Friday, April 10, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள்- 8 யாசுனேரி காவபட்டா (Yasunari Kawabata) “Beauty and Sadness”


எனக்குப் பிடித்த நூறு நாவல்கள்- 8 யாசுனேரி காவபட்டா (Yasunari Kawabata) “Beauty and Sadness”

    இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுனேரி காவபட்டாவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்து எழுதியவர் பிரம்மராஜன். அவர் காவபட்டாவின் நாவல் “House of Sleeping Beauties”இக்கு எழுதிய அறிமுகக் கட்டுரை விரிவானது அருமையானது. காவபட்டாவின் நாவல் தமிழில் “தூங்கும் அழகிகள் இல்லம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பு எனக்கு திருப்தியைத் தரவில்லை. அதில் வரிக்கு வரி மொழிபெயர்ப்பு இலக்கணரீதியாக சரியாக இருப்பது என்னவோ உண்மைதான். காவபட்டா ஜப்பானிய மொழியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். எல்லாமே நூற்றிருபது பக்கங்களுக்குட்பட்ட படைப்புகளே.அவை அத்தனையும் ஆங்கிலத்தில் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவற்றுள் “House of Sleeping Beauties”, “Snow Country”, “One Thousand Cranes” ஆகியவை புகழ்பெற்றவை. “One Thousand Cranes” நாவலை தமிழில் மொழிபெயர்க்க முன்பொருமுறை நண்பர் ஒருவரிடம் பரிந்துரை செய்தேன். நாவலோடு போனவர்தான் இன்னும் மொழிபெயர்ப்பும் வெளிவரவில்லை கடன் கொடுத்த நாவல் பிரதியும் திரும்பி வரவில்லை. காவபட்டாவின் நோபெல் பரிசு ஏற்புரை “Moon and Snow in Japanese literature” என்ற தலைப்பில் அமைந்தது. நோபெல் பரிசு ஏற்புரைகளிலே மிகவும் கவித்துவமானது. அதை வாசித்தபோதுதான் காவபட்டாவின் நாவல்களிலேயே -அதாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவற்றுள்- அவருடைய அழகியலுக்கு மிகவும் அணுக்கமானது மேற்சொன்ன மூன்று நாவல்களும் அல்ல “Beauty and Sadness” தான் என்று நான் அறிந்தேன்.

    லா.ச. ராவின் உணர்ச்சிப் பெருக்கில் உத்வேகம் ஏறிய உரைநடை, வேறொரு ஆகச்சிறந்த எளிமையில் ஆனால் லா.சா.ராவின் உன்மத்தத்தை அப்படியே கடத்துவதாக இருக்குமானால் அந்த உரைநடையை என்னவென்று சொல்வீர்கள்? ஆங்கில மொழிபெயர்ப்பில் கூட Beauty and Sadness அத்தகைய எளிய, கட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் இருதயத்தை நொறுக்கிவிடும் hypersensitivityயோடு கூடிய உரைநடையைக் கொண்டிருக்கிறது. காவபட்டா தன்னுடைய “Moon and Snow in Japanese Literature உரையில் தன்னுடைய உரைநடையினையும், கதை சொல்லலையும் ஜப்பானின் பௌத்த தியான பாரம்பரியத்திலிருந்தும், ஹைக்கூ கவிதை மரபிலிருந்தும் உருவாக்கிகொண்டதாகச் சொல்கிறார். மெல்லிய தூரிகைத் தீற்றல் போன்ற விவரணைகள், அடங்கிய தொனியில் வெளிப்படும் உச்சபட்ச இச்சை, நிலப்பகுதியோடு சேர்ந்து எழும் உணர்வுகள், அழகில் மயங்கவும் சிந்திக்கவும் வைக்கும் உள்ளார்ந்த உவமைகள் என காவபட்டாவின் “Beauty and Sadness” ஒரு சங்கக் கவிதை போல இருக்கிறது. எளிமையான மொழி, பக்கங்களும் குறைவு என்பதால் மொழிபெயர்ப்பது சுலபம் ஆனால் அதன் ஆத்மாவைப் பிடிப்பது கடினம்.

    “Beauty and Sadness” இல் கதை எழுத்தாளன் ஒகி டோஷியோ தன் சொந்த ஊருக்கு திரும்புவதில் ஆரம்பிக்கிறது. ஒகி டோஷியோ தன் கடந்த கால காதலியான ஒடோகோ யுயெனோவை சந்திக்க நேர்கிறது. புகழ்பெற்ற ஓவியராகியிருக்கும் ஓடோகோயுயெனோ, கெய்கோ சகாமி என்ற யுவதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஒடோகோ யுயெனோவின் கடந்த கால காதலை அறியவரும் கெய்கோ சகாமி ஒகி டோஷியோ பெரும் துரோகத்தை ஒடோகோ யுயனோவிற்கு இழைத்துவிட்டதாக கருதுகிறாள் அவள் ஒகி டோஷியோவை எப்படி பழி வாங்குகிறால் என்று நாவல் சொல்கிறது. கெய்கோ சகாமி உணர்ச்சிகள் பொறாமை, பழி வாங்குதல், காதல், இளமையின் அகந்தை என பல அடுக்குகளால் நிரம்பியிருக்கின்றன. ஒகி, ஓடோகோ ஆகிய இருவருக்குமிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கடந்த கால காதலின் ஆனால் இன்றைக்கு பலி கேட்கும் உணர்ச்சிக்குவியலின் குறியீடாகவும் கெய்கோ நாவலின் கதைப்போக்கில் அபூர்வம் கொள்கிறாள்.  Sensuous and intriguing, “Beauty and Sadness” will haunt you!

http://www.amazon.com/Beauty-Sadness-Yasunari-Kawabata/dp/0679761055



No comments: