Showing posts with label அனாதையின் காலம். Show all posts
Showing posts with label அனாதையின் காலம். Show all posts

Saturday, August 8, 2020

அனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை



 ஒளி நெறி: உப்பு

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்துகொண்டிருக்கிறேன்

கவிதை எழுதுகிறேன் பேர்வழி என

ஒரு படி உப்பை எடுத்துக் கொண்டு போய் 

கடலில் கரைத்துக் கொண்டிருக்கிறேன்

கர்மவினை


1

முடிவு

எல்லா பயணங்களுமே ஏதோ ஒரு கடற்கரையில் நிறைவடைகின்றன

ஆங்கே

உனக்கு எல்லையின்மையின் விஸ்வரூப தரிசனம் காத்திருக்கிறது

நீயோ

நீ வளர்த்த நாய்க்குட்டி உன்னைப் பின் தொடர்ந்ததா எனக் கவலைப்படுகிறாய்

அதன்

அகன்ற விழிகளில் பிரிவின் ஈரக்கசிவைக் காண விழைகிறாய்

உன்

நெஞ்சக் கூடகன்ற கருநீலப் பறவை கேவுமா கரையுமா எனத் தவிக்கிறாய்

ஏதோ 

மூன்று வார்த்தைகளுக்குள் உன் வாழ்க்கையை அடக்க யத்தனிக்கிறாய்

மெதுவாகவே

உணவு, உதை, ஊழ்வினை என முணுமுணுக்கிறாய்

மாயா

உன்னிடமின்றி யாரிடம் உன் துர்க்கனவுகளுக்கு பொதுமன்னிப்பு கோருவது என வியக்கிறாய்

உன்

பார்வைக்கப்பால் அதோ அந்த தரிசனக் காட்சி வியாபகம் பெறுகிறது


2

உன் துயர நினைவுகளூடே சோதரா

மஞ்சள் அரைநிலவின் கண்ணீருடனே 

பரிகசிக்கும்  தொண்டையிலிருந்து வெளியேறும் 

நாரசம் என 

ஆடும் தொட்டிலிலிருந்து 

ஒன்பதாம் மாத நள்ளிரவில்

 வெளியேறி

(புத்தனான சித்தார்த்தனைப் போல எனவும் சொல்லலாம்)

மலட்டு மணல் மேடுகளின் மேல் பறந்து

தனியே திரிந்து

அனுபவம் சேர்த்து

வெற்றுக்கால்களுடன்

வெற்றுத் தலையுடன் 

உணவு, உறையுள், ஊழ்வினை 

என்று மட்டுமே கூவும்

உன் நெஞ்சக்கூடகன்ற கரு நீலப் பறவை

சொல்லும் ஆப்த வாக்கியம்தான் என்ன?

யாருக்கும் யாருமில்லை


3  

யாருக்கும் பலனற்று

சிதைவுற்ற அடுக்ககத்தின் இண்டு இடுக்கொன்றில் 

பரவசத்துடன் அடர்ந்திருக்கிறது மூலிகை

திருநீற்றுப்பச்சை

அதன் 

சின்னஞ்சிறிய விரிந்த பூவிதழ்களுக்கு வானமும்

கீழே விழும் விதைகளுக்கு பூமியும்

சாத்தியங்களின் எல்லையின்மையை காட்டிக்கொண்டே இருக்கின்றன


-

4

கட்புலனில் இணைசாலைகளும் ஏதோ ஒரு

மாயப்புள்ளியில் 

தூரத்தில் இணையத்தானே செய்கின்றன என அவள்

உன்னிடத்தில் சொன்ன நாளில் 

நீ அவளை

நிரந்தரமாய் பிரிந்தாய்


-

காற்றோ கனத்திருக்கிறது, இரவோ சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது

பௌர்ணமி நிலவு ஒளிரும் நள்ளிரவில்

பிச்சிப்பூ ஒன்று மொக்கவிழும் சிற்றோசையில்

ஓராயிரம் கோடி இடி முழக்கங்கள் 

சங்கமிக்கின்றன 

நம் செவிப்புலன்கள் தாண்டி. 


5 

நீங்களும் நானும் அந்த நதியைப் பார்த்திருக்கிறோம்

அதில் இரண்டு முறை இறங்க முடியாது என 

ஹெராக்லிட்டஸ் சொல்லாமலேயே நமக்குத் தெரியும்

ஆடிப் பெருக்குக்கு 

முளைப்பாரியையையும் தொன்னைதீபங்களையும் 

நதியலைகளில் மிதக்க விட்டோம்

கம்பங் கூழ், காரக்குழம்பு, முருங்கைக்கீரை வதக்கல்,

கொழுக்கட்டை, பொரி, சர்க்கரை, மாவிளக்கு மாவு 

என படையலிட்டோம்

தீபங்கள் நீரில் அசைந்தாடிச் செல்வதைப் பார்த்து நின்றோம்

வீடு திரும்பினோம்

இவ்வுலகு மட்டுமே நாம் அறிவோம்

தீபங்களுக்கும் இல்லை மறு கரை

என்றவாறே


6

நாற்புறமும் இறுக்கி மூடப்பட்ட 

கண்ணாடிப் பேழைக்குள்ளிருந்து 

உலகை சாட்சி பூதமாய் பார்க்கும் 

உனக்கு கனவொன்று வந்தது

அதில் நீ

வைகாசி மாத மாம்பூக்களை நுகர்ந்தவாறே

இளம் மாவிலைகளினூடே களித்தவாறே

மாம்பழம் ஒன்றை சாறு வழிய வழிய

கடித்து நக்கி உறிஞ்சி சாப்பிடுகிறாய்

அப்போதிருந்து நீ

நனவிலும் கூட 

இந்தப் பிரபஞ்சமே 

ஒரு மாமரம் என்ற 

ஓர்மையை அடைந்தாய்



-

7

தூரத்தில் கடலில் 

குழந்தைகளின் குதூகலத்துடன்

கோலாகலமாக துள்ளி விளையாடுகின்றன

டால்ஃபின்கள்

காவிய ஆரவாரத்துடன்

மீன் பிடி பாதாள கரண்டிகளோடு விரைகிறது கப்பல்

நீ

குளியலறை புணர்ச்சிக்குப் பின்

சிகரெட் தரும் ஆழ்ந்த ஆசுவாசத்துடன்

அந்தக் கடல் காட்சியை

உன் பால்கனியிலிருந்து பார்த்து நிற்கிறாய்


8

மலைப்பாம்பின் தழுவல்

மெல்ல மெல்ல இறுகுவது போல

வயது 

உன் உயிர்ச் சரட்டை முறுக்கும்போது

அந்தத் திரி முனையில் ஒரு 

சுடரைக் காண விழைகிறாய்

அச்சுடர் மற்றொரு திரியில் பற்ற

அது வேறொன்றில் தொற்ற

அனந்த கோடி தீபங்கள் ஒற்றைச் சுடராய்

தரிசனமாகிறது

இருளின் கர்ப்பத்திலிருந்து

ஜனிக்கவிருக்கும் முதல் தீப்பொறிக்காய்

உன் உயிர்ச் சரட்டை திரித்தபடியே இப்போது

காத்திருக்கிறாய்


Friday, April 28, 2017

அனாதையின் காலம் | பகுதி 6| பித்து பிறை பிதா | நீள் கவிதை

ஓவியம் : அல்ஃபோன்ஸோ அருள் தாஸ்

அனாதையின் காலம் | பகுதி 6 | பித்து பிறை பிதா

ஒளி நெறி : பித்து பிறை பிதா
--
சுவரிலிருந்து உதிரும் காறை போல
நான் சிதிலமடைந்துகொண்டிருக்கிறேன்
அதன் முனகல்களை வாஞ்சையோடு கேட்பீரா
ஒரு சில மிருக ஒலிகளை மட்டுமே
நான்  எழுப்ப இயலும்
ஆம் அவ்வளவுதான் தெய்வத்தின் குமாரரே
விழி நரம்பை நாராய் உரித்து
நான் செய்த படிமங்கள் என்னிடத்தில் வற்றிவிட்டன
என் சொல் முந்திய கேவல்
உம் இதயத்தின் செவிகளை தீண்டும்தானே
நீவிர் வியாபித்திருக்கும் பெரு வெளியில்
நான் கூட்டும் ஓசைகளின் பிரார்த்தனை
பித்தன்றி வேறென்ன
தந்தையீர் நீர் அறிவீர்
என் சிதிலம் என்றுமே பிறர் பொருட்டு
என் பிறை என்றுமே முழு மதி



1

தந்தையைக் கண்டடைதல்
எனக்கு எளிதாக இருக்கவில்லை
அவர் என்னெதிரில் இருந்த போதிலும்
கவிதையில் மெய்யுணர்வு
ஓவியத்தில் பார்வை மறையும் தொலைவு
இசையில் மௌனம்
பொருளின் மேற்புற ரகசியம்
மரபின் இறுக்கம்
பிம்பத்தின் மெய்மை
படிகளின் நிசப்தம்
விதைகளில் உயிர்
போலவே
அவர் வாசிப்புக்கு எட்டாது இருந்தார்
அவரை அறிவில் அடங்கா
அனுபூதியாய்
கைக்கொள்ள எண்ணினேன்
அவரோ
என் தாயின்
நினைவின் பவித்திரத்தில்
அவள் புடவையை அணைத்து உறங்கும்
குழந்தையாய்
அனுபவமானார்
--
 2

நீரோவியத்தின் அணுக்கமெனவே
நினைவு மினுங்க
பித்து விகசிக்க
தந்தையின் சட்டையை அணிய முயற்சிக்கிறேன்
யோகியின் மெலிந்த
தேகத்திற்காகவே அளவெடுத்த கருஞ்சட்டையில்
வேறொரு காலத்தின் வேறொரு துடிப்பின் நூற்பாய்
இன்னும் நிக்கோட்டின் நாற்றம் மட்டுமே எஞ்சியிருக்கிறது
அவரின் இளமையை கொண்டுசெலுத்திய லட்சியத்தின்
தையல்கள் இற்றுப்போயிருக்கின்றன
அதன் ஒடுக்கமும் எனக்கு போதுவதாயில்லை
ஏதேனும் ஒரு மெய்யணைப்பில்
புனிதங்களற்ற நடப்பில்
நான் என்றுமே தழுவாத
அவருடல் தூலம் என்னுடலாய் ஆகாதவென
சட்டைக்குள் என்னைத் திணிக்கிறேன்
அக்கு அக்காய் கந்தலாகிவிட்ட கருஞ்சட்டை
நூல்களோடு என் இருப்பின் அலங்கோலம்
நிச்சயமாய் அவர் விட்டுச் சென்றதல்ல
--
3

ஆகாயத்துக்கும் எல்லையற்ற வெளிக்கும் என்னை
ஒப்புக்கொடுத்துவிட்டு
தந்தைக்கும் காலத்துக்கும் முன்
தனியனாய் நிற்கிறேன்
ஆசுவாசமளிக்கும் மர நிழல்கள் இல்லை எனினும்
இரவுகள் வராமலில்லை
நிலவொளியில் நான் நிற்கும் சிறு வெளி
நித்தியம் பெறாமலுமில்லை
எனக்கான பாடலை
திக்கித் திணறியேனும் இயற்றிவிடுவேன்
அதன் கீதத்தின் வசீகரம்
உமது நெஞ்சங்களை மெய்மறக்க செய்கையில்
மனமிளகி நீங்கள் சில சொற்கள்
கூட்டக்கூடும்
அவ்வமயம்
விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவி
எம் தந்தை
--
 4

தந்தையின் தகனத்துக்கு
பிறகான மாலையில்
இசைத்துணுக்குகளாய் மெலிதான மழை பொழிகிறது
பெயரற்ற ஆதி நட்சத்திரங்களின்
இடையறாத மினுங்கல்களுக்காக
இரவு தயாராகிறது
கூடடையும் பறவைகள்
வழக்கொழிந்த
பழம்பாடல்கள் போல் ஒலியெழுப்புகின்றன
எல்லாம் மங்கிய வீட்டில்
ஒற்றை மோட்ச தீபம்
தன் ஒளியின் சிதறல்களை நல்குகிறது
நாம் அறியா மென்மையின் படலமொன்று
வாடிய பயிரைக் கண்டதும் வாடியதாய்
வெறிச்சோடிய தெருவில் படர்கிறது
கவிதையின் உள்ளார்ந்த சோகங்களோ
இவையென எண்ணி மயங்குகிறேன்
சாயுங்காலத்தின் நிரந்தர கருணை
உனக்கும் எனக்கும் மட்டுமானதல்ல
அனைவருக்குமானதென
பெருகும் கண்ணீர்
தெளிவாக்குகிறது
--
5

மாயையின் சலனத்தில்
ஓர்மைகளின் சாந்து கூட்டிய
உயிர்த்தலத்தில்
பெருமூச்சுகளை சேகரித்திருக்கிறேன்
என் செல்வங்களாக
அவை கடலின் உப்புக் காற்றோடு
சேர்ந்து தினசரி வீசுகின்றன
சோதரர்கள் சோதரரைக்
கொன்றழித்து
கைவிட்ட கதைகளை
அவை தொடர்ந்து காவியமாய் பாடுகின்றன
உலகின் சோபையை அவை அரிப்பதை
நொடியுக மோனத்தில்
நாம் அறிவோம்
கடல் அறியும்
மந்திர யாழ் மீட்டலாய்
பிதாவே என்றொரு சொல்லின்
முலாம்
உன் கூட்டலில் பொருளாகுமென
நானும்
என் பொருளில் உன் கூடுதல் ஆகுமென
நீயும்
நிரந்தரமாய் காத்திருக்கிறோம்
--
6

யுகத்தின் முகத்தில்
அப்பிய ஓசையாய்
ஆழ் நிலை தியானத்தில் அகச்செவி
கேட்க
சகோதரக் கொலையில்
கடல் விசும்புகிறது

அது சொல்லாய் இமை திறக்க
தூக்கி அலைகிறேன்
ரகசிய நதி போலவே
தந்தையீர்

இருமுறை இறங்க இயலா அந்நதியில்
விசும்பல்
ஊளையாய் ஒரு சமயம்
ஊமை வலியாய் மறு சமயம்
வீரியமாக

திசைமானியற்று உடைகிறது ஒரு கரை

-