Wednesday, June 27, 2012

ஜெயமோகனின் பூச்சாண்டி அரசியல்: தர்க்கரீதியான மறுப்பு By ராஜன் குறை


நண்பர் ராஜன் குறை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த கட்டுரையை அவர் அனுமதியுடன்  என் தளத்தில் வெளியிடுகிறேன். குடிமை சமூகம் பற்றிய நம் சிந்தனைகளை ராஜன் குறை கட்டுரை விரிவுபடுத்தும் என்று நம்புகிறேன்
எம்.டி.எம்
----------------------------------------------------

ராஜன் குறை


1. பூச்சாண்டி அரசியல்: பூச்சாண்டி அரசியல் என்றால் என்ன? கொச்சையான வார்த்தை என்று முகம் சுளிக்காதீர்கள். தத்துவத்திற்கு கொச்சை பிரயோகங்களை எடுத்து கையாண்டு புதிய அர்த்தங்களை வழங்க உரிமை உண்டு. பூச்சாண்டி காட்டுவது என்பது ரகளை செய்யும் குழந்தைகளை பயமுறுத்த பெற்றோர் கடைப்பிடிக்கும் வழி. நண்பர்கள் யாரோ சொன்னார்கள், ஃபிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கறுப்பின மக்களை காட்டி குழந்தைகளை பயமுறுத்துவார்கள் என்று. அப்படி சில சமயம் உள்நாட்டில் பல்வேறு விதமாக பாதிக்கப்படும் மக்களின் உரிமைக் குரல்களை அடக்குவதற்கு அரசும், அரசியல்வாதிகளும் அந்நிய சக்திகள், ஏகாதிபத்தியம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுவார்கள். அதுதான் பூச்சாண்டி அரசியல். இந்த கருத்தாக்கத்தை பெரியாரும் அவருக்கே உரிய வழியில் உபயோகித்துள்ளார். எனவே பூச்சாண்டி அரசியல் புதிதல்ல. ஒரு அமைப்பின் உள்ளே நிலவும் அதிருப்தியை சமாளிக்க வெளியேயிருந்து வரும் ஆபத்தை கற்பிப்பது பூச்சாண்டி அரசியல் என வரையறுக்கலாம். ஜெயமோகனின் பூச்சாண்டி என்னவென்றால் இந்திய தேசத்தினை “அழிக்க”, இறையாண்மையை பலவீனமாக்க அந்நிய சக்திகள், அந்நிய நிதி (இது ஜெயமோகனின் சுவாரசியமான சொற்சேர்க்கை), ஏகாதிபத்தியம் ஆகியவை கிறிஸ்துவ மத அமைப்புகளின் மூலம், அவர்கள் உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள், சிந்தனையாளர்கள் மூலம் சதி செய்கின்றன என்பதுதான். இது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை பொறுமையாக பரிசீலிப்போம். அதற்கு முன் இந்த உள்/வெளி என்ற அடையாளங்களை பொறுத்தவரை அரசியல் தத்துவம் இன்று சந்திக்கும் சிக்கல் என்ன என்பதை முதலில்  பரிசீலித்து வைத்துக்கொள்வோம்.

நான் குடியிருந்த ஒரு வீட்டிற்கு பக்கத்து போர்ஷனில் தினமும் காலையில் கணவன், மனைவியிடையே கடும் தகராறு வரும். பாத்திரங்கள் உருளும், நாற்காலிகள் எறியப்படும் பயங்கர சப்தங்களும் அந்த அம்மாள் அய்யோ, அய்யோ என்று கத்துவதும் கலவரமாக இருக்கும். ஒரு நாள் சப்தத்தின் உச்சத்தில் நான் பயந்து ஓடிப்போய் அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்தி விட்டேன். அந்த கணவர் தெலுங்கு பட வில்லனை போல் வாட்ட, சாட்டமாக தாடியுடன் இருப்பார். வெளியே வந்து என்னவேண்டும் என்று கர்ஜித்தார். பின்னாலிருந்து அந்த அம்மாளும் எட்டிப்பார்த்தார். “இல்லை, ஏதோ சப்தம் கேட்டது” என்று மென்று விழுங்கினேன். அதெல்லாம் ஒன்றுமில்லை, போங்கள் என்று கூறிவிட்டு கதவை அறைந்து சாத்தி விட்டார். எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் “அடுத்தவர்” பிரச்சினையில் தலையிடலாமா, கூடாதா அதை எப்படி முடிவு செய்வது என்பதை தீர்மானிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மேற்கத்திய தேசங்கள் பலவற்றில் அரசு குடும்பத்தை அங்கீகரிப்பதே இல்லை. சமீபத்தில் இந்திய பெற்றோரிடமிருந்து குழுந்தையை நார்வே போலீஸ் எடுத்துச்சென்ற சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். உங்கள் வளர்ப்புப் பிராணியை நீங்கள் கொடுமைப்படுத்துவதாக யாராவது புகார் சொன்னால்கூட போலீஸ் வந்துவிடும். என் மனைவி, என் குழந்தை, என்னுடைய நாய் நான் அடிப்பேன் என்றெல்லாம் பேசினால், கம்பிதான். ஏனென்றால் உரிமைகள் பற்றிய கருத்தாக்கங்கள் குடும்பத்தின் சுவர்களை தகர்த்துவிட்டன.

தேசங்களுக்கிடையே இன்று அப்படி ஒரு பிரச்சினை தீவிரமாக நிலவுகிறது. சமீபத்தில் லெபனானில் ஐக்கிய, அதாவது மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டுமா, கூடாதா என்பதில் வலது சாரிகள், இடது சாரிகள் என எல்லாரிடையேயும் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. சூடானில் ஏன் மேற்கத்திய நாடுகள் தலையிடவில்லை, டார்ஃபர் படுகொலைகளை வேடிக்கை பார்க்கலாமா என்று பல இடதுசாரிகளே கேட்டார்கள். இலங்கையை பற்றி பேசினால் இதயம் வலிக்கும். இந்தியாவோ, ஐக்கிய நாடுகளோ உள்ளே நுழைந்து முள்ளிவாய்க்காலை தவிர்த்திருந்தால் இடது சாரி நண்பர்கள் பலரும் மகிழ்ந்திருப்போம் என்பதுதான் உண்மை. மனித உரிமைகளின் சர்வதேசப் பரிமாணம் கூடிக்கொண்டே போகிறது. பொதுவாக இவை மேற்கத்திய நாடுகளின், சர்வதேச முதலீட்டின் நலன்களுக்கு ஏற்ப வளைக்கப்படுகின்றன என்றாலும், பல சமயங்களில் தேசத்தின் எல்லைகளை மதிப்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இதை முதலில் நாம் குறித்துக்கொள்ள வேண்டும். தேசத்தின் இறையாண்மை என்பது கருத்தியல் தளத்திலும், பொருளாதார தளத்திலும் பலவகையான இடையீடுகளை சந்தித்தே தீரவேண்டிய நிலை எல்லா நாடுகளுக்குமே இருக்கிறது. மனித உரிமை தளத்தில் சீனாவும் கடுமையான அழுத்தங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது, இப்போதைக்கு அதை அசைக்க முடியாது என்றாலும், அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. குடியேற்றம் குறித்த அதன் கொள்கைகள் கடுமையான விமர்சனத்தை சந்திக்கின்றன. எந்த நாடும் வெளியிலிருந்து வரும் விமர்சனங்களிற்கு தப்ப முடியாது. இறையாண்மையின் பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது. வழக்கம்போல அ.மார்க்ஸ் நல்ல கட்டுரை ஒன்றை இதுகுறித்து எழுதியிருக்கிறார். அவரை வசைபாடுவதில் காட்டும் உற்சாகத்தை அவரது நல்ல கட்டுரைகளை விமர்சன ரீதியாக வாசிப்பதிலும் காட்டலாம். ஒவ்வொரு வார்த்தையிலுமா வஹாபிசம் ஒட்டிக்கொள்ளும்? அப்படி ஒட்டிக்கொண்டாலும் ஜெயமோகனை படித்து அதை கழுவி விடலாம் என்பதால் அரசியல் தத்துவம் சார்ந்த கட்டுரைகளை வாசகர்கள் கவனமாக படிக்கவேண்டும். மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் சார்ந்து, சர்வதேச குடிமைச் சமூகம் உருவாகிறதா, வடிவமற்றுப் பரவும் எதிர்பாற்றலால் தேசங்கள் கடந்த மக்கள் திரள் (multitude) சக்திகள் உருவாகின்றனவா என்பதெல்லாம்தான் இன்று அரசியல் தத்துவம் தீவிரமாக விவாதிக்கும் கேள்விகள். பூச்சாண்டி அரசியல் இதையெல்லாம் கண்டுகொள்ளாது.

2. கருத்தாநேர்மையா?: ஜெயமோகன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இன்னொரு பிரச்சினையையும் நான் முதலிலேயே எதிர்கொண்டுவிட வேண்டும். ஒருவரது கருத்தை எதிர்கொள்வது பிரச்சினையல்ல, அவரது நேர்மைதான் முக்கியம் என்கிறார். (உ-ம்:1. ஒருவரின் கருத்துக்களை நான் எதிர்கொள்ளவேண்டுமென்றால் அக்கருத்துக்களை அவர்நேர்மையுடன் சொல்கிறார் என்று நம்பவேண்டும்அந்நம்பிக்கை இல்லாதபோது நிழலுடன் போரிட்டு அடையப்போவது என்ன?” 2.தமிழில் நேர்மையும் கொள்கைப்பிடிப்பும் கொண்ட ஒவ்வொரு இடதுசாரியையும் ஒவ்வொரு பெரியாரியரையும் நான் அங்கீகரித்து வழிபாட்டின் தொனியில் எழுதியிருப்பதைக் காணமுடியும்.ஏனென்றால் நான் பார்ப்பது அந்தக்கருத்துக்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை மட்டுமேநான் என் வாசிப்பாலும் அனுபவத்தாலும் அவர்களிடம் முரண்படுகிறேன் என்பது அந்த மதிப்பை ஒருபோதும் குறைப்பதில்லை.- அவதூறு செய்கிறேனா? ஜூன் 23,2012;) நான் இதை மிக ஆபத்தான கருத்தாக பார்க்கிறேன். ஒருவர் அவர் கருத்தை நேர்மையாக சொல்கிறாரா இல்லையா என்பதை எப்படி மதிப்பிடுவது? எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், முத்துகிருஷ்ணன் ஆகியவர்களிடம் நேர்மை இல்லை என்று ஜெயமோகன் தீர்ப்பளிக்கிறார். அவர்களை மிகச்சிறந்த நேர்மையாளர்களாக மதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதை எப்படி புரிந்துகொள்வது? அந்தக்காலத்தில் இடதுசாரிகள் மூச்சுக்கு நூறுமுறை “இன்டக்ரிடி, இன்டக்ரிடி” என்று ஜெபிப்பார்கள். அப்போதிருந்தே எனக்கு மிகுந்த அருவருப்பை ஏற்படுத்தும் கருத்தாகத்தான் அது இருந்தது. காரணம் அடுத்தவர் நேர்மை, இன்டக்ரிடி இதையெல்லாம் பற்றி பேசுவது என்னை போலீஸ்காரனாக, துப்பறிவாளனாக, நீதிபதியாக மாற்றுகிறது. நான் சிந்தனையாளன். நீதிபதி அல்ல. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதே என்னுடைய ஆப்த வாக்கியம். சொல்பவர் கடன் வாங்கி சொல்கிறாரா, காசு வாங்கிக்கொண்டு சொல்கிறாரா, சுத்த சுயம்புவாக தன் ஆன்மாவிற்குள்ளிருந்து தோண்டியெடுத்து (பயமாக இருக்கிறது) சொல்கிறாரா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. சொன்னது என்ன என்பதுதான் என் அக்கறை. இதற்காக “ஆசிரியன் இறந்துவிட்டான்”, “குறியியக்கத்தின் சுயமின்மை” என்பதெல்லாம் வரை போக வேண்டியதில்லை. சாதாரண பொதுப்புத்தியே நல்லதை யார் சொன்னாலும் கேட்கனும், கெட்டதை யார் சொன்னாலும் கேட்கக் கூடாது என்பதுதான். நல்லது எது, கெட்டது எது என்று தீர்மானிப்பதன் தளமே சுதந்திரம். பெரியார் அழகாகச் சொல்வார். நான் திருடனாகவோ, சுயநலமியாகவோ, பச்சோந்தியாகவோ இருந்தால் உங்களுக்கு என்ன? நான் சொல்வது சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்று. ஆகையால் நான் தம்பி அரங்கசாமி எதை சொன்னாலும் அந்தக் கருத்தைதான் எதிர்கொள்வேன். அவர் ஜெயமோகன் தூண்டுவிட்டு சொன்னாரா, “சுய” சிந்தனையில் சொன்னாரா, அல்லது சிலர் ஐயப்படுவது போல ஜெயமோகனே அவர் அடையாளத்தில் எழுதுகிறாரா என்பதெல்லாம் என் பிரச்சினை கிடையாது. அதேபோல ஜெயமோகனின் உள்நோக்கம் என்ன, அவர் எந்த அரசியல் ஆதாயத்திற்காக இதை சொல்கிறார், அவர் பின்னால் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அவர் ஒரு கருத்தை சொல்கிறார். அதை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் என் கோட்பாடு. உளவு அமைப்பு அதிகாரிகளுடன் பேசுவது, போலீஸ் அதிகாரிகளுடன் பேசுவது, கிறுத்துவத் தன்னார்வக் குழுக்களுக்கு உள்ளேயிருந்தே உளவுத் தகவல்கள் பெறுவது இதெல்லாம் என் வேலையல்ல.பொதுவெளியில் சுய-நியாயப்பாட்டிற்காக பேசுவதும், என்னுடைய அளவுகோல்களைக் கொண்டு பிறரை அளந்து பார்ப்பதும் எனக்கு சிறிதும் ஒவ்வாத செயல்கள். நான் கருத்துக்களுடன் மட்டுமே பேசுகிறேன். நபர்களோடு அல்ல. கண்காணிப்பது என் வேலையல்ல. என்னுடைய பேனாப்டிகானை (panopticon) தகர்த்து நொறுக்கிவிட்டேன். ஜெயமோகன் சுய நியாயப்பாட்டின் பிரம்மாண்ட மேடையில் அமர்ந்து, எந்திரன் ரஜினி போல உளவுப்படைகள் இலட்சம், எந்திர நாய்கள் நூறு ஆகிவயற்றுடன் அனைவரது வாழ்க்கையையும் விசாரணை செய்து தீர்ப்புகள் வழங்குவதைப் பார்த்து என்னால் சிரிக்க மட்டுமே முடியும். காஃப்காவின் மின்னலைகளை பகிராத ஒரு சமகால இலக்கியத்தை என்னால் யோசிக்க முடியாது. கொடுப்பினை உள்ளவர்களுக்கு வாய்க்கும் காஃப்காவும், தெல்யூஸும். மற்றவர்கள் நீதிபதியின் ஆசனத்திற்கு முந்தலாம். பரஸ்பர குற்றச்சாட்டுகளில் முக்குளிக்கலாம்.

3. ஏகாதிபத்தியம் என்றால் என்னஜெயமோகனின் கட்டுரைகளில் வெளிப்படும் முக்கியமான அரசியல் கருத்து கிறித்துவ நிறுவனங்கள் ஏகாதிபத்திய நலன்களுக்காக இயங்கும் முன்னணி அமைப்புகள் என்பது. இதில் அவர் மதம் என்பதைவிட அரசியல் பொருளாதாரமே அடிப்படையாக இருப்பதாக பலமுறை தெளிவுபடுத்துகிறார். அவரிடம் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்று கேட்பதில் பொருள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் சிக்கலான கேள்வியைக் கண்டால் நான் எழுத்தாளன், கோட்பாட்டாளனல்ல என்று சொல்லிவிடுவார். ஆகவே அவரைக் கேட்காமல் நானே என் சிந்தனைக்கு எட்டியதை சொல்லிவிடுகிறேன்.  இன்றைய நிலையில் ஏகாதிபத்தியம் என்று எதையும் வரையறுப்பது கடினம். ராணுவ, தொழில் கூட்டமைப்பில் (military-industrial complex) அமெரிக்கா அதிகபட்ச ஆற்றலுடன் இருக்கிறது. ஆனால் பொருளாதார அளவில் அது சீனாவுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கடன், நிலுவை பட்டியலில் அமெரிக்கா அதிகபட்ச கடனாளியாகவும், சீனா அதிகபட்ச கடன் கொடுத்த நாடாகவும் இருப்பதை நீங்கள் கூகுள் செய்து பார்க்கலாம். இப்படிப்பட்ட சீன-அமெரிக்க வர்த்தக நிலையின் அரசியல் அர்த்தம் என்ன, யூரோவிற்கும் டாலருக்கும் முரண்பாடு இருக்கிறதா இல்லையா, ஏன் ஐரோப்பிய நாடுகள் பலவும் திவாலாகும் நிலையில் இருக்கின்றன என்பதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் உலக பொருளாதார அமைப்பு முன்னெப்போதும் இல்லாது அளவு சிக்கலடைந்திருப்பது தெரியும். முதலீட்டின் பன்னாட்டுப் பரிமாணம் அதன் தேசியப் பரிமாணத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ள காலம் என்று சொல்லலாம். ஆனால் தேசம் என்ற கட்டுமானம் இல்லாமல் இந்த அமைப்பை நிர்வகிப்பதும் கடினம். தேசம் என்பது வேண்டும். ஆனால் அது சர்வதேசிய முதலீட்டிற்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும். எந்தவொரு தேசிய அரசும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும், அந்நிய பொருள்களை அனுமதிக்க வேண்டும். இந்திய கார்ப்பரேஷன்களும் அந்நிய நாடுகளில் முதலீடு செய்கின்றன. நைஜீரியாவில் இந்திய முதலீடு மொத்தம் $13 பில்லியன் என்கிறது கூகுள் செய்தி. 6500 கோடி ரூபாய் என்று நினைக்கிறேன். சின்ன தொகைதான். ஆனால் பொருளாதார வலைப்பின்னல் என்பதைப் பற்றி யோசிக்க மிகவும் உதவக்கூடியது. ஏக ஆதிபத்தியம் என்பது குண ரீதியான ஒரு ஒப்பீட்டு ரீதியான வார்த்தையாகவே இன்று அர்த்தப்படும். ஏகம் அநேகமாய் பரம்பொருளைப்போல திரிவது முதலீடு என்ற மாய சக்திதான். ஒவ்வொரு தேசிய இறையாண்மையும் தன்னை செலவாணிகளாக, நாணயங்களாக (currency) மாற்றிக்கொண்டு சூதாடியைப்போல மேஜையை சுற்றி நின்று விளையாடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் உழைக்கும் மக்களும், வறியவர்களும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏதோ போராடுகின்றனர், கோஷங்கள் போடுகின்றனர், வோட்டுப்போடுகின்றனர், ஆட்சியை மாற்றுகின்றனர். ஆனால் வரலாறு அவர்கள் கைகளிலிருந்து சூதாடிகளின் மேஜைக்கு போய்விட்டது. 

4. இந்திய தேசமும்அந்நிய நிதியும் இந்திய அரசும், இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் அந்நிய நிதியை பெரிது விரும்புகின்றன. FDI (Foreign Direct Investment) என்ற நேரடி அந்நிய மூலதனமே இந்திய பொருளாதார வளர்ச்சியின் மூல நாடி. மைக்ரோசாஃட் அதிபர் பில் கேட்ஸ் இந்தியா வந்தபோது ஒரு அரசருக்கு உரிய மரியாதையும், கவனமும் அவருக்கு தரப்படவில்லையா? பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அந்நிய முதலீடு பெருமளவில் கிடைக்க தமிழக கோவில்கள் பலவற்றில் விசேஷ பூஜைகளும், அர்ச்சனைகளும் செய்யவில்லையா? சி.பி.ஐ(எம்) முதலமைச்சர் புத்ததேப் அந்நிய முதலீட்டினை பெற கடுந்தவம் புரியவில்லையா? எல்லா அரசியல் கட்சிகளுமே வளர்ச்சிக்கு முதலீடு தேவை, முதலீடு பெருமளவில் வேண்டுமென்றால் அது அந்நிய முதலீடாக இருந்தால்தான் சாத்தியம் என்பதில் முழு உடன்பாட்டுடன் இயங்கி வருகின்றன. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த பிம்பம் ஒருபுறம், கையூட்டு கமிஷன்கள் ஒருபுறம் என்ற இருவித கவர்ச்சிகள் அனைவரையும் இயக்குகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் தாங்கள் முதலீடு செய்யும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குறைப்பதில், அந்த நாட்டு அரசாங்கத்தை பலவீனமாக்குவதில் அந்நிய நிதிக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? இந்திய அரசு வலுவாக இருந்தால்தானே அவர்கள் தொழில் இங்கு நன்றாக நடக்கும்? அவர்கள் முதலுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்?

ஒருவேளை ஜெயமோகன் சொல்வதை இப்படி எடுத்துக்கொள்வோம். அந்நிய நிதி மூலங்கள் இந்திய அரசினை கைக்குள் வைத்திருக்க பல்வேறு அதிருப்திகளை வளர்த்து வைத்துக்கொள்ள விரும்புகின்றன; தேவைப்பட்டால் அவற்றை தூண்டிவிட்டு பெரிதாக்க விரும்புகின்றன என்கிறார் ஜெயமோகன். நைஜீரியா விஷயத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். வேண்டுமென்றால் பெரிதுபடுத்திக்கொள்ள வசதியாக அதிருப்திகளுக்கு கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்பதால் இந்த அந்நிய நிதிகள் அறிவாளிகளையும், கல்வியாளர்களையும் வந்தடைகின்றன என்று அவர் நினைக்கிறார். அவர்களும் ஆதரவு அளிப்பவர்களுக்கு விசுவாசமாக இருக்க விரும்பவதால் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கித் தருகின்றனர் என்பதே அவர் வாதம்.

இது எவ்வளவு அடிப்படையற்ற கற்பனை என்பதை புரிந்துகொள்ள அந்நிய நிதி என்பதை அளவு ரீதியாக முதலில் கவனித்தால் போதும். இந்திய பட்ஜெட்டில் வரவு செலவு கணக்கு காட்டப்படும் பணம் பதினாலு இலட்சம் கோடி. ஒரு ஆண்டில் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நிதி குத்துமதிப்பாக 12,500  கோடி முதல் 15,000 கோடி ரூபாய் என்று கூகுள் தகவல்களிலிருந்து சொல்ல முடிகிறது. ஒரு ஆண்டில் மட்டும். ஒரு தொழிற்சாலை தொடங்கவே முந்நூறு கோடி, ஐநூறு கோடி என்று செலவாகிறது. தமிழ் சினிமாவே கூட நூறு கோடி முதலீட்டில் எடுக்கத் துணிகிறார்கள். அரசியல்வாதிகள் பெறும் கையூட்டுக்களைப் பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவர்களது சொத்துக்களெல்லாம் பிரமிப்பூட்டும் எல்லைகளில் இருக்கின்றன. இதெல்லாம் அந்நிய நிதியின் உள்வரத்து தோற்றுவித்த பொருளாதார நடவடிக்கைகளின் விளைவு என்று கூறப்படுகிறது. இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளில் வரும் நிதிக்கும், ஃபோர்டு ஃப்வுண்டேஷன் வழங்கும் நிதிக்கும் என்ன ஒப்பீடு? அரசு சாரா நிறுவனங்கள் (NGO) எவ்வளவு கோடிகள் பெறுகின்றன?  எனக்குத் தெரிந்து ஒரு தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பு பெறும் நிதி என்பது இலட்சங்களில்தான் இருக்கிறது. அப்படியே ஒரு அமைப்பு சாரா நிறுவனத்திற்கு சில கோடிகள் கிடைத்தாலும் அவர்கள் அதை ஆயிரக்கணக்கானோருக்கு பகிர்ந்தளிக்க நேர்கிறது. ஏதோ ஒரு சில பேர் கார்களில் போய்விட்டு வருவதை பார்த்துவிட்டு “ஆஹா, அயல்நாட்டு பணம், அயல்நாட்டு பணம்” என்று கூவுபவர்கள் ஒரு அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் வகை வகையான பத்து கார்கள் முன்னும் பின்னும் வர பவனி வருவதை என்னவென்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

எதற்காக இந்த ஒப்பீடு என்றால ஆயிரக்கணக்கான கோடிகளை நேரடியாக முதலீடு செய்து இந்தியாவின் முதலாளி வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் வர்க்கம் எல்லோருடனும் நேரடியாக பேரத்தில் இருக்கும் அந்நிய நிதி மூலங்கள் அவர்கள் ஒத்துழைப்புடன் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் நேரடியாக செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட கட்சி ஒத்துழைக்கவில்லையென்றால் அதை கவிழ்த்துவிட்டு ஒத்துழைக்கும் கட்சியின் ஆட்சியை கொண்டுவரலாம். (சுப்ரமண்யம் சுவாமி சொல்வதை விகடனில் படித்தீர்களா? நினைவிலிருந்து சொல்கிறேன்: “சோனியா பிஜேபி ஆட்சியை கவுத்து எனக்கு ஆட்சியை பிடிச்சுகொடுங்கோன்னு கேட்டா(ர்)! ஜெயலலிதாவும் கேட்டா(ர்)! நான் டீ பார்ட்டி வைச்சேன்”. எவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார் இந்த மனிதர்) எந்த ஆட்சிக்கும் தலைவலி தர எந்த பகுதியிலும் எந்த ஒரு குட்டி அரசியல்வாதியையும் தூண்டிவிட்டு பிரச்சினை செய்யலாம். தேவைப்பட்டால் ஆயுதங்களை கூட தருவித்துக் கொடுக்கலாம். அந்நிய நிதி என்பது ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான கோடிகளின் விளையாட்டு என்பதால் அது பாதாளம் வரை நேரடியாகப் பாயும். இப்படியிருக்க அரசை கட்டுக்குள் வைத்திருக்க ஆய்வாளர்களுக்கு சுண்டைக்காய் பணம் கொடுத்து, அவர்கள் ஆய்வை திசை மாற்றி, கருத்தியலை உருவாக்கி, அதை ஊடகத்துள் செலுத்தி, பின்னர் இந்திய அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தும் திட்டம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் சாமர்த்தியமாக இருக்கிறது. என்னவோ அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், தேசிய முதலாளிகளும் இந்த தேசத்தை பாதுகாக்க துடிப்பது போலவும், அறிவுஜீவிகள் மட்டுமே காசு வாங்கிக்கொண்டு காட்டிக் கொடுப்பது போலவும் ஜெயமோகனின் பூச்சாண்டி அரசியல் காமெடி ஃபில்ம் காட்டுகிறது. உண்மை என்னவென்றால் தேசமென்பது மக்கள் என்று கொண்டால் அறிவு ஜீவிகள் மட்டுமே அவர்கள் நலனை பேச முனைகிறார்கள். அதிகாரப் பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறார்கள். வறியவர்கள் சந்திக்கும் அநீதியின் கோர தாண்டவத்தை மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறார்கள். தேசத்தை அந்நிய நிதி மூலங்களுடன் சேர்ந்து சுரண்டும் கும்பலுக்கு அது பிடிக்காததால் இவர்களை தேச விரோதிகள் என்கின்றன. ஜெயமோகனிடம் இடம் என்ன என்பதை அவர் தீர்மானிக்கட்டும். வாசகர்கள் முதலில் என்ன நடக்கிறது என்பதில் தெளிவு பெற வேண்டும்.

எஸ்.வி.ஆர் நூலையே எடுத்துக்கொள்வோம். அவர் எழுதித்தான் திராவிட இயக்கம் பிரிவினை கோரிக்கையை வைத்ததா? பெரியார் சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்தாரா? தி.மு.க மாநில சுயாட்சி கோரிக்கையாக பிரிவினை கோரிக்கையை மாற்றியதா? பல்வேறு விதமான தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றியவண்ணம் இருக்கின்றனவா? அவரைக்கேட்டுதான் RAW என்ற இந்திய உளவுத்துறை அமைப்பு இலங்கை ஆயுதப் போராட்டித்திற்கான முகாம்களை தமிழகத்தில் நடத்தியதா? அவருடைய நூலால் என்ன இதுவரை இல்லாத கருத்தியல் பரவி இந்தியாவிற்கு பெரிய சிக்கல் ஏற்படப்போகிறது? 1994-இல் தனுவின் படத்தை தியாகியின் படம் என்று ஊர்வலத்தில் தூக்கிச்சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் அடுத்தடுத்த தேர்தல்களில் பி.ஜே.பி.யும், காங்கிரஸும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லையா? வெகுஜன அரசியலில் எதைப்பேசினாலும் சகஜம். அறிவுஜீவிகள் முரண்களை பதிவு செய்தால் தேசத்திற்கு ஆபத்து வந்துவிடுமா? பூச்சாண்டி சூ ஓடிப்போ.

5. இந்திய அரசே காட்டும் பூச்சாண்டிஇடது சாரிகளும் கூட இந்த பூச்சாண்டி அரசியலில் கைதேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு பிடிக்காதவர்களை CIA, NGO என்று போட்டுத்தள்ளும் காலத்தில்தான் எஸ்.வி.ஆரை அவதூறு செய்து கேடயம் எழுதியதை இன்று ஜெயமோகன் மேற்கோள் காட்டுகிறார். கோட்பாட்டு ரீதியான உடன்பாடு இல்லாத பகுதிகளிலிருந்து அவதூறை மட்டும் எடுத்துக்கொள்வதை சந்தர்ப்பவாத அரசியல் என்பார்கள். அது போக அரசியலில் குழப்பம் என்பது  அனைவருக்கும் நேர்வதுதான். ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டத்தை பி.ஜே.பி, இந்து முன்னணி இன்னபிற ராமர் பேரால் எதிர்க்கின்றன. மீனவர்களிடையே செயல்படும் ஒரு சில கிறித்துவ என்.ஜி.ஓக்களும் சுற்றுச்சூழல் காரணத்திற்காக எதிர்க்கின்றன. அங்கே ஒரு இடதுசாரி நண்பர் என்னிடம் சொன்னார்: “அந்நிய சக்திகள் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காக சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கின்றன” என்று. பி.ஜே.பியும் எதிர்க்கிறதே என்றேன். அது மதவாத சக்தி என்றார். பூச்சாண்டி அரசியலுக்கு முரண்களை புரிந்துகொள்ளும் சக்தி கிடையாது.

பூச்சாண்டி அரசியலில் ஜெயமோகனின் புதுமை தமிழில் வலது சாரி அரசியல் சார்பாக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதும், சிந்தனையாளர்கள் மீதும் அதை ஏவுவதுதான். ஏனென்றால் சோ ராமசாமி, சுப்ரமண்யம் சுவாமி போன்றவர்கள் எஸ்.வி.ஆரையோ, அ.மார்க்ஸையோ, முத்துகிருஷ்ணனையோ கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் விடுபட்ட ஏரியாவில் பூச்சாண்டி அரசியல் செய்ய முனைந்திருக்கிறார். இந்திய அரசே அதைச்செய்யும்போது ரொம்ப வேடிக்கையாக இருக்கும். கூடங்குளம் போராட்டத்தில்தான் அது நடந்தது. நல்லவேளையாக கூடங்குளம் போராட்டத்தை ஜெயமோகன் ஆதரிப்பதால் இப்போது நான் சொல்வது அனைவருக்கும் விளங்கும். கூடங்குளம் போராட்டத்தை அந்நிய சக்திகள் தூண்டி விடுவதாக அரசு கூறியது. அந்த போராட்டத்தை வழிநடத்தும் உதயகுமாரின் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அமைப்புகளையெல்லாம் தடலாடியாக ரெய்டு செய்து தினமலர் தலைப்புச் செய்தியாக்கினார்கள். அந்தப் பக்கம் வந்த யாரோ ஐரோப்பிய தேசாந்திரியை பிடித்து நாடகீயமாக நாடு கடத்தினார்கள். அமெரிக்க ஆதரவுள்ள அரசு சாரா நிறுவனங்கள் அணு உலையை தடுப்பதாக பிரதமரே சொன்னார். எதற்காக தடுக்க வேண்டும்? அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுதானே இந்த காரியத்தில் இறங்குகிறார்கள்? அமெரிக்கா நினைத்தால் நேரடியாக இந்த அணு உலைகளை தடுக்க, ஆட்சேபிக்க முடியாதா? இந்த அணு உலையை ரஷ்யா கொடுக்கிறது. அடுத்தடுத்த அணு உலைகள் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்றன. இதில் பிரச்சினை செய்தால், அடுத்த உலைகளுக்கும் பிரச்சினை வராதா? இன்று பொருளாதார மந்த நிலையை உலகளாவியதாகத்தானே சொல்கிறார்கள் (Global recession)? எந்த ஒரு நாட்டிலும் பொருளாதார நடவடிக்கையை தடுப்பது எல்லா நாடுகளையும்தானே பாதிக்கும்? கிரீஸ் திவாலானால் ஏன் மற்ற நாடுகளில் விலை ஏறுகிறது? இன்றைய உலக பொருளாதார அமைப்பில் தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறியேறும். எனவே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து உலக பொருளாதார மந்த நிலையை அதிகரிப்பதில் எந்த அந்நிய சக்திக்கும் ஆர்வம் கிடையாது. அந்நிய நிதிக்கும், இந்திய நிதிக்கும் பெரிய முரண்பாடும் கிடையாது. ஓடுகிற நீரில் என் கை நீர் எது என்பது போலத்தான் உலக முதலீட்டியம் இயங்குகிறது.

ஆனால் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவேண்டுமென்றால் அதற்கு நியாயம் கற்பிக்க வேண்டுமல்லவா? போராடும் மக்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி கைது பண்ணும் அரசு அதற்கு ஏற்ற ஃபில்ம் காட்ட வேண்டாமா? அதற்குத்தான் இந்த பூச்சாண்டி அரசியல். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகனுக்கு என்ன தேவை என்றுதான் புரிந்துகொள்ள முடியவில்லை.

6. ஆய்வுக்கு ஆதரவு கொடுங்கள்ஜெயமோகனுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி எனக்கில்லாவிட்டாலும் தேவை இருக்கிறது. நான் மேற்கொள்ள விரும்பும் பல்வேறு பண்பாட்டு ஆய்வுகளுக்கு நிதி உதவிக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. மீண்டும், மீண்டும் அந்நிய நிதிகளிடமே போகவேண்டியிருக்கிறது. ஜெயமோகன், பேசாமல் நீங்களே விஷ்ணுபுரம் அறக்கட்டளை ஒன்றையும். அதன் சார்பாக விஷ்ணுபுரம் ஆய்வு நிறுவனம் ஒன்றையும் தொடங்குங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு உண்டு. அ.நீ, ராஜீவ் மல்ஹோத்ரா மூலமாக ஹிந்துஜா போன்ற நிறுவனங்களிடமிருந்தும் “தேசிய” நன்கொடை வாங்கலாம். மணிரத்தினம் மூலமாக ரிலையன்ஸை கூட அணுகலாம். மொத்தமாக ஒரு கணிசமான நிதியை உருவாக்கினீர்கள் என்றால், என்னைப் போன்றவர்களின் ஆய்வுகளுக்கு உதவி செய்யலாம். எனக்கும் அடிப்படையில் இந்த நாட்டின் பண்பாட்டின்மீது மிகுந்த மதிப்பும், காதலும் உண்டு என்பதால் இந்திய இறையாண்மையை எந்த வகையிலும் தொந்திரவு செய்யாமல் ஆய்வை மேற்கொள்கிறேன். அரவிந்தன் நீலகண்டன் மேற்பார்வையில்கூட வேலை செய்கிறேன். ஆய்வாளர்களின் கருத்தியல் சுதந்திரத்தை நீங்கள் மதித்து, கிறித்துவ ஏகாபத்திய நிறுவனங்கள் செய்வதாக நீங்கள் சொல்வதுபோல ஆய்வின் போக்கில் தலையிடமாட்டீர்கள், முன் நிபந்தனைகள் விதிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. சீக்கிரம் “தேசிய நிதி” சக்திகளை சமூக அறிவியல், மொழியியல், வரலாறு போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதில் ஈடுபடுத்துங்கள். இல்லாவிட்டால் அந்நிய நிதியைத்தான் நாட வேண்டியிருக்கும்.

அதே போல அரசு நிர்வாகமும் உண்மையிலேயே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யத் தொடங்கினால் அரசு சாரா நிறுவனங்களுக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ஒரு கிராமத்தில் துப்புரவு தொழிலாளிக்கு உரிய சம்பளத்தை பெற்றுத்தர ஒரு NGO பணியாளர் போராட வேண்டியிருக்கிறது. சில இடங்களில் கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் எங்கேயும் இதுபோன்ற காரியங்களை செய்வதை நான் பார்க்கவில்லை. செய்கிறார்கள் என்றால் மகிழ்ச்சிதான். பெரியார் பெயரை சொன்னால் உங்களுக்கு பிடிக்காது. அதனால் காந்தியும், வினோபாவும் பிறந்த மண்ணில் ஒரு துப்புரவு தொழிலாளி கெளரவமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் தமிழகமெங்கும் ஏற்படுத்திவிட்டீர்களென்றால் உங்களை சிலை வைத்து வழிபடுவேன். வெல்க பாரதம்!