Saturday, December 22, 2012

மர்ம நாவல் | சிறுகதை



அறிவின் எல்லையைத் தேடிச் சென்ற மு. பைத்தியம் பிடித்துக் காணாமல் போனதும் அதற்காக விசனப்பட்டதும்.
நாபிக்கொடித் தரையில் ஊசலாட கிடுகிடுவென வளர்ந்த வெந்தாடிபூமியைத் தீண்ட அப்போதுதான் ஜனித்த ஆண் குழந்தையொன்று பனிக்காற்றின் வேகத்திற்கெதிரான தளிர் நடையில் திருநெல்வேலியில் அதிகாலை மூன்று மணி முப்பது நிமிடம் மூன்று நொடிக்குக் காணப்பட்டது. திரும்பிய வெளியெங்கும் வெள்ளையடிக்கப்பட்டச்சுவர்கள் கருங்கண்ணாடியாய் நிற்க சாக்கடைகளில் மல நாற்றம் ஸ்தூலமான அம்மணங் காட்ட அக்குழந்தை கண் உள் இறங்கிய, பற்கள் முன்நீண்ட, வயிறு உப்பிய விகார பிம்பமானது. அல்வாவைப் பார்த்த பட்டிக் காட்டானாய் நாபிக்கொடியில் ரத்தம் காய்வதற்கு முன் பிம்பத்தை நோக்கி நீண்ட கரங்களின் யத்தனிப்பில் மு.மு. என்ற சொல் ஊடக வெளியை நிரப்ப நான் பிறந்தேன். மு. வாகிய நான் பாலுக்காக முலைவற்றிய தாயை ஏக்கக்கண் கொண்டு ரொப்பிய போது தந்தையென்பவனது சுக்கிலப் பையின்கண், யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி, தாயென்பவளது சோணிதப்பையின் கண் சென்றடைந்த கணப் போதிற்கு முன் கணப்போது வரையுமாக என்னாலொறுவாறு அளவிடப் பட்ட கோடி ஒன்பது லட்சத்தறுபதினாயிரங் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் வாராதபடி பகுதிப் பேரணுவிற் கிடந்த என் அகத்தினும் புறத்தினும் அருவாகியும், உருவாகியும் சவித்தன் முதலியவின்றி அன்போடும் அருளோடும் பாதுகாத்திருந்த எதற்கு நன்றி சொல்வதென்று குழம்பிப்போய் கள்ளம் பெற்றேன். இந்த இந்தியத்துணைகண்டத்தில் முலைப்பால்லில்லாமல் சாகும் இருபது மில்லியன் குழந்தைகளின் நானும் ஒருவனல்ல என்ற மிகப்பெரிய ஆசுவாச உணர்வு ஒன்று போதாதா நான் நன்றி சொல்வதற்கு? ஆனால் யாருக்கு எதற்கு நன்றி சொல்வதென்று தான் தெரியவில்லை. கள்ளம் பெற்ற நான் சக சிறுவர்களின் உதவியினால் குரூரம் பெற்றேன். முதலில் தவளை நாய் ஆகியவற்றில் துவங்கலாம். தவளையைக் கை கால் வேறாகப் பிய்த்து கயிறுகளில் கட்டி ஆளுக்கொன்றாகப் பிடித்துக் கொண்டு சிந்துபூந்துறையின் தெருக்களில் வெறிபிடித்தவன்போல கத்திக்கொண்டே ஓடுவதில்தான் என்னவொரு ஆனந்தம்! கடைசியில் அதை ஒரு பைத்தியச் சிறுவன் மேலோ அல்லது விதவைக் கிழவியின் மேலோ வீசியெறிய வேண்டும். சைத்தன்களா என்று அவர்கள் ஏசுவதை காதுகுளிரக் கேட்கவேண்டும். பின்னர் நாய். நல்ல கூர்மையான ஜல்லிக் கல்லாய் இருந்தால் நல்லது அதன் வெள்ளை வயிற்றிலோ புட்டத்திலொ  ணங்கெண்று பட வேண்டும். நாய்களை விட என்னொத்த சிறுமிகள் மாட்டிக் கொண்டால் அதில் கிடைக்கும் பேரானந்தம்…… ஆஹா இதை விடப் பெரிய வீடுபேறென்றும் உளதோ தாண்டவக்கோனே? தெருவுக்குத் தெரு இங்கு சாக்கடைச் சுத்தம் செய்து மலம் கலந்த அழுக்கைக் குவித்து வைத்திருப்பார்கள். வருகின்ற சிறுமியின் மூஞ்சியில் டக்கென்று எடுத்து வீசிவிட