Thursday, April 16, 2015

கவிதை எழுதுவது எப்படி? | குட்டிக்கதை

       முல்லா நஸ்ருதீனிடம் அவர் மகன் கவிதை எழுதுவது எப்படி என்று கேட்டான். நஸ்ருதீன் அவனுக்கு ஒரு கதை சொன்னார்.

       ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் அவனுக்கு மிகவும் வயதாகிவிட்டபடியால் தொழிலுக்கு செல்ல முடியவில்லை. அவனுடைய மகன் குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான். சரி வா என்று முதிய திருடன் மகனைத் திருட கூட்டிக்கொண்டு போனான். ஒரு வீட்டுக்குள் இரவு நுழைந்தபின், திருடன் மகனை ஒரு பீரோவுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெகுவாக சத்தமெழுப்பிவிட்டு அவன் ஓடி தப்பிவிட்டான். பீரோவுக்குள் மாட்டிக்கொண்ட மகனுக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான், பயந்தான். முதிய திருடன் எழுப்பிய ஓசையில் வீட்டிலுள்ளவர்கள் விழித்துக்கொண்டார்கள். உடனே மகன் பீரோவுக்குள்ளிருந்து பூனை போல கத்தினான். பூனைதான் உள்ளே மாட்டிக்கொண்டதாக்கும் என்று நினைத்து வீட்டிலுள்ளோர் பீரோவைத் திறக்க, மகன் அவர்கள் இருட்டில் ஏந்திவந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு தப்பி ஓடினான். வீட்டிலுள்ளோர் அவனை துரத்திக்கொண்டு வந்தார்கள். மகன் புழக்கடையில் இருந்த கிணற்றில் கல் ஒன்றைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓரமாக ஒளிந்துகொண்டான். திருடன் கிணற்றில் விழுந்துவிட்டான் என்று நம்பி அவர்கள் கிணற்றுக்குள் அவனைத் தேடுவதில் மும்முரமாய் இருக்கும்போது அவன் நழுவி வீட்டுக்கு சாவகாசமாய் வந்து சேர்ந்து விட்டான். முதிய திருடன் மகனிடம் கேட்டான்
"அதாவது அப்பன் என்னை இப்படி ஒரு இடத்தில் மாட்டிவிட்டானே என்று நினைத்தாய்?"
"ஆமாம்"
“அதாவது பூனை போல கத்தி நீ ஒரு பூனை என்று பிறரை நம்ப வைத்தாய்?”
“ஆமாம்”
“அதாவது கிணற்றுக்குள் கல்லைப் போட்டு நீதான் விழுந்துவிட்டாய் என பிறரை நம்ப வைத்தாய்” “ஆமாம்”
“அது சரி, ஆனால் திருடின பொருள் எங்கே?”
மகன் திருதிரு என்று முழித்தான்.
 தயங்கி “அப்பா, நான் எதையும் எடுத்து வரவில்லை” என்றான் மகன்.
 “போடா, நீ கவிதை எழுதத்தான் லாயக்கு”

No comments: