Saturday, April 27, 2013

நுனி | சிறுகதை





“பிரதமர் உரையாட விரும்புகிறார். தயாராகுங்கள். ஆடைகள் அணிந்திருத்தல் அவசியம்” கலியின் அடுக்குப் படுக்கையின் மேல் இருந்த தொடர்புஒலிபெருக்கியில் கன்ணனின் குரல் தொடர்ந்து ஒலித்தது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு முழித்த கலி தன் படுக்கையில் இருந்து மிதந்து இறங்கினாள். ஆஹ், ஒரு வழியாய் பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது!

“ரோஜர். வருகிறேன். கல்கி எங்கே?” 

“வெளியே நடந்து கொண்டிருக்கிறாள். செய்தி அனுப்பிவிட்டேன். நீ வரும்போது வந்துவிடுவாள். வரும்போது வாயில் 7இல் அவள் திரும்பி வர உதவி தேவையா என்று பார்த்துவிட்டு வா”

 “சரி”

கலிக்கு புவி ஈர்ப்பு விசை இல்லாமல் நிர்வாணமாய் தன் மார்புகள் குலுங்குவது பழக்கமாகியிருந்தது. ஆடையணிந்து அவற்றை இறுக்குவதற்கு அவளுக்கு வேண்டாவெறுப்பாயிருந்தது. தொளதொள பைஜாமாவையும் ஜிப்பாவையும் எடுத்து அணியப்போனவள் அவற்றை விட்டு விட்டு இரண்டே தாவலில் விண்கலத்தின் வால் பகுதியில் இருந்த டாய்லெட்டை அடைந்தாள். தொடைகளையும் கணுக்கால்களையும் டாய்லெட்டின் இருக்கையோடு இருந்த பிணைப்பான்களில் கட்டிவிட்டு உட்கார்ந்து சிறு நீர் கழித்தாள். சுத்தம் செய்யும் பொத்தானை அமுக்கியபோது ‘மலக்கிடங்கினை கழற்றி விடு, மலக்கிடங்கினை கழற்றிவிடு’ என்று சிவப்பு விளக்கு செய்தி பளிச்சிட்டது. 

“கண்ணா, நாம் பயணம் கிளம்பி மூன்று மாதமா ஆகிவிட்டது? செப்டிக் டாங்க் கழற்றி விடு கழற்றி விடு என்கிறதே?”

“சீக்கிரம் வா பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது என்றால் என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?” தொடர்ஒலிபெருக்கி வழி கத்தினான் கண்ணன்.

“கல்கி வெளியே நடந்துவிட்டு திரும்பியவுடன் டாய்லெட்டுக்குத்தான் ஓடிப்போவாள். அவளுக்காக டாய்லெட்டை தயார் பண்ண போனேன்”

“சரி. செப்டிக் டாங்க்கை கழற்றிவிடும்போது இடது பக்க விசைச்சுருள் வழி அனுப்பு. வலதுபக்க வழியில் அனுப்பினால் பக்கத்தில் மிதக்கும் பாறையில் மோதிவிடும். சீக்கிரம் வந்து சேர்” 

“ரோஜர்”

கலி மீண்டுமொருமுறை காற்று உள்ளிளுப்பானால் டாய்லெட்டை சுத்தம் செய்யும் பொத்தானை அமுக்கினாள்.  சிறுநீர் குடிநீர் மறு சுழற்சி எந்திரத்திற்குச் செல்ல மீண்டும் சிவப்பு விளக்கு எரிந்தது. கலி விண்கலத்தின் இடது பக்க விசைச்சுருளைத் தேர்ந்தெடுத்து மலக்கிடங்கினை கழற்றிவிட்டாள். ‘காத்திரு’ என்று விளக்கு எரிந்தது. காத்திருக்கும் நேரத்தில் ஒரு காக்காய் குளியல் போட்டுவிடலாம் என்று குளியலறைக்குள் புகுந்தாள். குளியலறை என்பது நட்டுவாக்கில் நிறுத்தப்பட்ட குளியல் தொட்டி. கால்களையும் இடுப்பையும் பிணைப்பான்களில் கட்டிக்கொண்டு கலி கைக்குழாயில் தண்ணீரைப் பீய்ச்சியபோது நீர் கலியின் உடலைத் தொடாமல் அந்தரத்தில் மிதந்தது.

“கண்ணா, பாத்ரூமில் கீழிழுப்பு விசை வேலை செய்யவில்லை போல. தண்ணீர் மிதக்கிறது”

“கலி, தண்ணீரை உடனடியாக துண்டில் பிடித்து துடைத்துவிட்டு வா. தண்ணீரை மேலும் மிதக்க விடாதே. நாம் அபாயகரமான நுனியில் நின்றுகொண்டிருக்கிறோம்”

கண்ணனின் குரல் கலவரமாக இருந்தது. கலி கைக்குழாயை மூடிவிட்டு அடுக்கு பீரோவில் இருந்த துண்டை எடுத்து வீசி மிதந்துகொண்டிருந்த தண்ணீரை உறிஞ்சச் செய்தாள். கையளவு தண்ணீர் கலியின் துண்டு வீச்சுக்கு தப்பி சிறு குளமென களக் மொளக் என்று விண்கலத்தின் போக்கிற்கேற்ப பறந்து ஓடியது.

கலி ஈரத்துண்டால் தன்னைத் துடைத்துக்கொண்டு டாய்லெட்டை எட்டிப்பார்த்தாள். பழைய செப்டிக் டாங்க் நன்றாக பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்டு அண்டவெளியில் வீசுவதற்குத் தயாராக விசைச்சுருளில் வைக்கப்பட்டிருப்பதை மானிட்டர் காட்டியது. கலி ‘வீசு’ என்ற பொத்தானை அமுக்கினாள். விசைச்சுருள் செப்டிக் டாங்கினை சுழற்றி அண்டவெளியில் வீசியது. புது டாங்க் அதன் இடத்தில் இறங்கி தன்னிச்சையாய் உட்கார்ந்தது. மானிட்டரின் திரையில் பழைய டாங்க் விண்கலத்திற்கு எதிர்த்திசையில் சுழன்றோடுவது தெரிந்தது.

கலி பைஜாமாவையும் ஜிப்பாவையும் அணிந்துகொண்டு வாயில் 7ஐ நோக்கி மிதந்து சென்றாள். கல்கி விண்வெளியில் நடந்துவிட்டு வாயில் 1இல் உள் நுழைந்தாள். வரிசையாக உள்ள வாயில்களில் வாயில் 4 முதற்கொண்டு விண்கலத்திற்கு உள்ளாக அவளுக்கு விசேஷ உடைகள் தேவைப்படாது.

கல்கியின் முகம் அதீத வியர்வையில் நனைந்திருந்தது. உடல் கடுமையாகச் சூடேறியிருந்தது. பூமியின் நேரக்கணக்குப்படி கல்கி ஆறு மணி நேரம் பதினேழு நிமிடங்கள் விண்வெளியில் நடந்துவிட்டு திரும்பியிருந்தாள். அவள் அணிந்திருந்த சானிட்டரி நாப்கின் சிறுநீரினால் கனத்தது. வாயில் 4 தாண்டியதும் தலைக்கவசத்தையும் முகக்கண்ணாடியையும் கழற்றி பெருமூச்செறிந்தாள். அவள் முகத்தில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகள் அவள் முகத்தைவிட்டு கிளம்பி மிதந்து செல்வதை ஆச்சரியத்துடன் கவனித்தாள். அதே சமயம் கலி வாயில்கள் 7இலிருந்து 5 வரை திறந்தாள். குளியலறையிலிருந்து தப்பிய கையளவு நீர் வாயில் 4ஐ நோக்கி மிதந்து ஓடியது. 

வாயில் 7இல் கல்கி நுழைந்தவுடன் கலி அவளுடைய விசேஷ ஆடைகளை அகற்ற உதவினாள். 

‘கண்ணனிடமிருந்து செய்தி கிடைத்ததா? பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது. பிரதமரோடு பேசப்போகிறோம்”

“இதோ சீக்கிரம் தயாராகிவிடுகிறேன்”

“ஈரத்துணியால் துடை. தண்ணீர் மிதக்கிறது. குளியலறையில் கீழிழுப்பு விசை வேலை செய்யவில்லை” 

“நிச்சயமாக. கண்ணன் உன்னோடு பேசியதைக் கேட்டேன்”

கல்கி குளியலறை நோக்கி செல்ல யத்தனித்தபோது விண்கலம் இடி விழுந்தது போல குலுங்கியது. 

“வாட் த ஹெல்!” என்று கண்ணன் ஒலிபெருக்கியில் கத்தினான். “வாயில் 4இல் அபாயம், வாயில் 4இல் அபாயம்” என்று விண்கலத்தின் பாதுகாப்பு கருவி அலறியது.

கல்கியும் கலியும் ஒருவரையொருவர் அணைத்து தங்களின் மிதக்கும் உடல்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டனர். அவர்கள் கண்ணாடி ஜன்னல் வழி வாயில் 4ஐப் பார்த்தபோது கல்கியின் வியர்வைத் துளிகளும் கையளவு தண்ணீரும் ஜன்னலில் மோதித் திரும்பி அந்தரத்தில் மீண்டும் ஒரே குளமாக சேர்ந்துகொண்டிருந்தன. 

“கண்ணா, கையளவு தண்ணீர் மோதியா இந்த இடி முழக்கம்?”

“கைப்பிடி அளவு குளமா, கடலா?”

அந்தரத்தில் மிதக்கும் நீர்க் குட்டை மீண்டும் வாயிற்கதவை மோதச் சென்றுகொண்டிருந்தது. 

“யோசிக்க நேரமில்லை. இன்னொரு மோதலை நாம் தாங்க முடியாது. வாயில்களைத் திற. நீர் வெளியேறட்டும்”

கலி சட்டென்று வாயில் 4ஐத் திறந்தாள். மோதல் தவிர்க்கப்பட்டு நீர் மிதந்து கடந்தது. அது திரும்பி உள்ளே வராமல் இருக்கும்படிக்கு கதவை அடைத்துவிட்டு கலி அடுத்த வாயிலைத் திறந்தாள். ஒவ்வொரு வாயிற்கதவும் திறக்கப்படுகையில் மிதக்கும் நீரின் வேகம் அதிகமாகிக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. 

“நிறுத்து. இந்தத் தண்ணீர் வெளியில் போனால் என்னவாகும் என்று யாருக்குத் தெரியும்?”

“கல்கி கேட்பது நியாயம்தான். நான் ஐந்தாவது கதவையும் திறந்து விட்டேன்”

“ நீ வெளியில் நடந்து போனபோது எதுவும் விசித்திரமாகப் பார்த்தாயா?”

“நம் கலத்திற்குப் பக்கத்தில் பறக்கும் பாறை ஒரு விளிம்பினை, நுனியினை மறைக்கிறது. என்னால் அந்த் நுனியினைத் தாண்டி எட்டிப்பார்க்க முடியவில்லை. பாதி தூரம்தான் போனேன்”

“வேறு வழியில்லை. கல்கி, கலி, ஆறாவது வாயிலையும் திறவுங்கள்”

கல்கி சட்டென்று தன் சிறுநீர் நிரம்பிய சானிட்டரி நாப்கினைத் தூக்கி கதவைத் திறந்து வீசினாள்.

“என்ன செய்கிறாய் நீ?”

“மிதக்கும் தண்ணீரை நாப்கின் பிடித்துவிட்டதென்றால் அதை உறிஞ்சிவிடும். பெரிய அதிர்வோ அழிவோ இல்லாமல் தப்பி விடலாம்” 

“சபாஷ். நல்ல சமயோசிதம்“

நாப்கின் மிதக்கும் நீரை நோக்கி விரைந்துகொண்டிருந்தது, வேறு வழியில்லாமல் ஏழாவது வாயிலை கலி திறந்தாள். நாப்கினால் நீரினைப் பிடிக்க இயலவில்லை. ஏழாவது வாயில் திறக்க,  கைப்பிடியளவு நீர்  கோடி சூரியப் பிரகாச ஒளியுடைய பொடிப்பொடி வைரக்கற்கள் என கரும் வெளியில் சிதற பூமியின் நீல நிற வளி மண்டலம் கணத்தில் தோன்றி பிரம்மாண்டம் பெற்று மீண்டும் மறைந்தது. பின்னாலேயே பறந்த நாப்கின் கரும் வெளியைத் தொட்டதுதான் தாமதம் கண்ணுக்குப் புலப்படாத வாயொன்று முழுங்கியது போல அது காணாமல் போக கரும் வெளி மீண்டும் அடர்ந்தது. 

“உறைந்த நட்சத்திரம் ஒன்று  சந்திரசேகர் விளிம்பில் இருக்கிறது. நாம் அதன் ஈர்ப்பு விளிம்பில்  இருக்கிறோம். இன்னும் சிறிது எடை நட்சத்திரத்திற்குக் கூடினாலும் அது இறந்து கருந்துளையாகிவிடும். சாக இருக்கும் நட்சத்திரம் மேலும் எடைக்கான தாகத்தில் இருக்கிறது. தண்ணீர் அதை சாதித்துவிடும். இங்கே ஒரு மகாபிரளயம் நடக்கவிருக்கிறது”

கண்ணண் தொடர்ந்து ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தான். கல்கி அவசரமாகக் குளியலறையில் ஈரத்துண்டினால் தன்னைத் துடைத்துக்கொண்டு உடை மாற்றிக்கொண்டு வந்தாள். 

---------------------------

மூவரும் விண்கலத்தின் தலைப்பகுதியில் இருந்த ஸ்டூடியோவில் ஆழுயர எலெக்டிரானிக் திரையின் முன் குழுமியிருந்தனர். இவர்களுடைய பிம்பங்கள் பூமியில் சென்றடைந்ததும் அங்கே செய்யப்படும் அறிவிப்பு இங்கே கேட்டது. 

“ஆதிசேஷன் I ரிப்போர்டிங், ஆதிசேஷன் I ரிப்போர்டிங்” 

கண்ணன் குழப்பமாக கலியையும், கல்கியையும் ஆதிசேஷன் யார் என்பது போல பார்த்தான். கலி மட்டும்தான் விண்கலத்திலிருந்த அத்தனை கையேடுகளையும் படித்திருந்தாள். கலி கண்ணனைப் பார்த்து ‘நம் விண்கலத்தின் பெயர் ஆதிசேஷன் ஒன்” என்றாள். கண்ணனுக்கு ஆசுவாசமாக இருந்தது. வழுக்கைத் தலையுடன் கோட் சூட் மனிதர் திரையில் தோன்றினார்.

“ ஹலோ என் பெயர் மகாலிங்கம். நான்தான் இப்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தலைவர். பிரதமர் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். என் அருகே இருப்பவர் பஷீர். இவர்தான் நீங்கள் விண்வெளிக்குச் செல்லும்போது தலைவராக இருந்தார். உங்கள் குடும்பத்தினர் எல்லாம் உங்களைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள்.”

பஷீர் முதியவராய் இருந்தார். இவர்களைப் பார்த்து அன்புடன் சிரித்தார். மூவருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அவருக்குப் பின்னால் ஆறேழு வெள்ளைக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 

கண்ணன் பொறுமையில்லாமல் இருந்தான். 

“ லுக் மிஸ்டர் மகாலிங்கம். நாங்கள் ஒரு நுனியில் இருக்கிறோம். நுனி என்றால் …. நுனி என்றால்  ஒரு விளிம்பு. நாங்கள் விளிம்பு மனிதர்கள். இங்கே மகாபிரளயம் ஒன்று நடக்கவிருக்கிறது. டு யு கெட் வாட் ஐ ஆம் சேயிங்? “

பஷீர் கண்களை இடுக்கி சிரித்தார்.

“கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள் கண்ணன். உங்களிடம் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. பிரளயமெல்லாம் சுலபத்தில் நடப்பதில்லை”

மகாலிங்கம் இடைமறித்தார்.

“கண்ணன், கல்கி, கலி நீங்கள் மூவரும் இந்திய தேசத்தின் மிகப் பெரிய சாதனையாளர்கள். ஆதிசேஷன் ஒன் விண்கலம் இந்திய விண்வெளித்துறையின் மிகப் பெரிய சாதனை. நாசாவின் ஆளற்ற வாயேஜர் விண்கலம் முப்பத்தாறு ஆண்டுகள் எடுத்து கிட்டத்தட்ட அடைந்த இடத்தைத் தாண்டி நட்சத்திர இடைவெளிப் பகுதியை நீங்கள் இருபதே ஆண்டுகளில் அடைந்துள்ளீர்கள். நீங்களும் ஆதிசேஷன் ஒன் விண்கலமும் காணாமல் போனதாக நாங்கள் அறிவிக்க இருந்தோம். நீங்களும் விண்கலமும் உயிர்ப்புடன் இருப்பதும் மீண்டும் தொடர்பு கொண்டதும் மிகப் பெரிய அற்புதம்”

“சார், இங்கே ஒரு பிரளயம் நடக்கவிருக்கிறது. மகாபிரளயம். நாங்கள் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்? நாங்கள் பூமிக்குத் திரும்ப நீங்கள் என்ன செய்ய இயலும்”

“உங்களுக்கு உதவி விண்கலம் தயாரிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். இன்னொரு முப்பதைந்து ஆண்டுகளில் அது உங்களை வந்து அடையும். நீங்கள் பூமியிலிருந்து பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கிறீர்கள்” 

“ஆதிசேஷன் விண்கலம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?”

பஷீர் பதில் சொல்வது போல ஆரம்பித்தார்.

“ உங்களுக்குப் பிறகு 2006இல் நாசா மிஷெனில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றபோது தன் அந்தரங்கப் பொருட்களாக பகவத் கீதை, விநாயகர் சிலை, சமோசா ஆகியவற்றை எடுத்துச் சென்றார். நீங்கள் என்னென்ன பொருட்களை எடுத்துச் சென்றிருக்கிறீர்கள் என்று பாருங்கள்”

“ எங்களுக்குப் பிறகு என்றால், நாங்கள் எப்போது கிளம்பினோம்?”

“1993இல்”

“இப்போது பூமியில் என்ன வருடம்?

“2013”

இதோ பிரதமர் வந்துவிட்டார் என்ற அறிவிப்பு கேட்டபோது தொடர்பு அறுந்து போனது. 


------------------

அவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை ஒருவர் மேல் ஒருவர் பொருத்தி விளையாடும் விளையாட்டினை விளையாடி முடித்திருந்தனர். தொடைகளையும் கால்களையும் இருக்கைகளோடு பிணைப்பான்களால் கட்டிக்கொண்டு மேஜையைச் சுற்றி நிர்வாணமாக அமர்ந்திருந்தனர். பூமி உரையாடலுக்குப் பிறகு மீண்டும் அவர்களுக்குத் தொடர்பு கிடைக்கவேயில்லை. வெளியிலோ மையிருள் மேலும் மேலும் அடர்ந்துகொண்டிருந்தது. ஆதிசேஷன் எங்கே எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று அவர்களால் அனுமானிக்க இயலவில்லை.

“எதை சாதித்தீர்கள் நீங்கள்?”

“நாம் உயிரோடு இருப்பதுதான் சாதனை”

“பஷீர் கொடுத்த குறிப்பு நம் ஞாபகங்களை உயிர்ப்பிக்கக்கூடும். நீ என்ன கொண்டு வந்தாய், கலி?”

கலி பூமியோடு பேசி முடித்த கையுடனேயே தான் கொண்டுவந்த அந்தரங்கப் பொருட்கள் என்னென்ன என்பதை தன் பெட்டியில் தேடி எடுத்திருந்தாள்.

“தங்கத்தில் செய்த ஶ்ரீசக்ரம், லலிதாசஹஸ்ரநாமம், நீர் நீக்கிய உலர்ந்த சர்க்கரைப் பொங்கல்”

“நீ என்ன கொண்டு வந்தாய் கல்கி?”

“ஒரு ஆடவனின் புகைப்படம், திருமந்திரம், வெண் குதிரை உருவத்தில் ஒரு பஞ்சுப்பொதி பொம்மை, ஒரு சாட்டை”

“சாட்டையா? ம்ஹ்ம்”

“நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று சொல்லவே இல்லையே கண்ணா?”

“என் டைரியில் ஒரு கவிதைத் தொகுப்பினை எடுத்து வைத்ததாய் குறிப்பு இருக்கிறது. ஆனால் என்ன ஏது என்ற விபரங்கள் இல்லை. கண்டுபிடித்தவுடன் சொல்கிறேன்.”

அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகிலிலிருந்த ஜன்னலின் வழி பார்க்கையில் கரும் வெளியில் நீர்த்தட்டான்களும் மின்மினிகளும் நிறைந்த தோட்டம் போல விண்வெளி விரிந்திருந்தது. கலி ஆதிசேஷன் விண்கலத்தில் இருந்த மொத்த கையேடுகள், காணொளி பதிவுகள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து தங்கள் வரலாற்றினை சொல்ல ஆரம்பித்தாள். 

“மகாலிங்கம் சொன்னது உண்மைதான். நாம் பூமி ஆண்டு 1993இல் ஆதிசேஷன் ஒன் என்ற விண்கலத்தில் இந்திய விண்வெளி நிலையமான திரிசங்கு நோக்கிப் புறப்பட்டோம். திரிசங்கில் தங்கியிருந்த நான்கு விண்வெளி விஞ்ஞானிகளை பூமிக்கு அனுப்பிவிட்டு நாம் அவர்களுக்கு பதிலாக திரிசங்கில் ஒரு வருட காலம் தங்கியிருந்து அதை பராமரிப்பது நம் வேலை. பூமி காலப்படி ஒரு மாதகாலம் திரிசங்கில் நாம் தங்கியிருந்தோம். நாம் பணி விடுவித்த விஞ்ஞானிகள் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டன்ர். திரிசங்கு தொடர்ந்து விண்வெளிக் குப்பைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. செயலற்று போன மீடியா செயற்கைக் கோள்களே குப்பைகளில் அதிகம். நாம் கதிர் வீச்சு வலை ஒன்றை பின்னி அதில் அத்தனை குப்பைகளையும் அள்ளி சுருட்டி பூமியின் வளி மண்டலத்தில் எறிந்தால் அவை எரிந்து அழிந்துபோகும் என்று திட்டமிட்டோம். அதற்காக திரிசங்கிலிருந்து ஆதிசேஷனில் நாம் ஏறிக்கொண்டு அதை வெடித்து விடுவித்தோம்.”

“ஆனால் ஆதிசேஷன்  அதற்குரிய  நீள்வட்டத்தில் விழவில்லை”

“சரியாகச் சொல்கிறாய். கரணம் தப்பி ஆதிசேஷன் விண்ணோட்டத்தில் விழுந்தது. விண்ணோட்டமோ ஒளியின் வேகத்துக்கு நிகராக ஓடிக்கொண்டிருந்தது. இரண்டே மாதத்தில் நாம் இங்கு வந்தபோது விண்ணோட்டத்தில் இருந்து வெளியில் விசிறப்பட்டோம். இங்கே நம் நினைவுகளின் தன்மை தள மாற்றம் அடைந்துவிட்டது. திரும்புவதற்கு வழியில்லை.” 

“நினைவுகளின் தன்மையில் தள மாற்றம் என்றால் என்ன?”

“பூமிக் கணக்குப்படி கண்ணனின் மனம் கற்காலத்தில் நிலைகொண்டிருக்கிறது. கல்கி, உன்னுடையதோ எதிர்காலத்தின் நிர்ணயிக்க இயலாத புள்ளியில் இருக்கிறது. என் மனமோ இங்கே இப்போது என்றிருக்கிறது. பூமியில் நம் வாழ்ந்த அனுபவங்கள் அழிந்துவிட்டன. ஆனால் மொழிகளும் கணக்குகளும் பயன்படுத்தும் விதத்தில் தங்கியிருக்கின்றன”

“அது நல்லதுக்குதான். நினைவுகள் அப்படியே இருந்திருந்தால் குடும்பம் பற்றிய உணர்ச்சிகளில் நம்மை நாம் பறிகொடுத்திருப்போம்”

அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். 

“ இந்த விண்வெளியில் நடப்பதுதான் குதிரை சவாரி செய்வது போல எவ்வளவு இதமாக இருக்கிறது” என்றாள் கல்கி.


-----------------------





“பரிசோதனை பண்ணிப் பார்த்துவிடவேண்டியதுதான்” என்றான் கண்ணன்.

அவர்கள் மூவரும் கால்களை விண்கலத்தின் தரையோடு பிணைத்துக்கொண்டு, ஒருவரின் இடுப்பை மற்றவர் கைகளால் அணைத்து கோர்த்தபடி, ஜன்னல் வழியே விண்வெளியை பார்த்தவாறு அம்மணமாக நின்றிருந்தார்கள். அவர்கள் உடல்களின் துளைகளில் நீள் உறுப்புகளை பொருத்திப் பார்த்து விளையாடி அலுத்துவிட்டிருந்தனர். 

அவர்களின் முன்னே அந்த அபூர்வ விண்காட்சி விரிந்திருந்தது.

மத்தியில் அந்திம தருணத்தை சந்திக்கப்போகும் அந்த நட்சத்திரம் துவண்டு அமர்ந்திருந்தது. சுற்றி விதவிதமான நிறங்களில் நட்சத்திரத்திலிருந்து எழும் எரிவாயுக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என்று பல வண்ணங்களில் சூழ்ந்து நீள்வட்டத்தில் கனன்றன. வித விதமான வடிவங்களில் அவை தோற்றமளித்துக்கொண்டிருந்தன. சில நீள்வட்டமாய் இருந்தன, சில உருளையாய் அமைந்தன. சில எரிவாயு உருளைகளுக்கு பச்சை விளிம்புகளும் அலைகளும் இருந்தன. 

அந்த நட்சத்திர விண்காட்சியின் மத்தியில் மகாயோனி உயிர்ப்புடன் அடர்ந்திருந்தது.

“கைப்பிடி அளவு தண்ணீரா இதைக் கொண்டு வந்தது?”

“அது கைப்பிடி அளவு கடல்” 

 கலி தன்னிச்சையாக லலிதா சகஸ்ரநாமத்தை பாரயணம் செய்ய ஆரம்பித்திருந்தாள். ‘ககாரார்த்தா காலஹந்த்ரீ காமேசீ காமிதார்த்ததா காம ஸஞ்சீவினீ கல்யா கடினஸ்தன மண்டலா கரபோரூ கலாநாதா-முகீகச-ஜிதாம்புதா கடாக்ஷாஸ்வந்தி -கருணா கபாலி-ப்ராண -நாயிகா….’

----------------------

அவர்கள் தங்கள் செயல்திட்டத்தை ஆப்பரேஷன் ‘நீராலானது உலகு’ என்று பெயரிட்டனர். ஆதிசேஷனை மகாயோனியை நோக்கி திருப்பி செங்குத்தாக செல்லுமாறு திருப்பினர். கண்ணன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கியது மட்டுமல்லாமல் அதை எழுதி பூமிக்குப் போகிறபோது போகட்டும் என்று அனுப்பினான். அங்கே நடக்கவிருக்கும் நட்சத்திரத்தின் மரணத்தை ஒட்டி கருந்துளை ஒன்று ஏற்படும். அது பிரபஞ்சத்தில் தன் எல்லைக்குட்பட்ட அனைத்தையும் உறிஞ்சி அழித்துவிடும். அதன் மறு எல்லையைப் பற்றி மனித அறிவுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அது புது பிரபஞ்சத்தையே சிருஷ்டிக்கலாம்.இந்திய விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரால் அறியப்படும் சந்திரசேகர் எடைஎல்லையை அடைந்துவிட்ட அந்த விண்மீன் தன் ஆகர்ஷண ஒளி எல்லையின் விளிம்பில்  கையளவு தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்கியபோதே பிரும்மாண்டமாய் உக்கிரம் அடைந்துவிட்டது. ஆதிசேஷனிடத்தில் இருந்த ஒரு லாரி நீரையும் மகாயோனி நோக்கி பீய்ச்சி அடித்தால், ஆவியாகுதலில் எடை மேலும் கூடி கருந்துளை உண்டாகிவிடும். 

நீர் அகற்றப்பட்ட சர்க்கரைப் பொங்கலில் நீர் சேர்த்து கலி பரிமாறினாள். அவர்கள் மூவரும் அதை நிதானமாகச் சாப்பிட்டார்கள். கல்கி விண்வெளியில் நடப்பதற்கு உற்சாகம் கொண்டவள் போல காணப்பட்டாள். விண்கலத்தில் இருந்த மொத்த நீரையும் ஆதிசேஷனின் தலைப்பகுதியில் சேகரித்தனர். விசைச்சுருளை தயார்நிலையில் வைத்தனர். ஆதிசேஷனின் முன் குழாய் மூடியை கல்கியின் சாட்டையின் சுழற்றலுக்கு ஏற்ப திறக்கும்படி அமைத்தனர். 

“ ஆவுடையில் லிங்கம் பொருந்துவது போல ஆதிசேஷன் மகாயோனி நோக்கி செல்கையில் கல்கியின் சாட்டை சுழற்றலில் அவ்வளவு நீரும் பீய்ச்சி அடிக்க வேண்டும். ஆதிசேஷனை கருந்துளை அதிவேகமாய் முதலில் விழுங்கிவிடும். அதே சமயம் நாம் பக்கத்தில் மிதக்கும் விண்பாறையைப் போய் அடைந்திருப்போம்”

“அங்கேயிருந்து என்ன நடக்கிறது என்று பார்போமா என்ன?’

“யாருக்குத் தெரியும்? ஆலிலையில் மீண்டும் பிறப்போமோ என்னமோ”

அவர்கள் விண்வெளியில் நடப்பதற்கான விசேஷ ஆடைகளை அணியலானார்கள். விண்கலத்திலிருந்த ஆக்சிஜனை குழாய் வழி உறிஞ்சி உறிஞ்சி தங்கள் உடல்களிலிருந்த நைட்ரஜனை வெளியேற்றினர். முழு உடையும் அணிந்தபின் கலி எல்லா வாயில்களையும் திறக்க கல்கி வெள்ளைக் குதிரை ஒன்றில் ஆரோகணித்து பயணிப்பவள் போல முன் சென்றாள். அவள் பின்னாலேயே கலியும் கடைசியாக கண்ணனும் சென்றனர். 

அவர்கள் மூவரும் விண்கலத்திலிருந்து விடுபட வேண்டிய தூரம் வரை நடந்த பின் ஆதிசேஷனை முழுமையாகப் பார்த்தனர். விண்வெளியின் கோலாகலத்தில் பங்கேற்க தயாராக அது நின்று கொண்டிருந்தது. 

“ஆமாம் கண்ணா நீ கொண்டுவந்த கவிதைத் தொகுதி என்னவென்று சொல்லவேயில்லையே?”

“நீர் அளைதல் 1993 வெர்ஷன்”

அவர்கள் தங்களை விண்கலத்திலிருந்து முழுமையாக விடுவித்துவிட்டனர். கல்கி சாட்டையைச் சுழற்றி  ஆதிசேஷனின் முன் குழாய் மூடியைச் சட்டென்று திறந்தாள். 







Tuesday, April 23, 2013

மீனாள் அழுகிறாள், ரகுநந்த | சிறுகதை










மீனாள் அழுகிறாள், ரகுநந்த

அவளுக்கு அழுகையும், கேவலும், ஒப்பாரியும் பிரார்த்தனைகள். முகத்தை வெளிறிய கைவிரல்களால் ஏதேதோ அவமானங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்பவள் போல மூடிக்கொண்டு, முழங்கால்கள் தன் குறு முலைகளில் அழுந்த தன்னுடலை கொக்கி போல சிறுத்து சுருக்கி கட்டிலில் விழுந்து சப்தமில்லாமல் அழுகிறாள் மீனாள். அவளுடைய நீண்ட கூந்தல் கட்டில் முழுக்க விரிந்து அடர்ந்திருக்கிறது. தன் தாயின் வாழ்க்கையை வாய்பாடு போல மனனம் செய்து ஒத்திகை பார்க்கும் தெரு நாடகக்காரி போல மீனாள் அழுகிறாள். அவளுக்கு அவள் தாயின் முகச்சாயல் இருப்பது தற்செயலானது அல்லவே. மீனாளின் தாய் அவள் தாயின் சாயல் கொண்டிருந்தாளா இல்லையா? அது போலத்தான் இதுவும். எல்லாமே இவ்வாறாக வழிவழியாய் வருவதுதான். மீனாளின் தாய் தனத்திற்கு அழுகை ஒரு உரையாடல்; மீனாளின் பாட்டி செல்லம்மாளுக்கு அழுகை ஒரு பொது அறிவிப்பு; மீனாளின் பூட்டி ஞானத்துக்கு அழுகை ஒரு அவமானம்; மீனாளின் ஓட்டி இயக்கிக்கோ அழுகை ஒரு கௌரவம். முகங்களும், சாயல்களும், வடிவங்களும் ஒன்றுதான் ஆனால் செயல்நோக்கங்கள்தான் வேறு வேறு. ஒவ்வொருத்தியின் வாழ்நாட்களையும் முந்தைய தலைமுறைக்காரி திருடிக்கொள்வாள்.

மீனாள் அழுவதை பலவேசம் மாடிப்படிகளில் நின்றுகொண்டு பார்த்தார். வீட்டின் நடுக்கூடத்திலிருந்து மேல் தள அறைகளுக்கு வளைந்து செல்லும் மாடிப்படி. அதன் மேல் படிகளில் நின்று கொண்டு பலவேசம் மீனாளைப் பார்த்தபோது அவள் முகமும் விரிந்த கூந்தலும் மட்டுமே அவருடைய பார்வைக்குக்குள் வந்தன. மௌனச் சடங்கு ஒன்றிற்கு விதிக்கப்பட்ட குரோத முடிவு என அது அவருக்குப்பட்டது. மீனாளின் தளிர் விரல்கள் தன் தோள்களைப் பிடித்ததால் வெளிறியதோ என்ற எண்ணம் ஏற்பட தன் படுக்கையறைக்குத் திரும்பி மல்லாக்க படுத்து ‘மீனாள் அழுகிறாள், ரகு நந்த’ என்று உரக்கச் சொன்னார். பலவேசத்தின் மனைவி ஏதோ துர்க்கனவில் கேட்ட சப்தத்திற்கு புரண்டு படுப்பவள் போல திரும்பி தன் கையை பலவேசத்தின் வெற்று மார்பில் போட்டாள். முற்றிய வெண்டைக்காய் போன்ற மங்களத்தின் விரல்கள் அவர் மார்பின் முடிகளில் அளைந்து அடங்கின. படுக்கையறையின் குமிழ் விளக்கின் வெளிச்சத்தில் பலவேசம் மங்களத்தைப் பார்த்தார். தன் ஓட்டினை  கழுகுக்குக் களவாடக் கொடுத்த ஆமை போல மங்களம் கிடந்தாள்.

மீனாளை மங்களம்தான் கிராமத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வந்தாள். பலவேசத்திற்கு சர்க்கரை வியாதி முற்றி கால்களில் வலி நாளுக்கு நாள் அதிகமாவதும் கால்கள் உணர்விழப்பதுமாய் இருந்தது. மங்களம் பலவேசம் கால்களை தினசரி அமுக்கி விட வேண்டும். மங்களத்திற்கோ இரண்டு நிமிடம் கால் அமுக்கினாலே மூச்சு வாங்கியது. பலவேசம் தன் கால்கள் வெளியில் மெத்து மெத்தென்று பஞ்சுப்பொதி மாதிரி மாறி வருவதாகவும் உள்ளேயோ நரம்புகளில் வலி குறுக்கும் நெடுக்குமாய் ஓடுவதாயும் அரற்றினார். மங்களம் தன் முழு புஜபலத்தையும் பிரயோகித்து பலவேசத்திற்கு கால் அமுக்கினாலோ பலவேசத்திற்கு உட்கார்ந்து எழுந்திருப்பதே சிரமமாக மாறுவதாயிருந்தது. பலவேசத்திற்கு நாளாக நாளாக வாழ்க்கையில் பிடிப்பு குறைய ஆரம்பித்தது. மங்களம் பலவேசத்திற்கு கால் பிடிக்கும் தருணங்கள்தான் ஒருவரை ஒருவர் தொடுவது என்பதாகிவிட்டது. ‘கால் பிடிப்பு தாம்பத்யம்’ என்று தனக்குள் நொந்துகொண்டாள் மங்களம். அவளை தனம் கிராமத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தபோது பலவேசத்தின் கால் வலியைப் பற்றியே ஒரு பாடு புலம்பித் தீர்த்துவிட்டுதான் தனத்தின் கணவன் காலமாகிவிட்ட செய்தியையே காது கொடுத்து கேட்டாள். தனத்தின் ஏழ்மை அவளை ஒரு பணக்கார கிழவனுக்கு மூன்றாம் தாரமாய் வாழ்க்கைப்பட வைத்தது. கிழவன் நான்கு குழந்தைகளை கொடுத்துவிட்டு மண்டையைப் போட்டான்.  மூத்த தாரங்களின் பிள்ளைகள் தனத்தை தங்கள் தகப்பன் திருமணம் செய்ததை அங்கீகரிக்கவில்லை. கூத்தியாள் என்று பட்டம் கட்டி தனத்தையும் அவள் பிள்ளைகளையும் தெருவுக்குத் துரத்தினர். மங்களம் கிராமத்திற்கு உடனே ஓடிப்போய் தனத்தைப் பார்த்தாள்; தனத்தின் மூத்த தாரங்களின் பிள்ளைகளை வழக்கு போடப்போவதாக மிரட்டி  தனத்திற்கும் அவள் குழந்தைகளுக்கும் குடியிருக்க வீடும் வீட்டரிசிக்கு நன்னிலத்தில் இரண்டு ஏக்கர் நஞ்செய்யும் வாங்கிக் கொடுத்தாள். சென்னை திரும்பும்போது தன் புருசனுக்கு கால் பிடிக்க வீட்டு வேலை செய்ய என்று தனத்தின் மூத்த மகள் மீனாளை கூட்டி வந்துவிட்டாள்.

 துவைத்த தன் துணிகளை பொதி மூட்டையாய் கட்டி மாரோடு அணைத்து நின்ற மீனாளை மங்களம் பலவேசத்திடம் அறிமுகப்படுத்தியபோது அவர் அவளுடைய கைகளில் அடர்ந்திருந்த பூனை மயிரையும்  அவளுடைய நீண்ட கூந்தலையுமே கவனித்தார். இந்தக் குட்டிதான் உங்களுக்கு இனி கால் பிடிப்பாள் என்று மங்களம் கூறியபோதே மதமதர்த்த தன் கால் நரம்புகளில் உயிரோட்டம் திரும்புவதாக உணர்ந்தார். பலவேசத்திற்கு உண்மையில் அப்போது வயிறு ஒரு பக்கமாய் உப்பிக்கொள்ள  அதற்கான கை வைத்தியமாய் ஆமைக்கறி சாப்பிட ஆரம்பித்திருந்தார். ஆமைக்கறியும் மீனாளின் கைராசியும் தனக்கு வலியற்ற நாட்களைத் தருமோ என்ற ஆசையை பலவேசம் மனத்தில் ஏற்படுத்தின. இல்லையென்றால் ஆமைகளும் மீனாளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்திருப்பார்களா என்ன?

 பலவேசத்தின் வியாபார நண்பரான கோயம்புத்தூர் ரங்கசாமிதான் முதன் முதலில் பலவேசத்திற்கு ஆமைக்கறியை அறிமுகப்படுத்தினார். கோயம்புத்தூருக்குப் போன இடத்தில் பலவேசத்திற்கு வயிறு கொதி நிலையின் உச்சத்தை அடைந்து உப்பி விட்டது. கால்கள் ரப்பர் குழல்கள் போல தொய்ந்துவிட்டன. கள் குடித்து ஆமைக்கறி சாப்பிட்டால் எல்லாம் சரியாய்ப்போகும் வாருங்கள் என்று ரங்கசாமி பலவேசத்தை கேரளத்துக்குக் கூட்டிப்போனார். கேரளத்து கள்ளுக்கடை ஒன்றில் ஒரு கலயம் கள்ளும் வறுத்த ஆமைக்கறி ஒரு தட்டும் சாப்பிட்ட உடனேயே பலவேசத்துக்கு வயிறு அடங்கிவிட்டது; கால்களில் மதமதர்ப்பு குறைந்து ரத்தம் ஓடுவதன் ஓர்மை கிடைத்தது. சென்னையில் கேரள கள்ளுக்கடைகளில் கிடைக்கும் ஆமைக்கறிக்கு எங்கே போக? பலவேசமும் விசாரித்து விசாரித்து ஓய்ந்துவிட்டார். மங்களம் காவேரிப்படுகை வயல்வெளிகளிலும் குளங்களிலும் கிடைக்கும் சிறிய வகை ஆமைகளை வாங்கலாம் என்று ஆலோசனை சொன்னாள். முதலில் இரு முறை காவேரிப்படுகை ஆமைகளை வருவித்து சாப்பிட்டுப் பார்த்த பின் வீட்டிலேயே கறி ஆமைகள் வளர்ப்பது என்று முடிவாயிற்று. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற பழமொழியைச் சொல்லி மங்களம் ஆமைகளை வீட்டில் தொட்டியில் வளர்த்து அவ்வபோது சமைத்து சாப்பிடுவதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் இல்லை. ஆனால் பலவேசம் தன் உடல் நலத்திற்காக ஆமைக்கறி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்து ஆமைகள் நீர்த்தொட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்.

நான்கு அடி உயரம் ஆறு அடி அகலம் உள்ள கண்ணாடி நீர்த்தொட்டியை நிர்மாணித்து அதில் காவேரிப்படுகை ஆமைகளை நீந்த விட்டபோது மங்களத்துக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆமைகள் தண்ணீர்த்தொட்டிக்குள் நீந்துவதையும், தொட்டிக்குள் மிதவைக்கட்டை ஒன்றின் மேல் கூடி காற்று வாங்கிவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் நீந்தி மூழ்குவதையும் மணிக்கணக்கில் பார்த்திருப்பதில் மங்களத்திற்கு நேரம் போவதே தெரிவதில்லை. பலவேசத்திற்கோ மங்களமும் ஆமைகளோடு ஒரு ஆமையாய் மாறிவிட்டதாகத் தோன்றியது.

ஆமைகள் நீந்திக்கொண்டிருக்க, மீனாள் அழுகிறாள், ரகுநந்த.

இரவு கடையை பூட்டிவிட்டு ஒன்பது மணிக்கு பலவேசம் வீட்டுக்கு வந்தாரென்றால் குளித்து சாப்பிட்டுவிட்டு பத்தரை மணிக்கு படுக்கைக்கு பலவேசம் வந்து விடவேண்டும். பத்தரையிலிருந்து பதினொன்றரை வரை மீனாள் அவருக்குக் கால் அமுக்க வேண்டும். அவர் அப்படியே தூங்கிப்போய் விடுவார் என்றபடிக்கு அட்டவணை தயாரித்தாள் மங்களம்.  மீனாளை நல்ல வலுத்த நான்கு ஆமைகளை தொட்டியிலிருந்து எடுத்து வரச் சொல்லியிருந்தாள். மீனாள் மீன்வலைக் கரண்டியில் தொட்டியிலிருந்து ஆமைகளைப் பிடித்து பாத்திரத்தில் போட்டபோது அவை தங்களின் வழவழத்த அடிப்பாகங்களை காட்டியபடி மல்லாக்க விழுந்தன. ஆமைகளுக்கு தலைகள் பாம்புத் தலைகளைப் போல இருப்பதை மீனாள் கவனித்தாள். வாய் பிளக்கும்போது இரட்டை நாக்குகள் இல்லாமல் இருப்பதை வைத்து மட்டுமே ஆமைத் தலைகள் என்று அறியலாமோ என்று தோன்றியது. உள்ளங்கையளவு ஆமைகள் பாத்திரத்தில் தங்களின் கோடானுகோடி வருடங்களை உதைத்துக்கொண்டிருந்தன. மீனாள் மல்லாக்கக்கிடந்த ஆமையொன்றின் அடிப்பாகத்தை விரல் நுனியாலும் நகத்தாலும் தொட்டுப்பார்த்தாள். அவளுடைய தீண்டலில் ஆமையின் தலை அங்குமிங்கும் ஆடியது, கால்கள் விதிர்த்துக்கொண்டன. பாத்திரத்தை ஆமைகளோடு மங்களத்திடம் கொடுத்தபோது அவள் தூய தண்ணீரில் கழுவி, கழுவிய வேகத்திலேயே அவைகளின் தலையை அரிவாள்மனையில் அரிந்தாள்; தேங்காய் துருவி போன்ற கத்தியால் ஓடு வேறு கறி வேறு என்று பிரித்தெடுத்து இன்னொரு பாத்திரத்தில் வைத்தாள். மீண்டும் மீனாள் ஓடற்ற தலையற்ற ஆமைக்கறியைக் கழுவும்போது அறியாத கிளர்ச்சியினால் அவள் குறு முலைகள் விம்மின.  ஆமைக்கறியை எலுமிச்சை சாற்றில் நன்றாக வேகவைத்து செட்டிநாட்டு காரக்குழம்பின்  மசாலா தடவி எண்ணெய் இல்லாமல் கேஸ் அடுப்பு நெருப்பில் நேரடியாக நன்றாகச் சுட்டு வைத்தாள் மங்களம்.

அரிசிச்சோற்றை குமித்து வைத்து, சூடான வேப்பம்பூ மிளகு ரசம் ஊற்றி, ஒரு துளி பசு நெய் விட்டு, பிசைந்து ஆமைக்கறியை கடித்துக்கொண்டு வாழைப்பூ துவரனைத் தொட்டுக்கொண்டு ஆசு ஊசு என்று சாப்பிடும் பலவேசத்தைப் பார்த்தபடி நின்றிருந்தனர் மீனாளும் மங்களமும். அறுபது வயதிற்கு திடகாத்திரமாய்தான் இருக்கிறார் பலவேசம் என்று நண்பர்கள் சொல்வார்கள். தலை வெள்ளை வெளேர் என்று நரைத்துவிட்டது, ஆனால் மார்பில் மயிர் நரைக்கவில்லை. குடிப்பதற்கு கள்ளு மட்டும் கூடவே இருந்திருந்தால் பிரமாதம் போ என்றவாரே பலவேசம் சாப்பிட்டு எழுந்தார். குளித்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தபோது அவர் வயிறு குளிர்ந்திருந்தது. 

நீர்க்காவி வேட்டியை முழங்காலுக்கு மேல் தூக்கி வீட்டு விட்டு மீனாளைக் கால் பிடிக்க மங்களம் சொன்னபோது மங்களத்தின் மேற்பார்வையிலா கால்பிடித்தல் என்று பலவேசம் தனக்குள் கேட்டுக்கொண்டார். மங்களம் பாதங்களிலிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று மீனாளுக்கு சொல்லிக்கொடுத்தாள். மீனாளுக்கு கைவிரல் நகங்கள் நீளமாயிருந்தன. ஆமைகளின் அடிப்பாகங்களைத்  தீண்டியது போலவே மீனாள் அவர் பாதங்களைத் தொட்டு விரல்களை நீவி சொடக்குகள் எடுத்தாள். கணுக்காலிலிருந்து முழங்கால் வரை மீனாளின் இளம் சூடான உள்ளங்கைகள் பிசைய பிசைய பலவேசம் ஒரு பெரிய கடல் ஆமையைப் போல விதிர் விதிர்த்தார். அந்த இளம் கைகள் தன் தொடைகளில் ஏறாதா என்று தவித்துப்போனார். மீனாள் தன் அறைக்குச் சென்ற பிறகும் கூட பலவேசத்திற்குத் தூக்கம் வரவில்லை. மங்களமோ மெல்லிய குறட்டை ஒலியுடன் தூங்கிப்போயிருந்தாள். மங்களத்தின் தாட்டியான தோள்கள் இரண்டினையும் பலவேசம் பின்னாலிருந்து தன் கைகளால் இறுக்கி அழுத்திப் பிடித்தபோது மங்களத்தின் கனவில் நீர்த்தொட்டி ஆமைகள் மிதவைக்கட்டையில் ஒன்றன் மேல் ஒன்று ஏறிக்கொண்டிருந்தன; மங்களமோ கட்டையொன்றின் இரு நுனிகளை கொக்குகள் தங்கள் அலகுகளினால் கவ்விப் பறக்க கட்டை மத்தியை வாயில் கவ்வி வான் பறந்த ஆமையைப் போல பறந்துகொண்டிருந்தாள்.

 மறு நாள் காலையில் பலவேசத்தைக் காதலுடன் பார்த்தாள் மங்களம். எத்தனை வருடங்களுக்குப் பின் அப்படிப்பார்க்கிறாள் அவள்! பலவேசமும் உற்சாகமாய் இருந்தார். தன் தலைமுடிக்கு கருப்பு மை அடிக்கலாமா என்ற யோசனை எழுந்தது. கால் நரம்புகளில் வலி இருந்தாலும் மதமதர்ப்பு குறைந்திருந்தது. மீனாள் முந்தைய இரவின் ஆமைத் தலைக் கறியினைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தாள்.

கடைக்கு வந்து வெகு நேரம் ஆன பிறகும் கூட பலவேசம் மீனாளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். வியாபாரத்தைத் தவிர முதன் முறையாக அவர் வேறு எதையும் பற்றி யோசிக்க நேர்ந்ததென்றால் அது அவருக்கு மீனாளைப் பற்றியதுதான். அந்தக் கைவிரல்களின் மென்மை  கடின வேலைகள் எதுவும் செய்யாமல் வசதியாக வளர்க்கப்பட்டதால் வந்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். மீனாளின் அப்பா கிழவனே தவிர வசதியான நிலச்சுவாந்தர்தானே என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். மீனாளின் அம்மாவும் பதினைந்து வயதிலேயே திருமணம் ஆனவள்தானே கிழவன் எப்படி அனுபவத்திருப்பான் என்று சிந்தனை ஓடியபோது பலவேசத்திற்கு துணுக்கென்றது. குழந்தைகள் இல்லாத தங்கள் வீட்டில் குழந்தையாக மீனாள் இருந்துவிட்டுப் போகட்டும் என்றல்லவா அவர் மங்களத்தின் திட்டத்திற்கு சம்மதித்தார்? என்ன ஆயிற்று அவருக்கு? பலவேசத்திற்கு தான் தன்னைப்பற்றியோ தன் உணர்வுகளைப் பற்றியோ என்றுமே யோசித்ததில்லை என்று புலப்பட்டது. அன்று அவர் வீட்டுக்குப் போகும்போது மங்களத்திற்கும் மீனாளுக்கும் ஒரு கிலோ ஜிலேபி வாங்கிக்கொண்டு போனார்.

மீனாள் அழுகிறாள், ரகுநந்த.  

ஆமைக்கறி வாரத்திற்கு இரு முறைதான் ஆனால் கால் பிடி வைபவமோ தினசரி என்று தொடர்ந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு மங்களத்திற்கு இந்த தினசரிச் சடங்கு அலுத்துவிட்டது. அவள் பலவேசம் கடையிலிருந்து வருவதற்கு முன்பே தூங்கிவிடுகிறாள். மீனாள்தான் வாசல்க்கதவை திறப்பது, மேஜையில் சாப்பாடு பரிமாறுவது, கால் பிடித்து தூங்கவைப்பது என்று மாறிப்போய்விட்டது. பலவேசம் தான் இந்திரபோகம் அனுபவிப்பதாக நினைத்தார். தினசரி கால் பிடிக்கும் பத்தரை மணி எப்போது வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தார். மீனாளின் அம்மா தனத்திற்கு மங்களம் மாதம் இரண்டாயிரம் ரூபாய் அனுப்பி கொடுத்தாள். மீனாள் மங்களத்தை விட பெரிய மனுஷி போல நடந்துகொள்ளத் தொடங்கினாள். 

ஆமை ஓடுகள் எல்லாவற்றையும் சேகரித்து அட்டையில் ஃபெவிக்காலால் ஒட்டி வண்ணம் தீட்டி விதவிதமான உருவங்கள் செய்வது மீனாளுக்கு பொழுதுபோக்கானது. மங்களத்திற்கும் மீனாளுக்கும் நாள் முழுவதும் பெரிதாக வேலை எதுவும் இல்லை. நாள் பூராவும் தொலைக்காட்சி பார்ப்பது அல்லது பக்கத்து வீட்டு பெண்களுடன் அரட்டை அடிப்பது என்று நாட்கள் நகர்ந்தன. மீனாள் ஆமை ஓடுகளை ஒட்டி செங்கொண்டைக் குருவி ஒன்றைச் செய்தாள். பலவேசம் அந்தக் குருவியை வெகுவாக ரசித்தார்.

தான் எரிந்த சாம்பலிலிருந்து புத்துயிர் பெற்று எழுந்துவரும் பறவையைப்போலவே ஆமையோட்டு செங்கொண்டைக் குருவி பலவேசத்திற்குத் தோன்றியது. தான் காதல் வயப்பட்டுவிட்டோமோ என்று அவருக்கு சந்தேகம் வந்தது. செங்கொண்டைக் குருவி அவர் மண்டைக்குள் கத்திக்கொண்டும் கொத்திக்கொண்டும் இருந்தது. பலவேசம் நீர்க்காவி வேட்டியை விடுத்து வீட்டில் அரை நிக்கர் அணிந்தார். கால் பிடிக்க மீனாள் வரும்போது அரை நிக்கர் அணிந்து கட்டிலில் கிடந்தார். மீனாளுக்கு பலவேசத்தின் அவஸ்தைகள் புரியவில்லை. அவள் அவருடைய கால்களை உலக்கைகள் போல பாவித்தாள். எந்திரத்தனமாக கால் அமுக்கி விட்டுவிட்டு குறித்த நேரம் வந்தவுடன் அவள் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை இரவொன்றில் மீனாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு கூந்தல் அலை பறக்க காலடியில் உட்கார்ந்திருக்கையில் பலவேசம் நிதானமிழந்து அவளை ஆவேசமாகக் கட்டிப்பிடித்து, இறுகத் தழுவி, இதழ்களில் முத்தமிட்டார். மீனாள் அவரைத் தள்ளிவிட்டு அவளுடைய அறைக்கு விசும்பி அழுதவாறே ஓடிவிட்டாள். 

அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனாள் பலவேசத்திற்கு கால் பிடிக்க வரவில்லை. ஓட்டுக்குள் பதுங்கியிருக்கும் கூர்மம் போல பலவேசம் என்ன ஏது என்று கேட்காமலிருந்தார். மூன்றாம் நாள் சாவகாசமாக மங்களம் மீனாள் வீட்டுக்கு விலக்காக இருப்பதால்தான் கால் பிடிக்க வரவில்லை என்று தெரிவித்தாள். அந்த மூன்று நாட்களும் பலவேசம் கணம் தோறும் செத்துப்பிழைத்தார். கடையில் உட்கார்ந்திருக்கும் நேரமெல்லாம் மீனாள் மங்களத்திடம் என்ன சொன்னாளோ  என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அதே சமயம் மீனாளின்  உதடுகளின் மென்மையின் நினைவில் அடிவயிற்றில் துடுப்புகள் அசைந்தன. மீனாளோ அவர் கண்களைச் சந்திப்பதை தவிர்த்தாள். மங்களம் தூங்கியபின் பலவேசம் ரகசியமாய் மாடிப்படிகளில் நின்று மீனாளின் அறைக்குள் பார்த்தபோது மீனாள் அழுதுகொண்டிருந்தாள்.

மீனாள் அழுகிறாள், ரகுநந்த.

முதன் முறையாக பலவேசத்திற்கு சாமியார் யாரிடமாவது போகலாமா என்ற எண்ணம் எழுந்தது. மனக்குமைச்சல் தாள முடியாததாக இருந்ததென்றால் கால்கள் வேறு குழலாடி மரத்துப்போய் நிலைகுலைய வைத்தது. ஆறாவது குறுக்குத் தெருவிலிருந்து மெயின் ரோடுக்கு நடந்து கடைக்கு வந்து சேர அவருக்கு முன்பெல்லாம் பத்து நிமிட நேரமே பிடிக்கும். இப்போதோ கடைக்கு வந்து சேர ஒரு மணி நேரம் ஆனது. எப்படி இப்படி ஊர்கிறோம் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. எந்த சாமியாரிடம் ஆலோசனைக்குப் போவது என்று தெரியாமல் சிவன் கோவில் ஓதுவாரைப் போய் பார்த்தார். ஓதுவார் ஜோதிடரும் கூட. பலவேசத்தின் ஜாதகத்தைப் பார்த்த ஓதுவார் வெந்நீரில் போட்ட ஜந்து மாதிரி தவிப்பீரே இப்பொழுதெல்லாம் என்றார்.  நாவுக்கரசர் பாடல் இருக்கிறது தெரியுமோ என்று கேட்ட ஜோதிடர் ‘வளைத்து நின்று ஐவர் கள்வர், வந்து எனை நடுக்கம் செய்ய, தளைத்து வைத்து, உலையை ஏற்றி, தழல் எரி மடுத்த நீரில், திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல தெளிவு இல்லாதேன், இளைத்து நின்று ஆடுகின்றேன், என் செய்வான் தோன்றினேனே’ என்று பாடிக்காட்டினார். இங்கேயும் ஆமையா என்று பலவேசம் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார்.  ஜோதிடர் சொல்வது எதையும் கேட்கும் மனோநிலை அவருக்கு அதற்குப் பின் இல்லாமல் போனது. ஆமை ஒரு அமானுஷ்ய உயிரினம் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார். அடுப்பில் வைத்த கொப்பரை வெந்நீரில் மேலும் கீழும் அலையும் ஆமையை நாவுக்கரசருக்குப் பின் தனக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். ஜோதிடர் வீட்டிலிருந்து கடைக்குப் போய் அங்கிருந்து வீடு திரும்ப அவருக்கு இரண்டரை மணி நேரம் ஆனது.
பலவேசம் ஊர்ந்து ஊர்ந்து வீடு வந்து சேர்ந்தபோது வாசலில் மங்களமும் அவளுக்குத் துணையாக மீனாளும் கவலையோடு நின்றிருந்தனர். அன்றும் ஆமைக்கறி அவருக்குத் தயாராக இருந்தது.  

மீனாள் கறி சமைக்கையில் ஒரு ஆமையின் கழுத்தில் சணலினால் இறுக்கிக் கட்டி அது தன் தலையை ஓட்டிற்குள் இழுக்க முடியாதவாறு செய்து வைத்திருந்தாள். மேடை அடுப்புக்கு பக்கத்தில் அது மனிதனாக, ரகு நந்தன் ஆக மாற ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் துணை ஆமையையோ அவளுடைய ஆமையோட்டு செங்கொண்டைக் குருவியின் அலகில் மாட்டி துடித்துக்கொண்டிருக்கிறது. ஆமைகள் தங்கள் இணைகளைச் சேர யுகாந்திரங்கள் ஆகும்.

பாதித் தூக்கத்தில் பலவேசம் முழித்தபோது இடி விழுந்தாலும் எழுந்திருக்காதவளாய் மங்களம் உறங்கிக்கொண்டிருந்தாள். பலவேசம் மாடிப்படிகளில் இறங்கி கீழே ஓடினார். நடுக்கூடத்தில் இருந்த நீர்த்தொட்டியின் விளிம்பினை கையால் பலவேசம் பற்றியபோது கால்கள் தளர்ந்து வலுவிழந்து கீழே விழுந்தார். அவர் கூடவே நீர்த்தொட்டியும் பலீங் என்ற சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்க ஆமைகள் கூடமெங்கும் சிதறின. சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து எழுந்து ஓடி வந்த மீனாள் ஆமைகளின் நடுவே அரை நிக்கர் அணிந்து வெற்று மார்புடன் பலவேசம் கீழே கிடப்பதைப் பார்த்தாள். அவரை அப்படியே அள்ளி எடுத்து மீனாள் தன் அறைக்குள் கூட்டிச் சென்றாள்.

மீனாள் அழுகிறாள், ரகுநந்த.











Wednesday, April 17, 2013

அஞ்சலி: பாடகர் பிரதிவாதி பயங்கரம் ஶ்ரீனிவாஸ்



பி.பி.ஶ்ரீனிவாஸ்



பல இலக்கிய நண்பர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருப்பது போலவே பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ் அவர்களை நானும் டிரைவ் இன் வுட்லேண்ட்ஸில் சந்தித்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். அவர் மரணமடைந்த செய்தியைப் படித்து மிகவும் துயரம் அடைந்தேன். தமிழ் பண்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கியமான cultural  icon அவர். 

1985இலிருந்து 1987 வரை நான் தமிழ் சினிமா ஆராய்ச்சி மாணவனாக சென்னையில் வசித்துக்கொண்டிருந்தேன். சினிமா ஆராய்ச்சியை தலை முழுகிவிட்டு நாட்டுப்புறவியலுக்கு மாறிவிடலாம் என்று முடிவு செய்திருந்த 1987ஆம் வருடமே பி.பி.ஶ்ரீனிவாஸுடன் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. டிரைவ் இன் வுட்லேண்ட்ஸில் கையில் ஹிட்ச்காக் ஆன் ஹிட்ச்காக் என்ற பெரிய புத்தகத்துடன் ஶ்ரீனிவாஸ் அவர்கள் வழக்கமாக அமரும் மேஜைக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்து நண்பர் ஒருவரின் வருகைக்காக காத்திருந்தேன். புத்தகம் A4 சைசைவிட பெரிய புத்தகம் என்பதால் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தது. புத்தக அட்டையில் ஹிட்ச்காக் தன்னுடைய கொய்யப்பட்ட தலையை தன் கையில் ஏந்தி நிற்பது போன்ற புகைப்படம். ஶ்ரீனிவாஸ் அவர்கள் என்ன புத்தகம் என்று விசாரித்தார். அதைத் தொடர்ந்து அறிமுகமும் உரையாடலும் நீடித்தது. நான் சினிமா ஆராய்ச்சியை விட்டு விட்டு நாட்டுப்புறவியல் ஆராய்ச்சிக்கு மாறப்போவது அந்த சமயம் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அதைப்பற்றியே அவருடனும் பேசினேன். அது நல்ல முடிவு என்று அவர் என்னிடம் சொன்னது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. Semiotics of Tamil cinema  என்ற என் ஆராய்ச்சித் தலைப்பைக் கேட்டுவிட்டு திரைப்பட பாடல்களையும் பாடல் காட்சிகளையும் எப்படி ஆராய்வீர்கள் என்று அவர் வினவினார். குறியியல் ஆய்வு பலவகைப்பட்டது அவற்றில் கலாச்சார சமிக்ஞைகளை ஆராய்வது ஒரு வகை. கலாச்சார சமிக்ஞைகள் திரைப்பட பாடல்களிலும்  பாடகர்களின் குரல்களிலும் எப்படி வெளிப்படுகின்றன என்று ஆராய்வது என்னுடைய இலக்கு என்று பதில் சொன்னதாக நினைவு. ஆனால் நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவருக்கே அத்தகைய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை எழுத நேரிடும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஶ்ரீனிவாஸின் குரலை, அவர் பாடிய திரைப்படப்பாடல்களை அவை நம் பண்பாட்டுக்கு அளித்திருக்கும் கொடையை எப்படி புரிந்து கொள்வது? மென்மையான ரொமாண்டிக் குரல் பி.பி.ஶ்ரீனிவாஸுடையது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. கள்ளமும், கபடமும் இல்லாத குரலும் கூட. சி.எஸ்.ஜெயராமனின் குரலைப் போல anarchyஇன் துள்ளல்களும் கரடுமுரடும், பிசிறுகளின் அழகும் இல்லாத குரல். “நிலவுக்கு  என் மேல் என்னடி கோபம்? நெருப்பாய் எரிகிறது ” என்ற பாடலைக் கேட்டே எதிரே நிற்பது நிலவல்ல நிலவென உருவகிக்கப்படும் பெண்தான் என்று உடனடியாக யூகித்து விடலாம். கோபம் கொண்ட பெண்ணை சமாதானம் செய்யும் தொனியிலேயே அந்த முழுப்பாட்டையும் பாடியிருப்பார் ஶ்ரீனிவாஸ் துளியும் அதில் ஒரு சீண்டல் இருக்காது. ஶ்ரீனிவாஸின் இன்னொரு நிலவுப் பாடலான “நிலவே என்னிடம் நெருங்காதே  நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை”   சோகமும் சிருங்காரமும் கலந்த பாடல். இரண்டு பாடல்களிலுமே சோகம் கட்டுக்கு மீறி ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ பாடல் போலவோ அல்லது ‘எங்கே நிம்மதி?’ பாடல் போலவோ கண்ணீரும் கம்பலையுமாய் தறி கெட்டு விடுவதில்லை. ஶ்ரீனிவாஸின் குரல் எராளமான நாடக பாவங்களையும் உணர்ச்சிகளையும் கொட்டுவதில்லை; அது ஒரு சீரான உரையாடல்த்தன்மையுடையதாய் அளவானதாய் இருக்கிறது. ‘ரோஜா மலரே ராஜகுமாரி’  என்ற குதூகலத்தன்மை கொண்ட பாடலாய் இருந்தாலும் சரி ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ என்ற பாடலாய் இருந்தாலும் சரி உணர்ச்சி மிகுவதில்லை; வார்த்தைகள் சிதைவதில்லை; அதன் ஓட்டம் தடைப்படுவதில்லை. உணர்ச்சிகளின் நுண் தளங்கள் மென்மையாகச் சுட்டப்படுகின்றன; விரிக்கப்படுவதில்லை. 

பி.பி.ஶ்ரீனிவாஸின் அடிக்குரல் கனத்ததாய் வெளிப்பட வாய்ப்பிருந்தாலும் அவர் அதனை அபூர்வமாயும் பயன்படுத்தியதில்லை. ‘கண்ணாலே பேசிக் கொல்லாதே’ பாடல் கனத்த குரலுக்கான சிறந்த சந்தர்ப்பம். கண்டசாலாவோ ஏன் ஏ.எம்.ராஜாவோ கூட அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நன்றாக உற்றுக் கேட்டால் கனத்த குரலைப் பயன்படுத்தாத கலைக்கட்டுப்பாடு ஶ்ரீனிவாஸிடம்   எந்த அளவுக்கு கலை முழுமையடைய உதவுகிறது என்பது தெரிய வரும். அவருடைய இதர பாடல்களைக் கேட்கும்போது இது  இன்னும் நுட்பமாக தெரியவரும். ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் மென்மையும் கட்டுப்பாடும் அழகின் மெருகுகள் என்பதை உணர்த்தும். ‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்ரீனிவாஸினால் மட்டும்தான் அணுக்கத்தின் குதூகலத்தை வெளிப்படுத்தும் பாடலாகிறது என்று அடித்துச் சொல்லலாம். 'அனுபவம் புதுமை' பாடலை அவரைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் பாடல் விரசமாகியிருக்கும்.

நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’, ‘மயக்கமா கலக்கமா’ ஆகிய பாடல்கள் நெஞ்சு வெடித்து கதறி அழத் தகுந்த பாடல்கள். ஶ்ரீனிவாஸ் அந்த உணர்ச்சிப் பெருக்கினை ஒரு ஆற்றொழுக்கிற்குக் கொண்டு வந்திருப்பார். என்னுடைய நண்பர் காந்தி பாலசுப்பிரமணியன் இன்றைக்கும் டாஸ்மாக் பார்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ பாடல்தான் என்றார்; அந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் தாரை தாரையாய் வழிய அழுபவர்கள் ஏராளமாம். ஆனால் பாடலோ தன் சீரொழுங்கினில் இருந்து குலையாதது. உதடுகள் துடிக்க வார்த்தைகள் வெளிவராமல் காட்சியிலேயே வெளிப்படுத்தும் ஆழ் உணர்ச்சியின் தன்மையினது.

பி.பி.ஶ்ரீனிவாஸின் கலையின் கலாச்சார மூலங்கள் யாவை சமிக்ஞைகள் யாவை என்பதினை அறிய அவர் பாடியுள்ள இதர பக்தி பாடல்களையும் கேட்க வேண்டும். குறிப்பாக பி.பி.ஶ்ரீனிவாஸ் பாடிய முகுந்த மாலை, ஶ்ரீ மல்லிகார்ஜுன ஸ்தோத்திரம் ஆகியனவற்றைக் கேட்கவேண்டும் . குலசேகராழ்வார் இயற்றிய முகுந்த மாலையை ஶ்ரீனிவாஸ் ‘பாடியிருக்கிறார்’ என்று விவரிப்பது தவறானது ஒதுதலுக்கும், உச்சாடனத்திற்கும், பேசுவதற்கும் இடைப்பட்ட ஒன்று அது. அதிலும் ‘நாமாமி நாரயண பாத பங்கஜம், கரோமி நாராயண பூஜனம் சதா, வதாமி நாரயண நாமம் நிர்மலம், ஸ்மாராணி நாரயண தத்வம் அவ்யயம்‘ என்ற முகுந்த மாலையின் புகழ் பெற்ற பத்தியினை ஶ்ரீனிவாஸ் ‘பாடுவதை‘ கேட்பவர்களுக்கு அவருக்கு உணர்ச்சியை கட்டுக்கோப்புடன் கையாளும் திறன் வைணவ பக்தி மரபிலிருந்து வருவது புலப்படும். பக்தியின் உச்சத்தில் ஆவேசத்தில் சாமியாடிவிடுகின்ற பக்தியல்ல இது. பரம்பொருளுடன் இணைவதற்கான தாபம் உள்ளார்ந்த ஆற்றொழுக்காய் மாறிவிட்ட நிலையில் இவ்வுலக அன்பாக, உரையாடலாய் விகசிக்கின்ற பாங்கு, பாவனை, சகஜம்.   ஸ்வாதித் திருநாளின் கீர்த்தனைகளில் நாம் கேட்கும் கட்டுக்கோப்பான உணர்ச்சியின் வெளிப்பாடு. பதம் பாடுதலின் நீட்சி.
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ, யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர், தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர், ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே” என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடுவாரே அந்த உணர்ச்சி பீறிடல் ஆற்றுப்படுத்தப்பட்டதன் வடிவம். ஏன் பாரதியின் கண்ணம்மா பாடல்களில் உள்ளார்ந்த அமைதியுடன் இருக்கின்ற பக்தி/காதல் இல்லையா? ‘காற்று வெளியிடை கண்ணம்மா” பாடலை ஶ்ரீனிவாஸ் பாடும்போது அது பேரழகுடன் ஒலிக்கவில்லையா?
‘பிரதிவாதி பயங்கரம்’ என்ற வைணவ பட்டத்தை இயல்பாக எற்கத் தகுந்தவரே ஶ்ரீனிவாஸ். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பய தீட்சிதர் என்ற வேதாந்த அத்வைதிக்கும் ராமானுஜர் தத்துவப்பள்ளியின் வழி வந்த துவைதி தொட்டச்சாரியாருக்கும் ஏராளமான விவாதங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நிலப்பகுதிகளின் பக்தியும் தத்துவமும் வரலாறுகளாய் சங்கமிக்கும் களன்கள் அப்பய தீட்சிதருக்கும் தொட்டாச்சாரியாருக்கும் இடையில் நடந்த விவாதங்கள் எனலாம். தொட்டச்சாரியார் சோளிங்கரை நிர்மாணம் செய்தார். அவர் வழியினரான, திருப்பதி ஏழுமலையானுக்கு பாடப்படும் வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றிய அன்னங்காச்சாரியார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அவருடைய தர்க்க புலமையையும், வாதத்திறமையும் அங்கீகரித்து ‘பிரதிவாதி பயங்கரம்‘ என பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் வைணவ பெரியார் பலருக்கும் ‘பிரதிவாதி பயங்கரம்‘ என்பது குடும்பப் பட்டமாய் வழங்கப்படுவதாயிற்று.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என்று இரண்டாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடிய, ஆந்திரா காக்கிநாடாவில் பிறந்து, தமிழிலும் தெலுங்கிலும் புகழ் பெற்று சதா கன்னடத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த, வைணவத்தில் தோய்ந்த பி,பி.ஶ்ரீனிவாஸ் ஒரு உண்மையான பிரதிவாதி பயங்கரம்.
1994 அல்லது 1995 இல் என்று ஞாபகம். ‘புதிய பார்வை‘ பத்திரிக்கையில் ‘பத்மநாபனின் கூடு‘ என்ற என் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. கோணங்கி சமீபத்திய ‘கல்குதிரை‘ இதழில் இக்கதையை குறிப்பிட்டு எழுதியிராவிடில் எனக்கு இந்தக் கதையும் அது தொடர்பான சம்பவங்களும் நினைவுக்கே வந்திருக்காது. அந்தக் கதை வெளிவந்த இதழுடன் வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் உட்கார்ந்திருந்தேன். பி.பி.ஶ்ரீனிவாஸ் அவர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தேன். கலர் கலராக பல பேனாக்களை வைத்து அவர் எழுதிக்கொண்டிருந்தார். கூர்க் தலைப்பாகையும் நாமமும் அவருடைய தெளிவான அடையாளங்களாகியிருந்தன. வா என்று கையசைத்துக் கூப்பிட்டார். பேச்சு என் கையிலிருந்த இதழையும் அதில் பிரசுரமாகியிருந்த என் கதையையும் நோக்கி திரும்பியது. என்ன கதை என்று விசாரித்தார். மூளை வளர்ச்சி குன்றிய ஒருவன் பிரமாதமான பாடல் வரிகளை (கவனிக்க கவிதை வரிகளை அல்ல) சொல்லுவது பற்றிய கதை என்றேன். எங்கே உன் கதாபாத்திரம் சொல்லும் நல்ல வரி ஒன்றைச் சொல் பார்க்கலாம் என்றார். “என் ஆத்மாவைக் கரைத்து உன் விழிகளுக்கு அஞ்சன மை தீட்டவா?” என்று வாசித்துக்காட்டினேன்.  அவர் அவ்வரியினை மெதுவாகப் பாடிப்பார்த்தார், என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
இன்று எனக்கு ‘பத்மநாபனின் கூடு‘ கதைப்பிரதி கிடைக்குமானால் அதை பிரதிவாதி பயங்கரம் ஶ்ரீனிவாஸ் அவர்களுக்கு மனப்பூர்வமாக சமர்ப்பணம் செய்வேன்.


---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: இக்கட்டுரையை பாதி எழுதிருக்கையில் நண்பர்கள் காந்தி பாலசுப்பிரமணியனும், பாலாஜி ஶ்ரீனிவாசனும் என் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களோடு இக்கட்டுரையின் போக்கினை விவாதித்தபோது அவர்கள் எனக்குத் தந்த விபரக்குறிப்புகளால் இந்தக் கட்டுரை செழுமை பெற்றது. அவர்களுக்கு என் நன்றி.   








Tuesday, April 9, 2013

இலக்கிய விமர்சகர் டெர்ரி ஈகிள்டனின் உரைகள்

ஓரேயடியாக தல யாத்திரைகள், சரஸ்வதி பிரேமை, கலை வரலாற்றில் சரஸ்வதி என்ற ஆராய்ச்சி என்று எனக்கு வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறதா, கோடை வெயில் வேறு ஆரம்பிக்கும்போதே கொளுத்து கொளுத்து என்று கொளுத்துகிறதா பண்டாரமாய் ஆகிவிடப்போகிறேனோ என்ற பயம் பிடித்துகொண்டது. இடையில் நான்கு நாட்கள் இலக்கிய விமர்சகரும் மார்க்சீயருமான டெர்ரி ஈகிள்டனின் உரைகளை இணையத்தில் கேட்டேன். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கோடையில் பண்டார ஆசைகள் வராமல் இருக்க உங்களுக்கும் உதவுகின்றனவா இந்த உரைகள் என்று கேட்டுவிட்டு எழுதுங்கள். எதிர்காலத்தில் 'பண்டாரமாகாமல் தப்பிப்பது எப்படி?' என்ற சுய உதவி புத்தகத்தை தத்துவார்த்த பின்னணியோடு எழுத எனக்கு உங்கள் எதிர்வினைகள் உதவக்கூடும்.

Lecture I : Culture and Death of God



Lecture II: The God Debate



Lecture III: Faith and Reason


Lecture IV: Marxism and Theodicy


Lecture V: Christianity fair or foul


Lecture VI: Death of Criticism


Lecture VII:  On Evil

http://vimeo.com/15157413

Wednesday, April 3, 2013

தல யாத்திரை: திருக்கண்ணமங்கை




கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் உலக உருண்டையை நான்கு முறை சுற்றி வந்துவிட்டேன். நாற்பத்து மூன்று நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். இந்தியா முழுவதும் நாட்டுப்புற கலை சேகரிப்பிற்காகவும் கருத்தரங்குகளுக்காகவும் சதா பயணம் செய்தவாறு இருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் ஏராளமான புகைப்படங்களையும் பயணக்குறிப்புகளையும் என்னிடம் சேகரமாக்கியிருக்கின்றன. ஆனாலும் அந்த பயணங்களைப் பற்றியெல்லாம் எழுதி பிரசுரிக்காமல் இந்த சிறு பயணத்தின்போது பார்த்த கோவில்களைப் பற்றி மட்டும் விடாப்பிடியாக எழுதி பிரசுரம் செய்வானேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எகிப்தின் பிரமிடுகளையும், நைல், மிஸ்ஸிஸிபி நதிகளையும், திபெத்திய மடாலயங்களையும், நேபாளத்தில் விமானத்தில் பறந்து பார்த்த இமயமலைத் தொடரையும், ஐரோப்பா முழுக்க தேடித் தேடி பார்த்த இசை நாடகங்களையும், அமெரிக்காவின் தேசிய இயற்கை பூங்காக்களையும்  பற்றி எழுதாமல் திருவாரூர் பல்கலைக்கு சென்ற இடத்தில் பார்த்த தலங்களைப் பற்றி தொடர்ந்து எழுதுவானேன்?  இத் தலங்களைப் பற்றி எழுதுதல் என்பது எனக்கு ஒரு வகையான வீடு திரும்புதலை பதிவு செய்வதாக இருக்கிறது; சில நினைவுகளின் பவித்திரத்தை காபந்து செய்கின்ற அதே வேளையில் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான யத்தனமாகக் கூட இந்த தல யாத்திரைக் கட்டுரைகள் இருக்கலாம்.

