Thursday, April 30, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 18- லாரா எஸ்குயிவெல் (Laura Esquivel) Like Water for Chocolate: A novel in monthly instalments with recipes, romances and home remedies



    பெண்களின் வரலாறு சமையலறை, உணவு ஆகியவற்றின் மூலமாக சொல்லப்படுகிறது என்று பேட்டியளித்த லாரா எஸ்குயிவெல்லின் நாவல் “Like water for chocolate” மெக்சிகோ புரட்சியினைப் பின்புலமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் கதையை சொல்கிறது. “Like water for chocolate” பன்னிரெண்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது அவை ஒவ்வொன்றும் மாதங்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. முதல்  அத்தியாயம் ஜனவரி. ஒவ்வொரு அத்தியாயமும் மெக்சிக உணவுப் பதார்த்தம் ஒன்றை செய்வதற்கான சமையல் குறிப்புடன் தொடங்குகிறது. தேவையான பொருட்களின் பட்டியலைத் தொடர்ந்து உணவு பதார்த்தத்தை எப்படி தாயாரிப்பது என்று விளக்கும்போது  எஸ்குயிவெல் அதை கதை மாந்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களோடு இணைத்துவிடுகிறார். முதல் அத்தியாயம் ஜனவரி Christmas rolls செய்வதற்கான சமையல் குறிப்புடன் தொடங்குகிறது:

Christmas Rolls
Ingredients
1 can of sardines
1/2 Chorizo sausage
1 onion
i can of chiles serranos
10 hard rolls

Preparation

Take care to chop onion fine. To keep from crying when you chop it (which is so annoying) I suggest you place a little bit on your head. The trouble with crying over an onion is that once the chopping gets you started and the tears begin to well up, the next thing you know you jsut cant stop. I just do’t know whether that’s ever happened to you but I have to confess it’s happened to me many times. Māmā used to say it was because I was especially so sensitive to onions like my great aunt, Tina.

    நாவலின் கதை மெக்சிகோவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள எல்லைப் பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் நடைபெறுகிறது. கதையின் நாயகியான டிடாவுக்கு நாவல் ஆரம்பிக்கும்போது 15 வயது. அவள் தன் தாய் எலெனா, சகோதரிகள் ஜெர்ட்ரூடிஸ், ரோசரா ஆகியோருடன் பண்ணையில் வசித்து வருகிறாள். டிடா பக்கத்து பண்ணையில் வசிக்கும் பெட்ரோவின் மேல் காதல் வசப்படுகிறாள். மெக்சிகோவின் மரபுப்படி வீட்டின் கடைசி மகள் தாய் தந்தையரை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறபடியால்  டிடா,  பெட்ரோ திருமணத்திற்கு தாய் எலெனா அனுமதி தர மறுக்கிறாள். வேண்டுமென்றால்  பெட்ரோ தன்னுடைய இன்னொரு மகள் ரோசராவை மணம் புரிந்துகொள்ளலாம் என்று எலெனா சொல்ல  பெட்ரோ டிடாவின் அருகாமையிலேயே ரோசராவை மணம்புரிந்துகொண்டாவது இருக்கலாமே என்ற எண்ணத்தில் அவளை மணந்துகொள்கிறான். டிடாவுக்கும்  பெட்ரோவுக்குமான காதல் வெளிச் சொல்லப்படாததாக ஆனால் பண்ணை முழுக்க அதன் கொதிநிலையில் மறைந்திருக்கிறது. டிடா தன் உணர்ச்சிகளை  சமையலில் மட்டுமே வெளிப்படுத்துவளாக இருக்கிறாள். “Like water for chocolate” என்பதே சாக்லேட் பானத்திற்கு பதிலாக கொதிக்கும் வெந்நீரை தருவதா என்ற ஸ்பானிஷ் பேச்சு வழக்கினை குறிப்பதாகும்.

    லாரா எஸ்குயிவெல்லின் நாவல் மெக்சிகோவின் வெகுஜன பத்திரிக்கையில் வெளிவந்தபோது இலக்கிய நாவலாக அறியப்படவில்லை. காதலையும் அது சார்ந்த உணர்ச்சிகளையும் வெகு ஜன தளத்தில் எடுத்தியம்பும் பாப்புலர் நாவலாகவே கருதப்பட்டது. ஆனால் சில இலக்கியப் பிரதிகள் இலக்கியமாக கண்டடையப்படுவதற்கு வருடங்கள் தேவைப்படுகின்றது சில சமயங்களில் மொழிபெயர்ப்புகளும் உதவுகின்றன. Like water for chocolate  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர்  திரைப்படமாகவும் புகழ்பெற்ற இந்த நாவல் அது சொல்லப்பட்ட முறைகளினால் மட்டுமல்லாமல் அதன் உள்ளார்ந்த கலைப்பார்வைக்காகவும் சிறந்த இலக்கியமாக விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. கார்லோஸ் ஃபுயெண்டெஸின் Death of Artemio Cruz மெக்சிக புரட்சியின் வரலாற்றினை ஆண்களை மையப்படுத்தி சொல்லியதென்றால் எஸ்குயிவெல்லின் நாவல் அதே மெக்சிக புரட்சியின் வரலாற்றினை பெண்களின் கதை வழி சொல்கிறது.

    மரபுகள் ஒரு சமூகத்தின் சரித்திரத்தில் வன்முறையான இறுக்கத்தை உண்டாக்கக்கூடும். நாவலில் டிடாவின் தாய் எலெனா அம்மாதிரியான மரபின் வன்முறைக்கு குறியீடாகிறாள். தாய் எலெனா இறந்த பிறகும் கூட டிடாவை வாழவிடுவதில்லை. அவள் பேயாக வந்து டிடாவை அலைக்கழிக்கிறாள். நாவலின் இறுதிப் பகுதியில் எலெனாவின் ஆவியோடு பேசிக் கொண்டிருக்கும் டிடா ஒரு கட்டத்தில் எலெனா உருவாக்கும் மன இறுக்கத்தின் வன்முறை தாளமுடியாமல் பண்ணையை தீயிட்டு கொளுத்திவிடுகிறாள். டிடாவின் சமையல் குறிப்புகள் அடங்கிய நோட்டுப்புத்தகம் மட்டும் கடைசியில் எஞ்சுகிறது.

    நாவலில் வரும் பெண்கள் அனைவருமே தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். டிடா, ஒரு முறை  பெட்ரோவை நிணைத்துக்கொண்டே காம உணர்ச்சிகள் மேலிட்டவளாய் ரோஜா இதழ்களில் வெந்த காடைக்கறி செய்கிறாள். அதை சாப்பிடும் அவள் சகோதரி ஜெர்ட்ரூடிஸுன் காம உணர்ச்சிகள் வெகுவாகத் தூண்டப்படுகின்றன. ஜெர்ட்ரூடிஸ் அவளுடைய காதலிக்கும் புரட்சிகரப்படையின் சிப்பாய் ஒருவனுடன் வீட்டை விடு ஓடிப்போகிறாள். அவர்கள் ஓடும் குதிரையின் மேலேயே உடலுறவு கொள்கிறார்கள். Like water for chocolate திரைப்படத்தில் ஓடும் குதிரைமேல் ஜெர்ட்ரூடிஸும் அவள் காதலனும் கொள்ளும் உறவுக்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்சிகர சிப்பாய் காதலன் ஜெர்ட்ரூடிஸை ஒரு விபச்சார விடுதியில் சேர்த்துவிட்டு காணாமல் போகிறான். பல பல வருடங்களுக்குப் பின் வீடு திரும்பும் ஜெர்ட்ரூடிஸை எலெனா ஏற்றுக்கொள்வதில்லை. அவள் ஊரினாலும் குடும்பத்தினாலும் ஒதுக்கப்பட்டவளாக வாழ்கிறாள். ஒரு தேசத்தின் வரலாற்று நிகழ்வுகள் தனி மனித வாழ்க்கையில் எப்படியெல்லாம் குறுக்கீடுகளை நிகழத்துகின்றன என்றும் Like Water for chocolate ஐ வாசிக்கலாம்.

    மெக்சிகோ நிலப்பகுதியின் வெப்பமும், அதன் உணவின் காரமும், மக்களின் அதீத உணர்ச்சிகளும் நிறைந்த நாவல் Like water for chocolate. மெக்சிகோவின் காதல் பற்றிய அதிக கவனக்குவிப்பையும் அதன் ரொமாண்டிசிச மரபினையும் வெளிப்படுத்தும் பாப்புலர் நாவல் இது என்று சில விமர்சகர்கள் லாரா எஸ்குயிவெல்லின் நாவலை விமர்சிக்காமலும் இல்லை.

    ஆனால் ரொமாண்டிசிசம் முழுமையாக செத்துவிட்டால் கவிதையே எழுதமுடியாது, கற்பனாவாதம் கண்டிப்பாக இலக்கியத்திற்கும், கவிதைக்கும் தேவை என்று லாரா எஸ்கியுவெல்லின் சக மெக்சிகரான ஆக்டேவியா பாஸ் வாதிடவில்லையா, என்ன? 


 http://www.amazon.com/Like-Water-Chocolate-Laura-Esquivel/dp/0739334190







No comments: