறார்:

“இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தையும் வலியுறுத்தும் எனது ‘இந்து இந்தி இந்தியா' நூலில்,  பொருளாதார, தேசிய இன ஏற்றத்தாழ்வற்ற ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தைக் கூறியிருந்தேன். இந்தியா என்னும் தேசத்தை பிரிட்டிஷார்தான் முதலில் உருவாக்கினார் என்பதாலோ, அதை சுரண்டும் வர்க்கங்களும் ஆதிக்கச்சாதிகளும் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள் என்பதாலோ அந்த சட்டகத்தை அப்படியே தூக்கியெறிய வேண்டியதில்லை; அதை புதிய இந்தியாவாக உருமாற்ற முடியும் என்பது எனது கருத்து.” பார்க்க  http://aadhavanvisai.blogspot.in/2012/11/blog-post.html

எஸ்.வி.ஆர். தன்னுடைய புத்தகத்தைப் பற்றி சொல்லும் கருத்தினை குற்றம்சாட்டும் ஜெயமோகன் ஏற்ற்க்கொள்ளவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் ஜெயமோகன் எந்தக் “குற்றச்சாட்டுகளை” எஸ்.வி. ஆரின் புத்தகத்தின் மேல் சுமத்துகிறாரோ அதே குற்றச்சாட்டுகளை தன்னுடைய கருத்தாக முன் வைக்கும் கோவை ஞானியை ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை?  கோவை ஞானி ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’ ஆகிய நூல்களைப் புகழ்கிறார் என்பதாலா? சுந்தர ராமசாமி திருப்பி அனுப்பிய கதையை ‘நிகழில்’ கோவை ஞானி பிரசுரித்தார் என்பதாலா? உண்மைதான் என்றால் புகழ்ச்சியாலும் பிரசுர ஏற்பாட்டினாலும் ஜெயமோகனை விலைக்கு வாங்கிவிட முடியுமா? முடியும் என்றால் ஜெயமோகனுக்கும் நிதியை வாங்கிக்கொண்டு அதற்கேற்ப ஆய்வுகள் செய்பவர்களாக ஜெயமோகனால் வசைபாடப்படுபவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இல்லை அப்படி தன் சிந்தனை விலை போவதால்தான் பிறரையும் ஜெயமோகன் அப்படி பழிக்கிறாரா? தன்னையும் தன் அனுபவங்களையும் வைத்து மட்டும்தானே அனைத்தையும், அனைவரையும் அளக்க ஜெயமோகனுக்குத் தெரியும்?

கருத்துலக ஊழல்கள் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிப்பதில்லை.

No comments: