Tuesday, August 30, 2011

ஒரு முக்கிய அறிவிப்பு

என் வலிக்கு நன்றி கெட்ட வேட்டை நாயென்று பெயர். காலம், செயலின்மை, பைத்திய தருணங்கள் என எல்லாவற்றையும் இரையாகக் கொடுத்த பின்னும் எதிர்பாராத சமயத்தில் என் ஈரக்குலையைக் கடித்துக் குதற காத்திருக்கும். கண்கள் ரத்த வெறியில் மின்னும். குழைவாக என் முகத்தை நக்கும்போதும் குதறலின் எதிர்பார்ப்பில் அது உன்மத்தம் அடைவதை நான் அறிவேன். என்னை விட்டுவிடேன் என்று கால்பிடித்து இறைஞ்சும்போதெல்லாம் அதன் உடல் இன்பத்தில் சிலிர்ப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஐயன்மீர், தேவரீர், பரிசுத்த பிதாவே, நான் என்ன செய்தேன், நான் என்ன செய்தேன் நீ என்னையே காத்திருக்கும்படி நான் என்ன செய்தேன் என்றெல்லாம் தண்டலிட்டு அரற்றியிருக்கிறேன். குழந்தமை மீண்ட அபூர்வ தருணம் சமீபத்தில்தான் அருட்கொடையாய் வாய்த்தது. அந்த நாய் என்னை ஆசையாய் நக்கியபோது ஒரு மென் புன்னகையோடு நிதானமாய் அருவாள்மணையால் அதன் வாலை ஒட்ட நறுக்கிவிட்டேன். குருதி வழியும் புட்டத்தை உருட்டியபடி தூர விலகி ஓடியபோது அது எழுப்பிய ஓலம் என்னை இனிதே நிறைத்திருக்கிறது.

No comments: