Sunday, December 25, 2022

மகமது தர்வீஷின் மேலும் மூன்று கவிதைகள்

 6. ஆகாயத்திலிருந்து அவள் சகோதரியான கனவு காண்பவர்களின் மலைக்கணவாய்க்கு

——

பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி 

———

…நாங்கள் வெளியேறியபோது எங்கள் குழந்தைப்பருவத்தை வண்ணத்துப்பூச்சிகளுக்கு விட்டு வந்தோம்

படிகளில் கொஞ்சம் ஓலிவ் எண்ணெய், 

ஆனால் நாங்கள்மறந்துவிட்டோம்

எங்களைச் சுற்றியிருந்த புதினாவுக்கு வாழ்த்து சொல்ல எங்களுடைய எதிர்காலத்திற்கு ஒரு வேகமான வணக்கத்தைச் சொல்வதற்கும்

வண்ணத்துப்பூச்சிகள் எங்களைச் சுற்றி எழுதும் நிறங்கள் தவிர

நண்பகலின் மசி வெள்ளையாய் இருக்கிறது….

*

ஓ வண்ணத்துப்பூச்சி, உனக்கே சகோதரியானவளே

நீ எப்படி இருப்பாயோ அப்படியே இரு

எனது ஏக்கத்திறகு முன்பும் என் ஏக்கத்திற்கு பின்பும்

ஆனால் என்னை உன் இறக்கைகளில் சகோதரனாக எடுத்துக்கொள், என் பைத்தியம் என்னோடு சூடாக இருக்கவிடு

ஓ வண்ணத்துப்பூச்சி, உனக்கே தாயானவளே

கைவினைஞர்கள் வடிவமைத்த பெட்டிகளிடம் என்னை விட்டு விடாதே

என்னை விட்டுவிடாதே

ஆகாயத்திலிருந்து அவளுடைய சகோதரியான கனவு காண்பவர்களின் மலைக்கணவாய் நோக்கி

நீரின் கண்ணாடிகளைச் சுமந்துகொண்டு 

வண்ணத்துப்பூச்சியின் எல்லை ஒன்றிற்கு

ஆகாயத்திலிருந்து வருபவர்களாக இருக்கும் ஆற்றலால்

நாமும் அவள் சகோதரியான

கனவு காண்பவர்களின் மலைக்கணவாய்க்கு

*

வண்ணத்துப்பூச்சி தன் ஒளியின் ஊசியால் பின்னுகிறது

அதன் இன்பியல் ஆபரணம் அது தன்னிலிருந்து பிறப்பதால் உண்டாகிறது

அது தன் துன்பியலின் நெருப்பில் நடனமாடுகிறது

*

பாதி ஃப்னீக்ஸ் பறவையாக அவள் இருப்பதால் அவளை எது தொடுகிறதோ அது நம்மைத் தொடுகிறது

ஒரு இருண்ட படிமம்

ஒளிக்கும் நெருப்புக்கும் இடையில்

இரண்டு வழிகளுக்கு இடையில்

இல்லை. அது விளையாட்டுத்தனமோ விவேகமோ இல்லை

நம் காதல்

இவ்வாறாக எப்போதுமே…. இவ்வாறாக

ஆகாயத்திலிருந்து அவளுடைய சகோதரியை நோக்கி

கனவு காண்பவர்களின் கணவாய்க்கு

*

வண்ணத்துப்பூச்சி என்பது பறக்க ஏங்கும் தண்ணீர், 

அது இளம்பெண்களின் வியர்வையிலிருந்து தப்பிச்செல்கிறது

அது நினைவுகளின் மேகமாக வளர்கிறது

வண்ணத்துப்பூசி என்பது இந்தகவிதை சொல்வது இல்லை

ஒரு கனவு கனவு காண்பவர்களை உடைத்துவிடுவது போல

அதிகப்படியான ஒளிர்விலிருந்து அது சொற்களை உடைக்கிறது

*

இருக்கட்டும்

நமது எதிர்காலம் நம்முடனே இருக்கட்டும்

நாம் கடந்தகாலமும் நம்முடனே இருக்கட்டும்

இன்றைய நாளின் விருந்து வண்ணத்துப்பூச்சியின் விடுமுறைக்குத் தயாராகட்டும்

கனவு காண்பவர்கள் ஆகாயத்திலிருந்து அவள் சகோதரியை நோக்கி கடந்து செல்லட்டும்

*

ஆகாயத்திலிருந்து அவள் சகோதரியை நோக்கி கனவு காண்பவர்கள் கடந்து செல்வதாக…



7. அபு ஃப்ராஸ் அல்-ஹமாதானியின் ரூமியாத்திலிருந்து

—-

பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி 

——

ஒரு எதிரொலி திரும்புகிறது. ஒரு அகண்ட தெருவின் எதிரொலியில்

இருமலின் சப்தங்களுக்கிடையே காலடி ஓசைகள்

அவை கதவை நோக்கி வருகின்றன பின்னர் விலகிச் செல்கின்றன. எங்களைக் காண வரும் பார்வையாளர்கள்

நாளை, வியாழக்கிழமை வருகைகளுக்கானது. அங்கே எங்கள் நிழல்

தாழ்வாரங்களில். எங்கள் சூரியன் பழக்கூடைகளில்

அங்கே ஒரு தாய் சிறையதிகாரியிடம் திட்டுகிறாள்:

எங்களுடைய காபியை ஏன் புல்லில் ஊற்றினாய்

கேடுகெட்டவனே? அங்கே உப்பு மணத்தில் கடல்

அங்கே உப்பை சுவாசிக்கும் கடல். என் சிறை அறை

புறாவின் சத்தத்தினால் ஒரு செண்டிமீட்டர் அகலமாகியிருக்கிறது; பற

அலெப்போவுக்கு பறந்து செல், புறாவே, 

என் ரூமியாவுடன்

என் வாழ்த்துகளை என் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கு எடுத்துச் செல்

ஒரு எதிரொலி

இன்னொரு எதிரொலியினுடையது. அதன் எதிரொலி ஒரு உலோக ஏணி, ஒளியூடுருவல், ஈரப்பதம், ஆகியன உடையது

வைகறையில் அதை நோக்கிச் செல்வோரை அது நிரப்புகிறது

வெளியில் உள்ள துளைகள் வழியாக கல்லறைகளுக்குள் வருவோரையும்

என்னையும் உன்னுடன் அழைத்துச் செல் உன் மொழிக்கு

நான் சொன்னேன்: எந்த வார்த்தைகள் கவிதையில் வாழ்கின்றனவோ அவையே மக்களுக்கு பயனுறும்

முரசுகள் அவர்களுடைய தோலில் நுரைமெத்தை போல மிதக்கையில்

என் சிறை அறை மேலும் அகண்டது, அந்த எதிரொலியில், ஒரு பலகணியாக உருமாற

வியர்த்தமாய் என்னுடன் என் ரயிலின் ஜன்னல்களுக்கு துணைவந்த பெண்ணின் ஆடையைப் போல.

அவள் சொன்னாள்: என் தந்தைக்கு உன்னைப் பிடிக்கவில்லை. என் தாய்க்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நாளை அதனால் இழப்புக்குத் தாயாராக இரு,

என்னை எதிர்பார்க்காதே, வியாழக்கிழமை காலை, எனக்கு

அடர்த்தி என்னைத் தன் சிறையில் ஒளித்து வைப்பது பிடிப்பதில்லை

அர்த்தத்தின் நகர்வுகளையும் காடுகளை மட்டும் நினைவில்கொள்ளும் உடலையும்  எனக்கு விட்டுச்செல்

அந்த எதிரொலிக்கு என் சிறை அறை போலவே ஒரு அறை இருக்கிறது, தனக்குத் தானே பேசிக்கொள்வதற்கான ஒரு அறை

என் சிறை அறை என் சித்திரம் அதை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை

என் காபியை காலையில் பகிர்ந்து கொள்ள, இருக்கையில்லை

என் நாடுகடத்தலை மாலையில் பகிர்ந்துகொள்ள, காட்சியில்லை

நான் பாதையை  அடைந்தததின் பெருவியப்பை பகிர்ந்துகொள்ள.

ஆகையால் நான் போர்களில் குதிரைகள் என்ன விரும்புமோ அதுவாக இருக்க விரும்புகிறேன்

ஒரு இளவரசனாக அல்லது 

ஒரு அழிபாடாக!

என் சிறை அறை ஒரு தெருவாக, இரண்டு தெருக்களாக அகண்டுவிட்டது, இந்த எதிரொலி

ஒரு எதிரொலி, இடர்வரவின் முன்னறிகுறியாக, வெற்றியின் அறுதியாக, நான் என் சுவரிலிருந்து எழுந்து வருவேன்

ஒரு சுதந்திர ஆன்மா தன்னிடமிருந்தே ஒரு குருவிடமிருந்து எழுந்து வருவது போல

நான் அலெப்போவுக்கு போவேன். ஓ புறாவே, பற

என் ரூமியாவை எடுத்துக்கொண்டு என் ஒன்றுவிட்ட சகோதரனிடம் பறந்து செல்

பனித்துளியின் வாழ்த்துக்கள்! 

————-

*அபு ஃப்ராஸ் அல்-ஹமாதானி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரேபிய இளவரசர், கவிஞர்

  • ரூமியாத்- அரேபிய செவ்வியல் கவிதை வடிவம்- நான்கு வரிகளாலான பத்திகளையுடையது.



8 பயணிக்கு பயணி சொன்னது: நாங்கள் திரும்பி வரமாட்டோம்

——

பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி 

——-

எனக்கு பாலைவனத்தைத் தெரியாது

ஆனால் நான் அதன் எல்லைகளில் என் வார்த்தைகளை வளர்த்தேன்

சொற்கள் என்ன சொல்லாவேண்டுமோ அவற்றைச் சொல்லின, 

நான் ஒரு விவகாரத்தான பெண் போல அவற்றைக் கடந்தேன்

நான் அவளுடைய உடைந்துபோன மனிதன் போல அவற்றைக் கடந்தேன்

அவற்றின் லயம் மட்டுமே என் நினைவிலிருக்கிறது

நான் அதைக் கேட்கிறேன்

அதைப் பின்பற்றுகிறேன்

வானத்தை நோக்கிய பாதையில்

அதை ஒரு வெண்புறா போல வளர்க்கிறேன்

என் பாடல்களின் ஆகாயம்-

நான் சிரிய (நாட்டின்) கடற்கறையின் புதல்வன்

அதை நான் என் நகர்வில் குடியமர்த்தியிருக்கிறேன்

இல்லையென்றால்

நான் கடல் மக்களிடையே வாழ்கிறேன்

ஆனால் கானல் என்னை கிழக்கு நோக்கி

 ஆதி நாகரிகங்கள் நோக்கி

வலுவாக இழுக்கிறது

நான் அருமையான குதிரைகளுக்கு நீர் வார்க்கிறேன்

எழுத்துருவின் துடிப்பை அதன் எதிரொலியில் நான் உணர்கிறேன்

இரண்டு திசைகளிலிருந்தும் ஒரு ஜன்னலாகத் திரும்பி வருகிறேன்

நான் யாரென்பதை மறந்துவிடுகிறேன்

ஒரு குழுமமாக இருப்பதற்காக

என் ஜன்னலின் கீழ் பாராட்டுரைக்கும் மாலுமிகளுக்கு சமகாலத்தவனாக இருப்பதற்காக

போர்வீரர் தங்கள் உறவினருக்குச் சொல்லும் செய்தி இவ்வாறாயிருக்கிறது:

நாங்கள் போனபடியே திரும்பி வரமாட்டோம்

நாங்கள் அவ்வபோது கூட திரும்ப வரமாட்டோம்

எனக்குப் பாலைவனத்தைத் தெரியாது

ஓயாது நினைவில் ஊடாடும் அந்த வெளிக்கு நான் எவ்வளவுதான்

வருகை தந்திருந்தாலும் 

நான் பார்க்காத பாலைவனம் என்னிடம் சொன்னது:

எழுது!

நான் சொன்னேன்: கானலில் இன்னொரு எழுதுதல் இருக்கிறது

அது சொன்னது: கானலை பச்சை நிறமாக்க எழுது

நான் சொன்னேன்: இன்மை என்னிடத்தில் குறைவுபட்டிருக்கிறது

அதற்கான சொற்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை

அது சொன்னது: எழுது அது உனக்குத் தெரியவரக்கூடும்

நீ எங்கே இருந்தாய் நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரிவதாக

நீ எப்படி வந்தாய், நாளை நீ என்னவாக இருப்பாய் என்பது தெரிவதாக

உனது பெயரை என் கையில் கொடுத்துவிட்டு எழுது

நான் யார் என்பது உனக்குத் தெரிவதாக, நீ மேகம் போல

வெளியில் சென்றடைவாயாக

ஆகையால் நான் எழுதினேன்: யார் அவன் கதையை எழுதுகிறானோ அவன் சொற்களின் நிலத்தை மரபுரிமையாய் பெறுகிறான்

அவன் அவற்றின் அர்த்தங்களுக்கு முழுச் சொந்தக்காரனாகிறான்

எனக்கு பாலைவனத்தைத் தெரியாது

ஆனால் அதைப் பிரிய, போய்வருகிறேன் என்றேன்

எனது பாடலின் கிழக்கே இருக்கும் பழங்குடியினரே போய்வருகிறேன்

வாளின் பன்மையிலான இனமே போய்வருகிறேன்

பனை மரத்தினடியில் இருக்கும் என் தாயின் புத்திரனே போய்வருகிறேன்

நம் கிரகங்களைப் பாதுகாத்து வரும் *ஏழு புனிதப் பாடல்களே

போய்வருகிறேன்

அமைதி என்னைத் தழுவட்டும்: இரண்டு கவிதைகளுக்கு நடுவே

ஒரு கவிதை எழுதப்பட்டுவிட்டது

இன்னொன்றின் கவிஞன் தீவிர உணர்வெழுச்சியில் இறந்துவிட்டான்

நானா அது?

நான் அங்கே இருக்கிறேனா அல்லது இங்கேயா?

என் ஒவ்வொரு நீயிலும் நான் இருப்பதாக,

நானே நீ, முன்னிலை ஆள், அது நாடுகடத்துவதல்ல

நான் நீயாக இருப்பது, அது நாடுகடத்துவதல்ல

நீ நானாக என்னுடைய நான் உன்னுடையதாக இருப்பது, அது நாடுகடத்துவதல்ல

கடலும் பாலைவனமும் இருப்பதாக

பயணியின் பாடல்கள் இன்னொரு பயணிக்காக:

நான் சென்றது போலவே திரும்பவரமாட்டேன்,

நான் திரும்பவரவேமாட்டேன்… அவ்வபோது கூட!

——

* எழு புனித பாடல்கள் Muʻallaqāt என்று அழைக்கப்படுகின்றன. புனித மெக்காவில் மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் உள்ள கஃபாவில் (கனசெவ்வக வடிவக் கட்டிடம்) இந்த எழு புனித பாடல்களும் எழுதி தொங்கவிடப்படுள்ளன. உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. ஏழுமுறை இடஞ்சுழியாகச் சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

Monday, December 19, 2022

மகமது தர்வீஷின் மேலும் இரண்டு கவிதைகள்

 முட்கள் செறிந்த பேரிக்காய் புதரின் நிலைபேறு

———-
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
——
என்னை எங்கே கூட்டிச் செல்கிறீர்கள், தந்தையீர்?
காற்றை நோக்கி என் மகனே…
போனபார்டேயின் துருப்புகள் ஏக்கரின் நிழல்களைக் கண்காணிக்க அமைத்த மேட்டின் அருகில்
சமவெளியிலிருந்து அவர்கள் இருவரும் வந்து சேர்கையில்
ஒரு தந்தை தன் மகனுக்குச் சொல்கிறார்: பயப்படாதே, பயப்படாதே தோட்டாக்களின் விசில் சத்தத்துக்குப் பயப்படாதே
தூசில் இருப்பது பாதுகாப்பானது
நாம் பத்திரமாய் இருப்போம்
வடக்கில் ஒரு குன்றினை ஏறிவிடுவோம்
துருப்புகள் வெகு தூரத்திலுள்ள தங்கள் மக்களிடம் சென்றபின்
நாம் திரும்பிப் போய் விடுவோம்
நாம் அங்கே இல்லாதபோது நம் வீட்டில் யார் வாழ்வார்கள் தந்தையே?
அது அங்கே அப்படியேதான் இருக்கும், என் மகனே
அவர் தன் கால்களை உணர்ந்தபோது சாவியையும் உணர்ந்தார்,
நம்பிக்கையடைந்தார்,
அவர்கள் முள்ப்புதர் வேலிஒன்றைத் தாண்டியபோது
அவர் அவனிடம் சொன்னார்
மகனே, நினைவில் கொள், இங்கேதான்
பிரிட்டிஷ்காரர்கள் உன் தந்தையை
இரண்டு இரவுகள் முட்கள் செறிந்த பேரிக்காய் புதரில்
சிலுவையில் அறைந்தார்கள், ஆனால் அவர் அவர்களிடம்
எந்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை
நீ வளரும்போது என் மகனே,
நீ அந்த துப்பாக்கிகளின் வாரிசுதாரர்களிடம் சொல்வாய்
அவர்கள் இரும்பில் அழியாமல் சேர்ந்திருக்கும் ரத்தத்தின் கணக்கை
நீங்கள் எதற்கு குதிரையை தனியாக விட்டுவந்தீர்கள்?
வீட்டிற்கான துணையாக இருப்பதற்காக, என் மகனே
வீட்டிலுள்ளோர் வீடு நீங்குகையில் அவை மரிக்கின்றன என்பதால்
நிலைபேறு தன் கதவுகளைத் திறக்கிறது, வெகு தூரத்தில்,
இரவைத் துரத்திப் பின்செல்வோருக்கு.
பயமுறுத்தும் நிலவைப் பார்த்து தரிசுகளில் ஓநாய்கள் ஊளையிடுகின்றன
ஒரு தந்தை தன் மகனுக்கு சொல்கிறார்: உன் தாத்தாவைப் போல வலுவானவனாய் இரு
வெள்ளம் அமிழ்த்திய நிலத்தில் நிற்கும் கடைசி கருவாலி மர குன்று வரை என்னுடன் ஏறிவிடு
நினைவில் கொள் மகனே; இங்கேதான் துருக்கிய சுல்தானின்
துருப்புகள் தங்கள் கோவேறுக்கழுதை போரிலிருந்து
கீழே விழுந்தார்கள், என்னுடனே பாதங்களிட்டு வா
நாம் அப்போதுதான் திரும்பிச் செல்லமுடியும்
எப்போது தந்தையே?
நாளைக்கு. ஒருவேளை இன்னும் இரண்டு நாட்களில், மகனே
அடுத்த நாள் அசட்டையாய் கழிந்தது, நீண்ட குளிர்கால இரவுகளில் அவர்கள் பின்னே காற்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது
ஜோஷுவா பென் நூனின் துருப்புகள் அவர்கள் வீட்டிலிருந்து எடுத்த கற்களால் கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள்
அவர்கள் இருவருமே சுரங்கவழி நீர்ப்பாதையில் மூச்சிறைத்துக்கொண்டிருந்தார்கள்
இங்கேதான் முன்னொரு நாள் நம் கடவுள் கடந்து சென்றார்
இங்கேதான் அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்
அவர் அதிகமும் அன்பைப் பற்றி பேசினார்
என் மகனே நாளையை நினைவில் கொள்
அந்த துருப்புகள் போன பின்
சிலுவைப்போரின் கோட்டைகளை
ஏப்ரல் மாதத்தின் புற்கள் சிறுகச் சிறுக மென்று அழித்துவிட்டன.

-------
என்னுடைய முடிவுக்கும் அதன் முடிவுக்கும்
——
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
-நீ நடப்பதால் களைப்படைந்திருக்கிறாயா
குழந்தாய், களைப்படைந்திருக்கிறாயா?
— ஆமாம் தந்தையே
அந்தத் தடத்தில் உன் இரவு நீண்டதாக இருந்தது
இதயம் உன் இரவின் பூமியில் நீரோட்டமாய் ஓடியது
— நீ இன்னும் ஒரு பூனையைப் போல லேசாக இருக்கிறாய்
என் தோளில் ஏறிக்கொள்
இது வடக்கு கலீலீ
சீக்கிரத்தில் நாம்
வெள்ளம் அமிழ்த்திய நிலத்தில் கடைசி கருவாலி மரத்தையும் கடந்து விடுவோம்
லெபனான் நமக்குப் பின்னால் இருக்கிறது
டமாஸ்கஸிலிருந்து ஏக்கரின் அழகிய சுவர்கள் வரையிலான முழு வானமும் நம்முடையது
-அப்புறம் என்ன?
அதன் பிறகு நாம் வீட்டுக்குப் போவோம்
உனக்கு வழி தெரியுமா குழந்தாய்?
ஆமாம், தந்தையே
பிரதான சாலையிலிருக்கும் கரூப்பா மரத்தின் கிழக்கிலிருந்து
ஒரு சிறிய பாதையில் ஒளிந்திருக்கும் முட்கள் செறிந்த பேரிக்காய் புதருக்கு முதலில், அதிலிருந்து அகலமாகி, அகலமாகி, கிணற்றுக்குச் செல்லும் பாதை
திராட்சைத் தோட்டத்தை பார்த்தபடி இருக்கும்
அது புகையிலையும், இனிப்புகளூம் விற்கும் ஜமீல் மாமாவுக்குச் சொந்தமானது
அதன் பிறகு அந்தப் பாதை கதிரடிக்கும் தரையில் தன்னை இழந்து நேராக வீட்டில் வந்து முடியும்
ஒரு கிளியின் வடிவத்தைப் போல
-உனக்கு அந்த வீடு தெரியுமா குழந்தாய்?
எனக்கு வீடும் அதன் பாதையும் தெரியும்
இரும்புக் கதவருகே மல்லிகை
கற்படிக்கட்டுகளில் சூரிய ஒளிக் கற்றைகள்
நம்மையும் நம்மைத்தாண்டியும் பார்க்கும் சூரிய காந்தி மலர்கள்
தாத்தாவுக்கான காலை உணவை பிரம்புத் தட்டில் தயார் செய்யும் தேனீக்கள்
முற்றத்தில் ஒரு கிணறு, ஒரு காற்றாடி மரம், ஒரு குதிரை
பிறகு புதருக்குப் பின்னால் நம் பக்கங்களைப் புரட்டிச் செல்லும் ஒரு நாளை
— உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா, தந்தையே?
நான் உங்கள் கண்களில் வியர்வையைப் பார்க்கிறேன்
-என் மகனே, நான் களைப்படைந்திருக்கிறேன்.. என்னைத் தூக்கிச் செல்வாயா?
— நீங்கள் என்னைத் தூக்கிச் சென்றது போலவே தந்தையே
நான் இந்த ஏக்கத்தை தூக்கிச் செல்வேன்
ஏனெனில்
என்னுடைய ஆரம்பங்களே அதன் ஆரம்பங்கள்
நான் இந்தப் பாதையை என் முடிவு வரை
நடப்பேன் … அதன் முடிவு வரைக்கும் கூட

Sunday, December 18, 2022

மகமது தர்வீஷின் மூன்று கவிதைகள்

 உடலிலிருந்து நீரோட்டமாய் வழியும் ஒரு இரவு

—-
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———
ஜூலை இரவொன்றில் மல்லிகை, பாடல்
தெருவில் சந்திக்கும் இரு அன்னியர்கள் பற்றியது
அது எந்தவொரு இலக்கிற்கும் இட்டுச்செல்வதில்லை
இரண்டு வாதுமை கண்களுக்குப் பின் நான் யார்? அன்னியன் சொல்கிறான்
நீ என்னை நாடுகடத்தியபின் நான் யார்? அந்த அன்னியப் பெண் சொல்கிறாள்
நாம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது
ஆதி கடல்களின் உப்பை நினைவுகூரும் உடலுக்குள் கடத்தாமல் இருப்பது..
அவள் அவனிடத்தில் ஒரு வெப்ப உடலாக திரும்பி வருபவளாக இருந்தாள்
அவன் அவளிடத்தில் ஒரு வெப்ப உடலாக திரும்பி வருபவனாக இருந்தான்
இவ்வாறாகவே அன்னிய காதலர்கள் தங்கள் காதலை விட்டு விலகுகிறார்கள்
அலங்கோலமாக, தங்கள் உள்ளாடைகளை
படுக்கைவிரிப்பின் மலர்களிடையே விட்டுச் செல்பவர்களாக
-நீ என்னை உண்மையாகக் காதலித்தால்
ஒரு பாடலின் பாடலை எனக்காகத் தா
என் பெயரை பாபிலோனின் தோட்டத்திலுள்ள மாதுளை மரப்பட்டைகளில் செதுக்கு
-நீ என்னை உண்மையாகக் காதலித்தால்
என் கனவை என் கையில் வை, மரியமின் மகனிடம் சொல்
நீ உனக்கு செய்துகொண்டதை நீ எப்படி எங்களுக்குச் செய்ய இயலும்
ஓ தெய்வமே எங்களை இன்னொரு நாளையாக மாற்றுவதில் ஏதேனும் நீதி இருக்குமா
நானெப்படி மல்லிகை நாளையிலிருந்து குணப்படுத்தப்படுவேன்?
நானெப்படி மல்லிகை நாளையிலிருந்து குணப்படுத்தப்படுவேன்?
அவர்கள் அறையின் கூரை வரை நிரப்பும் இருட்டில்
ஊடி அமர்ந்து இருக்கிறார்கள்; அவள் அவனிடம் சொல்கிறாள் என் மார்புகளால் கவனம் சிதறாதே
அவன் சொல்கிறான்: உன் மார்புகளே இந்த இரவின் தேவைகளை ஒளியூட்டுவது
உனது மார்புகளே என்னை முத்தமிடும் இரவு,
நாம் நிரம்பியிருக்கிறோம்
இடமோ இரவின் கோப்பையை மீறி வழிகிறது
அவள் அந்த விவரணைக்கு சிரிக்கிறாள்
அவள் மேலும் சிரிக்கும்போது இரவின் வீழ்தல் அவள் கையில் மறைகிறது
என் அன்பே, அது என் அதிர்ஷ்ட சீட்டாய் இருக்குமென்றால்
நானொரு இளைஞனாய் இருந்திருந்தால் நீயாகவே நான் இருப்பேன்
நானொரு பெண்ணாய் இருந்திருந்தால் நீயாகவே நான் இருப்பேன்
அவள் அழுகிறாள், அது அவள் வழி, திராட்சைரச நிறமுடைய சொர்க்கத்திலிருந்து திரும்பிவந்தவளாக;
என்னைக் கூட்டிச் செல்
காற்றாடி மரங்களின் மேல் நீலப்பறவை இல்லாத
நிலத்துக்கு, ஓ அன்னியனே
அவள் மேலும் அழுகிறாள் வனங்களின் வழியே பயணத்தை பாதியில் நிறுத்துபவளாக
தனக்குத் தானே நான் யார் என்று கேட்பவளாக
நீ என்னை என் உடலிலிருந்து நாடுகடத்தியபின் நான் யார்?
எனக்கும், உனக்கும், எனது நிலத்துக்கும் என் சோகமே
இரண்டு வாதுமை கண்களுக்குப் பின் நான் யார்?
எனக்கு என் நாளையைக் காட்டிக்கொடு
இவ்வாறாகவே காதலர்கள் விடைபெறுகிறார்கள்
அலங்கோலமாக, ஜூலை இரவின் மல்லிகை வாசம் போல
ஓவ்வொரு ஜூலையும் மல்லிகை என்னை
ஒரு இலக்கற்ற தெருவுக்குக் கூட்டிச் செல்கிறது
நான் என் பாடலைத் தொடர்கிறேன்
மல்லிகை
ஜூலையில்
ஒரு இரவு…

-----------------------------------------------------------------
சிட்டுக்குருவி, அது அப்படியே, அது அப்படியே
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
————-
மரபின் பன்மை பொருண்மை: இந்தப் பிளந்த மருள் மாலை நேரம் கண்ணாடிக்குப்பின்னுள்ள வீரியமாய் என்னை அழைக்கிறது
நான் அடிக்கடி உன்ணைக் கனவு காண்பதில்லை, சிட்டுக்குருவி
சிறகு சிறகைக் கனவு காண்பதில்லை
நாம் இருவருமே பதற்றமாய் இருக்கிறோம்
—-
என்னிடம் இல்லாதது உன்னிடம் இருக்கிறது; உன் இணையின் நீலத்தன்மை
உன் அடைக்கலம் காற்றிலிருந்து காற்றிற்குத் திரும்புவது
அதனால் நீ என் மேல் பறக்கிறாய்! என்னுள் இருக்கும் ஆன்மா
ஆன்மாவுக்காக தாகித்து இருக்கிறது, அது உன் இறகுகளால் பின்னப்படும் நாட்களை பாராட்டுகிறது
என்னைக் கைவிடு அது உனக்கு விருப்பமென்றால்
என்னுடைய வீட்டிற்காக, என் வார்த்தைகள் குறுகலானவையாக இருப்பதால்
——
ஒரு மகிழ்ச்சியான விருந்தாளியைப் போல அதற்கு கூரை தெரியும்
ஒரு ஜன்னலில் அமர்ந்திருக்கும் பாட்டி நீரும் ரொட்டியும் எங்கேயிருக்கிறது என அறிவது போல
அதற்குத் தீனித்தொட்டி எங்கே இருக்கிறது எனத் தெரியும்
எலிகளுக்கான பொறி எங்கே இருக்கிறது என்பதும்
அது தன் சிறகுகளை தன் சால்வையை நழுவ விடும் பெண் போல தன் சிறகுகளை சிலிர்த்துக்கொள்கிறது
அந்த நீலத்தன்மை பறக்கிறது
—-
என்னைப் போலவே மன உறுதியற்றது
இந்த திடசித்தமில்லாத கொண்டாட்டம்
இதயத்தை வழித்து வைக்கோலில் வீசுவதாய் இருக்கிறது
ஏதேனும் ஒரு நடுக்கம் வெள்ளிப்பாத்திரத்தில் ஒரு நாளேனும் நிலைத்திருக்கிறதா?
என் பதிவு நகைச்சுவையற்றதாயிருக்கிறது
ஆனாலும் நீ வருவாய் சிட்டுக்குருவி
அடிவானம் எவ்வளவு அகலாமயிருந்தாலும் பூமி குறுகலாகவே இருக்கிறது
——
உன் சிறகுகள் என்னிடமிருந்து என்னதான் எடுத்துச் செல்லும்?
அழுத்தம் , ஒரு பொறுப்பற்ற தினம் போல ஆவியாகிவிடும்
ஒரு கோதுமை மணி அவசியம் இறகுகள் சுதந்திரமாய் இருக்க
என் கண்ணாடிகள் உன்னிடமிருந்து என்ன எடுத்துக்கொள்ளும்?
என் ஆன்மாவுக்கு ஒரு ஆகாயம் கட்டாயம் வேண்டும், முழுமை அதை பார்ப்பதற்காக
—-
நீ சுதந்திரமாய் இருக்கிறாய் நானும் சுதந்திரமாய் இருக்கிறேன்
நாம் இருவருமே விரும்புகிறோம்
இல்லாததை. அதனால் என்னை கீழ் நோக்கி அழுத்து நான் மேலே எழுவதற்கு.
மேலே எழு நான் கீழ் நோக்கி சரிவதற்கு. ஓ சிட்டுக்குருவி!
எனக்கு ஒளியின் மணியைக்கொடு
நான் காலத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டை உனக்குத் தருகிறேன்
நாம் ஒருவரை ஒருவர் முழுமையாக்குகிறோம்
ஆகாயத்திற்கும் ஆகாயத்திற்கும் இடையில்
நாம் பிரிந்து போகையில்
—-------------------------------------------------------------------
எத்தனை தடவைகள் எல்லாம் முடிவடையும்?
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
——
அவன் தன் நாட்களை சிகரெட் புகையில் தியானிக்கிறான்
அவன் தன் சட்டைப்பை கடிகாரத்தை பார்த்தவாறே
நான் மட்டும் இதன் நகர்வுகளை தாமதப்படுத்த முடியுமென்றால்
வாற்கோதுமை முதிர்வதைத் தள்ளிப்போட முடியுமென்றால்
அவன் தன்னிடமிருந்து விலகி நிற்கிறான், அயர்ந்தவனாய், மனக்குறைகளுடன்
கோதுமையின் மணிகள் கனத்திருக்கின்றன, கதிர் அருவாள்கள் சோம்பிக்கிடக்கின்றன, நிலம்
தீர்க்கதரிசியின் கதவிலிருந்து தூரத்திலிருக்கிறது
லெபனானின் கோடை தெற்கிலிருக்கும் என் திராட்சைகளைப் பற்றி என்னிடம் பேசுகிறது
லெபனானின் கோடை இயற்கைக்கு அப்பால் இருப்பதைப் பற்றிப் பேசுகிறது
ஆனால் என் கடவுளை நோக்கிய பாதை
தெற்கின் நட்சத்திரத்திலிருந்து தொடங்குகிறது
நீவிர் என்னிடம் பேசுகிறீரா, தந்தையீர்?
றோட்ஸ் தீவில் அவர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டார்கள், மகனே
அது நம்மை எப்படி பாதிக்கும் தந்தையே, அது அப்படி நம்மை பாதிக்கும்?
எல்லாம் முடிந்துவிட்டது
எத்தனை தடவைகள் எல்லாம் முடிவடையும் தந்தையே?
அது முடிந்துவிட்டது. அவர்கள் தங்கள் கடைமையைச் செய்தார்கள்
அவர்கள் தங்கள் உடைந்த துப்பாக்கிகளோடு எதிரியின் விமானத்தோடு போரிட்டார்கள்
நாம் நம் கடமையைச் செய்தோம், நாம் சீன மரத்திலிருந்து தள்ளியே இருந்தோம்
அதன் தலைமை அதிகாரியின் தொப்பியை தொந்திரவு செய்யாவன்ணம்
நாம் நமது மனைவிமார்களின் மோதிரங்களை விற்றோம்
என் குழந்தாய்
அவர்கள் சிட்டுக்குருவிகளை வேட்டையாடுவதற்காக
அப்படியானால் தந்தையே நாம் இங்கேயே இருக்கப் போகிறோமோ?
கடலுக்கும் வானத்துக்கும் இடையில்
காற்றில் ஆடும் காற்றாடி மரத்துக்கு அடியில்
குழந்தாய் எல்லாமே இங்கேயும்
அங்கே இருப்பதின் சிலதைப் போலவே இருக்கும்
இரவு வருகையில் நாம் நாமாகிவிடுவோம்
ஒரே மாதிரி இருப்பதன் நிரந்திர நட்சத்திரத்தினால்
நாம் எரியூட்டப்படுவோம்
தந்தையே என்னை உற்சாகப்படுத்த ஏதாவது சொல்லுங்கள்
நான் ஜன்னலைத் திறந்து விட்டு வந்திருக்கிறேன்
கூவும் புறாக்களுக்காக
கிணற்றின் விளிம்பில் என் முகத்தை விட்டு வந்திருக்கிறேன்
நான் என் பேச்சை
அலமாரிக் கயிற்றில் விட்டு வந்திருக்கிறேன்
அது தன் கதையைச் சொல்வதற்காக
நான் இருளை விட்டு வந்திருக்கிறேன்
என் காத்திருப்பின் கம்பளி மூடிய இரவில்
நான் மேகங்களை விட்டு வந்திருக்கிறேன்
தன் கால்சாராய்களை விரிக்கும் அத்தி மரங்களின் மேல்
நான் தூக்கத்தை விட்டு வந்திருக்கிறேன்
தன்னைத் தானே அது புதுப்பித்துக்கொள்ள
நான் அமைதியை விட்டு வந்திருக்கிறேன்
தனியாக, அங்கே அந்த நிலத்தில்
— நான் விழித்திருக்கும்போது கனவு கண்டீர்களா தந்தையே?
- எழுந்திரு, நாம் திரும்பப் போகலாம் குழந்தாய்!
---------------------------------------------------------
கல்வாரியில் பாறை உடைப்பவன்
—-
மகமது தர்வீஷின் ‘அடையாள அட்டை’ கவிதையை மொழி பெயர்க்கலாமென்றால் இணையத்தில் அந்தக்கவிதை பல மாற்று வடிவங்களில் கிடைக்கிறது. ஒரு வடிவம் ‘எழுதிக்கொள் நான் ஒரு அரேபியன்’ என்று ஆரம்பிக்கிறது இன்னொரு வடிவத்திலோ ‘எழுதிக்கொள் உன் பதிவேடுகளில், நான் ஒரு அரேபியன்’ என்று ஆரம்பிக்கிறது. பத்திகளில் முடிவில் சில வடிவங்களில் ‘ எனக்கு ஒன்பது குழந்தைகள், பத்தாவது அடுத்த கோடையில் வரவிருக்கிறது, இதற்காகக் கோபப்பட வேண்டுமா’ என்றிருக்கிறது வேறு சில வடிவங்களிலோ ‘நீ இதற்காக கோபப்படுவாயா? ‘ என்று வேறொருவரைப் பார்த்து விளிக்கிறது. மிகச் சிறிய வேறுபாடுகள்தான் ஆனால் கவிதையின் தொனி முழுமையாக மாறிவிடுகிறது. கல்வாரியில் பாறை உடைப்பவனாக தன்னை இந்தக்கவிதையில் அடையாளப்படுத்திக்கொள்ளும் தர்வீஷ் அதை வைத்தே தன் அரேபிய தேசிய அடையாளத்தைக் கட்டுகிறார். தேசிய அடையாளம் இப்படியாக தர்வீஷுக்கு கடின உழைப்பாளியையும் சமூகத்தின் கடைமட்டத்தில் இருப்பவனின் வாழ்வாதார இருப்பை வைத்தும் கட்டமைக்கப்படுகிறதே அல்லாமல் அரேபிய, பாலஸ்தீனிய மரபுகள், தத்துவார்த்தங்கள் ஆகியவற்றை வைத்துக் கட்டமைக்கப்படுவதில்லை. எந்த விதமான மரபுக்கான உரிமை கோரலும் தர்வீஷிடம் இல்லை. ‘அடையாள அட்டை’ கவிதை வெளிவந்தபோது அது மக்களிடையே உண்டாக்கிய உணர்வு எழுச்சியைப் பார்த்து பயந்த அரசு அவரை சிறையிலடைத்தது. தர்வீஷும் எட்வர்ட் செய்தும் (Edward Said) நெருங்கிய நண்பர்கள். செய்து மறைந்தபோது தர்வீஷ் அவருக்காக எழுதிய கவிதையில் ஒரு வரி வருகிறது, “ அவன் நான் அங்கேயிருந்து வருகிறேன், இங்கேயிருந்து வருகிறேன் என்று சொல்கிறான் ஆனால் நான் அங்கேயுமில்லை, இங்கேயுமில்லை. எனக்கு இரண்டு பெயர்கள் இருக்கின்றன அவை சந்தித்து பிரிகின்றன; எனக்கு இரண்டு மொழிகள் இருக்கின்றன அதில் ஒன்றை நான் மறந்துவிட்டேன் , அது கனவுகளின் மொழி”

2


0


1