Thursday, June 18, 2026

ஜேம்ஸ் ஜாய்ஸின் “யுலிசஸ்”: பிரசுர வரலாறும் பிரசவ வேதனைகளும்




ஜேம்ஸ் ஜாய்ஸின் “யுலிசஸ்” நாவலுக்கு தீர்மானமான, ஜாய்ஸ் எழுதியதன், பிழைகளற்ற இறுதிவடிவம்  இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். “யுலிசஸ்” நாவலின் பிரசுர வரலாறு பல பிரசவ வேதனைகளால் நிரம்பியது என்றாலும் அதன் இறுதி வடிவம் ஜாய்ஸ் என்ற மேதையின், கலைநுட்பப் பிழைகளால் ஆனது. பிழைகளே மனிதத்தன்மை கொண்டவை; துல்லியம் எந்திரங்களுக்கே சாத்தியமாவது. துல்லியத்தின் பெயரால் சத்தியம் செய்யும் கடையர்கள் எந்திர மூளை கொண்டவர்கள்; கலையின் செயல்பாடு அறியா மூடர்கள் என்பதே “யுலிசஸ்” நாவலின் பிரசுர வரலாறு நமக்குக் காட்டித்தரும் பாடம்.

“யுலிசஸ்” நாவலின் பிரசுர வரலாற்றில் அடங்கியுள்ள சிக்கல்களை நாம் புரிந்துகொள்ள ஜாய்ஸ் இந்த நாவலை எப்படி வடிவமைத்துள்ளார் என்று அறிவது அவசியமாகும்.  ஜாய்ஸ் முதலில் யுலிசஸை தன்னுடைய 1906 “டப்ளைனர்ஸ்” சிறுகதைத் தொகுதியில் சேர்ப்பதற்கான இன்னொரு சிறுகதையாகத்தான் கற்பனை செய்திருந்தார். ஆனால் அந்த சிறுகதை வளர்ந்து வளர்ந்து 2,65,000, சொற்களும் பதினெட்டு அத்தியாயங்களும் கொண்ட மாபெரும் கலைப்படைப்பாக இறுதி வடிவத்தை எட்டியது. “யுலிசஸ்” நாவல் 1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டது. ஜூன் 16 இன்றளவிலும் ஜாய்ஸின் வாசகர்களால் நாவலின் மைய கதாபாத்திரமான லியோபோல்ட் ப்ளூமின் பெயரால் “ப்ளூம்ஸ் டே” ( Doomsday என்பதற்கான சிலேடையும் கூட) என்று கொண்டாடப்படுகிறது. நாவலில் லியோபோல்ட் ப்ளூம் அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரத்தில் செய்தித்தாள் விளம்பரப் பக்கங்களை விற்கும் விற்பனையாளன்; அவனுடைய மனைவி மாலி ப்ளூம் அவனுக்கு விசுவாசமாக இல்லாத பேரிளம் பெண். லியோபோல்ட் ப்ளூமுடனும் இன்னும் பலருடனும் ஊடாடும் ஸ்டீபன் டெடலாஸ் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் விடா முயற்சியில் இருப்பவன். ஸ்டீபன் டெடலாஸை நாம் ஏற்கனவே ஜாய்ஸின் முதல் நாவலான “Portrait of an Artist as a Young Man “ நாவலில் சந்தித்திருக்கிறோம். இந்த மூவரும்தான் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஜாய்ஸ் “யுலிசஸ்” நாவலின் வடிவத்தை ஹோமரின் செவ்விலக்கிய  கிரேக்க காப்பியமான “ஒடிசி”யின் வடிவத்தைப் பின்பற்றி கட்டுத்தளர்வற்ற முறையில் அமைத்திருந்தார். லியோபோல்ட் ப்ளூம் ஹோமரின் வீர காப்பியத்தின் தலைமகனாகிய யுலிசஸை அடியொற்றிய நவீன சமகால மனிதன்; ஸ்டீபன் டெடலாஸ் ஹோமரின் காப்பியத்தில் வரும் யுலிசஸின் மகன் தெலிமாக்கூஸ். ஒரே வித்தியாசம் ஜாய்ஸின் நாவலில் ஸ்டீபன் ப்ளூமின் சொந்த மகனல்ல; தலைமுறை வித்தியாசத்த்தினால் மகன் போலக் கருதப்பட வேண்டியவன். மாலி ப்ளூம் ஹோமரின் காப்பியத்தில் வரும் யுலிசஸின் மனைவி பெனிலோப்பி. ஜாய்ஸ் தன்னுடைய நாவலை ஹோமரின் காப்பியத்தில் வரும் முக்கிய சம்பவங்களை அடியொற்றி பதினெட்டு அத்தியாயங்களாகவும் அவற்றை மூன்று பெரும் பாகங்களாகவும் பிரித்திருக்கிறார். 

