Saturday, December 17, 2011

கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி


கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி 




கவிஞர் விக்கிரமாதித்யனை நான் முதன் முதலில் 1985இல் சென்னையில் இலக்கு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த எழுபதுகளில் கலை இலக்கியம் என்ற சிறுபத்திரிக்கை கூட்டத்தில் சந்தித்தேன். திருச்சியில் என் நண்பர்கள் ரமேஷ்குமார், செந்தில், மனோகர் நடத்திய ராகம் இதழில் ஸில்வியா என்ற புனைபெயரில் நான் எழுதிய ஆறு சிறுகதைகள் பிரசுரமாயிருந்தன. என்னுடைய ஐந்து கதைகளுக்குப் பிறகு ஆறாவது இதழில் என் கதையோடு சாரு நிவேதிதாவின் ‘கிரிக்கெட்டை முன் வைத்து புத்தி ஜீவிகளுக்கு சொல்லிக்கொண்டது’ கதையும், தமிழவனின் சிறுகதையும் பிரசுரமாகியிருந்தது. நானும் ராகம் ஆசிரியர் குழுவில் இருந்தேன், விமர்சன கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என என்னுடைய பல எழுத்துக்களும் பிரசுரமாயிருந்தன. 
இலக்கு கூட்டம்தான் நான் பார்வையாளனாக, மாணவனாக, இளம் எழுத்தாளனாக பங்கேற்கும் முதல் கூட்டம். திருவல்லிக்கேணியில் ஏதோ ஒரு மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. சி.சு.செல்லப்பாவின் கட்டுரை முதல் அமர்வில் முதல் கட்டுரை. சி.சு.செல்லப்பாவின் குரல் அடைத்துக்கொண்டிருந்தது; கர கரவென்று என்ன வாசிக்கிறார் என்றே யாருக்கும் பிடிபடவில்லை. விமலாதித்த மாமல்லன் எழுந்துபோய் செல்லப்பா நான் உங்கள் கட்டுரையை வாசிக்கிறேனே என்றார். செல்லப்பா நொடியில் அதை மறுத்துவிட்டார். கரகர லொட லொடா வென தொடர்ந்து வாசித்தார். சாரு நிவேதிதா துள்ளி எழுந்துபோய் மண்டபத்தின் வாசற்கதவை சுவரில் டொம் டொம் என்று அடித்தார். சாரு கதவை சுவரில் அடிக்க அடிக்க செல்லப்பா குரலை அதற்கு நிகராய் உயர்த்தி கர கர லொட லொடாவைத் தொடர்ந்தார். ஒன்றுமே நடக்காதது போல கூட்டத்தினர் செல்லப்பாவினை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். புதியவனான நான் வெல வெலத்துபோய் பக்கத்து இருக்கையில் பெரிய கருந்தாடியுடன், வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த விக்கிரமாதித்யனிடம் அறிமுகம் செய்துகொண்டேன். விக்கிரமாத்தியனிடம் இப்படி கலாட்டா செய்கிறாரே பெரியவரை சாரு என்றேன் பம்மி பம்மி. நானும் மாமல்லனும் பண்ணாத கலாட்டாவா இது என்ன கலாட்டா என்றார் நம்பி.
பின்னர் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு குற்றாலம் கவிதைப்பட்டறையில் நான் வாசித்த கட்டுரையைத் தொடர்ந்து பெரியவர் தருமு சிவராமு என்ற பிரமிளுக்கும் அமுல்பேபி எனக்கும் ஏற்பட்ட வாதம் குரல் உயர்த்திய வாய்ச்சண்டையாயிற்று. மறு நாள் அதிகாலை நான் தங்கியிருந்த விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்தார் விக்கிரமாதித்யன் நம்பி,’ டேய் பேராசிரியரே உனக்கு தருமு சிவராம் யாரென்று தெரியுமாடா‘ என்று கத்தியபடியே.  இவருக்கு எப்படி நெல்லை கல்லூரியொன்றில் நான் ஆசிரியராக பணியில் சேர்ந்தது தெரியும்  என்று அனுமானிப்பதற்குள் வசை மேல் வசை காற்றை நிரப்பியது. 
கவிதைப் பட்டறை முடிந்து ஓரிரு நாட்கள் சென்றிருக்கும். கல்லூரியில் இருந்தேன். வாட்ச்மேன் வகுப்பிலிருந்த என்னிடம் யாரோ ஒரு சாமியார் உங்களை உடனடியாகப் பார்க்கவேண்டும் என்கிறார், வாசலில் நிற்கிறார் கொஞ்சம் வந்து பார்த்துவிட்டு போங்களேன் என்றார். வகுப்பை பாதியில் விட்டுவிட்டு வாசலுக்குப் போய் பார்த்தால் நம்பி ஒரு தோளில் டிரங்குப்பெட்டியும், கையில் வேட்டி நுனியுமாய் அடங்கிய புயல் போல நின்றிருந்தார். கூட்டிக்கொண்டு போய் துறை அலுவலகத்தில் உட்காரவைத்தேன். வகுப்பு முடிந்து திரும்ப துறைக்கு வந்தபோது நம்பி எல்லோருக்கும் கவிஞராய் அறிமுகமாயிருந்தார். கால் மேல் கால் போட்டபடி ஸ்டைலாய் சிகரெட் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்; என்னிடம் எனக்கு சன்மானம் வேண்டுமே என்றார். என்னிடத்தில் இப்போது காசில்லை கவிதை பற்றி ஒரு உரையாற்றுங்களேன் கல்லூரியில் சன்மானம் வாங்கித் தருகிறேன் என்றேன். கல்லூரி நிர்வாகம் கவிதை வேண்டாம் வேறு ஏதாவது பொருளில் பேசட்டும் என்று அனுமதி கொடுத்தது. அன்றைக்கு மதியமே நம்பி ‘தற்கால பத்திரிக்கைத் தமிழ்’ என்ற பொருளில் பேருரை ஆற்றுவது என்று ஏற்பாடாயிற்று. 
சுமார் அறுநூறு மாணவர்கள் கூடியிருந்த அரங்கில் நம்பியை அறிமுகப்படுத்தும்போது இன்றைய தமிழ் நவீன கவிதையில் முக்கியமான முதல் பத்து கவிஞர்களைச் சொல்லவேண்டுமென்றால் அதில் விக்கிரமாதித்யனின் பெயர் ஒன்றாகும் என்றேன். நம்பி என்னை பூனை போல தாடியை நீவிவிட்டபடியே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார்.  
அன்றைக்கு நம்பி ஆற்றிய பேருரை நான் வாழ்நாளிலேயே மறக்க முடியாத உரையாகும். பின்னாட்களில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் சரி, வெளியிடங்களிலும் சரி எத்தனையோ புகழ் வாய்ந்த கவிஞர்கள், தத்துவவாதிகள், இலக்கியவாதிகளின் உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் நம்பியின் உரைக்கு நிகரான ஒன்றினை இன்று வரை கேட்டதில்லை. அலட்சியமாக, உட்கார்ந்தபடியே, இயல்பான பேச்சுத் தமிழில்தான் நம்பி பேசினார். உண்மையின் ஒளிர்வு என்றால் என்ன என்று அந்தப் பேச்சில்தான் அன்றைக்கு அறிந்தேன்.  மிகை அலங்காரங்களும்  , ஜோடனைகளும் துறந்த நவீன கவிதைக்கு உதாரணமாய் நகுலனின் கவிதை வரிகளை மேற்கோள்காட்டி அவர் பேச்சு ஆரம்பித்தது. நவீன கவிதையை மட்டுமே எழுதுபவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வேலைகள் எதுவும் இல்லாதபடியால் அச்சுக்கோர்ப்பவர்களாகவும், மெய்ப்பு திருத்துபவர்களாகவும் செய்தியாளர்களாகவும் மட்டுமே பத்திரிக்கைத் துறையில் சேர வேண்டிய நிர்ப்பந்தத்தைக் குறிப்பிட்டு அந்தப் பத்திரிக்கைகளில் தான் நம்பும் நவீன தமிழ் கவிதையின் மொழிக்கு நேரெதிரான ஆவேசக்கூச்சல் மொழியினை தமிழ் பொது வெளி உரை நடையாக உருவாக்குவதற்கும், தான் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியே பத்திரிக்கை செய்திகளை உருவாக்க, எழுத நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Investigative journalism என்ற பெயரில் பல ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டு, பிரசித்தி பெற்றுவந்த காலம் அது. பல பத்திரிக்கைகளின் ஆரம்ப நிலைகளில் அவற்றின் உரை நடை உருவாக்கத்தில் தானும், அவர் நண்பர் துரை என்ற வித்யாஷங்கரும் பங்கேற்றதைச் சொல்லிய நம்பி, விஜய டி.ராஜேந்தரின் அடுக்கு மொழி, திரைப்பட பாடல்களை செய்தித்தலைப்புகளாய் வைப்பது, போலியான வேடிக்கையான தனித்தமிழ் என்று கலந்துகட்டி பொதுவெளியின் தமிழ் உரை நடை உருவானதாக மேலும் சொன்னார். அரசியல் தலைவி ஒருவரின் செயல்பாட்டினைக்குறிக்க ‘சண்டி ராணியின் திக்குமுக்கு தக்குத்தாளம்’ என்ற செய்தித் தலைப்பாய் வைத்தது, எம் எல் ஏ ஒருவரின் ஊழலைச் சொல்ல ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ பாடல் வரியினைப் பயன்படுத்தியது என்பது போன்ற பல உதாரணங்களைக் கொடுத்து பத்திரிக்கை உரை நடையின் உருவாக்கத்தினை விவரித்தார். ‘சிக்கலை இடியாப்ப சிக்கலாய் மாற்றினார்’, ‘தமாசு’, ‘செம’, ‘ஆப்பு’, ‘சூப்பர்’, ஆகிய பிரயோகங்கள், ‘ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும்ஜா‘ போன்ற ஒலிகள் ஆகியற்றை மட்டுமே பயன்படுத்தி உருவாகிற பொது வெளியின் பத்திரிக்கைத் தமிழ் உரை நடை சிந்தனையை எப்படி மழுங்கடிக்கிறது, மொழி நுட்பம் அறியாத பயனாளர்களின் மொழி உபயோகத்தை எப்படிக் குறுக்குகிறது என்றும் நம்பி விளக்கிச் சொன்னார். வியப்பு, ஆச்சரியம், திகில், வெறுப்பு, ஆவேசம் ஆகிய உணர்ச்சிகள் அனைத்தும் ஒரு இருபது வார்த்தைகளில் பத்திரிக்கைத் தமிழ் உரை நடையில் குறுகிவிடுவதையும் அவற்றின் பயன்பாட்டிற்கு பழக்கப்பட்டு விடுபவர்களுக்கு தங்களின் சுய வாழ்பனுபவங்களை வேறுவகையில் வார்த்தைப்படுத்த முடியாமல் வாழ் நாள் முழுக்க பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் நம்பி எடுத்துச் சொன்னார்.
விதிவசம் என்று இந்த மாதிரியான பத்திரிக்கைகளில் வேலை செய்வது தனக்கு ஏற்படுத்தும் தாங்கவியலா மன உளைச்சலே தன்னைக் குடியை நோக்கித் தள்ளுவதாகவும் சொன்ன நம்பி குடிப்பதற்கு ‘கவர்’ தருகிற அரசியல்வாதிக்கு ஏற்ப பத்திரிக்கையாளனான தன் செய்தியின் நிறம் எப்படி மாறும் என்றும் தொடர்ந்தார். பாவ சங்கீர்த்தனமெனவும், வாக்குமூலமெனவும் அப்பட்டமாக எந்த ஒளிவு மறைவு இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த விக்கிரமாதித்யனின் உரை மாணவர்களை உலுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பகட்டில்லை, ரொமாண்டிசிசம் இல்லை, தன்னுடைய இமேஜ் பற்றிய கவலையில்லை என்று பேசிய விக்கிரமாதித்யன் நம்பி எவ்வளவு உயரிய கலைஞன் என்று அன்று நான் கண்டுகொண்டேன்; என் தந்தைக்கு நிகரான ஸ்தானத்தோடு அவருக்கும் எனக்குமிடையே நட்பு வேரூன்றியது.
உரை முடிந்த பிறகு கல்லூரி கொடுத்த சன்மானத்தோடு அவரை தங்கும் விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன். எங்கள் வீடு நெல்லையில் அப்போது சிந்துபூந்துறையில் இருந்தது. இரவு மணி ஒன்றிருக்கும். எங்கள் வீட்டின் முன் தெருவில் ஏகமாய் சத்தம். தூக்கம் கலைந்து மாடி பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தேன். நம்பி நன்றாகக்குடித்துவிட்டு தெருவில் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். ‘டேய் பேராசிரியப் புடுங்கி, வெளியே வாடா’ போன்ற வாசகங்களோடு  கடுமையான கெட்ட வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து சரமாரியாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.  வேட்டி இடுப்பிலிருந்து நழுவிக்கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் நம்பி?’ என்றேன். ‘ஐந்தாவது நபர் யாருடா புண்டே?’ என்றார். எந்த ஐந்தாவது நபர் என்று தலையும் புரியாமல் காலும் புரியாமல் தூக்கக் கலக்கத்தோடேயே கீழே இறங்கி தெருவுக்கு வந்தேன். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், விக்கிரமாத்தியன் ஆகிய நான்கு கவிஞர்கள்தானே, ஐந்தாவது நபர் யாரென்று நான் மதியம் -முதல் பத்து கவிஞர்களில் ஒருவர் என்று- அவரைப் பற்றிய அறிமுக உரையில் சொன்னதைக் குறிப்பிட்டு நம்பி கேட்கிறார் என்று நான் புரிந்துகொள்ளவே அரைமணி நேரம் ஆகிவிட்டது.
இன்னும் குடிக்க வேண்டும் என்று நம்பி படுத்த அவரோடு நான் புறப்பட்டுச் சென்றேன். இரவு இரண்டு மணிக்கு பாக்கெட் சாராயக் கடை கூட மூடிவிட்டது. நம்பி எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பலகீனத்திலும் குடியிலும் உடல் தள்ளாடிக்கொண்டிருந்தது. அவர் பண்ணிய கலாட்டாவில் அவசரமாகச் சட்டையைப்போட்டுக்கொண்டு கிளம்பியதில் காசு வேறு எடுத்து வரவில்லை. கல்லூரியில் வாங்கிய சன்மானத்தை அவர் ஏற்கனவே தீர்த்து விட்டிருந்தார். திருநெல்வேலி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் நம்பிக்குத் தெரிந்த டீக்கடை ஒன்றிருந்தது. அங்கே போய் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கக் கிளம்பினோம். அந்த டீக்கடையில் நல்ல வேளையாக நம்பி நண்பர் அங்கே இருந்தார்; ஆனால் கடையில் ஒரே ஒரு சுண்டல் பொட்டலம்தான் இருந்தது. அதை தானமாய் வாங்கி, பிரித்து முதல் கவளத்தை வாயில் போடப்போனபோது ஒரு பிச்சைக்காரர் ஐயா பசிக்குது என்று வந்து நின்றார். நம்பி தன் கையிலிருந்ததை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டார். கைத்தாங்கலாய் நம்பியை அவர் விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன். 


பசியிலும் போதையிலும் தரையில் படுத்து தூங்கிப்போயிருக்கிறார்.மறு நாள் நம்பி தங்கியிருந்த விடுதிக்கு நான் போனபோது நம்பியின் செருப்பு, கண்ணாடி, டிரங்குப்பெட்டியிலிருந்தவை எல்லாம் களவு போயிருந்தது. அவர் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து தென்காசிக்கு பஸ் ஏற்றிவிட்டேன். பஸ் புறப்படும்போது ‘போயிட்டு வாரேன் பிள்ளைவாள்’ என்று நம்பி என்னைப் பார்த்து கத்தியபோது பஸ்ஸே என்னைப் பார்த்து சிரித்ததுபோல பிரம்மை தட்டியது.
பிறகு நம்பியும் நானும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டானது. சந்திக்கவில்லையென்றாலும் என்னையும் வண்ணதாசனையும் ஃபோனிலாவது அழைத்து நீங்கள் கலைஞனில்லை என்று சொல்லாவிட்டால் நம்பிக்கு பல குடி இரவுகள் நிறைவு பெற்றதாகாது. வந்து கலாட்டா செய்யும்போது ஏண்டா இவருடன் நட்பாக இருக்கிறோம் என்று மனம் கலங்கும். பல மாதங்கள் காணாவிட்டால் நம்பி எங்கே எங்கே என்று மனம் தேடும். 
சொல்லவொணா துயரத்திற்கு ஆட்பட்டு தமிழில் எழுதாமல் தனித்திருந்த காலங்களில் என்னைத் தேடி வரும் வெகு சில நண்பர்களில் நம்பி ஒருவராயிருந்தார். நேரடியாக என்றில்லாமல் ஜோதிடம், பரிகார வழிபாடு என்று ஆறுதலாய் ஏதாவது சொல்லிவிட்டுப்போவார். நான் கலைஞனில்லைன்றாலும் எழுத வேண்டும் என்பதை ஏதோ ஒரு வகையில் சொல்லிப்போவார். துக்க காலத்தின்போதும், முன்பும், பின்பும் அறுபடாத நட்பு அவருடன் மட்டுமே எனக்கு இருந்திருக்கிறது.
ஒரு நல்ல வசதியான வாழ்க்கை அமைந்திருந்தால் கம்பீரமும் தேஜஸும் நிறைந்த கவிஞராக அல்லவா விக்கிரமாதித்யன் நம்பி புகழ் பெற்றிருப்பார் என நான் நினைக்காத சந்தர்ப்பங்களே இல்லை. ‘நான் கடவுள்’ படத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது என்னதான் சினிமா என்றாலும், என்னதான் நடிப்பு என்றாலும் நம்பியை பிச்சைக்காரர் பாத்திரத்தில் பார்க்க என்னால் முடியவேயில்லை; ஆங்காரமான துக்கம் என் தொண்டையை அடைக்க கண்களில் நீர் மல்குவதை தவிர்க்கவே முடியவில்லை.
மாமல்லனோடு டிவிட்டர், ஃபேஸ்புக் கர்புர் உரையாடலின்போது நம்பியின் பேருரை ஞாபகம் வந்து இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். எழுத்தின் போக்கில் எங்கேயோ போய்விட்டது கட்டுரை.
சொல்லவந்தது இரண்டு விஷயங்கள்: 
ஒன்று நம்பிக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இருக்கிறது. நான் கவிதை எழுதிவிட்டேனென்றால், என் கவிதைகளும் அவர் பார்வையில் கவிதைகளாகத் தேறிவிட்டால் அவர் எனக்கு ஒரு பவுனில் மோதிரம் போடவேண்டும். ஷங்கர் ராம சுப்பிரமணியன் என் தளத்திலுள்ள கவிதைகள் சிலவற்றை நம்பியிடம் வாசித்துக்காட்டியதாக என்னிடம் சொன்னார். சமீபத்தில் என்னிடம் ஃபோனில் பேசிய நம்பியும் மோதிரம் போட ஒப்புக்கொண்டுவிட்டார். என் கவிதைத் தொகுதி மின் பதிப்பாய் வெளிவர இருக்கையில் இது எனக்கு இளமையை மீட்டெடுத்ததன் சந்தோஷமாயிற்று.
இரண்டு விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய எந்த இலக்கிய கட்டுரையிலும் சரி, கதையிலும் சரி, கவிதைகளிலும் சரி எனக்குத் தெரிந்தவரை ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளின் நடையைப் பயன்படுத்தியதில்லை.

7 comments:

ஜமாலன் said...

நல்ல அனுபவமாக இருந்தது. நள்ளிரவில் உங்களோடு நானும் வந்ததைப்போல ஒரு பிம்பம் எனக்குள் உருவானது. விக்ரமாதித்தியனை நான் பார்த்ததில்லை. பழக்கமும் இல்லை. என்றாலும், அவரது ஆகாசநீலநிறம் தொகுப்பு பாரதி நவகவி வரிசையில் நான் காசு கொடுத்து அன்னத்திலிருந்து தபாலில் வரவழைத்த முதல் புத்தகம். அப்போ எனக்கு 16 அல்லது 17 வயது. விக்ரமாதியனின் கவிதைகளை பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி உள்ளேன். இக்கட்டுரை அவரை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. “குடித்தே அழிந்தாலும் கலைஞன்”தான் அவர்.

Anonymous said...

இந்த முறை ஐயா விக்ரமாதித்தன் நம்பி அவர்களை, சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன். கடந்த புத்தக கண்காட்சியில் அவரை சந்தித்த பொழுது, நீங்கள் குறிப்பிட்ட மேலே குறிப்பிட்ட அதே நிலையில் இருந்தார். ஆனால் அந்த நிலை அவருடைய கவிதைகளின் ஆளுமையை எந்த விதத்திலும் குறைப்பதில்லை.

நாஞ்சில் சுதீந்த்ரர்

ராம்ஜி_யாஹூ said...

மிக அரிய ருசியான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தமிழ் இலக்கணத்தை முறைப்படி பயின்ற கவிஞர்களுள் நம்பியும் ஒருவர் என எண்ணுகிறேன்.
அவரின் இலக்கணப் புலமை பற்றி சந்தோஷமான நினைவுகள் இருந்தால் பகிரவும்

manjoorraja said...

என்றாவது ஒருநாள் சந்திக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். நல்லதொரு பகிர்வு. நன்றி.

Anonymous said...

nambiyudanana ungal anubavam oru nalla kaviganai samuthayam purakkanippathai ninaithal kastamaka irukkirathu. barathiyin kavithaikalai patri pesamal avar kanja adippar endru kutram solliya panbattu kavalarkal ulla nadu idhu. Avan savukke 13 makkal vantha ulagam ithu. kavingaral valum kalangalil arathikkappaduvathillai. Kakkaiyin kuchalukku mun kuyilkalin sangitham edupaduvathillai. Ragam Ramesh Kumar.

பொன். வாசுதேவன் said...

எண்பதுகளில் கலை இலக்கியம் முன்றில் பத்திரிகை மா,அரங்கநாதனால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜுலை 12, 12, 14 - 1990ல் கோபாலபுரம் காதி கிராமோத்யோக் பவன் அரங்கில் நடந்தது. அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். சாருவை முதல் முதலாக சந்தித்தது அங்கேதான். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான முன்றில் மகாதேவனுடன் பலரும் இணைந்து பணிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நானும் ஒருங்கிணைப்பு பணியில் பங்குபெற்றேன். எல்லாரும் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியின் அய்க்கப் அவுசில் தங்கினோம். விக்ரமாதித்யன் உள்ளிட்ட பலரையும் அங்குதான் எனக்கு அறிமுகம். இந்த கூட்டத்தில் ஞானக்கூத்தன் 'கவிதை முன்னும் பின்னும்'என்ற தலைபபில் பேசும்போது விக்ரமாதித்யன் அவரைப் பேசவிடாமல் கேள்வியெழுப்பிவிட்டு வெளியேறினார்.

- பொன்.வாசுதேவன் (அகநாழிகை)

தாஜ் said...

கவிஞர் விக்ரமாதித்தியன் குறித்த உங்களது இலேசான வரிகள் மனதை கனக்க வைத்துவிட்டது.
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல், பிரமிள் மீதான விக்ரமாதித்தியனின் பிரியத்தை நான் அறி வேன். சென்னை ரங்கநாதன் தெருவில், ஓர் காம்லெக்ஸ் மாடியில் இருந்த 'மூன்றில்' பதிப்பகத்தில் வைத்து விக்ரமாதித்தனோடு பலமுறை உரையாடிய வகையில் அதனை நான் அறிவேன்.
-தாஜ்