Saturday, April 19, 2025

எம்.டி. முத்துக்குமாரசாமியின் "ரோஜாமொக்குக் கவிதைகள்” பற்றி கவிஞர் மா.காளிதாஸ்

 





"ரோஜாமொக்குக் கவிதைகள்” எம்.டி. முத்துக்குமாரசாமி


முன்னட்டை ஓவியம்: புல்லாங்குழல் வாசிப்பவர் -  கே. முரளீதரன் 


உள்பக்க கோட்டுச்சித்திரங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அட்டை வடிவமைப்பு: ஆர்.சி.மதிராஜ் பக்கங்கள் 260 விலை ரூ. 380 தமிழ்வெளி 


தொடர்புக்கு: +91 9094005600

-----


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.


- குறள் எண்: 645


எங்கு பார்த்தாலும் சொற்கள் தான். மௌனம் கூட, நன்றாகக் கெட்டிப்படுத்தப்பட்டுத் தூக்கி வீசப்பட்ட சொற்களின் கூழ் என்றே தோன்றுகிறது. கறித்துண்டைப் போல நம் மன இடுக்கில் சிக்கிக் கொண்ட சொற்களைத் துழாவித் துழாவி எப்படியாவது வெளியே கொண்டுவந்து விடுகிறோம்.


சொற்கள் நிரம்பிய நம் மனக்காடு, எப்போதும் பசுமையாக இருக்கிறது. அங்கே சிறு ஒலியும் பேரிரைச்சலும் சம விகிதத்தில் எதிரொலிக்கின்றன. சில சமயம் சொற்கள் சருகுகளைப் போல உதிர்கின்றன. மிக அரிதாக, சொற்கள் தன்னைச் சுற்றிக் கூடமைத்துக் கொண்டு, கூட்டுப்புழுவைப் போலத் தொங்கி, அழகான வண்ணத்துப்பூச்சியாக உருமாறி நம் மனவெளியெங்கும் பறக்கின்றன.


பசியோடு நம்மைச் சுற்றிச்சுற்றியே வரும் மனப்புறாவுக்கு, தானியங்களைப் போலச் சில சொற்களைத் தூவுகிறோம். ஆனால் வழக்கம் போல, அதன் குனுகலைச் செவிமடுக்கத் தவறுகிறோம். ஒரே சமயத்தில் நம் மனப்புறா எல்லாத் தானியங்களையும் தின்றுவிடுவதில்லை. ஆனால் அது தானியங்களைக் கொறிக்கும் அழகை எட்ட நின்று யாராவது ரசித்திருக்கிறோமா?


மிக அருகில் நின்று, ஒவ்வொரு சொற்களையும் தானியங்களாகத் தூவிவிட்டதோடு மட்டுமின்றி, மனப்புறா கொறிக்கும் அழகையும் படம்பிடித்துத் தந்துள்ளார், தனது ரோஜாமொக்குக் கவிதைகள் வழி கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமி.


சொற்கள் அவன் வாயில்


சிறு பாம்புகளென நெளிகின்றன


காதலுக்குச் சொற்களில்லை


நெளிவுகள் மாத்திரமே இருக்கின்றன


அவை, ஒருவேளை,


அவ்வப்போது கொத்தக்கூடும்


காதலன் சொல்லப்படாத சொற்களின் அகராதி


தன்னைத் தானே எரித்துக்கொள்ளும் நூலகம்


அவள் அவனுடைய சாம்பல் சொல்லசைகளை


ஜாடிகளில் சேகரிக்கிறாள்


சில ஜாடிகளை


ஒருவேளை என்றும்


என்றுமே இல்லை என்றும்


இப்படி இருக்குமானால் என்றும் பெயரிட்டு


வில்லைகளை ஒட்டுகிறாள்


அவன் அந்த ஜாடிகளில் ஒன்றை


முழுமையாக விழுங்கிவிடுகிறான்


அது அவன் தொண்டையை


இரவு போல அடைத்துக் கொள்கிறது


அவன் சொல்லற்ற ஒலியை எழுப்புவதை


அவள் கேட்கிறாள்


அது அவன் குரலில்


கசந்து வழியும் மொழியாய் இருக்கிறது.


இக்கவிதையில் ‘சொல்’ படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இதுவரை சொல்லப்படாதது. வெறுமனே காதல் கவிதையாக மட்டும் வாசித்து இதை நகர்ந்துவிட முடியாது. ‘தன்னைத் தானே எரித்துக்கொள்ளும் நூலகம்’ என்ற வரியைப் படிக்கும் போது, நம்மை அறியாமலே ‘யாழ் நூலகம்’ எரிக்கப்பட்ட காட்சி கண்முன் வருகிறது. ஒரு நூலகம் எரிந்து போதல் என்பது, ஒரு மாபெரும் வரலாற்றுச் சிதைவு இல்லையா?


‘சாம்பல் சொல்லசைகள்’ என்ற வார்த்தையின் கனத்தை மிகச் சரியாக உள்வாங்க வேண்டும். சொல்லப்பட்ட சொல் எவ்வளவு கொடூரம் மிக்கதாக இருந்தால், எதிராளியின் மனத்தைச் சுட்டுச் சாம்பலாக்கக் கூடியதாக இருக்கும்? அந்தச் சொற்களை அசைபோடுதல், ஒருவேளைக்கானது மட்டுமா? அதன் பொருள் இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா என்ற யூகித்தலில் ஏற்படும் மன உளைச்சல் தாங்காவொண்ணாததல்லவா? மனதுக்குள் சேகரமான கடுஞ்சொற்களை முடிந்தமட்டும் சமாதானப்படுத்தி அழிக்க முயலும் எத்தனத்தை,


அவன் அந்த ஜாடிகளில் ஒன்றை


முழுமையாக விழுங்கிவிடுகிறான்


அது அவன் தொண்டையை


இரவு போல அடைத்துக் கொள்கிறது


என்று காட்சிப்படுத்தும் போது வெளிப்படும் ஆதிக்க மனப்பான்மை ஒருபக்கம் இருந்தாலும், அவனே முழுங்க முயன்றாலும் கூட, அது அவன் தொண்டையில் வெளிச்சமற்ற ‘இரவு போல’ அடர்த்தியாக ‘அடைத்துக் கொள்கிறது’ என்பது இரு மனங்களுக்கு இடையிலான உணர்வின் வெளிப்பாடாக மட்டுமின்றி, கவிஞரே சொல்வது போல், ‘கசந்து வழியும் மொழி’யாகவும் இருக்கிறது தானே?


சொல் நீரில் எழும்


நீரின் நினைவைக் காற்று ஏந்தும்


காற்று ஏந்துவதை வான் சிந்தும்


வான் சிந்தும் சொல்


இவ்வாறாகவே அகம் திரும்பும்.


என இன்னொரு கவிதையில் வரும் ‘சொல்’லை, எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கவிஞரே கற்றுத் தருகிறார்.


இங்கே நீர் என்பது உவகை அல்லது உறுத்தலால் ஏற்படும் கண்ணீர். ஒரு கட்டத்துக்கு மேல் அதுமாதிரியான சொற்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்து, காற்றில் உலர்ந்துவிடும். ஆனால் மேகத்திரள் போல எப்போது வேண்டுமானாலும் அந்தச் சொல்லின் தீவிரத்தை நினைக்கும் போது, மீண்டும் பொழியத் தயாராக இருக்கும். இவ்வாறாக அந்தச் சொல் ஒருபோதும் மடியாமல் உள்ளுக்குள் உழன்று கொண்டே இருக்கும் என்பது தானே நிதர்சனம்?


‘காதறுந்த மதியம்’ கவிதையின் ஊடே வரும்,


-------------------------------


-------------------------------


காதறுந்த மதியங்களைத்


தனக்கென்று குடைகள் ஏதுமில்லாத


குடை ரிப்பேர்காரர் பழுது பார்க்கிறார்.


சொற்களின் முதுகுகளை இழந்தவராக


எந்தச்சொல் எந்தக் குடையை விரிக்கும்


எந்தச்சொல் எந்தக் குடையை மடக்கும்


-----------------------------------


-----------------------------------.


என்ற வரிகளும் கவனம் ஈர்ப்பவை. இங்கே ‘சொல்’லை வாக்குறுதியாகவும், ‘குடை’யை அரசாகவும், குடை ‘பழுது பார்ப்பவனை’ வாக்காளானகவும் பொருத்திப் பார்க்கும் போது, கவிதையின் தளமே முற்றிலும் மாறிவிடுகிறது.


ஒரு கவிதைக்குள், சிறுகதைக்குள், நாவலுக்குள், பத்திக்குள் ஆங்காங்கே பொதிந்து கிடக்கும் சில சொற்களை அதன் முன்னும் பின்னுமாக நகர்த்திக் கூட அல்லது அந்த இடத்தை மட்டும் கூடத் தனித்துப் பொருள் கொள்ளலாம் என்பதற்கு இக்கவிதை மிகச் சிறந்த உதாரணமாகப்படுகிறது.


‘சப்போட்டாவின் கறுப்பு விதைகள்’ கவிதையின் ஊடே வரும் இந்த வரிகளையும் வாசித்துப் பார்ப்போம்:


--------------------------------------


---------------------------------------


உங்களுக்குத் தெரியுமா


சொல்ல முடியாததைச் சொல்வதற்கு


மழைக்கரத்தின் பூமி தொடா


நிராசை அவசியமென்று.


அவரையும் இவரையும் உவரையும் போல


நான் இக்கு வைத்துப் பேசுவதில்லை


---------------------------------------


---------------------------------------


அந்தப் பெண் கூடக் கேட்டார்


மிஸ்டர் சோ அண்ட் சோ


உங்கள் முற்றத்தைத் தவிர


உங்களுக்கு என்ன தெரியும்?


அப்போது அவர் தோல் சீவிய


கனிந்த சப்போட்டா பழத்தைக்


கடித்துச் சாப்பிட்டவாறே


அதன் பளபளக்கும் கறுப்பு விதைகளை


அவரெதிரிலிருந்த சாம்பல் கிண்ணத்தில்


அடுக்கிக் கொண்டிருந்தார்


அதிலொரு விதை


என்னைப் பின்தொடரும்


நாயின் கண் போலவே இருந்தது என


நான் சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.


இப்படிச் சொல்ல நினைத்ததைச்


சொல்லாமல் விட்டுவிடுவதால் தான்


என் பெயர்


எல்லா இடங்களிலும் விட்டுப் போய்விடும்.


அதனால் எனக்குக் கவலை ஒன்றுமில்லை


அடைமழை பெய்யாமல்


அடி மன ஆசை சொல்லாகாதது தானே?


------------------------------------


------------------------------------.


இக்கவிதையில் சிதறிக் கிடக்கும் ‘சொற்கள்’ கிளர்த்தும் உணர்வுகள் எண்ணிலாடங்காதவை.


‘சொல்ல முடியாததைச் சொல்ல முயற்சித்தல்’, ஒவ்வொரு சொல்லிலும் ஒரு ‘க்’ வைத்துப் பேசுதல், தன் வீட்டுக்கு வெளியே என்ன மாதிரியான நகர்மய உலகம் பரந்து கிடக்கிறது என்கிற சிந்தனை துளியுமின்றித் தனக்குள் பேசிக் கொண்டிருத்தல், சொல்ல நினைத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டுப் பின்னர் அதற்காகத் தவித்தல், ஒரு அடைமழை பெய்யுமளவிற்குச் சொற்களை மேகவெடிப்பு போலப் பொழியக் காத்திருத்தல் என எவ்வளவு சொல்கிறது கவிதை!


இந்த உலகில் புதிதாகத் தோன்றும் ஓர் உயிர், இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்கிறது? உயிர் தான் என்றில்லை, எந்தவொரு கருத்தும் தனக்கான இடம் அல்லது முக்கியத்துவத்தைத் தக்க வைப்பதில் எப்படி முனைப்புக் காட்டுகின்றன? இந்த உலகத்தின் நல்லது கெட்டதுகளுக்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் சூட்சுமத்தை எப்படிக் கற்றுக் கொள்கிறது?


எல்லாம் புதியதாகத் தோன்றியவை தானே? பழையதிலிருந்து தோன்றினாலும் அதுவும் கூடப் புதியது தானே? புதியனவற்றை ஏற்பதில் இந்த உலகம் ஏன் முரண்டு பிடிக்கிறது? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பரந்த மனம் இல்லாமல் போவதற்குப் புதியன பற்றிய கற்பிதங்களும், அதனை மதிப்பிழக்கச் செய்வதில் காட்டும் கூடுதல் அக்கறையும் ஒரு காரணமென்றால், அது மிகையில்லை தானே?


கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இந்தக் கவிதை மேற்கண்ட கேள்விகளை என்னுள் எழுப்புவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை:


ரோஜாமொக்கு தன் இதழ்களை இறுக்கி


மூச்சுத் திணறத்


தன் பிறப்பைத்


தானே நிகழ்த்தத் துணிகிறது


காலத்துக்குப் பொறுமையிருப்பதில்லை


பூமி தாகத்துக்கு நீர் அளிப்பதில்லை


ஆகாயம் எதையும் கவனிக்கும் தூரத்திலில்லை


பெருவெடிப்பாய்


ரோஜாமொக்கு இதழ் அவிழ்க்கையில்


அதைச் சுற்றி


அழுக்கும் தூசும் படர்ந்திருக்கிறது


வெடித்து அவிழ்ந்ததன் இலக்கு அறியாமல்


திகைத்திருக்கிறது ரோஜாமொக்கு.


சினம், அமைதி, புரட்சி என ஒடுக்கி வைக்கப்படுகிற யாதொன்றும் கண்டிப்பாகப் ‘பெருவெடிப்பாய்’ வெளிப்பட்டே தீரும். அங்கே ஒரு புகைமண்டலம் எழும்; ஓர் அசுத்தம் முழுவதுமாக நீக்கப்படும்; ஓர் ஒடுக்குமுறை முழுவதுமாகத் துடைத்து எறியப்படும். அங்கே ஒரு புதிய ஆரோக்கியமான மனம் மற்றும் மணம் கமழும் சூழல் உருவாகும் என்பதன் உள்ளர்த்தம் தொனிக்கிறது கவிதையில்.


புதிய ஒவ்வொன்றின் மீதான எதிர்பார்ப்பும் எவ்வாறு மழுங்கடிக்கப்படுகிறது, அதையும் மீறித் தன் இருப்பை நிலைப்படுத்துவதில் உள்ள நியாயத்தை முன்வைக்க ஒவ்வொரு புதியதும் எவ்வாறு போராடுகிறது, போராட்ட காலத்தைச் சந்திக்க விரும்பாதவற்றின் மீது இவ்வுலகு எம்மாதிரியான எதிர்வினையாற்றும் என்பதை,


ரோஜாமொக்கு வெறுமைக்குத்


தன்னை ஒப்புக் கொடுக்கிறது


தான் கேட்க விரும்பும் கேள்வியைக் கேட்காமல்


அதன் மௌனம் இப்போது


இதழ் இதழாய்த் தன் நம்பிக்கையை


உதிர்ப்பதில் இருக்கிறது


காற்றில் உதிர,


பூமி முகம் திருப்பிக் கொள்ள


ஆகாயம் மாற்றமற்று இருக்கிறது,


நல்லது.


அதன் ஒற்றை இதழ் மெதுவாய் உதிர்கையில்


ஒரு கனவு மறக்கப்படுகிறது


மறக்கப்பட்ட கனவு யாருடையதென்று


பல சம்சயங்கள், பல அனுமானங்கள்


தோட்டத்தினுடையது கனவு எனச் சிலரும்


பூமியுடையது எனப் பலரும் வாதிடுவர்.


நிழல்களும் மௌனங்களும் மட்டுமே


ரோஜாமொக்கின் வலிகளுக்குச்


சொந்தம் கொண்டாடும்.


முழுவதும் குறியீடுகளால் ஆன இக்கவிதை, கனவு, தோட்டம், பூமி, ஆகாயம் என அதைச் சுற்றியுள்ளவற்றை மையப்படுத்துவதன் மூலம், ஒரு மொக்கு மலராக மாற்றம் பெற்றபின், காதலியின் தலைக்குச் செல்லும் முன் அது சந்திக்கும் இன்னல்கள் என்ன? பூஜையறைக்கா, கல்யாண மாலைக்கா, அட்சதையுடன் கலக்கப்பட்டு ஆசீர்வாதத்திற்கா? பிணத்தின் தோளுக்கா, அரசியல்வாதியின் தோளுக்கா அல்லது எவராலும் கண்டுகொள்ளப்படாமல் உதிர்ந்துவிடுமா?


அதன் நிறத்தால் ஈர்க்கப்படுமா? வெறுக்கப்படுமா? அதன் மகரந்தம் இன்னொரு மலருக்கு எடுத்துச் செல்லப்படுமா? அந்த ரோஜாமொக்கு, அச்செடியின் முதலா, இறுதியா? ரோஜாமொக்கை மனித வாழ்வோடு ஒப்பிட்டு நோக்கும்போது, சாதி, இன, மொழி, அறிவு ரீதியாக இங்கு நிகழும் ஒடுக்குமுறைகள் அல்லது ஏற்றத்தாழ்வுகளும் இயல்பாகப் பொருந்திப் போகிறது தானே?


சின்னஞ்சிறிய கவிதைகளில் ஜென் தத்துவங்கள் மிளிர்கின்றன. இருத்தல், இன்மை, பேரமைதி, இரைச்சல், புறவுலகு அகவுலகில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எனப் பல்வேறு சிக்கல்களையும் சிக்குண்ட நூல்கண்டு போல நம் கையில் கொடுத்து, நம்மை அதன் சிக்கல்களை விடுவித்துத் தரக்கோரி மன்றாடுகின்றன. அந்த மன்றாட்டு வெகு சுவாரஸ்யமானது. நம் வாழ்வின் ஒவ்வொரு நாளின் சுயத்தையும் நம்மைக் கொண்டே தோலுரிப்பது.


கண்ணாடி தரையில் துப்புகிறது


என் முகத்தின் துண்டுகளை


நான் எதையும்


பொறுக்கிக் கொள்வதில்லை.


..


நான் என் குரலை


உற்றுக் கேட்கிறேன்


அது வேறு ஏதோவொரு


பிம்பத்தின் கதையைச்


சொல்லிக் கொண்டிருக்கிறது.


..


வெற்று மேலங்கி காற்றுக்கு ஆடுகிறது


அதற்கு என் அளவு


ஆனால் அது


என் உடலை வேண்டுவதில்லை.


..


நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன்


என் முதுகுக்குப் பின்னால்


அது தன்னைத் தானே பூட்டிக்கொள்கிறது


கதவில் சாவி கண் சிமிட்டுகிறது.


..


நான் ஆற்றின் கரையிலிருந்து


என் பெயரைக் கூப்பிடுகிறேன்


அது மறுகரையிலிருந்து எதிரொலிக்கிறது


ஆனால் கடந்து வர மறுக்கிறது.


ஒவ்வொரு கவிதைக்குள்ளும் அத்தனை பொருள்கள்! ‘நான்’ உடைபட்டுவிட்டால் இங்கு எல்லாமே சிதறி ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். வேறுபாடுகள், மனக்கசப்புகள், குரோதங்கள், வெற்று ஆரவாரங்கள், புகழ் மயக்கங்கள், பாவ புண்ணியம் குறித்த நிலைப்பாடுகள், வெற்றி-தோல்விகள் இவை எல்லாவற்றுக்கும் நாண், ‘நான்’ தான். இதிலிருந்து விடுபட்டு விட்டால் எல்லாமே சுபம் தான், சுகம் தான். ஆனால் சாதாரண மனித வாழ்வுக்கு அது அவ்வளவு எளிதா என்ன?



கதவு திறந்து தான் இருக்கிறது


நீ தான்


என்றுமே நுழையப் போவதில்லை.


இங்கே கதவெனச் சுட்டப்படுவது எது? நுழைதல் என்பது உள்நுழைதலா? வெளியேறுதலா? நீ என்பது தன்மையா? முன்னிலையா? கதவு ஏன் திறந்தே இருக்கிறது? உன் நுழைவை ஏன் எதிர்பார்க்கிறது?


உறக்கத்தில்


நீ ஒரு கரிய நீரோட்டத்தில்


மிதக்கும் இலையாகிறாய்.


விழிப்பு நிலையில், நாம் என்னவாக நம்மைக் கருதிக் கொள்கிறோம்? பிறரை என்னவாக நாம் மதிக்கிறோம்? உறக்கம் நமக்கு எதிலிருந்து விடுதலை தருகிறது? ஒரு நீரோட்டத்தில் மிதக்கும் இலையாக நாம் உருமாறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம் உறக்கம் வற்றாத ஒரு தொடர் நீரோட்டமாக அமைவது என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை? அந்தக் கொடுப்பினைக்காகத் தானே சிலபோது சில இரவுகளில் நாம் கொட்டக் கொட்ட விழித்திருக்கிறோம்? நம்மைப் போலவே நம்மைப் பின்தொடர்ந்தும் சில இலைகள் மிதந்துவருமெனவும் நம்புகிறோம் தானே?


ஓர் இளம் கொடி, தன்னைத் தன் வாழ்வை நிலைநிறுத்த ஒரு பிடிப்பைத் தேடுகிறது. அது வேலியா, முள்ளா, இன்னொன்றின் தண்டா எது பற்றிய அக்கறையும் அதற்கு இல்லை. அதன் தற்போதைய தேவை படர்தல் ஒன்றே. சுருள்சுருளாக எளிதில் பற்றிக் கொண்டும் விடுகிறது, படர்ந்தும் விடுகிறது.


தன் படர்தல் நிலையானது என அது நம்புகிறது. அதன் நம்பிக்கை வீண்போகாதபடி, பூ பூத்து, காய்த்துத் தொங்கவும் செய்கிறது. அது எத்தனை நாள் நீடிக்குமென்று அதற்குத் தெரியவில்லை. அதற்கு மண்ணின், காற்றின் ஈரப்பதம் பற்றி எந்தக் கவலையும் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகமாகும் போது, தன் நுனி கருகும் போது முதல்முறையாக, அது ‘பற்றறுத்தல்’ குறித்து யோசிக்கிறது.


இந்தப் ‘பற்றறுத்தல்’ நிலை, மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பால் பேதமின்றி ஒருசிறு கணமேனும் மின்னலெனத் தோன்றி மறையத் தான் செய்கிறது. அதுவொரு தொடர் நிகழ்வாகும் போது தான், இரண்டுவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒன்று துறவுநிலை நோக்கி நகர்தல், இன்னொன்று தற்கொலைக்கு முயலுதல்.


ஒருவிதத்தில் சொல்லப்போனால், துறவுநிலை கூட ஒரு தற்கொலை தான். ‘தான்’ என்பதிலிருந்து விடுபடுதல், தன்னை மறத்தல், தனக்கென்று எதுவும் இல்லாதிருத்தல், தன்னை ஒரு தூசியென உணர்தல், பேரமைதியில் மூழ்குதல், எந்த இரைச்சலையும் உள்வாங்காதிருத்தல் இது தான் துறவு எனில், இதுதான் தற்கொலைக்கு முன்பான மனநிலையும்.


இங்கே கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமி அடையாளப்படுத்தும் ‘துறவுநிலை’ பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. நடப்புலகை உருட்டி அல்லது ஒன்றின் மீது குறிபார்த்து மோதச் செய்யும் கோலிக்குண்டைப் போலச் சித்தரிக்கும் விதம் பேரழகு.


துறவியின் யோக தண்டம்


இரண்டு ஆகாயங்களுக்கிடையே நீண்டிருக்கிறது


வேர்கள் மறந்து, வறண்டு, எடையற்று


முதிர்ந்த ஒரு கையிலிருந்து


இன்னொரு இளம் கைகளுக்கு


ஓர் இரகசியம் போல மாற்றிவிடப்படுகிறது.


ஒரு காலத்தில்


அதற்குப் பூமியின் துடிப்பு தெரியும்,


இப்போது அதன் தண்டு


வெற்றுக்குழலாய் இருக்கிறது.


அது பேசும்போது


யாரும் அதைக் கேட்பதில்லை.


அது சிதைந்துவிட்ட கதையொன்றின்


கடைசித் துண்டு.


காற்றாலும் தூசாலும் செதுக்கப்பட்டு


அது யாரேனும் ஒருவர்


தன் பெயரை நினைவுகூரக் காத்திருக்கிறது.


என்கிறார் ‘கிளையின் மௌனம்’ என்ற தலைப்பிலான கவிதையில். இக்கவிதையை வரிக்கு வரிச் சிலாகிக்கலாம்.


எல்லாக் கிளைகளுக்கும் ‘யோக தண்டம்’ ஆகிற சிறப்பு வாய்க்குமா? இதிலேயே ‘யோக தண்டமாக’ வாய்ப்பற்ற கிளைகள், தங்கள் நிலையறிந்து மௌனம் ஆகிவிடுகின்றன. இந்த வெளியே ஓர் அந்தரம் தானே? எனில், யோக தண்டம் இரண்டு ஆகாயங்களுக்கிடையே நீண்டிருப்பது தானே முறை?


எல்லாம் கடந்தது தான் துறவுநிலை. அந்தத் துறவுநிலையையும் இன்னொரு இளம் கைக்குக் கடத்திவிட்டு அங்கிருந்தும் துறவு பேணுதல் என்னவொரு மேம்பட்ட நிலையென யோசிக்கும் அதே சமயம், ‘வாரிசு அரசியலை’ அந்த வரிகள் நினைவூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.


ஒரு காலத்தில் எல்லாவற்றின் மீதும் ஈர்ப்புக் கொண்டு, எல்லாவற்றின் துடிப்பையும் துல்லியமாக அளந்த காலங்கள் கையைவிட்டு நழுவி, வெகுதூரம் போய்விட்டதை நினைத்துப் பார்க்கும் போது, தன் இப்போதைய நிலை, ஒரு ‘சுரைக்கூடு’ என உணர்தல், வாழ்ந்து முடித்த கதையினைக்கூடக் கேட்க நாதியற்ற வெறும் எலும்புக்கூடான ‘கடைசித்துண்டாக’ உலகில் உலவுதல், ‘எப்படி வாழ்ந்தவர் பார்’ என, யாரேனும் ஒருவர், முன்னால் விட்டுப் பின்னால் பேசினால் கூடப் பேருவகை அடைதல் எனத் துறவின் அத்தனை அம்சங்களையும் இம்மி பிசகாமல் அடுக்குகிறது கவிதை.


‘பெயர்களற்ற கரங்கள்’ என்று தலைப்பிட்ட கவிதையும் உற்றுநோக்கத்தக்கது. இதுவும் யோக தண்டத்தைத் தான் பேசுகிறது. ஆனால் அது யோகமற்ற நிலையை எடுத்தியம்பும் விதம் தான் புதியது.


யோக தண்டத்தை ஏந்தியிருக்கும்


துறவிகளுக்குப் பெயர்களில்லை


அவர்களுடைய கரங்களுக்கும் பெயர்களில்லை


------------------------------------


------------------------------------


இப்போது அது பெயரற்று இருக்கிறது


எப்போதும் பெயர் பெறப் போவதில்லை


------------------------------------


------------------------------------


துறவறத்தின் கரங்கள் மென்மையானவை


தண்டம் தன்னை முதலில் வடித்த


மூதாயின் கரங்களுக்கு ஏங்குகிறது


அவள் தண்டங்களை வைத்துக் கட்டிய


வேலிகளை அது கனவு காண்கிறது


தனியாக, தன் பெயரைக் குழறியபடி.


துறவிகளுக்குப் பெயர் அவசியமா? அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும், நடக்கும் என்று நம்பும் அவர்கள் கரங்கள், ஆசீர்வாதத்திற்குத் தகுதியானதாக மாறியது எப்போது, எப்படி? துறவுநிலை பூணும் முன், அந்தத் துறவி, தன்னைப் பெற்றெடுத்த தாயினைப் பற்றி ஒரு நிமிடமேனும் யோசித்திருக்கக்கூடும் தானே? அவள் இந்தத் துறவை விரும்புவாளா, இதற்குத் தான் தன்னைப் பெற்றெடுத்தாளா, எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு வாழ்வின் அத்தனை சுக துக்கங்களையும் அனுபவிக்க வேண்டும் என அவள் எவ்வளவு ஆசைப்பட்டிருக்கக்கூடும் என்பது குறித்து ‘பற்றறுத்த’ எந்தத் துறவியாவது யோசித்ததுண்டா? எல்லாவற்றையும் மீறி, துறவொன்றே சரியான தீர்வென முடிவெடுத்த அந்த மன உறுதிக்கு என்ன பெயர்?


‘அடுக்கடுக்காய் நீளும் கவிதைகள்’ வரிசையில், ‘வண்ணக்குடைகள்’ என்ற தலைப்பிலான கவிதைகள், புதிதாகக் கவிதை எழுதும் கவிஞர்களுக்கு ஒரு பால பாடம். தமிழகக் கவிதைப் பரப்பு சரியான திசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறதா என்பவர்களின் ‘முதல் சந்தேகத்தை’ தீர்த்து வைக்கிறது இக்கவிதை.


நகரச் சதுக்கத்தின் மத்தியில்


வண்ணக்குடைகள் விரிகின்றன


பிரகாசமான தயக்கங்கள் என.


காற்றின் வேகத்திற்கேற்ப


அவை கேட்கின்றன


அவை விரிய வேண்டுமா?


அவை மடங்க வேண்டுமா என.


காற்றின் ஒவ்வொரு வேகத்திற்கும்


வண்ணக்குடைகள் உப்புவதும்


உட்கம்பிகள் மீறி


எதிர்ப்பக்கம் விரிவதுமாய் இருக்கின்றன


------------------------------------------


------------------------------------------


அவற்றுக்கு வரும் முதல் சந்தேகம்


இந்தப் பூமி புகழிடமா, இல்லையா என்பதே.


------------------------------------------


------------------------------------------


குடைகளுக்குக் கீழேயுள்ள முகங்கள்


வான் நோக்கி அவ்வப்போது உயர்கின்றன


தங்கள் வெற்றுப்பார்வைகளுடன்


குடை நிழல் காக்கின்றதா


சரணாகதி அடையத் தூண்டுகிறதா என்ற


முரண்களில் அடித்துப் பெய்கிறது மழை.


இக்கவிதையில் வரும் ‘குடை’ அழகான குறியீடு. எதற்கு எதிராக நாம் பாதுகாப்புத் தேடுகிறோம், அந்தப் பாதுகாப்பு நமக்கு எந்த வகையில் உத்திரவாதமானது, நம்மைச் சுற்றி நாமோ அல்லது பிறரோ போட்டுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு வளையங்கள் எந்த அளவிற்கு உறுதித் தன்மையுடையன, பாதுகாப்பின் வண்ணக் கவர்ச்சியில் நாம் முழுவதுமாக மயங்கி விடுகிறோமா, பாதுகாப்பையும் மீறி இங்கே பின்னப்படும் வலைகளுக்குள் நாம் சிக்கிக் கொள்வதற்கு யார் அல்லது எச்சூழல் காரணம்?


குடை வடிக்கும் நீர் அல்லது வெக்கை குறித்து, நமக்குள் எவ்விதமான சிந்தனைகளும் ஏற்படுவதில்லையே ஏன்? எல்லாவற்றிலும் கலப்படம் பெருகிவிட்ட இக்காலத்தில், நமது ‘வெண்கொற்றக் குடைகள்’ மட்டும் தரமானவை என எப்படி நம்புவது?


வெயிலுக்கு நிழல் தருவேன், மழைக்கு இடம் தருவேன் என்ற வாக்குறுதிகள் ஒவ்வொரு முறையும் பொய்க்கும் போது, அந்தக் குடைகளின் பட்டன்கள் நம்மைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது, நாம் நனைகிறோமா, உலர்கிறோமா?


குடைகள் குறித்த தொடர்ச்சியான இன்னொரு கவிதையில், ‘குடைகள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதில்லை’ என்ற வரி, மேற்காண் ‘வெண்கொற்றக் குடை’ குறித்த சந்தேகங்களுக்கு மிகச் சரியாக விடை அளிக்கிறது.



கவிஞரின் கவிதைகளிலுள்ள ஆகப் பெரிய குறைபாடே, ‘கூறியது கூறல்’ தான். ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’, ‘ரோஜாமொக்குக் கவிதைகள்’ இரண்டு தொகுப்பையும் அடுத்தடுத்து வாசிக்கும் போது, ஒரு வாசகனுக்குச் சில சமயங்களில் அலுப்பை அல்லது தொடர் பின்பற்றுதலுக்கான ஒரு தொய்வை எனக்குள் ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டாக வேண்டும்.


காற்றின் வேகத்திற்கேற்ப


அவை கேட்கின்றன


அவை விரிய வேண்டுமா?


அவை மடங்க வேண்டுமா என.


என்ற வரிகளில் கூட, ‘அவை’ இத்தனை முறை இடம்பெற வேண்டுமா? வாசிக்கும் போது அதுவொரு ரிதத்தைத் தந்தாலும், அடுத்தடுத்த வாசிப்புகளில் அதுவொரு அயர்ச்சியையே தருகிறது.


காற்றின் வேகத்திற்கேற்ப


அவை கேட்கின்றன


விரிய வேண்டுமா?


மடங்க வேண்டுமா என.


என்றிருந்தாலே போதுமானது. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ‘அவை’யைத் தனித்துப் படிக்கும் போது, அது மக்களவை, ‘மாநிலங்கள்’ அவை என எல்லாவற்றுக்கும் பொருந்திப் போகின்றது.


ஆனால், இவற்றை ஒரு சிறிய குறையாகப் புறந்தள்ளிவிட்டு, கருத்து ரீதியாக, மொழி அடர்த்தி ரீதியாகப் பார்த்தோமானால், தமிழ் இலக்கியப் பரப்பில் கவனப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான கவி ஆளுமைகளில், கவிஞர் எம்.டி. முத்துக்குமாரசாமி தவிர்க்க முடியாதவர் என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் விரைவிலேயே புரிந்து கொள்ளும்.


- மா. காளிதாஸ்


ISBN: 978-93-92543-96-8


விலை ரூ: ₹ 380


பக்கங்கள்: 264


அளவு: டெமி


கட்டமைப்பு: கெட்டி அட்டை


முதற் பதிப்பு: டிசம்பர் - 2024


வெளியீடு: தமிழ்வெளி


(தமிழ்வெளி # 101)


தொடர்புக்கு: +91 9094005600