Friday, May 29, 2015

Balasaraswati: Rekindling the torch of tradition| Article published in the Times of India


"Thanjavur Balasaraswati, a seventh generation representative of a traditional matrilineal family of temple musicians and dancers known as devadasis, is considered one of the foremost exponents of Tamil dance form known today as Bharatanatyam. Douglas Knight Jr's biography, "Balasaraswati Her Art & Life", published in 2010 by Wesleyan University Press is a commendable chronicle of not only Balasaraswati's life, but also of how an artistic heritage of a hereditary dance survived through the onslaught of colonial and nationalist modernity and radiated its beauty through the genius of an individual artist." E- paper   version : http://epaperbeta.timesofindia.com/index.aspx?EID=31807&dt=20150526#                                                                                                                                                                               Read the full article at http://timesofindia.indiatimes.com/city/chennai/Balasaraswati-Rekindling-the-torch-of-tradition/articleshow/47472374.cms        

Friday, May 22, 2015

U.Ve. Swaminatha Iyer and the making of Tamil literary heritage | Article published in the Times of India





"
The massive compendium of U Ve Swaminatha Iyer's introductory essays compiled and edited by P Saravanan and published by Kalachuvadu publications in December 2014 is a compelling invitation for anyone to realize what an incredible contribution Swamanitha Iyer (1855-1942) had made to the construction of Tamil literary heritage, as we know of it today."                                                                                                                                                                                                                                                                                                                                                  Please read the article in the link given below:  http://timesofindia.indiatimes.com/city/chennai/The-making-of-Tamil-literary-heritage/articleshow/47339816.cms     

Wednesday, May 6, 2015

Othello - Orson Welles

ஜெயமோகன் என்னை தகுதியிழக்க செய்துவிட்டார், என்னவொரு கொடுப்பினை!

திடீரென்று 2013 இல் நான் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு இன்று ஜெயமோகன் என்னை திட்டியிருப்பதைப் பார்த்து (பண்பாட்டாய்வும் எம்டிஎம்மும்) அவருக்கு கடிதமெழுத என் மின்னஞ்சலை திறந்தபோது அவர் எனக்கு 10.11.2014 அன்று எனக்கு எழுதியிருந்த கடிதமும் அதற்கு நான் எழுதிய பதிலும் கிடைத்தது. 10.11.2014 அன்று நான் மகாபாரதத்தை பற்றி,   பாரத பிரசங்கிகளைப் பற்றி அதிகமும் அறிந்த ஆய்வாளனாக, நாட்டாரியல் அறிஞராக ஜெயமோகன் பார்வையில் இருந்திருக்கிறேன்.  இந்த வாரம் சினிமா விமர்சன கட்டுரை ஒன்றை நான் எழுதியதும் நான் அவர் மதிக்கும் நாட்டாரியல் அறிஞர்கள் பட்டியலில் இல்லாமல் போய்விட்டேன். மேற்சொன்ன கட்டுரையில் அவர் எழுதியிருக்கிறார் :"ஆனால் அவரது சினிமா விமர்சனங்களைக் காணும்போது இவரது உண்மையான எல்லை இதுதானோ என்ற எண்ணமும் எழுகிறது". அதாவது நான் 2013இல் எழுதிய கட்டுரைக்கு 2015 இல் ஜெயமோகன்பதில் எழுதுவதற்கான காரணம் தெரிந்துவிட்டது. நீ நாட்டரியல் பார்வையிலிருந்தா உத்தம வில்லனை விமர்சிக்கிறாய் நீ ஒரு நாட்டாரியல் ஆய்வாளனே இல்லை போ என்று வணிக சினிமாவுக்கு அடியாளாக மாறியிருக்கும் ஜெயமோகன் என்னை தகுதியழக்க செய்துவிட்டார். என்ன ஒரு கொடுப்பினை! நான் பெரும் பாக்கியம் செய்தவன்.  இதுவல்லவோ ஜென்ம சாபல்யம்!

மற்றபடி, நீலியைப் பற்றி அவர் எழுதிய அபத்தக் கட்டுரைக்கும் அதற்கான என்னுடைய பதிலுக்கான சுட்டியும் ஜெயமோகனின் தளத்திலேயே இருக்கின்றன. தகுதிகளை விடுத்து, தர்க்கம் என்ன என்று பார்ப்பது அவரவர் விழைவையும், தேடலையும் பொறுத்தது.

கடிதங்களை கீழே தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் 10.11. 2014 அன்று எனக்கு எழுதிய மின்னஞ்சல்:

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம்.டி.எம் அவர்களுக்கு,

வெண்முரசு வரிசையில் முதற்கனல் மழைப்பாடல் வெளிவந்துள்ளது. வண்ணக்கடல் நீலம் வெளிவரப்போகிறது

இந்நாவல்வரிசையை இன்னும் அதிகமாக கொண்டுசெல்லாவிட்டால் அதை தொடரமுடியாது. மிகப்பெரிய முயற்சி. ஆகவே ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடுசெய்திருக்கிறோம்

ஏற்கனவே உங்களிடம் அரங்கா சொல்லியிருந்தார்.. அப்போது நிதிச்சிக்கல். தேதிச்சிக்கல். இப்போது மீண்டும் உறுதிசெய்திருக்கிறோம்

வரும் நவம்பர் 9 அன்று. சென்னையில். மியூசியம் தியேட்டர் அரங்கில்

நீங்கள். கமலஹாசன் இளையராஜா, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் ஆகியோரை தமிழில் இருந்து அழைக்கிறோம்

எஸ்.எல்.பைரப்பா, எம்.டி வாசுதேவன் நாயர் இருவரையும் கன்னடம் மலையாளம் மொழிகளில் இருந்து. அவர்கள் இருவரும் மகாபாரதம் பற்றி எழுதியவர்கள்.

ஐந்து மகாபாரத நாட்டுப்புற கதைசொல்லிகளை கௌரவிக்கவிருக்க விரும்புகிறோம். அவர்களைப்பற்றி அதிகம் உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் ஐந்துபேரை தேர்ந்தெடுத்து அவர்களைப்பற்றி ஒரு சிறிய குறிப்பையும் விழாவில் வாசித்து உதவவேண்டும் .

நீங்கள் விழாவுக்கு வந்து  கதைசொல்லிகளை கௌரவிக்கவேண்டும்

இது என் விண்ணப்பம்

உங்களை நேரில் சந்தித்து நண்பர்களும் நானும் விரிவாக பிற தகவல்களைச் சொல்கிறோம்

ஜெ
நான் அவருக்கு எழுதிய பதில்:
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
‘வெண்முரசு' நாவல் வரிசைக்கான வெளியீட்டு விழா நடத்துவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மகாபாரத பிரசங்கியார்களை கௌரவிப்பது மிகவும் நல்ல விஷயம்; அவர்கள் இப்போது எண்ணிக்கையில் அருகி வருகிறார்கள்.  ஐம்பது பேர்கள்தான் இப்போது மொத்தமாக இருக்கிறார்கள். அவர்களில் ஐவரை பிரபலங்கள் கூடும் சபையொன்றில் கௌரவப்படுத்துவது மிகவும் உன்னதமான காரியமாகும். ஆனால் ஐவரைத் தேர்ந்தெடுப்பது அவர்களை அறிமுகம் செய்து பேசுவது ஆகியவற்றுக்கு என்னை விட பொருத்தமான நபர் இரா.ஶ்ரீனிவாசன்தான்.  அவர் ‘நல்லாப்பிள்ளை பாரத’த்தினை இரண்டு பாகங்களாக பதிப்பித்தவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிகிறார். ‘புதிய பனுவல்’ என்ற கல்விப்புல தமிழ் இதழின் ஆசிரியர். அவர் மகாபாரத பிரசங்கியார்கள் கூடும் கூட்டத்தினை வருடந்தோறும் நடத்தி அவர்களுடைய மேம்பாடுக்காக உழைத்து வருகிறார். ஶ்ரீனிவாசனின் சில முயற்சிகளுக்குப் பின்னணியில் நான் இருந்தாலும் கூட அவரை அழைப்பதுதான் முறையானது. அவருடைய தொலைபேசி எண் 9841838878 மின்னஞ்சல் முகவரி: panuval@gmail.com 

நீங்களும் நண்பர்களும் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வாருங்கள். என் மனைவி ஆங்கியோவிடம் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தினைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். அவளுக்கும் குழந்தைகளுக்கும் நண்பர்களின் வருகை எனக்கிருப்பது போலவே மிகவும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கிறது.

நன்றியும், வணக்கங்களும்
அன்புடன்,
எம்டிஎம்

————————————————
எம்.டி.முத்துக்குமாரசாமி

Monday, May 4, 2015

பொறுப்பற்ற தற்காதலின் டாம்பீகமும், பித்தலாட்ட கலையும்: உத்தம வில்லன்




உத்தம வில்லன் திரைப்படத்தில் நாட்டுப்புறகலைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள், தெய்யம் வேடத்தில் கமல் ஹாசனின் போஸ்டரை நீங்கள் பார்க்கவில்லையா, பிஹைண்ட்தவுட்ஸ் வலத்தளத்தில் பூஜாகுமார் பேட்டியில் (பார்க்க: https://www.youtube.com/watch?v=cCu75pAu_2A ) தெய்யத்தினை நவீன இசையோடு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதை பார்க்கவில்லையா என்றெல்லாம் என் நண்பர்கள் சொல்லப்போக அவர்களின் விருப்பத்திற்கிணங்கி அவர்களுடன் உத்தமவில்லன் திரைப்படத்தை முதல் நாளே பார்த்தேன். தெய்யம், படையணி, ஆகிய கேரள சடங்கியல் நிகழ்த்து கலைகளையும் தமிழகத்தின் தொல்கலையான கூத்தையும் கலந்து கட்டி வகைதொகையில்லாமல் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம்  என்னுள் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியது. எதற்காக சடங்கியல் நிகழ்த்துகலைகளை வணிகத் திரைப்படத்தில் தப்பும் தவறுமாக பயன்படுத்த வேண்டும்? அதற்கான தேவை கதையில் என்ன இருக்கிறது? உத்தம வில்லன் படத்தின் முதல் பாடல் காட்சியில் கமல் ஹாசன் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து அதன் முன் சக்கரத்தை தூக்கி காட்டுவது போல, கவட்டையை எக்கி எக்கி தொந்தி குலுங்க இடுப்பை முன் நோக்கி ஆட்டுவது போல, தெய்யத்தின் (தெய்வத்தின்) வேடம் தாங்கி துள்ளி எட்டி சாடி வாயிலிருந்து தீப்பிழம்பை உமிழ்வது இன்னொரு நடிப்பின் வகைமைதானா? தெய்யம் ஒரு மத நம்பிக்கை சார்ந்த நிகழ்த்து கலை இல்லையா, அதற்கென்று ஒரு பவித்திரமும் சூழலும் இருக்கின்றனவே அவற்றை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா என்ற அடிப்படைக் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். திரைப்படத்தினுள் திரைப்படமாக வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் தெய்யம், படையணி, கூத்து, திரை இசை அனைத்தும் கலந்த வினோதமான ஆட்டத்தில் பிரகலாதன் கதையை நாடகமாக நடிக்கிறார்கள். முதலில் ஹிரண்யகசிபு வேடத்தை நாசரும், நரசிம்மர் வேடத்தினை கமலும் ஏற்பதாக இருக்கிறது. கமல் நரசிம்மர் வேடம் தாங்கும்போது தன்னுடைய விஷம் தோய்ந்த கூரிய நகங்களால் உண்மையிலேயே ஹிரண்யகசிபு வேடம் தாங்கும் நாசரை (கொலை பாதக அரசனை) கொன்றுவிட வேண்டும் என்று ஏற்பாடு. ஆனால் ஹிரண்யகசிபு வேடம் தாங்கிய நாசர் வசனமெல்லாம் பேசமுடியாது வெறுமனே உறுமி கர்ஜிக்கிற நரசிம்மர் வேடம் வேண்டும் என்று கமல் ஏற்கவிருக்கும் நரசிம்மர் வேடத்தை கடைசி நிமிடத்தில் மாற்றிக்கொள்கிறார். ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது? படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா? என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்? நம் தொல்கலைகளோ அவற்றின் சடங்கியல் புனிதமோ பவித்திரமோ அரிச்சுவடி கூட தெரியாமல்  உத்தமவில்லன் படத்தில் தெய்யமும் அதன் அலங்காரங்களும் முகமூடியும் அவற்றின் exotic மதிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

    உண்மையில் திரைப்படத்தினுள் திரைப்படமாக வருகின்ற உத்தம வில்லனைப் போல கொடுமையான பித்தலாட்டமான படத்தினை நாம் வேறெங்கிலும் பார்த்திருக்கமுடியாது. இந்த லட்சணத்தில் பிரதான திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற நடிகனான மனோரஞ்சன் (கமல் ஹாசன்), தான் மூளைப் புற்று நோயினால் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தன் குருநாதரான மார்கதர்சியை  (கே.பாலச்சந்தர்) வைத்து இயக்கி நடிக்கும் லட்சிய நகைச்சுவை படம் இது. இந்த திரைப்படத்தினுள் திரைப்படம் ஆரம்பிக்கும்போது வில்லுப்பாட்டு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் வில்லுப்பாட்டாக கதையை ஆரம்பித்து வைக்க கதை  தெய்யம், தமிழ் கூத்து எல்லாம் கலந்த ஃபூயூஷனாக சொல்லப்படும் என்று வேறு தைரியமாக அறிவிக்கிறார்கள். நாட்டுப்புற கலைகளைத்தான் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்தானே யார் கேட்பது? திரைப்படத்தினுள் திரைப்படமான உத்தம வில்லனில் வசன கவிதை போன்ற நடையும், பிராமண பந்தியில் இறந்து போனவனாகக் கருதப்பட்ட உத்தமன் வந்து பீதியூட்டும் காட்சியும் மலையாளத் திரைப்படம் ‘நோக்குகுத்தியை’ மெலிதாக நினைவுபடுத்துகிறது. அதனால் வேறு இந்த நகைச்சுவை உள்க்கதையின் பொருக்கோடிப்போனதன்மை மேலும் அசிங்கமாய் தெரிகிறது. ‘நோக்குகுத்தி’ முழுக்க முழுக்க கவிதையினால் கதை சொன்ன படம். கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞரும் சிந்தனையாளருமான எம்.கோவிந்தனின் நீள் கவிதையை படம் முழுக்க பயன்படுத்திக்கொண்ட மிக உயரிய படம். அந்தப்படம் எனக்கு நினைவு வந்து தொலைத்தது என் தனிப்பட்ட துரதிர்ஷ்டம். கூத்துமில்லாமல் சபா நாடகமுமில்லாமல் விசித்திர ஆடைகள் அணிந்து விசித்திரமான தமிழில் பேசி நாசர், பூஜாகுமார், ஞானசம்பந்தம், ஷண்முகராஜன், கமல்ஹாசன் என்று பெரும் நடிக நடிகையர் கூட்டம் நம்மை நகைச்சுவை என்ற பெயரில் இம்சிக்கிறது. இடையிடையே தையா தக்கா என்று தெய்யம் ஆட்டங்கள் வேறு.  இந்தப்படத்தின் ரஷ்ஷினை அவ்வபோது போட்டுப்பார்த்து மார்கதரிசி (கே.பாலச்சந்தர்) பிரமாதம், என்னமா நடிச்சுருக்கான் பாரு என்றெல்லாம் புல்லரித்து பாராட்டும்போது அவர் நம் அசோகமித்திரன் போல ஏதாவது உள்குத்து வைத்து பேசுகிறார் போல என்று நினைக்கிறோம்; அப்படி எதுவுமில்லை என்று புலப்படும்போது நமக்கு சோர்வும் கொட்டாவியும் வருகிறது. போதாக்குறைக்கு முத்தரசனின் காதை கடித்து துப்பிவிடும் கற்பகவல்லி, அவள் சொல் கேட்டு நடக்கும் புலி, எனக் கொடூரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா!

    பிரதான படமான உத்தமவில்லன், ஆரம்ப விலுக் விலுக் ஆட்டத்திற்கும் பாட்டிற்கும் பிறகு, உள்க்கதையை ஒப்பிடும்போது நன்றாகத்தான் ஆரம்பிக்கிறது. தலைவலிக்காக டாய்லெட்டில் தண்ணியடிக்கும் மனோரஞ்சன், அவன் பையன் படத்தின் ப்ரிவியுவினை பார்த்துவிட்டு தன் கேர்ள்ஃபெரெண்டிடம் தொலைபேசியில் கொடுமையான படம் இதையெல்லாம் மக்கள் எப்படித்தான் பார்க்கிறார்களோ என்று சொல்வதை கேட்கும்போது ஆகா இதோ நம் தலைமுறையைச் சேர்ந்த பையன் பேசுகிறான் என்று குதூகலித்து நிமிர்ந்து உட்கார்கிறோம். மயங்கி விழுந்த மனோரஞ்சனை  டாய்லெட்டில் வைத்து அடைத்து, செக்யூரிட்டி பஞ்சாபியை தன்னை தூக்க சொல்லி மேல் கதவு வழியே நுழைந்து உள்தாழ்ப்பாளைப் போடும் காரியதரிசி சொக்குச்செட்டியார் (எம்.எஸ்.பாஸ்கர்) உண்மையில் நடிப்பில் சோபிக்கிறார். ஒரு பெரிய வணிகத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவினை அதன் நாயகனுக்கு அவனுடைய குடும்பத்தோடு சேர்ந்து பங்கேற்பது என்பது எவ்வளவு கொடுமையான விஷயமாக இருக்கிறது என்பதைக் காண நமக்கு உற்சாகமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. படத்தில் கவட்டையை எக்கி எக்கி ஆடிய மனோரஞ்சன் பட விழாவில் களைப்பாகவும் சலித்துபோயும் இருப்பதைக் காணும்போது தமிழ்சினிமா நவீனமாகிவிட்டதோ என்ற நல்லெண்ணத்தையும் நம்மிடம் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிகளெல்லாம் அதிக நேரம் நீடிப்பதில்லை. நமக்கு சீக்கிரமே இது நவீன படம் என்கிற மாதிரி ஒரு சுக்கும் கிடையாது இது கமல்ஹாசனின் இன்னொரு தற்காதல் மற்றும் தற்பெருமையினை பறை சாற்றுகின்ற படம் என்று தெரிந்துவிடுகிறது. கே.பாலச்சந்தர் மார்கதர்சி கதாபாத்திரம் ஏற்றிருப்பதிலிருந்து, அவர் அலுவலகத்தில் சின்ன வயது கமல்ஹாசனின் புகைப்படங்களைப் பார்ப்பதிலிருந்து, கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிக நடிகையர், கமல்ஹாசனின் முந்தைய பட வேடங்களைச் சுட்டிக்காட்டும் ஏராளமான குறிப்புகள் வரை நமக்கு இது ஏதோ ஒரு வகையில் கமல்ஹாசனைப் பற்றிய படம் என்றும் சொல்கிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் தங்களைப் பற்றி  தாங்களே பேசி தங்கள் உலகத்தில் தாங்கள் எப்படிப்பட்ட மகோன்னதமான பேர்வழிகள் என்பதை திரையில் அறிவிக்காவிட்டால் தமிழ் சினிமா என்று எதையாவது நம்மால் அடையாளம் காண முடியுமா, என்ன? உத்தமவில்லன் கமல்ஹாசன் சாகாவரம் பெற்ற கலைஞர் என்று நமக்கு சொல்லும் படம். அதில் நமக்கு எப்பொழுதேனும் எந்த சந்தேகமாவது இருந்திருக்கிறதா என்ன? புதிதாக ஒரு படத்தை எடுத்துக்காட்டியா நிரூபிக்க வேண்டும்? ஆனாலும் விட்டேனா பார் என்று முயற்சி செய்திருக்கிறார்.

    தன்னுடைய உடலின் பயன்மதிப்பு தவிர வேறெதுவும் இல்லாத மனோரஞ்சன் மாமனார் மனைவிக்கு அடங்கி வணிகக் குப்பைபடங்களின் நடித்து புகழும் பணமும் சம்பாதித்ததை நாம் கழிவிரக்கத்துடன் புரிந்துகொள்கிறோம். சாவு துரத்தும்போது அந்த பூமியில் அதிக காலமில்லாத கலைஞன் பணத்தையும் புகழையும்  நோக்கங்களாகக் கொள்ளாமல் கடைசியாக தன் குருநாதருடன் சேர்ந்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்து சிரித்துக்கொண்டே உலகிடமிருந்து விடைபெற வேண்டும் என்ற எண்ணமும் கூட உன்னதமாகவே இருக்கிறது. ஆனால் எடுக்கின்ற படம் எண்ணத்திற்கும் நோக்கத்திற்கும் சம்பந்தமில்லாமல் போங்காட்டமாய் முன் பத்திகளில் சொன்னது போல இருக்கிறதென்றால் மனோரஞ்சனின் வாழ்க்கையும் சாரமற்று இருக்கிறது. மனோரஞ்சனின் தனிப்பட்ட வாழ்க்கையும் மார்க்கதரிசியின் இயக்கத்தில் நடிக்கும் சினிமாக் கதையும் அடுத்தடுத்து சொல்லப்படுகின்றன. எங்கே தெய்யம் வேடத்தில்  கமல்ஹாசன் அடுத்துவந்து தீப்பந்தை நம் முகத்தில் உமிழ்ந்து கர்ணகடூரமாய் கர்ஜித்துவிடுவாரோ என்ற பயத்தில் நாம் சீக்கிரமே மனோரஞ்சனே தேவலாம் அப்பா என்று அவர் காலில் விழுந்துவிடுகிறோம்.

    மனோரஞ்சன் யாமினி என்ற பெண்ணுக்கு இளமையில் செய்த துரோகமாக அவர்களுக்கு பிறந்த பெண் மனோன்மணி (பார்வதி மேனன்) கருதுவதை வெகு சீக்கிரமே ஒரே ஒரு கடிதம் அவர்களுக்கிடையே பரிமாறப்படாததுதான் காரணம் என்று சொல்லி தீர்த்தாகிவிட்டது; கடிதம் போகாதாதற்கு காரணம் காரியதரிசி சொக்கு செட்டியார். அவரே மனம் திருந்தி உண்மையைச் சொல்லிவிடுகிறார். அவரையும் மனோரஞ்சன் மன்னித்துவிடுகிறார். ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தையே விமர்சகர்கள் a tragedy of handkerchief என்று நக்கலடித்திருக்கிறார்கள் இது ஒரு tragedy of undelivered letters அவ்வளவுதான். மனோரஞ்சனும் மனோன்மணியும் சந்திக்கும் காட்சியில் கோபமாக இருக்கும் மகளிடம் தந்தையின் அடங்கிய தொனி உணர்ச்சிகளை மனோரஞ்சன் வெளிப்படுத்துகிறாரா மூளைக் கேன்சரால் மயங்கி விழுந்து புனிதராகிவிடுகிறாரா அந்த பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.

    மகனோடு கிரிக்கெட் பந்தினை வீசி விளையாடி கூடவே தன் நோயைச் சொல்லி, அவன் கொலம்பியா யுனிவர்சிட்டிக்குப் போய் திரைக்கதை எழுதப் படிக்கவேண்டும் என்று சொன்னவுடன் கழுத்தைக்கட்டி அழுதாயிற்றா பையனோடு உறவும் சுமுகமாகிவிட்டது. சினிமா நடிகர் மகன் சினிமாவுக்குத்தானே வந்தாகவேண்டும், அதுதானே உலக வழக்கு? அதற்குத்தானே உணர்ச்சிவசப்படமுடியும்?

    மருத்துவமனையில் படுத்திருக்கும் மனைவியுடன் (ஊர்வசி)  மனோரஞ்சன் இரண்டு வார்த்தை அன்பாகப் பேசியவுடன் தூக்க மருத்தினால் அவர் தூங்கிப் போகிறாரா அங்கேயும் சுபம். தூக்க மருந்து எப்படிஎப்படியெல்லாம் காட்சிகளையும் வசனங்களையும் சிக்கனமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும் நமக்குத் தெரிந்து விடுகிறது.

    பின்னே மகள் வயதிலிருக்கும் ரகசிய காதலி அர்ப்பணா (ஆண்டிரியா) டாக்டராகவும் இருப்பது மனோரஞ்சனுக்கு கூடுதல் வசதி. மெழுகுபொம்மை போல வந்து மனோரஞ்சனுக்கு எல்லா விதங்களிலும் சிகிட்சை அளித்து, பேசாமடந்தையாய் இருந்து அர்ப்பணா கௌரவம் காக்கிறார்.  இது பாசாங்கில்லையா, பொய் வாழ்க்கையில்லையா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் மனோரஞ்சனின் வாழ்க்கை இல்லையா இது? யார் பாசாங்குத்தன்மை என்பதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப முடியும்? தவிர, மனோரஞ்சனுக்கு மூளையில் கேன்சர், சிக்கிரம் சாகப் போகிறார் என்பது தெரிந்தவுடன் டிரைவரும் கண்ணீர் விட்டு அழுது ரகசியங்கள் காப்பதாக உறுதி அளிக்கிறார். அவருக்கு துபையில் வேலை வாங்கித் தருவதாக மனோரஞ்சன் உறுதியளிக்கிறார். அதன் பிறகு மனோரஞ்சனும் அர்ப்பணாவும் காரிலேயே கட்டியணைத்துக்கொள்கிறார்கள். முத்தங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு குழப்பமும் இல்லை. 

    படத்தில் பின்னணி இசை இருந்தது பாடல்கள் இருந்தன என்றெல்லாம் நமக்கு நினைவில் இருப்பதில்லை. கடப்பாடுகள் எதுவுமே இல்லாமல் வாழ்ந்த மனோரஞ்சன் தான் சாகப் போகிறோம் என்று தெரிந்த கொஞ்ச நாட்களிலேயே தன் கடமைகள் பரிகாரங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றியாகிவிட்டது. சினிமா வியாதியான மூளைப் புற்று நோய்க்கு பல உபயோகங்கள் உண்டு என்று நாம் தெரிந்துகொள்கிறோம். குடும்பமே தெய்யம்  நடனத்தில் மனோரஞ்சன் உத்தமனாக வித விதமாக நடிப்பதை பார்த்துக்கொண்டிருக்க, அவர் உயிர் பிரிகிறது. நாமும் நிம்மதியாக திரை அரங்கை விட்டு வெளியே வருகிறோம். அப்பாடா.

    கமல்ஹாசன் சாகாவரம் பெற்ற கலைஞர் என்பதற்கு எனக்கு இன்னொரு நிரூபணம் தேவையில்லை. அதுபோலவே ரமேஷ் அரவிந்துதான் உத்தம வில்லன் படத்தின் இயக்குனர் என்பதற்கும் எனக்கு எந்த நிரூபணமும் தேவையில்லை. படத்தை எம்.எஸ்.பாஸ்கரின் அபாரமான நடிப்பிற்காக நினைவில் வைத்திருக்கலாம்.

Sunday, May 3, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 19- லிடியா டேவிஸ் (Lydia Davis) The End of the Story



    "I seem to be moving in the direction of less and less fiction and more and more philosophical investigation “

-Lydia Davis, Interview with Francine Prose

“Language is a labyrinth of paths. You approach from one side and know your way about; you approach the same place from another side and no longer know your way out”
- Ludwig Wiitgentein, Philosophical Investigations
   


    ஆலிஸ் மன்றோ போன்றே தீர்க்கமான சிறுகதைகளுக்காக புகழ்பெற்றவர் லிடியா டேவிஸ்; அவர் எழுதிய ஒரே நாவல் The End of the Story. அயன் மக் ஈவனின் நாவல் Atonement தன் கடைசி பாகத்திலாவது அந்த நாவல் ஒரு மெடாஃபிக்‌ஷன் என்பதை வெளிச்சொன்னது ஆனால் The End of the Story  தன்னை ஒரு மெடாஃபிக்‌ஷன் எங்கேயுமே அறிவித்துக்கொள்வதில்லை; அணுக்கமான வாசிப்பிலேயே லிடியா டேவிஸின் நாவல் எவ்வளவு நுட்பமான நாவல் என்று தெரியவருவதாக் இருக்கிறது. The End of the Storyஇல் பெயரற்ற கதைசொல்லி தன் வாழ்வில் தொலந்து போன காதலைப் பற்றி நினைவு கூர்ந்து எழுதுகிறாள். 32 வயதான கதைசொல்லி 22 வயதான இளஞைனோடு ஏற்பட்ட காதலையும் அதன் முறிவையும் யோசிப்பது தத்துவம் போல அழகுபெறமுடியுமா? நுட்பமும் கவித்துவமும் கூடிய, குறைந்த பட்ச, அலங்காரங்கள் இல்லாத லிடியா டேவிசின் நடையில் சாதாரணமான தினசரி நிகழ்வுகள் அவற்றின் பழகுதன்மை இழந்து அறியப்படாத உலகங்களாக மாறுகின்றன. உரைநடையினை பொற்கொல்லனின் கவனத்தோடு லிடியா டேவிஸ் செதுக்குவதால்தான் இது சாத்தியமாகிறது என்று பல அமெரிக்க விமர்சகர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். மிகைஉணர்ச்சிகளுக்கும் நாடகீய பாங்குகளுக்கும் பழகிப்போன நம் வாசக மனதிற்கு லிடியா டேவிஸின் எழுத்தின் அபூர்வ அழகு முதல் வாசிப்பிலேயே கிடைக்க சாத்தியங்கள் குறைவு. ஆனால் மொழிபெயர்ப்பில் கூட டேவிஸினுடைய உரைநடை வெகுவாக மிளிரும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    The End of the Story ஏமாற்றும் எளிமைகொண்டது.  கதைசொல்லி நாவலாசிரியைப்  போலவே மொழிபெயர்ப்பாளர். அவள் தன் வாழ்க்கையில் வந்து இப்போது தொலைந்து போய்விட்ட காதல் அனுபவத்தை மீண்டும் நினைவுகூர முயற்சிக்கிறாள். அந்த அனுபத்தை ஒரு நாவலாக எழுதினால் ஒருவேளை அந்த அனுபத்தைக் கைக்கொள்ளக்கூடும் என்று நினைக்கிறாள். அவளுடைய அனுபவம் பல வகையிலும் அவளுக்குக் கிடைக்கப்பெறுகிறது. முதலில் உண்மையில் நடந்த சம்பவங்கள். இரண்டாவதாக நடந்தவற்றைப் பற்றிய சிறிதே கோணலாகிய கதசொல்லியின் மனப்பதிவுகள். மூன்றாவதாக அவற்றை எழுதும்போது அவை அடைகின்ற மாற்றங்கள். டேவிஸின் Break it Down சிறுகதைத் தொகுதிலுள்ள பல கதைகளிலும்  இதே போன்ற உத்திகளால் கதை சொல்லப்படுவதை நாம் வாசிக்கிறோம்.  நான்  The End of the Story  நாவலை பலமுறை வாசித்திருந்த போதிலும் லிடியா டேவிஸினால் எப்படி ஒரு அனாதைத்தன்மையினை தன் கதைசொல்லலின் தொனியாக்கமுடிகிறது என்பதை திட்டவட்டமாக என்னால் சொல்ல இயலவில்லை.

    நாவலில் கதைக்களன் என்று ஏதுமில்லை, உரையாடல்களும் ஏதுமில்லை. நாவலின் போக்கில் ஒரு காதலுறவு மென்மையாகக் கீறலிட்டு, முகாந்திரங்கள் ஏதுமற்று, முழுமையாக உடைந்து போவதை நாம் அவதானிக்கிறோம். நான் அவனுக்கு கடிதம் எழுதினேனே, அவன் பதிலுக்கு தன் முகவரியோடு கூடிய உறையிலிட்ட ஃப்ரெஞ்சுக் கவிதை ஒன்றை அனுப்பினானே, நான் பதிலுக்கு எழுதிய கடிதம் அவனுக்கு கிடைத்ததா என்பது போன்ற கதை சொல்லியின் சிந்தனையோட்டங்களினூடே பிற சம்பவங்களும் கதையில் நடக்கின்றன. நினைவுக்குறிப்புகளை எழுதி வைத்திருப்பதற்கு தவறான வகைப்படுத்தும் பட்டிகள் கொடுக்கப்பட்டதால் சில குறிப்புகள் தாமதமாகக் கிடைக்கின்றன. சில ஒளிந்துகொண்டிருக்கின்றன என்று மட்டுமே அறிகிறோம். எண்ணங்களிலிருந்து செயல்களுக்கும், இடங்களிலிருந்து இறந்த காலத்திற்கும், நினைவுகளிலிருந்து விருப்பங்களுக்கும் ஊசலாடி நகர்கிறது லிடியா டேவிஸின் நாவல். ஆனால் இது நனவோடை அல்ல கச்சிதமான கூரிய வாளினைப் போன்ற துல்லியமான உரைநடை. நாவலுக்குள் ஒளிந்திருக்கும் மெடாஃபிக்‌ஷன் தீவிர சுயபரிசோதனைக்கான களம். இரக்கமற்ற, தயவுதாட்சண்யமற்ற சுயபரிசோதனைச் சிந்தனையாலேயே லிடியா டேவிஸின் நாவல் தத்துவத்தின் அபூர்வ அழகினைப் பெறுகிறது. பிற தத்துவார்த்த நாவல்கள் போல மேற்கோள்கள் இல்லை, அலுப்பூட்டும்  விவாதங்கள் இல்லை,   ஆனால் பொருளுலகு தத்துவார்த்த விசாரணைக்கான களமாக நாவலில் பரிணமிக்கிறது.