அப்பாவுடன் ஶ்ரீரங்கத்தில் எண்பதுகளில் கேட்ட ஒரு கதாகாலட்சேபத்தில் முதன் முறையாக திருக்கண்ணமங்கை பற்றி சொல்லக் கேட்டேன்.  பாகவதர் திருக்கண்ணமங்கையை எழு அமுதங்கள் நிறைந்த ஊர் என்று வருணித்தார். அப்பா ஆத்திகராக மாறிக்கொண்டிருந்த காலம் அது. அவருக்கு  விமானம், மண்டபம், ஆரண்யம், ஸரஸ்ஸு, க்ஷேத்ரம், ஆறு, நகரம் ஆகியவற்றை அமுதங்கள் என்று வருணிப்பது பிடித்தமானதாக இருந்தது. திருக்கண்ணமங்கை என அம்பிகையின் பெயரால் அந்த ஊர் அழைக்கப்படுவதும் அப்பாவுக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு நாள் போய் வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்; ஆனால் கடைசி வரை போகவேயில்லை. அம்பாளை தாயார் என்றழைக்கச் சொல்லிக்கொடுத்தவர்கள் வைணவர்கள்தான் என்று அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். வேதவல்லி, அபிஷேகவல்லி என்றெல்லாம் ஒப்புக்கு சமஸ்கிருத பெயர்கள் இருக்க கண்ணமங்கை என்றெல்லாம் மகாலஷ்மியை அழைப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று அடிக்கடி வியப்பார். திருநின்றவூரில் மகாலஷ்மிக்குப் பெயர் ‘என்னைப் பெற்ற தாயார்’ என்று திருநின்றவூர் போய்வந்தபின் அப்பாவிடம் கூறியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்படியே திருக்கண்ணமங்கைக்கும் போய் வந்திருக்க வேண்டியதுதானே என்று அவர் கேட்கத் தவறவில்லை.



“பண்ணினை, பண்ணில் நின்ற பான்மையை, பாலுள் நெய்யினை, மால் உருவாய் நின்ற விண்ணினை” என்ற திருமங்கையாழ்வாரின் பாசுர வரிகள் திருக்கண்ணமங்கை திருமாலைக்கண்டு பாடியவை. நான் ஶ்ரீரங்கத்தில் கேட்ட கதாகாலட்சேபத்தில் திருமங்கையாழ்வாரைப் பற்றி பாகவதர் கூறிய கதைகளும் எனக்கு நன்றாக நினைவிருந்தன. திருமங்கை ஆழ்வார்தான் திருமாலை அதட்டியவர். திருமழிசையில்  உன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள் என்றவுடன் தான் படுத்திருந்த ஆதிசேடனை பாயாகச் சுருட்டிக்கொண்டு ஆழ்வார் பின்னாலே போனார் திருமால். திருக்கண்ணமங்கையிலோ திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் பக்தவத்சலப்பெருமாளுக்கு புரியவில்லையாம்; என்ன புரியவில்லை உனக்கு என்று திருமங்கையாழ்வார் அதட்டியவுடன் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்றாராம் பெருமாள். இத்தனைக்கும் என் மேல் பாட்டுப் பாடு பாட்டுப்பாடு என்று பின்னாலேயே போய்  திருமங்கையாழ்வாரிடம் பகவான் கேட்டு வாங்கிய பாட்டு. புரிவில்லையென்றால் என்னிடத்தே சிஷ்யனாக வாரும் என்கிறார் திருமங்கையாழ்வார். அதன் பொருட்டே பெருமாள் பெரியவாய்ச்சான் பிள்ளையாக அவதரிக்க அவருக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவே திருமங்கையாழ்வார் நம்பிள்ளையாக  அவதரித்ததாக கதைகள் இருக்கின்றன. இந்த முன் ஜென்ம தொடர்புபடுத்துதல்கள் நம்பிள்ளையும் , பெரியவாய்ச்சான் பிள்ளையும் பிறந்த நட்சத்திரங்களையும் மாதங்களையும் கொண்டு உண்டாக்கப்படுகின்றன. கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணியில் பெரியவாய்ச்சான் பிள்ளையும்,  திருமங்கையாழ்வார் பிறந்த கார்த்திகை மாதம்  கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையும் பிறந்தனர். 

இந்தக்கதை எங்கேயும் பிரசுரமாகியிருக்கிறதா இல்லை வாய்மொழிக்கதையாக மட்டும்தான் நீடிக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பகவானுக்கும் கவிபக்தனுக்குமான உறவு இக்கதைகளின் வழி சாமான்யப்படுத்தப்படுகிறது. இவ்வளவு அணுக்கமாக குடும்ப, நட்பு, காதல் உறவுகளாக சாமான்யப்படுத்தப்பட்ட உறவு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறெந்த பண்பாட்டிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. 



கிருஷ்ண ஆரண்யம் என்றழைக்கப்பட்ட காடு இன்று எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை;  கோவில் குளம் திருமகள் இங்கே தோன்றியிருக்கமுடியும் என்று நம்பும் வகையிலேயே சுத்தமாக இருக்கிறது; வெகு அழகான குளம். கோவிலும் படு சுத்தமாக இருக்கிறது. ஶ்ரீதேவி பூதேவித் தாயார்களோடு அருள்பாலிக்கும் பெருமாள் உண்மையிலேயே பெரிய பெருமாளாக நின்ற கோலத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறார். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலஸ்தானத்திற்குப் பக்கத்தில் போனவுடன் சட்டென்று உலகளந்த பெருமாளின் பிரம்மாண்டம் ஆட்கொள்ளும்; அது போலவே திருக்கண்ணமங்கை பக்தவத்சலரும். தியானமொன்றில் ஒளி பீறிட கிடைத்த சௌந்தர்யத்தினை சிற்பி பக்தவதசலராகவும் ஶ்ரீதேவியாகவும் பூதேவியாகவும் வடித்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு! திருக்கண்ணமங்கையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று சும்மாவா பாடினார் திருமங்கையாழ்வார்?

பிரகாரத்தை சுற்றி வந்தபின் மீண்டும் மூலஸ்தானத்திற்கு போய் நீண்ட நேரம் கிருஷ்ணனைப்பார்த்து நின்றேன். அப்பாவுக்கு இங்கு வரக் கொடுத்து வைக்கவில்லையே என்று தோன்றியது. தேவர்கள் தேனீக்களாக அங்கே சுற்றிகொண்டு கிருஷ்ணணின் திவ்ய தரிசனத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும் தேன் கூடு ஒன்றிற்கு தீபராதனை காட்டப்படுவதாகவும் குருக்கள் சொன்னார். மூலஸ்தான சிலைகளை வைத்து தமிழகத்தின் கலை வரலாறு எழுதப்படுமென்றால் அதில் திருக்கண்ணமங்கை சிலைகள் முதன்மையானதாக இருக்கும் என்றேன் அவரிடம். கண்கள் பிரகாசமாக உப்பிலியப்பனையும் அப்படியே பார்த்துவிடுங்கள் என்றார். இல்லை திருவாரூர் சாயரட்சைக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அப்பா திருக்கண்ணமங்கை வரவேண்டும் என்று பல முறை ஆசைப்பட்டார் என்ற கதையை அவரிடம் சொன்னேன். அப்பா என்ன நட்சத்திரம் என்று வினவினார். புனர்பூசம் என்று சொல்லி முடிப்பதற்குள் ராமன் நட்சத்திரம் என்றார். அவர் சொல்ல வந்ததன் தர்க்கம் எனக்கு புரிந்த மாதிரியே இருந்தது. 






Tuesday, April 2, 2013

டெல்லியில் பொம்மலாட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நிரல்




Two-day seminar at IGNCA
Title: Traditional and modern forms of puppetry: Issues in contemporary expressions and practices
Dates: 11th & 12th April 2013
Venue: Conference Room, IGNCA, CV Mess, Janpath, New Delhi-110001

11-4-2013

               10:00 am                     :                Welcome Address by Member Secretary, IGNCA     
               10 .15 am                    :                Address by the Chief Guest
               10.30 am – 11.00am :                Introduction to the Seminar
                                                                      --Dadi Pudumjee

               11.00am - 11 .30 am    :               Usha Mallik
                                                                       (title to be recieved)

               11.30am- 12.00pm      :   Tea Break
    12.00pm- 12.30pm      :             Tradition and Modernity: Thinking out of the box                 
                                                            --Ranjana Pandey
                                              
               12:30pm- 1:00 pm          :             Poetics of loss and lament in traditional
                                                   Indian Puppetry.
                                                   --M.D Muthukumaraswamy
                01.00pm – 02.00pm        :               Lunch Break
                02.00 pm- 02.45pm          :              Lecture by Suresh Dutta on Modern
                                                 Puppetry in India
                                                    
                                                 Demo on Traditional Puppetry in India
                                                 -- Sudhir Gupta

                  02.45pm- 03.30pm   :    Tradition and Innovation in  
                                                 Tholpavakkoothu (Lec-Demo)
                                                                       -- Ramachandra Pulavar and Rahul

                  03.30 pm- 04.00pm    :               Tea Break
                  04.00pm- 04.45pm     :               Leather Puppets of Andhra Pradesh
                                                 --Demo by Hanumath Rao
                  04.45 pm- 05.30pm     :              Creating modern traditions of                                                    
                                                 Puppetry (Lec-Demo
                                                 --Rantamala Nori

12-4-2013

                    10.30 am -11.00 am      :                 Changing Performance Landscape
                                                                              ---Maadhavilatha Gabji
                   11.00am-11.30 am          :               Traditional Yakshagana String Puppetry:
                                                                              Introduction, Scope and Performance
                                                       ---Bhaskar Kogga Kamath
                   11.30am-12.00 pm           :                 Tea Break
                   12:00 am- 12:30 pm         :                 Puppetry in Mass Communication
                                                         ---Omchery N.N. Pillai

12.30pm- 01.15 pm:                      Traditional Shadow Puppetry and
   Animation
                                                                                  --Atul Sinha
01.15 pm - 02.15 pm:                     Lunch Break
02.15pm - 03.00pm:                      Telling Visual stories with puppets and
Technology- a special reference to three
plays “About Ram”, “Anecdotes
and Allegories by Gulbadan Begum 
“Bollywood and Bandwagon”
                                                         --Anurupa Roy

03.00pm- 03.45pm:                     Rejuvenation of Pavakathakali 
                                                                               --Lecture by G. Venu
Pavakathakali Demo              
               --Ravi Gopalan Nair

03.45pm- 04.15pm:                        Tea Break

04.15pm -05.00pm:                       Demo on Ravan Chhaya
                                                          --Discussions by Shankarjeet Dey

05.00pm-05.30pm:                        Demo on Rajasthani Kathputli
                                                                                  --Puran Bhatt