வேண்டும். நாய்க்குப் பொறந்தவனே, அவனே இவனே என்ற சொற்கள் காற்றைத் தங்கள் வாசனையினால் நிரப்பும். சைவத் தேனொழுகும் தமிழ்ச் சொற்கள் செத்தாந்தம் வளர்த்த ஊரய்யா இது. மலத்தை மலத்தால் வெல்வோம். மலச்சாக்கடையிலேயே புரள்வோம் களிப்போம் கூத்தாடுவோம். கொண்டாடுவோம் குழந்தைப் பருவத்திலேயே தத்துவநோக்கு பெற வேறு ஒரு ஸ்தலம் உண்டா இவ்வுலகில்? தேனோழுகும் தமிழ்ச் சொற்கள் மையம் கொடுத்தன. ஸார்வாள், மன்னிக்கனும் ஸார்வாள் உங்களை தேடித்தான் வந்திகிட்டுருந்தேன். எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லை ஸார்வாள் அதான் வரமுடியலை. தயவுசெய்து மன்னிச்சுக்கிடுங்க ஸார்வாள். சத்தியமா இனிமே அப்படிச் செய்யமாட்டேன் திருடின பொருளைத் தந்துருவேன் ஸார்வாள். போதாதா இவை? ஆறு வயதில் ஐந்து பவுன் சங்கிலியைத் திருடியபின் போலீஸ் நிலையத்திற்கு போகாமல் சுற்றிக் கொண்டிருந்த போது, பயிற்சி செய்த வார்த்தைகள் வாழ்நாள் பூராவும் பயன்படும்போல. மனமூர்க்கம் பெற்றுவெட்டால் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இவற்றையே சொல்லித்தப்பி விடலாம். மு. பெரிய ஆளய்யா என்ற எழுத்தாளர் உலகம் என்னை புகழ்ந்ததற்குக் காரணம் இதே வார்த்தைகள்தான். ஆம் இதே வார்த்தைகள்தான். கள்ளம், குரூரம், மூர்க்கம், மும்மலங்கள் பதிபசு பாசம் மும்மலங்கள். மலங்களை வெல்வோம் நாங்கள். இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் போதே என்னை பற்றித்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்ற சந்தேகம் வாசகா உனக்கு வரலாம். இல்லை இல்லை இல்லை. ஏனெனில் ஏழு வயதிலிருந்து இருபத்தியேழு வயது வரை இருபது வருடங்கள் நான் என்ன செய்தேன் என்று எனக்கு நினைவில்லை பிம்பங்களின் யத்தனிப்பில்நான்பிறந்ததால் ஏராளமான பிம்பங்களின் தொகுப்பாக நான் இருந்தேனாம். எம். ஜி.ஆர். கருணாநிதி இந்திரா காந்தி ஷோபனாரவி மாளவிகா கபாடியா ராஜீவ்காந்தி கபில்தேவ் பட்டோடி நவாப் கோல்ட்கஃபே ராணி டீச்சர் மனோகர் ரமேஷ்குமார் பேபி லூஸ்மோகன் பாமா பூமா ரகுனாதன் பாத்திமா சுஜாதா ஸ்வர்ணலதா ஜெயலலிதா பண்ருட்டி பிரபாகரன் என ஏதேதோ பெயர்களும் பிம்பங்களும் என்னைக் கட்டமைத்தன. நான் அவனானேன் அதுவானேன் அவளானேன் அவர்களானேன். மு. இக்காலத்தில் தான் எழுதியவற்றிலெல்லாம் தான் ஆணா பெண்ணா என்று தெரியவெல்லை என்று அரற்றியிருப்பதை பல விமர்சகர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். “பிம்பங்களைப் புணரமுடியதுஎன்று மிகப்பெரிய உண்மையைக் கண்டுபிடித்தவன் போல அவன் தெருக்களில் கூவிக் கூவிக் சென்றதை பல கோடித் தமிழர்கள் தொலைக் காட்சியில் கண்டு களிப்பெய்தனர். இந்தக் கால கட்டத்தில் தனக்கு நிகழ்ந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டதாக மு.கூறுவதுதன் குற்றவாளிக்காலத்தை மறைப்பதற்கான உத்தி என ஒரு போலீஸ்காரரும் பிம்பப்பால்வினை நோய் என ஒரு மருத்துவரும் கூறுகின்றனர். ஒரு வேளை நாம் மு.வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவிலையோ என்னமோ. என்னடா இது ஒரே மர்மமாக இருக்கிறது? யாருடையது வரலாறு தான் தமிழக புண்ணிய பூமியில் இதிலிருந்து மாறுபட்டது? ஆஹாங் அதுதான் வார்த்தைவரலாறுகண்டு கொண்டான் மு. வரலாற்றைவலியாக, ஒழுங்கின்மையாக, அதிகாரத்திற்கான மனிதப் புழுக்களின் போராட்டமாக, சங்கடமாக, மொழியாக, பெண்குறியாக, கண்ணாடியாக, பாம்பாக, வியர்வையாக, ஸ்கலிதமாக, வெறுமையாக, நிழலாக, மைப்புட்டியாகஎன சரியாக 14 விஷயங்களாக வரலாற்றை மு. உணர்ந்து கொண்டான். நினைவற்றுத் திரிந்த நாட்களில் தன் பெயரை திடீரென முநீயாண்டி என்ற முழுமையாகக் கூறி எல்லாவற்றையும் திரும்பவும் பெயரிட வேண்டும் என்ற தெருக்களில் எல்லாம் கரித்துண்டால் எழுதிப் போட்டானாம். இருபத்தியேழு வதில் நினைவு வந்தபோது நாவல் எழுதுவதுதான் தனக்கென்று சபிக்கப்பட்டது என்று கூறிய மு. தனக்குள்ளாகவே ஒடுங்கிப்போனான். நாவலின் உண்மையான எதிரிகள் கதைக்களம், கரு, வலைப்பின்னல், கதாபாத்திரம், பின்புலம் என்ற கண்டுகொண்ட அவன்தரிசனத்தின் முழுமை அல்லது அமைப்பு மட்டுமேதான் 20ஆம் நூற்றாண்டில் எஞ்சிநிற்க முடியும்என்று தன்னுடைய மர்ம நாவலைத் துவக்கியிருக்கிறான். “பேய்கள், பூதங்கள், குற்றவாளிகள், சபிக்கப்பட்ட தனியர்கள் ஆகியயோர் மெலோடிராமாவையும் பலஹீனத்தையுமே வெளிப்படுத்துகிறார்கள். அவர்களிடம் உள்ள ஒரே பயங்கரம் என்னவெனில் தங்களுடைய கனவிலும் தனிமையைக் கண்டு பயந்து போவதுதான். ஆனால் ஒரு பாலைவனம் அல்லது பொய்யாக அமைக்கப்பட்ட ஜவுளிக்கடைகளின் முகப்பு தோற்றங்கள், முப்பரிமாண போஸ்டர்கள், தொடர்ந்து பிம்பங்களை வாந்தியெடுக்கும் தொலைக்காட்சி, பிம்பங்களின் அசைவிற்கேப நடனமாடும் எலும்புக்கூடு மனிதர்கள், இவர்களின் குசுப்பண்பாடு, நீதி வரையறைகள், சவத்தன்மை, உள்ளும் வெளியும் விரவியிருக்கும் வெறுமை. இதுவே தமிழகத்தின் இருபதாம் நூற்றாண்டுப் பயங்கரம். இதில் சிக்கிக்கொள்ளும் மனிதன் உடலுக்கு ஒருநிழலின் அந்தஸ்து கூட கிடையாதென்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிக்குப் போய்க் கொண்டிருக்கும் அவலம். நமது வரலாற்றிற்கு எதிரான மனோ சக்தி எங்கே எங்கே? ஓ என் நகர மக்களே கேளீர்! உயிர்ப்புடன் தொடர்ந்து இவ்வுலகில் இருப்பது எப்படி என்று நாமனைவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்வோம். தாடி முளைத்த குழந்தைகள் நமக்கு வேண்டாம். பிம்பங்களிலிருது விடுபடல் அவசியம். வரலாற்றிற்கு எதிரான மனோ சக்தி எங்கே? வரலாறு, ஒருங்கமைப்பு, குறியீட்டு வரையறை, சமிக்ஞை விதிகள் அனைத்திற்கும் கூட்டாகச் சேர்ந்து நாம் எப்படி எதிர்ப்பினைக் காட்டுவது? குறைக்க முடியாத இடைவெளியை, வெறுமையை எதைக் கொண்டு நிரப்புவது? ஆடு பாம்பே விளையாடு பாம்பே பாம்பின் இடைவிடா எழுச்சியால் மட்டுமே அடங்கியிருக்கிறது உயிர்ப்பு என்ற பேச்சினை அவனுடைய நாவலில் வரும் கதாபாத்திர நிழலொன்று சொல்வது உண்மையில் மு.