Wednesday, July 31, 2013

பழைய சிறுகதைகள் ஏழு- தரவிறக்க

1988 ஆம் ஆண்டு என்னுடைய சிறுகதைகள் ஏழு 'பிரம்மனைத் தேடி' என்ற சிறு தொகுப்பாக பாளையங்கோட்டையிலிருக்கும் 'இலக்கியத் தேடல்' என்ற பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இந்தக் கதைகளில் ஆறு 'ராகம்' இலக்கிய இதழில் 1984 -1985 பிரசுரமானவை. ஒரு கதை 'இனி' இதழில் 1987இல் பிரசுரமானது. ஸில்வியா என்ற புனைபெயரில் நான் அப்போது எழுதிய கதைகளோடு எந்த உறவும் இப்போது  எனக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பதின் பருவத்தின் பழைய காதலியை திடீரென்று சந்திக்க நேரிட்டது போல இருக்கிறது இந்தக் கதைகளை புரட்டிப் பார்க்கும்போது. 'குங்குமம்' இதழின் பொறுப்பாசிரியர், நண்பர் என்.கதிர்வேலன் இந்த சிறு தொகுப்பினைத் தேடிக் கண்டுபிடித்து என்னிடம் கொடுத்தார். அதை அப்படியே ஸ்கேன் செய்து பதிவேற்றியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நண்பர் கதிருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'புதிய பார்வை' இதழில் வெளியான இன்னும் சில கதைகளையும் கதிர் தேடிக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நான் நன்றி தெரிவிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் மேலும் ஏற்படட்டும்.  நான் எழுதி சேமிக்காமல் விட்டு விட்ட எல்லா கதைகளும் என்னிடம் சிறுகச் சிறுக திரும்ப வந்து சேர்ந்துவிடட்டும்.  நான் எந்தப் பாதைகளிலெல்லாம் பயணம் செய்திருக்கிறேன் என்று நானும் தெரிந்து கொள்கிறேன்.

சிறுகதைத் தொகுப்பினை தரவிறக்குவதற்கான சுட்டி:

https://docs.google.com/file/d/0BzHCwqQ3UxT7RlZMR1gtSTE4UDQ/edit?usp=sharing


இப்படிப்பட்ட அறிமுகக்குறிப்புகள் இல்லாமல் இந்த தளத்தில் நான் பிரசுரம் செய்யும் கதைகள் புதியவை என்று அறிக.




Friday, July 26, 2013

Avant garde இலக்கியம், இசை, படங்கள், ஓவியம் ஆகியவற்றுக்கான வலைத்தளம்

போர்ஹெஸின் உரைகளை நான் இந்தத் தளத்தில் பகிர்ந்ததை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். என் தளத்துக்கு வருவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழில் Avant garde இலக்கியத்திற்கான  சாத்தியப்பாடுகளை பழைமைவாதிகளும் பத்தாம் பசலி அம்மாஞ்சிகளும் இன்னும் முழுமையாக குழி தோண்டிப் புதைத்துவிடவில்லை என்பதற்கான அறிகுறியாகவே போர்ஹெஸின் உரைகளுக்கான வரவேற்பினை நான் கண்டுகொண்டேன். ஒரு மொழியின், கலாச்சாரத்தின் வளம் கலை இலக்கியத்தில் துணிச்சலாக மேற்கொள்ளப்படுக்கின்ற பரிசோதனை முன்னோடி முயற்சிகளினாலேயே சாத்தியமாகிறது. அறுதப் பழசான, சந்தையில் விலை போகிற, கற்காலத்தில் செத்த மூளைகளினால் உற்பத்தி செய்து நிரப்பப்படுகின்ற அம்மாஞ்சி, மடிசஞ்சி எழுத்துக்களை காலத்தின் ஓட்டம் அலட்சியமாக அழித்துவிடும். எதிர்கால சந்ததியினர் மடிசஞ்சிகளின் வெளிப்பாட்டு குப்பைகளைப் படித்து இவற்றையா நம் முந்தைய தலைமுறையினர் வாசித்துக் கொண்டாடினர் என்று வியப்பர். நம் சமகாலத்தில் ஓரமாக விளிம்புகளில் சிறு குழுவினரிடம் மட்டுமே செல்வாக்கு பெற்று விளங்கும் Avant garde கலை இலக்கிய படைப்புகள் எதிர்காலத்தில் canonical literature ஆகக் கொண்டாடப்படும். உலகம் முழுவதும் நடப்பது இதுதான் என்றாலும் உலகின் பிற பகுதிகளில் avant garde கலை இலக்கியங்களை  தீர்க்கதரிசனம் உடைய இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் விழிப்புடன் இருந்து பரிசோதனைகளை தொடர்ந்து அடையாளம் காட்டி, ஆதரித்து தங்கள் பண்பாட்டிற்கு வளம் சேர்த்து வருகிறார்கள். பழமைவாதிகள் அடைக்கும் avant garde கலை இலக்கிய வாசல்களை அவர்கள் தொடர்ந்து முட்டி மோதி உடைத்துவருகிறார்கள்.  அப்படிப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகவே http://www.ubu.com  வலைத்தளம் செயல்பட்டு வருகிறது. போர்ஹெஸின் ஹார்வர்ட் பல்கலைக்கழக உரைகளையும் நான் இந்தத் தளத்தில்தான்  கேட்டேன். Avant garde இலக்கியம், இசை, திரைப்படங்கள், தத்துவம், ஓவியங்கள், 'வெளியாள் கலைகள்' (outsider arts), ethnopoetic arts ஆகியவை இந்தத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பாருங்கள்.


Tuesday, July 16, 2013

நாங்கள் கோபியை மிரட்டினோம் | சிறுகதை


நாங்கள் கோபியை மிரட்டினோம் | சிறுகதை

நாங்கள் கோபியை அடித்துப் பிடித்து இழுத்து வந்தபோது அவன் எங்கள் கண்ணுக்குப் புலப்படாத முள்ளம்பன்றிகளை கவனித்துக்கொண்டிருந்தான்.  பிரபாதான் அவன் மண்டையில் ஒன்று போட்டான் “என்னலே அங்க முறச்சு முறச்சு பாக்க?” கோபி திகைத்து வேறு உலகிலிருந்து இறங்கி வந்தவன் போல  “பன்னி, முள்ளம் பன்னி” என்றான். மோகன் ஜிப்பை அவிழ்த்து “இதாலே முள்ளம் பன்னி” அப்படின்னு கேட்டபோது கோபி “இதுக்கு முள் இல்லைலா” என்றான். அப்போதே எங்களுக்கு பொறி தட்டியிருக்கவேண்டும் சரியான வட்டு கேசிடம் மாட்டிக்கொண்டோமென்று. பிரபா இன்னொரு அறை விட்டதில் கோபி சுருண்டு விழுந்துவிட்டான். அவனை எழுப்பி தோளோடு தோளாக சாய்த்து நிறுத்தி நடத்தி ஐந்தாவது மாடியிலிருந்த எங்கள் அபார்ட்மெண்டுக்கு மெதுவாகத் தள்ளிக்கொண்டு வந்தபோது நான்காவது மாடி ஸ்டேட்பேங்க் நரசிம்மன் எதிரில் வந்தார். அவருக்கு படிக்கட்டில் வழி விட்டு ஓரமாய் ஒதுங்கும்போது கோபி ‘பன்னி, முள்ளம் பன்னி” என்று முனகினான். நரசிம்மன் எங்களை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே கீழே போனார். அவர் குடித்து மயங்கிவிட்ட நண்பனை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வருகிறோம் என்று நினைத்திருக்க வேண்டும்.  பிரபா எரிச்சலோடு தன் தலை முடியை கோதிக்கொண்டான்.

எங்கள் நண்பர் குழாத்தினை ஒரு நீர்த்தொட்டியில் வசிக்கும் மீன்கள் என்று கொண்டோமானால் கோபி அதன் அடியாழத்தில் நீந்தும் தங்க மீன். சீட்டைக் கலைத்து போட்டோமென்றால் செலவாணியாகமல்  தங்கி மீந்துவிடுகிற இஸ்பேடு ராஜா. கோபி எப்போதும் தன்னை ‘நான்’ என்று விளித்து பேசுவதில்லை; தன்னைத்தானே கோபி என்றுதான் அழைத்துக்கொள்வான். கோபிக்கு அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது, கோபிக்கு இப்போ பசிக்கிறது, கோபிக்கு மனசு சரியில்ல என்றெல்லாம் அவன் பேசுவதை கேட்க அலாதியாக இருக்கும். ஆரம்பத்தில் எங்களுக்கு சில குழந்தைகளின் விளையாட்டு போல அவனுடைய பேச்சு பட்டதால் நாங்களும் அவனை அப்படியே பேச ஊக்குவித்தோம் என்பது உண்மைதான். ஆனால் சில தருணங்களில் கோபியின் பேச்சு முறை கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரபா “ங்கோத்தா ஒளுங்கா பேசித் தொலையேண்டா” என்று கோபியை பல முறை திட்டியிருக்கிறான். மோகன் கோபியை ஏதாவது டாக்டரிடம் காட்டலாமா என்று ஒரு முறை கேட்டபோது கோபி அவனை அடிக்க போய்விட்டான். அவனை அவ்வளவு கோபமாக நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அவன் முகம் பொதுவாக எந்த உணர்ச்சியையும் காட்டாத ஜடம் போலத்தான் இருக்கும். “கோபி இப்ப சந்தோசமா இருக்கான்” அப்படின்னு அவன் சொன்னால் நாங்கள் அவன் சந்தோசமா இருக்கான் என்று புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஆனால் அவன் மோகனை அடிக்க போனபோது அவனுக்கு வலிப்பு வந்தது போல கையும் காலும் இழுத்துக்கொண்டன. முகம் கோணிவிட்டது. பற்களை நறநறத்துக் கடித்தான். நாங்கள் பயந்து போனோம். மோகன் வெலவெலத்து போய் “ வேண்டாம் கோபி எந்த டாக்டரிடமும் போக வேண்டாம்” என்று திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தான். கோபி அமைதியடைய அரை மணி நேரத்திற்கும் மேலானது.

கோபிக்கு அவன் வேலை பார்த்த ஐ.டி. கம்பெனியில் நல்ல மரியாதை இருந்தது. அவன் கோட் எழுதுவதில் கில்லாடி. யாருடனும் அதிகம் பேசமாட்டான். கணிணி முன்னால் உட்கார்ந்தானென்றால் வேலையை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டான். ப்ராஜக்ட் மானேஜராக பல முறை பதவி உயர்வு அளிக்க அவன் கம்பெனி முன் வந்தபோதெல்லாம் அவன் தீர்மானமாக “கோபி ஒரு புரோகிராமர். கோட் எழுதுவதுதான் அவனுக்கு சாகசம், நிர்வாகம் அவன் துறையல்ல” என்று மூன்று வரி கடிதம் எழுதி பதவி உயர்வுகளை மறுத்துவிட்டான். ஒரு கலைஞனைப் போல அவன் கோட் எழுதுகிறான் என்று அவன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் கிறங்கியது. அலுவலகத்தில் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. ஸ்வேதாவை கோபிக்கு பிடிக்கும் என்று ஒரு முறை சொன்னான். நாங்கள் கேட்டுக்கொண்டோம். கோபியை ஸ்வேதா விசித்திரமான பிராணிகளிடம் பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வாஞ்சையுடன் நடத்தியிருக்கவேண்டும். கோபி ஸ்வேதாவை இன்னும் கோட் எழுதி முடிக்கப்படாத ப்ரோக்ராம் என்று நினைத்திருக்கவேண்டும். அவன் அவ்வபோது ஸ்வேதாவைப்பற்றி எங்களிடம் சொன்னவற்றிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டது அவ்வளவுதான். கோபி எங்கள் அபார்ட்மெண்டில் வைத்திருந்த கணிணியில் ஸ்கிரீன் சேவராய் ஸ்வேதா புகைப்படத்தை வைத்திருந்தான். அந்த புகைப்படத்தில் ஸ்வேதா நடிகை பிரியா மணியின் ஒல்லியான பிம்ப வடிவு போல இருந்தாள். சிவப்பு நிற ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தாள். இமைகள் கனத்திருந்தன. அவளுடைய கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருப்பது கோபிக்கு பிடிக்கும் என்று கோபி சொல்லுவான். அரையளவுதான் படம் என்பதால் ஸ்வேதாவின் இடுப்பு தெரியவில்லை. பிரபா கோபியிடம் ஸ்வேதாவின் இடுப்பு இந்த அளவு இருக்குமா என்று காற்றில் கைகளால் வரைந்துகாட்டி  கேட்டான். கோபி கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு அளவை டேப்பை எடுத்து கையில் பிடித்து ஸ்வேதாவின் இடுப்பு இவ்வளவு அகலம் என்று பிராபாவிடம் காட்டினான். பிரபாவுக்கு உற்சாகமாகிவிட்டது. " நீ சொள்ளமாடன் இல்லலே" என்று சிரித்தான். "நீ அவளுக்க இடுப்ப பிடிச்சயா இல்ல இன்னும் கீழ பிடிச்சயா?" "கோபி இன்னும் கீழதான் பிடிச்சான்" என்றான் கோபி. மோகனும் இப்போது கோபியை சீண்டுவதில் சேர்ந்துகொண்டான். மோகன்தான் முதலில் ஸ்வேதாவை பிரியா மணி பிம்பத்தோடு ஒப்பிட்டவன். அலுவலகத்தில் மேலே கப்போர்டில் இருந்த ஒரு ஃபைலை எடுக்க மேஜை மேல் ஸ்வேதா ஏறியிருக்கிறாள் அப்போது கோபி அவள் கீழே விழாமல் பிடித்து இறக்கிவிட்டிருக்கிறான்.

கோபியாய் இருந்தவன் 'நாங்களாய்' 'நாமாய்' மாறியபோது இதே சம்பவத்தை கோபி விவரித்த முறைதான் எங்களுக்கு கலவரத்தை ஏற்படுத்திய  சம்பவமாய் அமைந்தது. "ஸ்வேதா மேஜ மேல ஸ்டூல் போட்டு ஏறினாளா, ஸ்டூலுக்கு கால் சரியில்லையா, கிடு கிடுன்னு ஆடுச்சா நாம அவள ஓடிப்போய் பிடிச்சமா, அவ கீழ விழாம தப்பிச்சா" என்ற கோபியைப் பார்த்து "லேய் அவ குண்டிய நாங்க எங்கலெ பிடிச்சோம்? நீதாம்ல பிடிச்ச" என்று பிரபா கத்தினான். மோகன் 'விடுரா இப்பத்தான் இவன் நாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கான். சீக்கிரமே நான்னு சொல்லிருவான். இல்லையா கோபி" என்று நைச்சியம் பேசினான். "நாளைக்கே இவன் ஏதாவது ஒரு கொலய கிலைய பண்ணிட்டு வந்து, நாங்க அன்னிக்கு கொல பண்ணினமான்னு ஆரம்பிக்கப் போரான் பாரு அப்பத் தெரியும் இந்த அர வட்டு நமபள என்ன பிரச்சனையில மாட்டிவிடுதான்னு" அப்படின்னு பிரபா சொன்னது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. நல்லவேளையாக கோபி கொலை எதுவும் செய்யவில்லை ஆனால் அவன் முள்ளம் பன்றிகளை பார்த்துவிட்டான். அவன் நாங்கள் மூவருமே முள்ளம் பன்றிகளைப் பார்த்ததாய்ப் பேச ஆரம்பித்தான்.

நாங்கள் முள்ளம் பன்றிகளை தண்டவாளத்துக்கு அருகே பார்த்தபோது இரவு மணி எட்டு இருக்கும். அந்த முள்ளம்பன்றிகள் கூட்டமாக ஆணுரு ஒன்றை துரத்திக்கொண்டு வந்தன. ஆணுரு ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தது. பன்றிகள் சிலிர்க்கும்போதெல்லாம் அவற்றின் முட்கள் விர்விர் என்று கூரிய ஈட்டிகள் போல வெளி வந்தன. ஒவ்வொரு பன்றியாய் துள்ளிக் குதித்து காற்றில் பறந்து வந்து ஆணுருவைக் குத்திக் கிழித்துவிட்டு முட்பந்தாய் சுருண்டு விழுந்தது. பறந்து குத்திக் கிழிக்கத் தயாராய் இருக்கும் பன்றிகள் தங்கள் நாக்குகளை சப்புக்கொட்டின. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு... நாங்கள் பன்றிகளை எண்ண எண்ண அவை எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே இருந்தன. சமூகம் மொத்தமுமே முள்ளம்பன்றிகளாய் மாறிவிட்டது போல அவற்றின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. நாங்கள் எங்கே திரும்பினாலும் நாங்கள் முள்ளம் பன்றிகளைக் கண்டோம். தூரத்தில் ரயில் வரும் ஓசை கேட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் ரயில் நிறைய பன்றிகள் வரப்போவதாய் சொல்லிக்கொண்டோம். ரயிலில் பன்றிகள் வந்து சேர்ந்தனவா இல்லையா என்று தெரியாது ஆனால் மறு நாள் செய்தித்தாள்களில் தண்டவாளத்திற்கு அருகே பன்றித் தாக்குதலில் இறந்த மனிதனின் உடல் கிடப்பது தலைப்பு செய்தியாக வந்தது.  நாங்கள் கோபி ஒரு கொலையைப் பார்த்திருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தோம்.

பிரபா கெட்டவார்த்தைகளோடுதான் எப்போதும் பேசுவான். அதை கோபி ரசிக்கிற மாதிரி நடிக்கிறான் என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டு. மோகன் கெட்டவார்த்தைகளே பேசமாட்டான் ஆனால் அவன் பிரபாவைவிட வக்கிரமானவன் என்று கோபிக்கு ஒரு நினைப்பு உண்டு. கோபி இது போல எங்கள் மூவரைப் பற்றியுமே மோசமான அபிப்பிராயங்கள் கொண்டவனாக இருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் தண்டவாளத்துக்கு அருகே நடந்த கொலையை நாங்களும் பார்த்தோம் என்று அவன் சொல்லி வருகிறானோ?

பிணம் கண்டுபிடிக்கப்பட்ட தண்டவாளத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்களிடம் கோபி பேச முயற்சி செய்தபோது நாங்கள் அவனை அடித்து இழுத்து வரவேண்டியதாயிற்று. நாங்கள் அவனை எங்கள் அபார்ட்மெண்ட்டுக்குள் கொண்டுவந்து தரையில் தள்ளினோம். தரையில் தள்ளியதுதான் தாமதம் கோபி துள்ளிக் குதித்து கத்தலானான். “இங்க வந்திருச்சு இங்க வந்திருச்சு ரூம் முழுக்க இருக்கு ஆமா ரூம் முழுக்க இருக்கு” மோகன் தன் தலையில் அடித்துக்கொண்டான். பிரபா “ஒனக்கு ஒன்னும் இல்லடா; அமைதியா இருடா எதுவும் இங்க இல்லடா”

பன்றிகள் அபார்ட்மெண்ட் முழுக்க நிறைந்திருந்தன. அவற்றிலேயே மிகவும் பெரிய பன்றியை கோபிக்கு நன்றாகத் தெரியும். அதுதான் தண்டவாளத்துக்கு அருகே ஆணுருவை பாய்ந்து பாய்ந்து தாக்கியது. அதன் முட்களில் ரத்தம் இன்னும் காயமலிருக்கிறது. சாக்கடையில் படுத்து உருண்டிருந்த அந்த பன்றிகளின்  உடலில் இருந்து எழும் துர்நாற்றம் எங்கள் அபார்ட்மெண்ட் முழுக்க நிறைக்கிறது.  நிணவாடையும் கூவத்தின் சாக்கடை நாற்றமும் அறையை நிறைக்க கோபிக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. கோபி பெரும் சத்தத்துடன் வாந்தி எடுத்தான். மோகன் ஓடிப்போய் சமயலறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கோபியின் முகத்தை கழுவி துடைத்துவிட்டான். மோகனும் பிரபாவும் கோபியைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு கூடத்தைக் கழுவி விடத் தலைப்பட்டனர்.

பிரபா கோபியின் கணிணியை எழுப்பினான். ஸ்க்ரீன் சேவரில் சிரித்த ஸ்வேதாவை கட்டிலில் படுத்திருக்கும் கோபி பார்க்கும்படிக்கு கணிணியைத் திருப்பி வைத்தான். நாங்கள் அந்தக் கணிணியின் கொண்டையில் எலி போல உட்கார்ந்திருந்த சிறு முள்ளம் பன்றியை கவனிக்கத் தவறிவிட்டோம். கோபிக்கு அந்த சிறு பன்றியையும் தெரியும். அது ஆணுருவின் குறியை எட்டிப்பிடிக்க தீவிர முயற்சி செய்தது கோபியின் கண்களுக்குள் காட்சியாய் விரிந்தது. அது கணிணியின் கொண்டையிலிருந்து மேலே சட்டகத்தின் மேல் ஏறி தன் நீண்ட நாக்கை நீட்டியது. ஸ்வேதாவின் புகைப்படத்தில் அவளுடைய முலைகளின் மேல் முள்ளம் பன்றியின் நாக்கு அருவருப்பாய் அலைந்து துழாவியது.

வாயில் அழைப்பு மணி ஒலித்தது. மோகன் கதவைத் திறந்தபோது நான்காவது மாடி ஸ்டேட்பாங்க் நரசிம்மன் நின்றிருந்தார். மோகன் அவரை உள்ளே கூப்பிட்டு உட்காரவைத்தான். பிரபா “கெழ்ட்டு கூதியான் வண்ட்டான்” என்று முணு முணுத்தான். “பேச்சிலர்ஸுக்கு இந்த காம்ப்ளெக்ஸில் இடமே தரமாட்டா. நீங்கல்லாம் வேலை பாக்கறவா. ஸ்டூடண்ட்ஸ் இல்ல” என்று ஆரம்பித்த நரசிம்மனை மோகன் இடைமறித்து “நீங்க நெனைக்க மாரியெல்லாம் எதுவும் இல்ல சார். கோபிக்கு ஒடம்பு சரியில்ல” என்றான். “அப்பா அம்மா, சொந்தகாரா இருக்காளோ இல்லியோ” “இருக்கா சார். துபாய்ல. பிரபா இன்னைக்கு ஃபோன்ல கூப்பிடப்போறான்” “என்ன ஒடம்புக்கு?” “எதயோ பாத்து பயந்திருக்கான்.” “பேயா? நம்ம காம்ப்ளெக்ஸ்ல பேயெல்லாம் கெடையாதே” “பேயில்லை சார். பன்னி. முள்ளம் பன்னி” சிறு முள்ளம் பன்றியின் நாக்கு ஸ்வேதா புகைப்படத்தில் அவள் முலைகளுக்குக் கீழே நீண்டது. “முள்ளம் பன்னியா!” நரசிம்மன் ஹாலில் இருந்து இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் கோபி படுத்திருந்த அறைக்குள் எட்டிப்பார்த்தார். “தல வேதன சார். ரெண்டு அடி கூட கொடுத்துப் பாத்துட்டேன். ஒன்னுக்கும் மசியாம ‘பன்னி பன்னி’ங்கிறான்” பிரபாவுக்கு சொல்லும்போதே தொண்டை அடைத்தது. நரசிம்மன் பார்த்திருக்கவே பிரபா கோபியை அணுகி, அவன் நெற்றியைத் தடவி, தலையைக் கோதிவிட்டு “ஒன்னும் பயப்படாதடே. ஒன்னும் ஆகாது கேட்டியா? லேய் கேட்டியா?” என்றான். கோபி கணிணியை நோக்கி கையை நீட்டி சிறு முள்ளம் பன்றியைக் காண்பித்தான். அறை  முழுக்க சிறிதும் பெரிதுமாய் பன்றிகள் நிறைத்துக்கொண்டிருந்தன. நரசிம்மன் கிளம்பத் தலைப்பட்டார். போகிற போக்கில் “ஏதோ இண்டெர்கேஸ்ட் லவ் அஃபேராம். கொன்னு ரயில் தண்டவாளத்துக்கிட்ட போட்டுட்டா. நம்ம காம்ப்ளெக்ஸுக்கு பக்கத்துல. நியுஸ் பேப்பர்ல எல்லாம் வந்திருந்தது. பாத்தேளோ? தம்பிக்கு லவ் அஃபேரெல்லாம் ஒன்னும் இல்லியே” “இல்ல சார்” “பேர் என்ன சொன்னேள்?” “கோபி. ஜி.ஆர்.கோபாலகிருஷ்ணன்” “ கோபி, வரட்டா” என்றவர் “கோபி என் பெயரில்ல சார்" என்று மோகன் சொல்வதைக் காதில் வாங்காமல் இறங்கிப் போனார்.

“முள்ளம் பன்னி உண்மைல  பன்னி இல்ல. அது ஒரு வகை எலி. தெர்யுமா ஒனக்கு” என்றான்பிரபா. கோபியின் கண்கள் அகல விரிந்தன. கிட்டத்தட்ட மயக்கமானவன் போல படுத்திருந்தவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். "பிரபா நீயும் முள்ளம் பன்னிகளைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்ட இல்ல. அது பன்னி இல்ல எலி வகதான் நீ சொன்னது கரெக்டு. அது பெருச்சாளி வக" பிரபா என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவன் போல ஒரு விநாடி நின்று மீண்டான். "பிரபா எல்லா எடமும் முள்ளம் பன்னி நிக்கி. அதான் நீ கூட எப்பப்பாரு கெட்ட வார்த்தயா பேசர. மோகனுக்கு மனசு பூரா விசமா இருக்கு"

நாங்கள் கோபியை ஒரு வழியாய் தூங்க வைத்துவிட்டு துபாயிலிருக்கும் அவன் அப்பாவை தொலைபேசியில் அழைத்து பேசினோம். கோபியின் ரயில் தண்டவாளத்துக்கு அருகே நடைபெற்ற வன்கொலையொன்றைப் பார்த்து சித்தம் கலங்கிவிட்டது போல பேசுகிறான் செயல்படுகிறான் அவன் கண்களுக்கு எங்கே பார்த்தாலும் முள்ளம் பன்றிகளாய் தெரிகின்றன என்று மோகனும் பிரபாவும் மாறி மாறி சொன்னபோது ராமநாதன் ஃபோனில் கடகடவென்று சிரித்தார். நீங்கள் இரண்டு பேரும் கூட அவனுக்கு முள்ளம் பன்றிகளாய் தெரிகிறீர்களா என்று கேட்டு பெரிய ஜோக்கை சொன்னவர் போல வெடித்துச் சிரித்தார். எங்களுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டோம். ஒரு வேளை கோபி நார்மலாய் இருக்க எங்களுக்குத்தான் தண்டவாளத்துக் கொலையைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து புத்தி பேதலித்துவிட்டதோ? ராமநாதன் என் பையன் ஒரு ஜீனியஸ். மேதைகளுக்கே உரிய கிறுக்குத்தனம் அவனுக்கும் உண்டு. நீங்கள்தான் அவன் சொல்வதை கவனிக்கவேண்டும் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார்.

அன்றிரவு நாங்கள் சரியாகத் தூங்கவில்லை. கோபி மட்டும் நன்றாக உறங்கினான். அரைகுறைத் தூக்கத்தில் மோகன் எழுந்து தொலைக்காட்சியை முடுக்கி மிட் நைட் மசாலா பார்க்க யத்தனித்தான். தொலைக்காட்சி திரையெங்கும் முள்ளம் பன்றிகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தன. மோகன் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிட்டு படுக்கக் கிளம்பியபோது பிரபா கட்டிலுக்கடியில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். "என்னவாக்கும் தேடுத?" என்று கேட்டான் மோகன். "கொளுத்த ஆட்டுக்குட்டி போல ஒரு.." "ஒரு?" "பன்னி ஓடிச்சு பாத்துக்க"

மாறுநாள் நாங்கள் யாரும் ஆஃபீசுக்கு போகவில்லை. எல்லோரும் சிக் லீவ் சொல்லிவிட்டோம். மோகன் காலையிலிருந்து யார் யாருக்கோ ஃபோன் பண்ணி பேசிக்கொண்டே இருந்தான். பிரபாவுக்கு நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கோபி தன் முள்ளம் பன்றிகளுடன் ஒத்திசைந்து போய்விட்டது போல இருந்தது; அந்த பன்றிகள் அவன் தோள் கை கால் என்று மேலே ஏறி விளையாடுவதும் அவன் அவற்றை இயல்பானதாக எடுத்துக்கொள்வதுமாய் ஆகிவிட்டிருந்தது. ஒரே இரவில் ஏற்பட்ட அன்னியோன்யம் என்பதாலோ என்னவோ உறவு சீராக இருக்கவில்லை. பன்றிகளின் முட்கள் கிழித்து கோபியின் உடலில் ஆங்காங்கே ரத்தக் கோரைகள் ஏற்பட்டன. என்றாலும் கோபி சிவனே என்றிருந்தான்.

மோகன் ஃபோன் பேசிய நண்பர்களிலொருவர் ஜோதிடர் ஒருவரின் முகவரியைக் கொடுத்து போய்ப் பார்த்துவிட்டுவரச் சொன்னார். அவர் பிரசன்னம் பார்த்து பரிகாரம் சொல்லுவாராம்.

மோகன் ஃபோனிலேயே ஜோதிடரிடம் எங்களின் சமீபத்திய முள்ளம் பன்றி பிரச்சனையைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னான். அவர் எங்களை உடனடியாகக் கிளம்பி வரச் சொன்னார், நாங்கள் அவரை நேரில் சென்று பார்த்தபோது ஜோதிடர் ஆயிரத்து ஒரு ரூபாய் தட்சிணை கேட்டார். மோகன் எந்த சலனமும் இல்லாமல் அவர் கேட்டதை எடுத்துக்கொடுத்தான். பிரபா யாருக்கும் கேட்காவண்ணம் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தான். கோபிக்கு பிரபா தன் மனசுக்குள் என்ன கெட்ட வார்த்தை போட்டான் என்று அறிய ஆவலாயிருந்தது.

"ஒங்கள்ள யாருக்கும் பன்னிமாடசாமி குல தெய்வமா?"

மோகனும் பிரபாவும் கோபியைப்பார்த்தார்கள். கோபி அப்போதுதான் தன் தோளிலிருந்து ஒரு முள்ளம் பன்றியை தரையில் இறக்கிவிட்டான்.

"முள்ளம் பன்னி பன்னி இல்ல. எலி. பெருச்சாளி இனம். இல்லடா பிரபா?"

ஜோதிடர் "தம்பி என்ன சொல்லுதாரு" என்றார்.

"ஜோசியர் சார் கோபி என்ன சொல்லுதாருன்னா, நீங்க நெனைக்க மாரி எங்களுக்கு பன்னி மாட சாமி குல தெய்வமாட்டு இருந்து அத நாங்க கவனிக்காம வுட்டு அதனால இப்ப முள்ளம் பன்னியா கோபிக்கு முன்னால மாடசாமி சுத்துதுன்னு இல்ல. முள்ளம் பன்னி ஒரு எலி. பெருச்சாளி வகயறா. அதனால எலி மாடசாமி குல தெய்வமான்னுதான் கோபிகிட்ட கேட்கனும்"

"கோபி யாரு?"

"அவனேதான் சார், தன்னைத் தானே அவன் பேர் சொல்லி கூப்ட்டுக்குவான்"

ஜோதிடர் எங்களை விநோதமாகப் பார்த்தார். கோபியைக் கூப்பிட்டு சோவிகளைக் குலுக்கிப் போடச் சொன்னார். கோபி சோவிகளை முள்ளம்பன்றிகளிடம் காட்டி அவைகளிடம் அனுமதி வாங்கிவிட்டு குலுக்கிப் போட்டான். ஒற்றைச் சோவி மட்டும் மேல் நோக்கி திறந்து விழுந்தது.

"மாகாளில்லா தம்பிய கண் தொறந்து பாக்கா!" முள்ளம் பன்றிகள் சுற்றும் முற்றும் கும்மாளமிட்டு குட்டிக்கரணம் போட்டன.

"திருப்பதிக்கு போங்க. கீழ அடிவாரத்துலேயே வராகமூர்த்தி இருக்கார். அவருக்கு ஒரு சகஸ்ரநாமம் பன்னிட்டு வந்துருங்க. எல்லாம் சரியாப் போவும். இல்லய இங்க பக்கத்துல திருவிடந்தைக்குப் போங்க வராக மூர்த்திக்கு தொளசி மால வாங்கி சாத்திட்டு மூனு தடவ சுத்திட்டு வந்துருங்க"

"கோபிதான் அப்பவே சொன்னானே முள்ளம் பன்னி பன்னி இல்லன்னுட்டு. பன்னி தொந்தரவு தருது அதனால வராகம், பன்னி அவதாரத்த கும்புடு அப்டின்னு பரிகாரம் சொல்றீங்க. கோபி சொல்றான் பிரபா சொல்றான் முள்ளம் பன்னி பன்னி இல்ல பெர்ச்சாளி"

"தம்பி, சாதிய வச்சு ஆளா, ஆள வச்சு சாதியா? சாதிய வச்சுதான ஆளு. அது மாதிரிதான் இதுவும். பெருச்சாளி வகயறாக்கு எதுக்கு பெரியவங்க பன்னின்னு பேர் வச்சாங்க? குலத்தளவே ஆகுமாம் குணம். பன்னியால தொந்திரவுன்னா பன்னி அவதாரத்துக்குத்தான் பிரீதி செய்யனும். போய்ட்டு வாங்க, நல்லா இருங்க"

நாங்கள் சோர்வாக எங்கள் அபார்ட்மெண்டுக்குத் திரும்பினோம். வழியெல்லாம் பிரபாவும் மோகனும் கோபியைத் திட்டிக்கொண்டே வந்தனர். "எல்லாத்தையும் கெடுக்கிறாம்பா இவன்" என்றார்கள், கோபி தன் முள்ளம் பன்றிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே கோபி போய் தன் கணிணியில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். "என்ன வேலயா?" "இல்ல கத" "கதயா! என்ன தலப்பு?" "நாங்கள் கோபியை மிரட்டினோம்".















Wednesday, July 10, 2013

போர்ஹெஸின் (Jorge Luis Borges) கவிதை பற்றிய உரைகள்





போர்ஹெஸ் 1967, 1968 ஆகிய ஆண்டுகளில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கவிதை பற்றி ஆற்றிய உரைகள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆவணக்காப்பகங்களில் தற்செயலாய் கண்டுபிடிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞரும், சிறுகதையாளரும், இலக்கிய சிந்தனையாளரும், பெரும் படிப்பாளியுமான போர்ஹெஸின் ஆங்கில உரைகள் இப்போது இணையத்தில் நேரடியாகக் கேட்கக் கிடைக்கின்றன. இந்த உரைகளை ஆற்றியபோது போர்ஹெஸ் முழுமையாக கண்பார்வையிழந்திருந்தார். பிளேட்டோ, போ, பைரன், ஜாய்ஸ், ஹோமர் என்று ஏரளமானோரின் படைப்புகளிலிருந்து உதாரணங்கள் காட்டி பேசும் போர்ஹெஸ் கவிதையை மட்டும் மையமாகத் தன் உரைகளில் கொண்டிருக்கவில்லை; உரைநடை வடிவங்கள், இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்புக் கோட்பாடு, இலக்கியம் சார்ந்த தத்துவார்த்த பிரச்சனைகள் என முக்கியமான பலவற்றையும் பற்றி பேசுகிறார். இந்த உரைகளில் போர்ஹெஸ் இலக்கிய நுண்ணுணர்வு என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்டுவதாக நான் உள்வாங்கினேன்.  இந்த உரைகளை கேட்டுப்பாருங்கள். இந்த ஆங்கில உரைகளைக் கேட்பது  கவிதை, இலக்கியம் குறித்த நம் விவாதங்களை மேம்படுத்தக்கூடும். 

  1. தொகுப்பாளர் முன்னுரை  
  2. கவிதையின் புதிர் 
  3. உருவகம் (பகுதி 1)
  4. உருவகம் (பகுதி 2)
  5. கதையை சொல்லுதல் 
  6. சொல்லின் இசையும் மொழிபெயர்ப்பும்
  7. சிந்தனையும் கவிதையும் (பகுதி1)
  8. சிந்தனையும் கவிதையும் (பகுதி2)
  9. கவிஞனின் சமயம் 

Tuesday, July 9, 2013

ஹெமிங்வேயின் சிறுகதை "Hills like white elephants" | மொழிபெயர்ப்பு


எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ் பெற்ற சிறுகதை ‘வெள்ளையானைகளைப் போன்ற மலைகள்”. மூன்றே பக்கங்களிலான இந்த சி றுகதையைப் பற்றி விமர்சகர்கள் ஆயிரக்கணக்காண பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள். சொற்சிக்கனத்துக்குப் பேர் போன ஹெமிங்வே இந்தக் கதையில் எதையும் வெளிப்ப்டையாகச் சொல்வதில்லை. மைய கதாபாத்திரங்களான ஆணும் பெண்ணும் அமெரிக்கன் என்றும், இளம்பெண் என்றும் மட்டுமே குறிக்கப்படுகின்றனர். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அந்த ஆண் அந்தப் பெண்ணை கருக்கலைப்பு செய்யச்சொல்கிறான் என்பது சூசகமாகக் கதையில் சுட்டப்படுகிறது. வரிக்கு வரி அலங்காரமில்லை, உவமைகளில்லை. ஆனால் வெள்ளையானைகள் போன்ற மலைகள் பல அர்த்தங்களைச் சொல்லும் குறியீடுகளாகிவிடுகின்றன. 


--------------------------------------------------

வெள்ளையானைகளைப் போன்ற மலைகள்

எப்ரோ சமவெளியில் மலைகள் நீளமாகவும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப் பக்கத்தில் நிழலோ மரங்களோ ஏதுமில்லை; ரயில்நிலையம் சூரிய வெளிச்சத்திலிருந்த இரண்டு ரயில்களுக்கு நடுவே இருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகே பக்கத்தில் கட்டிடத்தின் இளம் சூட்டுடன் கூடிய நிழலில் கதவைத் திறந்தால் ஒரு மதுபானக் கடையும் அதன் கதவில் பூச்சிகளை உள்ளே விடாதிருக்க மூங்கில் மணிகளால் ஆன திரையும் இருந்தன. அந்த அமெரிக்கனும் இளம் பெண்ணும் கட்டிடத்திற்கு வெளியில் படிந்த நிழலில் இருந்த மேஜையில் அமர்ந்திருந்தனர். மிகவும் வெப்பமாக இருந்த அந்த இடத்திற்கு பார்சலோனா விரைவு வண்டி  நாற்பது நிமிடங்களுக்கு ஒரு முறை வரும்; அந்த சந்திப்பில்  இரண்டு நிமிடங்கள் நின்றுவிட்டு மாட்ரிட் நகருக்கு செல்லும்.

“நாம் என்ன குடிக்கலாம்?” அந்த இளம் பெண் கேட்டாள். அவள் தன் தொப்பியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்திருந்தாள்.

“மிகவும் வெப்பமாக இருக்கிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.

“பியர் குடிக்கலாம்”

“டோஸ் செர்வெசாஸ்” என்று அந்த மனிதன் திரையை நோக்கி சொன்னான்.

“பெரிய கோப்பைகளா” ஒரு பெண்மணி வாயிலில் இருந்து கேட்டாள்.

“ஆமா, இரண்டு பெரிய கோப்பைகள்”

அந்தப் பெண்மணி இரண்டு கண்ணாடிக்கோப்பை பியர்களும் அவற்றிற்கு அடியில் வைக்கக்கூடிய உறிஞ்சு பட்டைகளையும் கொண்டுவந்து வைத்துவிட்டு அந்த மனிதனையும் இளம் பெண்ணையும் பார்த்தாள். அந்த இளம்பெண் மலைகளின் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சூரிய வெளிச்சத்தில் அவை வெள்ளையாக இருந்தன. அந்த நாட்டுப்புறம் பழுப்பாகவும் வறண்டும் இருந்தது.

“அவை வெள்ளை யானைகளைப் போல இருக்கின்றன” என்றாள் அவள்.

“நான் அப்படியொன்றைப் பார்த்ததேயில்லை” அந்த மனிதன் பியரைக் குடித்தான்.

“இல்லை, நீ பார்த்திருக்க மாட்டாய்”

“நான் பார்த்திருக்கக்கூடும்” என்றான் அவன். “ நான் பார்த்திருக்க மாட்டேன் என்று நீ சொல்வதால் மட்டும் எதுவும் நிரூபணம் ஆவதில்லை”

இளம்பெண் மணிகளால் ஆன திரையைப் பார்த்தாள். “ அவர்கள் எதையோ அதில் வண்ணம் தீட்டி எழுதியிருக்கிறார்கள். என்ன சொல்கிறது அது?”

“அனிஸ் டெல் டொரொ. அது ஒரு மதுபானம்”

“அதைக் குடிக்கலாமா?” 

அந்த மனிதன் “இங்கே கவனியுங்கள்” என்று திரையின் வழி கத்தினான். அந்தப் பெண்மணி பாரிலிருந்து வெளியே வந்தாள்.

“ நான்கு கோப்பைகள். எங்களுக்கு அனிஸ் டெல் டொரோ வேண்டும்”

“தண்ணீருடனா?’

“உனக்கு தண்ணீருடன் வேண்டுமா?”

“எனக்குத் தெரியலியே” என்றாள் இளம்பெண் “ தண்ணீருடன் நன்றாக இருக்குமா?”

“அது சரி”

“தண்ணீருடன் உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டாள் பெண்மணி.

“ ஆமா தன்ணீருடன் தாங்க”

“இது அதிமதுரம் போல ருசிக்கிறது” என்ற இளம் பெண் தன் கண்ணாடிக் கோப்பையை கீழே வைத்தாள்.

“எல்லாவற்றின் வழியும் அப்படித்தான்”

“ஆமாம். எல்லாமே அதிமதுரம் போலத்தான் ருசிக்கிறது. அதிலும் எதற்கெல்லாம் நீ ரொம்ப நாள் காத்திருந்தாயோ அதுவெல்லாமே அப்படித்தான் ருசிக்கிறது”

“ஓ நிறுத்து அதை”

“நீதான் ஆரம்பித்தாய்” என்றாள் இளம்பெண். “நான் சந்தோஷமா, சந்தோஷப்படுத்தப்பட்டுதான் இருக்கேன். என் நேரமும் நன்றாகத்தான் கழிந்தது”

“ நாம மகிழ்ச்சியா நேரத்த கழிக்கலாமே”

“ சரி. நான் முயற்சி செய்யத்தான் செய்தேன். அந்த மலைகள் வெள்ளையானைகளைப் போல இருக்குன்னு சொன்னேன். அது கெட்டிகாரத்தனமா இல்லையா?”

“ அது கெட்டிகாரத்தனம்தான்”

“இந்து புது வகை மதுவை குடித்துப் பார்க்க விரும்பினேன். அவ்வளவுதானே நாம செய்வது- பொருட்களைப் பார்ப்பதும் புதிய பானங்களை குடித்துப் பார்ப்பதும்?”

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்”

அந்த இளம்பெண் தூரத்திலிருந்த மலைகளைப் பார்த்தாள்.

“ அவை ரொம்ப அழகான மலைகள்” என்றாள் இளம்பெண் “ அவை வெள்ளை யானைகளைப் போல இல்லை. நான் மரங்களின் வழி தெரியும் அவற்றின் மேற்புறத்தினை மட்டுமே நான் சொன்னேன்”

“இன்னும் கொஞ்சம் நாம் குடிக்க வேண்டுமா?”

“சரி”

இளம் சூடான காற்று மணிகளாலான திரையை மேஜையை நோக்கித் தள்ளியது.

“பியர் குளிர்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கிறது” என்றான் அந்த மனிதன்

“நன்றாக இருக்கிறது” என்றாள் இளம்பெண்

“ அது உண்மையில் ரொம்ப எளிமையான அறுவை சிகிக்சை, ஜிக்.” என்றான் அவன். “உண்மையில் அது அறுவை சிகிக்சை கூட இல்லை”

மேஜையின் கால்கள் அழுத்தியிருந்த தரையை அந்த இளம் பெண் பார்த்தாள்.

“நீ ஒன்றும் சொல்ல மாட்டாய் என்று எனக்குத் தெரியும் ஜிக். உண்மையில் அது எதுவுமேயில்லை. காற்றை லேசாய் உள்ளே விடுவதுதான்”

இளம்பெண் எதுவும் சொல்லவில்லை.

“நான் உன் கூட வருவேன். உன் கூடவே எல்லா நேரமும் இருப்பேன். அவர்கள் கொஞ்சம் காற்றை உள்ளே விடுவார்கள் அவ்வளவுதான். அதன் பிறகு எல்லாமே சுத்தமாய் இயற்கையாக மாறிவிடும்”

“ அதற்கப்புறம் நாம என்ன செய்வோம்?”

“அதற்கப்புறம் நாம ரொம்ப நல்லா இருப்போம். முன்பு நாம எப்படி இருந்தோமோ அது போலவே இருப்போம்”

“எதுனால அப்படி சொல்ற?”

“அது ஒன்னுதான் நம்மை படுத்துகிறது. அது மட்டும்தான் நம் சந்தோஷத்தைக் கெடுத்தது”

இளம்பெண் மணியாலான திரையைப் பார்த்தாள் கையை நீட்டி திரையிலிருந்த இரண்டு மணிகளை எடுத்தாள்.

“அதுக்குப் பிறகு எல்லாம் சரியாகிடும் நாம இரண்டு பேரும் சந்தஷோமா இருப்போம் அப்டிங்கிறியா?”

‘நாம சந்தோஷமா இருப்போம்னு எனக்குத் தெரியும். நீ பயப்படாதே. அதை செய்து முடித்த நிறைய பேரை எனக்குத் தெரியும்”

“எனக்கும்தான் நிறையபேரைத் தெரியும்.” என்றாள் இளம்பெண் “அதற்கப்புறம் அவர்கள் அவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க”

“சரி. உனக்கு பிடிக்கலைன்னா நீ செய்ய வேண்டாம். உனக்கு இஷ்டமில்லாம நான் அத உன்னை செய்ய வைக்கமாட்டேன். ஆனா அது ரொம்ப எளிமையானதுன்னு எனக்கு நல்லா தெரியும்”

“நீ உண்மையிலேயே நா அதச் செய்யனும்னு விரும்புறியா?”

“செய்யக்கூடிய சிறந்த காரியம் அதுதான்னு நான் நினைக்கேன். ஆனா உனக்கு அதுல இஷ்டம் இல்லைனா நீ செய்ய வேண்டாம்” 

“நா அதச் செஞ்சேன்னா நீ சந்தோஷமா இருப்பியா, எல்லாமே முன்னே மாதிரி ஆயிருமா நீ என்னை காதலிப்பியா?”

“இப்பவுமே நான் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியும்”

“ எனக்குத் தெரியும். ஆனா நான் அதச் செஞ்சுட்டேன்னா, எல்லாமே பழையபடி நல்லா ஆயிருமா நா அந்தப் பொருளெல்லாம் வெள்ளை யானைங்க போல இருக்குன்னு சொன்னா உனக்குப் பிடிக்குமா?”

“எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்பவுமே எனக்கு அது ரொம்ப பிடிக்குது. ஆனா என்னால் அதப் பத்தி நினைக்க முடியல. எனக்கு கவலை வந்துட்டுன்னா நான் எப்டி ஆயிர்றேன்னு உனக்குத் தெரியும்தானே”

“ நா செஞ்சுட்டேன்னா நீ அப்புறம் கவலையே படமாட்டியா?”

“நா அதப் பத்தி கவலப் படமாட்டேன். ஏன்னா அது ரொம்ப எளிமையானது”

“அப்டின்னா நா அத செஞ்சுக்கிறேன். ஏன்னா நான் என்னைப் பத்தி கவலைப்படல”

“என்ன சொல்ற நீ?”

“ நான் என்னப் பத்தி கவலப்படல”

“நான் உன்னைப் பத்தி கவலைப் படறேன். அக்கறையோட இருக்கேன்”

“ஓ ஆமா. ஆனா நான் என்னப் பத்திக் கவலப்படல. நா அதச் செஞ்சுடறேன். எல்லாமே அப்புறம் நல்லா ஆயிடும்”

“ நீ அப்டி நினைச்சேன்னா நீ அதச் செய்ய வேண்டாம்” 

இளம்பெண் எழுந்து ரயில் நிலையத்தின் கடைசி முனை வரை நடந்து சென்றாள். மறுபக்கத்தில் தானிய வயல்களும் எப்ரோ நதிக்கரையில் மரங்களும் இருந்தன. தூரத்தில் நதிக்கரையைத் தாண்டி மலைகள் இருந்தன. மேகத்தின் நிழல் ஒன்று தானிய வயலின் வெளியில் நகர்ந்து சென்றது. அவள் நதியினை மரங்களூடே பார்த்தாள்.

“இது எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம். எல்லாத்தையும் நாம வச்சுக்கலாம். ஒவ்வொரு நாளையும் நாம இன்னும் இன்னும் முடியாததா நாம பண்ணிரலாம்"

“என்ன சொன்ன?”

“எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம்னு நான் சொன்னேன்”

“எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம்”

“இல்ல முடியாது”

“மொத்த உலகத்தையும் நாம வச்சுக்கலாம்”

“இல்ல நம்மளால முடியாது" 

“நாம எங்க வேணாலும் போலாம்”

“இல்ல முடியாது. அதுக்கப்புறம் அது நம்மளோடது இல்ல”

“நம்மளோடதுதான்”

“இல்ல. அது நம்மளோடது இல்ல. ஒரு தடவ நம்மகிட்டேர்ந்து அவங்க எடுத்துட்டாங்கன்னா அத திரும்பப் பெறவே முடியாது”

“ ஆனா அவங்க அத இன்னும் எடுக்கவேயில்லையே”

“பாக்கலாம். பொறுத்திருந்து பாக்கலாம்”

“நா எந்த மாதிரியும் நினைக்கல. எனக்கு நல்லா தெரியும்”

“உனக்கு இஷ்டமில்லாத எதையும் நா செய்யச் சொல்ல மாட்டேன்”

“அது என்னோட நல்லதுக்கும் இல்லதான். நாம இன்னொரு பியர் குடிக்கலாமா?” 

“சரி. ஆனா நீ எதப் புரிஞ்சிக்கிடனும்னா..”

“எனக்குப் புரியுது. நாம ஒரு வேள கொஞ்ச நேரம் பேசாம இருப்போமா?” 

அவர்கள் மேஜையில் வந்து அமர்ந்தார்கள். அந்த இளம்பெண் மலைகளையும் வறண்ட சமவெளியையும்  பார்த்துக்கொண்டிருக்க அவன் அவளையும் மேஜையையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ நீ எதப் புரிஞ்சிக்கிடனும்னா” அவன் சொன்னான் “ உனக்கு இஷ்டமில்லைன்னா நீ அத செய்யவேண்டாம்னுதான் நா சொல்லுவேன். உனக்கு அது ஏதேனும் அர்த்தமுள்ளதுன்னா நா அதன் போக்கிலேயே போகத் தயாரா இருக்கேன்”

“அது உனக்கு அர்த்தமுள்ளதா? நாம ஒத்துப் போகலாம்” 

“ ஓ நிச்சயமா. ஆனா எனக்கு உன்னத் தவிர வேறு யாரும் வேண்டாம். வேறு யாருமே எனக்கு வேண்டாம். எனக்கு அது ரொம்ப எளிமையானதுன்னு தெரியும்”

“ஆமா உனக்கு அது ரொம்ப எளிமையானதுன்னு தெரியும்.” 

“நீ அதச் சொல்றது சரிதான். ஆனா எனக்கு நிச்சயமா தெரியும்”

“எனக்காக நீ ஒரு காரியம் செய்வியா?

“உனக்காக நா என்ன வேணும்னாலும் செய்வேன்” 

“நீ தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, பேச்சை நிறுத்திறியா?” 

அவன் எதுவும் சொல்லாமல் ரயில் நிலையத்தின் சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய பைகளைப் பார்த்தான்.  அவர்கள் இரவுகளைக் கழித்த விடுதிகளின் வில்லைகள் அவற்றில் ஓட்டப்பட்டிருந்தன. 

“ஆனா உனக்கு அதச் செய்ய இஷ்டமில்ல. நா எதப்பத்தியும் கவலப்படல”

“நா கத்தப் போறேன்”  

அந்தப் பெண்மணி திரையை விலக்கிவிட்டு வந்து இரண்டு கன்ணாடிக்கோப்பைகளில் பியரையும் அவற்றுக்கான உறிஞ்சு பட்டைகளையும் வைத்துவிட்டுப் போனாள். “இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும்” என்றாள் அவள். 

“அவள் என்ன சொன்னாள்” என்று கேட்டாள் இளம்பெண்

“இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும்னு சொன்னாள்”

அந்த இளம்பெண் அந்தப் பெண்மணியைப் பார்த்து நன்றி தெரிவிக்கும் முகமாக புன்னகை புரிந்தாள்.
“ நான் நம்ம பைகளையெல்லாம் இப்பவே எதிர்த்த பகுதில வச்சுட்டு வந்துர்றேன்” என்றான் அவன். அவள் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். 

“சரி. வச்சுட்டு வா. நாம பியர குடிச்சு முடிச்சிரலாம்”

அவன் அந்த இரண்டு கனத்த பைகளையும் தூக்கிக்கொண்டு நிலையத்தின் அடுத்த பக்கத்தில் இருந்த பகுதிக்குச் சென்றான். தண்டவாளத்தில் அவன் பார்த்தபோது அங்கே ரயில் வந்திருக்கவில்லை. திரும்பி வந்தவன் பார் அறைக்குச் சென்றான். அங்கே ரயில்லுக்காகக் காத்துக்கொண்டிருந்த பலரும் குடித்துக்கொண்டிருந்தனர். பாரில் அவர் ஒரு அனிஸ் குடித்தான்; சுற்றியிருந்தவர்களையெல்லாம் பார்த்தான்.  அவர்களெல்லோரும் ரயிலுக்காகக் காத்திருந்தனர். அவன் மணியாலான திரையைக் கடந்து வந்தான். அவள் மேஜையில் உட்கார்ந்திருந்தாள். அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். 

“நீ இப்போது நன்றாக உணர்கிறாயா?”

“நான் நன்றாக இருக்கிறேன்” என்றாள் அவள் “ என்னிடத்தில் எந்தக் கோளாறும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்”

Wednesday, July 3, 2013

ஒரு துண்டு வானம் | சிறுகதை




இன்று கரெண்டு கொடுக்க என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களாம். தவறு. தவறு. தூய தமிழில் மட்டுமே நான் பேசவேண்டும். இன்று மின்சார அதிர்ச்சி தர என்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார்களாம். இன்று எனக்கான பொறுப்பில் இருக்கும் அந்தக் குட்டிப்பெண தாதி இல்லை இல்லை செவிலி வரவில்லையாம். என் கனவின் திரைகளை கிழித்து எட்டிப்பார்த்திருப்பாளோ? எண்ணங்களின் புதைபடிவுகள் அங்கே பாளம் பாளமாக உறைந்திருப்பதைக் கண்டு பயந்து போயிருப்பாளோ? தாள முடியாத வலியின் கீறல் என் உடலின் வழி என் இருப்பின் வழி கோணல்மாணலான கோடாக ஓடுவதைக் கண்டு துடித்துப் போயிருப்பாளோ? அவளின் கள்ளமற்ற விழிப்படலங்களில் நான் சொல்வதைக் கேட்டு கண்ணீர் அடர்ந்ததே அப்போது என் நரம்புகள் கூழ்கூழாக நொறுங்கிய சப்தம் அவலின் சின்னஞ்சிறிய இருதயத்தைத் தகர்த்திருக்குமோ? இளம் செவிலி எண் 1731 (இ.எ.செ1731) என்றழைக்கப்படும் அருட்பெரும்ஜோதியாகிய அந்தப் பெண் நான் ஒரு தத்துவப் பேராசிரியர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டாளோ?

எல்லாம் அந்த ஒரு துண்டு வானம் செய்த வேலை. என் அறையின் உச்சியில் இருக்கும் அந்த சிறிய ஜன்னலின் வழி தெரியும் ஒரு துண்டு நீல வானம் செய்த வேலை. நேற்றைக்கு முந்திய நாள் மாலை ரோஜா நிற மேகம் ஒன்று துள்ளித் துள்ளி ஓடுவதைப் பார்த்து பரவசம் அடைந்த நான் நேற்று அங்கே தெரிந்த பெண் பூவரச மரத்தின் இளம் பச்சைத் துளிர் இலைகளைக் கண்டு நெக்குருகி அ.பெ.ஜோ 1731-இடம் என் நிலை மறந்து எல்லாவற்றையும் உளறிக்கொட்டிவிட்டேன். உண்மையைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை ஐயா வேறெதுவும் சொல்லவில்லை. சத்தியமாக.

அந்தத் துளிர் இலைகளைக் கண்டவுடன் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு 1994 அல்லது 1996இல் திருநெல்வேலியில் காணாமல் போன சிட்டுக்குருவிகள் என் மனவெளியில் உயிர்பெற்றுத் தங்கள் சிறிய அலகுகளைத் திறந்து அறியா இன்பப்பாடலை கிறீச்சிட்டு இசைப்பதாகச் சொன்னேன். என்னுடைய வலியின் கீறலின் வழி தங்கள் அலகுகளை வெளியுலகுக்குக் காட்டிய அவை மர இலைகளுக்குத் தாவத் துடிப்பதாக அவளிடம் சொன்னேன். கைகளில் முகத்தைப் புதைத்து விரல்களூடே கள்ள இடைவெளி விட்டு அதன் வழி அவள் முகத்தைப் பார்த்தவாறே, அந்த அலகுகள் எவ்வளவுதான் கோபமாகத் தங்களின் சிவந்த உட்புறங்களைக் காட்டினாலும் அவைகளுக்கும் மர இலைகளுக்கும் இடையிலுள்ள தூரம் எப்படி குறைவு படாமல் இருக்கிறதோ அது போலவே, எனக்கும் அவளுக்கும் இடையிலுள்ள தூரம் கனத்துக்கிடப்பதாகச் சொன்னேன். அவளை ஜோதி என்றழைக்கலாமா என்று கேட்டேன். எண்களால் அன்றி வார்த்தைகளாலும் ஆட்களைப் பெயரிடலாம் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை 1997இல் பிறந்திருப்பாளோ? வயது பத்தொன்பதுதான் இருக்குமோ?

1997இல்தான் பிறப்பு பதிவு எண்ணையேதான் பெயராகவும், வாக்காளர் எண்ணாகவும், சமூக பாதுகாப்பு எண்ணாகவும் கருத வேண்டுமென்று ஒருங்கிணைந்த குடியரசுகளின் சட்டம் சொன்னது. ஐநூறுக்கும் மேற்பட்ட பெயர்களுடனும் அடையாளங்களுடனும் வாழ்ந்த என்னை ஒரே இலக்கத்தால் அழைக்க முடிந்தபோதுதான் அமுக்கிப் பிடித்தார்கள் அபாயகரமான சிந்தனையாளன் என்று. இருபது வருட சிறைவாசத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மின்சார அதிர்ச்சி, மனநல மருந்துகள், நடத்தை நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் அபாயகரமான நோயாளி என்று அழைக்குமளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார்கள். மடையர்கள்! முட்டாள் இலக்கங்கள்! அந்த ஒரு துண்டு வானம் என் கண்களின் வீச்சுக்குள் இருக்கும் வரை நான் நானாகத்தான் இருப்பேனென்பது அவர்கள் அறியாதது.

இ.செ.எண் 1731 என் கைவிரல்களைப் பற்றியிழுத்து, என் மோவாயைத் தன் கைகளில் தாங்கி, என் தாடியை நீவிவிட்டாள். இரக்கமற்ற அந்த கண்களீல் கனிவு என்பது நான் என்றுமே அறியாத ஒன்று. காதலா? சேச்சே தப்புப்பண்ணாதே அதியமான் தப்புப்பண்ணாதே. கடந்த நூற்றாண்டிலேயே காதல் என்ற கருத்தும், செயலும், வார்த்தையும் வழக்கொழிந்துவிட்டன. திருமண பங்குச் சந்தையில் இ.செ.எண் 1731 தன்னை என்ன விலைக்கு, எத்தனை காலத்திற்குத் தருகிறாள் என்று விசாரிக்கவேண்டும். கடந்த இருபது ஆண்டுகளாக என்னுடைய நன்னடத்தையின் காரணமாக இந்தத் தனியார் சிறைச்சாலையின் பங்குகள் சந்தையில் நல்ல விலைக்கு விற்பதாகக் கேள்வி. காவலதிகாரி தனக்கு ஊக்கத்தொகை கிடைத்தபோது சொன்னான். என்ன நன்னடத்தையோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த தனியார் சிறைச்சாலைக்கும் நான் தத்துவம் போதித்த கல்லூரிக்குமிடையில் எந்த வித்தியாசமுமில்லை. கல்லூரியில் சிந்தித்தால் குற்றவாளி என்கிறார்கள் சிறைச்சாலையில் சிந்தித்தால் நன்னடத்தை என்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் என்னால்தானே இவர்களுடைய பங்குகளுக்கு விலை கூடியிருக்கிறது? எனவே அதில் ஒரு சிறிய விகிதாச்சாரத்தை எனக்குத் தரவேண்டும் என்று உயர் காவலதிகாரியிடம் வாதிட்டுப்பார்க்கலாம். கொஞ்சம் செலவாணிப்புள்ளிகள் என் கடனட்டையில் ஏறினாலும் போதும் உடனடியாக இ.செ.எண் 1731ஐ ஒரு சில நாட்களுக்காவது மணப்பெண்ணாய் வாங்கிவிடுவேன். செலவாணிப்புள்ளிகள் தர மாட்டேன் என்று சொல்ல முயற்சித்தால் கூட போதும் திரும்ப புதிதாய் சிந்திக்கப்போகிறேன் என்று சொன்னால் பயந்துவிடமாட்டார்களா, என்ன? என் சிந்தனையின் ஒரு இழை கூட இவர்களுடைய சிறைச்சாலைகளை தவிடுபொடியாக்கிவிடும் என்பது அவர்கள் அறியாததா?

“உங்களைப் பார்த்தால் மிகவும் மென்மையானவராகவும் நல்லவராகவும் இருக்கிறீர்கள் அப்படி இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும்படி அப்படி என்னதான் அபாயகரமாக சிந்தித்தீர்கள்?” அவளின் கள்ளமற்ற மாசு மருவற்ற முகம், படபடத்த இமைகள், வியப்பின் விகசிப்பில் ஒளி ஏறியிருந்த கண்கள், இளமைச் செழிப்பில் விம்மியிருந்த மார்பகங்கள் அவளின் கேள்வி என்னிடத்தில் இனம் புரியாத நெகிழ்ச்சியை உண்டாக்கியது. மென்மையாகத் தோளில் கை போட்டு நெகிழ்ச்சியின் இதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசையாக இருந்தது. மெல்லிய குரலில் “உனக்கு எப்படிச் சொன்னால் புரியும்?” என்றேன். அவள் அலட்சியமாக “ஓரு வாக்கியத்தில் சொல்லுங்களேன்” என்றாள். 

“இவ்வுலகும் உயிரும் அழகியல் நிகழ்வாக அன்றி வேறு எதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை”

“இவ்வளவுதானா?”

“இவ்வளவேதான்” சபாஷ்டா அதியமான்.

“இதிலென்ன அபாயம் இருக்கிறது?”

“அதை நீ உன் அமைப்பிடம்தான் கேடக் வேண்டும்”

அமைப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அவள் ஈண்டும் இ.செ.எண்1731 ஆனாள். தப்பு. உரையாடலை சரியானபடி கொண்டு செல்வதில் எனக்குப் பரிச்சயம் விட்டுப் போயிற்று. என்ன செய்ய? அவள் போய்விட்டாள்.

அரசாங்க கணிணிகளிடம் 1731 கேட்பாளோ? ரகசிய கோப்புகளை அவளுக்குக் காட்டுவார்களா? அந்தக் கோப்புகள் ‘தத்துவமும் அரசியல் கைதிகளும்’ என்று தலைப்பிடப்பட்டிருந்ததாக நினைவு. இளம் செவிலியை பக்கத்திலேயே விட மாட்டார்கள். இவள் நான் சொன்ன வாக்கியத்தை யாரிடமாவது உளறித் தொலைகாமல் இருக்கவேண்டும். சாதாரண குற்றவாளிகளை மிருகத்தனமாக அடிப்பததைப் பார்த்திருக்கிறேன். என்னை மின் அதிர்ச்சி தவிர உடல் ரீதியாக அடித்து இதுவரை துன்புறுத்தவில்லை. சாக்கைக் காலில் கட்டி முக்கிய எலும்பு நொறுங்கும்படி கடப்பாரையால் ‘ணங்’ என்று ஒரு போடு போடுவார்களோ. போன நூற்றாண்டு தமிழ்ப்படங்களில் இந்த மாதிரி காட்சிகள் சகஜமாய் வந்து போகும். இப்போதெல்லாம் லேசர் துப்பாக்கிகளும் நிர்வாணகாட்சிகளும்தானாம். எனக்கு பேனா, காகிதம், இசை, புத்தகம், சினிமா எதுவுமே கிடையாது, என் கிருத்துருவமான மூளை சிந்திப்பதை நிறுத்தினால்தான் அதெல்லாம் தருவார்களாம். கடப்பாரையை நினைத்து முதுகுத்தண்டு சில்லிடுகிறது. நகங்களைக் கடிக்க ஆரம்பிக்கிறேன், நகக்கண் சதையில் ரத்தம் வரும் வரையில் கடித்துவிடுவேன். ரில்கேதானே எழுதினான் ஆமாம் ரில்கேதான் ‘நான் கதறி அழுதால் தேவதைகளில் யார் கேட்பார்கள்?’ நான் நகம் கடிப்பதையும் கண் கலங்குவதையும் பார்த்து யாரும் சிந்திக்கிறேன் என்று நினைத்துவிடுவார்களோ? யாரது என் சிந்தனையை வேவு பார்ப்பது? யாரது என் நிழல் சிடுக்குகளில் என் மூளையைத் தேடுவது? யாரங்கே?

சிலுவைப்பாதையில் ஏசு கிறிஸ்துவை இழுத்துச் சென்றபோது, வலியும் துக்கமும் தாள முடியாமல், ஒரு பலகீன தருணத்தில் அந்த மகான் “தேவனே, தேவனே, தந்தையே தந்தையே என்னை ஏன் கைவிட்டீர் ?” என்று கதறினாரே, அந்தக் கணம் ஒவ்வொரு மனித இருதயத்துக்குமான கட்டாய கல்வி. தேவகுமாரனுக்கே இந்த கதியென்றால் என்னைபோனற சாதாரண மனிதர்களின் கதி என்ன? இவ்வளவு வலியும் துக்கமும் பயங்கரமும் நிறைந்த இவ்வுலகு இருப்பதற்கான நியாயம் என்ன இருக்கிறது? ஏன் இவ்வுலகு இருக்கிறது என்ர கேள்விக்கு தத்துவத்தில் பதில் இல்லை. இளம் செவிலுக்குச் சொன்ன அதே வாக்கியத்தை இப்போது சொல்கிறேன் இவ்வளவு அழுக்குகளோடும் அசிங்கங்களோடும் வலிகளோடும் துக்கங்களோடும் இவ்வுலகு அழகியல் நிகழ்வாகவே ஜீவித நியாயம் பெறுகிறது. We, human beings need to create the sublime for the conquest of this horrible world. மனிதன் கலைஞனாகவே உயர்மனிதனாகிறான். ஐயோ ஐயோ இடையில் வேற்று மொழி வந்துவிட்டதே நான் என்ன செய்வேன்! ஒருங்கிணைந்த குடியரசுகளின் தற்போதைய சட்டத்தின்படி தாய்மொழி தவிர்த்த அந்நிய மொழியில் சிந்திப்பது பேசுவது எல்லாமே குற்றமாயிற்றே! தேசபக்தர்கள் யாரேனும் வேவு பார்த்திருப்பார்களோ?

இந்த மாதிரியான நிலைமைகளெல்லாம் ஏற்படும் என்று தெரிந்துதான் 1996 ஆம் ஆண்டே இந்தியப்பொருளாதாரம் உலகமயமாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தேன். என்னுடைய அப்போதைய விமர்சகர்கள் உலகமயமாக்கல் பணக்காரர்களை மேலும் அதிக பணக்காரர்களாகவும் ஏழைகளை இன்னும் அதிக ஏழைகளாகவும் உருவாக்கும் என்றும் அதனால் வர்க்கப்போராட்டம் வலுப்பெற்று புரட்சி வெடிக்க சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்றும் வாதிட்டார்கள். என்னுடைய எதிர்ப்போ முழுமையாக அழகியல் சிந்தனையிலிருந்து உருவானது. எல்லாமே- வாழ்வு முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடை வாழுமிடம் என்பன மட்டுமில்லாமல் நமது உணர்ச்சிகள், அழகுகள், ஏன் புணர்ச்சி உட்பட அனைத்துமே தரப்படுத்துதலுக்கு ஒற்றைத் தரப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆகையால் பலவகை வாழ்க்கை முறைகள், உணர்ச்சிகள், அழகுகள் அழிக்கப்படுகின்றன. இது உலகின் ஜீவித நியாயத்திற்கே எதிரானதாகும் என்று வாதிட்டேன். ஜோஸப் கார்னீலியஸ் குமரப்பா என்ற பெரை நாம் மறந்துவிட்டோம் என்று கூச்சலிட்டேன். என்ன செய்தார்கள்? மேற்கத்திய தரப்படுத்துதல் ஆதிக்க வாழ்வு முறை ஆனதென்றால் தூய தமிழை பயன்படுத்துதல் மொழித்தரப்படுத்துதல் ஆயிற்று. அவர்கள் தமிழ் வாழ்வு முறையினை இப்படிக்காப்பாற்றி விட்டார்களாம். நான் தரப்படுத்துதலுக்கான எல்லா முயற்சிகளையும் எதிர்த்தேன்.  அதிலொரு உத்திதான் கட்டுரை போல கதை எழுதுவதும் கதை போல தத்துவக் கட்டுரை எழுதுவதும். ராட்சசத்தனமான இயக்கத்தோடு சந்தைபொருளாதாரம் நகர ஆரம்பித்தபோது என்னுடையது மாதிரியான சிறு எதிர்ப்புகள் பலகீனமானவையே. ஆனால் அவற்றைக்கூட  அடக்குமுறை எந்திரங்கள் விட்டுவைக்கத் தயாராக இல்லை. தரப்படுத்தப்பட்ட ஒற்றை சிந்தனை இல்லாதவன் என்பதினாலேயே தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டேன். நானோ சளைக்கவில்லை. இதர எதிர்ப்புகளில் கவனம் செலுத்தலானேன். உழைப்புக்கேற்ற கூலி என்பது முதலில் நமது சினிமா நடிகர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவேண்டுமென்று துண்டுப்பிரசுரம் எழுதி விநியோகித்தேன். ஒற்றை விரலால் சொடக்கு போடுவதையும் துண்டைத்தூக்கி தோளில் போடுவதையும் நடிப்பு என்று அழைத்து அதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை (போன நூற்றாண்டின் காகித செலவாணிப்புள்ளி) அள்ளிக்கொடுப்பது அயோக்கியத்தனம் என்று கூப்பாடு போட்டேன். இதையெல்லாம் விட பெரிய கொடுமை இந்த நடிகர்கள் நம் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது என்று எடுத்துச் சொன்னேன். எனது பலகீனமான கீச்சுக்குரல் யாரையும் எட்டவில்லை. என்ன நடந்தது? பணக்காரர்கள் அதி பணக்காரர்கள் ஆனார்கள் ஏழைகள் அதி ஏழைகள் ஆனார்கள். வர்க்கப்பிளவு அதிகரித்து புரட்சி தோன்றுவதற்கு பதிலாக குற்றங்கள் அதிகரித்தன. என்ன மாதிரியான குற்றங்கள்? ஏழைகளின் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பிறப்பு, காதுகுத்து, சடங்கு, திருமணம், சீமந்தம், வளைகாப்பு, சாவு ஆகியவற்றில் அடங்கியுள்ள பொருளாதார பரிமாற்றங்கள் அனைத்துமே குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன என்றாலும் சிறைகளின் லாபங்களை அதிகரிக்க மேலும் மேலும் சிறைவாசிகள் வேண்டும் என்று அரசாங்கம் காவல்துறையை வற்புறுத்தியது. சிறைவாசிகளோ உணவு, உடை, உறைவிடம் மட்டுமே தரப்பட்ட விவசாய் இன்னபிற கூலிகளாக மாற்றப்பட்டனர். சிறைச்சாலை ஒரு வியாபாரமாக அதன் பங்குகள் சந்தையில் கூவிக்கூவி விற்கப்பட்டன. போன நூற்றாண்டில் பல்கலைக்கழகங்கள் செய்த வேலையை இப்போது சிறைச்சாலைகள் செய்து வருகின்றன. என்னைப் போன்றவர்களை பலவீனமாக்கி செயலிழக்கச் செய்வதை தங்களுடைய மிகப்பெரிய பலமாக இந்த சிறைச்சாலை விளம்பரப்படுத்தியிருக்கிறது. ‘அதியமானை நோயாளியாக்கினோம்’ என்று விளம்பரப்படுத்துவார்களோ என்னவோ யார் கண்டது. விளம்பரப்பொருள் என்பதால் எனக்கு உடலுழைப்பு நிர்ப்பந்தம் கிடையாது.

மேற்சொன்னவர்றின் நீட்சியாகவே அபாயகரமான சிந்தனையாளன் என்ற பட்டம் எனக்குக் கிடைத்திருக்க வேண்டுமென்றாலும் அந்த கௌரவம் இரண்டு காரியங்களினாலேயே என்னைத் தேடி  வந்தடைந்தது. ஒன்று  நமது நாட்டிற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று வாதாடியது. அதில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்போது ஒருங்கிணைந்த குடியரசுகளின் சட்டமே அணு ஆயுதங்கள் தேவையில்லை என்பதுதான். இரண்டாவது ‘உணர்வுப் பிரவாகமும் நிரந்தர உச்சகட்ட பரவசமும்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டது. யாரோ வருவது போல இருக்கிறது. யோசிக்காதே. கருவிகளை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள். மற. மனமே வெற்றிடமாகு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு….

“இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே!”

“அப்படி உங்களுக்குத் தெரிகிறதா ஐயா”

“இன்று மின் அதிர்ச்சி தரப்படவில்லையென்று சொன்னார்கள்”

“தராதது எனக்கும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது”

ஏன் தரவில்லை என்று தெரியுமா?”

“கருத்து ஏதுமில்லை”

“இளம் செவிலி 1731 இன்று ஏன்  வரவில்லை என்ற காரணம் உங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதானே” 


“மறதி அதிகமாகிக்கொண்டிருக்கிறது.”

“இளம் செவிலி ஏன் வரவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது”

“உங்களிடம் பரிவு காட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வேலை நாட்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்”

“என்னிடம் என்ன பரிவு காட்டினார்?”

“உங்கள் மோவாயை கைகளில் தாங்கியது. தாடியை நீவி விட்டது. உங்கள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தது”

“-------------”

“என்ன பதிலையே காணோம்?”

“பாவம் குழந்தை”

“குழந்தையா அவள்! திருமணச் சந்தையில் ஒரு வருட ஒப்பந்தத்திற்கு ஒரு லட்சம் செலவாணிப்புள்ளி கேட்டிருக்கிறாள்”

“ என்னால் இந்த நிறுவனத்திற்கு ஏதேனும் விளம்பரம் சேர்க்க முடியுமென்றால் அதைச் செய்து கொடுத்து அதனால் கிடைக்கும் செலவாணிப்புள்ளிகளைக் கொண்டு இளம் செவிலியை எட்டுமணி நேரமாவது ஒப்பந்தம் செய்து கொள்ள ஆசை”

“அடடே நல்ல திட்டமாக இருக்கிறதே. ஆனால் இந்தக் கிழட்டு வயதில் உமக்கு இப்படி ஒரு ஆசையா?”

“இந்த வயதிலும் என்னால் ஒரு இளம் பெண்ணிடம் பேரானந்த உணர்வுப் பிரவாகத்தையும் நிரந்தர உச்சகட்ட பரவசத்தையும் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்”

“சற்றே பொறுங்கள் ஐயா சற்றே பொறுங்கள். இது உங்களுடைய தடை செய்யப்பட்ட புத்தகத்தின் தலைப்பு அல்லவா?”

“என்னுடைய இந்தக் கண வார்த்தை கோர்ப்பு இறந்த காலத்திலும் இயங்கியிருக்கிறதா? ஆச்சரியம் ஆச்சரியம்”

“பொய் சொல்லாதீர்கள். இளம் செவிலியிடம் தடை செய்யப்பட்ட புத்தகத்தின் சாரம்சத்தைத் தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள்”

“என்னவாகும் அது?”

“எது?”

“சாராம்சம்”

“இவ்வுலகு அழகியல் நிகழ்வாக அன்றி வேறெதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை”

“காவலதிகாரி அவர்களே, அப்படியென்றால் தடை செய்யப்பட்ட புத்தகத்தை வாசித்த குற்றத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்”

“தடை செய்யப்பட்ட புத்த்கங்கள்தானே அதிகம் வாசிக்கப்படுகின்றன. உலகக் கணிணி வலையமைப்பில் உங்கள் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன”

“அப்புறம் எதற்காக என்னை இன்னும் அடைத்து வைத்திருக்கிறீர்கள்?”

“ஒருவேளை உங்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு இருக்கலாம்”

“ நிஜமாகவா?”

“ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. முதலில் இவ்வளவு சித்திரவதைகளுக்குப் பிறகும் உங்கள் மூளை பழையபடியே செயல்படும் விந்தை எப்படி என்று விரிவாக விளக்க வேண்டும். அதைத் தெரிந்தபின்னரே இந்தச் சிறைச்சாலையில் மீண்டும் அந்த தப்பு நடக்காதவாறு துல்லியமாக கண்காணிப்பையும், மனதைச் சிதைக்கும் முறைகளையும் உருவாக்க முடியும்.”

“அவ்வளவுதானா?”

“முதலில் நகத்தைக் கடிப்பதை நிறுத்துங்கள். உடல் முழுக்க உள்ள நடுக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள். அலைபாயும் கண்களைக் குவித்து என்னை என் கண்களை நேராகப் பாருங்கள்”

“சரி”

“இன்னும் ஏன் உடல் பதறிப் பதறி நடுங்குகிறது?”

“அது என் கட்டுப்பாட்டில் இல்லை”

“அப்படியென்றால் எங்கள் சிறைச்சாலை அப்படியொன்றும் மோசமில்லைதான்”

“மோசமில்லைதான்”

“இருந்தாலும் பாருங்கள். பங்குச் சந்தையில் எங்கள் சிறையின் விலை விழுந்துகொண்டே போகிறது. நீங்கள் சொன்ன இளம் செவிலித் திட்டம் எனக்கு மிகவும் உவப்பானதாயிருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டுமென்பதே இரண்டாம் நிபந்தனை”

“கரும்பு தின்னக் கூலியா என்பது போன நூற்றாண்டின் நல்ல பழமொழிகளுள் ஒன்று”

“இளம் செவிலியோடு எட்டுமணி நேரம் ஒப்பந்தம் செய்துகொள்ள உளவுத்துறை மூலமாக அரசாங்கத்திடமிருந்து உத்தரவு பெறவேண்டியது என் பொறுப்பு. இதை நாம் உத்தேசமாக ‘பரிசோதனை’ என்றழைப்போம். நீங்களிருவரும் அறியாதபடி உங்கள் தனிமையை முழுமையாய் பதிவு செய்வோம். நீங்கள் பரிசோதனையின் முடிவில் உளற வேண்டும். அதாவது உங்களது சிந்தனைகள் எல்லாம் தோற்றுட்டதாக உளறவேண்டும்”

“இதனால் உங்களுக்கு என்ன லாபம்?”

“தேவையில்லாத கேள்வி. இருந்தாலும் பதில் சொல்கிறேன். தத்துவம் மற்றும் அரசியல் கைதிகளை வலுவிழக்கச் செய்வதில் வல்லவர்கள் என்று நாங்கள் இதன் மூலம் நிரூபித்துவிட்டால் அரசாங்க மூலதனம் ஏராளமாய் எங்கள் நிறுவனத்திற்குக் கிடைக்கும். கிடைத்தால் இப்போதைய பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டுவிடுவோம்”

“பொதுவாக இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் என்னுடைய சிந்த்னையையே பல போலிகளை விட்டு உளறச் செய்தால் என்னை வலுவிழக்கச் செய்துவிடலாமே!”

“பொதுவான வழக்கம் அதுதான். ஆனால் உங்கள் சிந்தனைகளை போலிகளை விட்டு உளறச் செய்தால் கூட ஆபத்து”

“அழகியல் அவ்வளவு ஆபத்தானதா?”

“பன்மையை, தரப்படுத்துதலின்னமையை, உணர்வுகளின் புதுவித சேர்க்கையை, பயங்கரங்களை அடித்து நொறுக்கும் துன்பியல் உன்னதத்தை, உணர்வுப் பிரவாகத்தைக் கொண்டாடும் அழகியல் ஆபத்தானதுதான்”

“ஒரு புனிதமான தொனியில் நீங்கள் பேசுகிறீர்கள்”

“பரிசோதனைக்கு ஒப்புக்கொள்கிறீர்களா?”

“பங்கேற்பாளர் இளம் செவிலி 1731 எனும் பட்சத்தில் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்”

“இல்லையென்றால் மாட்டீர்கள்?”

“மாட்டேன்”

“இளம் செவிலி 1731 மேல் காதலா?”

“வழக்கொழிந்த சொல்லை பயன்படுத்துகிறீர்கள்”

“உங்களோடு மோத வேண்டிய அதிகாரியாயிற்றே நான்”

“காதலில்லை, நெக்குருகும் மென்மை”

“இளம் செவிலி 1731ஐ பரிசோதனைக்கு பலிகடா ஆக்குவது பற்றி உங்களுக்கு வருத்தமாக இல்லையா”

“சமூக வழக்கப்படிதானே செய்கிறேன்”

“சமூக வழக்கங்களை ஏற்றுக்கொள்ளாததுதானே உங்கள் சிந்தனைப் பாங்கு!”

“என்னை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதுதானே உங்கள் நிறுவனத்தின் குறிக்கோள்”

“நன்று. பரிசோதனை நாளை ஆரம்பிக்கும்”

“ ஒரு விஷயம். செவிலி 1731 மேல் உங்களுக்கு என்ன கோபம்?”

“அவள்பால் எனக்கு ஏற்பட்ட நெக்குருகும் மென்மையை காண்பிக்க வருடத்திற்கு ஒரு லட்சம் செலாவணிப்புள்ளி கேட்கிறாளே என்பதுதான்”

“ஒருவேளை அந்தப் புள்ளிகளை நான் உங்களுக்குத் தர முடியுமென்றால் நீங்கள் அவளோடு ஒப்பந்தம் செய்து கொள்வீர்களா?”

“நீங்கள் அவளை உண்மையிலேயே காதலிக்கிறீர்கள். அவள் உங்களோடு ஒப்பந்தம் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.”

“இந்தப் பரிசோதனைப் பணத்தை இந்த நிமிடமே உங்களுக்குத் தர சம்மதிக்கிறேன்”

“ நன்றி. ஆனால் வேண்டாம்.”

“ஏன்?”

“ஒருவகையில் நான் அவளை தண்டிக்க நினைக்கலாம்”

“ அவளை நிர்ப்பந்தம் செய்வீர்கள் இல்லையா?

“செய்யலாம். செய்யாமலேயே சம்மதிக்கவும் வைக்கலாம்”

“தேசப்பற்று என்ற பெயரிலா?”

“உங்களுடைய கவலைகள் அனாவசியமானவை”

“அவளை தயவு செய்து துன்புறுத்தாதீர்கள்”

“ஹாஹா.. நமது பேட்டி முடிந்தது. ஒருங்கிணைந்த குடியரசுகள் வாழ்க”

“--------”

“நீங்கள் ஒழிக என்று சொல்லலாம்”

“போடா மயிரே”

----------------------------------

அடி பின்னி எடுத்துவிட்டார்கள். உடலெல்லாம் பிரம்படி போட்டதில் ரத்தம் கன்றி கன்றி நிற்கிறது. ஐயோ இதைக் கேட்பதற்கு யாருமே இல்லையா? நான் என்ன தவறு செய்தேன்? இந்தக் கிழட்டு உடலைப் போட்டு இப்படி வதைக்கிறார்களே இன்னும் என்னிடமிருந்து என்ன எதிர்பார்கிறார்கள்? ஜன்னலை எட்டிப்பார்க்க முயற்சி செய்து தோற்கிறேன். பூவரச தளிர்கள் வாடியிருக்கின்றன. வெகு தொலைவில் வானத்தில் பறவைகள் பறப்பதான தோற்றம் இருக்கிறது. என்னது அது என்று தெரியவில்லை வலியில் என்னுடல் இழை இழையாகப் பிரிந்து கழன்று பறக்கிறது. அதிகாலையில் காணும் மென் சிறகுகள் எல்லாம் பறக்கும் தேள்களாக மாறி உள் அவயங்களைக் கொட்டுவதான பிரேமை. சமூகத்தின் மொத்த தவறுகளுக்காகவும் என்னை தண்டிப்பது என்ன நியாயம்? என்னைக் கேவலப்படுத்தி இவர்கள் எப்படி வாழந்துவிடமுடியும்? நான் அலறமாட்டேன். சிரிப்பேன். வாய்விட்டு, வெறி கொண்டு சிரிப்பேன். என் சிரிப்பின் அலையில் என் உயிரின் இச்சை கலந்து மிதமான சீதோஷ்ணம் போல பரவும். அணு, அணுவாய், துகள்த் துகளாய் கரைந்து இப்பிரபஞ்சம் முழுமையும் நிறைப்பேன். என் வெறிகொண்ட சிரிப்பின் ஆர்ப்பரிக்கும் விகசிப்பில் என் உணர்வுப் பிரவாகத்தினால் என்னை வாழவிடாத இப்பிரபஞ்ச ஒருமையை முற்றிலுமாக சிதைப்பேன். அதன் முதல் கட்டமேயென என்னுடல் இழை இழையாய் பிரிந்து துகள்த் துகளாய் சிதறி உருகி உருகி கரைகிறது...Hyper Sensual Being உருவாகும் கட்டம் வந்துவிட்டது….


“யாரது இந்நேரத்தில்?”

“இளம் செவிலி எண் 1731”

“ என் கண்கள் என்னை ஏமாற்றுகின்றனவா? கனவா? பிரம்மையா?”

“நிஜம்தான். பரிசோதனை தொடங்கிவிட்டது. இப்போதிலிருந்து இன்னும் எட்டு மணி நேரத்திற்கு நீங்களும் நானும் தம்பதிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறோம். அரசாங்கம் இதற்காக மிகப் பெரிய விலை கொடுத்திருக்கிறது”

“இப்போதா? என்னுடைய இந்த நிலைமையிலா? என்னையோ சக்கையாக அடித்து துவைத்துப் போட்டிருக்கிறார்கள்.”

“நீங்கள் தோற்று  உளற வேண்டும் என்பதுதானே நிபந்தனை”

“உளறச் சம்மதித்த பின்னும் அடித்துப் போட்டிருப்பது நியாயமில்லை”

“உங்கள் Theory of hyper sensuous தாந்தரீக சித்தினை இப்போது செயல்படுத்துங்கள் பார்க்கலாமென்பதே சவால்”

“நீ ஏன் இந்தப் பரிசோத்னைக்கு சம்மதித்தாய்? பணத்திற்காகவா?”

“இல்லை”

“என் மேல் பரிவா? காதலா? நட்பா?”

“முதலில் உங்களால் என்ன செய்யமுடியும் என்ற தைரியத்தில் சம்மதித்தேன். ஆனால் அரசாங்கம் வழங்கிய தண்டனையால் சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது நான் உங்கள் சக பயணி. சிறைக்கு வெளியே இருந்து சிந்திக்க இருப்பவள்”

“சபாஷ். ஆனால் இந்தப் பரிசோதனையில் நான் தோற்று உளற உத்தேசமில்லை”

“நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பமும்”

“நான் ஜெயித்தால் உன்னையும் சேர்த்து தண்டிப்பார்கள்”

“தப்பும் வழி எனக்குத் தெரியும். உங்களைப் போல நான் முட்டாளில்லை”

“பிரமாதம். அப்படியென்றால் ஆரம்பிக்கலாமா? குரலும் வார்த்தைகளுமே என் உடலாகவும் ஆகட்டும்”

“இதோ இருளில் இயங்கும் அல்ட்றா வயலட் காமிராக்கள் இயங்க ஆரம்பித்துவிட்டன. நமது நடவடிக்கைகள் உடனடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன என்ற நினைவிருக்கட்டும்”

“நன்று. சிறு தீபம் ஒன்று ஏற்றி விடு. உனது கூந்தலை அவிழ்த்துவிடு. ஆடைகளைக் களைந்துவிடு. நான் இருளில் நிர்வாணமாகவே இருக்கிறேன்”

“இதோ”

“கடவுளே கடவுளே இந்தப் பேரழகு எனக்கா? எனக்கே எனக்கேவா? இந்த நிலைமையிலா? யாரிடம் போய்ச்சொல்வேன் இந்த வசீகரத்தை? இந்த சௌந்தர்யத்தை ஜோதி என்றழைக்கவா நான்? ஒளியின் கதிர்கள் சர்வ திசைகளிலும் தாபத்துடன் வியாபிப்பது போல வா என்னிடத்தில். நீலம் பாரித்துக் கிடக்கும் இந்த கிழட்டு உடல் உன்னிடத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? உயிரின் இச்சையால் பிறக்கும் வேட்கை அசிங்கங்களோ அச்சங்களோ அறியாதது. உன் மென்மையான கால் கட்டை விரலால் என் முதுகுத் தண்டின் கீழ் நுனியை மிதி. மூலாதாரத்தின் ஜீவ சக்தி ஊற்றுக்கண் திறக்கட்டும். படைப்பியக்கம் அசிங்கங்களை அறியாதது என்பதை நினைவில் கொள். நான் உன் முதுகுத்தண்டின் கீழ் நுனியையும் உன் உந்திச் சுழியின் கீழ் விரியும் பூனை ரோமங்களையும் என் விரல் நகங்களால் மென்மையாக வருட, உன் பிருஷ்டங்கள் ஆனந்தத்தில் சிலிர்த்து அதிர்கின்றன. அடேயப்பா இளமையின் கசிவிற்குத்தான் என்ன வேகம்! பொறு. பொறு. காமவேட்கையில் கண்கள் அதற்குள்ளாக சிவந்துவிட்டனவே! நானோ பெரிய அன்னப்பறவையின் மூர்க்க வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கசிந்து துவண்ட லீடா போல கண்களின் வெள்ளைப்படலம் வெளியே தெரிய உதவியற்றுக் குழைகிறேன். மரப்பட்டை உரித்த பச்சை மரத்தின் ஈரப்பதமும் மென்மையும் நறுமணமும் நம்மைச் சுற்றிக் கமழ்கின்றன. அவசரப்படாதே. பெருமூச்செறியாதே. நானும் தயாராகிக்கொண்டிருக்கிறேன். உன் நீண்ட இமைகளினால் என் அதரங்களை வருடுகிறாய். நான் என் தாடி நுனியினால் உன் கட்கங்களை வருடுகிறேன். உன் முலைக்காம்புகளால் என் வலி நிரம்பிய பகுதிகளுக்கு ஒத்தடம் தருகிறாய்.  நான் இதற்கு எப்படி கைமாறு செய்வேன்? எப்படி என்னை உனக்காக தகுதிப்படுத்திக்கொள்வேன்? தெய்வமே தெய்வமே இந்த கணத்திற்கான நன்றியறிதல் பிரார்த்தனை ஏதும் உளதா? உந்தன் கூந்தலின் மென்மையான சாமர வீச்சில் என் பலவீனங்கள் அனைத்தையும் மீறி ஆவேசமாகிறேன். ஹேய் ஹேய் ஹேய் அதெல்லாம் வேண்டாம். கள்ளமற்ற உன் முகத்தில் குறும்பும் தீர்மானமும் ஏற என்னை பரிகசிக்கிறாய். உன் திண்மையான தசைநார்கள் இறுக்கமாகி வெப்பம் தகிக்கின்றன. நான் முழந்தாளிட்டு உன்னை கைகூப்பி வணங்க நீயோ உன் வலது காலைத் தூக்கி என் தோள் மேல் போடுகிறாய். உன் பின்னந்தொடையின் சூடு என் தோளில் பரவ என் மனமோ முடிவற்று மலரும் மலர்களில் லயிக்கிறது. ஓ இதுதான் இதுதான் இந்த மனோநிலைதான் நமக்கு நினைத்த மாத்திரத்தில் எந்த சமயத்திலும் கைவரப்பெற வேண்டும். நமது இருவருடைய உடல்களும் மற்றவற்றிற்காகத் தாளவொணா தாபத்துடன், காத்து நிற்கும் இம்மனோநிலை, காய்ந்த சருகாலோ, புழுதியாலோ, மலத்தாலோ, மூத்திரத்தலோ, செடியாலோ, கொடியாலோ, காற்றாலோ, கடலாலோ, வானத்தாலோ, நிலாவாலோ, நடசத்திரத்திலாலோ, இதுவாலோ, அதுவாலோ, எதுவாலோ சதா சர்வ காலமும் நமக்கு வாய்க்கப்பெறவேண்டும். Hyper sensuousness. உயிர்ச்சத்து இப்பிரபஞ்சத்திற்கு உணர்ச்சிகரமான ஒருமையை அளிக்கிறது என உணரும்போது, அதில் சதா பங்கேற்கும்போது மனிதன் சுதந்திரவானாகிறான். அவனை யாராலும் தண்டிக்க முடியாது. எதுவாலும் அடக்க முடியாது. ஜோதி! இப்போது ஜீவ சக்தி உன் நாடி நரம்புகளிலெல்லாம் குமிழியிட்டுப் பொங்குகிறது. நான் மல்லாக்க படுத்துக்கொள்கிறேன். என்னை நடுவில் கிடத்தி இருபுறங்களிலும் உன் கால்களை வைத்து நின்று கொள். மெதுவாக முதுகுப்புறமாக பின்னோக்கி வளைந்து உன் கைகளை என் தோள்களில் ஊன்றிகொள். இந்நிலையில் உன்னால் என் பின் சுவரிலுள்ள ஜன்னலையும் அதில் தெரியும் வானத்தையும் பார்க்க முடியும். இரவின் கும்மிருட்டில் ஒளிரும் அந்த ஒற்றை நட்சத்திரத்தின் மேல் கவனத்தைக் குவி. நான் உன்னை நோக்கி மேலே வேகமாய் வரும்போதெல்லாம் நீ நட்சத்திர ஒளியோடு உன்னை அடையாளம் கண்டுகொள். இதோ இந்த நிமிடத்தில் நீயும் நானும் மேகங்களைக் கடந்து அண்டசராசரத்தில் எல்லையின்மை நோக்கி அநாதியாய் ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே ஜோதியாய்…”

----------------

பரிசோதனை முடிந்த மறுநாள் இளம் செவிலி 1731இன் அறிக்கைபடி என் ஜன்னலை அடைத்துவிட்டார்கள். நான் என் ஒரு துண்டு வானத்தையும் இழந்துவிட்டேன். ஆனால் கண்களை மூடும்போதெல்லாம் ஜோதியின் மேனி முழு ஆகாயமாய் முடிவற்று விரிகிறது.




















------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: ஸில்வியா என்ற புனைபெயரில் நான் எழுதிய இந்த Futuristic கதை 1995இல் ‘புதிய பார்வை’ இதழில் வெளியானது. இந்தக் கதையைத் தேடிப்பிடித்து எனக்கு அனுப்பித் தந்த ‘குங்குமம்’ இதழ் பொறுப்பாசிரியர் நண்பர் என்.கதிர்வேலனுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.