ஒரு படைப்பை அதன் வடிவத்தை மாற்றிப் பெயரிட்டு அழைத்து இழிவுபடுத்தினால் உங்களுக்குக் கோபம் கண்டிப்பாக வரும்தானே? யாராவது ஒரு கவிதையை கட்டுரை என்று பாராட்டுவார்களா? ஜூன் 2 ஆங்கில இந்து இணைப்பில் ‘ஆவக்காய்: தெலுங்கில் ஒரு கோடைகாலக் காதல் கதை’ என்ற கட்டுரையை வாசித்தபோது எனக்குக் கெட்ட கோபம் வந்தது. யாராவது ஒரு சாகசக் கதையைப் போய்க் காதல் கதை என்றழைப்பார்களா?
ஆவக்காய் ஊறுகாய் போடுவதற்கு மாங்காயைத் தேர்ந்தெடுப்பதிலிருந்தே உங்கள் சாகசம் தொடங்கிவிடுகிறது. கொத்தப்பள்ளி கொப்பரை அல்லது பெட்ட ரசலு வகை மாங்காய்களை நல்ல கற்பாறை போன்ற திடத்துடன் சதைப்பற்று அடர்ந்து இறுகிய மாங்காய்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவை ஏமாற்றும் முக இறுக்கத்தைக் கொண்டவை. வெட்டினால் சில உள்ளே கனிவில் கொளகொளத்திருக்கும். ஈவு இரக்கமில்லாமல் அவற்றைக் கழித்துவிடவேண்டும். சிறிது இனிப்பு கூட பச்சை ஆவக்காயை வெல்லம் போட்ட பெல்லம் ஆவக்காய் போல மாற்றிவிடும். வடிவக்கலப்பின் பின் நவீனத்துவம் தூய மரபான ஆவக்காய்க்கு ஆகாது. கொத்தப்பள்ளி கொப்பரை அல்லது பெட்ட ரசலு வகை மாங்காய்கள் கிடைக்கவில்லையென்றால் சின்ன ரசலா, குலாபி, ஜலாடு வகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்; பாதகமில்லை. சின்னச் சின்ன சமரசங்கள் இல்லாமல் வாழ்க்கையில்லை. ஆனால் பங்கனப்பள்ளி பக்கம் போய்விடக்கூடாது. பழத்தில் சிறப்பது காயில் உவக்காது. கொத்தப்பள்ளி கொப்பரை அல்லது பெட்ட ரசலு வகைகளில் கூட வைகாசியில் பூவெடுத்துக் காய்த்ததைத்தான் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். சித்திரையில் பூவெடுத்தது காய்த்ததை வாங்கி ஊறுகாய் போட்டால் பருவத்துக்கு முந்திய கலவி போல ரசனை குறைந்த ஆபாசமாகிவிடும்.
மாங்காயை ஆவக்காயாக்குவதற்கு உள்ளே இருக்கும் கொட்டையோடு சேர்ந்து அளவாய் வெட்டவேண்டும். கொஞ்சம் அதிகமாய் வெட்டினாலும் துவர்ப்பு கூடிவிடும், குறைத்து வெட்டினால்துவர்ப்பு குறைந்து ரசாபாசமாகிவிடும். கொட்டையை அளவாக வெட்டிய முதல் மகானுபாவன் அல்லது மகானுபாவி முன்னோடி கலைஞராக என்றென்றும் இனம் காணப்படவேண்டும். இப்படியொரு கண்டுபிடிப்பு வெட்டுக்கு கலையின் உள்ளொளியும் வரலாற்றுத் தருணமும் கைகூடி வந்திருக்க வேண்டும். அந்த தெய்வீக அருள் தருணத்தின் பொன்னொளி ஆவக்காயின் வரலாற்றின் தீராத பக்கங்களில் பொறிக்கப்படவேண்டியவை. இந்த வெட்டுதலில்தான் நமது சாகசக் கதை தீவிரமடைகிறது.
கண்ட ரெடிமேட் மிளகாய்ப் பொடிகளும் ஆவக்காய்க்கு ஆகாது. குண்டூர் அதி கார மிளகாய் வற்றல்களை நாசி கமற சந்தையில் வாங்கி வரவேண்டும். வீட்டுக்கு வந்து காய்கறிப்பையைத் திறந்தவுடனேயே கமறல் சப்தம் பக்கத்து வீட்டிலிருந்து வரவேண்டும். குண்டூர் மிளகாய் வற்றல் கிடைக்கவில்லையென்றால் ஆவக்காய் ப்ராஜெக்டைக் கைவிடுவது நல்லது. சில சாகசங்களை சரியான கருவிகள் இல்லாமல் நிறைவேற்ற முயலக்கூடாது என்பது பாலபாடம். குண்டூர் மிளகாய் வற்றல்கள் காரத்தில் அஸ்ஸாமின் குறு மிளகாய்களுக்கு மட்டுமே குறைந்தவை. அஸ்ஸாமின் குறுமிளகாய்களை நாகா ஊறுகாய்களில்தான் பயன்படுத்தமுடியும். தப்பும் தவறுமாய் சேர்த்தால் சீக்கிரம் விவாகரத்தாகிவிடும். வயிற்றுக்கும் ஆகாது. குண்டூர் மிளகாயை தெலுங்குப் படங்களின் அபத்தங்களை வைத்து குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவை மண்ணின் ஆவேசத்தினால் விளைந்தவை. உறைந்து போன ரத்த நாளங்களையும் பெருக்கெடுத்து ஓட வைப்பவை; அசையாத பெருங்குடல்களையும் அசைய வைப்பவை. குண்டூர் மிளகாய் வற்றல்களைத் துப்பாக்கி குண்டுகள் போலவே கருத வேண்டும்.
இந்த சாகசக் கதையில் கதாநாயகி கடுகென்பது பலருக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடும். புஷ்பா படத்தில் சமந்தா ஒற்றைப் பாடலுக்கு ஆடுவது போல கடுகை அரைத்து ஆவக்காயில் மிளகாய்ப்பொடி சேர்த்து ஊற்றவேண்டும். நல்லெண்ணெயில் சேர்த்தால் காரம் மட்டுப்படும்; கடலை எண்ணெய் கிராமத்துப் பழக்கம்; சூரியகாந்தி எண்ணெய்ப்பக்கம் போய்விடக்கூடாது; அது நகர வாழ்க்கையின் சாபக்கேடு. செக்கு நல்லெண்ணெய் சேர்ப்பது புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்குக் கொடுக்கும் கள்ள முத்தம் போன்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.
இவ்வளவு தயாரிப்பு சுஸ்ருஷைகளுக்கு உட்பட்டாலும் தயாரிக்கும் பெண்கையில் அன்பும் இயற்கையின் அனுகூலமும் இல்லையென்றால் ஆவக்காய் சோபிக்காது. நல்ல பீங்கான் ஜாடியில் ஆவக்காயை அதக்கி, அதன் வாயை வெள்ளை மல் துணி கட்டி வெயிலில் மூன்று நாள் வைத்து ஊற வைக்க வேண்டும்.
சீக்கிரம் ஆவக்காயில் பூஞ்சை படர்ந்துவிட்டால் சாகசம் தோல்வியென்று அர்த்தம். ஒரு வருடம் வரை ஆரோக்கியமாக ஆவக்காய் நீடித்திருக்க ஒவ்வொரு முறை ஒரு துளியை எடுத்து நுனி நாக்கில் சுவை பார்க்க ஜிவ்வென்று கண்ணும் மூக்கும் சிவக்க நெற்றியில் வியர்வை துளிர்க்க சகஜ சமாதி சித்தித்ததென்றால் சாகசம் வெற்றி என்று அர்த்தம்.
இதில் காதல் எங்கேயிருந்து வந்தது காதல்.
No comments:
Post a Comment