வினுடைய கூற்றுதான் என விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள். வரலாற்றின் பிடியிலிருந்து விடுபட பெளதீகம் மட்டுமே பயன்படும் என்று உணர்ந்த மு.முப்பத்தி மூன்று வயது வரை பெளதீக ஆராய்ச்சியில் ஈடுபட்டான், இப்பிரபஞ்சம் முழுமையுமே பதினான்கு பரிமாண சக்தியினால் ஆளப்படுவதாகவும், நாம் நான்கை மட்டுமே (அகலம், நீளம், கனம், காலம்) பார்ப்பதினால் மீதி பத்தையும் உணர்வதில்லையென்றும் இப்பதினான்கு பரிமாணங்களின் இயக்கமே வரலாறு என்றும் மு.கண்டுபிடித்துக் கூறியுள்ளான். ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், நீல்ஸ்போர் போன்றோர் கண்டறிய இயலாத இயற்கையின் அடிப்படை சக்திகளையும் அவற்றின் ஒருங்கிணைவையும் மு. எளிதாக அவிழ்த்துட்டதாக விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கான சிபாரிசுக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்கள். மு.வின் பெளதீகக்கோட்பாடுபூமாலைக் கோட்பாடுஎன்றழைக்கப்படுகிறது. உதாரணமாக பதினான்கு வளையங்களால் ஆன ஒரு சங்கிலி இணைப்பு இன்னொரு பெரிய சங்கிலியில்  வளையமாக இருப்பதைக் கற்பணை செய்து பாருங்கள். அது இன்னொன்றில் அது மற்றொன்றில் எனத் தொடர்ந்து பதினான்கு சங்கிலிகளை மனதில் கொண்டு வாருங்கள் இதுவே பிரபஞ்சம். இவற்றின் தொடர்ந்த ஒருங்கிணைந்த போக்கினால்தான் பிரபஞ்சம் இயங்குகிறது. வரலாறு நகர்கிறது. கணிதத்தின் மூலம் தன் பெளதிக கோட்பாட்டை நிரூபித்த மு.அப் பதினான்கு சக்திகளை பின்வருமாறு பெயரிட்டான்; 1.புவிஈர்ப்பு விசை 2. Quantum mechanics சொல்கிற வலிமையான சக்தியும் பலஹீனமான சக்தியும். 3 திருநெல்வேலி இரட்டையடுக்கு மேம்பாலம் 4.காலம் 5. வான்கோவின் அறுக்கப்பட்ட காது 6. எலக்ட்ரோமேக்னடிக் சக்தி 7. எர்நெஸ்டோ சேகுவேராவின் துண்டாடப்பட்ட கைகள் 8. திருநெல்வேலியின் வெக்கையும் புழுக்கமும் 9.பெண்குறி 10. பிம்பங்கள் 11.இன்னபிற அல்லது முதலியன 12. அர்த்தங்கள் 13. திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டிஇன்டெல்லக்சுவல்ஸ்’ 14. பூஜ்யம் அல்லது வெறுமை அல்லது தமிழ். “இப்பிரபஞ்சத்தையே திருநெல்வேலி கோவில்பட்டி இன்டெலக்சுவல்ஸ் தான் நகர்த்தி செல்கிறார்கள் என்பதில் துளியும் ஐயப்பாடு எழும்ப முடியாது ஆனால் பூஜ்யத்தையோ வெறுமையையோ தமிழர்களால் புரிந்துகொள்ளவே முடியாதுஎன்று தன் மர்ம நாவலில் எழுதிய மு. அப்படைப்பில் பக்கத்திற்குப் பக்கம் வெறுமை அல்லது வறுமையைக் குறிக்கும் வட்டமொன்றை வரைந்து வரைந்து காட்டியிருக்கிறான். நாம் மூன்றாம் உலக நாடொன்றில் இருக்கிறோமென்பதை வலியுறுத்த தொடர்ந்து மூன்று என்ற எண்ணை அவன் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. பூஜ்யத்துடன் சிலஉரையாடல்கள் என்ற அத்தியாயத்தில்கட்டுரைகள், ஆய்வுகள், வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியவற்றை மட்டுமே நாம் எழுதவேண்டும். கழுத்து வியர்வையில் சகதிக்காடாய் மாறிவிட்டது. கிழக்கு ஐரோப்பியா நாட்டின் குளிரும் இதமான சுற்றுச் சூழலும் நமக்கு என்றுதான் வாய்க்கபோகிறதோ. இந்த எழுத்துப் புழுக்கத்திலிருந்து விடுபட வேண்டும்என்று எழுதப்பட்டிருக்கிறது. இதை படித்த பட்டி இன்டெல்லக்சுவல் சுந்தரராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளை காப்பியடித்துவிட்டான் மு. என அபத்தம் உதிர்த்தார், parody, forgery, திரும்ப ஜெ.ஜெ.- யை எழுதுகிறான் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள். மு. தான் எந்த எருமை மாட்டின் மீதும் வெற்றிலைச்சாற்றினைத் துப்பவில்லை என்றான். உண்மையாக எழுதுகிறானா, கிண்டலா, குரங்கு சேஷ்டையா என மு வின்  மர்மநாவலை கடைசிவரை அனுமானிக்க முடியவில்லை. நாபகோவ், போர்ஹெஸில் ஆரம்பித்து பார்த்தல்மே, பார்த், கூலர், பிஞ்ச்சன், ஹாக்ஸ் வரை யாரை பற்றியும் இக்கேள்வி எழுந்ததில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அர்த்தங்களை துறந்துவிட்ட குறிப்பான்களைக் கடல்மடையென மடை கடலென மட கடலென கடமடவென வெனகனவென மனனன கணணதினன திறந்து விடு விட்டான் சுட்டான் தின்னான் மு. ஹெ. செ! மானுடா உனக்கு எப்படியட அர்த்தம் சாத்தியமாயிற்று? நான் சோப் வாங்கினால் கூட போஃபார்ஸ் துப்பாக்கியும் வாங்கி விடுகிறேனாமே எப்படி சத்தியம் இது! சாத்தியம் சத்தியம் மத்திமம் கத்திமம் ரத்திமம் ரத்தம் ரத்தம் ரத்தம் குடிபருகு தின் உறிஞ்சு சீரழி தனி மனித மனப் புரட்சி ஜே கிருஷ்ணமூர்த்தி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, வான்கோவின் அறுபட்ட காது சேகுவேராவின் துண்டாடப்பட்ட கைகள் இதற்கெல்லாம் பதில் சொல்லய்யா கிருஷ்ணமூர்த்தி கெடுத்தியே தமிழை ஜே.ஜே. ஜோஸஃப் கெல்லர் ஜான் தி கில்லர் இருபது மில்லியன் குழந்தைகள் பாலில்லாமல் சாகிறதாமே தனி மனித புரட்சி பூஜ்ய தளத்தை அடைய தூய அனுபவம் தேவை. அமைப்புகளை மறந்து விடு பூஜ்யமே உனக்கோர் நமஸ்காரம் பிம்பங்களின் மூலபிம்பமே நீயே கடவுள் உன்னையே துதிப்போம். கற்பின் நாயகன் நீ, அணையாஜோதி நீ, பெண்குறிகளின் நாயகன் நீ, உன் காலத்தில் வாழ என் நிழலுருவம் என்ன தவம் செய்ததோ. என் நிழலின் பிம்பத்தின் பிம்பத்தினை இந்தத் திருநெல்வேலி மேம்பாலத்தில் பதிவு செய்ய என்னை அனுமதித்த நீயல்லவோ என் நாயகன். ராட்சசக் கண்ணாய் அமர்ந்திருக்கும் இந்த மேம்பாலத்திலிருந்து சிறு பிள்ளையின் மூத்திரக் கண்ணீராய் ஓடும் தாமிரபரணி மண்ணின் தஹிப்பு வானம் அறியா காலம். அர்த்தம் துறந்து ஓடு. என்ன நடக்கிறது இலங்கை அறியாதே வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்  கண்ணனின் சூழ்ச்சி புத்தனின் மெளனம் டி.வி.யில் மகாபாரதம் ஆரம்பித்துவிட்டது. ப்ரூட்டி விளம்பரம் மாளவிகா கபாடிகா கார்த்திக் கல்யாணம் செய்து கொண்டது யாரை ஜீவகாருண்யம்உடலின் தசைகளெல்லாம் பசியில் திகுதிகுவென்று பற்றி எரியும்போது எது அதை அவிக்கிறதோ அதுவே ஜீவகாருண்யம். காலை உணவு முசுமுசுக்கீரை தூதுவளைக்கீரை அரைப்படி சுண்டக் காய்ச்சிய பால் நித்திய ஒழுக்கம் பகலில் தூக்கம் கூடாது. சுக்கிலத்தை வீணில் விடக்கூடாது உயிரை வீணில் விட்டுவிடலாம். இன்னொருவர் உயிரை விடச்செய்யலாம். பத்துகோடி ரூபாய் கடத்தல் ஹெராயின் பிடிப்பட்டது. நாம் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்தாலே அதாவது வெந்ததை தின்று விதி வந்தபோது சாவோம் என்றிருந்தாலே நமது பொருளாதாரத்தினால் வல்லரசுகள் இன்னும் லாபம் பெறுகின்றனவாமே. பிம்பத்தின் நாயகனே என்னடா இது அர்த்தம். என்னால் முடியும் தம்பி. ஜாதி உன்னால் முடியும் தம்பி இது நம்ம ஆளு கண்ணை மூடி பவித்திரம் கொள். ஏலேய் பார்த்தல்மே இங்கே வா cheerful nihilism என்று ஏதோ சொல்கிறயாமே நீ என்னவாக்கும்லே அது? கொஞ்சம் சொல்லேன். ஏழா உனக்குத்  தெருயுமாழா இவனுகளுக்கெல்லாம் வேர்களேகிடையாது. பனையேறத் தெருயுமா கள்ளு குடிக்கத் தெரியுமா பருத்திக்காடு தெரியுமா கரிசல் மண் தெரியுமா. குறைந்தபட்சம் மதினிகளையாவது தெரியுமா என்னலே கத கட்றானுக, கேக்கறதுக்கு நாலுபேரு. ஸார்வாள் மன்னிக்கனும். சத்தியமா நாளக்கி உங்கள வந்து பார்த்துவருவன்போல்க்லோர், இன்னாலே அது! இவன்களுக்கு ரூட்ஸ் இல்லமா ரெளடித்தனம் தெரியுமா இவன்களுக்கு யார் எழுதினார்கள் இது வரை மு. வைப் பற்றிய கதையல்லவா கேட்டுக் கொண்டிருந்தோம். பூமால காணாமப் போய்ட்டான்மா, பைத்யம் புடிச்சுருச்சா அவனுக்கா அவன் காணாமப் போய் எவ்ளோவ் நாளாச்சின்ற நீ. அவனுக்குத்தான் அவராண்ட சொல்லி கானாப் பாட்டு பாடக் இட்டாந்தேன். அந்தாள் இன்னா இன்னாவோ பேசிக்கிறான். நல்ல சாராயம் ஊத்திகினு வன்ட்டான் போல தென்றல் இனிது வீசிக் கொண்டிருந்த அந்தக் காலை பொழுதினில் ஷர்மிளா தன் ஜீன்ஸ் பாண்டை சரி செய்து கொண்டே வெளியே எழுந்து நடந்தாள். இந்த ரமேஷுக்காகத் தான் எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது. பாவம் ஒன்றுமறியாத பேதை அவள். இல்லையென்றால் தனது புஷ்டியான மார்புகளும், செழித்து வளர்ந்த பின்பாகங்களும் எந்தவொரு ஆண் மகனின் மனதையும் சுண்டியிழுக்கும் என்பதை அறியாதல்லவா தடங் தடங்கென்று ந்டை பயிலுகிறாள். நாடு முழுவதும் உள்நாட்டுக் கலகம் நடைபெறும்போது ஒரு அரசியல் தலைவன் உட்கார்ந்திருப்பது என்பது சக்கரத்துடன் இருக்கும் கிருஷ்ணன் பகவத் கீதையை குருஷேத்திரத்தின் நடுவே பாடுவதற்கு ஒப்பானதாகும். ‘புதிய’ சொற்பிரயோகம் எவ்வளவு சீக்கிரத்தில் கவர்ச்சியடைந்துவிடுகிறது. சிறிதளவு மாற்றியமைக்கப்பட்ட சொற்பிரயோக முறையைக்கொண்டு அடிப்படையான தத்துவஞானப் பிரச்சனைகளையும் அடிப்படையான தத்துவஞானப் போக்குகளையும் ஒருக்காலும் அகற்றிவிடமுடியாதென்பது எவ்வளவு சீக்கிரம் தெரிந்து விடுகிறது என்பதற்கு ஓஸ்ட்வால்டின் சக்தியியல் ஒரு நல்ல உதாரணமாகும். எப்படியாவது கதை சொல்லாமல் இருந்தால் சரி. தொடற்சியற்றவைகளே