மகனாகிய தெலிமாக்கூஸ் தந்தை யுலிசஸ் தன் கடற்பயணங்களிலிருந்து திரும்பி வராதபடியால் தனது தாய் பெனிலோப்பிக்கு மறுமணம் செய்ய பண்டைய கிரேக்க வழக்கப்படி சுயம்வரம் நடத்த முயற்சி செய்து கிரேக்க மூப்பரிடம் ஆலோசனை பெறுகிறான். அப்போது பலரும் யுலிசஸ் காலிப்ஸோ தீவில் சிறைப்பட்டு உயிரோடு இருக்கிறான், எந்த நேரமும் திரும்பி வரலாம். பெனிலோப்பிக்கான சுயம்வர அறிவிப்பு வெளியானால் அதைக் கேள்விப்படும்  யுலிசஸ் தன் மனைவிக்காக எப்படியும் சிறையிலிருந்து தப்பித் திரும்பி வந்துவிடுவான் என்று  தெரிவிக்கின்றனர். ஜாய்ஸின் முதல் பாகத்தில் ஸ்டீபன் டெடலாஸ் பக் முல்லிகன் முதலோரை சந்திக்கிறான். கலைஞனாகும் முயற்சியில் இருக்கும் அவனை அயர்லாந்திலிருக்கும் மற்ற இளைஞர்களைப் போலவே செயலின்மை எனும் பாரிச நோய் தாக்கியிருக்கிறது அதிலிருந்து விடுபடுவதற்காக தனது தொலைந்து போன ஞானத்தந்தையை அவன் தேடிக்கொண்டிருக்கிறான். 

“யுலிசஸ்” நாவலில் ஜாய்ஸ் ஹோமரின் காப்பியத்துக்கு நிகராக உருவாக்கிய இணைவடிவம் நேரடியாகக் குறிப்பிடப்படுவதில்லை. ஜாய்ஸ் தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் இந்த இணைவடிவத்தைக் குறிப்பிடப் போக அது பிரபலமாகி “யுலிசஸ்” நாவலில் வாசிப்பை செழுமையுறச் செய்தது.

“யுலிசஸ்” நாவலின் இரண்டாம் பாகத்தில் லியோபோல்ட் ப்ளூம் டப்ளின் நகரின் தெருக்களில் யுலிசஸ் கடற்பயணங்களில் அலைவுற்றதைப் போலவே அலைவுறுகிறான். ப்ளூம் ஒரு ஈமச்சடங்கில் கலந்துகொள்கிறான், புனைபெயரில் ஒரு காதல் கடிதத்தை எழுதி வாங்கிக்கொள்கிறான், கடற்கரைக்கு சென்று அங்கே தூரத்தில் பார்க்கும் இளம்பெண்ணைப் பார்த்து கரமைதுனம் செய்கிறான், பரத்தையர் விடுதி ஒன்றுக்குச் செல்கிறான். ஜாய்ஸின் நடை இந்த அலைவுறும் பகுதியில் இசைக்கோவைகளைப் போலவும் பிரம்மையில் கரையும் மொழி போலவும் பலவிதமாக இருக்கிறது. 

மூன்றாவது பகுதியில் காப்பியத்தில் கிரேக்கத்தில் கரையொதுங்கும் யுலிசசைப் போல ப்ளூம் தனது வீட்டுக்குத் திரும்பி, மனைவி மாலியை அடைகிறான். அதற்கு முன்பாக ஸ்டீபனும் ப்ளூமும் சந்திக்கிறார்கள். 

இந்த பதினெட்டு அத்தியாயங்களை ஜாய்ஸ் ஏழுவருடங்களாக 1914 இலிருந்து 1921 வரை எழுதினார். முதல் உலகப் போரின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்த ஏழு வருடங்களில் ஜாய்ஸும் அவரது மனைவி நோராவும், சுயமாகத் தங்களை நாடு கடத்திக்கொண்டவர்களாக ஜூரிக்கிலும், பாரிஸிலும் வாழ்ந்தார்கள். இப்படி நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததால் ஜாய்ஸ் “யுலிசஸ்” நாவலை   1909 இல் எழுதிய  அகரவரிசை நோட்டுப்புத்தகங்களில் பல கிடைத்தன; சில தொலைந்து போயின. இப்படித் தொலைந்து போன நோட்டுப்புத்தகங்களே பிற்காலத்தில் ஒரு நிச்சயமான “யுலிசஸ்” பதிப்பைக் கொண்டுவருவதற்கு இயலாமல் போனதற்கான காரணங்களாகவும் ஆகிவிட்டன. 

மார்ச் 1919 இலிருந்து டிசம்பர் 1920 வரை “யுலிசஸ்” நாவலின் சில  பகுதிகள்  நியுயார்க் நகரிலிருந்து வெளிவந்த இலக்கிய சஞ்சிகையான The Little Review இல் வெளிவந்தன. இது எஸ்ரா பவுண்டின் முயற்சியால் சாத்தியமானது. ஹெச்.ஜி.வெல்ஸ் போன்ற மிக முக்கியமான எழுத்தாளர்கள் இலக்கிய இதழில் பகுதி பகுதியாக ஜாய்ஸின் “யுலிசஸ்” வெளிவருவதை ஆதரித்தார்கள். இந்தப் பகுதிகள் வெளிவந்தபோது ஜாய்ஸின் உரைநடையில் இருந்த வெளிப்படையான பாலியல், மத எதிர்ப்பு, உடலின் கழிவுச் செயல்பாடுகள் பற்றிய வெளிப்படையான விவரணைகள் கடுமையான அரசாங்க எதிர்ப்பினை எதிர்கொண்டன. அஞ்சல் சலுகை “யுலிசஸ்” நாவலின் பகுதிகளை பிரசுரித்த சஞ்சிகைக்கு நிறுத்தப்படது. The Literary Review இன் பிரதிகள் முச்சந்தியில் எரிக்கப்பட்டன. 1920 ஆம் ஆண்டு New York Society for the Suppression of Vice என்ற அமைப்பு இலக்கிய சஞ்சிகையின் மேலும் வழக்குத் தொடர்ந்தது: “யுலிசஸ்” நாவலுக்கு சட்டரீதியான தடை கோரப்பட்டது. 1921 இல் நடந்த நீதிமன்ற விசாரணையில் “யுலிசஸ்” நாவலுக்கு ஆபாச தடைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது; சஞ்சிகையின் ஆசிரியர் மார்கரெட் ஆண்டர்சன் அபாராதம் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்.

ஜாய்ஸ் நியுயார்க் நகர நீதிமன்றத் தீர்ப்பால் மனமுடைந்து போனார். போதாக்குறைக்கு அனைத்து முக்கிய பதிப்பகங்களும் “யுலிசஸ்” நாவலைப் பிரசுரிக்க மறுத்துவிட்டன. இந்த நிலைமையில் 1922ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி என்ற பதிப்பகத்தை நடத்திவந்த புலம்பெயர்ந்த அமெரிக்கரான ஸில்வியா பீச் “யுலிசஸ்” நாவலைப் பதிப்பிக்க முன்வந்தார். ஸில்வியா பீச்சின் பதிப்பகம் அப்போது  புதிதாகத் தொடங்கப்பட்டதாக இருந்தது; மேலும் அவருக்கு தனிப்பட்ட முறையில் பதிப்புத் துறையில் எந்த அனுபவமும் இருக்கவில்லை. அவர் ஆனால் நூல்களுக்கான தணிக்கை, தடை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்க்கக்கூடியவராக இருந்தார்.   அதனாலும் அவர் “யுலிசஸ்” நாவலை வெளியிட விரும்பினார். 

ஸில்வியா பீச் டிஜோன் நகரில் வசித்த அச்சகத்துறையில் மாஸ்டர் என்று பெயர் வாங்கிய மௌரிஸ் டாரண்டியரைத் தொடர்பு கொண்டு “யுலிசஸ்” நாவலின் அச்ச்சாக்கத்தை அவரிடம் ஒப்படைத்தார். டாரண்டியர் 22 பிரெஞ்சு மொழி அச்சுக்கோர்ப்பவர்களை வேலைக்கு அமர்த்தி நாவலை அச்சுக்கோர்த்தார்.

பிரெஞ்சு மொழி அச்சுக்கோர்ப்பாளர்கள் ஆங்கில நாவலை அச்சுக்கோர்ப்பதில் உண்டாக்கிய பிழைகளை ஜாய்ஸ் அந்தப் பக்கங்களை மெய்ப்பு பார்த்த முறை பிழைகளை அதிகரிக்கக்கூடியதாக இருந்தது. ஜாய்ஸ் ஒரு பக்கத்தை மெய்ப்பு பார்த்து திருத்தும்போது நாவலை மேலும் விரிவாக்கி எழுதக்கூடியவராகவும் இருந்தார். கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ஜாய்ஸ் பத்திலிருந்து பதினைந்து முறை அச்சுகோர்த்த பக்கங்களைக் கேட்டார். ஜாய்ஸின் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததால் பிழைகள் மேலும் மேலும் அதிகமாயின. 

1922 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ஜாய்ஸின் நாற்பதாவது பிறந்த நாளின் போது “யுலிசஸ்” நாவல் வெளியானபோது அதில் 2000 முதல் 5000 வரை பிழைகள் இருந்ததாகக் கணிக்கப்பட்டது. ஆங்கிலம் தெரியாத பிரெஞ்சு மொழி அச்சுக்கோர்ப்பாளர்களால் இறுதி செய்யப்பட்ட நாவலோடு பதிப்பாளர் பின்னர் ஒரு சிறு நூலளவுக்கு பிழைத்திருத்தம் பட்டியலை வைக்க நேர்ந்தது. ஓராயிரம் பிரதிகளே அச்சிடப்பட்ட “யுலிசஸ்” முதல் பதிப்பு சுலபத்தில் விற்றுத் தீர்ந்தது. எர்னஸ்ட் ஹெமிங்வே, டபிள்யூ.பி.யேட்ஸ், ஜெர்ட் ரூட் ஸ்டீன் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் நாவலை உடனடியாக வாங்கிவிட்டார்கள்.  நீதிமன்றத் தடை நாவலுக்கு இருந்தபடியால் நாவலைப் படிப்பதற்கான பொதுமக்கள் ஆர்வமும் அதிகமாக இருந்தது. 

இதனால் ஹாரியட் ஷா வீவர் என்ற பிரித்தானிய பதிப்பாளர் தன்னுடைய ஈகோயிஸ்ட் பதிப்பகம் மூலமாக “யுலிசஸ்” நாவலை 2000 பிரதிகள் பாரிஸில் அச்சடித்து பிரித்தானியாவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார். உள்ளாடைகளுக்கும் பைபிள் என்ற மேற்புற அட்டைக்குள்ளாகவும் வைத்து “யுலிசஸ்” நாவல் பிரித்தானியாவுக்குள் கடத்திவரப்பட்டது. ஆனால் அவை பெரும்பாலும் பிரித்தானிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டன. 

சாமுவேல் ரோத் என்ற அமெரிக்க இதழாளர் 1926 ஆம் ஆண்டு அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் கள்ளத்தனமாக “யுலிசஸ்” நாவலின் ஆபாசங்கள் நீக்கப்பட்ட பிரதியினை ஜாய்ஸின் அனுமதி பெறாமல் தொடராக வெளியிட்டார். ஜாய்ஸுக்கு மதிப்பூதியம் எதுவும் இதற்காகத் தரப்படவில்லை என்பது மட்டுமல்லாமல் இந்த புனிதமாக்கப்பட்ட பிரதி அமெரிக்க சந்தையில் ஆயிரக்கணக்கில் விற்றது. எஸ்ரா பவுண்டின் முன்னெடுப்பில் நூற்றி அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சாமுவேல் ரோத்தின் “யுலிசஸ்” பதிப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்றும் சாமுவேல் ரோத்தின் பதிப்பும் சந்தையில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. 

1932 இல் ஸில்வியா பீச்சின் முன்னெடுப்பில் ஒடிசி பதிப்பகம் ஜாய்ஸின் நண்பரும் “யுலிசஸ்” நாவலின் ஆய்வாளருமான ஸ்டூவர்ட் கில்பெர்ட்டைப் பதிப்பாசிரியராகக் கொண்டு உண்மையான நாவலின் பதிப்பைக் கொண்டுவந்தது. இந்தமுறை ஜாய்ஸ் மெய்ப்பு பார்க்கவில்லை; அவர் தன்னுடைய “ஃபென்னிகன்ஸ் வேக்” நாவலை எழுதுவதில் மும்முரமாக இருந்தார்; மேலும் அவருடைய மகள் லூசியா சித்தப்பிரமைக்குள் வீழ்ந்துகொண்டிருந்தபடியால் ஜாய்ஸ் அவளைக் கவனிப்பதிலும் நேரத்தைச் செலவழித்துக்கொண்டிருந்தார். 

1933 இல் “யுலிசஸ்” நாவலை அமெரிக்காவில் சட்டத்திற்கு விரோதமாக வாசிப்பது ஒரு முடிவுக்கு வந்தது.  ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தை ஆரம்பித்த பென்னெட் செர்ஃப் 1934 ஆம் ஆண்டு “யுலிசஸ்” நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்தார். “யுலிசஸ்” நாவல் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருந்தபடியால் பிரதி கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் புதிய  வழக்காகியது.  புதிதாக வழக்கை விசாரித்த நீதிபதி “யுலிசஸ்” நாவலில் ஆபாசம் எனக் கருதப்பட்ட பகுதிகள் வாசகரிடத்தே ஆபாச நடவடிக்கையோ அல்லது பாலியல் தூண்டுதலையோ ஏற்படுத்தவில்லை எனத் தீர்ப்பளித்து நாவலுக்கான தடையை நீக்கினார். ராண்டம் ஹவுஸ் தடை நீக்கத்தைத் தொடர்ந்து நாவலைப் பதிப்பிதது ஆனால் அப்படி பதிப்பித்த பிரதி சாமுவேல் ரோத் பதிப்பித்த கள்ள நூலினை அடியொற்றி இருந்தபடியால் ஏராளமான தவறுகள் இருந்தன.

1936 இல் இங்கிலாந்தில் மிக அழகாக எரிக் கில்லினால் வடிவமைக்கப்பட்டு போட்லி ஹில் பதிப்பகத்தினரால் அச்சிடப்பட்ட “யுலிசஸ்” நாவலில் புதிய பிழைகள் ஏற்கனவே இருந்த பிழைகளோடு சேர்ந்துவிட்டன. 1941 இல் ஜாய்ஸ் மறைந்தார். 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் ராண்டம் ஹவுஸும் போட்லி ஹில் பதிப்பகமும் “யுலிசஸ்” நாவலின் பிழைகள் திருத்தப்பட்ட புதிய பதிப்புகளை வெளியிடுவதாக அறிவித்தன. அப்படி வெளிவந்த பதிப்புகளே இன்றைக்குத் தரமான பதிப்புகளாக கல்விப்புலத்தாரால் வாசிக்கப்பட்டாலும் அவற்றிலும் நாலாயிரத்துச் சொச்ச பிழைகள் இருந்தன.

1977 இல் ஜாய்ஸின் எஸ்டேட்டும் கார்லண்ட் பதிப்பகமும் இணைந்து ஹன்ஸ் வால்டர் காப்லர் என்ற ஜெர்மானிய அறிஞரை பொது எடிட்டராக நியமனம் செய்து நிச்சயமான பிழையில்லா “யுலிசஸ்” நாவலின் பிரதியைக் கொண்டு வரச் சொன்னார்கள். காப்லர் எழு ஆண்டுகள் உழைத்து யுலிசஸின் கிரிடிகல் எடிஷனை  1984 இல் கொண்டு வந்தார். 

காப்லர் ஜாய்ஸின் நாவலிலுள்ள பிழைகளை நீக்கக் கையாண்டவழியை "continuous manuscript text” என்றழைத்தார். அவருடைய முறை ஜாய்ஸின் கைப்பிரதிகள், திருத்திய பிரதிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை இறுதியானதாக எடுத்துக்கொள்ளாமல் எல்லாப் பிரதிகளிலிருந்தும் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வதாக இருந்தது. காப்லரின் பதிப்பு ஜாய்ஸை நுணுக்கமாக வாசித்து வந்த பல வாசகர்களுக்கு பல அதிர்ச்சிகளை அளிப்பதாக இருந்தது. 

மிக மோசமான அதிர்ச்சி நாவலின் மைய கதாபாத்திரமான ஸ்டீபனின் கலாவேட்கையோடு தொடர்புடையதாக இருந்தது. நாவலின் ஒன்பதாவது அத்தியாயத்தில் ஸ்டீபன் இறந்துவிட்ட தன் தாயாரின் நினைவோடு போராடுகையில் உலகின் அனைத்து மனிதர்களுக்கும் தெரிந்த ஒற்றைச் சொல் என்ன என்று கேட்பான். அது காப்லருக்கு முந்தைய பதிப்புகளில் அந்த ஒற்றைச் சொல என்ன என்பது முழு நாவலும் சொல்வது ஆனால் வெளிப்படுத்தாது எனவே அது ஒரு புதிர் என்பதாக இருந்தது. காப்லர் முந்தையப் பதிப்புகளிலிருந்து நீக்கப்பட்ட இரு பத்திகள் என இரண்டைக் கண்டுபிடித்து அவற்றை தன்னுடைய பதிப்பில் சேர்த்துவிட்டார். 

காப்லர் தன்னுடைய பதிப்பில் ஸ்டீபனின் தாயார் சொல்லாமல் விட்ட வார்த்தை உண்மையில் அன்பு அதாவது காமம் என்ற அர்த்தத்தில் என பதிப்பித்திருந்தது ஜாய்ஸின் வாசகர்களிடையே பெரும் அதிர்ச்சியை இதனால் உண்டாக்குவதாக இருந்தது. "Do you know what you are talking about? Love, yes. Word known to all men. Amor vero aliquid alicui bonum vult unde et ea quae concupiscimus…". என்று சேர்க்கப்பட்ட வாக்கியம் தாமஸ் அக்வினாஸுக்குக் கடன்பட்டது. தாமஸ் அக்வினாஸ் தன்னுடைய Summa Contra Gentiles என்ற புத்தகத்தில் உண்மையான அன்பு என்பதை பிறருக்கு நல்லதை விழைவது  என்று அதை உடற்பசியாகிய காமத்திலிருந்து வேறுபட்டதாக விளக்குவது காப்லரின் பதிப்பில் காணாமல் போய் உடற்பசியான காமத்தை, அன்பை விடுத்து  ஒற்றை வார்த்தையாக ஸ்டீபனின் தாய் அவனுக்கு சொல்வதாக  மாறிவிட்டது. காப்லரின் பதிப்புக்கு முன்னுரை எழுதிய ரிச்சர்ட் எல்மேன் காப்லரின் பதிப்பு “யுலிசஸ்” நாவலின் கதையாடலையும் அதன் சம்பவங்களையும்  வாசிக்கும் முறையையுமே மாற்றிவிட்டது  என்று எழுதினார். 

மேலும் காப்லர் ஜாய்ஸின் நாவலின் முந்தைய பதிப்புகளிலிருந்த பல நிறுத்தற்குறிகளை நீக்கிவிட்டார். 

காப்லர் பதிப்பின் வெற்றி சிறிதுகாலமே நீடித்தது. 1985 ஆண்டு ஜான் கிட் என்ற இளம் அறிஞர் நியுயார்க்கில் நடந்த Society for Textual Scholarship கூட்டத்தில் காப்லர் பதிப்பின் போதாமைகளைச் சுட்டிக்காட்டினார். காப்லர் கைப்பிரதிகளை நேரில் காணாமல் ஃபோட்டோகாப்பி எடுக்கப்பட்ட ஜாய்ஸின் கைப்பிரதிகளைக் கொண்டு தன் பதிப்பை உருவாக்கினார் என்பது முதல் குற்றச்சாட்டு. ஃபோட்டோக்காப்பியில் ஓரங்கள் மடங்கியிருக்க, தூசு படிந்த கறைகள் எழுத்துக்களை மறைத்திருக்க, காப்பியே மங்கிப்போயிருக்க எனப் பல குறைகளால் பல தவறுகள் காப்லர் பதிப்பில் உருவாயின.  ஜாய்ஸ் ஓரங்களில் தன்னுடைய அச்சுகோர்ப்பவர்களுக்கென்று எழுதிய குறிப்புகளைக் காப்லர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது ஜான் கிட்டின் இரண்டாவது குற்றச்சாட்டு. ஜாய்ஸ் சில சொற்களுக்கு கிருத்திருவமான விதத்தில் எழுத்துக்ளைப் பயன்படுத்தினார்; சில சொற்களைச் சேர்த்தெழுதி புதிய சொற்களைக் கண்டுபிடித்தார். இவற்றையெல்லாம் காப்லர் நீக்கி சாதாரண அகராதி சொற்களாக மாற்றிவிட்டார் என்பது மூன்றாவது குற்றச்சாட்டு. 

இத்தகையக் குற்றச்சாட்டுகளால் காப்லரின் பதிப்பு பொலிவிழந்து போக சந்தையில் பழைய பதிப்புகள் மீண்டும் சுற்றுக்கு வர “யுலிசஸ்” நாவலுக்கு எப்போதுமே பல பதிப்புகள் சந்தையில் கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது. 

