Wednesday, September 18, 2013

டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டமும் வெற்றியும்

Photo courtesy http://www.survivalinternational.org/tribes/dongria 





ஒடிஷா மாநிலத்தில் நியமகிரி மலைப்பகுதியில் வாழும் டோங்கிரியா கோண்ட் (Dongria Kondh) பழங்குடியினர் தங்கள் மலைகளில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் தாதுவினை வெட்டி எடுக்க திறந்தவெளி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்திய உச்ச நீதி மன்றம் டோங்கிரியா கோண்ட் கிராம சபைகளின் சம்மதமும் அனுமதியும் இல்லாமல் வேதாந்தா தன் சுரங்கத்தை அமைக்க முடியாது என்று இந்த வருடம்  ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது; இந்திய பழங்குடிகளுக்கு இயற்கை வளங்களின் மேல் உள்ள பாரம்பரிய உரிமைகளுக்கு வலு சேர்க்கக்கூடியது; கிராமசபை போன்ற அடிமட்ட ஜனநாயக அமைப்புகளின் மேலாண்மையை உறுதிப்படுத்துவது; இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் மைய வழிகாட்டுதலை வழங்கக்கூடியது. டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டத்துக்கு ஆதரவான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அவ்வளவு எளிதாக இந்த எளிய மக்களுக்குக் கிடைத்துவிடவில்லை.    

திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியினை பேசும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர்  நுட்பம் மிகுந்த பல கலைகளை தங்கள் பாரம்பரியமாகக் கொண்டவர்கள். கழுத்தை நிறைக்கும் உலோக அணிகலன்கள், காதுகளிலும் மூக்கிலும் பல வளையங்கள், நுட்பமான கை வேலைப்பாடு நிறைந்த துணிகள், திரைச் சீலைகள், சுவரோவியங்கள் நிரம்பிய மண் வீடுகள் ஆகியன டோங்கரியா கோண்ட் பழங்குடியினரை எளிதில் அடையாளம் காட்டக்கூடியவை. நியமகிரி மலைச்சரிவுகளில் உள்ள காடுகளில்ராயகாடா, காளஹண்டி, கோராபுட் ஆகிய மாவட்டங்களில் வாழும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். 2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின்படி டோங்கிரியா கோண்ட் மக்களின் எண்ணிக்கை 7952 மட்டுமே. அவர்கள் முற்றிலும் அழிந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதினால் இந்திய அரசியல் சாசனத்தின் ஐந்தாவது ஷெட்யூலின் ஷரத்துக்களின்படி  டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் பாதுக்காக்கப்பட வேண்டியவர்கள்

டோங்கிரியா கோண்ட் மக்கள் நியமகிரி மலைகளையும் அவற்றிலிருந்து உற்பத்தியாகி ஓடிச் செல்லும் நீரோடைகளையும் தங்கள் கடவுளர்களாகக் கருதுவதே அவர்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கிய காரணமாகும். நியமகிரி மலைகளைநியமராஜா’, ‘ஆதி சட்டங்களை இயற்றியவர்என்றும் பூமியைதாரிணிப் பெண்என்றும் அவர்கள் வழிபடுகின்றனர். நியமகிரி மலைகள் இருக்கும் வரையே தங்கள் இனமும் உயிரோடு இருக்கும் என்று உறுதியாக நம்பும் டோங்கிரியா கோண்ட் மக்களின் தலைவர் லாடு சிகாகாஎங்கள் கடவுள்கள் திறந்த வெளியில் இருப்பவர்கள்; அவர்கள் உங்கள் கடவுள்களைப் போல அறைக்குள் பூட்டி வைக்கப் படுபவர்கள் அல்லஎன்று குறிப்பிட்டார். வேதாந்தாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அமைதியான அகிம்சை வழியில் நடத்திச் சென்ற லாடு சிகாகாவும் நியமகிரி மலைகளின் உச்சியில் வாழும் பன்னிரெண்டு கிராம மக்களும் சர்வதேச கவனத்தையும் கவர்ந்தனர். சர்வைவல் இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நிதியும் அறிவுஜீவிகளின் ஆதரவையும் கோரி பிரச்சாரம் மேற்கொண்டது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற படமானஅவதார்படத்தின் கதையைப் போன்றதே டோங்கிரியா கோண்ட் மக்களின் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டம் என்ற பிரச்சாரம் பல வகைகளிலும் இந்த மக்கள் போராட்டத்தினை பிரசித்தி பெறச் செய்தது. ‘அவதார்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரனுக்கு டோங்கிரியா கோண்ட் மக்கள் சார்பில் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மனு அனுப்பப்பட்டது. எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகை யோஹன்னா லும்லெ, நடிகர் மைக்கேல் பாலின் ஆகியோர் டோங்கிரியா கோண்ட் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பிரிட்டிஷ் நாளிதழானதி கார்டியன்நியமகிரி மலை போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது.

பாக்சைட்டைத் தோண்டி எடுப்பதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமலேயே அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை ஒடிஷாவிலுள்ள லஞ்சிகாரில் அமைத்ததிலிருந்தே வேதாந்தா பல விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாகப் பலரும் குற்றஞ் சாட்டி வருகின்றனர். ஒடிஷா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தாவின் லஞ்சிகார் ஆலை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்துவதாக கண்டித்ததுஅம்னெஸ்டி இண்டெர்நேஷனல் வேதாந்தாவின் ஆலையிலிருந்து வெளிவரும் தூசு மக்களின் உடைகளில், பயிர்களில், உணவுகளில் படிவதாகவும் இது மனித உரிமை மீறல் பிரச்சினை என்றும் குற்றம் சாட்டியது. சுற்றுச் சூழல் ஆய்வாளர்களால் வேதாந்தா ஆலை பரிசோதிக்கப்பட்டபோது அதன் லஞ்சிகார் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு வம்ஷதாரா நதியினை கடுமையாக மாசு படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு நியமகிரி மலையில் பாக்சைட் அகழ்ந்தெடுப்பதற்கான திறந்தவெளி சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி கேட்டு வேதாந்தா ஸ்டெர்லைட் தொழில் நிறுவனங்களோடு சேர்ந்து விண்ணப்பித்தபோது அது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் நிராகரிக்கப்பட்டது. மக்களின் ஆதரவினை வேண்டி பல பிரச்சாரங்களை மேற்கொண்ட வேதாந்தா டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் கிராமங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைப்பதாக விளம்பர பேனர்களை அமைத்தது. அந்த பேனர்களெல்லாம் இன்று துருப்பிடித்துக் கிடக்கின்றன.  

2013 ஏப்ரல் மாத உச்ச நீதி மன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து வேதாந்தா சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பன்னிரெண்டு டோங்கிரியா கோண்ட் கிராமங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசாங்கம், மாவோஸ்டுகளினால் வன்முறை நடந்தேறக்கூடும் என்று அச்சம் தெரிவித்து, ஏராளமான போலீஸ் படையையும்  துணை ராணுவப் படையினரையும் நியமகிரி மலைகள் முழுக்கக் குவித்தது. எந்த நேரமும் கலவரம் வெடிக்ககூடும், துப்பாக்கிச்சூடு நிகழக்கூடும் என்ற சூழலில் வாக்களித்த டோங்கிரியா கோண்ட் மக்கள் நூறு சதவீதம் வேதாந்தா பாக்சைட் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர்

வாக்கெடுப்பு நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டாலும் பயமும் பீதியும் நியமகிரி மலைகளில் தொடர்வதாக பங்கஜா சேதி என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார். டோங்கிரியா கோண்ட் மக்களின் துணிகளிலுள்ள கதையாடல்களையும் கைவேலைப்பாடுகளையும் ஆராய்ச்சி செய்து வரும் பங்கஜா சேதி டோங்கிரியா கோண்ட் மக்களின் நியமகிரி மலை நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கலந்து நிற்பதால் அவை மாறவே மாறாது என்றும் நம்பிக்கையூட்டுகின்றார்.

இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்குக்காக, இந்திய கார்ப்பரேட் சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்திற்காக இந்தியத் துணைக்கண்டத்தின் பழங்குடியினர் பெரும் விலை கொடுத்திருக்கின்றனர். அணைகள் அமைப்பதற்காக, கனிமச் சுரங்கங்கள் தோண்டுவதற்காக, மின்சாரம் தயாரிப்பதற்காக தங்கள் காடுகளை, மலைகளை, வசிப்பிடங்களை, பாரம்பரிய உரிமைகளை இழந்து பழங்குடியினர் துரத்தப்பட்டிருக்கின்றனர். தங்கள் மொழிகளை இழந்து, பண்பாட்டு வளங்களை இழந்து தாங்கள் அரசர்களாக ஆண்ட பகுதிக்கு வெகு அருகாமையிலேயே தரித்திரர்களாக இந்தியா முழுவதும் பழங்குடியினர் இன்று வாழ்ந்துவருகின்றனர்
டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்ட வெற்றியும் அதற்கு வழி செய்த உச்ச நீதி மன்ற தீர்ப்பும் இந்தியப் பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்குமான முதல் படிகளாகும்.  







No comments: