Tuesday, April 17, 2012

மூடிய இமைகளின் செவ்வரிப் படலத்தினூடே 17

Great Hornbill




சித்திரை மாதம் வந்துவிட்டாலே உடம்பு குனக்கிக்கொள்கிறது. வெயில் தாங்க முடிவதில்லை. ஏதாவது கோவிலில் போய் சாமியாடலாமா என்ற எண்ணம் தோன்றிக்கொண்டேயிருப்பதை தவிர்க்கமுடிவதில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் குளிர் காலங்களில் மாட்டிக்கொண்டபோதெல்லாம் இந்த சித்திரை மாதம் சொகுசானதாகக் கனவுகளை நிறைக்க ஊர் திரும்புதலின் ஏக்கத்தில் பூட்டிய அறைகளுக்குள் கதறி அழுதிருக்கிறேன். இங்கு இருந்தாலோ பங்குனி உத்திரத்தின்போதே உடல் சீர் கெட ஆரம்பிக்கும். சித்திரை விஷு கனியை உற்சாகத்தில் தாண்டி விடுவேன் அதன் பிறகு வைகாசியில் மாமரங்கள் பூக்களும், பிஞ்சுகளும், கனிகளும் காணும் காலம் வரை வித விதமான உடல்க்கேடுகளின் அவதிதான். வருடாந்திரப் பழக்கமாகிவிட்டபோதும் முன் தயாரிப்புகள் எதுவும் என்னை காப்பாற்றுவதில்லை. குளிரூட்டப்பட்ட அறைகளை பாவிப்பது நூலகங்களைத் தவிர இதர இடங்களில் என் பழங்குடி மனதிற்கு ஒவ்வாததாய் இருக்கிறது. முருகன் கோவிலுக்கு பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது, மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்குவது, அல்லது ஏரோப்பிளேன் காவடியில் தலைகீழாய்த் தொங்கிச் சென்று நேர்த்திக்கடன் தீர்ப்பது என்று பல அருமையான யோசனைகள் ஓடும்; எழுதுவதற்கான மன ஒருமை கெட்டுப்போகும். அப்படி ஒன்றும் எழுதுவது என் முதல்த் தேர்வாக எப்போதும் இருப்பதில்லை. எழுதுதை விட வாசிப்பதும், வாசிப்பதை விட பகற்கனவில் ஆழ்வதும், பகற்கனவை விட தூக்கம் போடுவதும், தூக்கம் போடுவதை விட சும்மா இருப்பதும் என் எதிர் உழைப்பு மனோநிலையின் அகத்தெரிவுகள். சும்மா இருப்பதை கொண்டாடுவது போன்ற உச்சபட்ச படைப்பியக்கம் வேறுதுவும் இல்லை என்பது என் தீர்மானம். இதில் சுகக்கேடும் சேர்ந்துகொண்டால் கேட்கவேண்டுமா சந்தோஷமாய் எழுதாமல் இருந்தேன். நம் சம காலம் என் அகத் தெரிவுகளுக்கு எதிரான மதிப்பீடுகள் கொண்டது என்பதும் அதனால் நான் அந்நியப்பட்டவனாக இருப்பதும் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இந்தத் தொடருக்கு ஒரு பத்து நாள் இடைவெளி விட்டது மனதை அரிக்கத் தொடங்கியதுதான் எப்படி என்று தெரியவில்லை. யூகம் என்னவென்றால், மிகக் குறைந்த கால பழக்கத்திலேயே ரீபாங் என் எதிர் உழைப்பு மனோநிலையை கணித்துவிட்டிருந்தார் என்பதை எழுத வேண்டும் என்று தோன்றியபடிக்கு இருந்ததுதான்.

முற்றத்து பாடல் நிகழ்ச்சி நடந்த மறுநாளே நான் மாந்தரீகம் கற்றுக்கொள்ள லாயக்கில்லாதவன் என்பதைச் சுட்டிக்காட்ட என்னைப் பற்றிய தன் மதிப்பீட்டினை ரீபாங் என்னிடம் பகிர்ந்துகொண்டார். பாஷோவின் ஹைக்கூவைத் தொடர்ந்து பாடல்களைப் பதிவு செய்த நாள் பங்குனி உத்தரமாயிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அன்று பௌர்ணமியாய்த்தானே இருந்தது? தமிழ் நாட்காட்டியை வைத்து நாளை ஒப்பு நோக்க மனம் ஏனோ இன்றுவரைத் தயங்குகிறது. ஒரு வேளை அந்த நாள் பௌர்ணமியாய் இல்லாவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதோ என்னவோ? சிறு நிகழ்ச்சிகளை பதிவு செய்வதிலேயே இவ்வளவு குளறுபடிகள் என்றால் பெருவரலாறுகள் எப்படி எழுதப்படுகின்றன? புனைவு புனைவெனெ வெளிப்படையாகத் தன்னை அறிவித்துக்கொள்கிற பிரதிகளில் மட்டுமா பின்னப்படுகிறது? வரலாறு, தத்துவம், மனோதத்துவம், மானிடவியல் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் பிரதிகளில் புனைவின்தன்மை குறைவாக இருப்பதாக யாரேனும் சொல்வார்களா என்ன?

கனவோ புனைவோ நிகழ்வோ என சந்தேகிக்க வைக்கிற முற்றத்து பாடல்களின் மறு நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

உயிர்த்திரவம் ததும்பி நிற்கும் தருணம். எந்த நேரமும் வெடித்துச் சிதறித் தன் இணையை உயிராக்கும் கனவுலக யத்தனத்தில் வீணாகலாம் தாது. அந்தப் பெண் இருவாட்சியாய் பறந்துகொண்டிருந்தாள். மஞ்சள் அலகின் மேல்க் கொண்டையின் மெல்லதிர்வெனவே விம்முகின்றன மென் கொங்கைகள். இருவாட்சியின் சிறகடிப்பின் படபடப்பிலும், குரலொலியிலும் பெண்ணுச்சம் வீரியம் பெறுகிறது. என் மூடிய இமைகளின் செவ்வரிப்படலத்தினூடே வேட்கையில் சிவந்து உக்கிரம் பெற்ற இருவாட்சியின் தணல் விழிகளைச் சந்தித்தேன். பெண்ணொழுக்கின் நிணவாடையில் தோய்ந்த சிறகுகள் கட்டியணைக்க, மஞ்சள் அலகினால் என் குரல்வளையை அவள் கவ்வ, வெடித்துக் கண் விழித்தேன். ரீபாங்கும் சோக்கோவும் என் முகத்தைப் பார்த்தபடி காலடியில் கட்டில் காலருகே நின்றிருந்தனர். ஜன்னல் வழியே பிற்பகலின் சூரிய கிரணங்கள் அறையை மூழ்கடித்திருந்தன. பிற்பகலா! வேட்டிக்கு மாறாமல் அப்படியே தூங்கியிருந்திருக்கிறேன். எப்போது முற்றத்திலிருந்து படுக்கையறைக்கு வந்தேன்?

முற்றத்திலேயே நேற்று நீ கவிழ்ந்து விட்டாய்; நாங்கள்தான் உன்னைத் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினோம் என்றார் ரீபாங். சோக்கோவின் கண்களில் கேலி கூடியிருந்ததது. நான் முகம் சிவந்து போயிருக்கவேண்டும். சிக்கிரம் கிளம்பி வா மதியம் மணி இரண்டிற்கு மேலாகிவிட்டது நம் பயணத்தைத் திட்டமிடவேண்டாமா என்ற சோக்கோவிடம் இந்தப் பையனுக்கு நாகர் மாந்தரீகம் படிக்கும் தகுதி இருக்கிற மாதிரி தெரியவில்லையே என்று உதட்டைப் பிதுக்கினார் ரீபாங்.

காரியமே கெட்டுவிட்டதேயென்று அலறியடித்துக் குளித்து, உடை மாற்றி ரீபாங்கின் வீட்டு நடுக்கூடத்திற்குப் போனபோது திருமதி ரீபாங் எனக்கான சைவ உணவைத் தயாராக வைத்திருந்தார். மெங்வா , அவருடைய மகள்கள் இன்னும் பலர் கூடியிருந்தனர். பொதுவான அறிவிப்பு போல அரிசிக்கள் பழக்கமில்லையா அதுதான் அப்படி அடித்துப் போட்டார்போல தூங்கிவிட்டேன் என்றேன். யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை. மெங்வா அரிசிக்கள்ளை மழைக்காலங்களில் அதிகம் குடித்துவிட்டு காட்டில் கிடப்பவர்கள் இறந்துகூட போயிருக்கிறார்கள் என்றவர் என்னை ஆசுவாசப்படுத்தும் நோக்கில் நீ வீட்டு முற்றத்தில்தானே குடித்தாய் என்றார். ரீபாங் நீ தூங்கும்போது விழித்திருப்பதை விட குறைவாகவே கனவு காண்கிறாய் என்றார்.



தூங்கும்போது உன் இமைகள் சலசலக்கின்றன; நான் நேற்றிரவும் இன்று காலையும் உன் இமைகளை அடிக்கடி பார்த்தேன், இருவாட்சிகளைப் பற்றி உனக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமென்றால் உன் கனவு காணும் பழக்கங்களைப் பற்றி நான் அறிய வேண்டும்; சலசலக்கும் இமைகள் கனவு காண்பதன் அடையாளம் என்ற ரீபாங் கனவுகள் பற்றிய வடகிழக்கு மாநிலங்களின் ஆதிவாசிகள் நம்பிக்கைகள் உனக்குத் தெரியுமா என்று வினவினார். நான் கண்ட கனவினை சொல்லலாமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. இருவாட்சி காம ஆசைகளோடு தொடர்புபடுத்தப்படுகிறதா என்று பொதுவில் கேட்டு வைத்தேன். ஷில்லாங் நகரில் கனவு லாட்டரிப் பந்தயம் நடப்பது, நாகர்களில் ஒரு வகையினர் கனவுகளில் திட்டமிட்டு எதிரிகளைக் கொல்வது அல்லது வெல்வது போன்ற செய்திகளே எனக்குத் தெரிந்திருந்தன. அவை எனக்கு மிகவும் மேலோட்டமாகவே தெரியும் அவற்றை இன்னும் நேரடியாக ஆராய்ச்சி செய்யவில்லை என்றேன். ரீபாங் அவை மேலோட்டமான தகவல்கள் என்பதை உடனடியாக ஒப்புக்கொண்டார். மெள்ள மெள்ள பயண ஆயத்தத்தைப் பற்றி பேச்சு திரும்பியபோது என்னை எதற்கு மாந்தரீகம் படிக்க லாயக்கவற்றவன் என்று குண்டைத் தூக்கிப் போட்டீர்கள் என்று கேட்டேன். நேற்றிரவு நீ அரிசிக்கள்ளை விட கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் சொக்கிவிட்டாய். கவிதைக்குச் சொக்குகிறவனுக்கு விழிப்பு நிலையிலும் கூட வேறொரு உலகோடு சதா பரிவர்த்தனை இருக்கிறது அவனால் அதீத விழிப்பினை அடையமுடியாது. மாந்தரீகம் அதீத விழிப்பிலேயே சாத்தியம் என்ற ரீபாங் என்னை முழுமையாக மதிப்பிட்டுவிட்டது போலத் தோன்றியது.

Shamanism என்ற ஆங்கிலப் பதத்தை நான் எல்லா மானிடவியலாளர்களைப் போலவே ஆதிவாசிகளின் மதச்சடங்குகளையும் செயல்பாடுகளையும் குறிக்கும் விதத்தில் 'மாந்தரீகம்' என்று மொழிபெயர்த்து பயன்படுத்தினாலும் பல சூழல்களில் வளர்ச்சிபெற்ற இறையியலைக் கொண்ட மதங்களில் 'புரோகிதம்' என்ற சொல் எவற்றைக் குறிக்கிறதோ அவ்வாறாகவே ரீபாங் மாந்தரீகம் என்பதைப் பயன்படுத்துகிறார் என்று நான் கணித்திருந்தேன். அதீத விழிப்பு நிலையைப் பற்றிய ரீபாங்கின் சுட்டு அவர் புரோகிதம் தாண்டிய வேறொன்றையே சொல்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது.

என் கனவினைத் தணிக்கை செய்து ரீபாங்கிடமும், மெவாங் ஓவிடமும் சொன்னேன். அவர்கள் அதை மிகவும் உன்னிப்பாகக் கேட்டனர். பெண்கள் இல்லாதிருக்கும் சூழலாயிருந்தால் நடு வயதினனக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான ஈரக்கனவென்று வெளிப்படையாகக் கூறியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு அந்த மாதிரியான விபரங்களை அறிவதில் ஆர்வமிருக்கவில்லை. ரீபாங் நான் தூங்கும்போது என் இமைகளை உற்று நோக்கிய கணக்கின்படி நான் நான்கு கனவுகளாவது கண்டிருக்க வேண்டுமாம். அவை எல்லாமே எனக்கு ஞாபகமில்லை என்பது அவர்களுக்கு ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருந்ததாம்.

கலை இலக்கிய செயல் முறைமைகளும் ஆதிவாசி மாந்தரீகமும் ஒரே மாதிரியான வடிவ ஒப்புமையுடயவை என்ற கருதுகோளை வந்தடைந்திருந்த எனக்கு ரீபாங்கின் அதீத விழிப்பு நிலை பற்றிய பேச்சும் கவிதைக்கும் பாடலுக்கும் சொக்குவதால் மாந்தரீகம் படிக்கத் தகுதிக்குறைவை நான் அடைவது என்பதும் ரீபாங்கின் வேறு கட்டுமானங்களால் ஆன சிந்தனை உலகினை நான் அணுகுகிறேன் என்பதும் அதை அவதானிக்க எனக்கு வேறு கருதுகோள்கள் தேவை என்பதும் புலப்பட்டன. கனவினை விழிப்பு நிலைக்கு சமமான காத்திரமுடையதாக அவர்கள் கருதுகிறார்கள் என்ற மட்டிலேதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தவிர, அகம் புறம் என நாம் வைத்துக்கொண்டிருக்கும் தெளிவான பிரிவினையும் அவர்களுக்கு இல்லை. பாலியல் உடலெழுச்சிகள் மைய கவனம் பெறுவதுமில்லை.

காண்ட்டின் noumenon - phenomenon பிரச்சினையினை அணுகுவதற்கு ரீபாங்கின் அதீத விழிப்பு நிலை பற்றிய எண்ணங்களிலிருந்து புதிய கோணமும் பார்வையும் கிடைக்குமோ என்று தோன்ற அதை என் ஆய்வின் முக்கிய திசைகாட்டியாகக் குறித்துக்கொண்டேன்.

கோஹிமாவிலிருந்து திமாப்பூர் சென்று அங்கிருந்து மியாவ் நகருக்குச் செல்வது என்று திட்டமிட்டோம். மியாவ் நகருக்கு என் மனைவியின் உறவினர்களை என்னைப் பார்க்க வரச்சொல்கிறேன் என்றேன். அவர்களில் பலருக்கு நான் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணையே மணமுடித்திருக்கிறேன் என்பது புதிய செய்தியாக இருந்தது. நம்ம ஊர் மாப்பிள்ளைதான், இவனை எப்படியும் மாந்தரீகனாக ஆக்கிவிடலாம் என்றார் மெவாங் . சைவனாய் இருக்கிறானே இவன் என்றார் ரீபாங் போலிக் கவலையோடு. பெண்கள் அனைவரும் கலகலத்துச் சிரித்தனர். சிறிது தயக்கதுடனே இருவாட்சியையும் சாப்பிடுவீர்களா என்றேன். அங்கமி நாகர்களிடையே இருவாட்சியின் கறி கால்களில் புண்களையுண்டாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை. ஆனால் அந்த நம்பிக்கை இல்லாதவர்களும் தெரியாதவர்களும் உலகம் முழுக்க இருக்கத்தானே செய்கிறார்கள் என்றார் மெவாங் .

மெவாங் எங்களோடு வரவில்லையென்று சொல்லிவிட்டார். உங்களுடைய பாடல்கள் இல்லாமல் ஒரு பயணமா என்று மன்றாடிப் பார்த்தேன். என் மகள்கள்தான் வருகிறார்களே அவர்கள் பாடுவார்கள் என்றார். இரண்டு நாகர் இளைஞர்கள், மெவாங் வின் மகள்கள், சோக்கொ, ரீபாங், நான் எல்லோரும் ஒரு டாடா சுமோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கிளம்புவது என்று முடிவு செய்தோம்.

கிழக்கு இமாலய மலைத் தொடர் காட்டினில் நோடெஹிங் நதித் தீரத்தில் அதீத விழிப்பு நிலை என்னைத் தடுத்தாட்கொள்வதான நினைப்பில் களிப்பேறியது.

——————————————————————————
தொடரும்

No comments: