Friday, November 9, 2012

மீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன்


எஸ்.வி.ராஜதுரை அனுப்பிய வக்கீல் நோட்டீசை முன் வைத்தே  தன் வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்லும் ஜெயமோகன் எஸ்.வி.ராஜதுரையை ‘ஆளுமையின் வீழ்ச்சி’, ‘இருளான பகுதியுடையவர்’, ‘வன்மம் உடையவர்’  என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். எஸ்.வி.ராஜதுரை ஜெயமோகனுக்கு எழுதிய தெளிவான மறுப்பிற்கு எந்த பதிலும் ஜெயமோகனிடமிருந்து இல்லை.

அன்னிய நிதிக்கும் கருத்துலகச் சூழலுக்கும் உள்ள உறவைப் பற்றி சிந்திக்கச் சொல்லும் ஜெயமோகன் “ அயோத்திதாசர் சிந்தனைகள்” (1999) என்று ஞான அலோசியசால் தொகுக்கப்பட்டு, ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றுக்கொண்டிருந்த பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்தினால் வெளியிடப்பட்ட புத்தகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?  அயோத்திதாசரின் சிந்தனைகள் அதற்கு முன் முழுமையாகத் தொகுக்கப்பட்டு ஏன் புத்தகமாக வெளியிடப்படவில்லை? ஒரு கிறித்தவ  அன்னிய நிதி பெறுகிற நிறுவனம்தானே அயோத்திதாசரின் சிந்தனைகளை பதிப்பித்தது? கிறித்தவ அன்னிய நிதி பெறுகிற நிறுவனம் பதிப்பித்தது என்ற செய்தி அயோத்திதாசரை முதன்மையான சிந்தனையாளர் என்று மதிப்பிடவும் அவருடைய சிந்தனைகளைப் பற்றி உரையாற்றவும் ஜெயமோகனுக்கு எந்தவிதத்தில் இடையூறாக அல்லது உறுதுணையாக இருந்தது? ஜெயமோகன் முன்வந்து விளக்கவேண்டும்.

அதுதான் போகட்டும். எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய Towards a Non Brahmin Millennium: From Iyoothee Thass to Periyar என்ற நூலில் அயோத்திதாசரைப் பற்றி எஸ்விஆரும், வ.கீதாவும் சொன்ன கருத்துக்களில் இருந்து மாறுபட்ட என்ன கருத்தினை ஜெயமோகன் தன் அயோத்திதாசர் உரையில் சொல்லிவிட்டார்? வ.கீதாவும் எஸ்விஆரும் கல்விப்புல கறார் மொழியில் சொன்னதை தன் பாணியில் மிகையுணர்ச்சி கூடிய சினிமா பாணி நாடகீயமாக்கியதைத் தவிர ஜெயமோகனின் கருத்துக்கள் எந்த விதத்திலும் மாறுபடவில்லை. ஜெயமோகனின் கருத்திலிருந்து மாறுபடாத கருத்தினைக் கொண்ட இன்னொரு நூல் எப்படி வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் எழுதியதாலேயே, கிறித்துவ மதத்தைப் பரப்புகிறதும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சீரழிக்கும் ஏகாதிபத்திய நோக்கத்தைக் கொண்டதும், இந்தியப் பண்பாடு, இந்திய தேசியம் ஆகியவற்றை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதுமாய் மாறிவிடும்? இந்திய ஞான மரபிற்குத்தான் வெளிச்சம்.

சிற்றிதழ்ச் சூழலில் புழங்கி வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை மூவரும் கருத்தொருமித்த இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்கள்; செயல்பாட்டாளர்கள். இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் மாறுபாடான கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவோ வேறு வேறான நோக்கங்கள் கொண்டவர்களாகவோ எந்தப் பதிவுமே இல்லை. எஸ்.என்.நாகராஜனை தமிழின் முதன்மையான சிந்தனையாளராகக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். சந்தோஷம். கோவை ஞானியே தர்மசங்கடத்தில் நெளியும்படி தன் ஆசான், ஆசான் என பலமுறை குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஆனால் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோரின் கருத்துலகிலிருந்து எந்த மாறுபாடும் இல்லாத எஸ்.வி.ராஜதுரை மட்டும் ஜெயமோகனுக்கு எப்படி வில்லனாகிவிட்டார்? இந்திய ஆன்மீக மரபின் உள்ளொளிபட்டுதான் நாம் அறியமுடியும் போல.

எஸ்விஆரின் வக்கீல் நோட்டீசுக்குப்பின் ஜெயமோகன் எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு என்று பதிவு எழுதியதை நான் மனதிற்குள் பாராட்டினேன். அதே பதிவில் இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ், என்ற  கார்ல் மார்க்ஸின் சிந்தனை வளர்ச்சியையும்  பிரிவையும் கூறும் அல்தூசர் கருத்தினை ஜெயமோகன் தன் வாசகருக்கு ஓரிரு வரிகளில் விளக்குவதையும் ஆச்சரியத்துடன் கவனித்தேன். எஸ்விஆரின் “அல்தூசர் ஒரு அறிமுகம்” நூல் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோர் விரும்பும் விதத்தில் Humanist Marxist perspective இல் எழுதப்பட்டது. அது ஜெயமோகனுக்கு தெரியவில்லையா இல்லை தெரிந்தும் மறைக்கிறாரா?

அந்த அளவுக்கு நுட்பமாக விளக்கமுடியாத நிலையில் வாசகர்கள் இருப்பார்களென்றால் அவர்களிடம்  போய் ஆளுமையின் வீழ்ச்சி என்று இன்னொரு எழுத்தாளரைப் பற்றி எழுதுவது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும்? அன்னாகரீனாவையே இப்போதுதான் பல நாட்களாக சிரமப்பட்டு படித்ததாய் ஃபேஸ்புக் நிலைத்தகவல் எழுதும் ஜெயமோகனின் பிரதம வாசகர் அரங்கசாமி நூறு ரஷ்ய படைப்புகளுக்கு மேல் ஆராயும் ‘ரஷ்ய புரட்சியும் இலக்கிய சாட்சியமும்’ எழுதிய ராஜதுரையைப் பற்றி “ங்கொய்யால் நாத்திகத்த பரப்ப ஏன்யா கிருத்துவ மதப்பரப்பு ஏகாதியபத்ய நிறுவனத்தோடு கூட்டுக்கிற கேள்விக்கு பதிலே வரமாட்டங்குதே?# WACC#எஸ்விஆர்” என்று டிவிட்டரில் எழுதுகிறார். பார்க்க: ஸ்கிரீன்ஷாட்







கண்ணில் பட்டது இப்படி ஒன்று. இப்படி எத்தனை பேர் என்னென்னவிதமாக டிவீட்டினார்களோ.


மீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன் என்பதைத் தவிர சொல்வதற்கேதுமில்லை.

1 comment:

சீனி மோகன் said...

நானும் ஒரு மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். அரங்கசாமிக்கு பின் தொடரும் நிழல் கொடுத்து ஜெயமோகனை வாசிக்கச் சொல்லி அவர் அதை வாசித்து...... பின், தொடரும் நிழலாக மாறினார்.