Tuesday, July 29, 2014

Cosmic creativity -- how art evolves consciousness: Alex Grey at TEDxMau...

முல்லா நஸ்ருதீனின் ஃபேஸ்புக் ஃபோட்டோ





முல்லா நஸ்ருதீனுக்கு தானும் ஒரு சுய புகைப்படம் (selfie) பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து ஆயிரக்கணக்கானவர்களின் விருப்ப சொடுக்குதல்களை வாங்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. “எல்லா புகைப்படங்களுமே சந்தைப்படுத்துதலின் நினைவுப்பரிசு. ஒரு புகைப்படம் எடுப்பது என்பது இன்னொரு நபரின் அல்லது பொருளின் மரிக்கக்கூடிய தன்மை, பலகீனம், கால அழிவு ஆகியவற்றில் பங்கேற்பதாகும். ஒரே ஒரு கணத்தை வெட்டியெடுத்து உறைய வைப்பதன் மூலம் எல்லா புகைப்படங்களுமே காலத்தின் அயராத உருகுதலுக்கு சாட்சியங்களாகின்றன” என்ற சூசன் ஸோண்டாக்கின் புகைப்படங்கள் பற்றிய மேற்கோளை வேறு முல்லா நஸ்ருதீன் படித்து தொலைத்ததிலிருந்து அவருக்கு தூக்கமும் போய்விட்டது. ‘காலத்தின் அயராத உருகுதலுக்கு’ ஏற்ப ஒரு சாட்சியத்தைத் தான் தயார் செய்து ஃபேஸ்புக்கில் பகிராவிட்டால் கால சாட்சியங்களே இல்லாமல் தான் காணாமல் போய்விடுவோம் என்று முல்லாவுக்கு அச்சம் பிடித்தாட்டத் தொடங்கிவிட்டது. 

புதுத்துணி வாங்கி அணிந்து, தாடி மீசையிலுள்ள நரைமுடிகள் எல்லாம் வெட்டி, தன் கழுதைக்குட்டியோடு நின்று சுய புகைப்படம் எடுப்பது என்று முல்லா துணிச்சலாய் தீர்மானித்தார். தாடி மீசையில் நரை முடி வெட்டி முடிப்பதற்கு உள்ளாகவே தன் கழுதைக்குட்டி அநியாயத்துக்கு வளர்ந்து ‘அடல்ட்’ கழுதையாகிவிடும்போல முல்லாவுக்கு தோன்றியது. கழுதைக்குட்டியைப் பார்த்து ‘காலத்தின் உருகுதல், காலத்தின் உருகுதல்’ என்று தினசரி கனைத்தார்.

ஒரு வழியாக நரை முடிகளெல்லாம் வெட்டிய பின்பு புதுத்துணி வாங்க பணமில்லை என்று முல்லாவுக்கு உறைத்தது. நல்ல வேளையாக முல்லா நஸ்ருதீனின் பக்கத்து வீட்டுக்காரர் பெரும் பணக்காரர். பெரும்பான்மை தமிழ்ப்படங்களில் வருவது போல தான் முஸ்லீம்களெல்லாம் தீவிரவாதிகளில்லை என்று தான் நினைப்பதாக அடிக்கடி ஃபேஸ்புக்கில் பம்மாத்து ஸ்டேட்டஸ் போடுபவர். அவர் நிச்சயமாக முல்லாவும் கழுதைக்குட்டியும் கொண்ட சுய புகைப்படத்திற்கு புதுத்துணி தருவார் அல்லது புதுத்துணி வாங்க பணம் தருவார் என்று முல்லா நம்பினார்.

பக்கத்து வீட்டுக்காரர் புதுத்துணி வாங்க பணம் தருவதாகவும் ஆனால் முல்லா இந்திய தேசபக்தியில் தலை சிறந்தவர் என்று தனக்கு நிரூபித்து காட்டவேண்டும் என்று நிபந்தனை போட்டார். முல்லாவுக்கு ஃபேஸ்புக்கில் சுயபுகைப்படத்தை பகிராவிட்டால் வாழ்வின் அந்திம கணமே வந்துவிட்டது போல இருந்ததால் எந்த நிபந்தனைக்கும் ஒத்துக்கொள்ள தயாராய் இருந்தார்.

பரீட்சை இப்படியாக இருந்தது. முல்லா ஒரு தென்னைமரத்தின் முன் நிற்கவேண்டும். பணக்காரர் மூன்று கத்திகளை முல்லாவை நோக்கி குறி பார்த்து வீசுவார். ஒவ்வொரு கத்தி வீச்சின் போதும் முல்லா வீரமாக முகத்தை வைத்துக்கொண்டு அந்தக் கத்தி வீச்சுகளை தன் தாய் திருநாட்டின் மீது வீசப்பட்ட கத்தி வீச்சுகளாகவே கருதி ‘பாரத மாதாக்கீ ஜே’ என்று கத்த வேண்டும். கத்திகள் முல்லாவின் எந்தெந்த ஆடைகளை கிழிக்கிறதோ அவையவைகளை வாங்க மாத்திரம் பணக்காரர் பணம் தருவார்.

முல்லா அசராமல் தென்னைமரத்தின் முன்னால் நின்றார். முதல் கத்தி வீச்சு முல்லாவின் ஜிப்பாவை கிழித்தது. இரண்டாம் கத்தி வீச்சு அவருடைய தலைப்பாகையைக் கிழித்தது. மூன்றாம் வீச்சில் இடைக்கச்சை கிழிந்து போனது. முல்லாவின் முகத்தில் துளியும் அச்சமில்லை. அவர் தியாக உணர்வோடு ‘பாரத மாதாக்கீ ஜே’ என்று மூன்று முறையும் உண்மையாகக் கத்தினார்.

பணக்காரர் ஜிப்பா, தலைப்பாகை, இடைக்கச்சை மூன்றுக்கு மட்டும் பணம் தந்தார். முல்லா பைஜாமாவுக்கும் சேர்த்து பணம் கேட்டார். ‘பைஜாமாவுக்கு என்ன சேதாரம்?’ என்று கேட்டார் பணக்காரர்.

“உள்ளே காலம் உருகிவிட்டது சார்” என்றார் முல்லா பரிதாபமாக.

காலம் உருகிய முல்லா நஸ்ருதீன் தன் கழுதைக்குட்டியோடு நின்று எடுத்துக்கொண்ட சுய புகைப்படம் இப்போது ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான விருப்பச் சொடக்குகளுடன் போடு போடென்று போடுகிறது. அந்த புகைப்படத்தில் முல்லாவின் முகபாவனை அப்படியே பக்கத்து வீட்டுக்காரரைப் போலவே இருப்பது கூடுதல் விசேஷம். 


Saturday, July 26, 2014

The Science of Kissing -- Science Study Break




Is a kiss just a kiss? In her new book, "The Science of Kissing," Sheril Kirshenbaum explores the real chemistry, history and biology behind one of humanity's fondest pastimes.
Kirshenbaum is a research associate with the Webber Energy Group at The University of Texas at Austin's Center for International Energy and Environmental Policy where she works on projects to enhance public understanding of energy issues

In each Science Study Break program you'll hear faculty members discuss realms of scientific possibility, evaluate presentations of science in popular culture, or mercilessly mock bad science and worse screenwriting.

Science Study Break is sponsored by the University Federal Credit Union.
  • C

Friday, July 25, 2014

"My Son, My Son, What Have Ye Done" di Werner Herzog, 2009

நண்பர் ஜெயமோகனுக்கு: மூலாதார ஆற்றல் சாத்வீக ஆற்றலே

அன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு,

நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல் (காமம்) சாத்வீக ஆற்றலாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற என்னுடைய டிவீட் மட்டுமே. 

நமது யோக மரபுகள் பெரும்பானவற்றில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை, சகஸ்ரம் ஆகிய ஏழு சக்கரங்களையும் உடலின் ஏழு புள்ளிகளில் இயங்கும் ஆற்றல்களாக உருவகித்து பல சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன; நீங்கள் பிரசுரித்தது போல நம் ஓவிய மரபுகளில் கிடைக்கும் இந்த சித்திரங்கள் பலவற்றை நான் சேகரித்தும் வைத்திருக்கிறேன். பிற்காலத்திலான இந்த சித்திரங்கள் ஏழு சக்கரங்களாக உருவகிக்கப்படும் மனித உடலில் செயல்படும் ஆற்றல்களை ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையாகவும் ஒரு சக்கரத்தினை கிழித்து மேல் நோக்கி எழுகிற குண்டலினி விசையே அவற்றைத் தொடர்புபடுத்துவதாகவும் பொதுக்கருத்து உருவாக காரணமாக இருந்தன; இல்லை இந்த வகை சித்திரங்கள் அவ்வாறாக உருவாகிவிட்ட பொதுக்கருத்தின் பிரதிநிதிகளாகவும் இருக்கலாம். 

ஆனால் பதஞ்சலியின் பிரம்ம சூத்திரம் ( குறிப்பாக சமாதிபாதம் -அதற்கு கிருஷ்ணமாச்சாரியார் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பும் உரையும் கூட இருக்கின்றன), திருமந்திரம், சௌந்தர்யலகிரி, ஶ்ரீவித்யா தியான முறைமை, கிரியா யோக மரபு ஆகியன உண்மையில் எழு சக்கரங்களில் இயங்கும் ஆற்றல்களும் இயற்கையிலேயே தொடர்புடைய ஒற்றை ஒளிநாக சக்தி என்றே உருவகிக்கின்றன. விநாயகரை முதன்மைக்கடவுளாகக் கொண்டு வளர்ந்த கணாதிபத்யம் கணபதியை மூலாதார சக்கரத்தின் கடவுளாக உருவகிப்பதும், அதை பிற மரபுகள் ஏற்றுக்கொண்டதும் நமக்கு தெரிவிப்பது என்னவென்றால் மூலாதார ஆற்றலை சாத்வீக ஆற்றலாக அறிவதில் நமக்கு உள்ள தடைகளை, விக்னங்களை கணபதி தியானம் விலக்கும்; நாசம் செய்யும் என்பதே.

இதன் தொடர்ச்சியும் சூட்சுமமும் என்னவென்றால் ஏழு சக்கரங்களும் அவற்றின் ஆற்றல்களும் உடலில் மூளையில் அடையாளம் காணப்படவேண்டும்; அல்லது மூளையின் நீட்சியாக முதுகுத்தண்டும் அதன் நரம்பு நீட்சிகளும் அறியப்படவேண்டும். காகபுசுண்டரின் பெருநூல் மனிதன் தலைகீழாக நட்டு வைக்கப்பட்ட செடி என்று மூளைக்குள்ளாகவும் அதன் நீட்சியான முதுகுத்தண்டினையும் அவற்றிலுள்ள சக்கர தொடர்புறுத்துதல்களையும் உருவகிக்கிறது. இந்த மூளை மைய அத்தனை சக்கரங்களிலும் இயங்கும் ஒற்றை ஆற்றல் என்ற கருத்தாக்கமே வைத்திய சாத்திரங்களிலும், களரி உள்ளிட்ட வர்மக்கலைகளிலும் காணக்கிடைக்கிறது.

மூலாதார ஆற்றலை சாத்வீக ஆற்றலாக அடையாளப்படுத்திய புத்தர் இதை  தன்னுடைய சாரநாத் உரையில் விளக்கி தர்மசக்கரம் சுழல்வது மனித உடலிலும் பிரபஞ்ச இயக்கத்திலும் தொடர்புற்றிருப்பதை சொல்கிறார். சமணம் மனித உடலிலும் பிரபஞ்சத்திலும் இயங்கும் ஜீவசக்தி மொழிவழி விரிவிலும் செயல்வழி ஒழுகிலும் லயம் பெறுவதைச் சொல்கிறது. மேல்சித்தாமூர் சமணக்கோவிலில் உள்ள சுவர்சித்திரம் இதற்கான சிறந்த விளக்கம்; சமண முனிவர்கள் தயாரித்த அகராதிகளின் பின்புல சிந்தனையும் அதுதான்.

ஒரு புத்தகமாக விரித்து எழுத வேண்டிய பொருள் இது. வெகு சுருக்கமாக எழுதியிருக்கிறேன் ஆனால் மூலாதார முதல் ஆற்றலே சாத்வீக ஆற்றல்தான் என்பதினை விளக்குவதற்கு இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.  

அன்புடன்


எம்.டி.எம் 

Wednesday, July 23, 2014

நீர் பிம்பம் நீதானா நீதானா | கவிதை



கடற்கரையோர கல்லறைக் கூரையில் 
காற்றில் சலசலக்கிறது தேங்கிய மழைநீர்
தானும் ஒரு கடல் என்ற நினைப்பில் 

யுவதிகள் வந்து செல்கிறார்கள்
ஜோடிகளும் கூடத்தான்
முகம் பார்க்க தலை கோத
வான்வெளியின் பிரதிபலிப்பில் 
வான் ஏக முகம் கலைய

கல்லறைக்குள்ளிருந்து தவிக்கின்றன 
என் கண்கள் 

கலையும் நீர் பிம்பம் நீதானா நீதானா

என் சிறுகதையில் ஒரு சிறுமி | கவிதை

பச்சை வயல்வெளிகளூடே அவளை 
தோளில் சுமந்து வரும் 
அதே கனவு
நான்காம் முறையும் 
திரும்ப வந்தபின்புதான் 
அந்தச் சிறுமியை 
என் சிறுகதையில் 
இறக்கி வைத்தேன்
தேக்குமர மேஜைக்கடியில்
அவள் பத்திரமாயிருப்பாள் 
என்று நம்பி 
கதையை முடிக்கமுடியவில்லை 
எழுபது வயது தாத்தா
அறுபது வயது மாமா
ஐம்பது வயது சித்தப்பா
நாற்பது வயது ஆசிரியர்
முப்பது வயது அக்காள் புருஷன்
இருபது வயது அண்ணா
அவள் வயது தோழன்
இன்னும் சிறிய சிறுவன்
யாரிடமும் அவளை
நம்பி ஒப்படைக்க முடியவில்லை
கடவுளர்களும் தேவதைகளுமோ 
கதைகளில் வருவதில்லை இப்போது
ஐந்தாம் முறை அதே கனவு வந்தால் 
தோளில் சுமந்த சிறுமியுடன்
அத்துவான வெளி நோக்கி நடையைக்கட்டலாம்
மகளவள்


Sunday, July 20, 2014

அம்மாவின் அஸ்தி கலசம் | கவிதை



அம்மாவின் அஸ்தி கலசத்தை 
மடியில் வைத்துக்கொண்டு 
கன்னியாகுமரிக்கு பயணம் செய்யும்போது
கார் அதிகமும் கனக்க  
ஊர்கின்றன சக்கரங்கள் 

கலசத்தின் வாயை மூடிய துணிக்கு
அம்மாவின் சேலை போலவே
மணம் 
படபடப்பு

சாம்பலில் அமிழ்ந்த சிறு
எலும்புகள் கலசத்தினுள்
முணுமுணுக்கும் 
விநோத இசைக்கருவி

என்ன செய்வான் இனி
இந்த பைத்தியக்கார பிள்ளை 

காரை நிறுத்தி
சாலையோரக் கடையில்
தேநீர் அருந்துகையில் 
பிறிதொருமுறை
கள்ள சிகரெட் பிடிக்கச் சென்ற
மகனின் வருகைக்காகக்
காத்திருந்தவளாகவே
இருக்கையில் வீற்றிருக்கிறது 
அஸ்தி கலசம்

இப்போது சிகரெட்டுக்கு வழியில்லை 
என்பதாக அரும்புகின்றன
வியர்வைத்துளிகள்
மொட்டைத்தலையிலும்
மழித்த உதடுகளிலும்

கடலலைகளில் நிலம் நோக்கி நின்று
முதுகு வழி கலசத்தினை 
கடலில் விட்டு
மூன்று முறை மூழ்கி
எழுகையில் 

விலகிச் செல்கிறது
பால் வாசம்

உருவாகி அழிகிறது
நீர்த்திவலைகளில் ஒரு புகார்

நிறுத்துதலின்றி விரைந்து வீடு திரும்புகிறது கார்

பின்னெப்படி மகிழம்பூ மரத்தடி சாம்பலில் 
அதே வாசம்
இலைகளில் 
அதே படபடப்பு
ஊடுறுவும் சூரியக் கதிர்களில் 
அதே முணுமுணுப்பும்
நீ எனக்கு கொள்ளி வைக்கவில்லை
என்ற கன்னியாகுமரி ஆவலாதியும்?

அதுவும்
இருபது வருடங்கள்
பதினோரு மாதங்கள்
மூன்று நாட்கள்
ஆறு மணி நேரம்
எட்டு நிமிடங்கள்
இரண்டு விநாடிகளுக்குப் 
பிறகு


Wednesday, July 16, 2014

கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி?




SamGyeTang








சாம்கைடாங் (SamGyeTang) என்ற கொரிய வேகவைத்த முழுக்கோழி சமைப்பதும் சாப்பிடுவதும் 


கோழிகளைப் போன்ற அப்புராணி பறவைகளாக இருந்தாலும் சரி இருவாட்சிகள் போன்ற அரிய வகைப் பறவைகளாக இருந்தாலும் சரி பறவைகளைப் பார்த்தவுடனேயே வாயில் ஊறுகிற எச்சில் அனுபவ ஆரோக்கிய அறிவு சார்ந்தாகும்; அந்த அனுபவ அறிவினை வெகுமக்கள் பறவையான கோழிகளிடத்தே பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. வேகவைத்த முழுக்கோழி உணவினை, ஜெயமோகனின் மகாபாரதம் வாசிக்கப்படுவது போல, கொதிக்க கொதிக்க சூப்போடு சேர்த்து குடிப்பதும் சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல பிரம்மஞானத்தைப் பெறுவதற்கும் உதவுகிறது. ‘முழுக்கோழியையும் அப்படியே சாப்பிடலாம்’ என குழந்தைகள் தொலைக்காட்சித் திரைகளில் கத்துவது பிரம்மஞானம் வேண்டியே.

தனுர் வேதம் முழுக்கோழியை பிடிப்பதற்கு வில்லும் தேவையில்லை நாணும் தேவையில்லை ஆனால் சொல் தேவை என்கிறது; சொல்லை அறிந்தவனே வில்லை அறிந்தவனாகிறான். சொல் புல்லில் இருக்கிறது பூண்டிலும் இருக்கிறது. புல்லையும் பூண்டையும் பார்த்தவுடன் எவன் மனதில் பக் பக் பக் என்ற ஒலி ஒலிக்கிறதோ அவனே ஓடுகின்ற இளம் கோழியினை பிடிக்க தகுதியுடையவன்  ஆகின்றான். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறானாம் என்ற முதுமொழியின் ஞானம் ஓடுகின்ற கோழியினை கைகளால் பிடித்து கண்களாலும் சமைத்தவனின் மனதில், வேதம் போல, அக தரிசனத்தில் தோன்றியதாகும். பாரத வர்ஷத்தினில் தோன்றிய இந்த கீழைத்தேய ஞானம் கொரிய தேசத்தில் பூரணம் அடைந்திருக்கிறது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்ற தனுர் வேத வான் மொழிக்கு ஏற்ப ஒரு வகை பக் பக் பக் அழைத்தலில் குஞ்சுகள் கூரையேறும் என்றால் மறுவகை பக் பக் பக் அழைத்தலில் அவை கழுத்து திருகப்பட்டு நீத்தார் உலகினை அடையும். 

முப்பது நாட்களுக்கு மிகாத வயதுடைய நானூறு கிராமிலிருந்து ஐநூறு கிராம் வரை எடையுள்ள கோழிகளே சாம்கைடாங் செய்ய ஏற்றவை. கைகளைப் பிசைந்து விரல்களை நெட்டி முறிக்கும்போதே கோழிக்குஞ்சுகளின் கழுத்தெலும்புகள் எதிர்காலத்தில் முறிபடுவதை அகத்தில் கேட்பவனே நம் ஞான மரபினை அறிந்தவனாவான். அதை ‘எடுத்தது பார்த்தனர் இற்றது கேட்டனர்’ என்பான் கம்பன். கொலை எனும் ஷத்திரிய ஞானம், அதன் துடிப்புகள் தன்னை பிடிக்கவரும் கைககளை அறியும் குஞ்சுகளின் கண்ணசைவுகளிலும் கழுத்துத் திருப்பல்களிலும் காணக்கிடைக்கலாம். கோழிக்குஞ்சுகளின் கழுத்துகளைத் திருகும்போது எழும் மழுக் மழுக் ஒலிகளின் பாடபேதங்களில் மனிதக் கழுத்துகளை அறிபவனே தூய ஷத்திரியன். கோழிக்குஞ்சு கழுத்துகளுக்கும் மனிதக்கழுத்துகளுக்கும் வில்லும் நாணும் எப்படி வித்தியாசம் பார்ப்பதில்லையோ அப்படியே விதியும் ஷத்திரிய விரல்களும் வித்தியாசம் அறிவதில்லை. சிவ தனுசின் கருணை கூட முழுக்கோழியும் மனித இரைப்பையினை அடைவதிலேயே பிரகாசம் அடைகிறது. 

கோழிகளைக் கழுத்தைத் திருகிக் கொல்வது சாம்கைடாங் செய்முறையில் எளிய ஆரம்பப்படிநிலையே ஆகும்; ஹருகி முராகமியின் நாவல்களில் வரும் கூலிக்கொலைகாரர்களைப் போல செகாவ்வின் நாடகங்களையும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளையும் படித்திருத்தல் நலம் பயக்கும். கொல்லாமையை விட கொலையே சிறந்த கலை என்ற நிதர்சனம் உறுதி பெறும்; நிதர்சனம் தரிசனமல்ல என்றும் அறிக. 

முழுக்கோழியையும் கழுத்துகளை முறித்து கொன்று மஞ்சளும் உப்பும் தடவி வைத்தபின் கோழி இறகுகளில் கிரீடம் செய்து சூட்டிக்கொள்தல் இறகுகளைப் பறக்க விட்டு வேடிக்கை பார்த்தல் பாரத வர்ஷத்தில் வழக்கத்தில் இல்லை. அப்பாவிகளின் கூறுபோடப்பட்ட ஆத்மாக்களே நாடாளும் ஷத்திரியர்களின் கிரீடங்களாகின்றன என்ற பழங்குடி முது மொழிகளுக்கு ஷத்திரிய ஆன்மிக பின்நவீனத்துவத்தில் இடமில்லை என்பதையும் அறிக. “ வேறு வழியில்லா” வீரபுருஷர்களுக்கு கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று திரும்ப திரும்பச் சொல்லி உருவேற்றிக்கொள்தலும் நலம். 

அரிசியை நாற்பது நிமிடங்கள் தூய நீரில் ஊறவைக்கவேண்டும். அன்னமயகோசத்திற்கு பெயர் கொடுத்த தானியம்.  ஊறிய அரிசியிலிருந்து பத்து நிமிட நேரம் நீரை வடிகட்டி நீக்கவேண்டும். இதற்கிடையில் ஓடும் நீரில் உரித்த கோழியினை உள்ளும் புறமும் கழுவி சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். உப்பும் மஞ்சளும் ஊறியிருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். வாலையும் கொழுப்பையும் சுத்தம் செய்யும்போது அபானனே ஸ்வாஹா என்று சுலோகம் சொல்லலாம். எட்டு லவங்கம், எட்டு பூண்டு, இரண்டு பச்சை வெங்காயம் ஆகியவற்றை நறுவிசாக பொடிப்பொடியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கின்செங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற அமுக்கிரான் கிழங்கின் வேர்களை தலையை வெட்டி மூன்று வைத்துக்கொள்ளவேண்டும். கின்செங் வேர்களும் கோழியின் கழுத்தும் தலையும் மனித ஆணுறுப்பும் பாம்பின் வடிவங்கள். ஒன்றோடு ஒன்று உறவாடி வீரியம் கொள்ளச் செய்பவை. தலைகளை வெட்டுவதலாலேயே அவை எழுச்சியும் துடிப்பும் அடைகின்றன. இனி ஏழு வகை நீர் நிலைகளிலிருந்து எடுக்கப்பட்ட மூலிகைககளை அவற்றுடன் சேர்ப்பது அவரவர் சௌகரியத்தைப் பொறுத்தது. நாங்கள் இன்றைய ஷத்திரியர்களாக்கும் என்று சாதிப்பெருமை போஸ்டர் ஒட்டுவதற்காக மகாபாரதத்தினை படிப்பவர்கள் கண்டிப்பாக ஆழ்கடலில் கிடைக்கும் கடல் தாவர மூலிகைககளை தாங்களே தங்கள் கைகளால் எடுத்து வந்து சேர்க்க வேண்டும் இல்லையென்றால்  பலன் ஏதும் இருக்காது. ஆனால் காவி கட்டி முட்புதரில் உட்கார்ந்து பிச்சையெடுக்கும் யோகம் உண்டாகும்.

போர்க்களங்களில் சங்கறுக்கும் சாணைதீட்டப்பட்ட கத்தியின் நுனி சோதித்தபின் உரித்த கோழியின் வெளித்தோல், தொடை, கால் பகுதிகள் ஆகிய இடங்களில் அவற்றை வாசகர்களின் கழுத்துக்கள் என்று நினைத்துக்கொண்டே கீறி ஆழமாக வெட்டவேண்டும்; நினைப்பு ஆழத்தினை அதிகமாக்கும். இவை இந்தியகலாச்சாரத்தினை கொரிய உணவு மூலமாக அறிய விரும்புகிற லட்சிய வாசகர்களின் கழுத்துக்கள் என்று நினைத்துக்கொண்டால் கீறல் எளிதாகும், ஆழம் அதிகமாகும். இப்படிக்கீறி ஆழமாக்கிய சதைப்பற்றினுள் ஊறிய அரிசி, பூண்டு, கின்செங், உலர்ந்த திராட்சை ஆகியவற்றைத் திணித்து பொதியவேண்டும். இப்படி பொதியும்போது “ஊன் உணவினாலானது, உணவு பிராணனால் ஆனது பிராணன் பிரம்மமானது’ என்று சொல்லிக்கொண்டே பொதிந்து கோழிக்கால்களை இடம் மாற்றி இறுக்கி சட்டுவத்துள் வைத்து தண்ணீர் ஊற்றி கடல் மூலிகையினங்கள் சேர்த்து மூடி வைத்து நீரிலும் ஆவியிலும் வேக வைக்கவேண்டும். 

வெந்த முழுக்கோழியினை உப்பு சேர்த்து சூப்போடு திபெத்திய தியானக்கிண்ணங்களில் வைத்து பரிமாறவேண்டும். கொரிய உலோக இணை குச்சிகளால் (chopsticks) முழுக்கோழி கால் மடக்கி உள்கிடக்கும் திபெத்திய தியானக்கிண்ணங்களைத் தட்டினால் ஓங்காரம் எழவேண்டும்; அப்படி ஓம் ஓம் என்ற நாதம் எழாவிட்டால் சமைத்த கோழியை அப்படியே தியான கிண்ணங்களோடு சேர்த்து ஜன்னல் வெளியே தூக்கி எறிந்துவிட்டு புதிதாக கோழி பிடிக்க கிளம்ப வேண்டியதுதான். புதிய தியான கிண்ணங்களை வாங்கும்போது நீரும் இறைச்சியும் நிரப்பினால் தட்டினால் உரசினால் ஓம் ஓம் என்ற ஒலி உண்டாகிறதா என்று சோதித்து வாங்குவது பசி பிழைக்க உதவும். போருக்குத் தயாராக இருக்கும் ஷத்திரிய இரைப்பை  பசி பசியென கூடவே எதிரொலிக்கும்போது சாப்பிட ஆரம்பிக்கலாம். மடங்கிய கோழியின் கால்களை உலோக இணைகுச்சிகள் துண்டிக்க இயலாதபோது உதவிக்காக தோட்டம் திருத்தும் பெரிய கத்திரிக்கோலை சாப்பாடு மேஜையில் உடனடியாக எடுக்க வசதியாக வைத்திருத்தல் நன்று.

தோட்டம் திருத்தும் பெரும் கத்திரிக்கோலால் திபெத்திய தியானக் குடுவைக்குள் கிடக்கும் மடங்கிய கோழியின் கால்களை நேர்த்தியாக வெட்டும்போது ‘சாப்பிடுதல் என்பது ஆயுதமேந்திய போர்’ என்று நீங்கள் புன்னகைத்து சுலோகம் போல முணுமுணுக்கலாம். “ஆமாம் ஆமாம் அவ்வாறே ஆகுக” என எல்லா உலகத்தின் ஆதி செவ்வியல் மொழிகளிலும் குரல்கள் ஆமோதித்து எதிரொலிக்கும். அதுவே பிரம்ம ஞானம்.



Monday, July 14, 2014

பறத்தலில் வீழ்தல் இனிது


“Most gulls don’t bother to learn more than the simplest facts of flight — how to get from shore to food and back again. For most gulls, it is not flying that matters, but eating. For this gull, though, it was not eating that mattered, but flight. More than anything else, Jonathan Livingston Seagull loved to fly.” - Richard Bach in ‘Jonathan Livingston Seagull’ நாவலை இலவசமாக தரவிறக்கி படிக்க: http://csermelyblog.tehetsegpont.hu/sites/default/files/angol%20sirály.pdf 

Diving Pelican 



எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று ஞாயிறு மாலை வேளச்சேரி நண்பர்கள் கூடும் மொட்டைமாடிக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்தேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பற்றி நான் இந்த ப்ளாக்கில் வெளியிட்டிருந்த கட்டுரையை ஒட்டி பேச்சு தொடங்கியது. நான் பறவை வல்லுனர் அல்லன் என்  பறவைகள் ஈடுபாடு கலை இலக்கியங்கள் சார்ந்தது மட்டுமே என்று விளக்கும்போது ரிச்சர்ட் பாக்கின் புகழ்பெற்ற நாவலான ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ பற்றி குறிப்பிட்டேன். கூடியிருந்த நண்பர்களில் ஒருவர் கூட அந்த நாவலை வாசித்திருக்கவில்லை என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று எந்த காரணத்தினால் முன் அனுமானம் கொண்டிருந்தேன்? 
ரிச்சர்ட் பாக்கின் ஜொனாதன் விவிங்ஸ்டன் கடற்பறவை எல்லா கடற்பறவைகள் போல அல்லது எல்லா பறவைகளையும் போல உணவுக்காக மட்டும் பறக்கின்ற பறவை அல்ல. பறத்தலின்பத்தினால்  பறவைக்கு பறத்தலென்ற செயலே எப்படி வாழ்தலாகிறது என்பதை ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ ஒரு நீதிக்கதை வடிவத்தில் சொல்கிறது. கலை என்றால் என்ன, வாழ்க்கையே கலையாவது எப்போது, கலை எதற்காக  கூட்டத்திலிருந்து விலகி தனியாக இருக்கவேண்டியதன் அவசியத்தை முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது ஆகியவற்றை ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ போல கவித்துவமாக சொன்ன வேறொரு கதை இல்லை. மிகுந்த உற்சாகத்தினையும், உத்வேகத்தினையும், கலை ஈடுபாட்டின்  மேல் அளப்பரிய நம்பிக்கையினையும் உண்டாக்குகிற கதை அது. 
நான் சொல்ல வந்தது ஆனால் ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்லுக்கான அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல. ஜொனாதன் கடற்பறவைக்கு நாவலின் ஆரம்பத்திலேயே அது பறப்பதற்குக் காரணம் உணவே என்று வலியுறுத்தி சொல்லப்படுகிறது; அந்த வலியுறுத்தலை மீறியே ஜொனாதன் இலக்கற்ற பறத்தலை வாழ்தலாக அடையாளம் கண்டுகொள்கிறது. என்னுடைய நோக்கம் வானில் மிதக்கும் பறவைகள் தங்கள் இரைகள் நோக்கி வீழ்வதிலுள்ள அழகையும் கம்பீரத்தையும் கவனப்படுத்துவதன் மூலம் ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ வழங்கும் வாசிப்பனுபவத்தை உங்களுடையதாக்கிக்கொள்ள கோருவதுதான்.

நான் பயணம் செய்த விமானம் வானத்திலிருந்து ஒரு முறை கீழே விழுந்திருக்கிறது.2000 ஆண்டில் சென்னையிலிருந்து விமானத்தில் கல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். மே மாதம். அந்தப் பருவத்தில் வருடந்தோரும் வங்காள விரிகுடாவில் தாழ்வழுத்த மண்டலங்கள் உருவாகும். பொதுவாகவே வங்காள விரிகுடாவில் கடல் இந்தியாவின் மேற்கிலிருக்கும் அரபிக்கடலைப் போல அமைதியானது அல்ல. வங்காள விரிகுடாவில் கடல் பல கொந்தளிப்புகளையும் புயல்களையும் வான வேடிக்கைகளையும் உருவாக்க வல்லது.  ‘வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்ற விஷ்ணு துதிக்கான வரி வங்கக் கடல் பற்றிய அனுபவத்தால் உண்டானது. பருவ மழையும் தாழ்வழுத்த மண்டலங்களும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் வங்காள விரிகுடாவிலும் அதையொட்டிய இந்திய நிலப்பகுதிகளிலும் வானில் பல air pockets என்று அழைக்கப்படுகின்ற தாழ்வழுத்த வெற்றிடங்களை உண்டாக்குகின்றன. 2000 வருடம் மே மாதம் நான் பயணம் செய்த விமானம் வங்காள விரிகுடாவின் மேல் வானத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய air pocket ஒன்றினுள் வசமாக மாட்டிக்கொண்டது.
இரை நோக்கி இறக்கைகள் மடக்கி வானில் இருந்து செங்குத்தாக கீழே விழும் பறவை போல எங்கள் விமானம் கீழே விழுந்தது. நடு வானில் அதன் வீழ்தலைக் கட்டுப்படுத்தி விமானி காற்றழுத்த அறையிலிருந்து வெளிக்கொணர முயன்றபோதெல்லாம்  விமானமே துண்டு துண்டாய் சிதறப்போவது போல அதிர்ந்து அடங்கியது. எந்த முன்னறிவிப்பும் இன்றி ஏற்பட்ட முதல் வீழ்தலிலேயே பயணிகள் அலற ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் முப்பந்தைந்து நிமிட நேரம் நீடித்த அந்த வீழ்தலும் பறத்தலும் யுகாந்திரமாய் நீடிப்பது போல தோன்றியது.  முதல் வீழ்தலிலேயே என் இருக்கைக்கு பின் இருக்கையில் இருந்த பெண்மணி ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று உச்ச ஸ்தாயியில் அலற ஆரம்பித்துவிட்டார். விமானம் முழுக்க  எழுந்த பயத்தின் கூச்சல்களை மீறி அவருடைய சத்தம் அதிகமாகக் கேட்டது. அவருக்கு இணையாக குழந்தையொன்றும் அலறியது. என் முன்னிருக்கையில் இருந்த நபர் விமானம் அமைதிப்படும்போதெல்லாம் நல்ல வேளை இது வங்க தேச விமானமல்ல வங்க தேச விமானமாயிருந்தால் மேற்புறங்களில் நீர் கசிந்திருக்கும் என்று அல்லாவுக்கு நன்றி சொன்னார். வேறொரு இருக்கையில் இருந்த நபர் விமானம் சிதறி எல்லோரும் இறந்துவிட்டோமென்றால் உறவினர்களெல்லாம் எங்கள் உடல்களைத் தேடும்போது எங்கோ அத்துவானக்காட்டில் போய் செத்துத் தொலைந்திருக்கிறான் பார் என்று எப்படியெல்லாம் திட்டித் தீர்ப்பார்கள் என்று சத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த அரைமணி நேர நரக வேதனையும் அச்சமும் நிறைந்த நிமிடங்களில் விமானத்தின் கேப்டனிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கிலேசமும் பயணிகளான எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 
விமானம் காற்றழுத்த வெற்றிடப் பொறியிலிருந்து தப்பித்து கல்கத்தா செல்வதற்கு பதிலாக அருகாமையிலிருந்த புவனேஷ்வர் சென்று தரையிறங்கியது.  பூமியைத் தொடுவதற்கு சற்று முன்னர்தான் விமான கேப்டன் ஒலிபெருக்கியில் முதல் முறையாக  அறிவித்தார்: “நாம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டோம். வானில் காற்றழுத்த வெற்றிடத்தில் நம் விமானம் சிக்கிக்கொண்டது. நான் வடக்கு, கிழக்கு, மேற்கு என்று ஒவ்வொரு திசையாய் மோதி வெளிவரப்பார்த்தேன். ஆனால் மூன்று திசைகளிலும் மேகங்கள் அடர்ந்து வழிவிடவில்லை. நல்ல வேளையாக தெற்கில் நமக்கு வழி கிடைத்தது. புவனேஷ்வரில் நாம் தரையிறங்குகிறோம். நான் உங்களை பயமுறுத்தவேண்டாம் என்றுதான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடாததற்கு மன்னிக்கவும். உங்கள் அனைவரையும் பத்திரமாக பூமியில் இறக்குவது எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வானில் இருந்து இரை நோக்கி கீழே விழும் பறவைகளுக்கு இது தினசரி அனுபவம். நமக்கு கடவுளின் ஆசி கிடைத்த பேரனுபவம்.”
புவனேஷ்வரில் விமானம் தரையிறங்கியதும் பயணிகளின் ஆனந்தக்கூச்சல் எழுந்தது. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் சிலர் பூமியை முத்தமிட்டார்கள்; சிலர் கீழே விழுந்து புரண்டார்கள்; ஆண்டவனின் கருணை என்று சிலர் முணுமுணுத்தார்கள். புவனேஷ்வர் விமான நிலையத்தில் எங்களை பத்திரமாகத் தரை இறக்கிய கேப்டனை சந்தித்து நான் நன்றி சொன்னேன். கேப்டன் ராக்கேஷ் ஷர்மாவின் முகத்திலும் கழுத்திலும் வியர்வை வெள்ளமாய் வழிந்திருந்தது. நான் கைகுலுக்கியபோது அவர் உடல் மெலிதாய் நடுங்கியதாய் நான் நினைத்தேன்.
வானத்தில் மேகங்கள் கலைந்துவிட்டபின் புவனேஷ்வரிலிருந்து கல்கத்தாவுக்கு விமானம் புறபடத்தயாரானது. ஆனால் என்னையும் வங்கதேசத்து பயணி இன்னொருவரையும் தவிர வேறு எவரும் அந்த விமானத்தில் மீண்டும் பயணம் செய்யத் தயாராக இல்லை. அனைவரும் ரயில் பிடித்து கல்கத்தா போவதாகக் கிளம்பிப் போய்விட்டனர். விமானப் பணிப்பெண்கள், கேப்டன் ராக்கேஷ் ஷர்மா, மற்றும் நாங்கள் இருவர் என ஒன்றாக நடந்து போய் விமானத்தில் ஏறினோம். ராக்கேஷ், “நீங்கள் இருவர் மட்டுமாவது மீண்டும் வருவது உற்சாகமாக இருக்கிறது. உங்களுக்கு பயமாக இல்லைதானே?” என்று கேட்டார். “உங்கள் திறமையில் நம்பிக்கையிருக்கிறது, ஆனால் உங்களுக்கு பயமாக இல்லையா?” என்று நான் திருப்பிக் கேட்டேன். “நாங்கள் பறவைகள், பறத்தலில் இனிது வீழ்தல்” என்றார் ராக்கேஷ். எங்களோடு நடந்த விமானப்பணிப்பெண்கள் உற்சாகமாக சிரித்தார்கள்.
புவனேஷ்வரிலிருந்து கல்கத்தா விமான பயணம் சுமுகமாக இருந்தது. நான் கல்கத்தாவிலிருந்து ஷில்லாங், பிறகு அங்கிருந்து அருணாசல பிரதேசத்திலுள்ள லோஹித் மாவட்ட கிராமங்கள் என்று பயணம் செய்ய ஆரம்பித்தேன். அருணாசல பிரதேசத்தின் காடுகளில் இருவாட்சிகளைப் பார்க்க மிஷிங் ஆதிவாசி நண்பர்களோடு சென்றேன். மிஷிங் ஆதிவாசிகளின் மூப்பர் செர்னாவ் மிரி என்னுடைய நல்ல நண்பர். செர்னாவ் மிரி இருவாட்சிகளை (hornbills) நுட்பமாகத் தெரிந்து வைத்திருப்பவர். அவரிடம் நான் விமானம் பறவை போல கீழே விழுந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தேன். செர்னாவ் மிரி இருவாட்சிகள் இரை நோக்கி கீழே வானில் இருந்து எய்த அம்பு போல இறங்கும்போது அவை உயிர் வெறுத்து உயிர் வாழ விழைகின்றன என்று சொன்னார்.
இருவாட்சிகளின் வாழ்வினைப் பற்றி செர்னாவ் மிரி எனக்களித்த நுட்பமான பார்வை ரிச்சர்ட் பாக்கின் நாவல் ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’லில் இல்லாதது; ஆனால் பாக்கின் நாவலை மீண்டுமொரு முறை வரி வரியாய் வாசிக்க வைத்தது.
பள்ளிக்கரணையில், வேடந்தாங்கலில், முப்பந்தலில், அருணாச்சலப்பிரதேச காடுகளில் ஏன் யுடூப் வீடியோக்களில் இரை பிடிக்க கீழே விழும் பறவைகளைப் பார்க்கும்போது நான் பயணம் செய்த விமானம் கீழே விழுந்த அனுபவம் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அப்படி கீழே விழுந்தபோது என் மனமும் உயிர் வாழும் இச்சையால், துடிப்பால் பீடிக்கப்பட்டதாக நான் கற்பனை செய்து கொள்கிறேன். பறத்தலுக்கான உந்துதல் அந்த இச்சையில் இருக்கிறது.
கோழிகள், தவிட்டுக் குருவிகள் போன்றவையும் பறவைகள்தான்; அவற்றிற்கு உயரப் பறந்து உயிர் வெறுத்து இரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 
உயிர் வாழ இச்சை நிறையும் மனதினையே அமிர்தகலசம் என்று புராணங்கள் உருவகித்ததாய் எனக்கொரு சம்சயம் உண்டு; அமிர்த கலசங்களை உயரப் பறக்கும் பறவைகள் தங்களகத்தில் கொண்டிருக்கின்றன.    



Saturday, July 12, 2014

சென்னையின் சிறுநீரகம்: பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

சென்னையின் சிறுநீரகம்: பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

NFSC யும் INTACH நிறுவனமும்  இணைந்து சென்னை நியு கல்லூரி வளாகத்திலுள்ள MEASI கட்டிடக்கலை கல்லூரியில் மூன்று நாட்கள் (ஜுலை 7,8,9, 2014) சென்னையின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாப்பது பற்றிய மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறையை நடத்தின. திருமதி தாரா முரளி, திரு. பி.டி. கிருஷ்ணன்,திரு.ரஞ்சித் டேனியல்ஸ் (www.careearthtrust.org), திரு. பரத் ஜெயராஜ், திரு. ஆர்.பி.அமுதன் மற்றும் நான் உரையாற்றினோம்.  திரு. ரஞ்சித் டேனியல்ஸ் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பற்றி ஆற்றிய உரையிலிருந்து பல புதிய தகவல்களையும் பார்வைகளையும் நான் கற்றுக்கொண்டேன்; இந்தக் கட்டுரையில் அவருடைய உரையிலிருந்து அறிந்த தகவல்களை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் கட்டுரைக்கு நானே முழுப் பொறுப்பு.
—————————————————————

Shared with thanks from https://www.flickr.com/search?text=pallikaranai&sort=relevance


பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒரு காலத்தில் இப்போது தரமணி டைடல் பார்க் இருக்கும் இடத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை விரிந்து கிடந்திருக்கவேண்டும்; மனித உபயோகத்தினால் சுருங்கி சுருங்கி ஆறு கிலோமீட்டர் விஸ்தீரணமுடைய சதுப்பு நிலமாய் இன்று குறுகிவிட்டது. இயற்கையாளர்களும் சுற்றுச்சூழலியலாளர்களும் ‘ஈர நிலங்கள்’ என வகைப்படுத்தும் நில வகைகளுள் சதுப்பு நிலங்களும் ஒரு வகையானதாகும். பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்களில் மரங்கள் வளர்வதில்லை; புல்லினங்களும் செடி வகைகளுமே அடர்ந்திருக்கின்றன. கடலிலிருந்து ஒரு கிலோமீட்டர் அருகாமையில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்தும் தூய நன்னீரை தன்னகத்தினுள்கொண்டும் திகழ்கிறது. ஒரு காலத்தில் நிலத்தடி ஈரக்கசிவுகளாலும், நீரோட்டங்களாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் அடையாறும் வேளச்சேரியின் ஏரிகளும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; இன்று கட்டுமானங்களாலும் வறண்டுவிட்ட ஏரிகளாலும் நிலத்தடி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இருந்தாலுமே நிலத்தடி கசிவுகளையும் நீரோட்டங்களையும் உள்வாங்கி வடிகட்டி கடலுக்கு எடுத்துச் செல்லும் பணியையும் கடல் மட்டம் உயரும்போது உள்வரும் உப்பு நீரை வடிகட்டி நன்னீரை அடையாறுக்கும் நிலத்தடி நீர் வளங்களுக்கும் சேர்க்கும் பணியையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் செய்கிறது; மனித உடலில் கழிவு நீரை அகற்றும் சிறுநீரகத்தின் பணியினைப் போன்ற பணிகளை சென்னை மாநகருக்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் செய்துவருவதால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை இயற்கையாளர்கள் சென்னையின் சிறுநீரகம் என்று அழைக்கிறார்கள். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுமையாக அழிக்கப்படுமென்றால் வேளச்சேரி, கிண்டி முதல் மடிப்பாக்கம் வரையுள்ள பகுதிகள் மழைக்காலங்களில் நீரில் மூழ்கும்; நிலத்தடி நீர் உப்பு நீராய் சீரழியும்; மண்ணின் தன்மை கெட்டு அதன் இறுகுத்தன்மை குலைய மௌலிவாக்கத்தில் சமீபத்தில் நடந்ததுபோல பாரம் சுமக்க முடியாமல் மண் இற்றுப்போக கட்டிடங்கள் இடிந்துவிழும். 

வானத்தில் செயற்கைகோளிலிருந்து பிடித்த புகைப்படங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இரண்டு கால்களில் நின்று இரண்டு கால்களை தூக்கிக்கொண்டிருக்கும் வாலில்லா சிங்கம் போல இருக்கிறது. அது சதுப்பு நிலமாய் உருப்பெற்று திரள்வதற்கு கோடானு கோடி வருடங்கள் ஆகியிருக்கவேண்டும். வேறு எந்த ஒரு தேசத்திலும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் போன்ற இயற்கையின் அற்புதம் வடிவம் கொள்ளுமென்றால் அதை தங்களுக்கு இயற்கை வழங்கிய கொடையாக, பாரம்பரியமாக கொண்டாடியிருப்பார்கள். 

மனிதர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ பறவைகளுக்கு பள்ளிக்கரணையின் மகத்துவம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. பருவ காலங்களில் நூற்று முப்பது பறவையினங்களை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணலாம். இந்தியத் துணைக்கண்டத்தின் நில விரிவில் இதுவரை 1300 பறவையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன; அவற்றில் பத்தில் ஒன்றினை பள்ளிக்கரணையில் காணலாம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. வேடந்தாங்கலை விட முக்கியமான பறவைகளின் புகலிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அறியப்படவேண்டும். ஐப்பசியிலிருந்து தை வரையிலான பருவ காலத்தில் நான் வசிக்கும் வேளச்சேரி பகுதியில் புது பறவைகள் தென்பட ஆரம்பித்தால் உடனடியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகளைப் பார்க்கச் செல்வதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன்.

மூன்று அல்லது நான்கு அங்குலமே அளவுடைய தேன்சிட்டு முதல் மூன்றடி நான்கு அடி வரை வளர்ந்திருக்கும் கூழைக்கடாக்களை (ஆங்கிலத்தில் பெலிக்கன்) நான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பார்த்திருக்கிறேன். மனித அக விழைவுகளே பறவைகளாகவும் அவற்றின் பல வகை பறத்தல்களாகவும் வெளித்தோற்றம் கொள்கின்றன என்று ஒரு கற்பனை எனக்கு உண்டு. அந்தக் கற்பனையின் வண்ணங்கள் ஒவ்வொரு முறையும் திரைச்சீலை ஓவியங்களெனவே தோற்றம்கொள்வதை பள்ளிக்கரணையில் பார்த்திருக்கிறேன். என் குழந்தைகளுக்கு பள்ளிக்கரணையின் பறவைகள் அளிக்கும் சந்தோஷம் அளப்பரியது. அவர்கள் தங்கள் அக விழைவுகள் வடிவங்கள் ஏற்பதற்கு முன்பாகவே அவற்றின் ஆனந்தங்களை பறவைகளாக அறிகிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு. அவர்களின் குழந்தைப்பருவத்தினை வளம் மிக்கதாய் மாற்றியதற்காக அவர்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு நன்றியுடன் இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

போன வருடம் சுமார் ஐம்பதிலிருந்து அறுபது கூழைக்கடா நாரைகள் கூட்டமாக தவமிருப்பதைப்போல நாணல்களிடையே நின்றிருப்பதை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பார்த்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில் தவமிருக்கும் பாவனையில் இருந்த நாரையொன்று கிட்டத்தட்ட இரண்டு கிலோ எடையுள்ள மீனை தவம் கலைந்து அலகில் அள்ளி விழுங்கியது. அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது பள்ளிக்கரணையின் சதுப்பு நிலம் மிகப் பெரிய உணவு மண்டலம் என்று. நீர் வாழ் உயிரினங்கள் அந்த ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் மட்டும் பல ஆயிரக்கணக்கான டன்களில் இருக்கும் என்று உயிரியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். நீர் வாழ் உயிரினங்களைப் பற்றிய  அறிவியலின்  தகலறிவு கூட முழுமையானது அல்ல. இன்னும் நமக்கு பல நீர் வாழ் கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய பட்டியல் கூட இல்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இன்னும் பெயரிடப்படாத பல நீர் வாழ் உயிரினங்கள் காணக்கிடைக்கின்றன அவை பூமியில் உயிர் தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்ததன் ரகசியங்களைச் சொல்லக்கூடும் என உயிரியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். 

1994 இல் நான் வேளச்சேரியை வசிப்பிடமாகக் கொண்டதிலிருந்து பள்ளிக்கரணைக்குப் போய் அவ்வபோது பறவைகளைப் பார்த்துவருவதும், ஐஐடி வளாகத்திலிருக்கும் காட்டினூடே நடைப்பயிற்சிக்குப் போவதும் என் புலனுணர்வு வாழ்க்கையினை செழுமை மிக்கதாய் மாற்றியிருக்கின்றன. தி.ஜானகிராமனின் “ செம்போத்துக்கள் உம் கொட்டி பறந்தன” என்ற வரியினை சென்னை நகரவாசியான என்னாலும் அனுபவபூர்வமாக எழுத முடியும் என்பதே மிகப் பெரிய கொடுப்பினை என்று இப்போதெல்லாம் அடிக்கடி நினைக்கிறேன். நீர் மண்டிய நாணல் சகதி வெளியில் மூங்கில் வனங்களில் மட்டுமே உணரத்தக்க ரகசிய அனுபவ வெளி மனித மனங்களுக்காகக் காத்துக்கிடக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிப்பதற்கும் மாசுபடுத்துவதற்கும் நம்மிடையே கிராதகத் திட்டங்களுக்கு என்றுமே குறையிருக்கவில்லை என்று வரலாறு சொல்கிறது; நன்னீர் ஏரி ஒன்றினை அமைப்பதிலிருந்து அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது, கோல்ஃப் விளையாட்டு மைதானம் அமைப்பது என பல திட்டங்களை யோசித்து சென்னை மாநகராட்சி சப்பு கொட்டியிருக்கிறது. பொது நல வழக்குகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அயராத போராட்டங்களுமே நமக்கு இந்த அளவுக்காவது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பாற்றிக்கொடுத்திருக்கின்றன. இப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வன இலாக்காவின் பாதுகாப்பில் இருக்கிறது. வன இலாக்காவுக்கு இருக்கக்கூடிய இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான விசேஷ அதிகாரங்கள் பள்ளிக்கரணையை தொடந்து பாதுகாக்கும் என்று நாம் நம்பலாம்.

ஆனால் பள்ளிக்கரணை பகுதியில் போடப்படும் குப்பை மேடுகளிலிருந்தும், குப்பை மலை மலையாய் எரிக்கப்படுவதன் மாசுபடுத்துதலிலிருந்தும் யார் பள்ளிக்கரணையை காப்பாற்றுவார்கள்? வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரணை போகும் சாலையில் டோபி அபார்ட்மெண்டுகளுக்கு கொஞ்சம் தொலைவில் மாநகரத்தின் ஆயிரக்கணக்கான டன்கள் குப்பைகள் தினசரி கொட்டப்படுவது மட்டுமில்லாமல் அவை எரிக்கவும்படுகின்றன. பள்ளிக்கரணைக்கு போகும்போது குப்பைகள் எரிக்கப்படும்போது புகை மேகங்கள் போல எழுவதையும் கரித்துகள்கள் சதுப்பு நிலத்தின் நாணல்புதர்களில் அடர்வதையும் நான் பார்த்திருக்கிறேன். இன்னொரு பெரிய குப்பை மைதானம் பள்ளிக்கரணையிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழியில் இருக்கிறது. இந்த குப்பை மைதானங்கள் அதிர்ச்சியூட்டத்தக்க அளவு கற்பனையை விட பெரிதானவை; அவரவர் எச்சத்தினால் காணப்படும் சென்னை படு பயங்கரமானது. போரின் அழிவுகளையும் சர்ரியலிச ஓவியங்களையும் விஞ்சிய காட்சிகளைக் கொண்டவை இந்த குப்பை மைதானங்கள்.

வருடா வருடம் பறவைகள் இன்னும் வந்து போகின்றன பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சதுப்பு நிலமாகவே இன்னும் பிழைத்துக் கிடக்கிறது என்றால் அதற்கு மனித யத்தனங்கள் ஐம்பது சதவீதம் காரணம் என்றால் இன்னொரு ஐம்பது சதவீத காரணம்  தெய்வீக அருள்தான்.  

  




Wednesday, July 2, 2014

கேட்கத் தயங்கியதால் சறுக்கியது

விமலாதித்த மாமல்லன்



இலக்கிய விமர்சனங்கள், அடிதடிகள், பகடிகள் எதுவுமே வன்மங்களாக இறுகுவதில் எனக்கு  உடன்பாடு கிடையாது. இந்த வாக்கியத்தினை  பெரிய உத்தம கனவான் போல நான் எழுதினாலும் சில சமயங்களின் வன்மம் என்னையும் மீறி மனதில் இறுகிவிட்டிருக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன். சமீபத்தில் சியோல் நகரில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது தூரத்திலிருந்து பார்வைக்கு ஒரு நபர் அச்சு அசலாய் விமலாதித்த மாமல்லன் போலவே இருந்தார். பக்கத்தில் போய் பார்த்தபோதுதான் அது வேறு நபர் என்று தெரிந்தது. மாமல்லன் இரண்டொரு மாதங்களுக்கு முன்பு என் அலுவலகத்திற்கு வந்தது ஞாபகம் வந்தது.

என்றைக்கு என்று துல்லியமாக நினைவில்லை. ஒரே ஒரு சக பணியாளர் மட்டுமே அலுவலகத்தில் இருக்க, மதியம் வரவிருக்கிற ஆராய்ச்சி மாணவர்களுக்காய் பாடங்களை தயார் செய்துகொண்டிருந்தேன். வாசலில் அழைப்புமணி அடிப்பதைக் கேட்டு வாசலுக்குப் போனால் ... மாமல்லன்! அப்படி வெட்டுப்பழி குத்துப்பழி என்று இணையத்தில் கட்டிப் புரண்டு சண்டையிட்டபின் அவர் என்னைப் பார்க்க வருவார் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. மாமல்லனை நான் அதற்கு முன் அதிகமாகப் பார்த்ததுமில்லை, பழகியதுமில்லை.  நான் சந்தித்த ஓரிரு சந்தர்ப்பங்களிலிருந்து மனதில் நிறுத்திய உருவத்தை விட குள்ளமாக இருந்தார். நரைத்த தாடியையும் கண்களுக்கு கீழே அடர்ந்திருந்த கரு வளையங்களையும் அவருடைய மனம் விட்டு சிரித்த பெரிய சிரிப்பினையும் பார்த்தபோது இவரோடா அத்தனை சண்டை போட்டோம் என்று தோன்றியது. வெட்டி சண்டை அது என்றும் தோன்றிக்கொண்டே இருந்தது. அவரை நீ என்று அழைத்து பேசுவதா அல்லது நீங்கள் என்று அழைப்பதா என்ற குழப்பத்தில் நான் ஓரிரு வாக்கியங்கள்தான் பேசினேன் என்று நினைக்கிறேன். சென்னைவாசியான அவருக்கு என்னை நீ என்று அழைத்து படபடவென்று பேசுவதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. முழுமையாக என்ன பேசினோம் என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவர் கையில் பெருவிரலில் ஒரு பிளாஸ்திரி போட்டிருந்தது நினைவிருக்கிறது. என்னவென்று கேட்டதற்கு சுங்க பரிசோதனையின் போது கைது செய்த நபரொருவரை அடிக்கத் தெரியாமல் அடித்ததில் கை பிசகிவிட்டதாகச் சொன்னார். இலக்கியத்திலும் அப்படித்தான் காட்டடி பிறரை அடிப்பதாக நினைத்து தன்னையே காய்ப்படுத்திக்கொள்வார் என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டேன், மதிய உணவு நேரம் என்பதால் சாப்பிடுங்கள் என்றதற்கு வேண்டாமென்று மாதுளை சாறு மட்டும் அருந்தி விடை பெற்றுப் போய்விட்டார்.

அத்தனை நேரமும் நான் அவரிடத்தில் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மனதிலிருந்தது வார்த்தையாய் வெளிப்படவில்லை. ஏதோ ஒரு தயக்கம் என்னைத் தடுத்துவிட்டது. அதாவது இணையத்தில் நடந்த சண்டையின் போது அவரை நான் ஒரு சமயம் தலைக்கேறிய கோபத்தில் கருணை அடிப்படையில் வேலை வாங்கியவர்களுக்கு உழைப்பினாலும் தகுதிகளாலும் அடையும் பிற வேலைகளைப் பற்றி என்ன தெரியும் என்று நான் அவரைத் தாக்கி ஒரு வாக்கியம் எழுதியிருக்கிறேன். மாமல்லனின் வசைகளால் தடுமாறி நான் சறுக்கிய தருணம் அது. ஒரு போதும் எவரையும் அப்படித் தாக்கி எழுதுவது என் இயல்புக்கு உகந்தது அல்ல. ஆனால் அது நிகழ்ந்துவிட்டது. அதற்காக  மாமல்லனிடம் அவர் நேரில் வந்தபோதாவது நான் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும்.

சியோல் நகரில் யாரோ ஒரு அந்நியரை மாமல்லன் என்று நினைத்தது நான் கேட்கத் தயங்கியதால் மீண்டும்  சறுக்கியதற்கான நினைவூட்டல். மேற்சொன்ன விஷயத்திற்காக விமலாதித்த மாமல்லனிடம் மன்னிப்பு கோருகிறேன். 

Tuesday, July 1, 2014

Bhavni Bhavai (1980) - Ketan Mehta- full movie




Bhavni Bhavai is a 1980 Gujarati film directed by Ketan Mehta. The story involves a king who wants his vav (stepwell) to be filled with water. To get the water, a person with 32 qualities needs to be sacrificed. Unfortunately, that kind of person is among the Mahyavanshi. The Mahyavanshi put up a resistance to give the child up, but then they have to give up the child for the sacrifice.

Initial release: 1980
Director: Ketan Mehta
Running time: 125 minutes
Music composed by: Gaurang Vyas
Screenplay: Hriday Lani, Ketan Mehta