    பல அமெரிக்க விமர்சகர்கள் லிடியா டேவிஸின் தனித்துவ உரைநடையும் அதன் கச்சிதமும் அவர் ஃப்ரெஞ்சு நாவல்களையும் தத்துவார்த்த படைப்புகளையும் ஆங்கிலத்தில் தொடர்ந்து மொழிபெயர்த்த அனுபவத்தினால் உண்டானது என்று மதிப்பிடுகிறார்கள்.  ஆரம்பத்தில் மார்சல் ப்ரூஸ்டின் மொழிபெயர்ப்பாளருக்கு எப்படி கச்சிதமான உரைநடை அமையக்கூடும் என்று நான் வியந்தேன். பிறகு, பிறகு லிடியா டேவிஸ் மௌரிஸ் ப்லான்ஷேட்டையும் (Maurice Blanchot) மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அறிந்தபோதுதான் லிடியா டேவிஸின் உரைநடைக்கான சிந்தனை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் எஎன்பது துலக்கமானது.

    மௌரிஸ் ப்லான்ஷேட் பின் அமைப்பியல் சிந்தனைகளுக்கு அடிகோலியவர், தெரிதா போன்ற சிந்தனையாளர்களை வெகுவாக பாதித்தவர். ஸ்டீவன் மால்லார்மேயின் குறியீட்டுக்கவிதைகளைப் பற்றி ப்லான்ஷேட் எழுதியதை பின்னாளில் ரோலண்ட் பார்த்தும் நுட்பமாக்கினார். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் தமிழில் இலக்கியத்தை மையமாக வைத்து சிந்திப்பவர்கள் உண்டென்றால் அவர்களிடையே ஒரு சிந்தனைக்கீற்றினை இன்னொருவர் வாங்கி நுட்பமாக்கும் பழக்கம் நடைமுறையாகவில்லை என்பதை எடுத்துச் சொல்லத்தான்.

    ஸ்டீவன் மல்லார்மே ஆல்பம், புத்தகம் என இரண்டுவகை எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடுவதை ப்லான்ஷேட்டின் சிந்தனையின் தொடர்ச்சியாக எழுதுகிற ரோலண்ட் பார்த் புத்தகம் என்பது உலகை முழுமையாக தன்னகத்தே கொள்வதாகவும் ஆல்பம் துண்டு துண்டான காட்சிகளினால் உலகைக்காட்டுவதாகவும் எழுதினார். இந்த இரண்டையும் எதிர்நிலைகளாக நாம் ஒப்புக்காகவேண்டும் வைத்துக்கொண்டால் அந்த இரண்டின் கருத்தாக்கங்களின் எதிர்நிலைகளையும் கடக்கின்ற நாவல் லிடியா டேவிஸின் நாவல் The End of the Story.  துண்டு துண்டான சிந்தனைககளாக இருப்பது போல தோன்றினாலும் அவை அடைகின்ர முழுமை அதனை நாம் இடிபாடுகளாக உணர்வதும் இந்த நாவலை இணையற்றதாக மாற்றுகிறது. நல்ல வேளையாக, கதை முடிவினை உலக முடிவாக, apocalyptic vision கொண்ட நாவலாக The End of the Story எழுதப்படவில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

    ரோலாண்ட் பார்த் ஒருமுறை எழுதினார்: “ The future of the Book is the Album, just as the ruin  is the future of the monument.”  டேவிட் விண்டர்ஸ் என்ற விமர்சகர் ரோலாண்ட் பார்த்தின் பின் வரும் வரிகள் லிடியா டேவிஸின் நாவலை கச்சிதமாக சித்தரிக்கின்றன என்று எழுதினார்:

“The book is destined to become debris, an erratic ruin; it is like a sugar cube dissolving in water. Some parts sink; others remain upright, erect, crystalline, pure, and brilliant”

ஆம் உண்மைதான், லிடியா டேவிஸின் The End of the Story சர்க்கரைக் கட்டி நீரில் கரைவதைப் போன்றதொரு நாவல் பல துகள்கள் கரைந்துவிடுகின்றன, பல துகள்கள் ஒளிர்கின்றன.  


http://www.amazon.com/The-End-Story-A-Novel/dp/0312423713