Sunday, June 30, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-70

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-70

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம்  கூறியது

இயற்றியவர்: கருவூர் ஓதஞானியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 71

திணை: பாலை

————

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்

பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்

கல்கெழு கானவர் நல்குறு மகளே

——-

நெஞ்சே, மார்பில் தோன்றிய சுணங்கினையும், அழகிய பருத்த இளமையுடைய முலையினையும், பெரிய தோளையும், நுண்ணியதாக இடையையும் உடைய, கற்களை உடைய காட்டையுடையவர் பெற்ற மகள், காமநோய்க்குப் பரிகாரம் வேண்டுமென்று நினைத்தால் எனக்கு மருந்தாவாள்; போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதினால் எனக்குச் செல்வமுமாவாள். 

———-

தோள் பெருத்தலும் இடை சிறுத்தலும்

——-

தோள் பெருத்தலும் இடை சிறுத்தலும் மகளிர்க்கு அழகு என இந்தப் பாட்டில் மட்டுமல்லாமல் பல சங்ககாலப்பாடல்களிலும் வாசிக்கக்கிடைக்கிறது. குறுந்தொகை 95 ஆவது பாடலில் வரும், ‘சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்’, என்ற வரியும் அகநானூற்றில்  374 ஆவது பாடலில் வரும் ‘பெருந்தோள் நுணுகிய நுகப்பின், திருந்திழை அரிவை’ என்ற வரியும் கலித்தொகை 108 ஆவது பாடலில் வரும் “ தோள்..எனப் பெருகி நுதல், அடி,  நுகப்பு என மூவழிச் சிறுகி” என்ற வரியும் இப்பாடலில் வரும் ‘பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்’ என்ற வரியோடு சேர்த்து வாசிக்கத்தக்கவை.  பிணி நீங்க மருந்தாகும்  சுணங்கு என்பதற்கு அழகுத்தேமல் என்றொரு பொருளிருக்கிறது; இதைப் பெருங்கதையில் வரும் 

 "மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின்" என்ற வரியால் அறியலாம்.  சுணங்கு என்பதற்கு  பசலை என்றும் பூந்தாது என்றும் பொன்னிறப் பருக்கள் என்றும் அர்த்தங்கள் இருக்கின்றன. தலைவியின் முலைகளில் இருக்கும் பூந்தாது போன்ற பொன்னிறப்பருக்களை தலைவன் அரும்பிய சுணங்கு என்றழைக்கிறான். 

——

அம்பகட்டு இள முலை

——

வனப்பும் பெருமையும் ஒருங்கே உடைய என்பான் அம் பகட்டு இள முலை என்றான் என பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதுகிறார். 

தலைவன் தலைவியிடமிருந்து பிரிந்து செல்லுதலைத் தவிர்த்தல் செலவழுங்குதல் என அழைக்கப்படுகிறது. செலவு(பயணம்);  அழுங்கு (நிறுத்தம்) செலவழுங்குதல் - பொருள்வயின் பிரிந்து செல்லும் பயணத்தைத் தவிர்த்தல். இறையனார் அகப்பொருளுரை களவியல் சூத்திரம் 51 “தலைவன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது” என இத்தகைய பாடல்களில் வருவனவற்றைக் குறிக்கிறது.  உகாய்க்குடிக்கிழார் இயற்றிய குறுந்தொகைப் பாடல் 63-இலும் செலழுங்குதல் வருகிறது அங்கேயும் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான். ஆனால் அங்கே தலைவன் நெஞ்ச்சொடு பேசுதல் தலைவியைப் பிரிந்து செல்வதற்கான முன்னோட்டமாய் இருக்கிறது; ஆனால் இந்தப்பாடலில் வைப்பெனின் வைப்பு என்ற சொற்கள் தலைவன் தலைவியை செல்வமாகவும் கருதுவதால் அவன் உண்மையிலேயே பொருளீட்டும் பொருட்டு தலைவியைப் பிரிந்து செல்லாமல் நிற்கிறான் என பொருள் தருகிறது. இதை மருந்தும் வைப்பும் இன்பமும் என்னும் இம்மூன்றும் சுணங்கையும் முலையையும் தோளையும் நுசுப்பையுங் கொண்டு எனக்குரிய மகளாக இயைந்திருக்க ஈண்டிருந்து துய்த்தல்விட்டுப் புறம் போவது எற்றுக்கென்று செலவு அழுங்கினான் என இரா. இராகவையங்கார் விளக்கமளிக்கிறார்.

———

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

——-

வைப்பு என்ற சொல்லுக்கு செல்வம், சேமநிதி ஆகிய அர்த்தங்கள் இருக்கின்றன. மருந்தே, வைப்பே ஆகியவற்றில் வரும் ஏகாரங்கள் தேற்றேகாரங்கள் ஆகும். தலைவியைப் பிரிந்தால் காமநோய்க்கு மருந்தில்லை, அம்மருந்தும் தேடிச்செல்லும் செல்வமும் இவளேயாகையால் தலைவன் செலவழுங்கினான். கானவர் நல்குறு மகளென்றது அனைத்தும் ஒரு பெயராய் நின்று முலை முதலியவற்றிற்கு தலைவன் கூறும் உறுப்பு நலன்களோடு இயைந்தது. 


மருந்து, வைப்பு, இன்பம் என மூன்றும் முலை, தோள், நுசுப்பாக

தலைவி மருந்து எனின் மருந்து, செல்வம் எனின் செல்வம்.

——


No comments: