Wednesday, February 12, 2014

அழாதே மச்சக்கன்னி - அறிவிப்பு


"அழாதே மச்சக்கன்னி" நாவலின் முதல் நான்கு அத்தியாயங்களை நான் இந்தத் தளத்தில் பிரசுரித்திருக்கும் நிலையில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த நாவலைத் திரைப்படமாக்க விரும்பினார். அவருடைய விருப்பத்தின் பேரில், திரைப்படத்திற்கான கதை இறுதி செய்யப்படும்வரை நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்களை தளத்தில் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தேன்.  இப்போது பேசிக்கொண்டிருக்கும் கதை என்னுடைய நாவலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இடத்தை அடைந்துவிட்டது. அது ஒரு வகையில் நல்லதுதான். நான் இனி தொடர்ந்து நாவலின் இதர அத்தியாயங்களையும் இந்தத் தளத்தில் வெளியிடுவேன். விசாரித்து எழுதிய நண்பர்களுக்கு நன்றி.








Tuesday, February 11, 2014

மகாபாரதப் பிரசங்கியார் விருது விழா

"நல்லாப்பிள்ளை பாரதம்" இரு பாகங்களாகப் பதிப்பித்த நண்பர் இரா.சீனிவாசன் வருடந்தோறும் மகாபாரத பிரசங்கியார் கூடும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்து மகாபாரத சொற்பொழிவாளர்கள் அவர்களுக்குள் விருது வழங்கி சிறப்பித்துக்கொள்ள வகை செய்து வருகிறார். மகாபாரத பிரசங்கிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடும் அபூர்வமான நிகழ்வு இது.  மகாபாரதம் தெருக்கூத்தில் முழுமையாக பாரதக்கூத்தாக நிகழ்த்தப்படும்போது மகாபாரத சொற்பொழிவாளர்கள் பாரதத்தை விரிவாகக் கதையாகச் சொல்வர். பின்னர் இரவு முழுக்க கூத்து நிகழ்த்தப்படும். பாரதப் பிரசங்கிகள் மிகப் பிரமாதமான கதை சொல்லிகள். அவர்களுடைய கலை இன்னும் தமிழகத்தில் கவனம் பெறாமல் இருக்கிறது.
இந்த ஆண்டு " ஶ்ரீ மகாபாரதம் பாடிய வில்லிபுத்தூரார் விழா' கொசப்பாளையம் ஆரணியில் 15-2-2014 அன்று ஶ்ரீ பாஞ்சாலி அம்மன் திருமணமண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. அந்த விழாவிற்காக நண்பர் இரா.சீனிவாசன் அனுப்பித் தந்த அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு மகாபாரத கதைசொல்லல் எப்படி உயிர்ப்புடன் நாட்டுப்புறக்கலையாக மேலோங்கியிருக்கிறது என்பதினை அறியலாம்.






Tuesday, February 4, 2014

லௌகீக ஞானம்


குறிப்பு 1: 


'முனைவர்' 'பேராசிரியர்' சாருநிவேதிதா தம் பள்ளியில் பயிலும் மாணாக்கர் நிர்மல் 
கூகுலில் தேடினால் எளிதில் கிடைக்கக்கூடியதான மிலோரெட் பாவிச்சின் நாவலின் 
பெண் பிரதியிலும் ஆண்பிரதியிலும் உள்ள வித்தியாசங்களை எனக்குச் சுட்டிக்காட்டி நான் தகவல் பிழை செய்ய நேரிட்ட போது மடக்கிவிட்டதாக பெருமிதம் அடைந்திருக்கிறார். பேராசிரியருக்கும் மாணாக்கருக்கும் கூகுல் தொடர்ந்து துணையிருக்க வாழ்த்துகள். பதினாறே வரிகளின் வித்தியாசத்தினால் ஒரே நாவலின் ஒரு பிரதி எப்படி பெண் பிரதியாயிற்று, இன்னொரு பிரதி எப்படி ஆண் பிரதியாற்று என்று கற்றுணர்ந்த மாணவர் விளக்கினால் நல்லது. மாணாக்கரின் இலக்கிய பிரயாசைக்கு பேராசிரியரும் மனமுவந்து உதவலாம்.




குறிப்பு 2: 


‘உன்னிடம் தவறாக நடந்துகொண்டதற்காக என்னை நானே விளாறிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதுகிற தருண் தேஜ்பாலுக்கு பதிலெழுதுகிற இளம்பெண் ‘ நீ என்னுடைய தந்தையின் நண்பனில்லையா (எனவே தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவனில்லையா) என்று சொல்லி உன்னிடம் எத்தனை முறை கெஞ்சினேன்’ என்கிறாள். 

தன் பிள்ளை-பிறர் பிள்ளை- ஊரார் பிள்ளை அனைவரும் சமம் என்பதே தன் ஞானம் என்று பறைசாற்றுகின்ற ஞானவான் சாருநிவேதிதாவுக்கு தருண் தேஜ்பாலால் பாதிக்கப்பட்ட பெண் தன் பிள்ளையாகக் கண்ணில் தெரியவில்லை. தொடர்ந்து தருண் தேஜ்பாலுக்கு ஆதரவு தெரிவித்து எழுதிக்கொண்டிருக்கிறார். ஏனெனில், ஷீரடி சாய் பாபாவின் அருள் கிடைத்து அவருடைய புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகிறதோ இல்லையோ தருண் தேஜ்பாலின் தயவு இருந்தால்தான் புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகும். இந்த ‘லௌகீக ஞானம்,’ சாருநிவேதிதா என்னுடைய ‘சாதனைகளாக’(-சம்பாதித்து வீடு கட்டியது, கல்யாணம் செய்துகொண்டது, பிள்ளைகளைப் பெற்று படிக்கவைப்பது, சர்வதேச பல்கலைக்கழகங்ககளில் பயிற்றுவிப்பது என) பட்டியலிட்டிருக்கும் லௌகீக வெற்றிகளை ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்ததே. தன் படிப்பு, எழுத்து ஆகியவற்றின் மூலம் சாருநிவேதிதா அடைந்திருக்கும் இந்த லௌகீக ஞானாம்ருதசாகரத்தில் அவர் வாசகர்கள் இன்புற்று திளைப்பார்களாக. நிற்க.

மிலொரெட் பாவிச் எழுதிய ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ 1988 ஆம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்தது. அந்த வருடமோ அதற்கு அடுத்த வருடமோ நடந்த குற்றாலம் கவிதைப் பட்டறையில் கவிஞர் பழமலை அவர்களுக்கு நான் ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ நாவல் பற்றி ‘பாடம் எடுத்ததாக’ சாரு நிவேதிதா பிரசித்தமாக முன்பு எழுதியிருக்கிறார். 

இப்போது அவர் பாவிச்சின் நாவலை முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே -நாவல் ஆங்கிலத்தில் வெளிவருவதற்கு முன்பே-வாங்கிவிட்டதாக சொல்கிறார். அப்போது நான் பாலகன் என்றும் எழுதுகிறார். அப்படியெல்லாம் மாயங்கள் நம் உலகில் நடக்கும்தானே.

போகட்டும். இப்போதாவது நிர்மலோ அவருடைய ஞானத்தந்தையான சாருநிவேதிதாவோ ‘டிக்‌ஷனரி ஆஃப் காஸார்ஸ்’ நாவலின் ஆண் பிரதி பெண் பிரதி விவகாரத்தை விளக்கலாம். 

நண்பரே சாருநிவேதிதா நான் எதற்காக இதையெல்லாம் எழுத நேரிட்டதென்றால் நான் உங்களை முட்டாள் என்று எந்தக் காலத்திலும் சொல்லவில்லை என்பதை விளக்குவதற்காக. லௌகீகத்தில் தேர்ந்த நீங்கள் எப்படி முட்டாளாக இருக்க முடியும்? 

இதில் எங்கிருந்து வருகிறது படித்தவனின் சூதும் வாதும் என்பதினை அவரவர் புரிதலுக்கு விட்டு விடுகிறேன்.


குறிப்பு 3:

லட்சுமி மணிவண்ணனின் கவிதை ஒன்று;

"எனது பெண்ணைக் 
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து 
நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து
கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே 
படுகின்றன"

இந்த லட்சுமி மணிவண்ணனின் கவிதை சாருநிவேதிதாவிற்காகவே எழுதப்பட்டதோ?


குறிப்பு 4:

சதா சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று சாரு நிறுவவேண்டும்