Showing posts with label பிம்ப ஆய்வு. Show all posts
Showing posts with label பிம்ப ஆய்வு. Show all posts

Monday, November 14, 2011

போக பிம்பம் நமீதா




அசினுக்கு உளுந்தங்களி கிண்டி போட்டாயிற்றா என்று கேட்டு வந்துள்ள கடிதம் உட்பட அசின் கட்டுரைக்கு வந்துள்ள பல எதிர்வினைகள் என் பிம்ப ஆய்வு முறையை சரியாக உள்வாங்கிகொள்ளவில்லையாதலால் இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் என் முறைமையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அசினுக்கோ நமீதாவுக்கோ ரசிகனல்ல. நான் அவர்களின் பிம்பங்கள் நம்மோடு எப்படி உறவாடுகின்றன என்றுதான் எழுதுகிறேன். தமிழ் வியாபார சினிமா என்பது பிம்பத் துய்ப்பின் மூலம் பெறப்படும் இன்பங்களின் உற்பத்தி எந்திரம். பிம்பங்களின் ஆய்வு மூலம் நம் ஆசைகளின் உட்கட்டுமானங்களை அறிகிறோமே அன்றி பிம்பங்களின் உரிமையாளர்களையோ, பிம்பங்களின் செயற்கை காம உறுப்புக்களையோ அல்ல. ஹா நான் அந்த பென் பிம்பத்தைப் பார்த்து சொக்கிவிட்டேன் மயங்கிவிட்டேன் என்று எழுதினேன் என்றால் அந்த பிம்பம் ஏற்படுத்தும் தாக்கத்தினை நான் எழுத்தில் பாவனை செய்கிறேன், நிகழ்த்திக் காட்டுகிறேன் என்று வாசித்தால் நல்லது.

இன்னும் இரண்டு சுற்று பெருத்தால் ஷகீலா இன்னும் இரண்டு சுற்று இளைத்தால் நயனதாரா என்று கஷ்குமுஷ்கு என்றிருக்கும் நமீதா பெண் பிம்பம் நம் காலத்தின் போக பிம்பம் ஆனதெப்படி என்பது வரலாற்று ஆராய்ச்சிக்குரியதாகும். நாயக்கர் கால கோவில் சிற்பங்களிலேயே நாம் பருத்த தனங்களோடு கூடிய இடை விரிந்த கொழுக் மொழுக் பெண் சிலைகளைப் பார்க்கிறோம். அதற்கு முந்தைய சோழர் கால பல்லவர் கால கோவில்களிலுள்ள பெண் சிலைகளில் முலைகளின் வளப்பத்திற்குக் குறைவில்லையென்றாலும் அவை கூரிய நாசியையும், மெல்லிய உதடுகளையும், கொடி இடையையும் உடைய ஒல்லிக்குச்சி பெண் சிற்பங்கள். நாயக்கர் கால சிற்பங்களுக்கு அடுத்தபடியாக பருத்த முலைகளும் செழித்த தொடைகளும் கூம்பிய தலையும் உடைய பெண் சுடு மணற் சிற்பங்களை தாய்த் தெய்வ வழிபாட்டிலேயே நாம் பார்க்கிறோம்.  நிலம், நாடு, குடும்பம், விவசாயம் ஆகியவற்றின் வளமை குறியீடாக வழிபடப்படும் பெண் பிரதிமைகள் அவை. கடுமையான பஞ்சங்கள் பல கண்ட நம் வரலாற்றில் தாட்டியான பெண் பிம்பம் அழகானதாகவும், வசீகரமானதாகவும் செல்வத்தின் குறியீடாகவும் பல தலைமுறைகளாக நிலை பெற்றுவிட்டது.

தமிழ் சினிமாவின் ஆரம்பகட்டங்களிலிருந்து தாட்டியான சதைப்பற்று அதிகமுள்ள பெண்பிம்பங்களே கதாநாயகி பிம்பங்களாக இருந்து வந்திருக்கின்றன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ராணா பிரதாப் சிங் போன்ற சரிந்த தொப்பைக் கதாநாயகர்களுக்கு ஏற்ப சதைப் பற்றுள்ள கதாநாயகி பிம்பங்களே மையத் திரையை ஆக்கிரமித்திருந்தன. எழுபதுகளின் இறுதியில் எண்பதுகளில் இந்த நிலைமை மாறி  அடுத்த வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றமுடைய சாதாரண பெண் பிம்பங்கள் கதாநாயகி பிம்பங்களாயின. இந்த சாதாரண பெண் பிம்பங்களுக்கு எதிரிடையான கள்ள இன்பத்தை ஊக்குவிப்பனவாக குண்டு பெண் பிம்பங்கள் தமிழ்த் திரையில் இடம் பெற்றன. தீபா என்ற பெண் பிம்பம் இந்தப் போக்கின் மெல்லிய வடிவமென்றால் ஜெயபாரதி, ஜெயமாலினி ஆகிய பெண் பிம்பங்கள் கடின வடிவங்களாகும். தென்னிந்திய சினிமாப்படங்களில் இந்த பிம்பங்கள் மழையில் நனைந்தபடியே வாத்து அல்லது ஆடு மேய்க்கும் காட்சிகள் மிகவும் புகழ் பெற்றவை. ரவிக்கை இல்லாமல் வாத்து மேய்த்தது போக குட்டைப்பாவாடை மார்க்கச்சை மட்டும் அணிந்து இந்தப் பெண்பிம்பங்கள் பேய்களாய் ஆடியதைப் பார்த்து தென்னிந்தியாவே கலகலத்துப்போயிற்று.


மேற்சொன்ன பெண் பிம்பங்களின் வம்சாவழியிலேயே நமீதாவின் பிம்பமும் போகப்பொருளாயிருக்கிறது.  நமீதா பிம்பத்தோடு நேரடியான இன்பத் துய்ப்பு உறவினை பார்வையாளர்களுக்கு இதுவரை வந்துள்ள திரைப்படங்கள் தரவில்லை; மாறாக கள்ள இன்பத் துய்ப்பினையே அவை ஊக்குவிக்கின்றன.

பங்கேற்போரிடையே நட்பு, பரஸ்பர இசைவு, பரஸ்பர மரியாதை, நேரடித் தன்மை, துய்ப்பினை மறுப்பதற்கான உரிமை, கடப்பாடு ஆகியன இல்லாத இன்பத் துய்ப்பு உறவுகள் அனைத்தும் கள்ளத் துய்ப்புகளே. கள்ளத் துய்ப்புகளின் சித்தரிப்புகளும் காட்சிகளும் அவற்றில் பங்கேற்போரை வெற்று சதைக் கோளங்களாகக் குறுக்குகின்றன.

கள்ள துய்ப்பு காட்சிகள் மட்டுமே நிறைந்த படமாக சமீபத்தில் வெளிவந்த கன்னட நமீதா படத்தினை இங்கே உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தக் கன்னடப் படத்தில் நமீதா பிம்பம் ஹடயோகம் கற்பிக்கும் டீச்சர் பாத்திரத்தை ஏற்றுள்ளது. தமிழ் சினிமாவும் இதற்குக் குறைந்ததில்லை என்ற விதத்தில் மசாஜ் பண்ணுவது எண்ணெய் குளியல் என்று காட்சிகள்.


இது தவிர ஆண் சுத்த கனவான், பெண் மோகினி, பைசாசம், மயக்குபவள், இன்பம் துய்ப்பவள் என்ற தமிழ் சினிமாவின் விசுவாமித்திரர்-மேனகா archetype கதைகளிலும் சம்பவங்களிலும் நமீதா பெண் பிம்பம் மேனகாவாக இருக்கிறது.


கள்ளத்துய்ப்பு சம்பவங்கள் என்பவை எனக்கு எதுவும் தெரியாதே என்ற பாவனையில் இருக்க நனவற்று உடல்களையும் உணர்வுகளையும் பாலின்பம் துய்க்க விடுவனவாகும். மக்கள் நெரிசல் மிகுந்த  பஸ்கள், ரயில்கள், கோவில்கள், தெருக்கள், திருவிழாக்கள் என இன்றைக்கு உடல்கள் தெரியாதே என சதை இன்பம் துய்க்கின்றன என்றால் அவைகளுக்கான நிகர் அனுபவமே நமீதா என்ற பெண் பிம்பத்தினை திரையில் பார்ப்பதாகவும் இருக்கிறது.

சதைக்கோளம் என்ற நிலைமை மாறி நமீதா என்ற பெண் பிம்பத்தின் நடிப்பினை திரையில் பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன்.

Thursday, November 10, 2011

அசின் என்றொரு பெண்பிம்பம்



அசின் பெண் பிம்பம்/திரை நட்சத்திரம்


திருச்சூர் வடக்கன்நாதசாமி கோவில் பிரகாரத்தில் பார்த்த பெண்ணின் குழிசடையையும், நெற்றி சந்தனக் கீற்றையும் நீக்கி, ஜீன்ஸ் மாட்டி நடக்கவிட்டது போல ‘சுட்டும் விழிச் சுடரே’ என்ற பாடலுக்கு ஒரு பெண்பிம்பம் தொலைக்காட்சியில் நடந்து போய்க்கொண்டிருக்க, அந்த பிம்ப உரிமையாளரின் பெயர் அசின் என்று பின்னால் அறிந்தேன். அந்தப் பாடலில் அசின் பெண் பிம்பத்தின் வசீகரத்தில் நிலை தடுமாறியது கொஞ்சமா நஞ்சமா!


ஜீன்சின் மேல் பட்டியில் கை விரல்களைச் சொருகிக்கொண்டு, கால் மாற்றி கால் மாற்றி, தொடைகள்  உராய அசின் பெண் பிம்பத்தின் நடை ஆணைச் சீண்டும் அழைப்பிதழ்; இளமை மட்டுமே அறியும் ஆனந்தத்தின், அதன் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு அது. ஷாம்பூ போட்டு பரத்திய கூந்தல் நடையின் லயத்திற்கு ஏற்ப மெலிதாகப் பறப்பது கூடுதல் அதிர்ஷ்டம்.

அசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் ஒளி உணர்வுக்கு ஏற்ப நிறம் ஏற்பதில்லை என்று எனக்கொரு புகார் உண்டு. கே.ஆர்.விஜயா, ஶ்ரீவித்யா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ,கோபிகா சாவ்லா, பிரியா மணி என்று பல பிற பெண் பிம்பங்களின் கோல விழிகளில் உணர்வு உடனே தொற்றி கடலாழம் காண்பிக்கும். அசின் பெண்பிம்பத்திலோ கண்களில் நீர் மல்கி சொட்டாமல் நிற்கும்போது கூட பிளந்த உதடுகளின் தாபமே தெரியும். சில்க் ஸ்மிதா பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் தாபம் வெறுமையும் ஆழ்ந்த வெறுப்பும் கொண்டது; ஆண் தாபத்திற்கு ஒப்புக்கொடுத்ததன் தோல்வியை அறிவிப்பது. அது போன்ற தாப வெளிப்பாடு அல்ல அசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரிவது. வாழ்க்கையின் துயரங்களை துயரங்களாக அனுபவத்தறியாத செல்லப்பிள்ளையின் கண்கள் அசின் பெண் பிம்பத்தின் கண்கள். அந்தக் கண்களே அசின் பிம்பத்தின் உடலசைவுகள் அனைத்தையும் கோலாகலமாய் மாற்றுகின்றன. உணர்வு தொற்றா கண்கள் அவை என்பதினால் அசின் பிம்பத்தை அம்பாளாகக் காண வேண்டிய துரதிருஷ்டம் நமக்கு நிகழாது என்று நான் ஆசுவாசமடைகிறேன். அழகிய பொம்மை உலா பொழுதுபோக்குக்கு உகந்ததுதானே.

கண்களின் உணர்வு தொற்றாதது நடிப்பின் குறைபாடு இல்லையா என்று ஒருவர் வினவலாம்தான். நிச்சயமாகக் குறைபாடுதான். நாடக இயக்குனரான என்னிடத்தில் அசின் பிம்பத்தைக் கொடுத்துவிடுங்கள் தட்டி கொட்டி சரி செய்து அனுப்புகிறேன் என்றுதான் சொல்லமுடியும்.


சாண்டில்யன் நாவல்களில் வரும் பெண்களின் பின்பாக வருணணைகள், எம்.ஜி.ஆர். பிம்பம் திரையில் கதாநாயகி பிம்பங்களைக் கட்டிப்பிடிக்கும் முறைகள் என்று கட்டமைக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படப் பார்வையாளனின் இன்ப வரலாற்றில் பெண் பிம்பங்களின் பின்பாகங்கள் வகிக்கும் முக்கிய  இடம் நாம் அறிந்ததே. மறைமுகமாகவே முன்பு தமிழ்த் திரைப்படங்களில் அவைச் சுட்டப்பட்டன; நம் சம காலத்திய திரைப்படங்களிலோ பெண் பிம்பங்களின் பின்பாகங்களில் ஆண் பிம்பங்கள் தட்டுவது, தாளமிடுவது, பாக்கெட்டுகளில் கைவிடுவது, இறுக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் சர்வ சாதாரணமாய் இடம்பெறுகின்றன. பெண்பிம்பங்கள் தங்கள் பின்பாகங்களை உயர்த்தி தூக்கிக்கொண்டு பக்கவாட்டிலோ, பின்னோக்கியோ ஓடும் நடனக் காட்சிகளும் ஏராளம். அசின் பெண் பிம்பத்திற்கும் இந்தத் தமிழ் பண்பாட்டு முத்திரை வெளிப்பாடுகளிலிருந்து விதி விலக்கில்லை.
இவ்வாறாக அசின் பெண் பிம்பம் பங்கேற்கும் காட்சிகள் புகழ்பெற்றவை என்று அறிகிறேன். ‘ஐல ஐலசா ஆரியமாலா’ என்ற பாடல் காட்சியில் அசின் பெண்பிம்பத்தின் உடலசைவுகளில் மிருகதாபம் ஏறியிருந்தது. அந்தப் படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். ஏனெனில் அந்தப் பாடலைப் பார்த்த நான் உடனடியாக அசின் பெண் பிம்பக்கவர்ச்சியிலிருந்து விடுபட்டுவிட்டேன்.


இருந்தாலும் பழைய விசுவாசம் போகுமா என்ன? அசின் பெண் பிம்பம் கழுத்தெலும்பு தெரிய கன்னம் ஒட்டி, செயற்கையாய் சிரித்து சிரித்து அமீர் கானுடன் ஹிந்தி கஜினிக்காக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தபொது மனமுடைந்துவிட்டேன். உடனே வீட்டுக்கு அழைத்து புதிதாய் சமைந்த பெண்ணுக்கு நம்மூரில் கொடுப்பது போல உளுந்தங்களி கிண்டிப்போட வேண்டுமென்று தோன்றியது.




Saturday, October 29, 2011

முத்தம்


ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியின் படங்களை நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். பல முறை பார்த்ததால்  தார்கோவ்ஸ்கியின் அத்தனை படங்களும் என் நினைவுகளின் அடுக்குகளாய் சேகரமாகிவிட்டன. என் பகற்கனவுகளிலும், பிரேமைகளிலும் தார்க்கோவ்ஸ்கியின் படக்காட்சிகள் அவ்வபோது வந்து போகின்றன. அவைகளின் சங்கேதங்களை முழுமையாக நான் புரிந்து கொண்டுவிட்டேனென்றால் வாழ்வின் மேலுள்ள நம்பிக்கைகள் அனைத்தும் குலைந்துவிடுமோ என்ற பீதி எதிர்பார்க்காத தருணங்களில் என்னை பீடிக்கவே செய்கிறது. புரிபடாத அழகுகளின் பிம்ப நூலகமாக தார்கோவ்ஸ்கியின் படக்காட்சிகளை என்னுள் சேமித்து வைத்திருப்பதால் வேண்டும்போதெல்லாம் விரும்பிய காட்சியை என் மனத் திரையில் விரித்து ஊக்கம் கொள்வேன்.
தானாக என் பகற்கனவில் தோன்றும் போது  பேரழகின் புதிர்களென என்னைக் கலங்க அடிக்கும் தார்க்கோவ்ஸ்கியின் படக்காட்சிகள் என் விருப்ப அகத் திரையிடல்களில் நம்பிக்கைகளின் ஆதாரமாவதன் மர்மமென்ன?
சோலாரிஸ் படத்தில் விண்வெளிக் கப்பலின் ஜன்னல் வழி வியாபகம் பெறும் பௌதீக அண்டத்தின் காட்சிகள் என் கனவா அல்லது துகளிலும் அணுவிலும் கூட இருக்கின்ற யதார்த்தமா? ஐயா, அம்மா எனக்கெதற்கு இப்படியொரு காட்சி? இங்கேயொரு காட்சிப்பிழையில்லையோ? 
ஆப்பிள் கணிணித் திரை



தீய வழிகாட்டி விதவிதமான நிலப்பகுதிகளின் வழி பதில் சொல்வதாய் அழைத்துச் செல்கிறான். குறியீடுகளுக்கும் படிமங்களுக்கும் உள்ள அர்த்த எல்லை என்ன என்று காட்டிவிட்டு மறைந்து விடுகிறான். தார்க்கோவ்ஸ்கி நீ கட்டைல போவாய், நீ நாசமாய் போவாய் என்று புழுதி வாரித் தூற்றிவிட்டு ‘Stalker’ படம் பார்த்துவிட்டு மனம் குமுறுகிறேன்.

Stalker படக் காட்சி

ஆந்த்ரே ரூபலேவ் படத்திலா, மிர்ரெர் படத்திலா என்று நினைவில்லை. எழுதும்போதே பகற்கனவுக்குள் சென்றுவிட்டேனோ? பழம்பெரும்  மாளிகையொன்றில் அலங்கார ஆளுயர நிலைக்கண்ணாடி முன் தவழும் குழந்தை, ஸ்லோ மோஷனில் மேலெழும்பிப் பறக்கும் காய்ந்த சருகுகள், முள் கம்பி வேலியைப் பிடித்தபடி நிற்கும் அந்தப் பெண்ணின் முகம், Sacrifice படத்தில் தீப்பற்றி எரியும் அந்த வீடு என எல்லா காட்சிகளும் கலந்து தோன்றி மறைகின்றன.

மிர்ரெர் படக்காட்சி

Sacrifice படத்தில்

எனக்கு நேர்கோட்டில் எழுதவே வருவதில்லை. தொழில் முறையாக எழுத்தை இன்னும் பயிலவில்லை. எல்லா தார்க்கோவ்ஸ்கி பிம்பங்களும் என்னுள் குழம்பிவிட்டன. Tarkovsky retrospective is a failure. ஏதேனும் ஒரே ஒரு காட்சி அதை மட்டும் பிடித்தே நான் தப்பிக்க வேண்டும். சாப்பிடவேண்டும். வேலை செய்ய வேண்டும். உயிர் பிழைத்துக்கிடக்க வேண்டும்.
பன்னிரெண்டே வயதான இவான் இரண்டாம் உலகப்போரின்போது குழந்தை உளவாளியாய் இருக்கிறான். இந்த இவானின் குழந்தைப்பருவம் என்ற தார்க்கோவ்ஸ்கியின் படம் அவருடைய முதல் படம். கனவுகளின் தொகுப்பெனவே நகர்கிறது கதை. விக்கிபீடியாவில் கதையைப் படித்து திரும்பத் தமிழில் சொல்வதற்குத்தான் இன்னும் பலர் இருக்கிறார்களே. இவானின் குழந்தைப்பருவம் படத்தில் அந்தப் பைன் மரக் காட்டினூடே அந்த ராணுவ வீரன் அந்தப் பெண்ணின் பின்னாலே காதலுடன்  செல்கிறான். விழுந்து கிடக்கும் நீண்ட மரத்தின் மேலேறி அவள் நடந்து செல்கிறாள். மரத்திலிருந்து கீழிறங்கிச் செல்லும் அவள் பள்ளம் ஒன்றைத் தாண்டவேண்டும். அதைத் தாண்ட அவளுக்கு உதவ அவள் கைபற்றி தூக்கிவிடுகையில் தன் வசமிழந்து அவளை முத்தமிடுகிறான். பின்னணியில் குண்டுகளின் முழக்கம் கேட்ட வண்னமிருக்கிறது. குண்டுகளை சட்டை செய்யாமல் உணர்ச்சிக்கு ஒப்புக்கொடுத்த முத்தம். நன்றி ஆந்த்ரே, இந்த ஒரு காட்சியை வைத்தே நான் உன்னிடமிருந்து தப்பிவிட்டேன். இல்லை இல்லை உன்னிடம் மீண்டும் சிக்கிக்கொண்டேன்.

இவானின் குழந்தைப்பருவம் என்ற படத்தில் முத்தக் காட்சி
தொடர்புடைய பதிவுகள்:  
இல்லை