Wednesday, May 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 32

திணை:குறிஞ்சி

————-

காலையும் பகலுங் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலொடு மறுகிற் றோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காலைப்பொழுதும், உச்சிப்பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியற்காலமும் என்ற இச்சிறுபொழுதுகள் இடையே தோற்றுமாயின் அத்தகையோருடைய காமம் உண்மையானதன்று, பிரிவு வருமாயின் பனை மடலாற் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து யாவரும் இன்னாளால் இவன் இச்செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும். அது செய்யாது வாழ்ந்திருந்தாலும் பழிக்குக் காரணமாகும்.

———

கையறு மாலை

——

திருக்குறள் 1227 “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்” என்று கூறுவது போலவே தலைவனும் இக்கவிதையில் காம நோய் மிகுந்து செயலறுதற்கு ஏதுவாகின்ற மாலையை “கையறு மாலை” என்றழைக்கிறான். பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். சிறுபொழுது என்பது  ஒரு நாளின் சிறுபிரிவு:

மாலை, யாமம் (நள்ளிரவு), வைகறை (அதிகாலை நேரம்)

எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்),  நண்பகல்

எனச் சிறுபொழுது 5 பிரிவுகளை உடையது.


பெரும்பொழுது இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.இளவேனில் (சித்திரை, வைகாசி மாதங்கள்), முதுவேனில் (ஆனி, ஆடி மாதங்கள்)

கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்), முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்)

பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்) ஆகியன பெரும்பொழுதுகள் ஆகும். 


குறிஞ்சித்திணைக்கு  யாமம் சிறுபொழுது, கூதிர், முன்பனிக்காலங்கள் பெரும்பொழுதுகள். 

பாலைத்திணைக்கு   நண்பகல் சிறுபொழுது வேனில், பின்பனிக்காலங்கள் பெரும்பொழுதுகள். 

முல்லைத் திணைக்கு மாலை சிறுபொழுது, கார் காலம் பெரும்பொழுது. 

மருதத்திணைக்கு  வைகறை சிறுபொழுது  கார்காலம் முதலான ஆறும் பெரும்பொழுதுகள்.

நெய்தல் திணைக்கு எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்) சிறுபொழுது கார்காலம் முதலான ஆறும் பெரும்பொழுதுகள். 


தலைவன் இக்கவிதையில் முதல் யாமத்தை விடுத்து இடையாமத்தைக் கருதி ஊரினர் துஞ்சும் யாமம் என்றான். 

——-

தெற்றெனத் தூற்றல்

——-

தலைவி என்னைத் துன்புறுத்தினாள், அவள் என் குறையறிந்து நிறைவேற்றமையினால் மடலேறுவேன் எனத் தோழியிடம் தலைவன் அப்படி மடலேறி அவளை அடைந்தால் அது தலைவிக்குப் பழி தருவதாதலால் அதைச் செய்ய துணியமாட்டேன்; அது செய்யாது உயிர் வைத்துக்கொண்டு தலைவி இல்லாமல் வாழ்வதும் அரிது ஆகவே உயிர் நீத்தலே நன்று என்று தலைவன் தோழியிடம் இரக்கம் உண்டாகும்படிக் கூறுகிறான். 


களவொழுக்கத்தின் இலக்கணங்களில் இறுதியாகிய சாக்காடு என்பதை தொல்காப்பியம் களவொழுக்கம் சூத்திரம் 9 கூறுவது இதனுள் வரும்.


பொழுதுகள் பற்றியும் களவொழுக்க இலக்கணத்தைப் பற்றி அறியவுமே இக்கவிதை உதவியாக இருக்கிறது. 

——- 



No comments: