Thursday, June 30, 2022

சொற்களின் கூடுகையில் எழும் திவ்யம்


 சொற்களின் கூடுகையில் எழும் திவ்யம்

——————————————————
தமிழ்வெளி பதிப்பகம் என்னுடைய ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற தலைப்பிலான கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. பக்கங்கள் 240 விலை ரூபாய் 240. ISBN 978-93-92543-01-2 புத்தக வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கிறது.
அச்சுப்பிரதியை ஃபோன் மூலம் வாங்க 91-9094005600 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். கிண்டில் மின் நூல் வாங்க https://www.amazon.in/dp/B0B461VJ6C
——————————————————————-
நூலுக்கான என் முன்னுரை
—-
இது என்னுடைய இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் நான் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறேன். ‘அனாதையின் காலம்’ என்னுடைய வலைத்தளத்தைத் தவிர வேறெங்கும் பிரசுரமாகவில்லை. முதன்முறையாக அச்சு காண்பவை. இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் கடந்த ஒரு வருடத்திற்குள் எழுதப்பட்டவை.
நான் என் மனதை சுத்திகரிப்பதற்கான ஒரு முறைமையாக கவிதை எழுதுதலை, பெருந்தொற்று காலத்தில் வீடடைந்து வேலை செய்யும் லயம் தப்பிய கடந்த இரண்டு வருடங்களில் கண்டுகொண்டேன். நான் பதின்பருவத்திலிருந்தே கவிதை எழுதுபவனாக இருந்தாலும்
கவிதையை எனக்குரிய வடிவமாக மீட்டெடுத்ததும் உறுதி செய்துகொண்டதும் சமீபத்தில்தான்.
ஒன்று போல இன்னொன்று இருப்பது என்னைத் தொடர்ந்து வசீகரிக்கிறது; அல்லது ஒன்று போல இன்னொன்று இருப்பதான பாவனையை, மாயையை வெளிப்படுத்துவது என்னிடம் ஒரு பதச்சேர்க்கையை வேண்டுகிறது. நான் அதை எழுதுகிறேன் கவிதை என்ற பெயரில். ‘போல’ என்றொரு சொல்லுக்குள் நான் சிக்கிக்கொள்வதிலும் அதன் எல்லைகளை உடைப்பதிலும் நான் முன்பும் ஈடுபட்டிருக்கிறேன். “கட்டுரை போல சிலவும்’ எனத் துணைத்தலைப்பிடப்பட்ட கட்டுரை நூலை எழுதியிருக்கிறேன். ‘மர்ம நாவல்’ என்றொரு சிறுகதை. “நாடகத்திற்கான குறிப்புகள்” என இன்னொரு சிறுகதை. இன்னொரு சிறுகதையில் கட்டுரைக்குள் மழை பெய்கிறது. வடிவங்கள் சேர்வதையும் கலைவதையும் அத்து மீறுவதையும் மத சிந்தனைகளின், தத்துவங்களின், பண்பாட்டுச் சூழல்களிலும் வைத்துப்பார்ப்பதை கர்மமும் மறுபிறவியும் பற்றிய நூல்கள் எனக்குச் சொல்லித் தந்தன. குறிப்பாக ஞானனாத் ஒபயசேகரெயின் (Gananath Obeyesekere) நூல் “Karma and Rebirth A cross cutural Study” - மறுபிறப்பு என்பதை பண்பாட்டுச் சூழல்களில் வைத்து விரிவாகவும் ஆழமாகவும் ஆராயும் நூல். மறுபிறவி என்பது மத, தத்துவ சிந்தனைகள் போலவே பண்பாட்டு சூழல்களாலும் உருவாக்கப்படுவது என வாதிடுவது. இந்த நூல் அதன் முந்தைய பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் Imagining Karma: Ethical Transformation in Amerindian, Buddhist, and Greek Rebirth என வழங்கப்படுகிறது. பல ஒன்றாய் கூடிவரும் கூடுகையின் திவ்யத்தையும் அது கலைந்து அடுக்கப்படும்போது உண்டாகும் மறுவடிவத்தையும் நான் பாடுகிறேன்.
இதில் அடிப்படையான கேள்வி என்னெவென்றால் ஒன்று இன்னொன்றின் சாயம் ஏற்கும்போது அது ஒரு moral universe-ஐ கண நேரமேனும் நமக்குக்காட்டித்தருகிறதா? ஆமென்றும் இல்லையென்றும், சந்தேகத்திற்குரியதென்றும், தெரியாதென்றும் என்னுடைய வெவ்வேறு கவிதைகள் சொல்கின்றன. அல்லது சொல்ல விழைகின்றன. இந்தப் பல்வேறு நிலைப்பாடுகளின்வழி என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல இழப்புகளையும் அவற்றால் ஏற்பட்ட துக்கத்தையும் நான் கடந்து வந்தேன். பௌத்த முறைப்படி நான் கற்றுக்கொண்ட தியானமும் அதன் வழி நான் எழுதிய இந்தக் கவிதைகளும் எனக்கு துக்க நிவாரணத்தையும் புத்துயிர்ப்பையும் அளித்தன.
அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன?
எழுதிப்பார்த்து ஆழ் மனதை அறிதல் என்பதில் ஒரு வகையான அறிவுத்தோற்றவியலின் அதீத கற்பிதம் (epistemological fantasy) இருக்கிறது. என் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை வைத்து நான்தான் என்று பிறர் அறுதியிடுவது போல அல்லது புகைப்படம் எடுத்த பின்னரே, கண்ணாடியின் முன் நின்ற பின்னரே என் முகம் எனக்கு அடையாளம் ஆவது போல எழுதி முடித்த கவிதை என்னை முழுமையாகக் காட்டுமா? இல்லை ஏதேனுமாவது சொல்லுமா? கவித்துவ பிரக்ஞையை கவிதை வெளிப்படுத்துமா? அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன? இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொள்ளும்போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாயின. ஒரு கவிதையை எழுதி முடித்த உடனேயே நான் வேறொருவனாய் ஆகிவிடுகிறேன். என்னுடைய ‘நான்’ பிடிக்கு அகப்படாமல் தொடர்ந்து நழுவிக்கொண்டே இருக்கிறது. எனவே என்னையும் என் வாழ்க்கையும் தொடர்புறுத்தி இந்தக் கவிதைகளை வாசிப்பது உங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கூட்டாது. ஆகவே நீங்கள் இந்தக் கவிதைகளை நீங்கள் உங்கள் வாசிப்பு, உங்கள் வாழ்க்கைப் பின்புலம் ஆகியவற்றை வைத்து வாசித்து பொருள்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நான் போர்ஹெஸ், ரில்கே, டி.எஸ்.எலியட், ஜோசெஃப் ப்ராட்ஸ்கி, ஓசிப் மாண்டெல்ஸ்டாம் ஆகியோரின் கவிதைகளை கடந்த முப்பதாண்டுகளில் பலமுறை வாசித்திருக்கிறேன். போர்ஹெஸிடமிருந்து கவிதை சிந்தனைக்குமான ஒரு வடிவம் என்பதைக் கற்றுக்கொண்டேன். எலியட்டிடமிருந்தும் ரில்கேயிடமிருந்தும் கவிதைக்கான தொனியே கவிதையின் இசைமையை தீர்மானிக்கின்றன என அறிந்துகொண்டேன். தொடற்பற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை தொடர்புறுத்தும் முறைகளை ப்ராட்ஸ்கியும் மாண்டெல்ஸ்டாமும் கற்றுத்தந்தார்கள். இவர்களின் மேற்சொன்ன பாதிப்புகளோடு சங்க அகக்கவிதை, திருக்குறள், சைவ வைணவ பக்தி இலக்கியங்கள், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் ஆகியவற்றின் பாதிப்புகளும் நனவற்ற நிலையில் என் கவிதைகளில் சேர்ந்திருக்கின்றன.
இந்தக் கவிதைகளை நான் எழுத எழுத அவற்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தேன். அவற்றை வாசித்து உடனடியாக எனக்கு நீண்ட எதிர்வினைகளை பகிர்ந்துகொண்ட நண்பர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் ராஜேந்திரனின் நட்புக்கு இந்தத் தொகுதியை சமர்ப்பிக்கிறேன்.
தன்னுடைய கோட்டுச்சித்திரங்களை இத்தொகுதியில் செர்த்துக்கொள்ள தந்த நண்பர் மு.நடேஷ், அட்டைப்படத்திற்கு தன் ஓவியத்தை தந்துதவிய நண்பர் சி.டக்ளஸ் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
இந்தக் கவிதைகளில் சிலவற்றை ‘மணல்வீடு’ இதழில் பிரசுரித்த மு.ஹரிகிருஷ்ணன், நவீன விருட்சம் இணைய நாளிதழில் பிரசுரித்த அழகிய சிங்கர், இந்தத் தொகுதியை அழகுற உருவாக்கியிருக்கும் ‘தமிழ்வெளி’ சுகன் கலாபன், யுகாந்தன் ஆகியோருக்கும் என் நன்றிகள்.
என் மனைவி ஆங்கியோ, மகன்கள் ஶ்ரீருத்ரன் தெய்வக்குமார், யோகருத்ரன் அட்சிலியா நான் எழுதுவதற்கு வேண்டிய தனிமையைஅளித்தனர். அவர்களால் எனக்குக்கிடைக்கும் மன அமைதி என் பேறு.

Tuesday, June 14, 2022

தருணம் —— கவிதை / தனிநபர் நாடகம்

 தருணம்

——

கவிதை / தனிநபர் நாடகம்

——-

சொல்லால் முகிழ்க்கும் பித்து

உனக்கும் எனக்கும் இடையில்

கண்ணே

எந்தத் தருணத்தில்

எப்படி நிகழும்

அது மார்க்கமில்லாதது அபாதா

அது வரம்பில்லாதது அனந்தகோரா

அது நிறமில்லாதது தயாபரா

யாருடையது இந்த எதிர்க்குரல்

எங்கிருந்து வருகிறது அது

என்னைச் சுற்றி எல்லாம்

ஆவியாகிக்கொண்டிருக்கிறது

என் பகற்கனவுகள்

என் கற்பனைகள்

என்னுள் பிளவுபட்ட ஆளுமைகள்

என் உறவுகள்

என் நட்புகள்

எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன

நான் அவளையே நம்பியிருக்கிறேன்

நான் அவளை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு

நீ இடைமறித்து இறைவனை இழுக்காதே

என் ஒவ்வொரு காலடியையும்

புதை மணல் உள்ளே இழுக்கிறது

என் மன முறிவின் சப்தத்தில்

கொன்றை தன் அத்தனை

மலர்களையும் தரையில் கொட்டிவிட்டது

நீர் ஏந்திய மேகங்கள்

தங்கள் சுழுமுனைத் திறக்காமல்

தன் போக்கில் கடந்து செல்கின்றன

நான் எவ்வளவு தனியாக

இருக்கிறேன் தெரியுமா

அது கனிவதில்லை அகோரா

அது உதிர்வதில்லை ஈஸ்வரா

அது உனை விட்டுப்போவதுமில்லை சர்வேஸ்வரா

இந்த எதிர்க்குரல் என்னை நிம்மதியாக

இருக்க விடப்போவதில்லை

இதை மீறித்தான் நான் அவளோடு பேசவேண்டும்

வைகாசியின் மாம்பூக்களை

கருவண்டுகள் துளைக்கின்றன

இந்த வருட வைகாசியில்

இரண்டு பௌர்ணமிகள்

இரண்டாம் முறை கடலைலைகள் பித்தேறி

மன உயரம் தொட்டு

அந்தரத்தில் நிற்கும் தருணத்தை

நான் நழுவவிடலாகாது

ஆனால் எனக்குத் தெரியும்

சொற்கள் என்னை முதல் முறை

கைவிட்டது போலவே இப்போதும்

குழி பறித்துவிடும்

என்னை ஆட்கொண்டது தாப அமைதி

என்று சொன்னால் யார் நம்புவார்கள்

அவளொரு எலுமிச்சை மரம் போல இருந்தாள்

கனத்த சாறு நிரம்பிய இலைகள்

கவனமாகப் பேணப்பட்ட முட்கள்

தளிரிலைகளில் படந்திருக்கும் மென்சிவப்பு

பழங்களில் மஞ்சளின் பொன் விகாசம்

நான் நழுவவிட்ட தருணத்தில்

நான் சொல்ல நினைத்ததெல்லாம்

மஞ்சள் என் பித்தின் நிறம்

நீயொரு எலுமிச்சை என்பதுதான்

தயங்கித் தயங்கி நின்றிருந்தேன்

சொற்கள் நுனி நாக்கு வரை

வந்து வாயினுள்ளேயே நின்றன

அவள் புருவங்கள் உயர்த்திப்

புன்னகைத்துப் போய்விட்டாள்

அது நிறமில்லாதது தயாபரா

அது உதிர்வதில்லை ஈஸ்வரா

அது கரைந்துவிடுவது காலரூபா

நான் இந்தக் குரலை கவனிக்கப்போவதில்லை

நான் சித்தம் குலைந்தவனில்லை

எனக்குத் தெரியும்

எனக்கு நன்றாகத் தெரியும்

கோடானுகோடி மூலகத் துணுக்குகளால்

ஆனது ஒரு தருணம்

கூடியபின் கலைந்தால் மீண்டும்

அதே போலக் கூடுவது துர்லபம், அபூர்வம்

இல்லை நடக்கவே நடக்காதது

இந்த இரண்டாவது வைகாசி முழு மதியில்

விசாக நட்சத்திரம் கூடவில்லை

இம்மி பிசகாத மறு தருணம்

மீண்டும் வாய்ப்பதில்லை

ஆனால் நான் மூச்சுவிடுவது போல

என்னால் எந்நேரமும் பித்தின்

சொற்களைக் கூட்டமுடியும்

ஆகையால் கைநழுவிப்போவது

என்பதுதான் என்ன

தேன் துளி ஒன்று வீணாகிவிட்டது

என்பது தவிர

அடுத்தத் தருணம் புதிதாய்க்கூடும்

என் எதிர்க்குரல் தாண்டி

கேளிக்கையாளர்கள் தாண்டி

நான் சொல்ல வேண்டியதை

சொல்லிவிடுவேன்

உள்ளங்கையளவு நீரில்

நிலவைத் தாங்கிப் பிடிப்பது போல

அவள் மீண்டும் எலுமிச்சை மரமாய்

இருக்கப் போவதில்லை

அவள் அன்னபட்சியாய் வருவாள்

அப்போது நானொரு வேலையில்

மும்முரமாய் இருப்பேன்

என் இமைகள் நடுங்கும்

தோள்களில் மெலிதான நடுக்கம் வரும்

நான் தலைமுடியை நன்றாகத்

தேங்காய் எண்ணெய் போட்டு வாரியிருப்பேன்

என் எதிர்க்குரல் கூட நானொரு

நல்ல பணியிலிருப்பவன் நாலு காசு

சம்பாதிப்பவன் எனச் சொல்லிவிடும்

கிரணக்கற்றைகளால்

நீர் நிலைகளெல்லாம் கிழிபடும்

யாரும் தங்கள் கைப்பைகளை

வாகனங்களில் மறந்துவிட்டுப் போகமாட்டார்கள்

ஒளியை சுவாசிக்கப் பழகியிருப்பார்கள்

எனக்குள் பலகுரல்கள் கேட்காது

நான் என் முழுக்கை சட்டையை

கால்சராய்க்குள் ஒழுங்காகத் திணித்திருப்பேன்

என் சட்டையின் கைப் பொத்தான்களை

அணிந்திருப்பேன்

பேசும்போது கண்களை உருட்டி உருட்டி

பேசமாட்டேன் எனக்குள்ளாகவே

உள்ளோடியிருக்க மாட்டேன்

என் கையில் அந்தத் தாளை வைத்திருக்க

வேண்டுமா வேண்டாமா என்று தெரியவில்லை

அதைப் பார்க்கமலேயே நான் சொல்லிவிடுவேன்

அது மார்க்கமுடையது அபாதா

அது வரம்புடையது அனந்தகோரா

அது நிறமுடையது தயாபரா

அன்னபட்சி உன் சிறகு

மிக மிக மென்மையானது

அதுவே

சொல்லால்

முகிழ்க்கும் பித்தாகிய

என் தருணம்


Monday, June 13, 2022

சாகசப் பிழை- கவிதை- தனி நபர் நாடகம்

 சாகசப் பிழை- கவிதை- தனி நபர் நாடகம்

----

அது ஒரு குளிர்ந்த இரவின் சாகசப்

பிழை கலைத்துவிடலாமென்கிறான்

நீ ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாய்

தெருவில் மழைநீர் சிறு குட்டைகளாகத்

தேங்கிக்கிடக்க, இரு நாய்கள் ஓடுகின்றன

எங்கே ஒடுகின்றன அவை? 

நீ இருக்கும் உணவகத்தின் அறைக்குள்ளே

பளபளக்கும் அலுமினிய புகைபோக்கிக்குக் கீழே

அடுப்பில் உரித்த கோழியை

வெட்டுகிறான் வெள்ளைத் தொப்பி அணிந்த

சமையற்காரன் கண்ணாடி அறைக்குள் எல்லோரும்

பார்க்கும்படி நிற்கிறான்  

நீ சாக்லேட் மடக்கிய தாளில் என்ன 

பொன்மொழி எழுதியிருக்கிறது என வாசிக்கிறாய்

“பிரபஞ்சம் முழுவதும் யாவும் 

தர்மத்தையே பேசுகின்றன”

உனக்கு மெலிதாக எதுக்களிக்கிறது

வயிற்றையும் நெஞ்சையும் நீவிக்கொள்கிறாய்

அவன் உனக்கு எலுமிச்சை சாறு

கொண்டுவரச் சொல்கிறான் 

அவன் உன் கைகளைப் பற்ற வருகையில்

அவற்றை விலக்கிவிடுகிறாய் 

அது இன்னும் ஆரம்பநிலைதான் 

அரைமணியில் ஆஸ்பத்திரியிலிருந்து 

வீட்டுக்கு வந்துவிடலாமென்கிறான் 

நீ மெதுவாக எழுந்து உன் கைப்பையை

எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல்

பாதி உணவில்

உணவகத்தை விட்டு வெளியேறுகிறாய்

குடை வேண்டுமா வேண்டாமா என்பதாய்

வெளியே மழை தூறிக்கொண்டிருக்கிறது

நீ நனைந்தபடி இலக்கற்று நடக்கிறாய்

யாருக்கு சொந்தம் துளிர்க்கும் உயிர்க்கிளை

உனக்கா எனக்கா அரசுக்கா நிலத்துக்கா கடவுளுக்கா

நீ உனக்கே உனக்கில்லையா 

சிறிய வாலுள்ள மீன் குஞ்சு போல

அது நீந்துவதை நீ பார்த்திருக்கிறாய் எங்கே

வானில் ஒரு எரி நட்சத்திரம் 

விழுந்து மறைவதை பார்க்கிறாய் 

யார் தீர்மானிப்பது அதன் பிறப்பையும் இறப்பையும்

கிளிச் சீட்டு போல ஒன்றை 

உருவி எடுத்து அதை நீ உலகுக்குக்

கொண்டுவரத்தான் வேண்டுமா?

அவன் உன்னைப் பின் தொடர்ந்து வரவில்லையென

உறுதிப்படுத்திக்கொள்கிறாய்

அதனிடம் எப்படிக் கேட்பது

வரத்தான் விரும்புகிறாயா என 

சின்னஞ்சிறு நாய்க்குட்டியை அதன் காதைப்

பிடித்து நீ தூக்கியது உனக்கு நினைவுக்கு வருகிறது

இப்போது உன்னை யார் அப்படி

தூக்கியிருக்கிறார்கள் 

உனக்கு அதிரசம் சாப்பிடவேண்டும் போல இருக்கிறது

கோவில் பிராசாத கடைகளில் கிடைக்கும்

பழையதாய் எண்ணெய் ஊறிப்போய்

கறுத்தும் சிவத்தும் இருக்கும் 

எவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டாய்

அந்த இரவின் மதுரமென உன்னுள் இறங்கிய

அந்தத் துளி எதைத் தொட்டு விழித்தது

இதமானது ஆனந்தமானது ஒளிர்வது எதுவோ

அதுவே என்னுள்ளும் விழித்தது

எனச் சொல்லிக்கொள்கிறாய் 

மழை அடித்துப் பெய்யத் தெருவில் 

சொட்ட சொட்ட நனைந்தவாறே நடக்கிறாய்

இது என்னுடையது இது என் முடிவு

இது இப்படியாகவே நடக்கும் என்றவாறே

முலைகள் சுரக்கும் பாவனையில் 

விம்மியவாறே


கடற்கரையோரக் கல்லறைக் கூரையில்  

தேங்கிய மழைநீர்

அலையடிக்கிறது

தானும் ஒரு கடல் என்ற நினைப்பில்

நாமெல்லோருக்குமே ஒரு கல்லறை தேவைப்படுகிறது

அதன் கூரையில் மழைநீர் தேங்கவேண்டும் என ஆசைப்படுகிறோம் 

அந்த தேங்கிய நீரை மற்றவர்கள் 

கண்ணாடி போல பாவித்து 

தங்கள் முகம் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ஆசைகளிலேயே மிகப்  பெரிய ஆசை

துக்கங்களில் பெரிய துக்கத்தைக்

கொண்டுவரும் ஆசை 

தாகம்- கவிதை/ தனி நபர் நாடகம்

 தாகம்- கவிதை/ தனி நபர் நாடகம்

------

இப்போதெல்லாம்
எவ்வளவு தாகமாய் இருக்கிறது
தெய்வீகக்காதல் கதையொன்றைக் கேட்பதற்கு
ஆனாலும்
இரவின் நிறம் அடரும் சுவர்களுக்குக்கூட
உன்னையும் என்னையும் பற்றி
நான் ஏன் சொல்லக் கூசுகிறேன்
ஒரு இரகசியம் நழுவி
நோக்கமற்ற குமிழியாய்
உடைந்து வர்ணஜாலமிழக்கும்
நீர்த்திவலைகளாவதை
நான் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது
உன் கூந்தலின் வருடலில்
என் மார்க்காம்புகள் சிலிர்த்ததை
யாருக்கு நான் சொல்ல வேண்டும்
யாருக்கு நான் சொல்லமுடியும்
நள்ளிரவில் வரும் உன்
தொலைபேசி அழைப்புகள் கூட
நம்முடைய உன்மத்த கூடலையே ஒத்திருக்கின்றன
சொற்களால் அதிகம் பேசாத நம்மிடம்
தீராத தாபத்தைத் தவிர என்ன இருக்கிறது
வேறு என்ன வேண்டும் மூர்க்க உதடு கவ்வல்களையும்
அவசர ஆடை அவிழ்ப்புகளையும்
தாளவொண்ணா உடல் ஈர்ப்பையும் தவிர, என வினவுகிறாய்
நாம் சந்தித்த கணத்தின் மாயாஜாலத்தில்
நாகலிங்க மரம் தன் மலர்களை
உதிர்த்துக்கொண்டிருந்தது
அப்படித்தானே எல்லாக்காதல் கதைகளிலும்
ஒரு மலர்க்காட்சி வருகிறது
நான் உதிர்ந்த நாகலிங்கப் பூக்களின் மேல்
படுத்திருந்த பூனையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
நீ நினைப்பது உண்மைதான்
காதல்கதைகளில் பூனை அசந்தர்ப்பமாய் வரக்கூடாதுதான்
நீ கடல் நீல உடையணிந்து
மருத்துவமனையின் இதயமானியின் அலைகள் போல
உன் கூந்தல் அலைவுற வந்துகொண்டிருந்தாய்
இந்த சொற்ப வரிகளிலேயே உன் கூந்தல்
இரண்டாவது முறை வந்துவிட்டது பார்
உனக்குத் தெரியுமா அப்போது நான்
உற்றுப்பார்த்தலைப் பற்றி
யோசித்துக்கொண்டிருந்தேன்
கனலும் நெருப்பை,
உதிரும் பூவை,
அலையடிக்கும் கடலை
யாருடைய தோளிலோ சாய்ந்து
உற்றுப்பார்க்கும்போது அது ஏன் வேறு ஏதோ சொல்கிறது
இங்கே நான் புதுமைப்பித்தன் ஏன் ஜேக் லாண்டனை
மொழிபெயர்த்தான் என்றுதான் சொல்ல விரும்பினேன்
பூனையை உற்றுப்பார்த்தது பின்னால்தான் வந்திருக்க வேண்டும்
ஆனால் பாதகமில்லை
மொழிபெயர்ந்த கதை என்னவென்று மறந்துவிட்டது
லாண்டன் ஒரு குடிகாரன் போதையில் அடிக்கடி கடலில் மூழ்கியவன்
பூனையின் ஒவ்வொரு அசைவும்
அது தூக்கத்திலிருந்து இறப்பிற்குள் சுதந்திரமாய்
சறுக்கிச் செல்ல விரும்பியது போல இருந்தது
நீ ஏன் அப்போது என்னை விழுங்கிவிடுவது
போல பார்த்தாய்?
நான் உதிர்ந்த நாகலிங்கப்பூவை எடுத்து
உன்னிடம் தன்னிச்சையாய் நீட்டினேன்
உற்றுப்பார்த்தலில் அறிதலின் பளிச்சிடல் கூடிவரும்
நீயும் நானும் ஸ்தம்பித்து ஒருவரை ஒருவர் பார்த்து நின்றோம்
இன்று எனக்கு என்ன புதிதாய் தெரிந்தது
என நீ வியக்கக்கூடும்
நகரத்தின் குப்பைவண்டிக்கு புதிய
பாடலைச் சேர்த்திருக்கிறார்கள்
சொத்துவரியை கட்டவேண்டும் என்ற அதிகாரக் கூக்குரல்
நீ வழக்கம் போல் என் உதடுகளில்
உன் ஒற்றை விரல் வைத்து என்னைப் பேசவிடாமல்
தடுக்கக்கூடும் நமக்கிடையேதான் சொற்களில்லேயே
உன் தழுவலை, உன் இச்சையை
நான் இரட்டிப்பாக்க விரும்புகிறேன்
அதன் சேதாரங்களுக்கான
சொல்வெளியைக் கூட்டுகிறேன்
எனக்கும் என் கண்ணாடி பிம்பத்திற்கும் இடையே உள்ள
இடைவெளி எனக்கு உறுத்தலாக இருக்கிறது
நான் வெறும் உடலல்ல
எனவும் சொல்ல நினைக்கிறேன்
வேறு யார் நான் உனக்கு
வேறு யார் நீ எனக்கு என்றும்
எனக்குத் தெரியவில்லை
ஆனாலும் இதுதான் எவ்வளவு
இனிமையான ஆத்மார்த்தம்
பூனை எழுந்து சென்றபோது
அது அந்த நாகலிங்க மரத்தையே தன்னுடன் எடுத்துசென்றது
வாலினை மேல் நோக்கி நிமிர்த்தியபடி
சுவர்களைப் பற்றி ஆரம்பித்தேன் ஆனால் தொடரவில்லை
அவை பழமையானவை
அவை வெடிப்புகளும்
மறைப்புகளும் நிறைந்தவை
அவற்றால் சூழும் மாயை
நம்மிடையே இல்லை
ஒவ்வொரு முறையும் நாம்
பூமி அதிர படுக்கைக்கு விரைகிறோமில்லையா
அதை இயக்கும் உயிர்விசை ஒரு புதிர்
அதை அப்படியே வைத்திருப்போம்
நீ ஒரு முறை ஒரே ஒரு முறை
என்னை ‘கடலைமிட்டாய்” என்றழைத்தாய்
அது போதும் எனக்கு

Friday, June 10, 2022

ஊஞ்சல் மண்டபம் —— கவிதை/ தனிநபர் நாடகம்

 ஊஞ்சல் மண்டபம்

——

கவிதை/ தனிநபர் நாடகம்

——-

ஆயிரமாயிரமானோர்

கூடிக் கலையும்

ஊஞ்சல் மண்டபத்தில்

சமநிலை எங்கேயிருக்கிறது

ஆயிரமாயிரமான கதாபாத்திரங்கள்

கதைகளாகும்

யாளித் தூண்களின் நடுவே

சம நோக்கு எங்கேயிருக்கிறது

யாரை நோக்கி இந்தக் கேள்விகளைக்

கேட்பேன் நான்

யாரிடமிருக்கிறது

சமநிலைக்கான அக்கறைகள்

என் கன்னக்கதுப்புகளில்

துறவறத்தின் ரேகைகள்

தோன்றிவிட்டனவா

நீ அடையாளம் கண்டுவிட்டாயா

நான் எப்போதுமே மண்டபத்துக்கு

வெளியில் நிற்பவன்தானே

இறைவனின் கல்யாண கோலமும்

கூட்ட நெரிசலும் கலைய

எப்போதும் காத்திருப்பவன்

நான் முதலில் வருபவன் என்றாலும்

கடைசியில் தாமதமாய்ச் சென்றடைபவன்

எல்லாவற்றிலும் தாமதம் என்பதால்

என்னை நீ மறந்துவிடுவாய்

இரண்டு கண்ணாடிகளை

எதிரெதிர் நிறுத்தினால்

முடிவிலி உண்டாவதால்

எதுவும் மாறிவிடப் போவதில்லை

மேகங்கள் மிதக்கும்; தண்ணீர் ஓடும்

வழக்கம் போலவே

சாமி சப்பரங்களின் மூங்கில் கழிகள்

தரையில் விட்டுச் செல்லும்

வெற்றுப் பதிவுகளைச் சுற்றி சாமந்திகள்

தங்கள் மெல்லிய மஞ்சள் இதழ்களை

உதிர்த்துக் கிடக்கும்

மரத்தில் முழுமையாய் பிரகாசிக்கும்

நாகலிங்கப் பூக்கள்

நம் மென் தொடுகையில் சிதிலமாகி

இதழ்கள் பரப்பிக் காய்வதில்லையா

அவ்வளவுதான் நம் ஊஞ்சல்

மண்டபக் கூடுகையென

யாளிகள் அறியும்

இந்த மேடை தவறுகள் மலிந்தது

மேடை எனும்போதே தவறுகள்

தன் போக்கில் வந்து கூடி விடுகின்றன

எத்தனை பேர் கூடினார்கள் இங்கே

ஒற்றைக் கால் கொலுசை விட்டுச் சென்றவள்

வீடெது என்று தெரியாமல்

கூட்டத்தில் தொலைந்தவர்

சந்தேகக் கேசில் கைதாகி

மனம் பிறழ்ந்தவர்

யாரைச் சொல்ல யாரைச் சொல்லாமல் விட

தாமதமாய் வந்த எனக்குத்தான்

எல்லாம் தெரியவருகின்றன

யாளிகள் ஏன் தங்கள் குறிகளைத்

தாங்களே வாயில் வைத்து

சுவைத்தபடி இருக்கின்றனவென

எனக்குத் தெரிவதில்லை

சுய மோகத்தின் உச்சம்

சுய போகத்தின் எச்சம்

என நீ எனக்கு அறிவுறுத்தக்கூடும்

ஊஞ்சல் மண்டபத்தின்

முடிவிலி இறுதிப் புள்ளியில்

யாளித் தூண்கள் நம் பார்வைக்கு

இணைவதைப் பார்க்கிறோமில்லையா

அது போலவே சுய மோகத்தில்

நானும் நீயும் இணையக்கூடும்

நாம் ஏன் ஒரு மாற்றத்திற்காக

பிறரைப் பற்றிப் பேசக்கூடாது

அந்த மனம் பிறழ்ந்தவரைப் பற்றி

நம் மௌனங்களின் மையம் அவரல்லவா

நாம் ஏன் கணமேனும் இந்த

மேடையையும் மண்டபத்தையும்

விட்டு விலகி இருக்கலாகாது

மண்டபத்தைக் கூட்டிப்

பெருக்குபவர்கள் வந்துவிட்டார்கள்

அவர்களிடமேனும் நாம் சொல்லலாம்

இந்த மண்டபத்திற்குப் பின்னுள்ள

மூங்கில் வனம் உனக்கும் எனக்கும்

புல்லாங்குழல்கள் ஆவதில்லை

ஆனால் அவன் குழலிசையைக்

கேட்டவண்ணம் இருக்கிறான்

நாம் மேடையிலிருந்து, மண்டபத்தின்

மையத்திலிருந்து உனக்கு

இசை கேட்கிறதா என்று கேட்டோம்

அப்போது அவன் சிரித்தான்

இசை கேட்கவில்லையா என்று கேட்டோம்

அப்போதும் அவன் சிரித்தான்

அவனுடைய விலகி

இருத்தலின் சிரிப்பில்

இசைத்தூண்கள் அதிர்கின்றன

நந்தவனத்தில் கிளிக்கூட்டம்

பெரும் மகிழ்ச்சியில் கிறீச்சிடுகிறது

கோவில் குளத்தில் மீன்கள்

நீர் மேல் எழும்பி காற்றில்

கோலம் வரைந்து நீர் மீள்கின்றன

என்ன நிமித்தங்கள் இவையென

நீயும் நானும் திகைத்திருக்கிறோம்

கூட்டுபவர்கள் விளக்குமாறுகளை

தங்கள் உள்ளங்கைககளில் குத்திக்குத்தி

வியந்து நிற்கிறார்கள் அவர்கள்தானே

நம் மண்டபப் பார்வையாளர்கள்

பேதலித்தவனோ குபேர லிங்க

சன்னிதியில் நின்றிருக்கிறான்

அவன் நம்முடன் இருந்தவன்தானே

என்கிறாய் நீ

இருக்கட்டும் நாம் அவனைப் பற்றி

பேசுவதை நிறுத்திவிடுவோம்

என்கிறேன் நான்

அவன் இப்போது உள்ளூரா வெளியூரா

நம் ஆளா வேற்று ஆளா

நம்மாள் என்றால் பேசலாம்

இல்லாவிட்டால் மறந்துவிடலாமென்கிறாய்

அதை நீ சொன்னவுடன்தான்

எனக்கு ஞாபகம் வருகிறது

நானே மண்டபத்திற்கு வெளியில்

நிற்பவன் அல்லவா

அப்படித்தானே நாம்

பேச ஆரம்பித்தோம்

நான் எப்போதுமே

தாமதமாய் வந்து சேர்பவன் அல்லவா

நான் உன்னோடு மேடையில்

ஏறியது தப்பாகிவிட்டது

நான் அவனோடுதான் செல்லவேண்டும்

அவன் தான் என்னைக் கடலுக்குக் கூட்டிப்போவான்

சித்தம் பேதலித்தவன் நம்மோடு இருந்தவன்

வெளிறிய நீல அலைகளைக் கொண்ட கடல்

எவ்வளவு தூரம் இங்கிருந்து

அவன் உள்ப்பிரகாரகரம் நோக்கித் திரும்பிவிட்டான்

அவன் பெயரைக்கூட நான் மறந்துவிட்டேன்

மண்டபமும் யாளிகளும் ஏற்படுத்திய கிறக்கம்

அவன் தன் பரட்டைத் தலையை

சிலுப்பிக்கொள்கிறான்

ஊஞ்சல் மண்டபத்தில் எத்தனை பேர் இருந்தார்கள்

எத்தனை பேரை நான் தேர்ந்தெடுத்திருக்கலாம்

நான் ஏன் உன்னை விடுத்து இவனோடு செல்கிறேன்

அவன் மூலஸ்தானத்தை நோக்கி விரைகிறான்

கடல் கூட்டிச் செல்பவனே கொஞ்சம் நில்

கொஞ்சம் நில்

உன் பெயரை மட்டுமாவது சொல்

சம நிலை எங்கேயிருக்கிறது எனத்

தேடி வந்தவன் நான்

அவன் என்னைத் திரும்பிப் பார்க்கையில்

மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன

அவன் மெதுவே சொல் கூட்டுகிறான்

என் பெயர் சந்தேகக் கேஸ்

யாளிகள் கற்தூண்களாய்ச் சமைகின்றன