காப்லர் பதிப்பு உண்டாக்கிய ஏமாற்றம் ஜாய்ஸின் வாசகர்களை வெகுவாக பாதித்தது. 1997 இல் ஜாய்ஸின் பிறந்த நாளான பெப்ரவரி 2 ஆம் நாளன்று டானிஸ் ரோஸ் என்ற ஐரிஷ்காரர் “யுலிசஸ்” நாவலை எல்லோரும் தந்த கோபுரத்தில் ஏற்றி வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாவலோ சிக்கலான அமைப்பையும் பலவிதமான நடை பரிசோதனைகளையும் கொண்டிருக்கிறது எனவே எல்லோருக்கும் புரியும் விதத்தில் வாசகர் பதிப்பு கொண்டுவருவதாகச் சொல்லி புதிய பதிப்பினைக் கொண்டுவந்தார். டானிஸ் ரோஸ் ஜாய்ஸின் நாவலில் கிட்டத்தட்ட 10, 000 சொற்களை மாற்றிவிட்டார். ஜாய்ஸின் வாசகர்களும் ஜாய்ஸின் பேரனும் ஜாய்ஸின் எஸ்டேட்டின் நிர்வாகியான ஸ்டீபன் ஜேம்ஸ் ஜாய்ஸும் கொதித்து எழுந்துவிட்டார்கள். ஸ்டீபன் ஜேம்ஸ் ஜாய்ஸ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு வழக்கமான காப்புரிமை சம்பந்தப்பட்டது என்பதைக் காட்டிலும் முக்கியமாக ஒரு எழுத்தாளன் உருவாக்கிய அழகியல் ஒருமையை சிதைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது என்பதாக ஸ்டீபன் ஜாய்ஸின் வாதம் அமைந்தது. நீதிமன்றம் டானிஸ் ரோஸின் பதிப்பைத் தடை செய்தது. டானிஸ் ரோஸின் வழக்கை “யுலிசஸ்” நாவலை எல்லோருக்கும் புரியும்படியான வாசகப் பிரதியை உருவாக்கி அதில் வியாபார வெற்றியை ஈட்டுவதற்கான ஆசைக்கும் “யுலிசஸ்” நாவலை அதன் அழகியல் கட்டுக்கோப்பு குலையாமல் காப்பாற்ற நினைக்கும் கல்விப்புலத்தாருக்கும் இடையிலான   மோதல் என்றும் பார்க்கலாம். 

இருபத்தியோராம் நூற்றாண்டில் “யுலிசஸ்” நாவலை பிழையில்லாமல் கொண்டுவருவது என்ற இலட்சியம் கைவிடப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் உலக கிளாஸிக்குகள் வரிசையில் வெளிவந்த “யுலிசஸ்” நாவலைக் கொண்டுவந்த எடிட்டர் ஜெரி ஜான்சன், அதன் 1922 ஆம் ஆண்டு வெளிவந்த ஷேக்ஸ்பியர் அண்டு கம்பெனி வெளியிட்ட பிரதியை அப்படியே வெளியிட்டு அதில் விரிவான ஆய்வுக்குறிப்புகளையும், விமர்சனப்பார்வைகளையும் சேர்த்து வாசிப்பை நுட்பமாக்கும் வேலையைச் செய்தார். 2015 இல் அல்மா கிளாசிக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பிற்கு சாம் ஸ்லொட்டே எடிட்டராகப் பணிபுரிந்தார். அவர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த ஒடிசி பதிப்பக வெளியீட்டிற்கு ஆய்வுக்குறிப்புகள் சேர்த்தார்.

“யுலிசஸ்” நாவலின் நூற்றாண்டு விழா பதிப்பிற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைப் பதிப்பகம் 1922 முதல் பதிப்பினை அடிப்படைப் பிரதியாக எடுத்துக்கொண்டு  அதோடு விரிவான விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக்குறிப்புகள் சேர்த்து வெளியிட்டது.

நவீன உலக இலக்கிய வரலாற்றில் ஜாய்ஸின் நாவலுக்கு இணையான பதிப்பு வரலாறு கொண்ட வேறொரு நாவல் இல்லை. வழக்குகள் முதல் ஆங்கிலம் தெரியாத அச்சுக்கோர்ப்பாளர்கள் நாவலுக்கு அச்சுக்கோர்த்தது வரை என இந்த உச்சம் தொட்ட கலைப்படைப்பு கடந்து வந்த பாதைகள் ஒருவரைத் திகைத்து மலைத்து நிற்க வைத்துவிடக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை ஜாய்ஸின் தன்னிகரற்ற படைப்பான “யுலிசஸ்” தொடர்ந்து வாசகர்ளை கவர்ந்து இழுத்துக்கொண்டே இருப்பதற்கு அதைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் காரணமாக இருக்கலாம்.

No comments: