Sunday, July 12, 2026

எஸ்.ஜானகி அம்மையார்: அஞ்சலி


உணர்ச்சிகளின் பாவனைகளுக்கும் அவற்றை வெளிப்படுத்தும் விதங்களுக்கும் இடையிலுள்ள மனச்சிதைவின் சீர்குலைவுகளை (schizophrenic disruptions) பார்க்கும்போது நான் மனம் கலங்கிப் போகிறவனாக இருக்கிறேன். எஸ்.ஜானகி அம்மையார் எஸ்.பி.பாலசுப்பிரமணியனோடு  பாடும் ‘அடியே மனம் நில்லுனா நிக்காதடி’ பாடலின் மேடை நிகழ்ச்சியை யூடூப் வீடியோவில் பார்த்தபோது அப்படியான மனச்சிதைவின் சீர்குலைவின் காட்சிப்படுத்துதலைக் கண்டதாக உணர்ந்தேன். நரை கூடிய கூந்தலோடு வெள்ளைப் புடவை அணிந்து, நெற்றி நிறைந்த நீறுடன் ஆடாமல் அசையாமல் கற்சிலை போல நின்று எஸ்.ஜானகி ஓர் இளம் பெண்ணின் பொய்க்குரலில் ‘ம்மா, அப்பப்பா’ எனப் பாடலில் வரும் காமத்தின் முக்கல்களையும் முனகல்களையும் பாடிக்கொண்டிருந்தார். யூடூப் வீடியோவை சற்றே பெரிதுபடுத்திப் பார்த்தபோது ஜானகியின் முகத்தில் கேலியின் இளநகை ‘எப்படிப் பொய்க்குரலில் பாடுகிறேன் பார்’ என்று சொல்வது போலப் பூத்திருந்தது. 

பாடுதல் என்பது பாவனை, நடிப்பு, ஒப்பனை, கேளிக்கை என்பதை எஸ்.ஜானகியின் பாடல்களே எனக்குச் சொல்லித் தந்தன.. அதாவது இங்கே ஆத்மாவிலிருந்து பாடுதல் என்றெல்லாம் எதுவும் இல்லை. எல்லாமே பாவனைகள்தான், திறன் வெளிப்பாடுதான், போன்மை செய்தல்தான், கேளிக்கைதான், காமத்தின் கிளர்ச்சியூட்டும் நரம்பிசைகள்தான், புனிதங்களற்ற நகைச்சுவைகள்தான். திறன்களை மட்டுமே நம்புவதுதான், மதிப்பதுதான் தமிழ்ச் சமூகம் என்ற என்னுடைய கருதுகோள் எஸ்.ஜானகி அம்மாவின் பொய்க்குரல் தேர்ச்சியால் உறுதிப்பட்டது. ஒருவேளை இது சிறு பெண்ணின், அல்லது பெண் குழந்தையின் குரலுக்கும் அதன் வீச்சுகளுக்கும் மெய்மறந்து போகும் affective dimension of semiosis ஆகக் கூட இருக்கலாம். 

ஆத்மார்த்தமாகத் தன் சொந்தக் குரலில்  பாடிய சி.எஸ்.ஜெயராமன், மதுரை சோமு, எம்.டி.ராமநாதன், கே.பி,சுந்தராம்பாள், பி.பி. ஶ்ரீனிவாஸ் ஆகியோரின் மரபு  ஆந்திரேயா, தீ (dhee) , சாருலதா மணி போன்ற பாடகிகளிடம் இன்னும் சுடர்விட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

ஒருவேளை நான் ஆத்மார்த்தம் என்ற பதத்தினால் குறிக்கும் பாடும் பாடலில் பாடகர்கள் கொடுக்கும் உணர்ச்சிகர முதலீடு  இப்போது தேவைப்படாததாய் இருக்கலாம். வெளிப்பாடுதானே முக்கியம் அதைப் பொய்க்குரலின் சாதுர்யத்தினாலும் திறனாலும் சாதித்தால் என்ன, உணர்ச்சிகர ஒன்றிணைவால் சாதித்தால் என்ன என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆத்மார்த்தமாகச் செய்வது பிசிறற்றதாய் இருக்காது, திறன் குறைந்ததாக இருக்கும் என்றும் சிலர் சொல்லக்கூடும். மதுரை சோமு ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை முருகா’ என்று பாடும்போது உண்மையாகவே மனம் உடைந்து அழுவார். அது கேட்பவரைப் பீடிக்கும்போது அகம் விம்மப் பிரக்ஞை உடையும். ஆனால் பாடலாக அது பிசிறு தட்டியது என்று சிலர் சொல்லக்கூடும்.  ஒரு வேளை எஸ்.ஜானகியின் போலிக் குழந்தைமை குரல் அதே உயர் பிரக்ஞை தளத்திற்குக் கேட்போரைக் கொண்டு செல்லலாம். யார் கண்டது? யார் கேட்டது? எஸ்.ஜானகியின் குரலை Falsetto என்று அழைப்பார்கள். அதன் விரிந்த தளங்கள் சாதாரணக் குரலின், அல்லது பொய்யாகக் குரலை மாற்றிப் பாட விரும்பாதவர்களுக்கு வாய்ப்பதில்லை. கொல்லங்குடி கருப்பாயி போலப் பாடுவது இயல்பானது, அழகானது. எஸ்.ஜானகி. சித்ரா, உமா ரமணன் போன்ற பல தென்னிந்தியப் பாடகிகளும் பொய்க்குரல்களில் பாடுபவர்களே.  பொய்மைக்குச் சாத்தியமாகும் இமாலய வணிக வெற்றி பொதுவாக உண்மைக்குச் சாத்தியமாவதில்லை.

எஸ்.ஜானகி அம்மையார் அவர்கள் தன்னுடைய சங்கதிகளை எப்படித் தன்னுடைய பாடல்களில் சாதிக்கிறார் என்பதை நான் எப்போதுமே கவனத்தில் கொண்டு அவருடைய பாடல்களைக் கேட்பவனாக நான் இருக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலி. 

No comments: