Wednesday, November 7, 2012

எஸ்.வி.ராஜதுரைக்கும் கண்டனம்




மனோ என்று நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படும் எஸ்.வி.ராஜதுரை என் அபரிதமான அன்பிற்கும் ஆழமான மரியாதைக்கும் உரிய நண்பர். அவர் துணைவியார் ஷகு என் தாய்க்கு நிகரானவர். 1985இல் நான் பிஹெச்டி ஆய்வு மாணவனாக சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது எஸ்.வி.ஆரின் நட்பு கிடைத்தது. அவர் ‘ரஷ்யப் புரட்சியும் இலக்கிய சாட்சியமும்’ புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த போது பல ரஷ்ய படைப்புகளை மாணவனாக இருந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டு அவரோடு விரிவாக விவாதித்திருக்கிறேன். எஸ்.வி.ஆர் பின்னால் எழுதிய ‘அல்தூசர் ஒரு அறிமுகம்’, ‘கிராம்சி’, ‘ஃபிராங்க்ஃபர்ட் மார்க்சியம்’ ஆகிய நூல்களுக்கான தயாரிப்பின்போதும் அவரோடு பல மூல நூல்களை வாசித்து விவாதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எஸ்.வி.ஆர் நடத்திய ‘இனி’ இதழில் அவரோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். ‘இனி’ இதழ்களில் பல கட்டுரைகளும் ஒரு கதையும் எழுதியிருக்கிறேன். 1996 வாக்கில் தமிழ் இலக்கிய உலகில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்து நான் யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருந்ததில் எஸ்.வி.ஆரோடும் தொடர்பு அறுந்துவிட்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் எஸ்.வி. ஆரை யதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பு கூட அமையவில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் மேல் நான் பேணி வைத்திருக்கும் மிக உயரிய மரியாதையின் நிமித்தமே அவர் ஜெயமோகனுக்கு அனுப்பியிருக்கும் வக்கீல் நோட்டிசைப் படித்தபோது மனம் துணுக்குற்றது. சில தினங்களுக்கு முன்னாலேயே அந்த வக்கீல் நோட்டிசை இணையத்தில் பார்க்க நேர்ந்தது. அது படவடிவாக வெளியிடப்பட்டிருந்ததால் முழுமையாக படிக்க இயலவில்லை. இன்று காலை ஜெயமோகன் அவருடைய தளத்தில் http://www.jeyamohan.in/?p=31578 வெளியிட்டிருந்த எஸ்.வி.ஆரின் வக்கீல் நோட்டீசை தட்டச்சு வடிவத்தில் படித்து, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தரக்குறைவான மொழியைக் கண்டு ஆடிப்போனேன். ஜெயமோகன் சொல்வது போல எஸ்.வி.ஆர் இந்த தரக்குறைவான மொழியை பயன்படுத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. வேறு யாரேனும் எழுதியதில், கடும் கோபத்திலும் விரக்தியிலும், எஸ்.வி.ஆர். கையொப்பமிட்டிருப்பார் என்றே நான் நம்ப விழைகிறேன். அப்படி கொந்தளித்துப் போய் உணர்ச்சிவசப்படக்கூடியவர்தானே மனோ.

இருப்பினும், என் மிக உயரிய அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமான எஸ்.வி.ராஜதுரைக்கு, ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்ட தரக்குறைவாக எழுதப்பட்ட வக்கீல் நோட்டீசில் கையொப்பமிட்டதற்காக என் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments: