Tuesday, May 31, 2022

தூசு —— கவிதை/ தனிநபர் நாடகம்

 தூசு

——

கவிதை/ தனிநபர் நாடகம்

——-

ஏப்ரல் மாத மத்தியில் ஒரு நாள் நாடக, திரைப்பட நடிகை கலைராணி ஃபோனில் அழைத்தார். அவர் ‘தூசு’ என்ற பொருளில் தனி நபர் நாடகம் நிகழ்த்த விரும்புவதாகவும் அதற்காக ‘தூசு’ என்பதன் சாத்தியப்பட்ட தத்துவார்த்த விளக்கங்களை என்னோடு உரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார். நான் அவரிடம் நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன். பின்னர் தூசு என்னுடைய கவிதைகளில் பல இடங்களில் ஏற்கனவே வந்திருப்பதை கவனித்தேன். “Earth to earth, ashes to ashes, dust to dust” என்ற பிரார்த்தனை வாசகமும் எனக்கு நினைவுக்கு வந்தது. சென்று சேருமிடம் சரி ஆரம்பிக்கும் இடமும் எப்படி தூசாக இருக்கும் என்பதை யோசிக்கும்போது தூசை வைத்து ஒரு abstract creation myth சாயலில் எழுதினால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த தனி நபர் நாடகத்திற்கான கவிதை. இதை எழுதுவதற்கான ஆரம்ப தூண்டுதலை அளித்த கலைராணிக்கு என் நன்றிகள் பல. 

———————————————————————-

தூசு

——

எங்கும் வியாபித்திருக்கும் தூசு

நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில்

படிந்திருக்கும்போது அதில் நீ

உன் ஆட்காட்டி விரலால்

உன் காதலியின் பெயரை எழுதுகிறாய்

தூசில் தொடங்கி தூசில் முடியுமென்ற

விவிலிய வாசகத்தில் 

தூசில் எல்லாம் முடிவதை நீ அறிவாய்

ஆனால்

தூசில் எது எப்படித் தொடங்கியது என்பதை

எவ்வாறு நீ அறிவாய் 

எங்கோ ஒரு இடத்தில் 

மேகம் வடிகட்டிய 

ஒற்றைக் கிரணத்தில்

ஒளித்தூசுக் கற்றையுனுள்

ஆங்காங்கேயுள்ள வெற்றிடத்தில்

அவள் உன் பெயரை எழுதி

எல்லாவற்றையும் ஆரம்பித்திருக்கக்கூடும்

இல்லை நிறைமதியின் நள்ளிரவில்

ஜன்னல் திரைச்சீலைத் தாண்டி

சன்னமாய் பிரகாசிக்கும் 

சந்திரத் தூசின் கதிரில் கனவின்

அம்மணத்துடன் படுக்கையில்

அவள் புரண்டு உன் மேல் 

படுத்திருக்கக்கூடும்

ஏன் நீ அடிக்கடி எண்ணப் புணர்ச்சியில்

ஈடுகிறாய்? அந்தகாரம் இதற்கு மேலும்

அடர்த்தியுறாது என்ற 

உன் பெருமூச்சில்

உயிர்பெற்றெழுகிறது ஒரு தூசுப்படலம்

வனாந்திரமோ அது?

குட்டியானைகளின் கால்களில்

மிதிபட்டு மாதுளம்பழங்கள் நசுங்க

நாணும் பெண்ணின் முகத்தை போல 

சிவந்திருக்கிறது காட்டு நிலம்

உதிர்ந்த இலவங்க இலைகளின்

ஈரப்பதத்தில் எழும் நறுமணம்

காற்றெங்கும் நிறைக்கையில்

இருட்டால் ஒக்கிட முடியாத

சதையின் காலத்தை

மகரந்த ஒளியின் தூசு

இறுக்கிக் கட்டிய ஆபரணமாக்குகிறது

எழுக எழுக 

மகரந்தங்களின் தூசு

பொலிக பொலிக 

மகரந்தங்களின் தூசு

என்ற உன் வாழ்த்து ஒலிகளில்

படைப்பின் ஆயத்தமாக 

அதிர விரிகிறது விளிம்பற்ற வெளி

மலையுச்சியிலிருந்து வீழும் 

காட்டாறு

ஐந்து முகக் கூர்முனையுடைய

மேப்பிள் இலைகளை அடித்துக்கொண்டு 

வரங்களை அள்ளி வீசும் வனதேவதையென

இறங்கி வருகிறாள் 

உன் புலன்கள் விழிக்க

மகரந்தக் கூடுகைகள் தூலமாக

அறிந்தாயோ 

நீ தூசுக்களின் ஈர்ப்பினை

உன் செவிகள் நாடும் லயத்தினை

வனதேவதையின் இளம் மார்புகள்

பொங்கி பூரிக்கையில்

கனவிலிருந்து விடுபடுகிறாய் 

மேப்பிள் இலைகளில் செந்நிறமாய் 

ஒளிரும் நீர்த்திவலைகள் 

தாமரை மொட்டுக்களில் ஏன்

கண்ணீர்த்துளிகளாய் வெளிறிவிடுகின்றன

நீ எதற்காக 

கனவுக்கும் நனவுக்குமிடையில்

கானகத்துக்கும் நகரத்துக்குமிடையில்

பிறப்புக்கும் அழிவுக்குமிடையில் 

சதா ஊடாடுகிறாய்

வீட்டு வாசல்களில், மேஜைகளில்,

ஜன்னல்களில், பால்கனிகளில்

தெரு முனைகளில், அடிவானில்

என தூசு கவியுமிடமெல்லாம் அதை

பெருக்கி, கூட்டி சுத்தப்படுத்துகிறார்கள்

ஒரு அடுக்கு கலைய

ஒரு அடுக்கு கவிய

இது எங்களூர், 

எங்களூருக்கு மட்டுமேயானது தூசு

அது எங்கள்

முகவிலாசமென முணுமுணுக்கிறாய்

நெடுஞ்சாலைக் காட்சியினை

கலைத்து அடுக்குவதாக 

பழுப்பு நிற மாடுகள் கூட்டம்

புழுதிப்படலம் கிளப்பி

புழுதிப்படலம் கிழித்து எதிர்வருகிறது

காளைகளின் பசுக்களின் 

கண்களில் மிரட்சியை

காளைகள் குறி விரைத்து 

ஒன்றன் மேல் ஒன்று

ஏறுவதை விட்டேத்தியாய் கவனிக்கிறாய்

நிறமற்ற பறவையொன்று

வினோத ஒலி எழுப்ப

நீ அதன் உடந்தையென எண்ணுகிறாய்

என்ன ஆயிற்று உன் செவிகள் நாடிய லயத்திற்கு

புழுதிப்படலம் போர் சமிக்ஞை அல்லவா

சாக்கு முக்காடிட்ட இடையனொருவன்

கோலூன்றி உனைக் கடந்து செல்கிறான்

அவன் மேய்ப்பது எந்த ஆநிரைக் கூட்டத்தை 

என வியக்கிறாய்

சந்திர தூசு, மகரந்தத் தூசு, மேகத்துணுக்கு,

ஒளிக்கற்றை, காதலர் பெயரெழுதும் விரல்கள்

என எவற்றை மேய்க்கிறான் 

முக்காடிட்ட இடையன் 

வீடொன்று தூரத்தில் தெரிந்து

மீண்டும் தூசுப் படலத்தில் மறைகிறது

அதனருகே மேப்பிள் மரம்

தன் ஐந்து கூர்முனை கொண்ட

இலையொன்றை 

உதிர்க்கிறது

Saturday, May 28, 2022

ஈரப்பதம் —— கவிதை/ தனிநபர் நாடகம்

 ஈரப்பதம்

——

கவிதை/ தனிநபர் நாடகம்

——-

என்ன நாள், என்ன மணி

என்ன மணி, என்ன நிமிடம்

என்ன நிமிடம், என்ன நொடி

என்ன நொடி குதிரையின் மூச்சிரைப்பு

காற்றில் கனமாகக் கலந்திருக்கிறது ஈரப்பதம்

நான் ஏன் ஓடிக்கொண்டே

இருக்கவேண்டும்?

நான் ஏன் ஒரு மூலையில்

சுருண்டு படுக்கலாகாது?

மழை மரம் காற்று என நான்

ஏன் பார்த்திருக்கலாகாது?

மாதுளம் பழங்கள் ஏற்கனவே

உடைந்து பிளந்திருக்கின்றன

கடலோ காற்றின் விதிகளால்

போட்டிகளைப் பொங்கிப்

பொங்கி அணைத்துக் காட்டுகிறது

சுழலுறு கடலே சுழலுறு

உன் ஆழ்கடல் பாசிகளை

என் மேல் வீசிச் சுழலுறு

உன் ஈரம் பதமாக மலரிலிருந்து

மலருக்குச் செல்லட்டும்

அந்தி கவிவதைப் போல

வைகறை விரிவது போல

ஒளி குறைந்தோ

ஒளி விகசித்தோ பூவிதழ்கள்

தங்கள் உட்புறங்களின்

ரகசியத்தைக் காட்டட்டும்

வடிவம் செயலைப் பிரதிபலிக்கிறது என்றாலும்

அது பரிணாம வளர்ச்சியைச் சொல்வதில்லை

உனக்குத் தெரியுமா நான் எதை விடாமல்

துரத்திக்கொண்டிருக்கிறேன் என்று?

அதைச் சொல்லலாமா கூடாதா என்று கூட

எனக்குத் தெரியவில்லை

எனக்கு எல்லா முகங்களும்

அந்நிய முகங்களாய் இருக்கின்றன

நான் களைத்திருக்கிறேன்

நான் சலிப்படைந்திருக்கிறேன்

நான் ஒருகாலில் நின்று

மறுகாலில் நிற்பதான பாவனையை

உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்

ஆனாலும் என் புன்னகையின் கோடு

முடியும் புள்ளியை

நீங்கள் கணித்துவிடுகிறீர்கள்

நீங்கள் என்னைத் துருவித் துருவிப்

பார்ப்பதை நிறுத்தவேண்டும்

நான் தூங்குவேன் தூங்கினேன்

தூங்கிக்கொண்டே இருப்பேன்

தூங்குவதற்கும்

நான் உங்களுக்குத்

தன்னிலை விளக்கம் தரவேண்டுமா?

எந்தத் தெய்வத்தை முன்னிட்டு

நான் என் சொற்களை வீசுகிறேனோ

அந்தத் தெய்வமே இங்கே இதோ

தன் கௌரவ ஆசனத்தில்

புரோகிதனுடன் அற்பமாய்

முகம் திருப்பி உட்கார்த்திருக்கிறது

உங்கள் கண்ணுக்கு

அது தெரியவில்லை இல்லையா

தெரியாது உங்கள் கண்களுக்கு

அது தெரியவே தெரியாது

நீங்கள் ஒரு கண்ணிழந்த நிமித்தகன்

என் துன்பம் அறியாத நீங்கள்

எப்படி என் தெய்வத்தின்

அலட்சியத்தைப் பார்க்கமுடியும்?

நான் பற்றி இருப்பதெல்லாம்

இந்த ஈரப்பதத்தைதான்

அதை நான் பாடம் செய்யப்பட்ட பறவையின்

எலும்புக்கூடு போல அறிகிறேன்

நீங்கள் உங்கள் கத்திரிக்கோல்களை வைத்து

என்ன செய்யப்போகிறீர்கள்

முகங்களிடமிருந்து மட்டுமல்ல

ஈரப்பதத்திடமிருந்தும்

நான் அந்நியமாயிருக்கிறேன்

என ஆலோலம் பாடப் போகிறீர்கள்,

என்னைத் துண்டித்துப்

பார்க்கப் போகிறீர்கள்

உங்கள் பிளவுண்ட நாவுகள்

வீசும் சீறும் சொற்கள்

இருண்மைக்குள் என்னைத்

தள்ள விழைகின்றன

அந்தக் கத்திக்குத்து இருட்டிலிருந்து கூட

உங்கள் குதிரைகளின் மூச்சடைப்பிலிருந்து

நான் ஒரு துளி ஈரப்பதத்தை எடுத்துவிடுவேன்

முட்களாலான இரவின் முத்தத்தில்

உதடுகளில் துளிர்க்கும் ஒற்றை எச்சில் துளி

நம் குழந்தைப் பருவம்

ஆனந்தமாயில்லை எனச் சொல்லும் மனோவைத்தியன்

ஆ ஆனந்தம்

அதற்காக நடுநடுங்கும் கண்ணிமைகள்

அதற்காக ஏங்கி வலிக்கும் தோள்கள்

கணுக்காலின் குதிரைச்சதையில் ஏற்படும் இறுக்கம்

எது எங்கே அடைபட்டிருக்கிறது

என எனக்குச் சொல்லத் தெரியவில்லை

நிலவழிந்த நள்ளிரவு நா நுனியால்

தொட்டுத் திறக்கக் காத்திருக்கிறது

நான் ஒருமையுடன் பேசவில்லை என்றுதானே

நினைக்கிறீர்கள் நான் மனச்சிதைவுற்றிருக்கிறேன்

என்றுதானே உங்கள் கைக்குட்டையால்

வாய்பொத்தி சிரிக்கிறீர்கள்

நான் உங்களை நோக்கிப் பேசவில்லை

ஆரம்பத்திலிருந்தே நான்

உங்களை நோக்கிப் பேசவில்லை

எந்த இடம் மழையால் நனைக்கப்படுகிறதோ

அந்த இடத்தை நோக்கி

நான் பேசிக்கொண்டிருக்கிறேன்

மழை உங்களுக்கென்றும் எனக்கென்றும்

தனியாகப் பெய்வதில்லை

என்ன நாள், என்ன மணி

என்ன மணி, என்ன நிமிடம்

என்ன நிமிடம், என்ன நொடி

என்ன நொடி குதிரையின் மூச்சிரைப்பு

காற்றில் கனமாகக் கலந்திருக்கிறது ஈரப்பதம்

நான் ஏன் ஓடிக்கொண்டே

இருக்கவேண்டும்?

நான் பேசாமல் நின்றிருக்கிறேன்

பெய்யெனப்பெய்யும் மழையில் நனைந்தவாறே

Friday, May 20, 2022

மாத்ரி - கவிதை/ தனிநபர் நாடகம்

 மாத்ரி - கவிதை/ தனிநபர் நாடகம்

---
மாத்ரி மகாபாரதத்தில் பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையருக்குத் தாய். குந்தியின் தேவர்களை வரவழைக்கும் மந்திரத்தைக் கடன்பெற்று அஸ்வினிதேவர்களாகிய இரட்டையர்களை அழைத்து நகுலன், சகாதேவனைப் பெற்றெடுத்தாள். மாத்ரி பேரழகி. பாண்டுவுக்கு மனைவியோடு உறவு கொண்டால் மரணம் சித்திக்கும் என முனிவர் சாபம் இருந்தது.
மாத்ரியின் அழகில் பித்தமேறிய பாண்டு அவளோடு உறவு கொண்டு மரணமடைந்தான். மாத்ரி தன் குழந்தைகளை குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு பாண்டுவோடு உடன்கட்டை ஏறினாள். -மாத்ரி- நீள் கவிதை தனிநபர் நாடகத்துக்கு உகந்தது.
————————————————————————-
மாத்ரி
——————————————-
உன்னிடமில்லாமால் வேறு
யாரிடம் சொல்வது
என் குறும்பலாவே
வேரிலும், நடுமரத்திலும்,
கிளையிலுமெனெ
எங்கும் பூத்து
எங்கும் கனியும்
தாய்மையின் உருவே
ஆகிய நீ அல்லால்
யார் கேட்பார்
மாத்ரியாகிய என் கதையை
ஒரு குழந்தையின் பிஞ்சு பாதம்
மெதுவே நெஞ்சில் உதைத்து போல
உன்னை முத்தமிட விரும்புகிறேன்
கனிவாக, பரிவாக, மெதுவாக,
என் கதை கேளாய்
நிலவொளியில் வன
விருட்சங்கள் மெதுவே
வெளிப்போந்தன தங்கள்
ஒளிரும் இலைகள் மினுக்கி
நான் குந்தி தந்த மந்திரத்தை
அனாகத சக்கரத்தில்
வைத்து கனவின் சுடரெனவே தியானித்தேன்
உன் பலா மரக் கிளைகளில்
மனதைக் குழப்பும் எத்தனை
வளைவு நெளிவுகள்
வான் நிறைக்கின்றன
சிறிய ஆசை இலைகளின் கிளைகள்
மேலும் அதிகமாய் திருகி முறுகியிருக்கின்றன
அவற்றில் தூங்கும் பறவைகளை
நான் எழுப்ப விரும்பவில்லை
பிடரி மயிர் சிலிர்க்க
ஓடி வரும் வெண்புரவிகள்
ஒன்றல்ல பலவல்ல இரண்டு புரவிகள்
கோடி சூர்ய பிரகாசத்துடன்
வானிறங்கி வருகின்றன
புரவிகளின் குளம்படிகள்
என்றுமே நிகழ்காலத்தில்
என்றுனக்குத் தெரியுமா
ஊடுருவும் விசையின்
இரு ஜோடிக் கண்கள்
கடிவாளங்கள் ஏதுமற்ற
கன்னி வாய்கள்
அவற்றை அஸ்வினி தேவர்கள்
என்றழைத்தேன்
நழுவும் நிகழ் கணம் நிகழென நிலைக்க
எது முன் எது பின் எது முன் எது பின்
அந்தக் குதிரைகள் நம் விசையுறும்
எண்ணங்கள் போல மின்னலடிக்கின்றன
ஓவென வாய்விட்டு அலறுகிறேன்
மகிழ்வுண்ட சூறாவளியாய் ஓலமிடுகிறேன்
வனங்களின் ஆழத்திலிருந்து முனகுகிறேன்
எதிர்பாரா மரணத்திற்கிணையான
இன்பத்தின் உச்சமோ இதுவென
மயங்குகிறேன் குறும்பலாவே
ரசம் ததும்பும் மதுக்குடத்தைத் திறந்தது யார்
பெண்களின் முலைகளிடையே இறக்காத
கடவுளரும்தான் யார்?
பெண்ணின் கனவுகளுக்கு
ஈடு கொடுக்க
பிரேமைக்கும் கற்பனைக்கும்
செயல் கொடுக்க
மட்டும்தானே நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன?
வெண்புரவிகள் தலை தொங்கிச்
செல்லமாய் தயங்கி நின்றனவென
உனக்குத் தெரியும்தானே
கட்கத்திற்கொன்றாய் குதிரைத்தலையொன்றை
இடுக்கிக்கொள்கிறேன்
குதிரைகளின் நெற்றிகளை வருடுகையில்
அவற்றின் முடிகளை மென்மையாகக் கோதுகையில்
அவை கொஞ்சலாகக் கனைக்கின்றன
ஆ உன் கிளையில் தூங்கும் பட்சியொன்று
உறக்கம் கலைந்து சிறகடித்து மேலெழும்பி
மீண்டும் கூடடைகிறது
என் கைகளில் அடங்கி நிற்கும் குதிரைகள்
குளம்புகளால் மண் பறித்து
தலை அசைத்து வெட்கம் கொள்கின்றன
விடை கொடுத்தாலும் போவதில்லை அவை
ஆத்ம பந்தம் தேடிக் கனிகின்றன
அவற்றின் கண்கள்
தொலைந்து போன புராணக் கதையொன்றில்
பெண்ணறிவின் விகாசம் வனத்தின்
நள்ளிரவாய், புவனத்தின் வைகறையாய்
பரிணமித்ததை அல்லவா
நானுனக்கு சொல்கிறேன்
தாயாகிய குறும்பலாவே
நீ அறிவதாக
ஆடி பிம்பம் ஒன்றில் தன்னை
முதன்முதலாகப் பெண்ணென்று
பிரக்ஞை உடையும்
ஒருவளின் வன மிருகமொன்றின் கட்டற்ற பாடலை
அது தரும் யௌவனத்தின் பூரிப்பைப்
பார்த்துதான் பாண்டு என்னிடத்தில்
மேலும் மோகம் கொண்டான்
முதல் மழை விழுந்த பூமியின்
வெக்கையோடு அவன் காத்திருந்தான்
வெண்புரவிகளோடு கழித்த என் இரவின்
நினைவுகளில் என முகம் சிவக்கையில்
-அது எப்போதுமே எனக்கு நிகழ்காலம்-
என்றுணர்ந்த பாண்டு பித்தேறி நின்றான்
பேரழகனாய் நகுலனும்
பெரும் ஞானியாய் சகாதேவனும்
பிறந்திருப்பதன் ரகசியத்தை
அவன் அறிய விரும்பினான்
என்னிடம் தோற்ற தெய்வங்கள்
என்னைக் கைவிடுமென
தங்கள் அஸ்வினி வைத்தியத்தால்
பாண்டுவை குணப்படுத்தாமல் போகுமென
நான் ஒரு கணம் கூட நினைத்திருக்கவில்லை குறும்பலா
எடை மிகுந்த கனிகளை உன் கிளைகள்
தாங்காதென்றுதானே நீ
அவற்றை நடுமரத்திலும் வேரிலும்
உன் கர்ப்ப பாத்திரங்களில் முகிழ்க்கிறாய்
என் கனிகள் நகுலனோ சகாதேவனோ அல்ல
நான் முழுமையாக உணர்ந்த பெண்ணறிவு
இந்த பிரபஞ்சத்தின் மூல ரகசியம்
அதையே பாண்டு விரும்பினான்
குந்தி அதை என்றும் உணர்ந்தவளில்லை
அவள் பெண்ணல்ல அரசி
அரசதிகாரத்திற்கு என்றில்லை
ஒரு சிற்றதிகாரத்திற்கும் கூட அறிவேது
எல்லாமே கணக்குகள்
லாப நஷ்ட கணக்குகள்
அன்று அதிகாலையில் குளித்து
ஓரிழைத் துண்டணிந்து கூந்தலில் நீர் சொட்ட
மனோரஞ்சித மலரொன்றைப் பறித்து
சூடுகையில் நான் பலவீனமாயிருந்தேன்
பாண்டுவின் கண்கள் குதிரைகளின் கண்கள்
போல என்னிடத்தில் யாசகம் வேண்டின
அவன் தவித்திருந்தான் நான் கனிந்திருந்தேன்
கிழக்கில் உதயத்தின் இதழ்கள்
ஒன்று ஒன்றாய் மெதுவாய் அவிழ்ந்தன
வைகறையில் விழித்த பறவைகளின் கூச்சல்
காட்டின் சங்கீதமாயிருந்தது
கதிரவனின் முதல் கிரணங்கள் பச்சை இலைகளூடே
சன்னமாய் கீழிறங்கின
நான் அவனை ஆக்கிரமித்தேன்
வேகக்குதிரைகளின் குளம்படிகள்
கொண்டுவரும் புயலின் விசையொடு
பூமியின் நறுமணம் பாண்டுவை
சூழ்ந்து அவனைத் தன்னோடு இறுக்கி
ஆவி சேர்த்து அணைத்தது
குறும்பலா குறும்பலா
பாண்டு என் ரகசியம் அறிகையில்
அவன் பேரானந்தம் அடைந்தான்
அவன் கண்களின் பாவைகள்
விரிந்து வெண்படலம் நிறைத்தன
குதிரைகளின் கண்கள் போல
மிருகங்களின் கண்கள் போல
வன மிருகங்களின் கண்கள் போல
அவை என்னை உற்று நோக்கி
ஆத்ம போதம் அடைந்தன
எனக்கு எந்த வருத்தமுமில்லை குறும்பலா
நகுலனையும் சகாதேவனையும்
குந்தியிடம் ஒப்படைத்துவிட்டேன்
அழகும் ஞானமும் உதவாமல் அரசதிகாரம் உண்டா
குந்தி அவர்களை நிச்சயம் நேசிப்பாள்
இதோ மணவலங்காரம் அணிந்து
பாண்டுவின் சிதை நோக்கிச் செல்கிறேன்
அவனுடைய மோட்சத்தின்
கதவுகளைத் திறக்கவேண்டும்
மீண்டுமொருமுறை