Tuesday, January 6, 2026

முருகபூபதியின் நாடகம் “யாக்கைக்களறி”




நேற்று முருகபூபதியின் மணல்மகுடி நாடகக்குழுவும், பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையும் இணைந்து அரங்கேற்றிய “யாக்கைக்களறி” நாடகத்தை சென்னை மியூசியம் தியேட்டரில் பார்த்தேன். நாடகம் முடிந்தவுடனேயே முதல் பேச்சாளராக அழைக்கப்பட்டதால் நாடகத்தைப் பற்றிய  உடனடி அவதானங்களைப் பகிர்ந்துகொண்டேன். அந்த சிறிய உரையின்வேறு வடிவம் இந்தப் பதிவு.


முருகபூபதியின் நாடகங்களை நான் அவர் பாண்டிச்சேரிப் பல்கலையில் தியேட்டர் மாணவராக இருந்த காலத்திலிருந்தே  பின் தொடர்ந்து வருகிறேன்.  அவர் மாணவராக தன் பட்டமேற்படிப்புக்கு அரங்கேற்றிய தாஸ்த்தோவ்ஸ்கியின் “Notes from the Underground” நாடகத்திற்கு examiner ஆக நான் அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது நாடகத்துறைத் தலைவராக இந்திரா பார்த்தசாரதி இருந்தார். நாடகத்தின் பிரதி ரமேஷ் பிரேதனால் எழுதப்பட்டது என்று நினைவு. அந்த நாடகத்திலிருந்து இன்று வரை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முருகபூபதி தன்னைத் தனித்துவம் மிக்க அரங்க இயக்குனராகவும்,  நாடக ஆசிரியராகவும் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார். 


முருகபூபதியின் தனித்துவம் அவர் தன் நாடகங்களுக்கு உருவாக்கும் அபூர்வமான இசையிலும் காட்சிப்படிமங்களிலும் இருக்கிறது. முருகபூபதி பல பழங்குடி இசைக்கருவிகளிலிருந்து, அறியப்படாத பல இசைக்கருவிகள் வரை பயன்படுத்துவது நான் வியக்கக்கூடியது.  நான் பார்த்த அவருடைய இன்னொரு நாடகத்தில்  பின்னணி இசை சுரக்குடுக்கைகளை சிறிய முரசு போல இசைப்பதால் உண்டாகக்கூடியதாக இருந்தது; இன்னொன்றிலோ பழங்குடிமக்கள் மழைச் சத்தத்தை உண்டாக்கும் மூங்கில் குழாய்களைக் கொண்டிருந்தது. முருகபூபதி என்றுமே பதிவு செய்யப்பட்ட இசையை பயன்படுத்தவதில்லை. அவர் live music ஐயே பயன்படுத்துபவராக இருக்கிறார். அரங்கக்கலையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்குத் தெரியும் live music -ஐ நடிகர்களை வைத்தும், பின்னணி இசையாகவும் பயன்படுத்துவது எத்தனை சவால்கள் நிறைந்தது என்பது. அதில் ஒரு excellence ஐயும் நேர்த்தியையும் அடைவது என்பதை ஒரு அசாத்திய சாதனையாகக் கருதவேண்டும். முருகபூபதி இந்த அசகாய சாதனையைத் தன் நாடகங்களில் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நேற்று நான் பார்த்த “யாக்கைக்களறி” நாடகமும் இதற்கு விதிவிலக்கல்ல.  


பின்னணி இசையாக தொடர்ந்து மூங்கில் வெட்டுவது போன்ற டிரம் சப்தம் பின்னணி இசையாக இருக்க நடிகர்கள், திபெத்திய மணியோசை இசைக்கருவிகள், பழங்குடி முரசுகள் ஆகியவற்றை  இசைத்துக்கொண்டே நடித்தார்கள். வெறும் நாற்பது நாள் பயிற்சியில் இந்த அபூர்வமும் பேரழகும்  கொண்ட  இசை சாத்தியமாகி இருக்கிறது என்பது வியந்து பாராட்டத்தக்கது.


முருகபூபதியின் காட்சிப்படிமங்கள் சொற்களால் சொல்ல இயலாத, சமகால complex emotions ஐ சொல்லக்கூடியவை. அவை அவர் பயன்படுத்தும் தனித்துவம் மிக்க ஆனால் விசித்திரமான ஆடைகள், மேடை ஒளி அமைப்பு, முகமூடிகள், சிறிய பொருட்கள் ஆகியவற்றால் உருவாகுபவை. 

  “யாக்கைக்களறி” நாடகத்தில் வெள்ளை மேலங்கிகள், திகைக்கவைக்கும் பின்னலாடைகள், துணிப் பின்னல்கள் கொண்ட துடைப்பான்கள், அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தும் கார்ட்டூன் கண்கள் கொண்ட வெள்ளை முகமூடிகள், நட்டு தரையில் நிறுத்தி  வைக்கக்கூடிய முகமூடிகள்  ஆகியவற்றை முருகபூபதி அசரவைக்கும் வகையில் பயன்படுத்தி இருந்தார். Stunning visuals என்று அவற்றை விவரிப்பது கூட அவற்றுக்கு முழு நியாயம் சேர்ப்பது ஆகாது.


போர் எதிர்ப்பு நாடகமான “யாக்கைகளறி” முழுவதுமாக எனக்குப் பிடித்திருந்தது என்றாலும் அதில் மூன்று தருணங்களை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.


முதல் தருணம் வெள்ளைப் பின்னலாடை ஆணிந்த ஒரு பெண் முறத்தில் பல தரையில் நட்டு வைக்கக்கூடிய முகமூடிகள்/ தலைகளைக் கொண்டு வந்து மேடை முழுவதும் வட்டவடிவமாக அடுக்குவது. போரின் ஓலமும், ஒப்பாரியும், கத்தல்களும், கதறல்களும் உண்டாக்க முடியாத போரின் தீவிர துக்கத்தை மேடை முழுவதும் நட்டு வைக்கப்பட்ட தலைகள் விம்மி எழச்செய்தன. 


இரண்டாவது தருணம் கையில் வெள்ளைத் துணித் துடைப்பானும், வெள்ளை அப்பாவி முகமூடிகளும், மேலங்கிகளும் அணிந்த ஒரு கூட்டம் முகமூடி அணியாத ஒரு பெண்ணின் ஓலத்தினால் திடுக்கிடுகிறது. அந்தப் பெண் சீனமொழிப் பாடல் போன்ற ஏதோ ஒன்றை அந்நியமாக, ஓலமாகப் பாடுகிறாள்.  முகமூடி அணிந்த கூட்டம் திடுக்கிடுகையில் அவற்றின் கார்ட்டூன் கண்களால் அவர்களின் அப்பாவித்தனம் பேரழகு கொண்டது. அந்தக்கூட்டம் அந்த அந்நிய மொழியில் ஓலமிடும் பெண்ணை அணைத்து அரவணைத்து அவளுக்குத் தங்கள், மேலங்கியை அணிவித்து, முகமூடி மாட்டி, கையில் தங்களைப் போலவேத் துணித் துடைப்பானைக் கொடுத்துத் தங்களோடு சேர்த்துக்கொள்கிறது. அந்தத் தருணம் நாடகம் உண்டாக்கிய பிரமாதமான political statement  மட்டுமல்ல அது ஒரு moment of tenderness கூட. Moments of tenderness ஐ உருவாக்கும் எந்த ஒரு கலைப்படைப்பும் கொண்டாடத்தக்கதாகும். 


மூன்றாவது தருணம் மேடையில் நடிகர்கள் முக்கியமான வருடங்களையும், அபத்தமான எண்ணிக்கைகளையும் எண்களாக மட்டுமே உச்சரித்து மரித்துப்போவது. வெறும் எண்களுக்காகத்தானே மனித வாழ்வுகள், போரின் போதும் சரி அமைதியின்போதும் சரி பலியிடப்படுகின்றன? 


முருகபூபதிக்கும். மணல்மகுடி நாடகக்குழுவினருக்கும், பாண்டிச்சேரி பல்கலை நாடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும். 

No comments: