Showing posts with label இலக்கிய விமர்சனம். Show all posts
Showing posts with label இலக்கிய விமர்சனம். Show all posts

Sunday, June 7, 2015

அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’ - எஸ். சண்முகம்

எஸ்.சண்முகம் 
அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’ - எஸ். சண்முகம்

1


    மொழியுள் உறையும் புனைவை கதைசொல்லி இடம்மாற்றி முன்னும் பின்னுமாக நகர்த்தி சுயபிரக்ஞையின் எல்லையில் வாசகனை நிற்க வைத்து கண்களுக்கு அப்பால் உள்ள கதையுலகை காட்சிப்படுத்தும் கதைகள்தான் அபூர்வமானவை. எழுதப்படும் கதையில் மற்றொரு கதையின் சுவட்டை அழிப்பாக்கம் செய்வதும், அழிப்பாக்கத்திலிருந்து மீளுரு கொள்ளும் எழுதப்படும் கதையின் கதையாடல் எம்.டி.முத்துக்குமாரசாமியின் ‘பெண் வேடமிட்ட பெண்’. தன்னுணர்வின் எல்லைகளை யத்தனிப்பின்றி கடப்பதும், மீண்டும் அதிலேயே உழல்வதும் மொழிப்பித்தத்தின் பாதப்பதிவுகளாய் நீள்கிறது எம்டிஎம்மின் கதையாடல். பிரதியின் மூன்று மொழிவெளிகள் -ஹம்ஸேஸ்வரி, ஜெயராஜ், கதைசொல்லி- இவைகளிடையே நிகழ்ந்து கலைந்த கதையாடல்களை மறுபடியும் சீட்டுக்கட்டை கலைத்து மீள்பரப்பில் ஏற்படும் புதிய வகைமாதிரிகளின் எண்ணற்றதன்மையில் புனைவு விரிகிறது. இம்மூன்று பிரதியின்மொழிநிலைகள் ஒன்றையொன்று அடுத்ததின் வெளியை மீறியும் பகிர்ந்தும் சொல்லும் பரஸ்பரத்தில் கதையாகித் திளைக்கிறது ‘பெண் வேடமிட்ட பெண்’.

Adrian Moore's 'Erasure'


    கதையின் வடிவத்தை எழுதி அதற்குள்ளிருக்கும் எதிர் வடிவத்தை கதையாடல்களில் சொல்லிச்செல்வது நவீனத்துவம் பிறழும், நவீனத்துவத்துக்குப் பிந்தைய பொருண்மையைப் பிரதிப்படுத்தும் இக்கதையில் நிகழ்கிறது. கதையாடலின் மொழி வேடத்தில் கதை என்ற வகையைச் சார்ந்த அம்சம் தன்னையிழந்த சொல்லுதல்களாக சேகரமாகின்றன. மூன்று புள்ளிகளிலிருந்து சுழித்து, வெளிப்படும் கதையாடல் வெவ்வேறு பிரதியின் சகநிகழ்வுகளாக கதையுறுகிறது. மூன்று கதைகளின் மூன்று எதிரெதிர் புள்ளிகளின் மறுசொல்லல் ‘பெண் வேடமிட்ட பெண்’ணின் கதைமொழி. மூன்று வட்டங்கள் முக்கோண நிலைப்புள்ளிகளில் தன்னை மற்றமையோடு புணரும் மொழிவெளியை கதையாடலாக்கும் வினோத விளையாட்டு எம்.டி.எம்மின் புனைவு. தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் கதையை நமக்குச் சொல்கிறது இவரின் கதையாடல். 





2


    ஒரு நிகழ்வை முன்னிறுத்தி முன்நிகழ்வாகப் பார்த்தல் கதையின் நுட்பம். எழுதும் கதியில் எழுதப்படும் பிரதியியல் குறி தன் முன்னே வார்த்தையாகி நிற்பதை பன்மைப்படுத்துதல் எனலாம்.
“சந்தோஷத்தை விகார இளிப்பில் காட்டியபடி, காதை மலைமேட்டில் அழுத்தி, மண்டியிட்டு படுத்துக்கிடந்தவனுக்கு கொலுசுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. இதயத் துடிப்பை காலில் கட்டியல்லவா பெண்கள் நடக்கிறார்கள் என்றபடி நிமிர்ந்தவனின் முன்னே காலில் கொலுசுகளுடன் ஹம்ஸேஸ்வரி நின்றிருந்தாள், ஹம்ஸேஸ்வரி”

    இந்தக்குறிப்பில் வெளிப்படும் ஹம்ஸேஸ்வரியின் உடலியத்தின் நிலையின்மையைச் சொல்லும் மாற்றுக் கதையாடலை இதன்மேல் அடுக்கிச் செல்வதைப் பாருங்கள்.

    “எழுதிக்கொண்டிருந்த சந்திரன் கதையை நிறுத்திவிட்டு வெளியே பார்த்தான். ஆமாம் பெண் வேடமிட்ட பெண்’ பூமிதானென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கதைப்பிரதி எழுதும் தருணத்தில் அசட்டையாக நிகழும் பார்த்தலில் கதையே பூமியுருவாக தோற்றம் கொள்ளுதல் பிறரின் வார்த்தையில் பொருளடைதல் கதைசொல்லியின் பாதத்தில் உண்டாகிறது. அப்படியெனில் கதைசொல்லியின் இடையீட்டுப் பார்த்தலில் மொழி ஸ்தூலம் பெறுகிறது. கதைசொல்லியின் இப்பார்த்தல்போல்தான் கதைப்பிரதியின் வாசகனின் வாசிப்புக்கிடையே நிகழ்ந்துவிடும் பார்த்தல். அதன் மூலம் கதை பொருள்பெறுகிறது. இது ஒவ்வொரு அநித்திய கணத்தில் நிகழ்கிறது.

    “என்னை நீ கைவிடமாட்டாய், எதிர்காலமாய் எனவே சாவாகவும் இறந்தகாலமாக எனவே மதமாகவும் விளங்கும் மேற்குதிசையிலிருந்து உன் வெப்ப மூச்சுடன் கூடிய மந்திரக்குரல் ஒலிக்கிறது.”

    மந்திரக்குரலின் மொழி லயத்தில் ஹம்ஸேஸ்வரி பிரதிக்குள் மிதக்கிறாள். இப்படி பிடிபடும் ஹம்ஸேச்வரியின் என்ற ‘குறி’யின் உடலியம் - புறவயம் எப்படி சுட்டப்படுகிறது கதையின் போக்கில்….

    “ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸேஸ்வரி ஹம் என்பது அகத்தையும், அகம் இயற்கையின்வழி தன்னைதானே பொருளாக பார்த்துக்கொள்வதையும் குறிக்கட்டௌம். ஸே என்பது இப்படி பிரபஞ்சத்தில் இயக்கத்திலிருக்கும் சக்தியை குறிக்கட்டும்…..
ஹம்ஸாத்மன் அகமும் புறமும் இணைந்த தன்னிலையாக எட்டு இதழ்களுடைய தாமரையாக மலரட்டும். ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே ஹம்ஸே”

    எம்.டி.எம்மின் கதையில் வரும் ஹம்ஸேஸ்வரி என்ற குறியின் பிரதியியல் வடிவத்தின் வரைபடும் மேரற்காட்டப்பட்ட பத்தியின் வரிகள் குறி அகமாகவும் சுயம்பார்த்தல் -பிரபஞ்ச சக்தியை குறித்தல்- இயற்கையின் பெரு விஸ்தீரணத்தில் மீண்டு மனமாதல் ஆகியவற்றை சுட்டுகின்றன இந்தப் பிரதியில் காணப்படும் குறியின் கதையாடலில் அகம் இயற்கை பொருளின் மீதேற்றப்பெறும் அபூர்வ மீள்வாகிறது. 


3


    மொழியால் பீடிக்கப்ப்பட்ட மற்றமையின் ‘குறி’ ஜெயராஜ். திக்கின்றி அலையும் ஒரு பருண்மையின் அகம் இவன். தன்னைத்தாண்டிய ஒன்றைத் துரத்திக்கொண்டே செல்லும் இவனது தடம் வடிவமற்றது. காற்றில் பதியும் ஒலியின் படிவமாக கதையுள் திரிகிறான் ஜெயராஜ். ஹம்ஸேயை யார் என அறியும் ஆகர்ஷத்தோடு கதையாடலை நகர்த்துபவன். “அறிவுக்கு அப்பாற்பட்டதை அறிவு வழி காண முயன்றதும்’ என்ற தன்னிலையை சுழற்றி வீசி திரிபவனான இவனது பைத்தியம் கதையின் ஓரங்களை தீர்மானிக்கிறது. வழமையான சட்டகங்களில் பிடிபடாதவை இவனது மொழி அலைவில் சிக்குகின்றன. தனது உள்ளுருவின் புறவய பிடித்தலாக ஹம்ஸேயை எழுதுகிறான்.

    “ஹம்ஸே என்ற பெயரில் பழங்குடிப்பெண் யாருமில்லை என்பதைக் கண்டறிந்தேன். இருந்தபோதிலும் எனக்கு எல்லா பழங்குடிப்பெண்களுமே ஹம்ஸேஸ்வரியாகத் தோன்றினர். விடுமுறை நாட்களில் சமவெளிக்கும் நகரங்களுக்கும் சென்று வந்தபோது அங்கேயுள்ள பெண்களும் ஹம்ஸேஸ்வரிகளாகத் தோன்றினர். மொத்தத்தில் உலகிலுள்ள அத்தனை பெண்களின் மீதும் மோகம் கொண்டவனானேன்”
   
    உலகின் அத்தனை மற்றமையரும் தனது பிரதிபலித்தலில் காணும் ஜெயராஜ் நிலப்பரப்புகளில் இடையே உள்ள வடிவ வேறுபாடுகளை கடந்து செல்கிறான். சமவெளிக்கும் நகரங்களுக்கும் மலைகளுக்கும் மாறி மாறி பிராயணப்பட்ட பிறகு மற்றமையின் உருக்கவில் ஒருமையுறும் குறியாக ஹம்ஸேஸ்வரியைக் காண்கிறான். அந்தத் தோற்ற பிறழ்ச்சியில் பயப்பட்டு ஜெயராஜ் ‘தான்’ என்ற நிலையை கட்டமைத்துக்கொள்கிறான். தனது பிரமையின் மன அலைகளில் தழைத்து வரும் ஒலி பிம்பமாக ஹ்மஸேயை உச்சாடனம் செய்து அதன் மிகையில் கரைந்து தன்னிலை அழிப்பாக்கத்தை பிரதியுள் செய்கிறான். இங்கு கதைசொல்லி யாரென்ற கேள்விக்கு இவனோ என்ற சந்தேகம் மேலெழுகிறது. ஆயினும் நகைமுரணை தலைகீழாக்கும் பிரதியியல் தந்திரம் இவனுடையதல்ல. கதைசொல்லியின் கதையாடலில் வரும்…

    “பௌர்ணமியன்று சூரியோதயம் காணப் புறப்பட்ட முட்டாள் நீ என்றாள் அவள்”
    இங்கே கதைசொல்லி அல்லாத ஒருவனான் ஜெயராஜின் நகைமுரண் தலைகீழாகிறது பாருங்கள். பௌர்ணமி அன்று சூரியனைப் பார்க்க கிளம்பியவன் பர்றிய மற்றொரு கதையாடல்…

    “பௌர்ணமிக்குள் குணமாகிவிட வேண்டும் என்றும் பிதற்றினான். அவனை குணமாக்கிவிடுவதாக ஆசுவாசப்படுத்திய நான் அவனுடைய முழுக்கதையையும் நான் கேட்டேன்” என்பதில் ஜெயராஜின் கதையைக் கேட்கும் மற்றொரு குரல் எது என கேள்வி நீள்கிறது. கதைசொல்லியை கதைகேட்போனாக தலைகீழாக்குதல் எம்.டி,எம்மால் நிகழ்த்தப்படுகிறது. கதைகேட்கும் கதைசொல்லியை வாசிக்கும் நாம் வாசகர்களா அல்லது கதைசொல்லியின் மற்றவைகளா?

4


    பிரதியின் நினைவிலியின் நிலவறையிலிருந்து தோன்றும் மென்னொளிக்கீற்று போல கதையாடல் ஆங்காங்கே குறியீட்டின் திசையைக் காட்டிச்செல்கிறது. நினைவின் பக்கங்களில் பல்கிப்பெருகும் ரேகையாய் ஹம்ஸேயின் பிரதி நுண்மையடைகிறது.. ஜெயராஜின் நோக்கமற்ற பிரயாணம் மெல்ல காரணத்தை அழித்த வெலியில் நுழைகிறது. மறதியின் தொடர்பற்ற நினைவுறுத்தல் போல கதையாடல் மொழியில் தட்டுப்படுகிறது. மற்றமையின் சொரூபம் இதுதான் என்று அறிந்திட முடியாத நுனியில்தான் வாசகன் தோன்றுகிறான். அப்படியெனில் கதைசொல்லியின் மற்றமை வாசகன். வாசகனின் மற்றமை கதைசொல்லி. ஒருவர் மாறி ஒருவராக கண்ணாடி முன் சொல்லிக்கொள்ளும் ஆடியில் மிதக்கும் பிம்பம்தான் இந்தக் கதைப்பிரதி. நம்மால் யூகிக்க இயலாதவைகள் இங்கு நிகழ்கின்றன. ஒரு பிம்பம் தன் நில எல்லைகளைத் தாண்டி வேற்று நிலப்பிரப்பில் வடிவம் பெர்றிருத்தல் ‘கதையின் யூகம்’ பிரதிப்படும் புள்ளி.

    “ஊரிலிருந்து என்னைப் பார்க வந்திருந்த என் இலக்கிய நண்பன் மூலமாக ஹம்சேச்வரிக்கென்று வங்காளத்தில் கோவில் ஒன்ரு இருப்பதாக அறிந்தேன். அந்தக் கோவில் தாந்த்ரீக முறைகளின்படி சுழல்பாதைகளால் அமைக்கப்பட்டதென்றும் அபூர்வமானக் கட்டிடக்கலையென்றும் என் நண்பன் தெரிவித்தான். ஜெயராஜிடம் இதைக் கூறியபோது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் ஆந்திராவிலும் கூட மனித மனங்களின் உள் அறைகளில் ஹம்ஸேஸ்வரியின் கோவில்கள் உள்ளன என்றான்”

    இங்கு மனித மனங்களின் உள் ளறைகளில் ஹம்ஸேஸ்வரிக்கு கோவில்கள் உள்ளன என்று சொல்கிறது கதையாடல். பருண்மையான குறிப்பீடாய் அனைத்து மலைகளிலும் இருக்கும் ஜெயராஜின் ஹம்ஸே குறிப்பீட்டு பன்மை. இதை கதைசொல்லி பெண் வேடமிட்ட பெண் புரியாத சங்கேதம் என்கிறான்.  கதைக்குள்ளிருந்து காணாமல் போகும் ஜெயராஜின் மறைவிலிருந்து மீண்டும் ஒரு கதை கிளைக்கிறது. குணமாகிவிட்ட ஜெயராஜ் மறைவதில் அவிழ்கிறது பெண் வேடமிட்ட பெண்ணின் சங்கேதம். மனவெளியின் கூக்குரலின் ஓசையின் லயத்தில் கதையின் அகஸ்மாத்து சுழற்சியில் திடீரென்று நிற்கும் ஹம்ஸேஸ்வரியால் மனங்களின் உள் அறைகளிலிருந்து ஒரு எதிர் நிலை பிரதி கட்டமைகிறது.

    “உடல் வெளியே கோவிலாய் சமைந்த ஹம்ஸேஸ்வரி கோவிலுள் நின்றுகொண்டிருக்கிறேன். ஏழு சக்கரங்களின் வழி வேப்பமரத்தாலான மூலஸ்தானம் நோக்கி ஏணிகள் இடப்பட்டுள்ளன. குழப்பமான சுழல் பாதைகளில் திகைத்து திகைத்து நிற்கிறேன். சக்கரப்பாதைகளில் சந்திர ஒளி இடது நாடியாகவும் சூரிய ஒளி வலது நாடியாகவும் என்னுள் துடிக்கிறது. இடா, பிங்களா, சூஷ்மணா, வஜ்ரஷா, சித்திரினீ என்று வழிகள் பெயரிடப்பட்டிருக்கின்றன. அகஸ்மாத்தாய் சுழலும் என் வழியில் திடீரென ஹம்ஸேஸ்வரி நிற்கிறாள்”
“நீங்கள் ஆணாயிருந்து இக்கதையை வாசித்தால் இக்கதைப் பனுவலே ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதை சொல்லியாகவும் நீங்கள் ஜெயராஜாகவும் உணர்வீர்கள்.
நீங்கள் பெண்ணாயிருந்து இக்கதையை வாசித்தல் இக்கதைப் பனுவலே ஜெயராஜாகவும் நீங்கள் ஹம்ஸேஸ்வரியாகவும் நான் கதைசொல்லியாகவும் உணர்வீர்கள்.
வேறு சிலர் வேறு விதமாக உணர்ந்தால் கதையின் ஆரம்பப்பீடிகையை தயவுசெய்து மீண்டும் வாசிக்கவும். தயவுசெய்து. “

    சுய பிரக்ஞையுள்ள எழுத்தின் வாசிப்புக்கான பிரயத்தனத்தில் புனைவு எழுகிறது. மூன்று நிலைகளிலிருந்து பிரதி மொழிப்படுகிறது. ஒவ்வொன்றின் வாசிப்பு சுழற்சியில் மற்றமைகளின் பன்மைகள் வெளிப்படுகின்றன. தன்மை மங்கி வாசித்தலில் கரைகிறது. மற்றமையின் உடலியல் பிரதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது எம்.டி.எம்மின் பிரதி. 







பெண் வேடமிட்ட பெண்


   


   

Monday, June 1, 2015

சுந்தரராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'-நுண் சித்தரிப்புகளின் கலை | தமிழ் 'தி இந்து' நாளிதழ் கட்டுரை










ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மொழி நாவல்களுக்கு க்ராஸ்வேர்ட் என்னும் அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிற்து. 2014-ம் ஆண்டுக்கான இந்த விருதை சுந்தர ராமசாமி எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் பெற்றிருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலின் ஆங்கில வடிவம் (மொழியாக்கம்: லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம்) விருது பெற்றிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நாவல் குறித்த மீள்பார்வை.

கட்டுரையை வாசிக்க தமிழ் 'தி இந்து' நாளிதழ் கட்டுரை சுட்டி கீழே:

http://tamil.thehindu.com/general/literature/நுண்-சித்தரிப்புகளின்-கலை/article7267485.ece?widget-art=four-rel 

Tuesday, December 30, 2014

இமையத்தின் சிறுகதைகள் திறக்கும் சாளரங்கள்


“சாவு சோறு”, இமையம், சென்னை, க்ரியா, 2014, பக்கங்கள் 160; விலை ரூபாய் 170; ISBN 978-93-82394-11-2

    இமையம் சமீபத்தில் எழுதிய சிறுகதைகளிலேயே ஆகச் சிறந்த எட்டு கதைகளின் தொகுப்பாக “சாவு சோறு” வெளிவந்திருக்கிறது. தலைப்பு “சாவுச்சோறு” என்று ஒற்றுப்பிழையின்றி இருந்திருக்க வேண்டும்; இதுதான் போகிறது என்றால், உள்ளடக்க பக்கத்தில் தலைப்புக் கதையின் பெயர் “சாறு சோறு” என்று பிழையுடன் அச்சாகியிருக்கிறது. க்ரியா பதிப்பகம் மெய்ப்பு திருத்துவதற்கும், புனைவுகளை திருத்துவதற்கும் பெயர்போன பதிப்பகமாயிற்றே தலைப்புகளே இப்படி பிழைகளுடன் இருக்கின்றனவே என்ற எரிச்சலுடனே கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன் நல்ல வேளையாக கதைகள் ஏமாற்றவில்லை அதன் பிறகு வேறு பிழைகளும் (இருக்குமானால்) கண்ணில் படவில்லை.

    வளங்களும் வகைமைகளும் மிகுந்த தமிழ்ச் சிறுகதை வடிவத்தில் என்ன பங்களிப்புகளைச் செய்கின்றன இமையத்தின் சிறுகதைகள்? புதுமைப்பித்தனும், ஜி.நாகராஜனும் ‘பார்ப்பதை பார்த்துக்கொள், கேட்பதை கேட்டுக்கொள்’ என்று நிர்த்தாட்சண்யமாய் தமிழ் சமூகத்தின் எந்த யதார்த்தத்தின் சாளரங்களைத்  திறந்துவிட்டு நின்றார்களோ அதே சாளரங்களைத்தான் இமையமும் அதே நிர்த்தாட்சண்யத்தோடு திறக்கிறார்.ஆனால் அவர் புதுமைப்பித்தனை போல கதை மாந்தர்களைப் பற்றியோ கதைச் சம்பவங்கள் பற்றியோ எந்த கருத்தையும் சொல்வதில்லை ஜி.நாகராஜனைப் போல பங்கேற்பின்மையின் அலட்சியத்தோடு நிற்பதுமில்லை. இமையம் திறக்கின்ற யதார்த்தத்தின் சாளரங்கள் வழி, உண்மையில், நாம் பார்ப்பது குறைவு, கேட்பது அதிகம். இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளிலுமே கதை மாந்தர்கள் தங்கள் சுயவரலாறுகளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மற்றவர்களிடம் சொல்கிறார்கள். வாசகர்களாகிய நாம்  தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியைக் பார்ப்பவர்கள்/கேட்பவர்கள் போல அவர்களின் சுயவரலாறு கூறுதலை நாமும் கேட்கிறோம். எட்டு கதைகளில் விதவிதமான சுய வரலாறு கேட்கும் சந்தர்ப்பங்கள். 

    தலைப்புக் கதையான ‘சாவு சோறு’ கதையில் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாய் தன் மகள் அம்சவள்ளியைத் தேடிச் செல்லும் மூதாட்டி பூங்கோதை தான் சந்திக்கும் கமலா என்ற ஒரு பள்ளிக்கூட துப்புறவுத் தொழிலாளியிடம் தன் கதையைச் சொல்கிறால். இருபத்தைந்து பக்க கதையில் இந்த உரையாடல் கதை சொல்லல் பதினோராவது பக்கத்தில்தான் ஆரம்பிக்கிறது. அதுவரை அவல் பள்ளிக்கூட வாசலில் நிற்றல், ஆட்டோ பிடித்து கமலா வேலை செய்யும் பள்ளிக்கு வந்து சேர்தல் என்று கதை நகர்கிறது. கமலாவுக்கும் ஏகப்பட்ட வேலைகள் அவளும் ஏதோ ஒரு கண பரிதாபத்திலேயே பூங்கோதையை மரத்தடியில் உட்கார வைத்து உரையாட ஆரம்பிக்கிறாள். பூங்கோதை சொல்வதோ நெஞ்சை உலுக்கும் கதை. பூங்கோதையின் மகள் வேறு சாதிக்காரனை காதலித்தது விபரீத சண்டையாகிவிட அவளுக்கு பூங்கோதை குடும்பம் அவள் உயிரோடு இருக்கும்போதே கருமாதி செய்துவிடுகிறது; அந்த சாவுச்சோறையும் சாப்பிட்டுவிட்டே பூங்கோதை மகளைத் தேடி அலைகிறாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படுகிறது. கதையை கமலாவைப் போலவே நாமும் கேட்கிறோம். கதையைக் கேட்ட கமலா சொல்கிறாள் :” இந்த நெலமயில நீ இங்க வந்தது மகா தப்பு. கிளம்பு. ஊட்டுக்குப் போயி சேரு. முலய அறுத்திட்டாங்க. மொட்ட அடிச்சிடாங்கன்னு சொல்ற. எனக்கு பயமா இருக்கு.சேதி கெடச்சா சொல்றன். முதல்ல நீ ரோட்டுக்குப் போயிடு” கமலாவின் எதிர்வினையைப் போன்றதாகத்தான் நம்முடைய வாசக எதிர்வினையும் இருக்குமா? பூங்கோதை சொல்கிறாள்: “அவனுகளா அவள வவுத்துல வச்சியிருந்தானுவ? அவனுவுவளா அவளுக்கு பாலு கொடுத்தானுவ? பீ, மூத்தரத்த அள்ளிக்கொட்டுனானுவ? அவளோட பீ மூத்தரத்துணிய அலசிப்போட்டானுவ? என் வவுத்திலிருந்து வெளியே வந்து பூமியில வியிந்ததிலிருந்து அவனுவுவளா அவ கூட படுத்திருந்தானுவ? அவளுக்கு அவனுவவளா உசுர கொடுத்தானுவ? அவளுக்கு நாந்தான சீவி வுட்டன். சீல கட்டி வுட்டன். அவ தீட்டுத்துணிய நாந்தான அலசிப்போட்டேன். எல்லாக் கருமாதியயயும் நாந்தான செஞ்சன்? அதனால தான் அலயுறன்”. பூங்கோதை எழுந்து பித்திச்சி போல நடக்க, கமலா பள்ளிக்கூடத்தின் ‘குளோசிங்’ மணியை அடிக்க, கதையும் முடிந்துவிடுகிறது.  

    சுய வரலாறு என்ற இலக்கிய வடிவம், கேட்கும் சூழ்நிலைகளில் என்ன மாதிரியான பொறுப்புணர்வைத் தோற்றுவிக்கின்றனவோ அதற்கு நிகரான சக மனிதனின் கதைக்கான பொறுப்புணர்வினையே வாசிக்கும்போதும் தோற்றுவிக்க வேண்டும். தலித் இலக்கியம் அகில இந்திய அளவில் பரவிய முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டவை பெரும்பாலும் நிஜமான சுய வரலாறுகளே என்பது இங்கே நினைவு கூரத்தக்கது. தேசத்தலைவர்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோரின் சுய வரலாறுகளும் அந்த வடிவத்தைக் கொள்வதனாலேயே வாசிப்போரின் அகமாற்றத்தினையும் சகமனிதனுக்கான பொறுப்புணர்ச்சியையும் உண்டாகத்தக்க வல்லமை உடையதாக இருக்கின்றன. ஆனால் ஏழை எளிய மனிதர்களின் சுய வரலாறுகளைக் கேட்கும் பொறுமையும் அதைத் தொடர்ந்து எழுகின்ற பொறுப்புணர்ச்சியையும் ஏற்றுக்கொள்கிற பக்குவமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? கதையில் வரும் கமலாவைப் போல கதை கேட்டு முடிந்தவுடன் ‘குளோசிங்’ மணியை அடித்துவிட்டு போய்க்கொண்டே இருக்கக்கூடியவர்கள்தானா நாம்?

    இல்லை, சுய வரலாறு ஒன்றினைக் கேட்பது என்பது ‘திருட்டுப் போன பொண்ணு’ கதையில் வருவது போல வேறு யாருக்கோ அந்நியருக்கு நடந்த துயர சம்பவங்கள் என ஆவணப்படுத்துவதற்குரிய மானுடவியல் தருணங்கள் மட்டும்தானா? ‘திருட்டுப் போன பொண்ணு’ கதையில் அமெரிக்காவிலிருந்து கதை சேகரிக்க வரும் மானிடவியலாளன் டேவிட்டிற்கும் அவனுடைய உள்ளூர் உதவியாளனுக்கும் திருட்டுப் போன பெண் தன் சுய வரலாற்றினை  சொல்கிறாள். வயதுக்கு வந்த போது வேறொரு பெண் என்று நினைத்து மாமன்காரன் கூட்டம் ஒன்று அவளைத் திருடிச் சென்றுவிட்டு ஆள் மாறாட்டம் தெரிந்தவுடன் அவளை விட்டுவிட்டுப்போய்விடுகிறது. திருடு போனதால் பட்டப்பெயர் பெறும் அவளுக்கு மண உறவிற்கான தெரிவுகளே இல்லாமல் போய் தனிக்கட்டையாய் இருப்பதை அவள் தன் வரலாறாய்க் கூறுகிறாள். தன் வீட்டுக்கு வழி காட்டும் பெண்ணிடம் “போயி எவனாயாவது புடிச்சிவச்சிக்க இல்லன்னா ஒம் பூட்டுக்குத் தொறக்கோலு கெடைக்காது” என சொல்வதில் ஆரம்பித்து பொண்ணு கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பாலியல் இச்சையைக் கொண்டிருக்கும் நகைச்சுவையை வெளிப்படுத்துகிறாள்.   தேவமார் சாதியைச் சேர்ந்த பாண்டி என்பவனோடு அவளுக்கு ஏற்பட்ட ‘இது’வைச் சொல்லும்போது “தேவமாரு பெரும் கூட்டம். அடிதடி வெட்டுக்குத்துக்கு அஞ்சாத சாதி. எங்க எனம் அப்படியில்ல. தெனம் ஒரு ஊருக்குப் போற கூட்டம். எங்க ஆளுவோ சண்டைக்கு போவ மாட்டாங்க. வலுவில்லாத கூட்டாம். நாடோடிதான?”  என்பதிலிருந்து தன் சாதியான கம்பளத்து நாயக்கர் சாதியில் “ தோக்கலவாரு, சில்லுவாரு, ஒட்ட நாயக்கரு, தொட்டி, பசாலின்னு மொத்தம் ஒம்போது இருக்கு. ‘ஒம்பது கம்பளத்தாரையும் விளங்கிடச் செய்வா ஜக்கம்மா’ன்னு ஒரு பாட்டு இருக்கு. அந்த ஒம்போதுல ஒண்ணுதான் கட்டபொம்மு” என்று சொல்வது வரை மானிடவியல் தரவுகள் கதை முழுக்க விரவிக்கிடக்கின்றன. ‘திருட்டுப் போன பொண்ணு’ போன்ற சுய வரலாறுகளைக் கேட்டு அகம் நெகிழாத சமூகத்தில் அவள் தனிமையில் அனாதையாய் இறப்பதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும். “கனிஞ்சபழம் அயிவிப்போயிடும் இல்லியா? அதான் எங்கதெ. பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். மருமகளா, நாத்தனாரா, கொழுந்தியாளா, பாட்டியா ஆவ மாட்டன். மன்ணாத்தான் ஆவன். சோத்தப் போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்கமாட்டான்னு இருந்திட்டன். இது என்னோட தலயெழுத்து, என்னோட கவல. நாந்தான் அழுவணும். இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்” என்று பொண்ணு சொல்வதோடு கதை முடிகிறது.

    சுயவரலாறுகள் அனைத்துமே மானிடவியல் தரவுகளாக மட்டுமே மதிப்பு பெறும் சமூகத்தில் ஒரு வேளை அவை கடவுளிடம் மட்டுமே சொல்லத் தகுந்தவையோ? இமையத்தின் ‘ஆகாசத்தின் உத்தரவு’ கதையில் திருடன் ஒருவன் குல சாமியிடம் தன் கதையைச் சொல்கிறான். திருடன் ‘ஆகாச வீரன்’ என்ற சாமியின் பெயரால் ‘ஆகாசம்’ எனப் பெயரிடப்பட்டவன். ஆகாசவீரன் திருடனை முன்னொரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றியிருக்கவில்லை.”அன்னிக்கி வாங்குன அடிய நெனச்சா இப்பியும் வலிக்குது. கூட்டத்திலிருந்து என்னெக் காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங்காலுக்கு ஓடுறதுக்கு தெம்பக் கொடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்கு குலசாமின்னு இருக்க? ஆகாசவீரன்னு ஒனக்கு எந்த மயிராண்டி பேரு வச்சான்?” என்று புகார் சொல்வதில் ஆரம்பிக்கிறது திருடனின் கதை. அவனுடைய கவலை “இதென்ன பழய காலமா? சோளக்கதிர அறுக்கிறது. நெல்லுக் கதிர அறுக்கிறது பூசிணிக்காய, பரங்கிக்காய அறுக்கிறதுன்னு அறுத்தாந்து சோறு திங்கறதுக்கு. இப்பத்தான் எல்லா பயளுவுளும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கேர்ந்து கதிர அறுத்தாந்து சோறு திங்குறது? கோழி திருடறது, ஆடுமாடு திருடறது, மோட்டார் கொட்டாயில கரண்டு கம்பி திருடறதுன்னு எல்லாம் செஞ்சி பாத்தாச்சி. எல்லாம் ஒரு வார சோத்துக்குகூட தேறமாட்டேங்குது” என நீள்கிறது. ஆனால் அவனுக்கு ஆகாசவீரனை விட்டால் வேறு கதியில்லை. வேப்பிலைகளைப் பரப்பி சகுனத்திற்காகக் காத்திருக்கிறான். கிடைத்த சகுனம் நல்லதுதான் என்ற நம்பிக்கையில் திருடக் கிளம்பிச் செல்கிறான்; அவனை ஆகாசவீரன் கைவிட்டானா காப்பாற்றினானா என்று நாம் அறிவதில்லை.
    பேயாய் மாறி, பேய்பிடித்தவளின் வழி, பேயோட்டிக்கும் சமூகத்திற்கும் தன் வரலாறைக்கூறுதல் நிச்சயம் குவார்ட்டர் பிராந்தி பெறுமளவு பயனளிக்கக்கூடியது. ‘பத்தினி இலை’ கதையின் முதல் பத்தியே முழுக்கதையும் சொல்லிவிடுகிறது: “கண்ணாலத்துக்கு மின்னாடி நம்ப மேற்காலத் தெரு ஒத்தக் கண்ணன் மவ தனசெல்விய வச்சியிருந்தன்னு யாரோ ஊருல காயடிச்சிவுட்டிருக்காங்க. அதெக் கேள்விப்பட்டு, தாலி கட்டுண மூணாம் மாசத்திலிருந்து கோலம் கட்டி அடிக்கறா. ஊர சிரிக்க வைக்கிறா. ஊருல என்னெப் பங்கப்பட வைக்கனும். அவ ஆச. அதுக்குத்தான் இந்தப் பேயி புடிச்சிக்கிச்சிங்கிற கூத்து”. சேகரின் மனைவியின் மேல் இறங்கியிருக்கும் தனசெல்வியின் பேயை நொண்டிக்கருப்பனை வைத்து அடக்க முயற்சிக்கிறான் பேயோட்டி. பேய் குவார்ட்டர் பிராந்து வாங்கிக் குடித்துவிட்டு ஊரில் உள்ள அத்தனை கள்ளத் தொடர்புகளையும் தன் கதையோடு சேர்த்து அம்பலப்படுத்திவிடுகிறது.

    ஊளை, புலம்பல், ஒப்பாரி என்று மட்டுமே இருக்கும் இமையத்தின் முந்தைய கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டு ஆழ்ந்த நகைச்சுவையை வெளிப்படுத்துகின்றன ‘பத்தினி இலை’யும் ‘ஆகாசத்தின் உத்தரவு’ம். ‘சாவு சோறு’, ‘திருட்டுப் போன பொண்ணு’ கதைகளிலும் தன் வரலாறு சொல்வதற்கு பின்னால் இருக்கும் இழிவின் நிர்ப்பந்தத்தைப் பார்த்து நகைப்பது கதைகளின் அடிநாதமாய் இருக்கிறது.

    ‘வரம்’ கதையில் தன் கதையை கடவுளிடம் சொல்லி அழுவதற்கான கடும் சூழ்நிலை பெரியநாயகத்திற்கு இருக்கிறது. வேடப்பசாமியின் முன்னால் கதறும் பெரியநாயகம் “நெருப்பு எரியுறாப்ல என் நெஞ்சு வேவுதே அது கூடமா ஒனக்குத் தெரில? சொந்த பெரியப்பன் மவன்கூட ஓடிப்போய்ட்டாளே. அம்மாம் மதாச்சாரமா? ‘அவ பொச்சில நெருப்ப வாரிக் கொட்ட, மத்து கழியால குத்த’ன்னு சனங்க சொல்ற சொல்ல என்னால கேக்க முடியல. ஊசியால குத்துறப்புல இருக்கு. உசுரு போறாப்ல இருக்கு. எனக்கு வாய்ப்பூட்டு போட்டு ஊமையாக்கிப்புட்டியே. மூணு நாளா நான் செத்துப் போயிருப்பன். நான் சாவக்கூடாது. நான் சாவ மாட்டன். அவ சாவணும்” என்று தன் மகள் சாக வரம் கேட்கிறாள். பெரியநாயகம் சாவதற்கு வரம்தான் கேட்கிறாள் ‘பரிசு’ கதையிலோ ராமசாமி சாகவே துணிந்துவிடுகிறார். இத்தனைக்கும் ராமசாமிக்கு பெரியநாயகம் அளவுக்கு நெருக்கடியான சூழ்நிலை இல்லை.

    வாத்தியார் வேலையில் ஓய்வு பெற்றபின்பு அவரிடம் இருக்கும் சேகரநிதியை பேரக்குழந்தைகளுக்கு செலவழிப்பதில்லை என்ற மருமகளின் புகார்களில் மனம் கசந்துவிடும் ராமசாமி தன் அண்ணன் மகளிடம் தன் முழு சுய வரலாற்றினையும் சொல்லிவிட்டு, சேமிப்பு பணத்தை மகனுக்கும் மருமகளுக்கும் பரிசாக கொடுத்துவிட்டு சாகச் செல்கிறார். “பூங்காவனத்தையும் வண்ணாண் வீட்டையும் கைவிட்டுவிடாதே”,  “நம்ம ஊட்டு வாசல்ல அன்னம் கேட்டு ஏனத்த நீட்டுனவங்களுக்கு இல்லைன்னு மட்டும் சொல்லிடாத.’இப்படியாப்பட்ட புள்ளயவா நீ பெத்த’ன்னு எமன் என்னெ செக்குல போட்டு ஆட்டி சித்ரவத செய்வான். சாட்டயால அடிப்பான். பல்லிகுழில, அரணக் குழில தள்ளிடுவான்’ என்ற அம்மாவின் இறுதி அறிவுரைகள் நினைவுக்கு வர அவற்றையும் நிறைவேற்றிய பின்னரே ராமசாமி சாகச் செல்கிறார். இது போல எல்லா கதைமாந்தர்களுமே அறுபடாத பாசப்பிணைப்பில் கட்டுண்டிருக்கிறார்கள். பல கோர துன்பங்களுக்குப் பின்னரும் பாசத்தின் தளைகள் தளறுவதில்லை.

    ‘ராணியின் காதல்’, ‘பேராசை’, ‘அரசாங்கப் பள்ளிக்கூடம்’ ஆகிய மூன்று கதைகளிலும் இதர ஐந்து கதைகளைப் போல கதாபாத்திரங்கள் தன் சுய வரலாறு கூறுதல் இல்லை. ‘ராணியின் காதல்’ கதையில் ராணியும் ராஜாவும் ஒரே சாதி, ஒரே தெரு. ஒன்றாகவே படிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் காதல் நிறைவேறுவதில்லை. ராணி வேறொருவனுடன் மணமாகி பிள்ளைகள் பெற்று பல வருடங்கள் கழித்து ராஜாவை சந்தித்து கடன் கேட்கிறாள்.  அவனோடு லாட்ஜ் தவிர வேறெந்த இடத்திற்கும் கூடச் செல்ல தயாராயிருப்பதாகச் சொல்கிறாள். ராஜா தன் கழுத்து செயினை அடமானம் வைத்து அவள் கேட்ட பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறான். ராணியின் காதல் இப்படி இருக்கிறதென்றால் கோகிலாவின் ‘பேராசை’ தனியாக கழிப்பறை இருக்கக்கூடிய வீட்டு வசதியுள்ளவனை மணமுடிக்கவேண்டும் என்பதாக இருக்கிறது. கூட்டாக, கிராமத்தின்  திறந்தவெளியில் மலம் கழிப்பதில் அவள் அருவருப்படைகிறாள். எல்லா கிராமத்து வரன்களையும் நிராகரிக்கும் அவள் அரசாங்க வேலையில் இருக்கும் செல்வமணியை குடும்பத்தாரின் அறிவுறுத்தல்களையும் மீறி மணம் முடிக்கிறாள். கூவத்துக்கு அருகே மூன்று பாய் அளவு மட்டுமே இருக்கக்கூடிய குடிசையையும், ஒன்பது குடித்தனங்களுக்குப் பொதுவாய் இருக்கக்கூடிய கழிப்பறையையும் பார்த்து கோகிலாவுக்கு அடி வயிற்றிலிருந்து ஆத்திரமும் அழுகையும் பொங்கி வருகிறது. இந்தக் கதைகளையும் நாம் மானிடவியல் தரவுகளைத் தருகின்ற கதைகளாகத்தான் வாசிப்போமா? 

    இமையத்தின் கதைகளில் அலங்காரங்கள் இல்லை, உவமான உவமேயங்கள் இல்லை, நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்ற பகுப்பில்லை, ஆனால் வட மாவட்டங்களின் பேச்சு மொழியில் வடிவ நேர்த்தியுடன் கதைகள் சொல்லப்படுகின்றன. அவை சொல்லப்பட்ட முறைகளால் தன் சுய வரலாறுகளை கதாபாத்திரங்களின் வழி சொல்லப்படுகின்ற தருணங்களால் கதைகள் உக்கிரமடைகின்றன; அவற்றை எதிர்கொள்ளும் வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதே கேள்வி.

Wednesday, July 16, 2014

கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி?




SamGyeTang








சாம்கைடாங் (SamGyeTang) என்ற கொரிய வேகவைத்த முழுக்கோழி சமைப்பதும் சாப்பிடுவதும் 


கோழிகளைப் போன்ற அப்புராணி பறவைகளாக இருந்தாலும் சரி இருவாட்சிகள் போன்ற அரிய வகைப் பறவைகளாக இருந்தாலும் சரி பறவைகளைப் பார்த்தவுடனேயே வாயில் ஊறுகிற எச்சில் அனுபவ ஆரோக்கிய அறிவு சார்ந்தாகும்; அந்த அனுபவ அறிவினை வெகுமக்கள் பறவையான கோழிகளிடத்தே பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. வேகவைத்த முழுக்கோழி உணவினை, ஜெயமோகனின் மகாபாரதம் வாசிக்கப்படுவது போல, கொதிக்க கொதிக்க சூப்போடு சேர்த்து குடிப்பதும் சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல பிரம்மஞானத்தைப் பெறுவதற்கும் உதவுகிறது. ‘முழுக்கோழியையும் அப்படியே சாப்பிடலாம்’ என குழந்தைகள் தொலைக்காட்சித் திரைகளில் கத்துவது பிரம்மஞானம் வேண்டியே.

தனுர் வேதம் முழுக்கோழியை பிடிப்பதற்கு வில்லும் தேவையில்லை நாணும் தேவையில்லை ஆனால் சொல் தேவை என்கிறது; சொல்லை அறிந்தவனே வில்லை அறிந்தவனாகிறான். சொல் புல்லில் இருக்கிறது பூண்டிலும் இருக்கிறது. புல்லையும் பூண்டையும் பார்த்தவுடன் எவன் மனதில் பக் பக் பக் என்ற ஒலி ஒலிக்கிறதோ அவனே ஓடுகின்ற இளம் கோழியினை பிடிக்க தகுதியுடையவன்  ஆகின்றான். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறானாம் என்ற முதுமொழியின் ஞானம் ஓடுகின்ற கோழியினை கைகளால் பிடித்து கண்களாலும் சமைத்தவனின் மனதில், வேதம் போல, அக தரிசனத்தில் தோன்றியதாகும். பாரத வர்ஷத்தினில் தோன்றிய இந்த கீழைத்தேய ஞானம் கொரிய தேசத்தில் பூரணம் அடைந்திருக்கிறது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்ற தனுர் வேத வான் மொழிக்கு ஏற்ப ஒரு வகை பக் பக் பக் அழைத்தலில் குஞ்சுகள் கூரையேறும் என்றால் மறுவகை பக் பக் பக் அழைத்தலில் அவை கழுத்து திருகப்பட்டு நீத்தார் உலகினை அடையும். 

முப்பது நாட்களுக்கு மிகாத வயதுடைய நானூறு கிராமிலிருந்து ஐநூறு கிராம் வரை எடையுள்ள கோழிகளே சாம்கைடாங் செய்ய ஏற்றவை. கைகளைப் பிசைந்து விரல்களை நெட்டி முறிக்கும்போதே கோழிக்குஞ்சுகளின் கழுத்தெலும்புகள் எதிர்காலத்தில் முறிபடுவதை அகத்தில் கேட்பவனே நம் ஞான மரபினை அறிந்தவனாவான். அதை ‘எடுத்தது பார்த்தனர் இற்றது கேட்டனர்’ என்பான் கம்பன். கொலை எனும் ஷத்திரிய ஞானம், அதன் துடிப்புகள் தன்னை பிடிக்கவரும் கைககளை அறியும் குஞ்சுகளின் கண்ணசைவுகளிலும் கழுத்துத் திருப்பல்களிலும் காணக்கிடைக்கலாம். கோழிக்குஞ்சுகளின் கழுத்துகளைத் திருகும்போது எழும் மழுக் மழுக் ஒலிகளின் பாடபேதங்களில் மனிதக் கழுத்துகளை அறிபவனே தூய ஷத்திரியன். கோழிக்குஞ்சு கழுத்துகளுக்கும் மனிதக்கழுத்துகளுக்கும் வில்லும் நாணும் எப்படி வித்தியாசம் பார்ப்பதில்லையோ அப்படியே விதியும் ஷத்திரிய விரல்களும் வித்தியாசம் அறிவதில்லை. சிவ தனுசின் கருணை கூட முழுக்கோழியும் மனித இரைப்பையினை அடைவதிலேயே பிரகாசம் அடைகிறது. 

கோழிகளைக் கழுத்தைத் திருகிக் கொல்வது சாம்கைடாங் செய்முறையில் எளிய ஆரம்பப்படிநிலையே ஆகும்; ஹருகி முராகமியின் நாவல்களில் வரும் கூலிக்கொலைகாரர்களைப் போல செகாவ்வின் நாடகங்களையும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளையும் படித்திருத்தல் நலம் பயக்கும். கொல்லாமையை விட கொலையே சிறந்த கலை என்ற நிதர்சனம் உறுதி பெறும்; நிதர்சனம் தரிசனமல்ல என்றும் அறிக. 

முழுக்கோழியையும் கழுத்துகளை முறித்து கொன்று மஞ்சளும் உப்பும் தடவி வைத்தபின் கோழி இறகுகளில் கிரீடம் செய்து சூட்டிக்கொள்தல் இறகுகளைப் பறக்க விட்டு வேடிக்கை பார்த்தல் பாரத வர்ஷத்தில் வழக்கத்தில் இல்லை. அப்பாவிகளின் கூறுபோடப்பட்ட ஆத்மாக்களே நாடாளும் ஷத்திரியர்களின் கிரீடங்களாகின்றன என்ற பழங்குடி முது மொழிகளுக்கு ஷத்திரிய ஆன்மிக பின்நவீனத்துவத்தில் இடமில்லை என்பதையும் அறிக. “ வேறு வழியில்லா” வீரபுருஷர்களுக்கு கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று திரும்ப திரும்பச் சொல்லி உருவேற்றிக்கொள்தலும் நலம். 

அரிசியை நாற்பது நிமிடங்கள் தூய நீரில் ஊறவைக்கவேண்டும். அன்னமயகோசத்திற்கு பெயர் கொடுத்த தானியம்.  ஊறிய அரிசியிலிருந்து பத்து நிமிட நேரம் நீரை வடிகட்டி நீக்கவேண்டும். இதற்கிடையில் ஓடும் நீரில் உரித்த கோழியினை உள்ளும் புறமும் கழுவி சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். உப்பும் மஞ்சளும் ஊறியிருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். வாலையும் கொழுப்பையும் சுத்தம் செய்யும்போது அபானனே ஸ்வாஹா என்று சுலோகம் சொல்லலாம். எட்டு லவங்கம், எட்டு பூண்டு, இரண்டு பச்சை வெங்காயம் ஆகியவற்றை நறுவிசாக பொடிப்பொடியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கின்செங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற அமுக்கிரான் கிழங்கின் வேர்களை தலையை வெட்டி மூன்று வைத்துக்கொள்ளவேண்டும். கின்செங் வேர்களும் கோழியின் கழுத்தும் தலையும் மனித ஆணுறுப்பும் பாம்பின் வடிவங்கள். ஒன்றோடு ஒன்று உறவாடி வீரியம் கொள்ளச் செய்பவை. தலைகளை வெட்டுவதலாலேயே அவை எழுச்சியும் துடிப்பும் அடைகின்றன. இனி ஏழு வகை நீர் நிலைகளிலிருந்து எடுக்கப்பட்ட மூலிகைககளை அவற்றுடன் சேர்ப்பது அவரவர் சௌகரியத்தைப் பொறுத்தது. நாங்கள் இன்றைய ஷத்திரியர்களாக்கும் என்று சாதிப்பெருமை போஸ்டர் ஒட்டுவதற்காக மகாபாரதத்தினை படிப்பவர்கள் கண்டிப்பாக ஆழ்கடலில் கிடைக்கும் கடல் தாவர மூலிகைககளை தாங்களே தங்கள் கைகளால் எடுத்து வந்து சேர்க்க வேண்டும் இல்லையென்றால்  பலன் ஏதும் இருக்காது. ஆனால் காவி கட்டி முட்புதரில் உட்கார்ந்து பிச்சையெடுக்கும் யோகம் உண்டாகும்.

போர்க்களங்களில் சங்கறுக்கும் சாணைதீட்டப்பட்ட கத்தியின் நுனி சோதித்தபின் உரித்த கோழியின் வெளித்தோல், தொடை, கால் பகுதிகள் ஆகிய இடங்களில் அவற்றை வாசகர்களின் கழுத்துக்கள் என்று நினைத்துக்கொண்டே கீறி ஆழமாக வெட்டவேண்டும்; நினைப்பு ஆழத்தினை அதிகமாக்கும். இவை இந்தியகலாச்சாரத்தினை கொரிய உணவு மூலமாக அறிய விரும்புகிற லட்சிய வாசகர்களின் கழுத்துக்கள் என்று நினைத்துக்கொண்டால் கீறல் எளிதாகும், ஆழம் அதிகமாகும். இப்படிக்கீறி ஆழமாக்கிய சதைப்பற்றினுள் ஊறிய அரிசி, பூண்டு, கின்செங், உலர்ந்த திராட்சை ஆகியவற்றைத் திணித்து பொதியவேண்டும். இப்படி பொதியும்போது “ஊன் உணவினாலானது, உணவு பிராணனால் ஆனது பிராணன் பிரம்மமானது’ என்று சொல்லிக்கொண்டே பொதிந்து கோழிக்கால்களை இடம் மாற்றி இறுக்கி சட்டுவத்துள் வைத்து தண்ணீர் ஊற்றி கடல் மூலிகையினங்கள் சேர்த்து மூடி வைத்து நீரிலும் ஆவியிலும் வேக வைக்கவேண்டும். 

வெந்த முழுக்கோழியினை உப்பு சேர்த்து சூப்போடு திபெத்திய தியானக்கிண்ணங்களில் வைத்து பரிமாறவேண்டும். கொரிய உலோக இணை குச்சிகளால் (chopsticks) முழுக்கோழி கால் மடக்கி உள்கிடக்கும் திபெத்திய தியானக்கிண்ணங்களைத் தட்டினால் ஓங்காரம் எழவேண்டும்; அப்படி ஓம் ஓம் என்ற நாதம் எழாவிட்டால் சமைத்த கோழியை அப்படியே தியான கிண்ணங்களோடு சேர்த்து ஜன்னல் வெளியே தூக்கி எறிந்துவிட்டு புதிதாக கோழி பிடிக்க கிளம்ப வேண்டியதுதான். புதிய தியான கிண்ணங்களை வாங்கும்போது நீரும் இறைச்சியும் நிரப்பினால் தட்டினால் உரசினால் ஓம் ஓம் என்ற ஒலி உண்டாகிறதா என்று சோதித்து வாங்குவது பசி பிழைக்க உதவும். போருக்குத் தயாராக இருக்கும் ஷத்திரிய இரைப்பை  பசி பசியென கூடவே எதிரொலிக்கும்போது சாப்பிட ஆரம்பிக்கலாம். மடங்கிய கோழியின் கால்களை உலோக இணைகுச்சிகள் துண்டிக்க இயலாதபோது உதவிக்காக தோட்டம் திருத்தும் பெரிய கத்திரிக்கோலை சாப்பாடு மேஜையில் உடனடியாக எடுக்க வசதியாக வைத்திருத்தல் நன்று.

தோட்டம் திருத்தும் பெரும் கத்திரிக்கோலால் திபெத்திய தியானக் குடுவைக்குள் கிடக்கும் மடங்கிய கோழியின் கால்களை நேர்த்தியாக வெட்டும்போது ‘சாப்பிடுதல் என்பது ஆயுதமேந்திய போர்’ என்று நீங்கள் புன்னகைத்து சுலோகம் போல முணுமுணுக்கலாம். “ஆமாம் ஆமாம் அவ்வாறே ஆகுக” என எல்லா உலகத்தின் ஆதி செவ்வியல் மொழிகளிலும் குரல்கள் ஆமோதித்து எதிரொலிக்கும். அதுவே பிரம்ம ஞானம்.