Sunday, November 27, 2011

நீர்க்கடன்






தோள் சுமந்த மட்பானையின்
முத்துளை நீரொழுக்கென
இழைகிறது
தூசு தட்டி எடுத்த 
அந்த பழைய ஓவியத்திலிருந்த
பெண் கை வயலின் இசை

பிறர் கேட்பதில்லை அதை 
வீடு திரும்பிய ஆள் நானென்று
அவர்களுக்குத் தெரிவதுமில்லை

பழைய இசைத் தட்டுகள்
பழைய நாவல்கள்
பழைய ஓவியங்கள் 
என என் வெளி நிறைக்கிறார்கள்
இங்கிதமற்று

நிறைவுறா
நினைவுகளின் நீர்க்கடன்
இசையினால் ஒழுக்காக
வெள்ளமாக அலைகளாக
பெருங்கடலாக
நீரால் அமைகிறது உலகு.





No comments: