Sunday, September 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-109

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-109

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  நம்பி குட்டுவனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 109

திணை;  நெய்தல்

——

முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை

புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்

புணரிய விருந்த ஞான்றும்

இன்னது மன்னோ நன்னுதற் கவினே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

 முள்ளைப் போன்ற கால்களையுடைய இறாமீனின் வளைந்த முதுகினையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலை கொண்டு வந்து தருதற்குரிய இடமாகிய துறையை உடைய தலைவன்  உடன் இருந்த நாளிலும்  நின் நல்ல நெற்றியின் அழகு இவ்வாறு பிறர் அலர் கூறும்படி வருந்துவதற்கு உரியதாயிற்று. 

——

தரூஉந் துறைவன்

—-

இப்பாடல், சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்வதாக அமைந்துள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் தாழும் திரையே இறாமீனை உந்திக் கொணர்தலின் ‘இகு திரை தருஉம்’ என்றாள்,  வளமுடைய துறைவன் என்றவாறு, என உரை எழுதுகிறார் .  கடலலைகள் தரும் இறாலைத் தன் முயற்சியின்றிப் பெற்றமைகின்ற தலைவன் என்றது, ஊழால் தரப்பட்ட களவின்பமே நுகர்ந்து வரைதல் முயற்சியின்றி அமைபவன் என்றவாறு பொருள் பெறும்.    


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  தன்னை அடைந்த இறா மீனின் கிளையைக் கடல் கொடிய அலைகளால் கரைக்கண் யாரும் அறியத் தந்தாற்போல, அவனைப் பற்றுக்கோடாகக் கொண்ட நம்மையும், நமது கிளையொடு கூட்டித் தனது கொடிய களவொழுக்கத்தால் எல்லாரும் அறிந்து தூற்றுமாறு அவன் வைத்திட்டான் என்பதாம் என்று உரை எழுதி இதை இறைச்சி எனக் குறிக்கிறார். 


இறாமீனை கடல் அலை வெளியே தள்ளி ப் பலரும் அறியச் செய்தாற்போல தலைவனின் வரைவு நீட்டித்தல் (திருமணத்தைத் தள்ளிப் போடுதல்) தலைவியைப் புறந்தள்ளிப் பலரும் அறியும்படி செய்தது என்ற குறிப்பு பொருள் இதனால் உணர்த்தப்பட்டது.

——

இன்னது மன்னோ நன்னுதற் கவினே

——

தலைவன் வரைந்து  கொள்ளாமல் காலந்தாழ்த்தியபடியால் தலைவி வருந்தினாள். அவ்வருத்தத்தை அவளது பசலை படர்ந்த நெற்றி வெளிப்படுத்த அதை ஊராரறிந்து தூற்றலாயினர். தலைவியின்  இந்த நிலையை தலைவன் கேட்குமாறு தோழி கூறுகிறாள். தலைவனோடு நாள் தோறும் பயின்று வந்தாலும் அந்தக் களவின்பம் தலைவிக்கு அச்சத்தையும் துன்பத்தையும் தந்தது; அலரை உண்டாக்குவது அதனால் தலைவன் அவளை சீக்கிரம் வரைந்து கொள்ள வேண்டும் என தோழி குறிப்பால் உணர்த்துகிறாள். நன்னுதல்- நல்ல நெற்றி- அன்மொழித்தொகை. கவின் - அழகு , ஏ – அசைநிலை.


தலைவன் வரைந்தாலன்றி நின் வேறுபாடு நீங்காது. 



Wednesday, September 4, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-108

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-108

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  வாயிலான் தேவன்

குறுந்தொகையில் பாடல் எண்; 108

திணை;  முல்லை

——

மழைவிளை யாடுங்குன்றுசேர் சிறுகுடிக்

கறவை கன்றுவயிற் படரப் புறவிற்

பாசிலை முல்லை யாசில் வான்பூச்

செவ்வான் செவ்வி கொண்டன்

றுய்யேன் போல்வ றோழி யானே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மழைவிளையாடுதற்கிடமாகிய, மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு அகன்றிருந்த பசுக்கள், தம் கன்றுகளிடத்தே நினைந்து செல்ல முல்லை நிலத்தில், பசிய இலைகளையுடைய முல்லையினது குற்றமில்லாத சிறந்த மலர்ப்பரப்பு செக்கர் வானத்தின் அழகைக்கொண்டது இக்கார் பருவத்து மாலையில் தலைவர் வாராமையில் நான் உயிர் வாழேன்

——

கறவை கன்றுவயிற் படரப் புறவிற்

பாசிலை முல்லை யாசில் வான்பூச்

——

கார்பருவத்தின் வருகையைக் கண்ட தலைவி தலைவன் வாரமையினால் துயருற்றாள். நிலப்பகுதியால் தலைவன் குறிப்பிடப்படுதல் மரபு. இப்பாடலில் அவன் ‘மழைவிளை யாடுங்குன்றுசேர் சிறுகுடியைச் ‘ சேர்ந்தவனாகக் குறிக்கப்படுகிறான்.  குறுந்தொகை 263 ஆவது பாடலில் “மால் வரை மழை விளையாடும் நாடன்” என்று சொல்லப்படுவது இதோடு இணைத்து வாசிக்கத்தக்கது. மேகங்கள் வானில் தவழ்தல் கார்பருவத்தில் நிகழ்வது, கறவைப் பசுக்கள் தங்கள் கன்றுகளை நாடி அடைவதும் முல்லை பூத்தலும் மாலையில் நிகழ்வன. தானும் பிள்ளைகளைப் பெற்று இவ்வாறு அன்பு செய்வதற்கு காதலன் வாராமையால் வழியில்லாமல் இருப்பதை தலைவி நினைத்தாள். குறிஞ்சிப்பாட்டு இதை, “ஆண்கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகு தர” எனக் குறிப்பிடுகிறது


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  கன்றை மறவாது மாலைக் காலத்து கறவை அக்கன்றிடத்துப் படரும் புறவு என்றதனானே நம்மை மறவாது குறித்த காலத்து நம்மிடம் வரவேண்டியவர் வந்திலர்; அவர் அன்பிருந்தவாறு என்னை?  என்பதாம் என்றும்  மலருங் காலத்தைப் பெற்று முல்லை செவ்வி கொண்டது என்றதனானே, அழகு மிகுதற்கேற்ற குறித்த காலத்தில் செவ்வி அழிவோமாயினோம்; எவ்வாறு உய்குவோம் என்பதாம் என்று பொருளுரைத்து இவ்விரண்டையும் இறைச்சிகள் என வரையறுக்கிறார். 


முல்லை, பெண்கள் தங்கள் கற்பின் அடையாளமாகச் சூடும் மலராகும். குறுந்தொகை 162 ஆவது பாடல் “முல்லை வாழியோ முல்லை நீ, நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை” என முல்லைப் பூவை வாழ்த்துகிறது. இப்பாடலில் தலைவி முல்லை சூடப்படாமல் கழிகிறது என நினைக்கிறாள். முல்லையின் வெண்ணிற மலர்கள் விண்மீன்களாகவும் செம்புலம், செக்கார் வானாகவும் தோன்ற அங்கும் கார் பருவக் காட்சியே தலைவிக்குத் தெரிகிறது.  தோழி, முல்லை வான் பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று, நான் உய்யேன் என்று தலைவி கூறுகிறாள்; இது இப்பாடலில் மிக அழகான வரி. 


வான் பூ என்றால் வென்ணிற மலர்; பாசிலை முல்லை ஆசு இல் - என்பது அப்பழுக்கற்ற முல்லை எனப் பொருள்தரும். போல்வல் என்பது உரையசை -ஒப்பில் போலி, யானே என்பதில் ஏகாரம் அசைநிலை. 

—-