நமக்கு வேண்டும். திரும்பத் திரும்ப சொன்னதையேத் திரும்பச் சொன்னால் போச்சு. அது என்ன பிறகு? இது புத்தகமல்ல. இது ஏச்சு, மண்ணைவாரித் தூற்றுதல், Character assassination சாதாரண அர்த்தத்தில் இது புத்த்கமல்ல. நீண்ட நாட்களாகக் காத்திருந்து அவமானப்படுத்துதல். கலை என்று சொல்லப்படுவதின் மேல் காறி உமிழப்பட்ட எச்சில். கடவுளின் வேட்டியை அவிழ்த்து விடப்பட்ட உதை. மனிதன், விதி, காலம், அழகு, காதல், அனைத்தின் மேலும் வீசப்பட்ட அலட்சியம் outrage, atrocity, வட்டங்கள் அவற்றின் மையங்கள். நீ குரலழிந்து போகையில் நான் தொடர்ந்து பாடுவேன். உன் நாற்றமடிக்கும் பிணத்தின் மீது நின்று பாடுவேன். உனக்குப் புரியவே கூடாது. உனது புரிதல்களுக்கு தொடர்ந்து சவால்களை முன் வைப்பேன். கதறி அழு. குற்றமற்றதனமை கொண்ட மாருதி கார்கள் அவற்றில் வளைய வரும் இளம் கன்னிகள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள். Fashion Shows. நெல்சன் மண்டேலாவுக்கு கறுப்பு உடைகளில் கன்னிகளின் அஞ்சலி. ஆவணக்காப்பகங்களும் பெண்களும். எல்லோருமே எப்படி கர்ப்பம் தரித்தார்கள்? அளவு நிலை பண்பு நிலையாக மாற்றமடையும். அணு எடையின் அளவு நிலையே அவைகளின் பண்புநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் தற்போது நாம் அறிந்த விஷயம். கூடான் குளமும் பேரழிவும், உண்மையான பண்பு நிலை மாற்றம். வெறுமையை  வெளியிலும் கொண்டு வருவோம். மீண்டும் பௌதீகம். மீண்டும் பூமாலை. பொதுவாக உதாரணமாக, ஒழுங்குமுறை, சட்டம், நோக்கம் முதலிய மனித சமூகப் பிரயோகங்களையும் கருதுகோள்களையும் நாம் அவை சம்பந்தப்பட்ட மட்டில் உபயோகித்தாலும், நம்முடைய மொழித் தன்மை காரணமாக அப்படிச் செய்வது அவசியமாக இருந்தாலும் அந்த இயற்கை மட்டுமே எத்தகைய மனித சமூக ரீதியான அளவையையும் கையாள முடியாத ஜீவன். எல்லாம் அமைதியாகிவிட்டது வெறுமைக்குத் தனிமை கிடையாதா என்ன? அலுப்பு தட்டாதா என்ன? வெறுமை வெறுமையைப் புணர்ந்தால் வெறுமையே எஞ்சும். ஏதாவது பிறக்காதா? நிழலுருவம் மனித கர்ப்பம் தாங்காதா? சூரிய ஒளியின் கடுமை குறையும், பைத்தியம் தணியும். பூமி தொடர்ந்து நம்மை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும். கிரேக்க ஒலிம்பிக் வீரனைப் போல எழுந்து ஆடி வெளியை ஆட்கொள். ஊடகத்தில் குறியாய் மாறி ஆங்காங்கே அர்த்தம் சிதைந்து தன்னளவில் அர்த்தமற்று வாழ். சூன்யம் நிரம்பி வழியும். பதினான்கு பரிமானங்களையும் எல்லோரும் காண்பர். Total disintegration. Total formlessness. இதைப் பதிவு செய்ய வேண்டிய அவலம். இன்னபிற முதலியன. அட டொனால்ட் பார்த்தல்மே நீர்தானா ஐய்யா வில்லன்.  மர்ம நாவல் யுகம் இடையறாது நீளும். ஆனால் எவனாவது ஒருவன் வரலாற்றின் எதிர்ப்பாளனாக மாறி கடைசி பக்கங்களைக் கிழித்தெடுத்து அர்த்தம் தவிர்ப்பான். இன்னபிற முதலியன ஆகியவை ஆகும் ஆனால் இன்னபிற முதலியன ஆகியவை ஆகும் ஆனால் இன்னபிற பிற. பிற.






குறிப்புகள்
  1. ‘அஸ்வமேதா’ என்ற இலக்கிய சிற்றிதழில், collage வடிவத்தில் எழுதப்பட்ட இந்தக்கதை 1987 அல்லது 1988 இல் முதலில் பிரசுரம் ஆனது. பின்னர் 1990இல் ‘கர்நாடக முரசு’ தொகுப்பில் பிரசுரமாகியது. லதா ராமகிருஷ்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2007 இல் பெங்குவின் தொகுதியாக வெளிவந்த The Tenth Rasa என்ற தொகுப்பில்  இந்தக் கதை இடம்பெற்றுள்ளது. ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  2. 1987 அல்லது 1988இல் ஈழப் போராட்டம் பற்றி திருநெல்வேலியில் நடந்த சிறு கூட்டமொன்றில் நான் உறையாற்றினேன். அந்த உரையில் ஈழப் போராளிக்குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சி அளித்து வருவதாக வெளிவந்த செய்திகளைச் சுட்டிக்காட்டி இது காந்தீய தார்மீகமற்ற செயல் என்று கடுமையாக விமர்சித்தேன். கூடவே இலங்கை அரசுக்கு பௌத்த அறம் என்று ஒன்று இருக்கிறதா என்று விமர்சித்தும் பேசினேன். ஈழத்து தமிழ் மாணவர் ஒருவருக்கு என் உரையைக் கேட்டு மிகவும் கோபம் வந்துவிட்டது. (அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை) அவர் அதன் பின்னர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். அந்த மாணவரை நான் என் நண்பராகவே நினைத்திருந்தபடியால் எனக்கு அந்த முறிவு மிகுந்த வருத்தத்தைத் தருவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து உலகமே ஒரு அபத்தம், non sense என்று தோன்றிய உணர்வில் ‘மர்ம நாவல்’ கதையை எழுதினேன். 
  3. Collage கதை ஆனபடியால் 90 சதவீதம் கதை வெவ்வேறு நூல்களிலிருந்து, செய்தித்தாள்களிலிருந்து, விளம்பரங்களிலிருந்து, பாக்கெட் நாவல்களிலிருந்து, அறிவியல் நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாக்கியங்களால் கோர்க்கப்பட்டது. இரண்டு இலக்கிய நூல்களிலிருந்தும் வரிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன ஒன்று ராமலிங்க வள்ளலாரின் நித்ய ஜீவ ஒழுக்கத்திலிருந்து தினமும் சாப்பிட வேண்டிய கீரை வகைகள் இத்யாதி குறித்த வரிகள். இன்னொன்று ஹென்றி மில்லரின் Tropic of Capricorn இல் வரும் A kick in the pants of god என்ற வரி அதை நான் கடவுளின் வேட்டியை அவிழ்த்து விடப்பட்ட உதை என்று இந்தக் கதையில் சேர்த்திருக்கிறேன். 
  4. இந்தக் கதையில் காணாமல் போகும் மு கதாபாத்திரத்தை திரும்ப பல கதைகளில் கொண்டுவந்திருக்கிறேன். என்னுடைய குட்டிக் கதைகளில் மு மைய கதாபாத்திரம்.
  5. போனவருடம் ஜெர்மனியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்தக் கதையைக் குறிப்பிட்டுப் பேசிய ஒரு ஆய்வாளர் எமெர்ஜென்சிக்குப் பிந்திய  இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலகட்டத்தின் உளச்சிக்கலைக் காட்டும் கதை என்று வாசித்தார். அக்கறையுடன் கேட்டுக்கொண்டேன்.
  6. இதுவரை இக்கதை பிரசுரமானபோதெல்லாம் நடுவில் பக்கத்திற்கு பக்கம் ஒரு வெற்று  வட்ட வடிவம் வரவில்லை. ஒரு டைமண்ட் வடிவமே வந்திருக்கிறது. இப்போது இணையத்தில் அதுவும் வரவில்லை.

No comments: