Saturday, February 28, 2026

தோரோ, டாஃப்லர், லெவிஸ்டிராஸ்

தோரோ, டாஃப்லர், லெவிஸ்டிராஸ்

ஆல்வின் டாஃப்லரின் (Alvin Toffler - Future Shock புத்தக ஆசிரியர்) Third Wave வெளிவந்தபோது அதை மிகவும் ஆர்வமாக வாசித்தவர்களில் நானும் ஒருவன். ‘மூன்றாம் அலை’ , எதிர்காலத்தில் உலகளாவிய பிரம்மாண்ட பொருளாதார அமைப்புகள் உடைந்து சிறு சிறு பொருளாதார அமைப்புகள் - ஜே.சி.குமரப்பா எழுதிய காந்திய தன்னிறைவு பெற்ற கிராம அமைப்புகள் போன்றவை- வலுப்பெறும், அவை புதிய வாழ்வியல் முறையாக மாறும் என்று பேசியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. என்ன அழகான கனவு அது என்று இன்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி சிறு அமைப்புகளின் தன்னிறைவு இனி சாத்தியப்படுமா, அதன் சாத்தியங்களை என் வாழ்நாளில் காண்பேனா என்றெல்லாம் இப்போது தன்னியல்பான தவிப்புகள் ஏற்படுகின்றன. காந்திய சிந்தனையின் பகுதியான தோரோவின் (Throreau) இயகையோடு ஒன்றிணைந்த வாழ்வு என்பதன் கனவு முன்பே தீய்ந்துபோயிருந்தது. இயற்கை அதனுடைய காட்டு விகாசத்தில் கொடூரமானது; அதை மனித வாழ்க்கைக்கு ஏற்றார்போல பண்படுத்தாமல் வாழ இயலாது என்பது பொதுப்புத்திக்கே எட்டக்கூடியதுதான். அதைப் பிரமாதமாக வார்த்தைப்படுத்தியவர் லெவிஸ்டிராஸே ஆவார். அமேசான் காடுகளில் இயற்கையின் விகசிப்புகளைப் பார்த்து மிரண்டுபோன லெவிஸ்டிராஸ் தெற்கு ஃபிரான்சில் இய்ற்கையும் பண்பாடும் சம அளவில கலந்துள்ள இடங்களே மனித வாழ்க்கைக்கு ஏற்றவை என்று எழுதினார். தோரோவின் wild nature பற்றிய அதீத கற்பனைகள் யாதார்த்தத்தில் செல்லுபடியாகதவை. இயற்கையை அழிக்காமல், அளவாக முறையாக பயன் படுத்துவதன் balance என்ன என்பதே மீண்டும் மீண்டும் எழுகின்ற கேள்வி. அதற்கு விடையாக தன்னிறைவு பெற்ற சிறு அமைப்புகளைத் தவிர வேறு விடைகளும் இப்போதைக்கு இல்லை. நமக்கு அப்படி ஒரு வாழ்விற்கான ஏக்கம் இருக்கிறதா, என்ன?


Tristes Tropiques

மானிடவியல் துறையில் கிளாட் லெவிஸ்டிராசின் ‘துயர்மிகு வெப்பமண்டல பிரதேசங்கள்’ (Tristes Tropiques) போல கவித்துவமாக எழுதப்பட்ட நூல் வாசிக்கக் கிடைப்பது அரிது.  லெவிஸ்டிராசின் இந்த நூல் அவருடைய இதர துறை சார் களப்பணி விபரங்களும், ரத்த உறவு வரைபடங்களும் நிறைந்த Elementary Structures of Kinship, Structural Anthroplogy ஆகிய நூல்கள் போல அல்லாமல் ஒரு தொழில்முறை மானிடவியலாளனின் சுயசரிதை போல எழுதப்பட்டிருப்பது. மானிடவியலின் கலைச்சொற்கள் அனைத்தையும் முழுமையாக புத்தாக்கம் செய்த லெவிஸ்டிராசின் மையக் கருத்துகள் அனைத்துமே இந்த நூலில் இருப்பதை கவனப்படுத்த வேண்டும். லெவிஸ்டிராசின் எழுத்தும் சிந்தனையும் எதை சாதித்தது? தென்னமெரிக்க பழங்குடிகளிடையே களப்பணி செய்த தரவுகளின் அடிப்படையில் உருவான லெவிஸ்டிராசின் சிந்தனை முக்கியமாக மனித மூளையின் திறன் என்பதை வைத்து மட்டும் பார்த்தால், உலகின் அத்தனை பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் சமமானவர்களே இதில் primitive/ advanced என்ற ஏற்றதாழ்வுகள் முட்டாள்த்தனமானவை  என நிறுவுகிறது. தென்னமெரிக்க பழங்குடி மூப்பனால் அல்லது மூதாட்டியால் வாய்மொழியாக எடுத்துரைக்கப்படும் ரத்தவழி உறவுகளை (kinship relations) வரைபடமாக்கும் லெவிஸ்டிராஸ் அது கணித, விஞ்ஞான சூத்திரங்களை விட கடினமானதாகும் சிக்கலானதாகவும் இருப்பதை கவனப்படுத்துகிறார். இந்த சிக்கல்களின்வழி சிந்திக்கும் பழங்குடி மனம் மேற்குலகின் ‘வளர்ந்த’ சமூகத்தைச் சார்ந்த, உயர்கல்வி பெற்ற விஞ்ஞானியின் சிந்தனைக்கு நிகரான திறனையும் சாமர்த்தியத்தையும் கொண்டிருப்பதையும் லெவிஸ்டிராசினால் நிறுவமுடிகிறது. தென்னமெரிக்க பூர்வகுடிப் பெண்கள் தங்கள் முகங்களில் அலங்காரமாக வரையும் சித்திரங்கள் அந்தந்த இனக்குழுக்களின் கூட்டுக்கனவுகள் என்பதை லெவிஸ்டிராஸ் உலகுக்கு சொல்கிறார். அந்த பூர்வகுடிகளின் கிராமங்களின் அமைப்பும் குடிசைகளின் அமைப்பும் இயற்கையின் விஸ்வரூபத்தினை எதிர்கொண்டதன் விளைவு எனவும் லெவிஸ்டிராஸ் நிறுவுகிறார். இந்த பூர்வ குடிகள் வாழும் பிரதேசங்கள் மேற்குலகினால் அழிக்கப்பட்டன எனவே அவை துயர் மிகு பிரதேசங்களாய் இருக்கின்றன. தன் அறிவுத்தேட்டத்திற்காகவும் வியாபார பெருக்கத்திற்காகவும் பூர்வகுடி உலகுகளோடு தொடர்பு கொண்ட மேற்குலகு- தென்னமெரிக்கவைப் பொறுத்தவரை ஸ்பானிஷ்காரர்கள்- ஏன் இந்த மக்களைக் கொன்றழித்தார்கள்?  லெவிஸ்டிராசின் நூலை வாசிக்கும் ஜார்ஜ் ஸ்டீனர் ஆதாம் ஏவாள் கால ஆதியையும், இழந்த சொர்க்கத்தையும், தவறவிட்ட தோட்டத்தையும் அதன் கள்ளமற்ற இன்பத்தையும் பூர்வகுடிகள் நினைவுபடுத்துவதால் உலக அந்தத்தைக் காணப்போகும் மேற்குலகு (Apocalyptic Western world) பெரும் கோபத்தோடு அவர்களை அழித்தது என எழுதுகிறார். 

“தாதா- ரித்விக் குமார் கட்டக் (1925- 2025)"- எஸ்.வாசுதேவன்




வாசு அனுப்பித் தந்த அவருடைய நூல் “தாதா- ரித்விக் குமார் கட்டக் (1925- 2025)” முந்தா நாள் எனக்குக் கிடைத்தது. இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். நூல் சால்ட் பதிப்பகத்தால் அழகுற அச்சிடப்பட்டிருக்கிறது. நூல் முழுக்க அழகான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ரித்விக் கட்டக்கின் படங்களிலிருந்தும் தரவுகளுக்குக் கூடுதல் சான்றாதாரங்கள் தருமாறும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நூலில் வங்காளப் பஞ்சம், வங்காளப் பிரிவினை, இந்திய மக்கள் நாடக மன்றம் ஆகிய அத்தியாயங்களில் வாசு ரித்விக் கட்டக்கை மேற்சொன்ன மூன்று வரலாற்றுச் சூழல்களின் வழி உருவாகி வந்த கலைஞராக  சுட்டுகிறார். அது ரித்விக் கட்டக்கின் திரை அழகியலை வரலாற்று சூழலில் வைத்து புரிந்துகொள்ள வாசகருக்கு உதவக் கூடியதாக இருக்கிறது.  நூலின் கடைசிப்பகுதியில் கட்டக்கின் 25 திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில்  மூன்றை மட்டுமே பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது. ரித்விக் கட்டக்கின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும்போது  அவருக்குத்  தமிழிலிருந்து நல்லதோர் சமர்ப்பணம்.

 

Friday, February 27, 2026

இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி : கவிதை, முறையீடு, தியானம்

தத்துவத்தில் மார்டின் புயுபரின் ‘I and Thou’ என்ற சிறிய ஆனால் முக்கியமான நூலில் கட்டமைக்கப்பட்ட தன்னிலை-பிறன்மை பிரச்சினைப்பாடு (problematic) தத்துவம் என்று மட்டுமில்லாமல் மானிடவியல், இறையியல், சமூக அறிவியல், அரசியல், இலக்கியம், இலக்கிய கோட்பாடு ஆகிய துறைகளில் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியுள்ளது. 

புயுபரின் பிரச்சினைப்பாடு ‘நீ’ என்பதினை அடுத்த ஆள் என்று மட்டுமில்லாமல், கடவுள், இயற்கை என தான் என் உணரப்பட்டது தவிர்த்த அனைத்திற்குமானதாக விஸ்தரித்தது. அதாவது ‘நீ’ எனப்படுவது ‘பிறன்மை’ என விரிவு கண்டது. தன்னிலைக்கும் அல்லது தன்னடையாளத்திற்கும் பிறன்மைக்கும் உள்ள உறவின் தன்மையே அறவியலின் நம் சமகால தத்துவத்தின் அடிப்படையென மாறியுள்ளது. புயுபரின் நேரடியான தாக்கத்திற்கு உள்ளான சார்த்தர் இருத்தலியல் சூழ்நிலையின் இறுக்கத்திலும் பரிதவிப்பிலும் Other is hell என்ற தத்துவ சறுக்கலுக்கு ஆட்பட்டதும் அதனால் அவருக்கும் காம்யுவுக்கும் இடையில் மோதல் முற்றியதும் பிரசித்தமான ஒன்றே. சார்த்தர் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொண்டதாக அறிவித்தபின்பும், தன் சிந்தனை சறுக்கலின் வெளிப்பாடக அமைந்துவிட்ட No Exit நாடகத்தினை நிராகரித்த பின்னரும் கூட சார்த்தரின் சறுக்கல் இன்றுவரை அவருடைய தத்துவத்தில் படிந்த அகலாக்கறையாகவே கருதப்படுகிறது. தவிர, எழுதப்பட்ட அத்தனை நவீன கவிதைகளையுமே தான் - பிறன்மை என்பவனவற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு கூட பிரசித்தம். மார்டின் புயுபரின் வாழ்க்கை வராலாற்றை Martin Buber: The Life of Dialogue என்ற புத்தகமாக எழுதிய மௌரிஸ் ஃப்ரீட்மன் புயுபரின் சிந்தனை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் சிந்தனையிலும், பண்பாட்டிலும் எவ்வளவு தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் விவரித்துள்ளார். பல மதங்களிடை உரையாடல்கள், இடைசமய நம்பிக்கைகள், மனித உரிமை போராட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியன தன்னிலையயும் தன் அடையாளத்தையும் விட பிறன்மைக்கும், பிற அடையாளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே அறம் என்ற நிலைப்பாட்டினை பியுபரின் சிந்தனையிலிருந்தே பெற்றுகொண்டன என ஃபிரீட்மன் விவரிக்கிறார். பால் டில்லிச், ரெய்ன்ஹோல்ட் நீபுர் ஆகிய இறையியல் சிந்தனையாளர்களையும் பியுபரின் சிந்தனைக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதைச் சொல்கிறார்கள். மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 இல் எழுதிய பிர்மிங்ஹாம் ஜெயிலிலிருந்து ஒரு கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டுகிறார். மதங்களின் இறுதி விதிகளை உதறி இங்கே இப்போது நடக்கும் மானுட நிகழ்வுகளினூடே நடக்கும் உரையாடல்களை செழுமைப்படுத்துவதன் மூலமே மனித குலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும் என்று வாதிட்ட பியுபர் தினசரி வாழ்க்கையின் உரையாடல்கள், தான் -மற்றது என்ற தன்னிலை பொருளுலகு உரையாடலாகவும் தான் -மற்றவர் என்ற தான்- கடவுள் உள்ளிட்ட மற்ற மனிதர்களின் உலகு என்ற உரையாடலாகவும் பரிணமிக்கிறது என்று விளக்கினார். 

மார்ட்டின் புயுபரின் நூலை தன்னுடைய தம்மபதம் நூலில் குறிப்பிடும் ஓஷோ உரையாடலின் இருமையை துவதைத்தை கிறித்தவம், இஸ்லாம் யூதம் ஆகியவை பிரார்த்தனை மதங்களாக வலியுறுத்துவதால்தான் புயுபரின் நூல் மேற்குலகில் பிரசித்திபெற்றது என்கிறார். இது ஓஷோவின் கவனிக்கத்தக்க அவதானங்களில் ஒன்று. இதற்கு நேர் எதிரானதாக பௌத்தத்தை விளக்கும் ஓஷோ பௌத்தம் ஒரு பிரார்த்தனை மதமன்று அது தியான மதம். பிரார்த்தனை ஒரு உரையாடல், தியானம் மௌனம். இதுதான் வேறுபாடு என்று எழுதுகிறார். பிரார்த்தனை உண்மையோ உண்மையில்லையோ யாரிடமோ முறையிடுவது தியானத்தில் முறையீடே கிடையாது ஒருவர் மௌனத்தில் வீழ்ந்துவிடுவது அது என்றும் எழுதுகிறார். 

இறுதியாக,

இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி. எப்போது நீ இந்த நாற்காலியின் வெறுமையைக் காண முடிகிறதோ, இந்த இருப்பின் வெறுமையைக் காணமுடிகிறதோ அப்போதுதான் நீ இருந்தும் இல்லாமல் போகிறாய். அகங்காரத்தின் ஏழ்மை சிறிதும் பாதிக்காதவனாக ஷுபூதி இருந்தான். அதனாலேயே ஆயிரக்கணக்கான சீடர்களில் ஷுபூதியை தன்னுடைய தனிப்பட்ட கவனத்திற்கு உரியவனாக புத்தர் கருதினார். ஷுபூதியின் தியானம் இன்மை குறித்ததாக இருந்தது. இன்மையை ஆதாரமாக அவன் அகம் கண்டு விழித்தபோதெல்லாம் பூக்கள் சொரிந்தன. அகங்காரிகளின் கண்களுக்கு அந்த பூக்கள் புலப்படுவதில்லை.

Thursday, February 26, 2026

எலுமிச்சை- புதினா பானம் : ஹைக்கூ

எலுமிச்சை மரமா, செடியா என்ற இலக்கியத்தின் சாரமான வாழ்க்கை பற்றிய விசாரம் என் மனதில் எழும்போதெல்லாம் நான் அதைப் பதின்பருவ பெண்ணாய் உவமித்திருத்திருக்கிறேன்.  


என்னுடைய ஒரு கவிதையில் 


“தோட்டத்தில் தொடையிடுக்கில் பாவாடை திணித்த

பதின்பருவப் பெண்ணாய் காற்றுக்கு ஆடுகிறது

பழங்கள் குலுங்கும் எலுமிச்சை” என்று விவரித்திருக்கிறேன். 


எலுமிச்சையை தாவரமாக, பழமாக பார்க்கும்போதெல்லாம் என்னுள் எழும் sensuousness உண்மையில் விவரிக்க இயலாதது. அதன் தடித்த இலைகள், முட்கள், காய்களும் பழங்களாகவும் காய்த்து குலுங்கும் எலுமிச்சை மரத்தை தரைக்கு இறங்கி வந்த தேவதை  என்றே சொல்ல வேண்டும். எலுமிச்சை சாறினை புதினா இலைகளோடு சேர்த்து அதில் மலைத்தேன் சேர்த்து அருந்துவது என்பது ஒரு பேரெழில் கொண்ட ஹைக்கூவை மனதில் அசை போட்டு அசை போட்டு ஆத்ம உய்வினைப் பெறுவதற்கு ஒப்பான செயலாகும். 


எலுமிச்சை சாறை புதினா இலைகளோடும் தேனோடும் சேர்க்கலாம் என்ற கண்டுபிடிப்பு  ஃபிரெஞ்சு தத்துவ அறிஞரான ஆலெய்ன் பாத்யூ  ஃப்ரெஞ்சு புரட்சியையும், மே 18 பாரீஸ் மாணவர் போராட்டத்தையும் வரலாற்று நிகழ்வு (Event) என்று அழைத்ததற்கு ஒப்பானதாகும். பாத்யூவின் நிகழ்வுகளைப் போலவே எலுமிச்சை- புதினா பானமும் பானங்களின் வரலாற்றில் ஒரு பெரும் நிகழ்வு.  ஏனெனில் அது ஒரு எதிர்வினை.  தாகத்திற்கு எதிரான எதிர்வினையாகத் தொடங்கி, தாகத்தினையும் அதன் தணிவையையும்  சுகானுபவமாக மாற்றிய எதிர்வினை. ஜப்பானில் ஹைக்கூ என்ற கவிதா வடிவம் கண்டுபிடித்ததற்கு நிகரான எதிர்வினை. நான் இந்தக் கட்டுரையை உண்மையில் ஆங்கிலத்தில் “The Ontology of Refreshment- Being and Thirst” என்று தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த தேவாமிர்த பானம் ஹைக்கூவை போன்றது என்ற வடிவ போதம் என்னைத் தரையிறக்கிக் கூட்டி வந்துவிட்டது.  


உதாரணமாக, அதிக அளவில், உலகளாவிய அளவில் மேற்கோள் காட்டப்பட்டு அடித்து துவைக்கப்பட்ட பாஷோவின் இந்த ஹைக்கூவின் ஒரு வடிவத்தை வாசியுங்கள்:


“பழைய குளம்

தவளை அதில் குதிக்கிறது

நீரின் சப்தம்”


பாஷோ இதில் குளத்தை விவரிக்கவில்லை, குளத்தில் உண்டாகும் சலனத்தை, இடையீட்டினை விவரிக்கிறார். வாழ்க்கைபற்றிய விசாரம் என்பது இலக்கியத்தில் இடையீட்டினை நிகழ்த்துவதுதான். பாஷோவின் ஹைக்கூ ஒரு நிலைபேறுடைய, ஆழ்ந்த, நிரந்தர, மௌனத்தில், கண நேரமேனும் நிகழ்ந்த ஒரு சலனத்தை, பதிவு செய்கிறது. எலுமிச்சை- புதினா பானமும் அவ்வாறே செயல்படுகிறது. ஹைக்கூவின் மூன்று வரிகள் என எலுமிச்சை, சாறு, புதினா இலைகள், மலைத்தேன் ஆகியவற்றைச் சொல்லலாம். கடும் கோடையில் வறண்ட தொண்டையான பழைய குளத்தில், இந்த தேவலோக பானம் குளிர்ந்து இறங்கும்போது நீரின் சப்தம் என்பது   உடல் முழுவப் பரவும் ஆசுவாச விதிர்விதிர்ப்பு என்பதை உடலரசியல் இலக்கிய விமர்சகர்கள்  கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.  தலைவன் நீட்ஷே நம்முடைய மனதில் ஒரு பெருங்குழப்பம் இருந்தால்தான் ஒரு நடனமிடும் நட்சத்திரம் நம்மிடமிருந்து பிறக்கும் என்று எழுதியிருக்கிறார் அல்லவா?, அது போலவே தாகத்தில் தொண்டை எந்த அளவுக்கு பாளம் பாளமாக வெடித்து வறண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு ஆசுவாச விதிர்விதிர்ப்பின் பரவசம் இருக்கும். 


எலுமிச்சை- புதினா பானத்தைத் தயாரிக்கும் முன்பு எலுமிச்சம்பழங்களை நன்றாக சமையல் மேடையில் வைத்து  கையால் அழுத்தி  உருட்டவேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் தன்னுடைய “Taste of Well being” என்ற சமையல் குறிப்புகள் நூலில்  குறிப்பிடுக்கிறார். ஆமாம். அப்போதுதான் வாழ்வின் சாற்றினை ஒரு துளி விடாமல் பிழிந்து எடுக்க முடியும்.  ஜக்கி வாசுதேவ் புதினா இலைகளை எலுமிச்சை சாறோடு கலந்து மிக்சியில் போட்டு அரைத்துவிடச் சொல்கிறார். அதில் எனக்கு சம்மதமில்லை.


புதினா இலைகள் ஹைக்கூவின் இரண்டாவது வரி முதல் வரியில் ஒட்டாமல் வேறொன்றாக இருப்பது போல, எலுமிச்சை சாற்றில் இரண்டறக் கலக்காமல் தனியாக மிதக்க வேண்டும். பெருங்கடலில் தற்காலிக படகு தத்தளிப்பது போன்ற காட்சியை அது நமக்குத் தரும்.  அது பல நினைவுகளை நம்மில் தூண்டலாம். புதினா இலைகளின் மிதத்தலின் தற்காலிகம் கடந்து செல்லும் காலத்தைப் போன்றது. 


மார்சல் ப்ரூஸ்ட் தன்னுடைய “In Search of time” என்ற புகழ்பெற்ற நூலில் மேடலினைப் பற்றி பின்வருமாறு எழுதுவார், “No sooner had the warm liquid mixed with the crumbs touched my palate than a shudder ran through me and I stopped, intent upon the extraordinary thing that was happening to me.” எலுமிச்சை புதினா பானம் என்பது ஒரு கண்ணாடிக் கோப்பையில் கிடைக்கும் மேடலின்.


தவிர என்னுடைய இஷ்ட தத்துவ அறிஞரான (இஷ்ட தெய்வம் என்று சொல்கிறோமில்லையா அது போல) ஹென்றி பெர்க்சன் காலம் என்பது துண்டு துண்டாக பகுக்கப்பட முடியாதது என்று durée என்ற கருத்தாக்கத்தின் மூலம் விளக்குவாரில்லையா அது போன்றதுதான் எலுமிச்சை பானத்தில் புதினா இலைகள் மிதப்பதும். புதினாவின் குளிர்ச்சியாகவே காலத்தின் தொடர்ச்சி தொண்டையில் உணரப்படவேண்டும். ஆனால் உலகளவில் பனிக்கட்டிகளை இந்த பானத்தில் போட்டு புதினாவின் இயற்கையான குளிர்ச்சியை நம்மால் உணர இயலாதவாறு தடுத்துவிடுகிறார்கள். அர்ஜெண்டினாவின் tereré, மொரொக்கோவின் atay b' na’na அமெரிக்காவின் summer pitcher என்று மட்டுமில்லாமல் நம்மூர் நட்சத்திர விடுதிகளின் எலுமிச்சை புதினா பானத்திற்கும் இதுவேதான் நிலைமை. இயற்கையானது இயற்கையிலேயே உயர்வானது என்பதை நாம் இயற்கையாகவே உணர்வதில்லை. ஐஸ் கட்டிகளைப் போட்டு பானத்தை துவம்சம் செய்துவிடுகிறார்கள். இதனால் எலுமிச்சை பானத்தில் புதினா உண்டாக்கும் அடுக்கு அடுக்கான காலம் (palimpsest time) பனிக்கட்டிகளின் ஒற்றை காலத்தினால் பறித்தெடுக்கப்பட்டுவிட்டுகிறது.  ஹைக்கூக்கு உலகளாவிய அளவில் நடந்தது போல இது ஒரு சீர்கேடு. 


எலுமிச்சை- புதினா பானம் போன்ற எளிமையான ஒன்று எப்படி இத்தனை முக்கியமான இலக்கிய விசாரங்களைக் கொண்டிருக்க முடியும் என்று ஒருவர் வினவலாம். இது ஒரு இலக்கிய இடையீட்டுக் கட்டுரை என ஒருவர் எலுமிச்சை புதினா பான அனுபவத்தை நிராகரிக்கலாம். எம்டிஎம் ஒரு literary subversive என ஒருவர் அவதூறு பரப்பலாம்.  அவை எல்லாம் பொருட்படுத்தத்தக்கவை அல்ல.


கோபயாஷி இஸ்ஸா எழுதிய ஹைக்கூ ஒன்று உண்டு:


“ஓ நத்தையே

ஃபுஜி மலையை ஏறு 

ஆனால் மெதுவாக, மெதுவாக”


எலுமிச்சை புதினா பானத்தின் தெளிவினையே, எளிமையையே இஸ்ஸாவின் ஹைக்கூ நல்குகிறது. எஸ்ரா பவுண்ட் இச்சாவின் ஹைக்கூவில் இருக்கும் நத்தை ஒன்று ஃபுஜி மலையை மெதுவாக ஏறுவதையே “that which presents an intellectual and emotional complex in an instant of time.” என்ற படிமமாகக் குறிப்பிடுவார். 


எலுமிச்சை புதினா பானத்தில் மலைத்தேனை சேர்க்கவேண்டும் என்பதுதான் இந்த பானத்தைத் தயாரிப்பதில் உள்ள சிக்கலான நடைமுறை. ஏனெனில் மலைத்தேன் என்று சந்தையில் விற்கப்படுவதில் உண்மையான தேனைக் கண்டறிய நாம் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும். அப்படியே நாம் கண்டுபிடித்து எலுமிச்சை புதினா பானத்தில் சேர்த்துவிட்டாலும் அது உண்மையான மலைத்தேன்தானா என்ற சந்தேகம் நம்மைக் குடைந்துகொண்டே இருக்கும். நாம் உண்மையில் உயிரோடு இருக்கிறோமா என்ற சந்தேகத்தை விட அது ஒன்றும் பெரிய சந்தேகமில்லை என்பதால் நாம் அதைப் பற்றி அதிகமும் கவலைப்படத் தேவையில்லை. மேலும் சுத்தமான வெள்ளை சீனிக்கு கள்ள மலைத்தேன் எவ்வளவோ மேல். 


எலுமிச்சை புதினா பானம் நாட்பட்ட திராட்சை மதுவைப் போலவோ, பல மது வர்க்கங்களினால் நேர்த்தியுடன் உண்டாக்கப்பட்ட காக்டெய்லைப் போலவோ, இறக்குமதி செய்யப்பட்ட சிங்கிள் மால்ட் விஸ்கி போலவோ டாம்பீகமும் டம்பாச்சாரித்தனமும் இல்லாதது. எளிமையானது. 


எலுமிச்சை புதினா பானம் இப்போதைய கணத்தின் தீஞ்சுவை மிடறு. 


மிடறு மிடறாக அதனோடு நாம் மலையேறலாம்.   

 



Wednesday, February 25, 2026

ஆவக்காய்: தெலுங்கில் ஒரு சாகசக் கதை

ஒரு படைப்பை அதன் வடிவத்தை மாற்றிப் பெயரிட்டு அழைத்து இழிவுபடுத்தினால் உங்களுக்குக் கோபம் கண்டிப்பாக வரும்தானே? யாராவது ஒரு கவிதையை கட்டுரை என்று பாராட்டுவார்களா? ஜூன் 2 ஆங்கில இந்து இணைப்பில் ‘ஆவக்காய்: தெலுங்கில் ஒரு கோடைகாலக் காதல் கதை’ என்ற கட்டுரையை வாசித்தபோது எனக்குக் கெட்ட கோபம் வந்தது. யாராவது ஒரு சாகசக் கதையைப் போய்க் காதல் கதை என்றழைப்பார்களா?

ஆவக்காய் ஊறுகாய் போடுவதற்கு மாங்காயைத் தேர்ந்தெடுப்பதிலிருந்தே உங்கள் சாகசம் தொடங்கிவிடுகிறது. கொத்தப்பள்ளி கொப்பரை அல்லது பெட்ட ரசலு வகை மாங்காய்களை நல்ல கற்பாறை போன்ற திடத்துடன் சதைப்பற்று அடர்ந்து இறுகிய மாங்காய்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவை ஏமாற்றும் முக இறுக்கத்தைக் கொண்டவை. வெட்டினால் சில உள்ளே கனிவில் கொளகொளத்திருக்கும். ஈவு இரக்கமில்லாமல் அவற்றைக் கழித்துவிடவேண்டும். சிறிது இனிப்பு கூட பச்சை ஆவக்காயை வெல்லம் போட்ட பெல்லம் ஆவக்காய் போல மாற்றிவிடும். வடிவக்கலப்பின் பின் நவீனத்துவம் தூய மரபான ஆவக்காய்க்கு ஆகாது. கொத்தப்பள்ளி கொப்பரை அல்லது பெட்ட ரசலு வகை மாங்காய்கள் கிடைக்கவில்லையென்றால் சின்ன ரசலா, குலாபி, ஜலாடு வகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்; பாதகமில்லை. சின்னச் சின்ன சமரசங்கள் இல்லாமல் வாழ்க்கையில்லை. ஆனால் பங்கனப்பள்ளி பக்கம் போய்விடக்கூடாது. பழத்தில் சிறப்பது காயில் உவக்காது. கொத்தப்பள்ளி கொப்பரை அல்லது பெட்ட ரசலு வகைகளில் கூட வைகாசியில் பூவெடுத்துக் காய்த்ததைத்தான் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். சித்திரையில் பூவெடுத்தது காய்த்ததை வாங்கி ஊறுகாய் போட்டால் பருவத்துக்கு முந்திய கலவி போல ரசனை குறைந்த ஆபாசமாகிவிடும்.

மாங்காயை ஆவக்காயாக்குவதற்கு உள்ளே இருக்கும் கொட்டையோடு சேர்ந்து அளவாய் வெட்டவேண்டும். கொஞ்சம் அதிகமாய் வெட்டினாலும் துவர்ப்பு கூடிவிடும், குறைத்து வெட்டினால்துவர்ப்பு குறைந்து ரசாபாசமாகிவிடும். கொட்டையை அளவாக வெட்டிய முதல் மகானுபாவன் அல்லது மகானுபாவி முன்னோடி கலைஞராக என்றென்றும் இனம் காணப்படவேண்டும். இப்படியொரு கண்டுபிடிப்பு வெட்டுக்கு கலையின் உள்ளொளியும் வரலாற்றுத் தருணமும் கைகூடி வந்திருக்க வேண்டும். அந்த தெய்வீக அருள் தருணத்தின் பொன்னொளி ஆவக்காயின் வரலாற்றின் தீராத பக்கங்களில் பொறிக்கப்படவேண்டியவை. இந்த வெட்டுதலில்தான் நமது சாகசக் கதை தீவிரமடைகிறது.

கண்ட ரெடிமேட் மிளகாய்ப் பொடிகளும் ஆவக்காய்க்கு ஆகாது. குண்டூர் அதி கார மிளகாய் வற்றல்களை நாசி கமற சந்தையில் வாங்கி வரவேண்டும். வீட்டுக்கு வந்து காய்கறிப்பையைத் திறந்தவுடனேயே கமறல் சப்தம் பக்கத்து வீட்டிலிருந்து வரவேண்டும். குண்டூர் மிளகாய் வற்றல் கிடைக்கவில்லையென்றால் ஆவக்காய் ப்ராஜெக்டைக் கைவிடுவது நல்லது. சில சாகசங்களை சரியான கருவிகள் இல்லாமல் நிறைவேற்ற முயலக்கூடாது என்பது பாலபாடம். குண்டூர் மிளகாய் வற்றல்கள் காரத்தில் அஸ்ஸாமின் குறு மிளகாய்களுக்கு மட்டுமே குறைந்தவை. அஸ்ஸாமின் குறுமிளகாய்களை நாகா ஊறுகாய்களில்தான் பயன்படுத்தமுடியும். தப்பும் தவறுமாய் சேர்த்தால் சீக்கிரம் விவாகரத்தாகிவிடும். வயிற்றுக்கும் ஆகாது. குண்டூர் மிளகாயை தெலுங்குப் படங்களின் அபத்தங்களை வைத்து குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவை மண்ணின் ஆவேசத்தினால் விளைந்தவை. உறைந்து போன ரத்த நாளங்களையும் பெருக்கெடுத்து ஓட வைப்பவை; அசையாத பெருங்குடல்களையும் அசைய வைப்பவை. குண்டூர் மிளகாய் வற்றல்களைத் துப்பாக்கி குண்டுகள் போலவே கருத வேண்டும்.

இந்த சாகசக் கதையில் கதாநாயகி கடுகென்பது பலருக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடும். புஷ்பா படத்தில் சமந்தா ஒற்றைப் பாடலுக்கு ஆடுவது போல கடுகை அரைத்து ஆவக்காயில் மிளகாய்ப்பொடி சேர்த்து ஊற்றவேண்டும். நல்லெண்ணெயில் சேர்த்தால் காரம் மட்டுப்படும்; கடலை எண்ணெய் கிராமத்துப் பழக்கம்; சூரியகாந்தி எண்ணெய்ப்பக்கம் போய்விடக்கூடாது; அது நகர வாழ்க்கையின் சாபக்கேடு. செக்கு நல்லெண்ணெய் சேர்ப்பது புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்குக் கொடுக்கும் கள்ள முத்தம் போன்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.

இவ்வளவு தயாரிப்பு சுஸ்ருஷைகளுக்கு உட்பட்டாலும் தயாரிக்கும் பெண்கையில் அன்பும் இயற்கையின் அனுகூலமும் இல்லையென்றால் ஆவக்காய் சோபிக்காது. நல்ல பீங்கான் ஜாடியில் ஆவக்காயை அதக்கி, அதன் வாயை வெள்ளை மல் துணி கட்டி வெயிலில் மூன்று நாள் வைத்து ஊற வைக்க வேண்டும்.

சீக்கிரம் ஆவக்காயில் பூஞ்சை படர்ந்துவிட்டால் சாகசம் தோல்வியென்று அர்த்தம். ஒரு வருடம் வரை ஆரோக்கியமாக ஆவக்காய் நீடித்திருக்க ஒவ்வொரு முறை ஒரு துளியை எடுத்து நுனி நாக்கில் சுவை பார்க்க ஜிவ்வென்று கண்ணும் மூக்கும் சிவக்க நெற்றியில் வியர்வை துளிர்க்க சகஜ சமாதி சித்தித்ததென்றால் சாகசம் வெற்றி என்று அர்த்தம்.

இதில் காதல் எங்கேயிருந்து வந்தது காதல்.


Tuesday, February 24, 2026

பஞ்சாபிய கரம் மசாலா, ஒரு நாடோடிப் பாடல்

பஞ்சாபிய சமையலில் கரம் மசாலா என்பது சூரியனின் கடும் வெப்பம், பஞ்சாபிப் பெண்களின் இடுப்பு வளைவின் அமிர்த நினைவு, எல்லையற்று விரிந்திருக்கும் நாடுகளின் எல்லைச் சாலைகளில் இருந்து எழுந்து வரும் மெல்லிசை ஆகியன நன்றாகப் பொடியாக அரைக்கப்பட்டு பழைய பீங்கான் ஜாடிகளில் சேமித்து வைக்கப்படுவதாகும். கரம் மசாலாவை வீட்டில் செய்யாமல் சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கடும் கலைக்குற்றங்களுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டியது. நாடோடிப் பாணன் ஒருவன் சந்தைச் சதுக்கங்களிலிருந்தும் சூரியன் சுட்ட பொன்னிற கோதுமை வயல்களிலிருந்தும் சாலையோர டாபாக்களிலிருந்தும் கவிதைகளைச் சேகரிப்பது போலவே கரம் மசாலாவும் தனது குறிப்புகளை ஆட்டோரைட்டிங் போலத் தானே சேகரிக்கிறது. இந்த மசாலாவைக் கூட்டிச் சேர்ப்பது என்பது வேர்களையும் பாதைகளையும், மரபுகளையும் எதிர்ப்புகளையும் ஒன்றாய்க் கூட்டுவதாகும். இதையே டி.எஸ். எலியட் தன் வழக்கமான மென் சோகத்தோடு, “These fragments I have shored against my ruins,” என்று எழுதுவார். அதுபோலவே பஞ்சாபிய கரம் மசாலாவும் பல துண்டுகளைச் சேகரிக்கிறது - கொத்தமல்லி, சீரகம், கிராம்பு என - மனதில் உடலின் மந்த நிலையை அழித்து சுறுசுறுப்பை மீட்டெடுப்பதற்காக.

பஞ்சாபிய கரம் மசாலாவின் நாடோடிப் பாடலின் பல்லவி கொத்தமல்லி விதைகளில் தொடங்குகிறது, மண் சார்ந்த அமைதியற்ற புகைமூட்டமான சீரகம் அடுத்து வருவது. டெலூஸும் கத்தாரியும் ரைசோம் என்பதை ‘கட்டுப்படுத்தப்படாத தொடர்ச்சியான இணைப்புகள்’ என்று வரையறுப்பது போலத் தொடர்புகள் சுவைகளாக்கப்படுகின்றன. இதில் சிவப்பு மிளகாய்ப்பொடி அழையா விருந்தாளி; அது பாடலுக்கு உக்கிர தொனி சேர்ப்பது. தங்க நிறமும், ஆதாரப் பகுதியாகவும் விளங்கும் மஞ்சளோ சோகமான தத்துவஞானியின் பாத்திரத்தை வகிப்பது. நீட்ஷேவைப் போலவே அது கிசுகிசுக்கிறது, “இசை இல்லாமல் வாழ்க்கை ஒரு தவறாகப் போயிருக்கும்” என. கருப்பு மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை மூன்றுமே தந்திரக்காரர்கள். Three tricksters. மூன்றும் கூடும்போது அதில் ஒரு மெல்லிய இனிப்பு எங்கிருந்து வருகிறது? அது தந்திரமில்லாமல் வேறு என்ன? மிலன் குந்தேரா எழுதுவாரில்லையா ‘அதிகாரத்துக்கு எதிரான மனிதனின் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டம்’ என்று; அது ஒரு இனிப்பை உங்களுக்கு மனதில் கொண்டுவருகிறதில்லையா? அதுவே அந்த இனிப்பாகும். அது நினைவைப் போலவே மெல்லியது; தடித்த நாக்குகளுக்குப் புலப்படாதது. இதோடு ஒரு துண்டு அம்ச்சூரை (உலர்ந்த மாம்பழம்) சேர்ப்பது நாடோடிப் பாடலின் சேட்டை. நினைவின் இனிப்பில் நாம் சென்டிமென்டல் முட்டாள்களாக உருகி விடாமல் தடுத்துக் காப்பாற்றுவது. அது சில சமயங்களில் புளிக்கும் என்பது கூடுதல் நன்மை. நாடோடிப் பாடலிலும் ஒரு தனிப்பாட்டின் ராகம் இடைவெட்டி ஓடுமல்லவா? 

சமையல் குறிப்புகள் துல்லியத்தைக் கோருபவை. 2 தேக்கரண்டி கொத்தமல்லி, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கிராம்பு என்றுதான் நான் இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு நாடோடி விகிதங்கள் வெறும் பரிந்துரைகள் என அறிவான். "நடனமாடும் நட்சத்திரத்தைப் பெற்றெடுக்க உங்களிடம் குழப்பம் இருக்க வேண்டும்," என்று நீட்ஷே அறிவித்தது நாடோடிக்கு அனுபவப் பாடம்தானே? அதனால் ஒரு துரோகி மிளகாயை இடையிடையேயும் வெடிக்கும் மிளகை ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் சேர்க்கலாம். தொல்காப்பியர் அத்தனை விதிகளையும் கூறிவிட்டு, அவை இல்லாமலும் கவிதை எழுதலாம் என்று சொல்வாரில்லையா? அது போலத்தான் கரம் மசாலாவின் துல்லிய அளவைகளும். குழப்பத்தைத் தழுவத் தழுவ சுவை துலங்கும்.

மசாலாப் பொருட்களைச் சேர்த்து வார்ப்பிரும்பு கடாயில் வறுப்பது என்பது மில்ஸ் அண்ட் பூன்ஸ் நாவல்களில் செக்ஸை வாசிப்பதற்கு சமமானது. ஏதோ நடக்கப் போகிறது என்று நாம் காத்திருப்போம். என்னதான் நடந்தாலும் அது நமக்குத் தெரிந்த படுக்கையறையாகத்தான் இருக்கும் என்றாலும் கூட. ஆனால் ஒன்றுமே நடக்காது. வறுத்தலில் சீரகம் கருப்பாக, மிளகாய் மேலும் சிவக்க கொத்தமல்லி புகைமூட்டமான பாடலைப் பாடுவது நமக்கு ஏற்கனவே தெரிந்ததாகத்தான் இருக்கும். சலிப்பூட்டும் படுக்கை அறை ஒன்றில் எல்லாமே எதிர்பார்த்தது போலவே பழகிய விதத்திலேயே நடப்பது போல. பழக்கம் உடலையும் மனதையும் மொண்ணையாக்குவது மட்டுமல்ல; அது நாக்கையும் மொண்ணையாக்கிவிடும்.

கரம் மசாலாவின் நாடோடிப் பாடல் உண்மையில் மார்சல் ப்ரூஸ்டின் நாயகி மெடலின் போலப் புதிய சூழல்களுக்குப் புதிய அனுபவங்களுக்கு ஏங்குவது. அதை ஒரு சுற்றித் திரியும் மந்திரவாதியாக, தந்திரக்காரக் கடவுளாகக் கையாளும்போது பரிசோதனைகளில் ஈடுபடும்போது அதன் உயிர்ப்பு அபாரமானதாக இருக்கும். உதாரணமாக பலாப்பழத்தை கரம் மசாலா போட்டு வறுத்துப் பாருங்கள்; அல்லது பெரிய நெல்லிக்காயை. அது உங்களை அறியப்படாத படுக்கை அறையின் ஆனந்தங்களுக்கு ஒப்பான அனுபவங்களுக்கு இட்டுச் செல்லும்.

பஞ்சாபிய கரம் மசாலா என்ற நாடோடிப் பாடலைக் கையாளும்போது சல்மான் ருஷ்டி "ஒரு கவிஞனின் பணி பெயரிட முடியாததை பெயரிடுவது, மோசடிகளைச் சுட்டிக்காட்டுவது, உலகம் தூங்குவதைத் தடுப்பது” என்று எழுதியதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Monday, February 23, 2026

இட்லி மாவில் ஜவ்வரிசி சேர்ப்பது பற்றி சில கவிதைச் சிந்தனைகள்

நான் சமையலறைப் பக்கம் வெந்நீர் வைக்கக்கூட எட்டிப் பார்த்ததில்லை என்றாலும் எனக்கு சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மெய்யியல் நூல்களும் அப்படித்தானே எழுதப்படுகின்றன? ‘ஆவக்காய்: ஒரு தெலுங்கு சாகசக் கதை’, ‘கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி: காவியம்’ ஆகிய எழுதப்பட்ட குறிப்புகளும் எழுதப்போவதாக மட்டுமே சொன்ன ‘பஞ்சாபிய கரம் மசாலா, ஒரு நாடோடிப்பாடல்’ ஆகியனவும் எனக்குப் புகழையும் புதிய வாசகர்கள் பலரையும் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. பல Yummie Recipes broadcast channels என்னை நட்சத்திர எழுத்தாளனாக எழுதும்படி வரவேற்றிருக்கின்றன. ஃபேஸ்புக் வேறு "உன்னிடம் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறதே, இதை வைத்துக்கொண்டா குறுந்தொகைக்கு உரை எழுதி நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறாய்" எனக் கடிந்துகொள்கிறது.

உண்மையில் என் சுயசரிதை உணவுப் பதார்த்தங்களின் நினைவுகளால் நிரம்பியதுதான். கண்ணை மூடினால் எனக்கு முதல் முத்தத்தை விட வள்ளியூரில் சாலையோர குடிசை உணவகத்தில் எப்போதோ சாப்பிட்ட மென்பஞ்சு இட்லிதான் நினைவுக்கு வருகிறது. அதே வள்ளியூர் இட்லி போல பஞ்சு பஞ்சாய் இட்லி செய்ய இட்லி மாவு அரைக்கும்போது அதில் நான்குக்கு ஒன்று என்ற வீதத்தில் ஜவ்வரிசியை ஊற வைத்து சேர்க்கவேண்டும் என்று ஒரு குறிப்பு படித்தேன். அப்படியெல்லாம் இஷ்டத்துக்கு கவிதை எழுதுவது போல எதையும் எதோடு சேர்த்தும் உச்ச அழகினை சமையல் குறிப்புகளில் உருவாக்க முடியாது. நனவிலிக்கும் சந்தர்ப்பங்களின் வசக்கேடுகளுக்கும் கவிதையில் இருக்கும் பிரம்ம முகூர்த்தங்கள் சமையலிலும் எனவே சமையற் குறிப்புகள் எழுதுவதிலும் இல்லை.

ஒரு முறை ஆக்டேவியா பாஸ், சர்ரியலிசத்தின் பிதாமகரான ஆந்த்ரே ப்ரெத்தோனைப் பார்க்கப்போனார். பாரீஸில் தன்னுடைய அறையில் எழுதிக்கொண்டிருந்த ப்ரெத்தோன் பாஸை வெளியில் உட்கார வைத்துவிட்டார். ப்ரெத்தோன் ஆவேசமாக எழுதுவதை பாஸ் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ரெத்தோன் எழுதி, திருத்தி முடித்துவிட்டு வெளியே வந்து பாஸுடன் சாப்பிடப் போனபோது பாஸ் "நீங்கள் என்ன எழுதிக்கொண்டிருந்தீர்கள்" என்று கேட்டார். "நான் ஆட்டோமேட்டிக் எழுத்தை பயிற்சி செய்துகொண்டிருந்தேன்" என்று ப்ரெத்தோன் பதிலளித்தார். "ஆனால் நீங்கள் அடிக்கடி அடித்து திருத்துவதைப் பார்த்தேனே" என்று பாஸ் ஆச்சரியத்தோடு வினவினார். அதற்கு ப்ரெத்தோன் "நான் வேண்டிய அளவு ஆட்டோமேட்டிக் எழுத்து ஆட்டோமேட்டிக்காகக் கைகூடி வரவில்லை" என்று பதிலளித்தார். நனவற்றது என்பதற்கும் கூட நனவின் அளவு என்று ஒன்று வேண்டியிருக்கிறது என்பது என்ன ஒரு நகை முரண்!

நனவற்றது ஆச்சரியகரமாகச் சேர்ப்பதன் அழகு திகைக்க வைக்கக்கூடியது. சார்ல்ஸ் சிமிக்கின் (Charles Simic) கீழ்வரும் கவிதை வரிகளை வாசியுங்கள்:

“அவன் சில காகிதங்களைக் கிழிக்கிறான்

காடு

கிசுகிசுக்கிறது

தொலைபேசிப் புத்தகம்

ஒரு குழந்தையின் இதயம்

எலிக்கு ஒரு வளை இருக்கிறது

கச்சேரி பியானோ

தன் கள்ளமின்மையை இழந்துவிட்டது

என் தாயின் துஷ்டி ஆடை.” 

இப்படிப்பட்ட கவிதா சேர்க்கைகளில் உருவாகும் அர்த்தம் பலவகைப்பட்டாதாகவும் வாசக கற்பனையை விரிவுபடுத்துவதாக இருப்பதையும் வாசிக்கலாம். இது போல ஜேம்ஸ் டாட்டேயின் (James Tate) “சக்கர நாற்காலி வண்ணத்துப்பூச்சி”, பில் நாட்டின் (Bill Knott) ‘ரேசர்பிளேடு சேர்ந்திசை’ போன்ற சேர்க்கைகளும் திகைக்கவைக்ககூடியவை. இவற்றில் வாசக மனதைச் சுரண்டி, கன்னத்தைக் கிள்ளி, காதைத் திருகி பணிய வைக்கக்கூடிய நனவின் தந்திரங்கள் இல்லை.

நனவின் தந்திரங்கள் என்பவை எண்ணற்றவை என்பதையும் அவற்றில் சிலவற்றையேனும் இங்கே சுட்டிக்காட்டுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். வட்டார வழக்கு சொற்களைக் கையாண்டு வாசக மனதில் பிராந்திய உணர்வைத் தூண்டுவது, "அது எவ்வளவு அழகு தெரியுமா" என சுய ஆராதனையில் வாசகனை ஈடுபடச்செய்வது இந்த நனவின் தந்திரத்தில் தலையாயது. கூடவே ஜாதிய உணர்வு, "நம் தெருமுக்குக்கடை தேநீர் எப்படி உலகிலேயே உயர்ந்தது தெரியுமா" என்ற பீற்றல், குடும்ப உறவுகளை முன்வைத்து பேசி அவையே உயர்ந்த லட்சியங்கள் என்று அளப்பதும் வாசக மனதின் தெரிந்த செண்டிமெண்டுகளைச் சுரணடும் நனவின் தந்திரங்கள். பின்னே மழை, காதல், பெண்ணழகின் கவர்ச்சி நெகிழ்தல்கள், உருகுதல்கள், "நான் கவிஞன் தெரியுமா" என்ற சோக நாடகம் ஆகிய தந்திரங்களைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அனைவருக்கும் அவை தெரிந்தவைதான்.

நனவற்றதையும் சந்தர்ப்பங்களின் தற்செயல்களையும் எழுத்தில் அனுமதிப்பது நாம் அறியாதவற்றிற்கான அழைப்பிதழ்; அது படைப்பின் சுதந்திரத்தை முழுமையாகக் கோருவது. சமையலோ பரிசோதித்து அறிந்ததின் தெரிந்ததின் அனுபவ விநியோகம். அங்கே முதல் ஆதி கண்டுபிடிப்பே முக்கியம். ஆவக்காய் ஊறுகாய்க்கு மாங்காயைக் கொட்டையோடு சேர்ந்து வெட்டவேண்டும் என்று கண்டுபிடித்தது போல; அல்லது குருவாயூர் பால் பாயாசத்தில் பச்சை ஏலக்காயை சேர்க்கவேண்டும் என்று பாலகிருஷ்ண நாக்கினால் கண்டுபிடித்தது போல; அல்லது மீன் வறுவலில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு அமிர்தம் என்பதைக் கண்டுகொண்டது போல. சமையலில் அனைத்துமே முதல் கண்டுபிடிப்புகளின் பவித்திரங்களால் நிரம்பியது. பின்னர் வருவது அனைத்தும் திரும்பச் செய்தல்கள்தான். நனவின் கண்டுபிடிப்புகள் அதிர்ஷ்டங்களினால் கண் சிமிட்டி ஆசீர்வதிக்கப்படுபவை; நனவற்றதன் அழகோ அதி சுதந்திரத்தின் அணைப்பினால் கூடி வருவது.

நனவுக்கும் நனவற்றதற்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. அது மனப்பிரம்மைகளால் ஆனது. நான் சமீபத்தில் எழுதிய கவிதையொன்றில் சூறாவளியின் கூடுகட்டி முட்டைகளிட்ட புறாவொன்றைத் திரும்பிப் பார்க்கும்போது அதன் குஞ்சுகளை அவற்றாலும், அவற்றின் அலகுகளாலும், அவற்றின் இறகுகளாலும் எண்ணி ஒவ்வொரு முறை எண்ணும்போதும் வேறு வேறு எண்ணிக்கை வருவதாகவும் எழுதியிருந்தேன். அதை அடூர் கோபாலகிருஷ்ணனின் அனந்தரம் படத்தில் வரும் சிறுவன் குளத்தின் படிக்கட்டுகளை எண்ணுவதற்கும் ஒப்பிட்டிருந்தேன். அத்திரைப்படத்தில் படத்தின் கதாநாயகன் அஜயனுக்கு நிஜம் எது பொய் எது, கனவு எது கற்பனை எது யதார்த்தம் எது என்று தெரியாமல் குழம்பிவிடுகிறது. தாஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளின் கதாநாயகன் அப்படிப்பட்டவன்தான்; கென் கேசியின் ‘One who flew over cuckoo’s nest’ இன் கதாநாயகனும் அப்படிப்பட்டவனே. ஹருகி முராகமியின் நாவல்களிலும் சிறுகதைகளும் மனப்பிரம்மமையின் வழி சொல்லப்படுபவைகளாகவே இருக்கின்றன. எனது கவிதைகளின் இந்த அம்சத்தையே அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விமர்சனம் எழுதிய ஸ்டெஃபி புர்சோவா ‘Hallucinations as Epistemic Doubt” என்று குறிப்பிடுகிறார்.

எனது புறாக்குஞ்சுகளை எண்ணும் கவிதை,

“சூறாவளியின் அழிவை

எதிர்த்து வென்ற

ஒற்றை அலகின் மிகுதி

உயிரோசையின் இனிமை”

என்று முடிகிறது. இதில் சொல்லப்படும் உயிரோசையின் இனிமை பிரம்மையானாலும் உண்மையானால் எவ்வளவு அழகு, அதேசமயம் அது பிரம்மையின் பொய்யானால் அது எவ்வளவு பெரிய துயரம். இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்வது கவிதையின் விதி.

என்னை நனவில் தொடர்ந்து இருத்திக்கொள்ளவே சமையல் குறிப்புகளை தொடர்ந்து எழுத விரும்புகிறேன். சமையலின் முதல் கண்டுபிடிப்புகளை எழுதி எழுதி நனவுபூர்வமாகவே அடைந்துவிடலாமென்றும் நம்புகிறேன். சமையற் குறிப்புகளுக்கு என்று சாகித்ய விருதுகள் என்று ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

இப்போது எனது நினைவிலுள்ள வள்ளியூர் சாலையோர குடிசைக் கடை ஆச்சியின் மென்பஞ்சு இட்லியை, இட்லிக்கு மாவரைக்கும்போது நான்குக்கு ஒன்று என்ற வீதத்தில் ஜவ்வரிசி சேர்த்தால் திரும்பச் செய்துவிடலாம் எனப் பிரம்மையடைகிறேன்.


Sunday, February 8, 2026

ஆலெய்ன் பாத்யூவின் (Alain Badiou) Rhapsody for the theatre

 



ஆலெய்ன் பாத்யூவின் (Alain Badiou)  Rhapsody for the theatre தத்துவத்திற்கும் நாடகத்திற்கும் இடையிலான மிகப் பழமையான உறவையும் அந்த உறவில் இருக்ககூடிய சிக்கல்களை நுட்பமான மறு விசாரணைக்கு உட்படத்தக்கூடிய முக்கியமான நூல். கிரேக்க நகர அரசுக்கும் (Greek city state) துன்பியல் நாடகங்களுக்கும் (tragedies)  இருக்கக்கூடிய உறவை Poetics இல் அரிஸ்டாட்டில் விளக்கியதிலிருந்து மேற்கத்திய தத்துவத்தில் நாடகம் ஆய்வுக்குரிய முக்கிய கலைவடிவமாக இருந்து வருகிறது. பார்வையாளானை கிரேக்க  நாடகக் கதாநாயகனோடு அடையாளம் காணவைக்கக்கூடிய துன்பியல் நாடக வடிவம்  அவன் கிரேக்கா நகர அரசில் அடிமையாக இருப்பானேயென்றால் அவன் தன் அவல நிலையின் சோகங்களை நாடக அனுபவத்தில் மீண்டும் வாழ்ந்து தன் அடிமை நிலையை ஏற்றுக்கொண்டவனாக  நாடகம் முடிந்தவுடன் தன் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவான். பார்வையாளன் கிரேக்க நகர அரசில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், தன் கதாநாயக நிலை என்பது தொடர்ந்து கடவுளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அடிமைகளை அடக்கி வாழும் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவான். அரிஸ்டாட்டில் உருவாக்கிய இந்த நாயகனோடு அடையாளம் கண்டுகொள்ளும் செயல்பாடு நாடகம் எனும் கலை வடிவத்தைப் பற்றியும் அதன் நீட்சி வடிவமான சினிமாவைப் பற்றியும் எண்ணற்ற தத்துவ சிந்தனைகளையும் உருவாக்கியுள்ளது. 


பெர்டோல்ட் பிரெக்ட் அரிஸ்டாட்டிலிய துன்பியல் நாடகத்தில் பார்வையாளன் நாயகனோடு அடையாளம் கண்டுகொள்ளும் வடிவத்தை உடைத்தார். அவருடைய காப்பிய அரங்கில் பார்வையாளன் உணர்ச்சி பூர்வமாக பார்வையாளனாக மட்டும் இருக்காமல் சிந்திக்கக்கூடியவனாக மாறுவதற்கு உண்டான   விலகல் கதை உத்திகளைக் கொண்ட கதை சொல்லல் வடிவத்தை அறிமுகப்படுத்தினார். 


ஜெர்சி க்ரோட்டோவ்ஸ்கி நாடகம் நாடக நடிகனின் உடலை அடிப்படையாகக் கொண்ட மொழியையும் வடிவத்தையும் கொண்டது என்று வாதிட்டார். அவருடைய நாடகங்களில் நடிகனின் உடல் சொற்களால் வெளிப்படுத்த இயலாத சிக்கலான உணர்ச்சிகளை பார்வையாளனுக்குக் கடத்தியபோது அரசு கடந்த யதார்த்த வெளிகள் புலப்படத் தொடங்கின. 


ஆலெய்ன் பாத்யூ தன் நூலில் நாடகக்கலை அரசினை மறைமுகமாகவோ நேரடியாக ஆதரிக்கும் வடிவமாக இல்லாமல் வரலாற்றின் மிகப் பெரிய நிகழ்வுகளை (Event) இடையீடு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். நிகழ்வுகள் என்பது பாத்யூவின் சிந்தனையில் ஃப்ரெஞ்சுப் புரட்சி, மே 68 மாணவர் புரட்சி போல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தவை. மக்கள் ஒன்று கூடி தெருவிறங்கிப் போராடியதால் உண்டான சிந்தனை, சமூக மாற்றங்களையே பாத்யூ நிகழ்வுகள் எனக் குறிப்பிடுகிறார். மக்கள் பெருந்திரளாய் கூடுகிற அத்தனை சந்தர்ப்பங்களும் நிகழ்வுகள் என்றழைக்கப்படுவதற்குத் தகுதியானவை அல்ல. 


சிறிய மணிமொழிகளாலும்,  நாடகம்-தத்துவ சிந்தனை இரண்டுக்குமான சர்ச்சைகளாலும் நிறைந்த ஆலெய்ன் பாத்யூவின் நூல் அரசின் கருத்தியல் பிடியில் (ideological entrapment of state) அகப்படாத மேடை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பற்றிப் பேசுகிறது.  





Tuesday, February 3, 2026

மனதைக் குவித்தல்




தியான மரபுகளில் மனதைக் குவிக்க ஏராளமான பயிற்சிகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் ‘தாரணா’ (Dharana), - ஒரே புள்ளியில் கவனத்தைக் குவித்தல்- ஆறாவது அங்கமாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஒரு தீபச் சுடரையோ, தெய்வ உருவத்தையோ, ஒரு மலரையோ, நகரும் மேகத்தையோ, கடலையோ, மலை சிகரத்தையோ ஒருவர் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பது மனதைக் குவிக்கும் பயிற்சிகளில் அதிகமும் பயன்படுத்தப்படுவது.  வெளியில் இருக்கக்கூடிய பொருட்களின் மேல் கவனத்தைக் குவிப்பதை விட ஒருவர் தன் மூச்சையே கவனிப்பது, அல்லது மனதிற்குள் தொடர்ந்து பீஜாட்சர மந்திரத்தையோ ஜெபிப்பது மனதைக் குவிப்பதற்கு உடனடி பலனைத் தரக்கூடியது. 


மூளையின் செயல்பாடுகள் பற்றிய சமகாலத்திய ஆராய்ச்சிகள் மனதைக் குவிக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது மனதிற்குச் சுமையைக் கூட்டக்கூடியது என்று சொல்கின்றன. ஒற்றைப் பொருளில் கவனத்தைக் குவிக்காமல் மனதை சுதந்திரமாக அலையவிடுவது மனதை அமைதிப்படுத்தும் என்றும் அவை மேலும் கற்பிக்கின்றன. மனம் ஒடுங்கும் புள்ளியை ஒருவர் மனதை அலையவிட்டு கண்டுபிடிக்க வேண்டுமே தவிர முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு புள்ளியில் மனதைக் குவிக்கலாகாது என்பது அதன் நீட்சி. 


எனக்கு தியானம் கற்பித்த பௌத்த துறவி, பெயரிலி, தாரணா பயிற்சிகளில் எது சரி என்று ஆராய்வதை விட தாரணாவின் நோக்கம் என்ன என்பதே முக்கியம் என்று வலியுறுத்துவார். பெயரிலியைப் பொறுத்தவரை தாரணா பயிற்சிகளின் நோக்கம் மனதை இயல்பாக, தன்னிச்சையாக அகிம்சையின் முடிவை எடுக்கப் பயிற்றுவிப்பதே ஆகும். ஒருவர் தியானத்தில் தேர்ச்சி பெற்றவராக இருப்பாரேயானால் அவரால் கண் இமைக்கும் நேரத்தில், தயக்கம் ஏதுமில்லாமல், அகிம்சை சார்ந்த முடிவை எடுக்க முடிய வேண்டும். ஆனால் தொடர்ந்து வன்முறையை தினசரி உள்வாங்கும் மனதிற்கு எது அகிம்சை சார்ந்த முடிவாக இருக்க முடியும்?


ஊர்ந்து செல்லும் எறும்புகளை வாரியலால் கலைத்து குப்பைகளோடு ஒருவர் சேர்த்துவிடும்போது அதில் மடிந்த எறும்புகள் வாரியலைப் பற்றி என்ன நினைக்கும்? விதி என்றா? கடவுள் என்றா? விபத்து என்றா? அழிவுக்கு உள்ளான எறும்புகளின் பார்வையில் எது அகிம்சை என்ற கேள்விக்கு தியானி என்ன பதிலை தன்னிச்சையாக சொல்வான்?


அறம் சார்ந்த கேள்விகளில் மனம் திகைத்து ஸ்தம்பித்துவிடும் இடங்கள் கலை, இலக்கியத்திற்கு உரியவை என்றும் அந்தப் புதிர்களையே இலக்கியம் காலங்காலமாக முன்வைத்து வருகிறது என்றும், தத்துவம், இலக்கியம் முன்வைக்கும் புதிர்களை முடிவற்று விவாதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் பெயரிலி ஒருமுறை என்னிடம் சொன்னார். 


பெயரிலி விட்டுச்சென்ற கைப்பிரதிகளை வாசிக்க ஆரம்பித்திருக்கும் எனக்கு அவற்றை நான் புனைவாக எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.  


Photo: Pal Karma Zurmang Shedup Chokhor Ling Lingdum Monastery  (Ranka Monastery), Gangtok, Sikkim