Showing posts with label கிறிஸ்தவா. Show all posts
Showing posts with label கிறிஸ்தவா. Show all posts

Thursday, December 8, 2011

ஜுலியா கிறிஸ்தவாவின் 'கவித்துவ மொழியில் புரட்சி' பகுதி 3

"Mirror" from haberarts.com 


வடிவ ஒழுங்கு, செய் நேர்த்தி, கவிதா தர்க்கம் ஆகியவற்றின் உள்ளார்ந்த மற்றதாக கவிதையின் லயம், சப்தம், தொனி, பவனைகள், சைகைகள் ஆகியனவற்றை அடையாளப்படுத்தியதன் மூலமும், மற்றதினை பெண்மையின் குணனலன்களாக விவரித்ததன் மூலமும் கிறிஸ்தவா மொழிக்கும் மனிதனுக்குமான உறவையே தன்னிருப்பு கட்டமைக்கப்படுவதன் செயல்பாடாக மாற்றுகிறார். மேற்கத்திய தத்துவ பாரம்பரியத்தில் தன்னிலை-மற்றது ஆகியவற்றிற்கிடையிலுள்ள உறவு முக்கிய பங்கு வகிப்பதாக இருந்து வந்திருக்கிறது. தன்னிலை என்பது தன்னிருப்பாக கட்டமைக்கப்படக்கூடியது அதிலும் அந்த கட்டமைதல் மொழி மூலமாக நடைபெறுகிறது என்பதை சுட்டியது கிறிஸ்தவாவின் முக்கிய பங்களிப்பாகும்.
பல்கேரியாவில் பிறந்து ரஷ்ய உருவவியல் கோட்பாடுகளில் தேர்ச்சிபெற்றவராக ஃபிரெஞ்சு தத்துவ சூழலுக்குள் காலடி எடுத்து வைக்கும் கிறிஸ்தவாவுக்கு, ரஷ்ய உருவவியலை மிக முக்கியமான இலக்கிய கோட்பாடாக மாற்றி அமைத்த மிகைல் பக்தினின் தாக்கம் இருந்தது. பக்தினே தன்னிலைக்கும் மற்றவைக்குமான (Self and Other) உறவினை அறம் சார் உறவாக தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்களில் அடையாளப்படுத்தியிருந்தார். இலக்கியம், கலை ஆகியனவற்றை ஆசிரிய தன்னிலையின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்கப் பழகியிருந்த மேற்குலகிற்கு பக்தின் தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்கள் கலை உச்சத்தினை அடைவதற்குக் காரணம் அவை தாஸ்தாவ்ஸ்கியென்ற ஆசிரிய தன்னிலையின் வெளிப்பாடாக இல்லாமல் அவர் நம்பியிருந்த கிறித்தவ உலக நோக்கிற்கு நேர் எதிரான கதாபாத்திரங்களையும் கதைச் சூழல்களையும் கற்பனை செய்ய முடிந்தது என்று எடுத்துச் சொன்னார். அத்தகைய எதிர்மறை கதாபாத்திரங்களுக்கான ஜீவித நியாயத்தையும் அவரால் தன் நாவல்களில் எடுத்துச் சொல்ல முடிந்தது என்பது மற்றவையோடு உரையாடுகின்ற கற்பனை (Dialogic imagination) என்றும் பக்தின் விளக்கியிருந்தார். பலகீனர்களையும் பாவிகளையும் ரட்சியுங்கள் என்று உண்மைக் கிறித்தவரான தாஸ்தாவ்ஸ்கி தன் நாவல்களில் இறைஞ்சவில்லை; மாறாக அத்தகைய மனிதர்களுக்கும் உலகிருப்பிற்கான நியாயம் என்ன என்பதினை வெளிச்சொல்வதாகவே தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்கள் அமைந்திருக்கின்றன இந்த குணமே தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்களை ஐரோப்பிய நாவல் வரலாற்றிலேயே உச்சகட்ட படைப்புகளாக மாற்றுகின்றன என்றும் பக்தின் வாதிட்டார். தன் நியாயத்தைவிட பிறர் நியாயம் என்ன என்பதை புனவிற்குள் கொண்டுவருவதே கலை என்றும் தாஸ்தவ்ஸ்கியை முன்னிறுத்தி பக்தின் வாதிட்டார்.
பக்தினின் தன்னிலை- மற்றவை உறவு பற்றிய சிந்தனை, மொழி பற்றிய தத்துவம், இலக்கியக் கோட்பாடு என்று மட்டுமில்லாமல், மானிடவியல், சமூகவியல், அரசியல், காலனீய நீக்க சிந்தனைகள், அறவியல் என பல துறைகளிலும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. எட்வர்ட் சேடின் ‘ஓரியண்டலிசம்‘, உதாரணமாக, கீழைத்தேயத்தினை மற்றதாக ஐரோப்பிய சிந்தனை கற்பிதம் செய்கிறது என்று விளக்குகிறது. ஆனால் பக்தினின் சிந்தனையின் பல துறை தாக்கங்கள் அமெரிக்க இலக்கியக் கோட்பாட்டாளர்களும் தத்துவவாதிகளும் பக்தினை 1950-1960களில் கண்டுபிடிக்கும்வரை நிகழவில்லை.
கிறிஸ்தவா உள் நுழையும்போது இருந்த ஃபிரெஞ்சு தத்துவச்சூழலோ இருத்தலியலின் பாதிப்பினால் தன்ன்னிலையைக் கொண்டாடும் சிந்தனையாக இருந்தது. இந்த தன்னிலைக் கொண்டாட்டத்தின் மிக மோசமான வெளிப்பாடாகவே சார்த்தரின் மற்றவையெல்லாம் நரகம் என்ற வாசகம் விவாதத்திற்குள்ளாகியது. சார்த்தரின் ‘No Exit’ நாடகத்தில் வரக்கூடிய இந்த வாசகத்தினை காம்யூ, சிமோன் தி பூவா ஆகிய சிந்தனையாளர்கள் உடனடியாக கடுமையாக எதிர்த்தனர்; சார்த்தரே தன்னுடைய இந்த வாசகம் சார்ந்த தத்துவ நிலைப்பாடு தவறானது என்று ஒப்புக்கொண்டு எழுத்தாளனின் கடப்பாடு என்ன என்பதினை விளக்கும் கட்டுரைகளை பின்னர் எழுதினார். இருப்பினும்   தன்னிலையை விடுத்து மற்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தத்துவத்தையும், இலக்கிய கோட்பாட்டினையும் வளர்த்தெடுத்தது பின் நவீனத்துவ சிந்தனையாளர்களாலேயே சாத்தியப்பட்டது. லகானுக்கும் கிறிஸ்தவாவிற்கும் இந்த பங்களிப்பில் மிக முக்கியமான இடமிருக்கிறது.
மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை-மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைத்ததையே கிறிஸ்தவாவின் முக்கிய பங்களிப்பாக சொல்லலாம். ஆண்-பெண் என்ற ஆசிரியர்களின் பால் நிலை மீறி, இலக்கியம்- இலக்கியமற்றது என்ற பகுப்பு மீறி, பேச்சுமொழி- எழுத்துமொழி என்ற வேறுபாடு மீறி மேற்புறத்து ஒழுங்கும், அடிப்பரப்பு ஒழுங்கின்மையும் எல்லா மொழி வெள்ப்பாடுகளிலும் செயல்படுவதை கிறிஸ்தவா விளக்குகிறார். அதாவது மற்ற தத்துவவாதிகளும் மொழியியல் அறிஞர்களும் தன்னிலையை நிலைத்த ஒழுங்குடையதாகக் கருதும்போது கிறிஸ்தவா தன்னிலையினை தொடர்ந்த மொழி ஊடாட்டத்தின் மூலமாக தற்காலிகமாக கட்டமைக்கப்படுகின்ற தன்னிருப்புகளாகப் பார்க்கிறார். உருவாகியும், சிதைந்தும், ஒன்று சேர்ந்தும், பிளவுபட்டும் என மொழி ஊடாட்டத்திற்குத் தக்க தன்னிலை என்பது தன்னிருப்புகளின் தொகுதியாகாவே அறியப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையென்பது பல தன்னிருப்புகளின் தொகுதிதானே தவிர நிலைத்த ஒரு தன்னிலை அல்ல.
கண்ணாடி நிலையிலிருந்து சிறிது சிறிதாக மொழியினைக் கற்றுக்கொள்ளும் குழந்தை மொழியின் வாக்கிய அமைப்பு, இலக்கணம் என்று அறிந்து பயன்படுத்தத் தொடங்கும்போது அந்த மொழி வாயிலில் கிறிஸ்தவா ஒரு விரிசலை அடையாளப்படுத்துகிறார். சசூரின் மொழியியலின்படி இதை விளக்கவேண்டுமென்றால் குறிப்பானுக்கும் குறிப்பீடிற்கும், சப்தத்திற்கும் அர்த்தத்திற்கும் உள்ள இடைவெளி என்று இந்த விரிசலைச் சொல்லலாம். விரிசல்களின் தொடர்ச்சியாகவே தன்னிலை (self) இயக்கம் பெறுகிறது.
தன்னிலை-மற்றவை என்ற எதிர் இருமையாக இதர தத்துவவாதிகள் கட்டமைத்ததை மொழி ஊடாட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொண்டுவந்ததன் மூலம் தன்னிருப்பினை அரசியலுக்கான களனாகவும் கிறிஸ்தவா மாற்றிவிடுகிறார். தன்னிருப்பு (Subjectivity) மனத்தின் உள்ளார்ந்த தளத்திற்குள் எடுத்துச் செல்லப்படுவதால் அரசு, அதிகாரம், அடையாளப்படுத்தும் செயல்பாடு ஆகியனவும் மனம்-மொழி சார்ந்த மனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளாகிவிடுகின்றன. தன்னிருப்புகளின் தொகுதிகளாக தன்னிலையை கணிக்கும்போதே எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன தொகுதிகள் உருவாகி கலைகின்றன என ஃபூக்கோவினால் வரலாறுகளை புது விதமாக எழுதமுடிந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அரசும் அதிகாரமும் ஒருவனிடத்து மேற்பரப்பின் ஒழுங்காக தன்னிலையில் செயல்படுகிறதென்றால் அதன் மற்றதான எதிர் நிலை அரசு, அதிகார எதிர்ப்பும் அடிப்பரப்பில் செயல்படுவதாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் நீதியும்-குற்றமும், அறமும்-விகாரமும், எழுச்சியும் -வீழ்ச்சியும், ஒவ்வொரு தன்னிருப்பிலிருந்தும் கிளம்புவதாகவே ஒவ்வொரு வரலாற்றுக்கட்டமும் அமைவதாக இருக்கிறது. வெகுஜன தளத்திலிருந்து வரலாற்றினை ஒவ்வொரு குடிமகளின் தன்னிலைக்குமாக கிறிஸ்தவா நகர்த்தியது நீட்ஷேயிடம் தொடங்கி ஃபூக்கோ, தெல்யூஸ் என்று நீளும் தத்துவ பாரம்பரியத்தின் பகுதியாகும். கிறிஸ்தவா கவிதை வாசிப்பிலிருந்து இந்த இடத்தை அடைகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் கிறிஸ்தவாவினுடையது ஆரம்ப கால பங்களிப்பாகும்.
கவிதை வாசிப்பு என்பது இதனால் தனியான, விசேஷமான வாசிப்பு செயல்பாடென்று மட்டும் கொள்ளலாகாது. ஒவ்வொரு பேசும் உடலின் மொழிச்செயல்பாட்டு சந்தர்ப்பத்திலும் கவிதை உள்ளார்ந்து இருக்கிறது. எழுதப்பட்ட கவிதை இந்த மொழிச் செயல்பாட்டு சந்தர்ப்பங்களை அழுந்தக்கூறி கவனத்தை ஈர்க்கிறது. கவிதை வாசிப்பே வாழ்தல்.
  

Tuesday, December 6, 2011

ஜுலியா கிறிஸ்தவாவின் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ பகுதி 2



அலங்காரம், உவமை, உவமேயம், உருவகம், வடிவ ஒழுங்கு என்று மட்டுமே அறியப்படுகின்ற கவிதையின் உள்ளியக்கம் உள்ளபடிக்கு வெளிப்பாடுக்கான திணறல், உடலுயிரியின் உந்துதல்கள், மொழித்திறன் கற்பதற்கு முந்தைய சைகைகள், பாவனைகள், நிகழ்த்துதல்கள் என்றிருப்பதாக கிறிஸ்தவா கவிதையை வாசிக்கிறார். கவிதை வாசிப்பு என்பதை தாய் சிசு உறவாக கிறிஸ்தவா அனுமானிக்கின்றார் என்றே நான் பல காலமாக  புரிந்துவைத்திருக்கிறேன்; ஒப்புமையில் கவிதைப் பிரதி சிசு, வாசகி தாய். அந்தப் புரிதலுக்கு கிறிஸ்தவாவின் புத்தகத்தை திரும்ப வாசித்தது எந்த குந்தகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது. எந்த ஒரு நல்ல கவிதைக்குள்ளும் அள்ளி எடுத்து கொஞ்ச வாசகிக்கு ஒரு சிசு தன் உடல் பாவனைகளோடு காத்திருக்கிறது என்பதாகவே கிறிஸ்தவாவின் chora எனக்கு மனசிலாகிறது. ஆனால் வாசகிக்கு தாயின் கனிவும் சிசு மொழியின் புரிதலும் வேண்டுமே!
சிசுவின் மொழியற்ற மொழி மனோதத்துவத்தில் துல்லியமான அறிவியலின் சாத்தியப்பாட்டினை மறுக்கிறது; பொருளுணர்த்தும் பண்பு சிசு உடலின் பொருளாய தன்மையிலேயே இருக்கிறது என்பதை சுட்டுகிறது. கிறிஸ்தவா கவிதை வாசிப்பின் மூலம் முன் வைக்கின்ற மொழி பற்றிய தத்துவம் லகானிய உளப்பகுப்பாய்வு கோட்பாட்டிலிருந்து சிறிது மாறுபட்டது. லகான், தான் வேறு உலகு வேறு என்பதினை கண்ணாடியினை முதன்முதலில் பார்க்கும் குழந்தை அறிந்துகொள்வதிலிருந்தே பொருளுணர்த்தும் செயல்பாடு, அர்த்த உருவாக்க செயல்பாடு ஆரம்பிப்பதாகக் கூறுகிறார். தான் உலகிலிருந்து (தாயிடமிருந்து) பிரிக்கப்பட்டிருப்பதால் தன் இன்மையை, தன் முழுமையின்மையை கண்ணாடி நிலையில் உணரும் குழந்தைக்கு தன் பிம்பம் நோக்கி, புற உலகு நோக்கி உருவாகின்ற விழைவு ஆசையாய் உருவெடுக்கிறது. விருப்பு பல்கிப் பெருகி விரிகிறதே தவிர முழுமையான நிறைவேற்றத்தினை அடைவதில்லை. பூர்த்தியற்ற இறுதி நிலையினை காயடிக்கப்பட்ட நிலை என்றழைக்கிறார் லகான். கிறிஸ்தவா, லகான் கண்ணாடி நிலைக்கு முந்தைய தாய்-சிசு உறவினை தன் கோட்பாட்டிற்குள் கொண்டு வருவதில்லை என்று விமர்சிக்கிறார்.
அதாவது பிறப்பின்போதே பிரிதல் வன்முறையான நிகழ்வாக உடலுக்கு சம்பவித்துவிடுகிறது. ‘திகிலின் அதிகாரங்கள்’ (Powers of Horror) என்ற இன்னொரு புத்தகத்தில் இதை சுட்டிக்காட்டும் கிறிஸ்தவா தாயுடலின் அதிகப்படியிலிருந்து கழற்றிவிடப்பட்ட தருணத்திலிருந்தே பிரிவின் தாபமும் அது சார்ந்த பொருளுணர்த்தும் செயல்பாடும் ஆரம்பித்துவிடுகிறது என்கிறார். ஒழுங்குபடுத்தபட்ட குறியீட்டு பாங்கு மொழிக்குள் கண்ணாடி நிலைக்குப் பின் நுழைகின்ற குழந்தை தந்தையின் ஒழுங்கிற்கு பண்பாட்டு சீர்படுத்துதலுக்கு உட்படுகிறதென்றால் அதற்கு முன்பு தாயின் பால்காம்பும் அரவணைப்பும் கிடைத்தல் கிடைக்கப்பெறாமை என்ற குறிப்புணர்த்தும் ஒழுங்குக்குள் முயங்குகிறது. தாய் ஒழுங்கின் குறிப்புணர்த்துதல்கள் மொழிக்குள் உடல் உந்துதல்களாக உடல் ஆற்றல்களாக குழந்தை முழு மனிதனாக வளர்ந்தபின்னும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றையே கவிதையில் அடிப்பரப்பில் இயங்கும் மொழி என்கிறார் கிறிஸ்தவா. கவிதையில் கவிதையாக இனம் காணப்படுவது இந்த அடிப்பரப்பு மொழியே. கவிதை பெண்வசமானது.
கிறிஸ்தவாவின் மொழிக்கோட்பாடு பெண்ணிய எழுத்தாளர்களால் பெண்ணுடலை, பெண் உடலின் உந்துதல்களை எழுதுவதே பெண்ணிய எழுத்து என்றும் எடுத்துச் செல்லப்பட்டது. முலை, யோனி, உதிரப் போக்கு என்றபடிக்கு வெற்றாக நிறைந்துவிட்ட எழுத்தும் பல மொழிகளில் உருவாகிவிட்டது. இந்த வகை எழுத்துக்கள் தாய்மையின் நிராகரிப்பில் உருவாகும் திகிலும் அதன் விளைவாக உருவாகிற நெருக்கடிகளாலான மொழி பற்றி கிறிஸ்தவா எடுத்துரைப்பதை பொருட்படுத்துவதில்லை. மேலும் உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாது.
தாய் நிராகரிப்பின் தர்க்கமென்ன என்பதினைப்பற்றியும் கிறிஸ்தவாவின் ‘ கவித்துவ மொழியில் புரட்சி’  ‘திகிலின் அதிகாரங்கள்’  ஆகிய நூல்கள் பேசுகின்றன.

ஃபிராய்டிய தந்தையின் தண்டனைக்கு நிகரானது தாயின் நிராகரிப்பும் என்று காணும் கிறிஸ்தவா பொருளுணர்த்தும் செயல்பாடுகளிலுள்ள நெருக்கடிகளை மையப்படுத்தியே தன் சிந்தனையை முன் வைக்கிறார். இங்கே ஃபிராய்டிய தந்தை எனப்படுவது உயிரியல் தந்தை அல்ல மாறாக மொழி ஒழுங்கு, அதிகாரம், பண்பாட்டு விதிகள், மரபு ஆகியனவற்றின் குறியீடு என்று எப்படி புரிந்துகொள்கிறோமோ அது போல தாய் என்பதையும் தாயின் நிரகாரிப்பு என்பதனையும் பொருளுணர்த்தும் செயல்பாடுகளிலுள்ள எதிரொழுங்கு என்றே புரிந்துகொள்ளவேண்டும். தான் வேறு  உலகு வேறு என்று கண்ணாடி நிலையில் தன்னடையாளம் பெறும் குழந்தை மொழி ஒழுங்கினில் திறன் பெறும்போதே தன்னடையாளம் உறுதி பெற்றதாகவும் மாறுகிறது. தன்னடையாளம் உறுதி பெறுவது எங்கெல்லாம் விரிசல்விடுகிறது என்று கிறிஸ்தவா ஆராய்கிறார்.

தன்னடையாள மொழி ஒழுங்கு (எனவே ஃபிராய்டிய அர்த்தத்தில் தந்தையின், ஆணின் மொழி ஒழுங்கு) விரிசல்விடும் சொல்லாடல்கள் என கவிதை, தாய்மை, உளப்பகுப்பாய்வு ஆகியனவற்றை கிறிஸ்தவா அடையாளப்படுத்துகிறார்.

கவிதையின் சொல்லாடல் தன் பொருளுணர்த்தும் செயல்பாட்டிற்கு கவனத்தை ஈர்க்கிறது; அதன் கவன ஈர்ப்பு சப்தம், சொல்லாக்கம், லயம், கவிதையின் உத்தி என குறிப்புணர்த்தும் பாங்கினை (Semiotic) முன்னிறுத்தி, அதிலிருந்து குறியீட்டு பாங்கின் (Symbolic) ஒழுங்கினையும் எனவே அர்த்ததையும் உருவாக்க கோருகிறது. குறியீட்டு பாங்கு சார்ந்தே தன்னிருப்பு ஒருமையும் அடையாளமும் பெறுவதால் கவிதையின் சொல்லாடலும் அதன் கவன ஈர்ப்பும் தன்னிருப்பின் ஒருமையை கலைக்கின்றன. கவிதை, மொழி ஒழுங்கினால் உருவான வாசகனின் சுய அடையாளத்தை   கலைத்துவிடுகிறது; அப்படி கலைப்பதன் மூலம் சுயம் முழுமையானது, ஒருமையுடையது என்ற மயக்கத்தினை தற்காலிகமாகவேனும் விரிசல்காண வைத்துவிடுகிறது.

தாயுடல் - தாய், சேய் எனப் பிரியக்காத்திருக்கும் தன்னிருப்பு. தனக்குள்ளாகவே, தன்னிருப்புக்குள்ளாகாவே வேறொன்று பிரியவும் மற்றொன்றாகவும் காத்திருக்கிறது என்ற மனித மனக்கட்டமைப்பிற்கு தாயுடல் ஒரு வலுவான உருவகம். ஃபிராய்டிய, லகானிய உளப்பகுப்பாய்வு மொத்தமாகவே தனக்குள் இயங்கும் மற்றொன்றினை அடிப்படையாகக்கொண்டதுதான். மனித இனம், சமூகம் இரண்டிற்குமான இயங்குவிதிகளை தாயுடல், தாய்மை ஆகியவற்றை உருவகமாக்குவதன் மூலம் கிறிஸ்தவா விளக்குகிறார். ‘அன்பின் கதைகள்’ (Tales of Love) என்ற புத்தகத்தில் கிறிஸ்தவா தாயுடலை சட்டத்திற்கு புறம்பானவர்களுக்கான அறத்தின் உருவகமாக மாற்றுகிறார். இந்த அறம் சமூக தன்னிலைகளை மற்றவர்களோடு அன்பினால் பிணைக்கிறது, சட்டத்தினால் அல்ல.

கவிதையையும், தாய்மையும் போலவே உளப்பகுப்பாய்வும் சுய அடையாளத்திற்கு உள்ளாகவே ஆழ் மனத்தில் இயங்குகின்ற வேறொன்றினை வெளிக்கொணர்வதாக இருக்கிறது. உளப்பகுப்பாய்வு மனித நனவிலியில் இயங்கும் மற்றொன்றினை தொடர்ந்து பேசவைத்து பேசவைத்து விரிவாக்குவதன் மூலம் தன்னிருப்பை தனக்கான மற்றதுடன் உரையாட வைக்கிறது.
 


ஜூலியா கிறிஸ்தவாவின் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ பகுதி 1

Julia Kristeva photo from http://en.wikipedia.org/wiki/Julia_Kristeva

பேசும் உடலை கவிதையின் மொழிக்குள்ளும் கவிதையைப் பற்றிய சிந்தனைக்குள்ளும் எப்படி கொண்டு வருவது என்ற கேள்விக்கு புதிதாக விடையளித்ததன் மூலமாக மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைத்துறைகளை முற்றிலும் புதியதாக்கியவர் ஜூலியா கிறிஸ்தவா. அவருடைய ‘கவித்துவ மொழியில் புரட்சி’ (Revolution in poetic language) என்ற நூலை சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் வாசித்தேன். கவிதை எழுத, வாசிக்க, விமர்சிக்க, அறிய, கிறிஸ்தவாவின் இந்த ஆரம்ப காலகட்ட நூல் எனக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் என்று தோன்றியது.
1984இல் ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ‘கவித்துவ மொழியில் புரட்சி‘ அதுவரைக்கும் மொழி பற்றியுள்ள தத்துவங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. கிறிஸ்தவாவே இது பற்றி  குறிப்பிடுகையில் ‘கருத்தின் வெளியுருவங்களே மொழி என்று சொல்லும் நம் மொழி பற்றிய தத்துவங்கள், ஆவணக்காப்பாளர்கள், தொல்லியலாளர்கள், பிண ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் எண்ணங்களே ஆகும்’ என்கிறார். அதாவது பேசும் மனித உடல்களையும், மொழியையும் அவற்றின் இயங்குதன்மையிலிருந்து பிரித்து நிலையானதாக எனவே செத்ததாக, ஆவணப்படுத்தக்கூடியதாக, 
மக்களிடமிருந்து பிரித்த மொழியினை ஆய்வுக்குட்படுத்தக்கூடியதாக பின் நவீனத்துவத்திற்கு முந்தைய மொழி பற்றிய மேற்கத்திய தத்துவம் இருந்தது. இதிலிருந்து முற்றிலும் விலகி கிறிஸ்த்வா, பேசும் உடல்களின் உந்துதல்களாலும், சக்தி வெளிப்பாடுகளினாலும் உருப்பெறும் மொழி பொருளுணர்த்துவது மட்டுமல்லாமல் அனுபவங்களையும் தன்னிருப்புகளையும் வடிவமைக்கிறது என்கிறார். மற்ற ஃப்ரெஞ்சு பின் நவீன சிந்தனையாளர்களான லகான், தெரிதா, ஆகியோரோடு சேர்த்து கிறிஸ்தவாவை வாசிக்கும்போது கிறிஸ்தவா மொழியை சகல மனித பொருளுணர்த்தும் செயல்பாடுகளின் அங்கமாகவே பார்க்கிறார் என்பது தெரியவரும். மொழியில் ஏற்படும் மாற்றங்கள் தன்னிருப்பு, தன் உடலோடு, மற்றவர்களோடு, பொருட்களோடு கொள்கின்ற உறவில் ஏற்படும் மாற்றங்களை கட்டமைக்கின்றன. மொழியின் சக்தியென்பது மனித உடலுயிரியின் சக்தி மொழிக்குக் கடத்தப்பட்டதால் உண்டாவதாகும். உடலுயிரியின் சக்தி உணர்ச்சி வெளிப்பாடுகளினால் அன்றி மொழிக்கு வேறெவற்றினால் கடத்தப்படக்கூடியதாகும்?
தினசரி நாகரீக மொழி உணர்ச்சி வெளிப்பாடுகளையும் அவற்றின் மிகைகளையும் மீறல்களையும் ஒடுக்கி ஒழுங்கிற்குகொண்டு வருகிறது. தொடர்புறுத்துதல்களின் அமைப்புகள் சமூக ஒழுங்கமைப்புகளாகின்றன. ஆனால் கலைகள், கவிதைகள், மதச் சடங்குகள், பல விதமான மத வெளிப்பாடுகள் உடலுயிரியின் மொழிக்கு தங்குதடையற்ற இடமளிப்பது மூலம் சமூக ஒழுங்கை கலைத்துப்போடுகின்றன. 
பொருளுணர்த்தும் செயல்பாடாக மொழியை நாம் கவனிக்கும்போது அதனுள்ளே இரண்டு இயங்கு தளங்களை அவதானிக்கலாம் என்கிறார் கிறிஸ்தவா; ஒன்று தெளிவான ஒழுங்குக்குட்பட்டது, மற்றொன்று தன்னிருப்பின் உந்துதல் சக்தியாகவோ, உணர்ச்சியாகவோ, வேறொன்றினைத் தூண்டக்கூடியதாகவோ வெளிப்படுவது. இந்த இரண்டு பாங்குகளையும் குறியீட்டுப்பாங்கு (Symbolic) குறிப்புணர்த்தும் பாங்கு (Semiotic) என்று கிறிஸ்தவா அடையாளப்படுத்துகிறார். 
குறிப்புணர்த்தும் பாங்கின் வழியாகவே உடலுயிரியின் சக்தி மொழிக்குள் இயக்கம் பெறுகிறது; அது வார்த்தைப்படுத்தப்படும்போது கூட வாக்கிய அமைப்பின் ஒழுங்கினை நிராகரிப்பதாக இருக்கிறது. இதற்கு எதிரிடையாக குறியீட்டுபாங்கில் மொழி ஒழுங்குக்குட்பட்டதாக இலக்கண சுத்தமாக இருக்கிறது. மேற்கத்திய மொழி பற்றிய தத்துவம் இந்த இரண்டு பாங்குகளையும் நனவு-நனவிலி, கலாச்சாரம்-இயற்கை, அறிவு-உணர்ச்சி என்ற எதிரிடை இருமைகளாக பார்ப்பதை மாற்றி கிறிஸ்தவா இவற்றை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாகப் பார்க்கிறார்.
ஒழுங்கு, இலக்கணம் ஆகியவற்றிற்கு முந்தைய குறிப்புணர்த்தும்பாங்கினை, இன்னும் மொழியைக்கற்றுக்கொள்ளாத சிசு உடலுயிரியின் மொழியாக விரிக்கும் கிறிஸ்தவா,இதனை பிளேட்டோவிடமிருந்து கடன் பெற்ற சொல்லான chora என்ற பதத்தினால் அழைக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பினையொட்டி chora வை நாம் கருவறை என அறியலாம். உலகில் பிறந்தபின்னும்
கருவறையின் மொழியாக தன் முழு உடலாலும் தற்காலிக பொருளுணர்த்துதல்களால், வெவ்வேறு விதமான லயங்களோடு,  இயக்கம் நிரம்பியதாக, உடல் சக்தியின் வெளிப்படாக சிசு மொழி இருப்பதை சுட்டும் கிறிஸ்தவா ஒழுங்கின் மேற்பரப்பிற்குக் கீழே கவிதையில் இயங்கும் சிசுமொழியையே கவித்துவமொழியாக அடையாளம் காண்கிறார்.
பிளேட்டோவிடமிருந்து chora என்ற பதத்தினை கிறிஸ்தவா கடன் பெற்றாலும் அதை அப்படியே பிளேட்டோ பயன்படுத்தியதுபோல கிறிஸ்தவா பயன்படுத்துவதில்லை. பிளேட்டோவின் கருவறை எந்த கருத்தினாலும் நிரப்பப்படக்கூடியது. கிறிஸ்தவா அதற்குத் தன்னிச்சையான இயல்பு உண்டென்கிறார். வேறொன்றாவதற்கான உந்துதல், ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலுடன் உரையாடுவது, தாய்மையும் சிசுமையும் கொஞ்சிக் குலாவுவது, ஒன்றையொன்று அறிந்து கொள்வது, புரிந்துகொள்வது, தத்துவ அரசியல் நிலைப்பாடுகளுக்கு முந்தையது என்றெல்லாம் choraவை கிறிஸ்தவா விளக்குகிறார். தாயும் சிசுவும் ‘உரையாடும் மொழி’ ஒற்றை எழுத்தொலிகளால் ஆனதென்பதையும் கிறிஸ்தவா சுட்டத் தவறவில்லை.
[இந்திய தாந்திரிக மரபுகள், குறிப்பாக சாக்த மரபு சக்தி/தாய்/தெய்வ வழிபாட்டிற்காக உண்டாக்கிய மந்திரங்கள் ஒற்றை எழுத்தொலி மந்திரங்கள் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட வேண்டும். பீஜாக்ஷர மந்திரங்கள் என இதர மந்திரங்களுக்குள் உள்வாங்கப்பட்ட சாக்த மரபின் கண்டுபிடிப்புகள் உடலாற்றலை வலுப்படுத்துபவனாகவும், உடலாற்றல் வெளியுலக ஆற்றல்களோடு லயப்பொருத்தம் காண வல்லமையுடையனவாகவும் கருதப்பட்டன. தாந்திரிகம் பற்றி எழுதும்போது இந்த சரடினை பின்னர்  எழுதுகிறேன்.]
அர்த்த உருவாக்கம் இலக்கணமாக முழுமைபெறாத நிலையில் உடல் சைகைகளாக, பாவனைகளாக,  நிகழ்த்துதல்களாக, ஆற்றல்களாக, பேசா மொழியாக, உடலின் மொழி கவிதையின் மேற்பரப்பிற்கு கீழே கவித்துவ மொழியாக இயங்குகிறது.
கிறிஸ்தவாவின் choraவை விளக்க மேற்கத்திய விமர்சகர்கள் ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசஸ் நாவலில் கடைசிப்பகுதியிலுள்ள மாலி ப்ளூமின் தனிப் பேச்சினை உதாரணம் கொடுக்கிறார்கள். அதற்கு நிகரான பத்தி தமிழிலிருந்து எடுக்க வேண்டுமென்றால் நாம் நகுலனின் நாவல்களிடத்தில்தான் எடுக்க வேண்டும்.